சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய

பதிற்றுப் பத்து

... தொடர்ச்சி - 5 ...

நான்காம் பத்து

பாடினோர் : காப்பியாற்றுக் காப்பியனார்
பாடப்பட்டோ ர் : களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்

31. மன்னற்கு உரிய மாட்சிமையெல்லாம் எடுத்து ஒருங்கே புகழ்தல்

குன்று தலைமணந்து, குழூஉக் கடல் உடுத்த
மண் கெழு ஞாலத்து, மாந்தர் ஒராங்குக்
கை சுமந்து அலறும் பூசல், மாதிரத்து
நால் வேறு நனந் தலை, ஒருங்கு எழுந்து ஒலிப்ப,
தெளி உயர் வடி மணி எறியுநர் கல்லென, 5
உண்ணாப் பைஞ்ஞிலம் பனித் துறை மண்ணி,
வண்டு ஊது பொலி தார், திரு ஞெமர் அகலத்து,
கண் பொரு திகிரி, கமழ் குரற் துழாஅய்
அலங்கல், செல்வன் சேவடி பரவி,
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர- 10
மணி நிற மை இருள் அகல, நிலா விரிபு,
கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு,
துளங்கு குடி விழுத் திணை திருத்தி, முரசு கொண்டு,
ஆண் கடன் இறுத்த நின் பூண் கிளர் வியல் மார்பு,
கருவி வானம் தண் தளி தலைஇய, 15
வட தெற்கு விலங்கி, விலகு தலைத்து எழிலிய,
பனி வார் விண்டு விறல் வரையற்றே;
கடவுள் அஞ்சி வானத்து இழைத்த
தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட
எழூஉ நிவந்தன்ன, பரேர் எறுழ் முழவுத் தோள்; 20
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து,
வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து
வண்டன் அனையைமன் நீயே; வண்டு பட
ஒலிந்த கூந்தல், அறம் சால் கற்பின்,
குழைக்கு விளக்கு ஆகிய ஒளி நுதல், பொன்னின் 25
இழைக்கு விளக்கு ஆகிய அவ் வாங்கு உந்தி,
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள், நின் தொல் நகர்ச் செல்வி;
நிலன் அதிர்பு இரங்கல ஆகி, வலன் ஏர்பு,
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து, 30
அடங்கிய புடையல், பொலங் கழல் நோன் தாள்,
ஒடுங்காத் தெவ்வர் ஊக்கு அறக் கடைஇ,
புறக்கொடை எறியார், நின் மறப் படை கொள்ளுநர்;
நகைவர்க்கு அரணம் ஆகி, பகைவர்க்குச்
சூர் நிகழ்ந்தற்று, நின் தானை; 35
போர் மிகு குருசில்! நீ மாண்டனை பலவே.

துறை : செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கமழ் குரல் துழாய்

32. மன்னனின் பல குணங்களையும் உடன் எண்ணி, அவற்றுள் பொறையுடைமையை மிகுத்துப் புகழ்தல்

மாண்டனை பலவே, போர் மிகு குருசில்! நீ
மாதிரம் விளக்கும் சால்பும், செம்மையும்;
முத்துடை மருப்பின் மழ களிறு பிளிற,
மிக்கு எழு கடுந் தார் துய்த்தலைச் சென்று,
துப்புத் துவர் போக, பெருங் கிளை உவப்ப, 5
ஈத்து ஆன்று ஆனா இடனுடை வளனும்;
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும்;
எல்லாம் எண்ணின், இடு கழங்கு தபுந.
கொன் ஒன்று மருண்டனென், அடு போர்க் கொற்றவ!-
நெடுமிடல் சாய, கொடு மிடல் துமிய, 10
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து,
தடந் தாள் நாரை படிந்து இரை கவரும்,
முடந்தை நெல்லின் கழை அமல், கழனி,
பிழையா விளையுள் நாடு அகப்படுத்து,
வையா மாலையர் வசையுநர்க் கறுத்த 15
பகைவர் தேஎத்து ஆயினும்-
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே!

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கழை அமல் கழனி

33. வென்றிச் சிறப்பு

இறும்பூதால் பெரிதே, கொடித் தேர் அண்ணல்!-
வடி மணி அணைத்த பணைமருள் நோன் தாள்,
கடி மரத்தான், களிறு அணைத்து;
நெடு நீர துறை கலங்க,
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு 5
புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம்,
வாள் மதிலாக, வேல் மிளை உயர்த்து,
வில் விசை உமிழ்ந்த வைம் முள் அம்பின்,
செவ் வாய் எஃகம் வளைஇய அகழின்,
கார் இடி உருமின் உரறு முரசின், 10
கால் வழங்கு ஆர் எயில் கருதின்-
போர் எதிர் வேந்தர் ஒரூஉப, நின்னே.

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : வரம்பு இல் வெள்ளம்

34. வென்றிச் சிறப்பு

ஒரூஉப நின்னை-ஒரு பெரு வேந்தே!-
ஓடாப் பூட்கை, ஒண் பொறிக் கழற் கால்,
இரு நிலம் தோயும் விரிநூல் அறுவையர்:
செவ் உளைய மா ஊர்ந்து,
நெடுங் கொடிய தேர் மிசையும், 5
ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல்
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும்,
மன் நிலத்து அமைந்த ... ... ...
மாறா மைந்தர் மாறு நிலை தேய,
முரைசுடைப் பெருஞ் சமம் ததைய, ஆர்ப்பு எழ, 10
அரைசு படக் கடக்கும் ஆற்றல்
புரை சால் மைந்த!-நீ ஓம்பல் மாறே.

துறை : தும்பை அரவம்
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர் : ஒண் பொறிக் கழற் கால்

35. வென்றிச் சிறப்பு

புரை சால் மைந்த! நீ ஓம்பல் மாறே,
உரை சான்றனவால், பெருமை நின் வென்றி!-
இருங் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு
நெடுந் தேர்த் திகிரி தாய வியன் களத்து,
அளகுடைச் சேவல் கிளை புகா ஆர, 5
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை,
அந்தி மாலை விசும்பு கண்டன்ன
செஞ் சுடர் கொண்ட குருதி மன்றத்து,
பேஎய் ஆடும் வெல்போர்
வீயா யாணர் நின்வயினானே. 10

துறை : வாகைத்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : மெய் ஆடு பறந்தலை