சங்கமருவிய எட்டுத் தொகை நூல்களுள் நான்காவதாகிய

பதிற்றுப் பத்து

... தொடர்ச்சி - 6 ...

36. வென்றிச் சிறப்பு

வீயா யாணர் நின்வயினானே
தாவாதாகும், மலி பெறு வயவே;
மல்லல் உள்ளமொடு வம்பு அமர்க் கடந்து,
செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று,
பனை தடி புனத்தின், கை தடிபு, பல உடன் 5
யானை பட்ட வாள் மயங்கு கடுந் தார்,
மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர்,
பொறித்த போலும் புள்ளி எருத்தின்
புன் புற எருவைப் பெடை புணர் சேவல்
குடுமி எழாலொடு கொண்டு, கிழக்கு இழிய; 10
நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து,
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட;
குருதிச் செம் புனல் ஒழுக;
செருப் பல செய்குவை: வாழ்க, நின் வளனே!

துறை : களவழி
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வாள் மயங்கு கடுந் தார்

37. மன்னன் குணங்களைப் புகழ்ந்து, அவனையும் அவன் செல்வத்தையும் வாழ்த்துதல்

வாழ்க, நின் வளனே நின்னுடை வாழ்க்கை,
வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்த!-
பகைவர் ஆரப் பழங்கண் அருளி,
நகைவர் ஆர நன் கலம் சிதறி,
ஆன்று, அவிந்து, அடங்கிய, செயிர் தீர், செம்மால்! 5
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப,
துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும்;
மா இரும் புடையல், மாக் கழல், புனைந்து,
மன் எயில் எறிந்து மறவர்த் தரீஇ,
தொல் நிலைச் சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்குக் 10
கோடு அற வைத்த கோடாக் கொள்கையும்;
நன்று பெரிது உடையையால் நீயே,
வெந்திறல் வேந்தே!-இவ் உலகத்தோர்க்கே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : வலம் படு வென்றி

38. கொடைச் சிறப்பு

உலகத்தோரே பலர்மன் செல்வர்;
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே-
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல்!
எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின், 5
தோட்டி தந்த தொடி மருப்பு யானை,
செவ் உளைக் கலிமா, ஈகை வான் கழல்,
செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே!
பரிசிலர் வெறுக்கை! பாணர் நாள்அவை!
வாணுதல் கணவ! மள்ளர் ஏறே! 10
மை அற விளங்கிய, வடு வாழ் மார்பின்,
வசை இல் செல்வ! வானவரம்ப!
'இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம்,
தருக' என விழையாத் தா இல் நெஞ்சத்து,
பகுத்தூண் தொகுத்த ஆண்மை, 15
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன்மாறே.

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : பரிசிலர் வெறுக்கை

39. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்

பிறர்க்கு என வாழ்தி நீ ஆகன் மாறே,
எமக்கு 'இல்' என்னார், நின் மறம் கூறு குழாத்தர்-
துப்புத் துறைபோகிய வெப்புடைத் தும்பை,
கறுத்த தெவ்வர் கடி முனை அலற,
எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை 5
உரும் என அதிர்பட்டு முழங்கி, செரு மிக்கு,
அடங்கார் ஆர் அரண் வாடச் செல்லும்,
காலன் அனைய, கடுஞ் சின முன்ப!
வாலிதின், நூலின் இழையா நுண் மயிர் இழைய-
பொறித்த போலும் புள்ளி எருத்தின் 10
புன் புறப் புறவின் கண நிரை அலற,
அலந்தலை வேலத்து உலவைஅம் சினை
சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின்,
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
அவிர் இழை தைஇ, மின் உமிழ்பு இலங்கச் 15
சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல்! நின் போர் நிழல் புகன்றே.

துறை : வாகை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : ஏவல் வியன் பணை

40. கொடைச் சிறப்பு

போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து
இறாஅலியரோ, பெரும! நின் தானை!
இன் இசை இமிழ் முரசு இயம்பக் கடிப்பு இகூஉ,
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப,
காய்த்த கரந்தை மாக் கொடி விளை வயல் 5
வந்து இறைகொண்டன்று, தானை: 'அந்தில்,
களைநர் யார் இனிப் பிறர்?' எனப் பேணி,
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க,
ஒன்னார் தேய, பூ மலைந்து உரைஇ,
வெண் தோடு நிரைஇய வேந்துடை அருஞ் சமம் 10
கொன்று புறம்பெற்று, மன்பதை நிரப்பி,
வென்றி ஆடிய தொடித் தோள் மீ கை,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து,
பொன்அம் கண்ணி, பொலந் தேர் நன்னன்
சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த 15
தார் மிகு மைந்தின், நார்முடிச் சேரல்!
புன் கால் உன்னம் சாய, தெண் கண்
வறிது கூட்டு அரியல் இரவலர்த் தடுப்ப,
தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து,
நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே: 20
செல்லாயோதில், சில் வளை விறலி!-
மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து,
மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்ப,
பாணர் பைம் பூ மலைய, இளையர்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து, 25
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த,
தோட்டி நீவாது, தொடி சேர்பு நின்று,
பாகர் ஏவலின், ஒண் பொறி பிசிர,
காடு தலைக் கொண்ட நாடு காண் அவிர் சுடர்
அழல் விடுபு, மரீஇய மைந்தின், 30
தொழில் புகல் யானை நல்குவன், பலவே.

துறை : விறலி ஆற்றுப்படை
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : நாடு காண் அவிர் சுடர்

பதிகம்

ஆராத் திருவின் சேரலாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி ஈன்ற மகன் முனை
பனிப்பப் பிறந்து, பல் புகழ் வளர்த்து,
ஊழின் ஆகிய உயர் பெருஞ் சிறப்பின் 5
பூழி நாட்டைப் படையெடுத்துத் தழீஇ,
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, அவன்
பொன் படு வாகை முழுமுதல் தடிந்து,
குருதிச் செம் புனல் குஞ்சரம் ஈர்ப்ப, 10
செருப் பல செய்து, செங்களம் வேட்டு,
துளங்கு குடி திருத்திய வளம் படு வென்றிக்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப் பாட்டு.

அவைதாம்: கமழ் குரற் துழாய், கழை அமல் கழனி, வரம்பு இல் வெள்ளம், ஒண் பொறிக் கழற் கால், மெய் ஆடு பறந்தலை, வாள் மயங்கு கடுந் தார், வலம்படு வென்றி, பரிசிலர் வெறுக்கை, ஏவல் வியன் பணை, நாடு காண் அவிர் சுடர்: இவை பாட்டின் பதிகம்.

பாடிப் பெற்ற பரிசில்: நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகம் கொடுத்தான் அக் கோ.

களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.

நான்காம் பத்து முற்றும்.