சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய

பரிபாடல்

... தொடர்ச்சி - 8 ...

15. திருமால்

     புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,
     நில வரை தாங்கிய நிலைமையின் பெயராத்
     தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்
     புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்
5   பல எனின், ஆங்கு அவை பலவே; பலவினும்
     நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்
     நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே
     சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
     மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
10 குல வரை சிலவே; குல வரை சிலவினம்
     சிறந்தது கல் அறை கடலும் கானலும் போலவும்,
     புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,
     எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்
     தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்
15 நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
     ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்
     அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
     எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப
     அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
20 மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி,
     அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
     சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
     சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம்
     தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்
25 நாமத் தன்மை நன்கனம் படி எழ,
     யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து
     மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென,
     பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே
     நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!
30 சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ்
     சினை யெலாம் செயலை மலர, காய் கனி
     உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,
     மாயோன் ஒத்த இன் நிலைத்தே
     சென்று தொழுகல் லீர்! கண்டு பணிமின்மே
35 இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே
     பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது
     கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள்
     மக முயங்கு மந்தி வரைவரை பாய,
     முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட,
40 மணி மருள் நல் நீர்ச் சினை மட மயில் அகவ,
     குருகு இலை உதிர, குயிலினம் கூவ,
     பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
     நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன,
     சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார்க்
45 கடந்து அட்டான் கேழ் இருங்குன்று;
     தையலவரொடும், தந்தாரவரொடும்,
     கைம் மகவொடும், காதலவரொடும்,
     தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்
     புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,
50 வெளவல் கார் இருள் மயங்கு மணி மேனியன்,
     எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்
     மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்
     அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்
     கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;
55 ஒள் ஒளியவை, ஒரு குழையவை;
     புள் அணி பொலங் கொடியவை;
     வள் அணி வளை நாஞ்சிலவை,
     சலம் புரி தண்டு ஏந்தினவே;
     வலம்புரி வய நேமியவை;
60 வரி சிலை வய அம்பினவை;
     புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை;
     என ஆங்கு
     நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
     இது என உரைத்த(லி)ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை,
65 "இருங்குன்றத்து அடி உறை இயைக!" என,
     பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே.

கடவுள் வாழ்த்து
இளம்பெருவழுதியார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்


16. வையை

     கரையே கை வண் தோன்றல் ஈகை போன்ம் என,
     மை படு சிலம்பின் கறியொடும், சாந்தொடும்,
     நெய் குடை தயிரின் நுரையொடும், பிறவொடும்,
     எவ் வயினானும் மீதுமீது அழியும்
5   துறையே, முத்து நேர்பு புணர் காழ், மத்தக நித்திலம்,
     பொலம் புனை அவிர் இழை, கலங்கல் அம் புனல் மணி
     வலம் சுழி உந்திய, திணை பிரி புதல்வர்
     கயந் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ,
     தம்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்
10 தத்து அரிக் கண்ணார் தலைதலை வருமே
     செறுவே விடு மலர் சுமந்து, பூ நீர் நிறைதலின்,
     படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும்,
     களி நாள் அரங்கின் அணி நலம் புரையும்
     காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்
15 நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே
     கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல்,
     கான் அல்அம் காவும், கயமும், துருத்தியும், தேன்
     தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம்
     பூத்தன்று வையை வரவு
20 சுருங்கையின்ஆயத்தார் சுற்றும் எறிந்து,
     குரும்பை முலைப் பட்ட பூ நீர் துடையாள்,
     பெருந் தகை மீளி வருவானைக் கண்டே,
     இருந் துகில் தானையின் ஒற்றி, "பொருந்தலை;
     பூத்தனற்; நீங்கு" எனப் பொய் ஆற்றால், தோழியர்
25 தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின்
     நாற்றத்தின் போற்றி, நகையொடும் போத்தந்து,
     இருங் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான்,
     மகிழ, களிப்பட்ட தேன் தேறல் மாற்றி,
     குருதி துடையாக் குறுகி, மரு(வ), இனியர்,
30 "பூத்தனள் நங்கை; பொலிக!" என நாணுதல்
     வாய்த்தன்றால் வையை வரவு
     மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச் சார்க்
     கரை மரம் சேர்ந்து கவினி; மடவார்
     நனை சேர் கதுப்பினுள் தண் போது, மைந்தர்
35 மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ், தாஅய்;
     மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
     வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல், எஞ்ஞான்றும்,
     தேன் இமிர் வையைக்கு இயல்பு;
     கள்ளே புனலே புலவி இம் மூன்றினும்,
40 ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண் கண் கெண்டை,
     பல் வரி வண்டினம் வாய் சூழ் கவினொடும்,
     செல் நீர் வீவயின் தேன் சோர, பல் நீர்
     அடுத்துஅடுத்து ஆடுவார்ப் புல்ல, குழைந்து
     வடுப் படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான்,
45 எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத்
     தொடுத்த தேன் சோரும் வரை போலும், தோற்றம்
     கொடித் தேரான் வையைக்கு இயல்பு
     வரை ஆர்க்கும் புயல்; கரை
     திரை ஆர்க்கும், இத் தீம் புனல்;
50 கண்ணியர் தாரர், கமழ் நறுங் கோதையர்,
     பண்ணிய ஈகைப் பயன் கொள்வான், ஆடலால்
     நாள் நாள், உறையும், நறுஞ் சாந்தும், கோதையும்,
     பூத்த புகையும், அவியும் புலராமை
     மறாஅற்க, வானம்; மலிதந்து நீத்தம்
55 அறாஅற்க, வையை! நினக்கு.

நல்லழிசியார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் நோதிறம்