உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 10 - நிழல் உருவம் களங்கமில்லாத வானத்தில் சஞ்சரிக்கும் சந்திரனின் பேரொளி, அலைகளின் சுருதி லயத்தில் மயங்கி நிற்கும் அமைதி நிறைந்த கடற்கரையை இன்ப லோகமாக்கியிருந்தது. உலக சந்தடியிலிருந்து விலகி இந்த இன்ப லோகத்துக்கு வந்து மெய்ம்மறந்த நிலையில் இருக்கும் இளங் காதலர்களின் உள்ளத்தின் நிலையைப் பற்றி நாம் தான் என்ன் சொல்ல முடியும்? பூதுகன் தான் என்ன சொல்ல முடியும்? அவனுக்கு மாலவல்லியைப் பற்றி ஏற்பட்ட சந்தேகங்கள் மேலும் மேலும் வளரத் தொடங்கின. வைகைமாலை அவன் விருப்பத்துக்கு மாறாக அவனைத் தன் மாளிகையிலிருந்து வெளியேற்றியது அவனுக்குச் சிறிது மன வருத்தத்தை உண்டாக்கியிருந்ததேயானாலும், மாலவல்லியைப் பற்றி ஒரு அந்தரங்க ரகசியத்தைத் தெரிந்து கொண்டதில் வைகைமாலை தன்னைத் துரிதப்படுத்தியனுப்பியதும் நன்மைக்குத்தான் என்று அவன் மனத்தில் சிறிது ஆறுதல் ஏற்பட்டது. இந்தச் சமயத்தில் இளம் காதலர்களை நெருங்கி அவர்கள் இன்ப லோக யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க அவன் விரும்பவில்லை. அதோடு அவனுடைய நினைவெல்லாம் அப்பொழுது வைகைமாலையின் மீதே இருந்தது. "எப்படியோ இந்த ரகசியத்தை தெரிந்து கொண்டு விட்டோம். இதைப் பற்றிப் பின்னர் பார்த்துக் கொள்வோம். இவர்கள் இன்பத்துக்குத் தடையாய் இருப்பானேன்?" என்று எண்ணி அப்பொழுதே அந்த இடத்திலிருந்து திரும்பி விடுவதற்கு நினைத்தான். சிறிது தூரத்தில் உட்கார்ந்திருந்த காதலர்கள் மெய்ம்மறந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார்களே யொழிய, தங்களை வேறொரு உருவம் சிறிது தூரத்தில் நின்று கவனிப்பதைப் பற்றிய கவலையே அவர்களுக்கு ஏற்படவில்லை. சிறிது நேரம் அந்த இடத்திலிருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்த பூதுகன் திரும்பி நடக்க எத்தனித்த போது கலங்கரை விளக்கத்துக்குச் சமீபத்திலிருந்து யாரோ கனைப்பது போன்ற சத்தம் கேட்டது. அவன் திரும்புவதற்குள் அவ்வுருவம் அவன் மீது பாய்ந்தது. பூதுகன் கண்ணிமைப் பொழுதில் இந்த உருவம் யாரென்று உணர்ந்து கொண்டான். அது பிக்ஷு வேடத்தில் இருக்கும் கலங்கமாலரையர்தான்! பூதுகன் அப்படியே கலங்கமாலரையரைத் தூக்கிக் கடலில் எறிந்தான். அவரும் தம்மை ஒருவிதமாகச் சமாளித்துக் கொண்டு அலையோடு வந்து கரையேறி அவனை ஆவேசமாகத் தாக்க வந்தார். மறுபடியும் அவருடைய காலையும் கையையும் பிடித்துத் தூக்கிக் கடலில் எறிந்தான். பாவம், பூதுகன் தானாகக் கற்றுக் கொண்ட இந்தப் புதுப் போர் முறையைக் கலங்கமாலரையர் எப்படி அறிந்து கொள்ள முடியும்? அவர் ஒரு தடவையாவது பூதுகனைக் கடலில் தூக்கி எறிந்து விட வேண்டும் என்று தான் முயற்சித்தார். முதலில் கடலில் விழுந்த அவர் தான் மறுபடியும், மறுபடியும் கடலில் விழுந்து தவிக்க வேண்டியிருந்தது. தங்களுக்கு அருகில் இவ்வளவு அமர்க்களம் நடப்பதைச் சிறிது தூரத்தில் உட்கார்ந்திருந்து, இந்த உலகத்தையே மறந்திருக்கும் இளங் காதலர்கள் எவ்வளவு நேரம் உணராமலிருக்க முடியும்? தண்ணீரில் ஏதோ விழுவது போன்ற சத்தம் இரண்டொரு முறை கேட்கவே அவர்கள் ஏதோ என்னவோ என்று தங்கள் பேச்சிலேயே கவனமாய் இருந்து விட்டனர். ஆனால் இடை இடையே ஏற்படும் உறுமலும், சிறு சிறு சத்தமும் இலேசாக அவர்கள் காதில் விழுந்து கவனத்தைக் கலைத்தன. அவர்கள் சட்டென்று திரும்பிப் பார்த்த போதுதான் சிறிது தூரத்தில் பூதுகன் கலங்கமாலரையரைத் தூக்கி எட்டாவது முறையாகவோ, பத்தாவது முறையாகவோ கடலில் எறியப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான். "மாலவல்லி! அதோ யாரோ சண்டை போட்டுக் கொள்ளுகிறார்கள். நான் போய்ப் பார்த்து விட்டு வருகிறேன்" என்று கூறி மாலவல்லியின் அருகிலிருந்த ஆடவன் எழுந்தான். பிக்ஷுணிக் கோலத்திலிருந்த மாலவல்லி அந்த இடத்திலேயே தயங்கி நின்றாள். அந்த வாலிபன் பூதுகனுக்கும் மாலரையருக்கும் ஆவேசமாகச் சண்டை நடக்கும் இடத்துக்கு வந்து அவர்கள் இருவரையும் உற்று நோக்கினான். பாவம், ஒரு பௌத்த பிக்ஷு! அவரைத் தூக்கிக் கடலில் எறிந்து ஒரு குழந்தை பந்து விளையாடுவது போல விளையாடுகிறான் ஒரு வாலிபன். 'இது என்ன தகாத காரியம்? இந்த பிக்ஷு இந்த வாலிபனுக்கு என்ன தீங்கு இழைத்திருக்கக் கூடும்?' என்று மனத்தில் எண்ணிய அந்த வாலிபன் தன்னுடைய பலத்தையும் சிறிது காட்டி, பூதுகனிடமிருந்து அந்த புத்த பிக்ஷுவைக் காப்பாற்ற நினைத்தான். அந்த வீரன் அதிக நேரம் தாமதிக்கவில்லை. சட்டென்று பூதுகன் மீது பாய்ந்தான். இப்படித் திடீரென்று ஒரு வாலிபன் தங்கள் சண்டையில் குறுக்கிட்டுத் தன் மீது பாய்ந்து தாக்குவான் என்று பூதுகன் எதிர்பார்க்கவில்லை. அந்த வாலிபன் யாரென்று அவன் அறிந்து கொண்டான். பூதுகன் எதிர்பார்த்ததுதான் இது. பூதுகன் சிறிது அபாயகரமான நிலையில் தானிருந்தான். ஏனென்றால் இரு தாக்குதல்களையல்லவா அவன் சமாளிக்க வேண்டி இருந்தது! கலங்கமாலரையர் தமக்கு உதவியாக வேறொரு வீரன் கிடைத்ததும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பூதுகனை ஒரேயடியாக வீழ்த்திவிட நினைத்தார். அதனால் அவரும் தம் இழந்த பழத்தை மறுபடியும் வரவழைத்துக் கொண்டு பூதுகன் மீது வேகமாகப் பாய்ந்தார். அந்தப் பௌத்த பிக்ஷு ஆவேசமாகப் பூதுகன் மீது பாய்வதைக் கண்டதும் தனியாகப் பூதுகனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த வாலிபன் சட்டென்று அவனோடு சண்டை போடுவதை நிறுத்திக் கொண்டான். அந்தச் சமயம் சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்த மாலவல்லியும் சண்டை நடக்கும் இடத்தை நோக்கி மெதுவாக வந்தாள். பூதுகனைத் தாக்கிய வாலிபன், அந்தப் பௌத்தத் துறவியும் அவனை மிக ஆவேசமாகத் தாக்க ஆரம்பித்ததும் பூதுகனைத் தாக்குவதை நிறுத்திக் கொண்டது சிறிது ஆச்சரியத்தையளிக்கலாம். அந்த வாலிபனும் அந்தத் துறவி பூதுகனை அவ்வளவு ஆவேசத்தோடு தாக்குவதைக் கண்டு தான் ஆச்சர்யம் அடைந்து நின்று விட்டான். 'ஒரு துறவிக்கு இவ்வளவு ஆக்ரோஷமும் ஆவேசமும் ஏன் வர வேண்டும்? ஒரு துறவி இப்படி ஒருவனோடு சண்டை செய்வது தர்மத்துக்கு உகந்ததா? அன்பையும் அஹிம்சையையும் பொறுமையையும் உலகத்தில் ஏற்படுத்தி உலகையே சுவர்க்கமாக்க வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதையுமே ஒவ்வொரு ஜீவனின் நலனுக்காகவும் அர்ப்பணித்த புனிதனான அந்த போதிசத்வரின் புனித வழியைப் பின்பற்றும் சீடர்களா இவர்கள்?' அவ்வளவு நேரம் அவனுக்குப் பூதுகன் மீது எவ்வளவு கோபமும் ஆத்திரமும் இருந்ததோ அவ்வளவு கோபமும் ஆத்திரமும் பிக்ஷுவின் மீது திரும்பியது. "போடு, கடலில் மறுபடியும் தூக்கிப் போடு கடலில். சீவர ஆடை அணிந்த இவனை என் கைகளால் நான் தாக்க விரும்பவில்லை. நீயே அவனைத் தூக்கிக் கடலில் போடு. அன்பு வழியை விட்டுப் பகை வெறி கொண்டிருக்கும் இத்தகைய துறவிகளைக் கடலில் எறிந்து கொன்று விடுவது உலகத்துக்கு எத்தனையோ நன்மையாக முடியும்" என்று ஆத்திரத்துடன் மொழிந்தான் அந்த வாலிபன். பூதுகன் மாலரையரைத் தூக்கிக் கடலில் எறியும் சமயம், மாலவல்லி இடையே வந்து, "நிறுத்துங்கள்! ஒரு ஜீவனைக் கடலில் எறிந்து கொல்வதனால் என்ன பலன் ஏற்பட்டு விடப் போகிறது? ததாகதரின் அன்புருவை மனத்தில் எண்ணி அவரை மன்னித்து விட்டு விடுங்கள். பிக்ஷு என்பதற்காக அல்ல; ஒரு மனிதனைக் கொன்ற பாபம் உங்களுக்கு ஏற்பட வேண்டாம் என்பதற்காகத்தான்" என்று பூதுகனைப் பார்த்துச் சொன்னாள். பூதுகன் கலகலவென்று ஏளனச் சிரிப்பு சிரித்தான். கடற்கரையில் அந்தச் சிரிப்பும் ஏதோ அலையோசையைப் போலத்தானிருந்தது. "பாபமா. எங்கள் தரும சூத்திரத்தில் அப்படி ஒரு வார்த்தை கிடையாது. நான் பூதுகன். சார்வக சமயத்தைச் சேர்ந்தவன். நீங்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு திரிவீர்களே, நாஸ்திகன், நாஸ்திகன் என்று, அந்த வகையைச் சேர்ந்தவன். பாபம், புண்ணியம், நரகம், சுவர்க்கம் இதில் எதுவுமே எங்களை வந்து அண்டாது என்ற கொள்கையுடையவன். நான் நாஸ்திகனாயினும் அன்பு, இரக்கம், பச்சாத்தாபம், இத்தகைய மனித உணர்ச்சிக்குப் புறம்பானவன் அல்ல. ஆனால் அத்தகைய உணர்ச்சிகளைப் பெரிது பண்ணி இந்த உலகத்தில் தீமைகளை வளர விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. புத்தரை வணங்குகிறேன். ஆனால் இத்தகைய பாபாத்மாவை - வஞ்சகக்காரனைக் கடலில் எறிந்து ஒழித்து விடுவதுதான் நீங்கள் சொல்லும் புண்ணியம் என்று நினைக்கிறேன்" என்றான். பூதுகனுடைய நீண்ட பருத்த புஜங்களிடையே கலங்கமாலரையர் சிக்கிக் கொண்டிருந்தார். அவருடைய கரங்கள் மேலெழும்பாவண்ணம் கிடுக்கி போல் தன் நீண்ட கரங்களால் பிணைத்து உடும்பு போல் பிடித்துக் கொண்டிருந்தான் பூதுகன். உண்மையாகவே இந்தச் சந்தர்ப்பத்தில் தன் பலத்தையெல்லாம் இழந்திருந்த கலங்கமாலரையர் அப்பொழுது அவன் விட்டால் போதும், எப்படியாவது உயிர் தப்பி ஓடி விடலாம் என்று தான் எண்ணினார். மாலரையரின் முகத்தைப் பார்க்க மாலவல்லிக்கும் அவளோடு நின்ற அந்த அழகான வாலிபனுக்கும் சிறிது மன இரக்கம் ஏற்பட்டது. "இந்தத் துறவி உங்களை மறுபடியும் தாக்க வந்தது பிசகுதான். இது துறவிக்குரிய குணமும், கொள்கையும் ஆகாது. இப்படிப்பட்டவர்கள் துறவறத்துக்குரிய ஆடைகளை அணிந்து வெளிக் கிளம்புவதை நான் வெறுக்கிறேன். ஆனால் மறுபடியும் நீங்கள் இவரைக் கடலில் தள்ளி உயிர் வாங்க நினைப்பது கொடிது. எனக்காகவாவது அவரை விட்டு விடுங்கள். ஓடிப் போய் உயிர் வாழட்டும்" என்றான் அந்த வாலிபன். "நான் இவனை விட்டு விடுகிறேன். ஆனால் இப்படிப்பட்ட துரோகி இப்படிப்பட்ட வேஷத்தில் இந்தக் காவிரிப்பூம்பட்டின புத்த விஹாரத்தில் ஒரு வினாடி கூட இருக்கக்கூடாது. நாளைய தினம் இவனை இந்தப் புத்த விஹாரத்தில் பார்க்க நேர்ந்தால் மறுபடியும் என்ன நடக்குமோ? இவன் உயிரை வாங்காமல் நான் விட மாட்டேன். நீங்களே கேளுங்கள், இங்கிருந்து இப்படியே இவன் ஓடி விடுகிறானா என்று. உங்களுக்காக இவனை உயிரோடு விட்டு விடுகிறேன்" என்றான் பூதுகன். அந்த வாலிபன், "பிக்ஷுவே! நீங்கள் இங்கிருந்து ஓடி விடுங்கிறீர்களா? உண்மையாகவே உங்களைப் போன்றவர்கள் புத்தப் பள்ளிகளிலும், ஆலயங்களிலும் இருப்பது தவறு என்று நான் நினைக்கிறேன். நான் ஜைன சமயத்தைச் சேர்ந்தவன். இருப்பினும் புத்தரிடம் ஆழ்ந்த பக்தி உள்ளவன். நீங்கள் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து போய் விடுவதுதான் நல்லது" என்றான். கிடுக்கிப் பிடியில் தவித்துக் கொண்டிருந்த கலங்கமாலரையர் மெதுவான குரலில், "சரி! நான் போய் விடுகிறேன்" என்று கூறினார். பூதுகன் தன் பிடியைச் சிறிது தளர்த்தி, "உன்னை விட்டு விடுகிறேன். ஏன் தெரியுமா? அந்தக் கொடும்பாளூர் வீரர்கள் உன்னைக் கொன்று அடைய வேண்டிய பாக்கியத்தை நான் அடைய வேண்டாமென்பதற்காகத் தான்! இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள். 'மறுபடியும் சோழ சாம்ராஜ்யம் இந்நாட்டில் மகோன்னத நிலையை அடையப் போவதை உன்னாலோ என்னாலோ தடுக்க முடியாது' என்பதுதான் அது. ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படி இருக்கிறது" என்று சொல்லி அவரை விடுவித்தான். உயிர் பிழைத்த கலங்கமாலரையர் அவமானம் மிக்கவராய் எவ்வித வார்த்தையும் சொல்லாமல் தலைகுனிந்த வண்ணம் மெதுவாக நடந்தார். அந்த பௌத்த பிக்ஷுவுக்கும், பூதுகனுக்கும் இத்தகைய கொடூரமான சண்டை நடப்பதற்குக் காரணம் என்னவென்று அந்த வாலிபனுக்குத் தெரியாது. அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது கேட்பதற்கு அவகாசம் இல்லாதிருந்தது. ஆரம்பத்தில் பிக்ஷுவிடம் அவனுக்குச் சிறிது இரக்கம் ஏற்பட்டிருந்தாலும் பின்னால் அந்த பிக்ஷு பூதுகனை முரட்டுத்தனமாகப் பாய்ந்து தாக்க நினைத்த போது சட்டென்று அவன் மனத்தில் ஒரு வெறுப்பு தோன்றி விட்டது. அவன் சாதாரண பிக்ஷு அல்ல என்ற முடிவுக்கு வந்து விட்டான் அந்த வாலிபன். அதோடு மட்டுமல்ல; கடைசியாக அந்த பௌத்த பிக்ஷுவைத் தன் பிடியிலிருந்து விடும்போது, பூதுகன் சொல்லிய வார்த்தைகள் அவனுக்குச் சிறிது ஆச்சரியத்தை அளித்ததோடு அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள சச்சரவு எதன் காரணமாக இருக்கும் என்பதையும் அவனால் ஓரளவு உணர்ந்து கொள்வதற்கு அனுகூலமாயிருந்தது. மாலவல்லி அந்த வாலிபனுக்கு நெருங்கினாற் போல் நின்று கொண்டிருந்தாள். சிறிது நேரத்துக்கு முன்னால் வைகைமாலையின் வீட்டில் கண்ட அந்த இளைஞன் பூதுகனை மறுபடியும் கடற்கரையில் தான் ஒரு வாலிபரோடு தனித்திருக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாகக் காண நேர்ந்தது, பிக்ஷுணிக் கோலத்திலிருந்த அவளுக்கு வெட்கமாகவும் தலை இறக்கமாகவும் தானிருந்தது. அவன் தன்னுடைய தோழி வைகைமாலையின் காதலன் என்பது அவளுக்கு நன்கு தெரியும். அவனுடைய குணம், கொள்கை இவைகளைப் பற்றியெல்லாம் அடிக்கடி வைகைமாலை சொல்லக் கேட்டிருக்கிறாள். நாஸ்திகப் பிரசாரகனான அவன் புத்த பிக்ஷுணியாகிய தன்னை நடுநிசியில் ஒரு வாலிபனோடு தனித்திருந்ததைப் பார்த்து விட்டது தனக்கு மாத்திரம் அல்லாமல், புத்த சமயத்துக்கும், புத்த சங்கத்துக்கும் எத்தகைய இழுக்கை ஏற்படுத்தும் என்பதை யெண்ணி அவள் நடுங்கினாள். அமைதி நிறைந்த அந்தக் கடற்கரை நிலவொளியில் அம்மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணமே சிறிது நேரம் மௌனமாக நின்றனர். பூதுகன் பேச ஆரம்பித்தான். அவனுடைய பேச்சில் கேலித்தனம் மிகுந்திருந்தது. அவன் மாலவல்லிக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் வாலிபனைப் பார்த்து, "பகவதியை எனக்கு நன்றாகத் தெரியும். தங்களைத்தான் தெரியாது. பகவதியின் மனம் புத்த பெருமானின் களங்கமற்ற ரூப சௌந்தரியத்தில்தான் பக்தியும், பற்றும் கொண்டிருக்கிறது என்று நினைத்தேன். தங்களைப் போன்ற ஒரு யௌவன வாலிபரிடமும் அவள் மனம் லயித்திருப்பதைக் கண்டு எனக்கு மகிழ்ச்சி. இதைக் கேட்டால் என்னுடைய காதலி வைகைமாலையும் சந்தோஷப்படுவாள். வீணாக இந்தச் சீவர ஆடைக்குத் தன் மனத்தையும் யௌவனத்தையும், எழிலையும் பலி கொடுக்காமல் இவ்வுலகில் ஒவ்வொருவரும் அனுபவிப்பதற்காகத் தேங்கிக் கிடக்கும் இன்பத்தில் திளைத்து அனுபவிக்க வேண்டும் என்ற பரந்த நோக்கம் பகவதிக்கு ஏற்பட்டதிலும் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. போகட்டும்! நான் யாரென்று தாங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் தாங்கள் யாரென்று நான் அறிந்து கொள்ளவில்லையே?" அந்த வாலிபனுக்கும் அப்பொழுது சட்டென்று பதில் சொல்ல முடியாதபடி சிறிது சங்கடம் ஏற்பட்டது. அவன் மாலவல்லியின் முகத்தைப் பார்த்தான். ஆனால் அவளோ மன அச்சத்தினால் கவிழ்ந்திருந்த தலையை நிமிர்த்தாமலே நின்று கொண்டிருந்தாள். பூதுகன் அவ்விருவருடைய முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். இளம் வாலிபன் சிறிது தைரியம் கொண்டவனாகப் பேசத் தொடங்கினான். "நான் கங்கபாடியைச் சேர்ந்தவன். என் பெயர் வீரவிடங்கன். ஒரு சாதாரணப் போர்வீரன்" என்றான். பூதுகன் சிரித்துக் கொண்டே, "நீங்கள் கங்கநாட்டைச் சேர்ந்தவரா? மிகவும் சந்தோஷம். சாதாரணப் போர்வீரராக யிருந்தாலென்ன? இராஜகுமாரர்கள் கூட இவ்வளவு அழகாகவும் கம்பீரமாகவும் இருப்பதில்லையே? நான் கூட உங்களைப் பார்த்ததும் நீங்கள் ராஜகுமாரராய்த்தான் இருக்க வேண்டுமென்று நினைத்தேன். தமிழகத்தில் முக்கால் பகுதியைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருக்கும் பல்லவ சக்கரவர்த்திக்கு உங்கள் அரசர் ராஜசிம்மர் உற்ற நண்பர் அல்லவா? எனக்கு ஒரு ஆச்சர்யம்! ஜைன சமயத்தைச் சேர்ந்த உங்களுக்குப் புத்த சங்கத்தைச் சேர்ந்த இந்த மங்கையிடம் காதல் ஏற்பட்டதுதான் விந்தை - இதிலிருந்து தெரியவில்லையா? கடவுளின் தோட்டத்தில் அவருக்கு அர்ப்பணிப்பதற்காக மலர்ந்த மலராகவே இருந்தாலும் அந்த மலர் தேனை ஏந்தி வண்டை அழைக்காமல் இருப்பதில்லை; அழகு, அன்பு, காதல் இவை எல்லாம் சாதி, மதம், கொள்கை, அந்தஸ்து இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை என்று. இத்தகைய அந்தரங்கமான காதல் இருக்கும் போது இவள் ஏன் இப்படித் துறவுக் கோலம் பூண்டு திரிய வேண்டும்? நீங்கள் ஏன் கங்கபாடியிலிருந்து காவிரிப்பூம்பட்டினம் வரையில் வர வேண்டும்? இவளை ஏதேனும் ஒரு முறையில் விவாகம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தக் கூடாதா?" என்றான். வீரவிடங்கன் என்னும் அவ்வாலிபன் பூதுகனின் வார்த்தைக்கு எவ்வித பதிலும் சொல்லவில்லை. சிறிது தயங்கியபடியே நின்றான். அப்பொழுதுதான் மாலவல்லிக்குப் பேசுவதற்குச் சிறிது தைரியம் ஏற்பட்டது. "எங்கள் விவாக விஷயத்தைப் பற்றி நாங்களே யோசித்து முடிவு செய்து கொள்கிறோம். நாங்கள் இருவரும் சந்திப்பதைப் பார்த்ததினாலேயே நீங்கள் இவ்வித முடிவுக்கு வந்து யோசனை சொல்லத் தொடங்கியிருக்கிறீர்கள். அது தவறு - நீங்கள் சொல்லியபடி எங்கள் இருவருக்கும் உள்ள சம்பந்தத்தை நான் மறுக்கத் தயாராக இல்லை. அதனால் எங்களுக்கு யோசனை சொல்ல ஒருவர் வேண்டுமென்று நாங்கள் நினைக்கவில்லை. மன்னிக்க வேண்டும்! தயவு செய்து எங்கள் விவாக விஷயமாகத் தாங்கள் யோசனை கூற வேண்டாம்" என்றாள். "ஆமாம்! அவள் விருப்பம் போல் தான் என் விருப்பமும். எங்களுடைய அந்தரங்கமான வாழ்க்கையில் பிறருடைய யோசனைகளுக்கு இடமே இல்லை. மன்னிக்கவும். உங்களுடைய நட்புக் கிடைத்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஆனால் எங்களுடைய விவகாரம் தவிர மற்ற எதைப் பற்றியும் உங்களோடு பேசவோ, அல்லது உங்கள் யோசனையைக் கேட்கவோ நான் சித்தமாக இருக்கிறேன்" என்றான் வீரவிடங்கன். பூதுகன் தனக்குள் சிரித்துக் கொண்டே, "உண்மைதான். பிறர் காதல் வியவகாரங்களைப் பற்றிப் பேச நானும் விரும்ப மாட்டேன். ஆனால் சில சமயங்களில் இந்தப் பொல்லாத காதல், மதம், அரசாங்கம், தேசம், போர் முதலியவைகளோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு விடுகிறது. காதலினால் மதம் பாழாகிறது. காதலினால் சாம்ராஜ்யங்கள் பாழாகின்றன; சில சாம்ராஜ்யங்கள் நிலைநிறுத்தப்படுகின்றன. காதலினால் எவ்வளவு மன்னாதி மன்னர்களெல்லாம் ஒருவரோடு ஒருவர் போரிட்டு மாண்டிருக்கிறார்கள் என்பதைக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. உங்கள் காதல் விவகாரங்களில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனாலும் இதையெல்லாம் சொல்லலாம் என்ற ஆசையில் சொல்லி விட்டேன். உங்கள் காதல் எந்த சாம்ராஜ்யத்தை அழிப்பதற்காக இருந்தாலும், எந்த சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்துவதற்காக இருந்தாலும், எந்த தருமத்தைக் குலைப்பதற்காக இருந்தாலும், எந்த தருமத்தை நிலை நாட்டுவதற்காக இருந்தாலும் அது நீடூழி வாழட்டும்! அதைப் பற்றி இனி மேல் நான் பேசவில்லை" என்றான். "எந்த சாம்ராஜ்யத்தைக் குலைப்பதற்காகவோ அல்லது நிலைநிறுத்துவதற்காகவோ, எந்த தருமத்தை குலைப்பதற்காகவோ அல்லது எந்த தருமத்தை நிலைநிறுத்துவதற்காகவோ ஏற்பட்டதில்லை எங்கள் காதல்..." என்றான் வீரவிடங்கன். "மிக்க மகிழ்ச்சி. உங்கள் காதல் - காதல் சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்காகவும் காதல் தருமத்தை நிலைநிறுத்துவதற்காகவுமே ஏற்பட்டது என்று சொல்லி இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்" என்றான் பூதுகன் சிரித்துக் கொண்டே. "உங்களைப் போல் மனம் விட்டுப் பேசும் நண்பர்களைக் கண்டால் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்று கூறினான் வீரவிடங்கன். "உங்களுக்குப் பிடிக்கலாம். ஆனால் இந்தப் பெண்களுக்கே மனம் விட்டுப் பேசுபவர்களைக் கண்டால் பிடிக்காது" என்றான் பூதுகன் மாலவல்லியைப் பார்த்துக் கொண்டு. "மனம் விட்டுப் பேசுபவர்களைக் கண்டால் பிடிக்காது என்று அர்த்தமில்லை. மனம் விட்டு எல்லாவற்றையுமே பேச நினைப்பவர்களைக் கண்டால்தான் பெண்களுக்குப் பிடிப்பதில்லை" என்று சொன்னாள் மாலவல்லி சிறிது கோபம் நிறைந்த குரலில். "நண்பரே! இப்படி ஒரு வார்த்தையைக் கூடப் பொறுமையுடன் சகித்துக் கொள்ள முடியாத பெண்களைப் பௌத்த சங்கத்தில் சேர்த்துக் கொள்ளுகிறார்கள், பாருங்கள்! அதுதான் விநோதம். அதிலும் பிசகில்லை குண்டலகேசியைப் போல் எவரிடத்திலும் வாதாடி வெற்றி கொள்ளும் பெண்கள்தானே அவர்களுக்கு வேண்டியிருக்கிறது? ஆனால் குண்டலகேசியைப் போல் தன் கணவனையே மலையிலிருந்து உருட்டித் தள்ளும் குணம் எல்லாப் பெண்களிடமும் குடிகொள்ளாதிருந்தால் மிகவும் உத்தமம்தான்" என்றான் பூதுகன் நகைத்தபடியே. "ஏன்? அவள் தன் கணவனைக் கொன்றதில் என்ன பிசகு இருக்கிறது? தன்னைத் தாக்க வந்த பசுவையும் கொல்லலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. பெரிய கள்வனை மணந்து கொண்ட குண்டலகேசி அவனைக் கள்வனென்று பாராமல் கணவன் என்பதற்காக எவ்வளவோ அன்பாக நடந்து கொண்டாள். அப்படி இருக்கையில் அவள் அணிந்து கொண்டிருந்த ஆபரணத்துக்காக அவளை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட நினைத்தான், கணவன் என்று சொல்லிக் கொள்ளும் அந்த மகா பாவி. இத்தகைய கொடுமையாளனை உலகத்தில் வைத்திருப்பது பிசகு எனக் கருதி, அவன் தன்னை மலையிலிருந்து தள்ளி விடுவதற்கு முன்னால் குண்டலகேசி அவனை மலையிலிருந்து தள்ளி விட்டாள். கணவனைக் கொன்றோம் என்பதற்குப் பிராயச்சித்தமாக புத்தபிக்ஷுணியாகி, ததாகதரின் திருப்பாத கமலங்களையே சரணென்று நம்பிவிட்டாள் அவள்" என்றாள் மாலவல்லி. இதைக் கேட்ட வீரவிடங்கன் சிறிது ஆத்திரம் கொண்டவனாக, "தன் கணவனையே கொன்ற ஒருத்தியின் பாபத்துக்குப் பிராயச்சித்தம் பௌத்த சங்கத்தில் பிக்ஷுணியாகச் சேர்ந்து விடுவதுதானா? இதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. கணவனைக் கொல்வதை விட உலகத்தில் மகா பாதகம் ஏதேனும் உண்டா? இது அன்பு வழிக்கும், அஹிம்சா தருமத்துக்கும் எவ்வளவோ முரணானது. எங்களுடைய ஜைன சமாஜத்துள் இத்தகைய பெண்களுக்கு இடமே இருக்காது. புத்த சங்கத்துள் பிக்ஷுணிகளுக்கு அளிக்கப்படும் உரிமைகளும், பதவிகளும் ஜைன சமயத்தைச் சேர்ந்த பெண்ணுக்குக் கொடுக்கப்படுவதில்லை. முதலில் தன்னுடைய மண வாழ்க்கையில் ஜைன சமயத்தைச் சேர்ந்தவளாக இருந்த குண்டலகேசி தன்னுடைய அகிருத்தியங்களுக்குப் பின், அச் சமயத்தினர் தன்னை விரும்பவில்லை, தனக்கு சன்னியாச யோக்கியதை அளிக்கவில்லை என்பதற்காகவே புத்த சமயத்தில் சேர்ந்தாள்" என்றான். வீரவிடங்கனின் வார்த்தை மாலவல்லிக்குச் சிறிது ஆச்சர்யத்தை அளித்தது. "நீங்கள் தயவுசெய்து என் எதிரில் புத்த சமயத்தைப் பற்றிப் பரிகசிக்க வேண்டாம். நான் அப்புறம் ஜைன சமயத்தைப் பற்றி ஏதேனும் சொன்னால் மனத்தாங்கல் படுவீர்கள். ஜீவ இம்சை செய்யக் கூடாதென்று மயில்பீலியால் தரையைத் துடைத்துக் கொண்டே நடந்து செல்லும் ஆடையணிந்து கொள்ளாத திகம்பரர்களைப் பற்றி நான் சொல்லப் புகுந்தால் மிகவும் வெட்கக்கேடாக முடியும். உடம்பில் உள்ள அழுக்கில் கிருமிகள் இருக்கும்; தேய்த்துக் குளித்தால் அவை இறந்து விடும் என்று குளிக்காமல் அஹிம்சா தர்மம் பேசி உடல் நாற்றம் எடுக்க ஊரில் திரிபவர்களைப் பற்றி நான் சொல்ல வேண்டுமா?" வீரவிடங்கனுக்கும், மாலவல்லிக்கும் மத சம்பந்தமான வாக்குவாதம் ஏற்பட்டு விட்டதைப் பார்த்துப் பூதுகன் சிரித்தான். அவனுக்குச் சரியான சமயம் வாய்த்தது. "பார்த்தீர்களா? 'எந்த சாம்ராஜ்யத்தைக் குலைப்பதற்காகவோ, நிலைநிறுத்துவதற்காகவோ, எந்த தருமத்தைக் குலைப்பதற்காகவோ, நிலைநிறுத்துவதற்காகவோ எங்களுக்குள் காதல் ஏற்படவில்லை' யென்று சொன்னீர்களே? இப்பொழுது சகிப்புத்தன்மை இல்லாமல் அவரவர்கள் கொள்கைகளை அவரவர்கள் உயர்வாகப் பேசித் தர்க்கம் செய்கிறீர்கள் - பார்த்தீர்களா? காதலுக்காக மனிதன் மற்ற எல்லாவற்றையும் எளிதில் துறந்து விட முடிகிறதில்லை. அப்படித் துறந்தால் எவ்வளவோ விஷயங்கள் பாதிக்கப்படுகின்றன. இவ்வளவு காதலோடு இருக்கிறீர்களே, உங்கள் சமய உணர்ச்சி உங்களை விட்டு மாறி விட்டதா?" என்றான் பூதுகன். வீரவிடங்கனும் மாலவல்லியும் பூதுகனின் வார்த்தையைக் கேட்டு வெட்கம் மிகுந்த நிலையில் நின்றனர். பூதுகன் மேலும் அவர்கள் நிலையைச் சங்கடத்துக்கு உள்ளாக்கப் பிரியம் இல்லாதன் போல், "சரி, நாழியாகி விட்டது. போதும், இப்படியே இங்கு நின்று பேசிக் கொண்டிருந்தால் பொழுது கூட விடிந்து விடும். பகவதி இப்போதே பௌத்த விஹாரத்துக்குச் சென்று விடுவது நல்லதல்லவா?" என்றான். அவர்களும் அப்பொழுதுதான் சுய உணர்ச்சி பெற்றவர்கள் போல அவ்விடமிருந்து மெதுவாக நடந்தார்கள். பூதுகனுக்கு மாலவல்லி விஹாரத்துக்குச் சென்ற பின் வீரவிடங்கன் எங்கு செல்கிறான் என்று அறிந்து கொள்ள ஆவல். அவ்விருவரையும் வழியனுப்புவது போல அவர்களைப் பின் தொடர்ந்து மெதுவாக நடந்தான். அங்கிருந்த விஹாரத்திலுள்ள சம்பாதிவனம் சமீபத்தில்தான் இருந்தது. அவர்கள் அந்த வனத்தை நெருங்கியதும் அவ் வனத்துக்கு வெளிப்புறம் இருந்த மரத்தில் ஒரு குதிரை கட்டப்பட்டுக் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அந்தக் குதிரையைப் பார்த்ததுமே பூதுகனுக்கு அந்தக் குதிரைக்குரியவன் வீரவிடங்கன் தான் என்பது விளங்கிவிட்டது. வீரவிடங்கன் குதிரையின் முதுகில் தட்டி விட்டு மரத்தோடு பிணைத்திருந்த கடிவாள வாரை அவிழ்த்தான். மாலவல்லி தன் காதலனின் பிரிவுக்குரிய நேரம் நெருங்கி விட்டதை யறிந்து சிறிது மனவியாகூலம் அடைந்தவள் போல் ஒரு புறமாக ஒதுங்கி நின்றாள். பூதுகன் கங்கபாடியிலிருந்து வந்திருக்கும் வீரவிடங்கன் எங்கு தங்கி இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள ஆசைப் பட்டவன் போல், "நீங்கள் இந்தச் சோழ நாட்டில் எங்கு தங்கியிருக்கிறீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா?" என்று கேட்டான். வீரவிடங்கன் சற்றுத் தயங்கியவனாக, "இங்கு இந்த நாட்டில் தங்குவதற்கு என்று ஒரு இடம் வேண்டுமா? பல ஊர்களைச் சுற்றிக் கொண்டு இங்கு வருவேன்" என்றான். "அப்படியென்றால் இன்னும் சில நாட்கள் இங்கு தங்குவீர்கள் என்று நினைக்கிறேன்!" என்றான் பூதுகன். "ஆம். இந்திர விழா வரையில் இந்த ஊரில் இருப்பேன். மருவூர்ப்பாக்கத்தில் எங்கள் நாட்டிலிருந்து வந்திருக்கும் வர்த்தகர் ஒருவரோடு தங்கியிருக்கிறேன்" என்றான். "சரிதான். நாளை மறுதினம் இந்திர விழா. நாளைய தினம் இரவும் நீங்கள் இருவரும் சந்திப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இந்திரவிழாவன்று இந்தக் கடற்கரை நீங்கள் தனிமையில் சந்திப்பதற்கு இடம் தராது. இந்திரா விழாவன்று கூட்டமும் கேளிக்கையும் தானே அதிகமாக இருக்கும்?" என்று சொன்னான் பூதுகன். வீரவிடங்கனும் மாலவல்லியும் இதற்கு எந்த விதமான பதிலும் சொல்லவில்லை. வீரவிடங்கன் குதிரை மேல் பாய்ந்து ஏறி உட்கார்ந்து மாலவல்லியிடம், 'போய் வருகிறேன்' என்று சொல்வது போல் தலையை அசைத்தான். அவளும் துயரம் தோய்ந்த முகத்தோடு அவனுக்கு விடையளிப்பது போல் தலையை அசைத்தாள். எஜமானரின் உத்தரவை எதிர்பார்ப்பது போல் புறப்படும் வேகத்தில் நின்று கொண்டிருந்தது அந்தக் குதிரை. "தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இனி அடிக்கடி சந்திப்போம்" என்று பூதுகனுக்குத் தன் வணக்கத்தைச் செலுத்திவிட்டு மாலவல்லியிடம் விடைபெற்றுக் கொண்டு குதிரையைத் தட்டிவிட்டான் அவ்வீர வாலிபன். அச்சமயம் வீரவிடங்கனின் குதிரை எந்த மரத்தில் கட்டப்பட்டிருந்ததோ அந்த மரத்தடியில் நிழலில் நிழலோடு நிழலாக ஒதுங்கி ஒளிந்திருந்த ஒரு உருவம் அவர்கள் மூவரும் மூன்று பாதைகளில் சென்று மறைந்த பின் வெளியேறி, அந்தச் சம்பாதி வனத்துக்குள் அதிவேகமாக மாலவல்லியைத் தொடர்ந்து சென்று மறைந்ததை யார் அறிந்திருக்க முடியும்? |