சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய

பரிபாடல்

... தொடர்ச்சி - 3 ...

5. செவ்வேள்

     பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு,
     சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர் உழக்கி,
     தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து,
     நோயுடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து.
5   வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய
     கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை
     மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்,
     நாவல்அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை,
     குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து,
10 மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை!
     "மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்,
     ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!
     காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!
     சால்வ! தலைவ!" எனப் பேஎ விழவினுள்,
15 வேலன் ஏத்தும் வெறியும் உளவே;
     அவை வாயும் அல்ல, பொய்யும் அல்ல,
     நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின்;
     சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை;
     சிறப்பினுள் உயர்வு ஆகலும்,
20 பிறப்பினுள் இழிபு ஆகலும்,
     ஏனோர் நின் வலத்தினதே;
     ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
     வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
     நாகம் நாணா, மலை வில்லாக,
25 மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய,
     மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
     பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
     உமையொடு புணர்ந்த காம வதுவையுள்,
     அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
30 இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு,
     "விலங்கு" என, வீண்ணோர் வேள்வி முதல்வன்
     விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது
     அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,
     எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு
35 திரித்திட்டோ ன், இவ் உலகு ஏழும் மருள;
     கருப் பெற்றுக் கொண்டோ ர், கழிந்த சேய் யாக்கை
     நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,
     வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,
     "மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,
40 சாலார்; தானே தரிக்க" என, அவர் அவி
     உடன் பெய்தோரே, அழல் வேட்டு; அவ் அவித்
     தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,
     வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
     கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
45 அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்;
     மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
     நிறைவயின் வழாஅது நிற் சூலினரே;
     நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
     பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்;
50 பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே,
     அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,
     எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,
     அறு வேறு துணியும்அறுவர் ஆகி,
     ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!
55 ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய
     போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,
     அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,
     செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து
     வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து,
60 திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்;
     திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,
     இருங் கண் வெள் யாட்டு எழின் மறி கொடுத்தோன்;
     ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
     மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,
65 பொறி வரிச் சாபமும், மரனும், வாளும்,
     செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்,
     தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும்,
     வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,
     மறு இல் துறக்கத்து அமரர்செல்வன்தன்
70 பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய்.
     நின் குணம் எதிர்கொண்டோ ர் அறம் கொண்டோ ர் அல்லதை,
     மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை
     செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும்,
     சேரா அறத்துச் சீர் இலோரும்,
75 அழி தவப் படிவத்து அயரியோரும்,
     மறு பிறப்பு இல் எனும் மடவோரும், சேரார்
     நின் நிழல்; அன்னோர் அல்லது இன்னோர்
     சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை
     பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
80 அருளும், அன்பும், அறனும், மூன்றும்
     உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!

கடவுள் வாழ்த்து
கடுவன் இளவெயினனார் பாட்டு
கண்ணனாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்

6. வையை

     நிறை கடல் முகந்து உராய், நிறைந்து, நீர் துளும்பும் தம்
     பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்;
     நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத் தலைஇ,
     மலைய இனம் கலங்க, மலைய மயில் அகவ,
5   மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்
     மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை.
     மாசு இல் பனுவற் புலவர் புகழ் புல
     நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை,
     மேவிப் பரந்து விரைந்து, வினை நந்தத்
10 தாயிற்றே தண் அம் புனல்;
     புகை, பூ, அவி ஆராதனை, அழல், பல ஏந்தி,
     நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும்
     வகைசாலும், வையை வரவு;
     தொடி தோள் செறிப்ப, தோள்வளை இயங்க,
15 கொடி சேரா, திருக் கோவை காழ் கொள,
     தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக,
     உகிரும் கொடிறும் உண்ட செம் பஞ்சியும்,
     நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட,
     இலையும் மயிரும் ஈர்ஞ் சாந்து நிழத்த,
20 முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க,
     விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென,
     வரைச் சிறை உடைத்ததை வையை: "வையைத்
     திரைச் சிறை உடைத்தன்று கரைச்சிறை; அறைக" எனும்
     உரைச் சிறைப் பறை எழ, ஊர் ஒலித்தன்று;
25 அன்று, போர் அணி அணியின் புகர்முகம் சிறந்தென,
     நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல;
     ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்
     ஈரணி அணியின், இகல் மிக நவின்று,
     தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்கண்
30 துணி புனல் ஆக, துறை வேண்டும் மைந்தின்
     அணிஅணி ஆகிய தாரர், கருவியர்,
     அடு புனலது செல அவற்றை இழிவர்;
     கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,
     நெய்ம் மாண் சிவிறியர், நீர் மணக் கோட்டினர்,
35 வெண் கிடை மிதவையர், நன் கிடைத் தேரினர்,
     சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை
     ஓர் இயவு உறுத்தர ஊர் ஊர்பு இடம் திரீஇ,
     சேரி இளையர் செல அரு நிலையர்,
     வலியர் அல்லோர் துறைதுறை அயர,
40 மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர,
     சாறும் சேறும் நெய்யும் மலரும்
     நாறுபு நிகழும், யாறு வரலாறு;
     நாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து,
     வேறுபடு புனல் என, விரை மண்ணுக் கலிழை,
45 புலம் புரி அந்தணர் கலங்கினர், மருண்டு;
     மாறு மென் மலரும், தாரும் கோதையும்,
     வேரும் தூரும், காயும் கிழங்கும்,
     பூரிய மாக்கள் உண்பது மண்டி
     நார் அரி நறவம் உகுப்ப, "நலன் அழிந்து,
50 வேறாகின்று இவ் விரி புனல் வரவு" என,
     சேறு ஆடு புனலது செலவு;
     வரை அழி வால் அருவி வாதாலாட்ட,
     கரை அழி வால் அருவி கால் பாராட்ட,
     "இரவில் புணர்ந்தோர் இடைமுலை அல்கல்
55 புரைவது பூந் தாரான் குன்று" எனக் கூடார்க்கு
     உரையோடு இழிந்து உராய், ஊரிடை ஓடி,
     சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம்
     புலப்படப் புன்அம் புலரியின் நிலப்படத்
     தான் மலர்ந்தன்றே,
60 தமிழ் வையைத் தண்ணம் புனல்.
     "விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய்."
     "தளிர் அறிந்தாய், தாம் இவை."
     "பணிபு ஒசி பண்ப! பண்டெல்லாம் நனி உருவத்து;
     என்னோ துவள் கண்டீ?
65 எய்தும் களவு இனி; நின் மார்பின் தார் வாடக்
     கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்
     செய்ததும் வாயாளோ? செப்பு."
     "புனை புணை ஏறத் தாழ்த்ததை; தளிர் இவை
     நீரின் துவண்ட; சேஎய் குன்றம்; காமர்
70 பெருக்கு அன்றோ, வையை வரவு;"
     "ஆம்ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம்
     ஒருக்க ஒருதன்மை நிற்குமோ? ஒல்லைச்
     சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல்! வையைப்
     பெருக்கு அன்றோ? பெற்றாய் பிழை.
75 அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்,
     குருகு இரை தேரக் கிடக்கும் பொழி காரில்,
     இன் இளவேனில், இது அன்றோ வையை? நின்
     வையை வயமாக வை;
     செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல,
80 வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை;
     என்னும் பனியாய் இரவெல்லாம் வைகினை;
     வையை உடைந்த மடை அடைத்தக்கண்ணும்
     பின்னும் மலிரும் பிசிர் போல, இன்னும்
     அனற்றிய துன்பு அவிய, நீ அடைந்தக்கண்ணும்,
85 பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம்
     கனற்றுபு காத்தி, வரவு!"
     "நல்லாள் கரை நிற்ப, நான் குளித்த பைந் தடத்து,
     நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து, என்மேல்
     அல்லா விழுந்தானை எய்தி, எழுந்து ஏற்று யான்
90 கொள்ளா அளவை, எழும் தேற்றாள்; கோதையின்
     உள் அழுத்தியாள் எவளோ? தோய்ந்தது யாது? என
     தேறித் தெரிய உணர் நீ; பிறிதும் ஓர்
     யாறு உண்டோ ?" இவ் வையை யாறு.
     "இவ் வையை யாறு என்ற மாறு என்னை? கையால்
95 தலை தொட்டேன், தண் பரங்குன்று;"
     "சினவல்; நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத்
     துனி நீங்கி, ஆடல் தொடங்கு; துனி நனி
     கன்றிடின் காமம் கெடூஉம்; மகள்; இவன்
     அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே
100 வல் இருள் நீயல்; அது பிழையாகும்" என,
     இல்லவர் ஆட, இரந்து பரந்து உழந்து,
     வல்லவர் ஊடல், உணர்த்தர, நல்லாய்!
     களிப்பர்; குளிப்பர்; காமம் கொடி விட,
     அளிப்ப, துனிப்ப, ஆங்காங்கு ஆடுப;
105 ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம்
     வாடற்க, வையை! நினக்கு.

ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்