சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய

பரிபாடல்

... தொடர்ச்சி - 9 ...

17. செவ்வேள்

     தேம் படு மலர், குழை, பூந் துகில், வடி மணி,
     ஏந்து இலை சுமந்து; சாந்தம் விரைஇ,
     விடை அரை அசைத்த, வேலன், கடிமரம்
     பரவினர் உரையொடு பண்ணிய இசையினர்,
5   விரிமலர் மதுவின் மரம் நனை குன்றத்து
     கோல் எரி, கொளை, நறை, புகை, கொடி, ஒருங்கு எழ
     மாலை, மாலை, அடி உறை, இயைநர்,
     மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?
     ஒருதிறம், பாணர் யாழின் தீங் குரல் எழ,
10 ஒருதிறம், யாணர் வண்டின் இமிர் இசை எழ,
     ஒருதிறம், கண் ஆர் குழலின் கரைபு எழ,
     ஒருதிறம், பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத,
     ஒருதிறம், மண் ஆர் முழவின் இசை எழ,
     ஒருதிறம், அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப,
15 ஒருதிறம், பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க,
     ஒருதிறம், வாடை உளர்வயின் பூங் கொடி நுடங்க,
     ஒருதிறம், பாடினி முரலும் பாலை அம் குரலின்
     நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற,
     ஒருதிறம், ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற,
20 மாறுமாறு உற்றன போல் மாறு எதிர் கோடல்
     மாறு அட்டான் குன்றம் உடைத்து;
     பாடல் சான்று பல் புகழ் முற்றிய
     கூடலொடு பரங்குன்றின் இடை,
     கமழ் நறுஞ் சாந்தின் அவரவர் திளைப்ப,
25 நணிநணித்து ஆயினும், சேஎய்ச் சேய்த்து;
     மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின்
     சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று
     வசை நீங்கிய வாய்மையால், வேள்வியால்,
     திசை நாறிய குன்று அமர்ந்து, ஆண்டுஆண்டு
30 ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை
     வாய்வாய் மீ போய், உம்பர் இமைபு இறப்ப;
     தேயா மண்டிலம் காணுமாறு இன்று
     வளை முன் கை வணங்கு இறையார்,
     அணை மென் தோள் அசைபு ஒத்தார்
35 தார் மார்பின் தகை இயலார்,
     ஈர மாலை இயல்அணியார்
     மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட,
     சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா
     அனைய, பரங்குன்றின் அணி;
40 கீழோர் வயல் பரக்கும், வார் வெள் அருவி பரந்து ஆனாது அரோ;
     மேலோர் இயங்குதலால், வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ,
     தெய்வ விழவும், திருந்து விருந்து அயர்வும்,
     அவ் வெள் அருவி அணி பரங் குன்றிற்கும்,
     தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும்,
45 கொய் உளை மான் தேர்க் கொடித் தேரான் கூடற்கும்
     கை ஊழ் தடுமாற்றம் நன்று;
     என ஆங்கு,
     மணி நிற மஞ்ஞை ஓங்கிய புட் கொடி,
     பிணிமுகம் ஊர்ந்த வெல் போர், இறைவ!
50 பணி ஒரீஇ, நின் புகழ் ஏத்தி,
     அணி நெடுங் குன்றம் பாடுதும்; தொழுதும்;
     அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும்
     ஏம வைகல் பெறுக, யாம் எனவே.

கடவுள் வாழ்த்து
நல்லழிசியார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் நோதிரம்

18. செவ்வேள்

     போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப,
     கார் எதிரந்து ஏற்ற கமஞ் சூல் எழிலிபோல்,
     நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து,
     சூர், நிரந்து சுற்றிய, மா தபுத்த வேலோய்! நின்
5   சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து,
     ஏறுமாறு ஏற்கும் இக் குன்று;
     ஒள்ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன்
     உள்ளத்து நினைப்பானைக் கண்டனள், திரு நுதலும்:
     "உள்ளியது உணர்ந்தேன்; அஃது உரை; இனி, நீ எம்மை
10 எள்ளுதல் மறைத்தல் ஓம்பு" என்பாளைப் பெயர்த்து அவன்
     "காதலாய்! நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ்
     பேதுற்ற இதனைக் கண்டு, யான் நோக்க, நீ எம்மை
     ஏதிலா நோக்குதி" என்று, ஆங்கு உணர்ப்பித்தல்
     ஆய் தேரான் குன்ற இயல்பு;
15 ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின்மேல்,
     மை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார்,
     கை வளம் பூத்த வடுவொடு, காணாய் நீ?
     மொய் வளம் பூத்த முயக்கம், யாம் கைப்படுத்தேம்;
     மெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி
20 நை வளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம்
     பூத்தன பாணா! நின் பாட்டு;
     தண் தளிர் தருப் படுத்து, எடுத்து உரைஇ,
     மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்,
     கண் பொருபு சுடர்ந்து, அடர்ந்து, இடந்து,
25 இருள், போழும் கொடி மின்னால்
     வெண் சுடர் வேல் வேள்! விரை மயில் மேல் ஞாயிறு! நின்
     ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து,
     எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
     தொழில் வீற்றிருந்த நகர்;
30 ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி
     சூர் ததும்பு வரைய காவால்,
     கார் ததும்பு நீர் ததும்புவன சுனை,
     ஏர் ததும்புவன பூ அணி செறிவு
     போர் தோற்றுக் கண்டுண்டார் கை போல்வ கார் தோற்றும்
35 காந்தள், செறிந்த கவின்,
     கவின் முகை, கட்டு அவிழ்ப்ப, தும்பி; கட்டு யாழின்
     புரி நெகிழ்ப்பார் போன்றன கை;
     அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே,
     வச்சிரத்தான் வான வில்லு;
40 வில்லுச் சொரி பகழியின் மென் மலர் தாயின
     வல்லுப் போர் வல்லாய்! மலைமேல் மரம்
     வட்டு உருட்டு வல்லாய்! மலைய நெட்டுருட்டுச்
     சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து,
     போர் ததும்பும் அரவம் போல,
45 கருவி ஆர்ப்ப, கருவி நின்றன குன்றம்.
     அருவி ஆர்ப்ப, முத்து அணிந்தன, வரை;
     குருவி ஆர்ப்ப, குரல் குவிந்தன, தினை;
     எருவை கோப்ப, எழில் அணி திருவில்
     வானில் அணித்த, வரி ஊதும் பல் மலரால்,
50 கூனி வளைத்த சுனை
     புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து,
     சுருதியும் பூவும் சுடரும் கூடி,
     எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்,
     செரு வேற் தானைச் செல்வ! நின் அடி உறை,
55 உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு,
     பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே!

கடவுள் வாழ்த்து
குன்றம்பூதனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்