சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய

பரிபாடல்

... தொடர்ச்சி - 13 ...

3. வையை

     அறவோர் உள்ளார் அரு மறை காப்ப,
     ..... ..... ..... ..... ..... ..... ..... .....
     செறுநர் விழையாச் செறிந்த நம் கேண்மை
     மறு முறையானும் இயைக! நெறி மாண்ட
5   தண் வரல் வையை எமக்கு.

இப்பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல். சூ. 121. பேராசிரியர், நச்சினார்க் கினியர் உரைகளில் கண்டது. இப்பகுதி "அறவோர் உள்ளார் அருமறை காப்ப" என்று தொடங்கும் பரிபாடலின் இறுதி என்று தெரிய வருகின்றது.

4. வையை

     தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
     பரிமா நிரையின் பரந்தன்று வையை.

இப் பகுதி திருக்குறள் (23) பரிமேலழகர் உரையைப் பற்றிய "நுண் பொருள் மாலை" யால் தெரிய வருகின்றது.

5.

     மண் ஆர்ந்து இசைக்கும் முழவொழு கொண்ட தோள்
     கண்ணாது உடன் வீழும் காரிகை! கண்டோ ர்க்குத்
     தம்மொடு நிற்குமோ, நெஞ்சு?

இப் பகுதி தொல்காப்பியம் செய்யுள் இயல். சூ. 120. பேராசிரியர் நச்சினார்க் கினியர் உரைகளில் உள்ளது.

6.

     முன்பு உற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை
     இன்பு உற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும்
     நாண் எனும் தொல்லை அணி என்ன நல்நுதலை
     .... ... ...னந்து

இப்பகுதி நாற்கவிராச நம்பியகப்பொருள் சூ. 129 உரையில் உள்ளது.

7. மதுரை

     உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
     புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
     தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்
     நான்மாடக் கூடல் நகர்.

இதுவும், இதனைத் தொடர்ந்து வரும் ஐந்தும் (7-12) புறத்திட்டில் நகர் என்னும் பகுதியில் உள்ளன.

8.

     மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
     பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
     இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
     அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்;
5   தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்;
     தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்;
     பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
     நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
     ஏம இன் துயில் எழுதல் அல்லதை,
10 வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
     கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

9.

     தண் தமிழ் வேலித் தமிழ் நாட்டகம் எல்லாம்
     நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது,
     குன்றுதல் உண்டோ மதுரை-கொடித் தேரான்
     குன்றம் உண்டாகும் அளவு?

10.

     செய்யாட்கு இழைத்த திலகம்போல், சீர்க்கு ஒப்ப,
     வையம் விளங்கிப் புகழ் பூத்தல் அல்லது,
     பொய்யாதல் உண்டோ மதுரை-புனை தேரான்
     வையை உண்டாகும் அளவு?

11.

     கார்த்திகை காதில் கன மகர குண்டலம்போல்,
     சீர்த்து விளங்கித் திருப் பூத்தல் அல்லது,
     கோத்தை உண்டாமோ மதுரை-கொடித் தேரான்
     வார்த்தை உண்டாகும் அளவு?

12.

     ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும்-
     சேய் மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றும்,
     வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார்
     போவார் ஆர், புத்தேள் உலகு?

13.

     "வையை வருபுனல் ஆடல் இனிதுகொல்?
     செவ் வேள் கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல்?
     வை வேல் நுதி அன்ன கண்ணார் துணையாக
     எவ்வாறு செய்வாம்கொல், யாம்?" என, நாளும்,
5   வழி மயக்குற்று மருடல் நெடியான்
     நெடு மாடக் கூடற்று இயல்பு.

இப்பகுதி தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 11 ஆம் சூத்திர உரையில் இளம் பூரணரால் காட்டப் பெற்றுள்ளது. இது பரிபாடலைச் சார்ந்ததாகலாம் என ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.