சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய

பதிற்றுப் பத்து

... தொடர்ச்சி - 13 ...

எட்டாம் பத்து

பாடினோர் : அரிசில்கிழார்
பாடப்பட்டோ ர் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

71. வென்றிச் சிறப்புக் கூறி, மன்னனுக்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தல்

அறாஅ யாணர் அகன் கண் செறுவின்
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து,
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை,
பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்
அம்பண அளவை உறை குவித்தாங்கு, 5
கடுந் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும்
செழுங் கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின்,
அலந்தனர், பெரும! நின் உடற்றியோரே:
ஊர் எரி கவர, உருத்து எழுந்து உரைஇ,
போர் சுடு, கமழ் புகை மாதிரம் மறைப்ப, 10
மதில்வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர்
குண்டு கண் அகழிய குறுந் தாள் ஞாயில்
ஆர் எயில் தோட்டி வௌவினை; ஏறொடு
கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து,
புலவு வில் இளையர் அங்கை விடுப்ப, 15
மத்துக் கயிறு ஆடா வைகற் பொழுது நினையூஉ,
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க,
பதி பாழாக வேறு புலம் படர்ந்து,
விருந்தின் வாழ்க்கையொடு பெருந் திரு அற்றென,
அருஞ் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் 20
பெருங் களிற்று யானையொடு அருங் கலம் தராஅர்,
மெய் பனி கூரா, அணங்கு எனப் பராவலின்,
பலி கொண்டு பெயரும் பாசம் போல,
திறை கொண்டு பெயர்தி; வாழ்க, நின் ஊழி!
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி, 25
அறிந்தனை அருளாய்ஆயின்,
யார் இவண், நெடுந் தகை! வாழுமோரே?

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : குறுந் தாள் ஞாயில்

72. மன்னவனது சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும்

இகல் பெருமையின் படை கோள் அஞ்சார்,
சூழாது துணிதல் அல்லது, வறிது உடன்
காவல் எதிரார், கறுத்தோர், நாடு; நின்
முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து,
மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் 5
நன்று அறி உள்ளத்துச் சான்றோர் அன்ன, நின்
பண்பு நன்கு அறியார், மடம் பெருமையின்;
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை,
நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி,
உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் 10
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து,
ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து
அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்து,
பொங்கு பிசிர் நுடக்கிய செஞ் சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை, 15
சினம் கெழு குருசில்! நின் உடற்றிசினோர்க்கே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : உருத்து எழு வெள்ளம்

73. வென்றிச் சிறப்பு

உரவோர் எண்ணினும், மடவோர் எண்ணினும்,
பிறர்க்கு நீ வாயின் அல்லது, நினக்குப்
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே!
....கூந்தல் ஒள் நுதல் பொலிந்த
நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும் 5
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர்
.... .... .... .... ... ... ...
மருதம் சான்ற மலர்தலை விளை வயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார், 10
குறும் பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய் விரி வனப்பின்
புகாஅர்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!
கழை விரிந்து எழுதரு மழை தவழ் நெடுங் கோட்டுக்
கொல்லிப் பொருந! கொடித் தேர்ப் பொறைய! 'நின் 15
வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவு இறந்தன' எனப் பல் நாள்
யான் சென்று உரைப்பவும் தேறார்; 'பிறரும்
சான்றோர் உரைப்பத் தெளிகுவர்கொல்?' என,
ஆங்கும் மதி மருளக் காண்குவல்; 20
'யாங்கு உரைப்பேன்?' என வருந்துவல், யானே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நிறம் திகழ் பாசிழை

74. நல்லொழுக்கமும் அதற்கு ஏற்ற நல்லறிவுடைமையும் எடுத்துக் கூறுதல்

கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது,
வேள்வி வேட்டனை, உயர்ந்தோர் உவப்ப;
சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல்,
வேறு படு திருவின் நின் வழி வாழியர்,
கொடுமணம் பட்ட வினை மாண் அருங் கலம், 5
பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம்,
வரையகம் நண்ணி, குறும்பொறை நாடி,
தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம் பொறி,
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின்,
புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத் 10
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டிற்
பருதி போகிய புடை கிளை கட்டி,
எஃகுடை இரும்பின் உள் அமைத்து, வல்லோன்
சூடு நிலை உற்றுச் சுடர் விடு தோற்றம்
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப, 15
நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள்,
ஒடுங்கு ஈர் ஓதி, ஒண்ணுதல் கருவில்
எண் இயல் முற்றி, ஈர் அறிவு புரிந்து,
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற்கு அமைந்த அரசு துறை போகிய 20
வீறு சால் புதல்வன் பெற்றனை, இவணர்க்கு-
அருங் கடன் இறுத்த செருப் புகல் முன்ப!-
அன்னவை மருண்டனென்அல்லேன்; நின் வயின்
முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை,
'வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும், 25
தெய்வமும், யாவதும், தவம் உடையோர்க்கு' என,
வேறு படு நனந் தலைப் பெயரக்
கூறினை, பெரும! நின் படிமையானே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நலம் பெறு திருமணி

75. வென்றிச் சிறப்பு

இரும் புலி கொன்று, பெருங் களிறு அடூஉம்,
அரும் பொறி வய மான் அனையை-பல் வேல்,
பொலந் தார் யானை, இயல் தேர்ப் பொறைய!-
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப் பணிந்து,
நின் வழிப் படாஅர் ஆயின், நெல் மிக்கு, 5
அறை உறு கரும்பின் தீம் சேற்று யாணர்,
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை,
வன் புலம் தழீஇ மென்பால் தோறும்
அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து,
கள்ளுடை நியமத்து ஒளி விலை கொடுக்கும் 10
வெளி வரகு உழுத கொள்ளுடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி அறியார், தம்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடு உடன் ஆள்தல் யாவணது, அவர்க்கே?

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : தீம் சேற்று யாணர்