சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய

பதிற்றுப் பத்து

... தொடர்ச்சி - 16 ...

86. மன்னவனது வன்மை மென்மைச் சிறப்புக் கூறுதல்

'உறல் உறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்று, அமர்க் கடந்த வெந் திறல் தடக் கை
வென் வேல் பொறையன்' என்றலின், வெருவர,
வெப்புடை ஆடூஉச் செத்தனென்மன், யான்:
நல் இசை நிலைஇய, நனந் தலை உலகத்து, 5
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்,
பாடுநர் புரவலன், ஆடு நடை அண்ணல்,
கழை நிலை பெறாஅக் குட்டத்துஆயினும்,
புனல் பாய் மகளிர் ஆட, ஒழிந்த 10
பொன் செய் பூங் குழை மீமிசைத் தோன்றும்
சாந்து வரு வானி நீரினும்,
தீம் தண் சாயலன் மன்ற, தானே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெந் திறல் தடக்கை

87. மன்னவன் அருட் சிறப்பு

சென்மோ, பாடினி! நன் கலம் பெறுகுவை-
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து,
தெண் கடல் முன்னிய வெண் தலைச் செம் புனல்
ஒய்யும் நீர் வழிக் கரும்பினும்
பல் வேல் பொறையன் வல்லனால், அளியே. 5

துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வெண் தலைச் செம் புனல்

88. கொடைச் சிறப்பும் காம இன்பச் சிறப்பும் உடன் கூறி, வாழ்த்துதல்

வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது,
கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து,
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து,
தம் பெயர் போகிய ஒன்னார் தேய,
துளங்கு இருங் குட்டம் தொலைய, வேல் இட்டு; 5
அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து;
பொரு முரண் எய்திய கழுவுள் புறம் பெற்று;
நாம மன்னர் துணிய நூறி,
கால் வல் புரவி அண்டர் ஓட்டி,
சுடர் வீ வாகை நன்னற் தேய்த்து, 10
குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு
உரு கெழு மரபின் அயிரை பரைஇ,
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணிய,
கொற்றம் எய்திய பெரியோர் மருக!
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்! 15
விரவுப் பணை முழங்கும், நிரை தோல் வரைப்பின்,
உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை,
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை
நார் அரி நறவின் கொங்கர் கோவே!
உடலுநர்த் தபுத்த பொலந் தேர்க் குருசில்! 20
வளைகடல் முழவின் தொண்டியோர் பொருந!
நீ நீடு வாழிய, பெரும! நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்று அருந் தெய்வத்துக் கூட்டம் முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்தாங்கு, 25
வருநர் வரையாச் செழும் பல் தாரம்
கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப,
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர்,
பாவை அன்ன மகளிர் நாப்பண்,
புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு 30
தண் கமழ் கோதை சூடி, பூண் சுமந்து,
திருவில் குலைஇத் திருமணி புரையும்
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து,
வேங்கை விரிந்து, விசும்புறு சேட்சிமை,
அருவி அரு வரை அன்ன மார்பின் 35
சேண் நாறு நல் இசைச் சேயிழை கணவ!
மாகம் சுடர மா விசும்பு உகக்கும்
ஞாயிறு போல விளங்குதி, பல் நாள்!-
ஈங்குக் காண்கு வந்தனென், யானே-
உறு கால் எடுத்த ஓங்கு வரற் புணரி 40
நுண் மணல் அடை கரை உடைதரும்
தண் கடல் படப்பை நாடு கிழவோயே!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கல் கால் கவணை

89. மன்னவனது நாடு காவற் சிறப்புக் கூறி, வாழ்த்துதல்

வானம் பொழுதொடு சுரப்ப, கானம்
தோடு உறு மட மான் ஏறு புணர்ந்து இயல,
புள்ளும் மிஞிறும் மாச் சினை ஆர்ப்ப,
பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது,
பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகள, 5
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின்
பெரும் பல் யாணர்க் கூலம் கெழும,
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக-
பல் வேல் இரும் பொறை! நின் கோல் செம்மையின்,
நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த, 10
உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ,
அரசியல் பிழையாது, செரு மேந்தோன்றி,
நோய் இலைஆகியர், நீயே-நின்மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது,
கனவினும் பிரியா உறையுளொடு, தண்ணெனத் 15
தகரம் நீவிய துவராக் கூந்தல்,
வதுவை மகளிர் நோக்கினர், பெயர்ந்து
வாழ் நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து,
மீனொடு புரையும் கற்பின்,
வாள் நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே! 20

துறை : காவல் முல்லை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : துவராக் கூந்தல்

90. மன்னவனது தண்ணளியும், பெருமையும், கொடையும், சுற்றம் தழாலும், உடன் கூறி வாழ்த்துதல்

மீன் வயின் நிற்ப, வானம் வாய்ப்ப,
அச்சற்று, ஏமம் ஆகி, இருள் தீர்ந்து
இன்பம் பெருகத் தோன்றி, தம் துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்று,
கழிந்தோர் உடற்றும் கடுந் தூ அஞ்சா 5
ஒளிறு வாள் வய வேந்தர்
களிறொடு கலம் தந்து,
தொன்று மொழிந்து தொழில் கேட்ப,
அகல் வையத்து பகல் ஆற்றி,
மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர, 10
வாள் வலியுறுத்து, செம்மை பூஉண்டு,
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட
விறல் மாந்தரன் விறல் மருக!-
ஈரம் உடைமையின், நீர் ஓரனையை;
அளப்பு அருமையின், இரு விசும்பு அனையை; 15
கொளக் குறைபடாமையின், முந்நீர் அனையை;
பல் மீன் நாப்பண் திங்கள் போல,
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை
உரு கெழு மரபின் அயிரை பரவியும்,
கடல் இகுப்ப வேல் இட்டும், 20
உடலுநர் மிடல் சாய்த்தும்,
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி,
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய
கொற்றத் திருவின் உரவோர் உம்பல்!
கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே! 25
மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே!
எழாஅத் துணைத் தோள் பூழியர் மெய்ம்மறை!
இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந!
வெண் பூ வேளையொடு சுரை தலை மயக்கிய
விரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே! 30
உரவுக் கடல் அன்ன தாங்கு அருந் தானையொடு,
மாண் வினைச் சாபம் மார்புற வாங்கி,
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தடக் கை,
வார்ந்து புனைந்தன்ன ஏந்து குவவு மொய்ம்பின்,
மீன் பூத்தன்ன விளங்கு மணிப் பாண்டில், 35
ஆய் மயிர்க் கவரிப் பாய் மா மேல்கொண்டு,
காழ் எஃகம் பிடித்து எறிந்து,
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை,
காஞ்சி சான்ற வயவர் பெரும!
வீங்கு பெருஞ் சிறப்பின் ஓங்கு புகழோயே! 40
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின்,
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்,
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி,
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க,
கூழுடை நல் இல் ஏறு மாறு சிலைப்ப, 45
செழும் பல இருந்த கொழும் பல் தண் பணைக்,
காவிரிப் படப்பை நல் நாடு அன்ன,
வளம் கெழு குடைச்சூல், அடங்கிய கொள்கை,
ஆறிய கற்பின், தேறிய நல் இசை,
வண்டு ஆர் கூந்தல், ஒண்தொடி கணவ!- 50
'நின் நாள் திங்கள் அனைய ஆக! திங்கள்
யாண்டு ஓரனைய ஆக! யாண்டே
ஊழி அனைய ஆக! ஊழி
வெள்ள வரம்பின ஆக!' என உள்ளி,
காண்கு வந்திசின், யானே-செரு மிக்கு 55
உரும் என முழங்கும் முரசின்,
பெரு நல் யானை, இறை கிழவோயே!

துறை : காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : வலி கெழு தடக் கை

பதிகம்

குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழா அன்
வேண்மாள் அந்துவஞ்செள்ளை ஈன்ற மகன்,
வெரு வரு தானையொடு வெய்துறச் செய்து சென்று,
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து, 5
பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று,
வஞ்சி மூதூர்த் தந்து, பிறர்க்கு உதவி,
மந்திர மரபின் தெய்வம் பேணி, 10
மெய் ஊர் அமைச்சியல் மையூர் கிழானைப்
புரை அறு கேள்விப் புரோசு மயக்கி,
அருந்திறல் மரபின் பெருஞ் சதுக்கு அமர்ந்த
வெந் திறற் பூதரைத் தந்து, இவண் நிறீஇ,
ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு, 15
மன் உயிர் காத்த மறு இல் செங்கோல்
இன் இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்: நிழல் விடு கட்டி, வினை நவில் யானை, பல் தோல் தொழுதி, தொழில் நவில் யானை, நாடு காண் நெடு வரை, வெந் திறல் தடக்கை, வெண் தலைச் செம் புனல், கல் கால் கவணை, துவராக் கூந்தல், வலி கெழு தடக் கை, இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: 'மருள் இல்லார்க்கு மருளக் கொடுக்க' என்று, உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளம் மிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்கு ஆகா அருங்கல வெறுக்கையொடு, பன்னூறாயிரம் பாற்பட வகுத்து, காப்பு மறம் தான் விட்டான் அக் கோ.

குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.

ஒன்பதாம் பத்து முற்றும்.