சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய

பதிற்றுப் பத்து

... தொடர்ச்சி - 10 ...

56. வென்றிச் சிறப்பு

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன்; வாழ்க அவன், கண்ணி!-
வலம் படு முரசம் துவைப்ப, வாள் உயர்த்து,
இலங்கும் பூணன், பொலங் கொடி உழிஞையன், 5
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.

துறை : ஒள் வாள் அமலை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி

57. வென்றிச் சிறப்பொடு கொடைச் சிறப்பும் உடன் கூறுதல்

ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப,
இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்ப,
குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே,
துணங்கை ஆடிய வலம் படு கோமான்:
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச் 5
செல்லாமோதில்-சில் வளை விறலி!-
பாணர் கையது பணி தொடை நரம்பின்
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி,
குரல் புணர் இன் இசைத் தழிஞ்சி பாடி;
இளந் துணைப் புதல்வர் நல் வளம் பயந்த, 10
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை,
ஒள் நுதல் மகளிர் துனித்த கண்ணினும்,
இரவலர் புன்கண் அஞ்சும்
புரவு எதிர்கொள்வனைக் கண்டனம் வரற்கே? 15

துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சில் வளை விறலி

58. மன்னவன் நாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவனது கொடையும் கூறுதல்

ஆடுக, விறலியர்! பாடுக, பரிசிலர்!-
வெண் தோட்டு அசைத்த ஒண் பூங் குவளையர்,
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்,
செல் உறழ் மறவர் தம் கொல்படைத் தரீஇயர்,
'இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின், நாளை 5
மண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது
உண்குவம்அல்லேம், புகா' எனக் கூறி,
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்;
பொய் படுபு அறியா வயங்கு செந் நாவின்,
எயில் எறி வல் வில், ஏ விளங்கு தடக் கை, 10
ஏந்து எழில் ஆகத்துச் சான்றோர் மெய்ம்மறை;
வானவரம்பன் என்ப-கானத்துக்
கறங்கு இசைச் சிதடி பொரி அரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
புன்புலம் வித்தும் வன் கை வினைஞர் 15
சீருடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி,
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின்
அலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம்,
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏ விளங்கு தடக்கை

59. வென்றிச் சிறப்பு

பகல் நீடு ஆகாது, இரவுப்பொழுது பெருகி,
மாசி நின்ற மா கூர் திங்கள்,
பனிச் சுரம் படரும் பாண்மகன் உவப்ப,
புல் இருள் விடிய, புலம்பு சேண் அகல,
பாய் இருள் நீங்க, பல் கதிர் பரப்பி, 5
ஞாயிறு குணமுதல் தோன்றியாஅங்கு,
இரவல் மாக்கள் சிறுகுடி பெருக,
உலகம் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை! வீற்று இருங் கொற்றத்துச்
செல்வர் செல்வ! சேர்ந்தோர்க்கு அரணம்!- 10
அறியாது எதிர்ந்து, துப்பில் குறையுற்று,
பணிந்து திறை தருப, நின் பகைவர், ஆயின்;
சினம் செலத் தணியுமோ? வாழ்க, நின் கண்ணி!-
பல் வேறு வகைய நனந் தலை ஈண்டிய
மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் 15
ஆறு முட்டுறாஅது, அறம் புரிந்து ஒழுகும்
நாடல் சான்ற துப்பின் பணைத் தோள்,
பாடு சால் நன் கலம் தரூஉம்
நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மா கூர் திங்கள்

60. மன்னவன் கொடைச் சிறப்பொடு வென்றிச் சிறப்பும் கூறுதல்

கொலை வினை மேவற்றுத் தானை; தானே
இகல் வினை மேவலன்; தண்டாது வீசும்:
செல்லாமோதில், பாண்மகள்! காணியர்-
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது,
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி 5
அம் சேறு அமைந்த முண்டை விளை பழம்
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும்,
மறாஅ விளையுள் அறாஅ யாணர்,
தொடை மடி களைந்த சிலையுடை மறவர்
பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி, 10
வரும் கடல் ஊதையின் பனிக்கும்,
துவ்வா நறவின் சாய் இனத்தானே.

துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மரம் படு தீம் கனி

பதிகம்

குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு வேஎள்
ஆவிக்கோமான் தேவி ஈன்ற மகன்
தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்து, பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்டு ஓர் ஊர் ஈத்து, 5
வானவரம்பன் எனப் பேர் இனிது விளக்கி,
ஏனை மழவரைச் செருவில் சுருக்கி,
மன்னரை ஓட்டி,
குழவி கொள்வாரின் குடி புறந்தந்து,
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் 10
ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.

அவை தாம்: வடு அடு நுண் அயிர், சிறு செங் குவளை, குண்டு கண் அகழி, நில்லாத் தானை, துஞ்சும் பந்தர், வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி, சில் வளை விறலி, ஏ விளங்கு தடக் கை, மா கூர் திங்கள், மரம் படு தீம் கனி: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: 'கலன் அணிக' என்று, அவர்க்கு ஒன்பது காப் பொன்னும், நூறாயிரம் காணமும் கொடுத்துத் தன் பக்கத்துக் கொண்டான் அக் கோ.

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் முப்பத்தெட்டு யாண்டு வீற்றிருந்தான்.

ஆறாம் பத்து முற்றும்