சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய

பரிபாடல்

... தொடர்ச்சி - 7 ...

13. திருமால்

     மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
     அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,
     இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்
     நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,
5 விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத்
     தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!
     பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
     இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
     நேமியும் வளையும் ஏந்திய கையான்
10 கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண்,
     அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்
     திரு வரை அகலம் தொழுவோர்க்கு
     உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து
     சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
15 அவையும் நீயே, அடு போர் அண்ணால்!
     அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
     முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
     ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
     இரண்டின் உணரும் வளியும் நீயே;
20 மூன்றின் உணரும் தீயும் நீயே;
     நான்கின் உணரும் நீரும் நீயே;
     ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே
     அதனால், நின் மருங்கின்று மூ ஏழ் உலகமும்,
     மூலமும், அறனும், முதன்மையின் இகந்த
25 காலமும், விசும்பும், காற்றொடு கனலும்
     தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,
     மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
     கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்
     துளவம் சூடிய அறிதுயிலோனும்
30 மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால்,
     திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
     விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,
     நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்
     நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
35 பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி
     இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி,
     மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!
     படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்
     கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை
40 ஏவல் இன் முது மொழி கூறும்,
     சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;
     கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
     அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
     வலம்புரி, வாய்மொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,
45 அவை நான்கும் உறழும் அருள், செறல், வயின் மொழி;
     முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும் அவை மூன்றும்
     கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;
     இருமை வினையும் இல, ஏத்துமவை;
     ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;
50 அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை
     அடியும், கையும், கண்ணும், வாயும்;
     தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,
     தாளும், தோளும், எருத்தொடு, பெரியை;
     மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை
55 கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை;
     வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை
     அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,
     செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்
     எரி நகை இடை இடுபு இழைந்த நறுந் தார்ப்
60 புரி மலர்த் துழாஅய் மேவல்மார்பினோய்!
     அன்னை என நினைஇ, நின் அடி தொழுதனெம்
     பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்
     முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்
     இன்னும் இன்னும் எம் காமம் இதுவே!

கடவுள் வாழ்த்து
நல்லெழுநியார் பாட்டு
பண் நோதிறம்

14. செவ்வேள்

     கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற
     நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;
     தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
     வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;
5   அடியுறைமகளிர் ஆடும் தோளே,
     நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;
     வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
     தோகை ஆர் குரல், மணந்து தணந்தோரை,
     "நீடன்மின் வாரும்" என்பவர் சொல் போன்றனவே
10 நாண் மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன
     மெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,
     அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப
     நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்
     வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,
15 விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப்
     பவழத்து அன்ன செம் பூத் தாஅய்,
     கார் மலிந்தன்று, நின் குன்று; போர் மலிந்து,
     சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே!
     கறை இல் கார் மழை பொங்கி அன்ன
20 நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே!
     அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி
     நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!
     கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
     எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!
25 பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச்
     சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!
     இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,
     ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!
     அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,
30 துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
     இன்னும் இன்னும் அவை ஆகுக
     தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே!

கேசவனார் பாட்டு
இசையும் அவர்
பண் நோதிறம்