மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

முதல் பாகம் - காலச் சக்கரம்

அத்தியாயம் 23 - கங்க நாட்டு இளவரசன்

     கடைக்குச் சமீபமாக வந்து நின்ற வாலிபனைக் கண்டதும் வணக்கத்துடனே எழுந்து நின்று வரவேற்றான் அந்த முத்து வியாபாரி குணசிங்கன். அவன் அந்தக் கடையின் உள்ளே நுழைந்த போது அங்கிருந்த ஆசனம் ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டான்.

     அந்த வாலிபன் அங்கு வந்தது, அதுவரையில் அங்கு நடந்த சம்பாஷணைக்கு முற்றுப் புள்ளி வைத்தது போலாகி விட்டது. பூதுகனின் பெயரைக் கேட்டதும் சிறிது ஆச்சரியம் அடைந்து நின்ற சந்தகர் மேலும் பூதுகனைப் பற்றி அவர்கள் ஏதேனும் பேசுவார்களோ என்று எதிர்பார்த்ததற்கு மாறாகத் திடீரென்று ஒரு வாலிபன் தோன்றி அவர்கள் சம்பாஷணைக்கு முற்றுப் புள்ளி வைத்ததை நினைத்துச் சிறிது ஆயாசம் அடைந்தார். இருப்பினும் அவ் வாலிபனின் கவர்ச்சிகரமான உருவமும் அவனுக்கு நடந்த உபசாரமும் அவர் மனத்தில் சிறிது வியப்பை ஏற்படுத்தவே, அவருக்கு அவ்வாலிபனைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்ள வேண்டுமென்ற சிரத்தை ஏற்பட்டு விட்டது.

     பக்கத்துக் கடை வியாபாரி அந்த வாலிபன் முத்துக் கடையில் வந்து உட்கார்ந்ததும், இந்தச் சமயத்தில் இடையூறாக உரையாடுவது உசிதமில்லை என்று நினைப்பவன் போல் வேறு திசையில் தன் கவனத்தைச் செலுத்தலானான். வியாபாரம் நடக்கும் ஒரு கடையில் அனாவசியமாக அறிமுகமில்லாத தாம் நிற்பது லக்ஷணமல்ல என்பதைச் சந்தகர் உணர்ந்திருந்தார். இருப்பினும் அந்த முத்து வியாபாரியிடம் முக்கியமாக ஏதோ பேச நினைத்ததாலும், புதிதாக வந்த அந்த வாலிபனைப் பற்றிச் சிறிது தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டதாலும் அந்த இடத்தை விட்டுச் செல்ல மனமில்லாதவராக அங்கு குவிக்கப்பட்டிருந்த முத்துக்களில் தம் கவனத்தைச் செலுத்துகிறவர் போல் நின்றார். குதிரையில் வந்த அந்த அழகிய வாலிபன், "குணசிங்கரே! குடந்தைக்குச் சமீபமாக உள்ள கோடீச்சுவரத்திலிருந்து சந்தகர் என்ற சோதிடர் இவ்வூருக்கு வந்திருக்கிறாராமே? உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

     அந்த வாலிபன் தம்மைப் பற்றி விசாரிப்பதைக் கேட்டதும் சந்தகருக்கு ஏற்பட்ட வியப்பும் திகைப்பும் அதிகமாகி விட்டன. இருப்பினும் அவர் அந்தச் சமயம் தன்னை யார் என்று வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அங்கு குவிக்கப்பட்டிருக்கும் முத்தில் ஒரு கை எடுத்து அவைகளை விரலால் புரட்டிப் புரட்டிப் பரிசீலனை செய்பவர் போலப் பார்த்துக் கொண்டிருந்தார்.

     கோடீச்சுவரத்திலிருந்து சோதிடர் வந்திருக்கிறாரா? எனக்குத் தெரியாதே. பக்கத்துக் கடைக்காரரை வேண்டுமானால் விசாரிக்கிறேன்" என்றான் முத்து வியாபாரி.

     "வேறு ஒருவரையும் விசாரிக்க வேண்டாம். உமக்குத் தெரியுமா என்று தான் கேட்டேன். உமக்குத் தெரியாவிட்டால் பாதகமில்லை. நானே அதை விசாரித்து அறிந்து கொள்கிறேன்" என்றான் அந்த வாலிபன்.

     "உங்களுக்கு எதற்காக அந்த சோதிடரைப் பற்றித் தெரிய வேண்டும்" என்றான் முத்து வியாபாரி.

     "நல்ல சோதிடர் என்றால் பார்க்கத் தோன்றாதா? முக்கியமாகச் சில விவரங்கள் அவரை விசாரிக்க வேண்டும்" என்றான் அந்த வாலிபன்.

     "உங்களுக்குச் சோதிடத்தில் இவ்வளவு பற்றுதல் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. நீங்கள் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலகில் மனிதன் தன்னுடைய கர்ம விதியிலிருந்து பேதைமை புத்தியினால் ஏதேதோ செய்து மீண்டு வருவதாக நினைப்பது பற்றி மகா வீரர் எள்ளி நகையாடி இருக்கிறார். 'நம்முடைய வினையைத் தவத்தால் வெல்வதை விட வேறு வழிகளில் நம் வினையை வென்று விட்டோம்' என்று நினைப்பது மடமையாகும் என்று அவரே சொல்லி இருக்கிறார். எங்கள் ததாகதரும் 'பேதை மனிதன் மடமை நிறைந்த சில கொள்கைகளிலிருந்து விலகினால் அந்த அளவுக்கு அவன் மேதையாகிறான்' என்று சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டாம். சோதிடர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். தங்கள் வினைப்பயனை மீறி எதுவும் செய்ய முடியாத அவர்கள் பிறருடைய வினைப் பயனைத் தீர்த்துவிடப் போகிறார்களா?" என்று கேட்டான் வியாபாரி.

     இதுவரையில் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த சந்தகர் கையிலிருந்த முத்துக்களை அலட்சியமாகக் குவியலில் போட்டு, "புத்தர்பிரான், மகாவீரர் இவர்களுடைய அமுத மொழிகளைக் கேட்டு அதன்படியே ஒவ்வொருவரும் நடப்பதானால் இந்த உலகமே சுவர்க்கமாகி விடும். இந்த மனித குலத்தைக் கடைத்தேற்றுவதற்காக அவர்கள் பல அரிய வழிகளை வகுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். ஆனால் மனிதன் அவர்கள் விட்டுப் போன அரிய வழிகளைக் கடைத்தேற்றுகிறவன் போல் தன்னுடைய சுயநலத்தை அனுசரித்துத் தனக்கேற்ப ஒரு மார்க்கத்தை அமைத்துக் கொள்கிறான். சோதிட சாஸ்திரம் பொய்யானதல்ல, அவைகளும் சிறந்த ஞானிகளால் உருவாக்கப் பட்டவைதான். இந்த நாட்டில் புராதனமாகத் தோன்றிய வேதத்தின் ஓர் அங்கமாகவே நிற்கிறது சோதிட சாஸ்திரம். தனி மனிதனின் இன்ப துன்பத்துக்காக மாத்திரம் அந்த சாஸ்திரம் ஏற்பட்டதில்லை.

     "இந்தப் பரந்த உலகின் கிரக சஞ்சாரங்களின் பலனாக அப்போதைக்கப்போது ஏற்படும் மாறுதலைக் கணக்கெடுத்துக் காட்டுகிறது சோதிட சாஸ்திரம். நமக்கு ஒளியளிக்கும் சூரியனும் சந்திரனும் அலட்சியம் செய்து விடக் கூடியவர்களல்ல. இவற்றைப் போல் மற்ற கிரகங்களும் அலட்சியம் செய்து விடக் கூடியவை அல்ல. இரவு, பகல், மழை, காற்று, நெருப்பு இவைகளெல்லாம் அந்த கிரக சஞ்சார பலன்களினால் ஏற்பட்டு இந்த உலகத்துக்கு நன்மையையோ தீமையையோ செய்கின்றன என்பது மறைக்க முடியாத உண்மையாகும். இந்த உலகில் சிறு நன்மை தீமைகள் கூட அந்த கிரக ரீதியின் பலனாகத்தான் ஏற்படுகின்றன வென்பதை நல்ல புத்திசாலிகளிடம் போய்க் கேட்டால் தான் சொல்லுவார்கள். விதியை வெல்ல வேண்டுமென்று எண்ணும் மனிதன் கூடத் தெய்வ வலிமையையும் அதற்கு அடங்கியுள்ள கிரக வலிமையையும் அலட்சியம் செய்வதில்லை. மனிதன் பிறக்கும் போதே இக்கிரகங்களின் குண தோஷத்தோடு சிருஷ்டிக்கப்பட்டவனாகி விடுகிறான் என்பது தான் நம் முன்னோரின் கருத்து. ஆகையால் தம் மன ஆறுதலுக்காக ஒரு சோதிடரைக் காண விரும்பிய ஒருவரிடம் இத்தகைய வார்த்தைகள் சொல்லாதீர்கள்" என்றார்.

     சந்தகரின் வார்த்தைகளைக் கேட்ட அவ்வாலிபன் சிறிது முகமலர்ச்சியுற்றவனாக அவரைப் பார்த்துக் கொண்டே, "தாங்கள் சொல்வதுதான் உண்மை. தாங்களும் சோதிட சாஸ்திரத்தில் வல்லவர்களென்று தெரிகிறது" என்றான்.

     "எனக்கு அந்த சாஸ்திரத்தில் பயிற்சி இல்லை. தாங்கள் சொல்லியபடி கோடீச்சுவரத்துச் சந்தகர் இந்த சாஸ்திரத்தில் மிகுந்த தேர்ச்சியுள்ளவரென்று தான் நானும் கேள்வியுற்றிருக்கிறேன்" என்று கூறினார்.

     "அப்படியென்றால் அவர் இருக்கும் இடம் தெரியுமா தங்களுக்கு?" என்று கேட்டான் அவ் வாலிபன்.

     "தெரியும். என்னோடு வந்தீர்களானால், அவர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன்" என்றார்.

     அந்த வாலிபன் ஆர்வத்தோடு எழுந்து, "சரி வாருங்கள், போகலாம்" என்று அழைத்தான்.

     அந்தச் சமயம் சந்தகர் அந்த முத்து வியாபாரியோடு பேசிச் சில விவரங்கள் அறியத்தான் வந்திருந்தார். ஆயினும் அந்த வாலிபனின் வேண்டுகோளைத் தட்ட முடியாதவராகி அவனோடு புறப்படச் சித்தமானார்.

     அந்த வாலிபன் குதிரையிலேறி அமராமல் அதன் லகானைக் கையில் பற்றியபடியே சந்தகரைப் பின் தொடர்ந்து நடந்தான். சிறிது தூரம் சென்றதும் சந்தகர் அந்த வாலிபனைப் பார்த்து, "இப்பொழுது நாம் எங்கு செல்லலாம்?" என்று கேட்டார்.

     அவருடைய வார்த்தையைக் கேட்ட அந்த வாலிபன் திகைப்படைந்தவனாக "எங்கு செல்லலாமென்றால்?... நாம் சோதிடர் சந்தகரைப் பார்க்கத்தானே போகிறோம்?..." என்றான்.

     "ஆமாம். நீங்கள் குறிப்பிடும் சந்தகர் நான் தான். அவ்விடத்தில் என்னை யாரென்று காட்டிக் கொள்ளப் பிரியப் படவில்லை. நாம் ஒரு தனியான இடத்திலிருந்து பேசினால் நலம். உங்கள் மனத்தில் உள்ளதைத் தாராளமாகக் கேட்கலாம் - நானும் தாராளமாகப் பதில் சொல்லலாம். அதனால் தான் எங்கே போகலாம் என்று கேட்டேன்" என்றார்.

     அந்த வாலிபன் ஆச்சர்யத்தின் மேல் ஆச்சர்யம் அடைந்தவனாக, "உங்களை முதலில் பார்த்த போதே அப்படித்தான் எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நீங்கள் சொல்வதும் சரிதான். நாம் எங்கேனும் தனிமையான இடத்தில் இருந்து பேசுவதுதான் நலம். எங்கள் நாட்டிலிருந்து இங்கு வந்திருக்கும் பட்டு வியாபாரி தங்கியிருக்கும் இடத்துக்குப் போவோம். அங்குதான் நான் இந்த ஊருக்கு வந்தால் தங்குவது வழக்கம்" என்றான்.

     "சரிதான். தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?" என்றார் சந்தகர்.

     "நான் கங்கபாடியைச் சேர்ந்தவன். ஒரு சாதாரணப் போர்வீரன்" என்றான் அவ் வாலிபன்.

     "தங்களைப் பார்த்தால் ஒரு சாதாரணப் போர் வீரராக எனக்குத் தோன்றவில்லை. ஒரு சாதாரணப் போர்வீரருக்கு அந்த முத்து வியாபாரி அவ்வளவு மரியாதையும் உபசாரமும் காட்ட வேண்டிய அவசியம் இல்லையல்லவா?" என்றார் சந்தகர்.

     "இல்லை. நான் ஒரு சாதாரணப் போர் வீரன் தான். என் பெயர் வீரவிடங்கன். ஒரு முத்து வியாபாரி செய்த உபசாரத்திலிருந்து என்னைப் பற்றித் தாங்கள் வேறு விதமாகத் தீர்மானித்து விடக் கூடாது. எப்பொழுதுமே வியாபாரிகள் தங்களிடம் அதிகமாக வியாபாரம் செய்பவர்களை மிகவும் குழைவோடு உபசரிப்பார்கள்" என்றான்.

     "எனக்கு அது தெரியும். முத்து வியாபாரியின் உபசாரத்தைக் கொண்டு மாத்திரம் உங்களை நான் தீர்மானித்து விடவில்லை. ஒரு சோதிடரின் முதல் பாடம் தம்மிடம் சோதிடம் கேட்க வந்தவர்களின் சாமுத்திரிகா இலட்சணங்களையும் அறிந்து கொள்வது தான். நான் தங்கள் சாமுத்திரிகா இலட்சணங்களை மாத்திரம் அறிந்து கொள்ளவில்லை; தங்கள் குதிரையின் சாமுத்திரிகா இலட்சணங்களையும் அறிந்து கொண்டேன். சில சமயம் ராஜ குமாரர்கள் கூடத் தங்களைப் போர் வீரர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறார்கள். நம்முடைய நாட்டில் ராஜபரம்பரைப் பண்பாடே அதுதான். ஒரு சிறந்த போர்வீரனாகத் திகழ்பவன் தான் ஒரு அரசகுமாரனாகவோ அரசனாகவோ திகழ முடியும். நீங்கள் சொல்லியபடி இன்று சாதாரணமான போர்வீரனாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் ஒரு அரசராகக் கூடிய சாமுத்திரிகா இலட்சணங்கள் உங்களிடம் அமைந்திருக்கின்றன" என்றார் சந்தகர்.

     வீரவிடங்கன் சிரித்துக் கொண்டே ஏதோ யோசனையில் ஆழ்ந்த வண்ணம் நடந்தான். அவன் மிகவும் அடக்கமான குரலில், "கோடீச்சுவரத்துச் சோதிடரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று அவரை நேரில் பார்த்ததிலிருந்து அவர் மிகவும் திறமைசாலிதானென்பதையும் அறிந்து கொண்டேன். தங்கள் வாக்குப் பலிதமடையுமானால் தங்கள் ஆசீர்வாதப்படி எதிர்காலத்தில் நான் ஒரு மன்னனாகத் திகழும் பாக்கியம் பெற்றவனாகிறேன்" என்றான்.

     சிறிது நேரத்தில் அவர்கள் மரூவூர்ப்பக்கத்தில் பல தேசத்து வியாபாரிகளும் தங்குவதற்காகச் சிறு சிறு விடுதிகள் அமைக்கப்பட்டிருந்த விடுதி யொன்றுக்குச் சமீபமாக வந்தனர். தன் குதிரையை அங்கு நடப்பட்டிருந்த கொம்பில் பிணைத்துக் கட்டி விட்டுச் சந்தகரை அழைத்துக் கொண்டு விடுதியில் நுழைந்தான் அவ் வாலிபன். அவ் விடுதியில் இருந்த பணியாள் ஒருவன் அவர்களைக் கண்டதும் எழுந்து வணக்கம் செலுத்தினான். வீரவிடங்கன் அந்தப் பணியாளை வெளியே செல்லும்படியாகக் கண் ஜாடை காட்டவும் அவன் சிரங் குனிந்து வணங்கிவிட்டு வெளியே சென்றான்.

     அந்த அறையில் அமருவதற்காக அழகான ரத்தினக் கம்பளம் ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. சுவரோரமாகப் பட்டு வியாபாரி கொண்டு வந்து நிறைத்திருக்கும் பட்டு, நூல், துணி முதலானவைகள் கட்டுக் கட்டாக அடுக்கப்பட்டிருந்தன. இவை தவிர அவ்வறையில் விசேஷமாக எதுவும் இல்லையென்று சொல்லலாம்.

     வீரவிடங்கன் அங்கிருந்த இரண்டு திண்டுகளை எடுத்துப் போட்டு அதில் சாய்ந்து கொண்டு சந்தகரையும் உட்காரும்படி வேண்டிக் கொண்டான்.

     சந்தகர் அவன் எதிரில் உட்கார்ந்து தன் எக்கில் செருகியிருந்த சோழிப் பையை எடுத்து எதிரே வைத்துக் கொண்டார். பிறகு, "சோதிடர்களிடம் எப்பொழுதுமே பொய் சொல்லக் கூடாது. சோதிடம் கேட்க வருகிறவர்கள் பொய்யோடு வந்தால் சோதிடர்கள் சொல்லும் பலனும் பொய்யாகத்தான் இருக்கும். வைத்தியர்களிடம் எப்படி உண்மையான உடல் நிலையைச் சொல்லுகிறோமோ அப்படித்தான் சோதிடர்களிடமும் உண்மையான நிலையை எடுத்துச் சொல்ல வேண்டும். உங்களை ஒரு ராஜகுமாரனென்று சொல்லும் போது அதை நீங்கள் இல்லையென்று மறுத்தால் அப்பொழுது தான் பொய்யனாகி விடுகிறேன். அந்த சாஸ்திரமே பொய்யாகி விடுகிறது. அதை நான் எதற்காகச் சொல்லுகிறேனென்றால் அந்த சாஸ்திரத்தை உண்மையென்று மதித்துத் தாங்கள் என்னிடம் சோதிடம் கேட்க வருகிறீர்கள். அப்படி இருக்கும் போது நீங்கள் உண்மையோடு வந்தால் தான் அந்த சாஸ்திரமும் உண்மையானதாகும். இப்பொழுது நீங்கள் உங்கள் சந்தேகத்தைக் கேட்பதற்கு முன்னால் உங்கள் உண்மை நிலையை எனக்குச் சொல்லிவிட வேண்டும்" என்றார் சந்தகர்.

     வீரவிடங்கன் தயங்கியபடியே ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். சந்தகர் கேள்வி அவனுக்கு ஒருவிதத்தில் சங்கடத்தை ஏற்படுத்தியது. தான் அவரிடம் சோதிடம் கேட்கப் போய் இவ்வளவு விபரீதமான முறையில் அகப்பட்டுக் கொள்ள நேரும் என்று அவன் நினைக்கவில்லை? என்ன செய்வது? இவ்வளவுக்குப் பின்னும் உண்மையை மறைப்பது எப்படி? அவன் சிரித்துக் கொண்டே, "நீங்கள் மிகவும் தந்திரக்காரர். எப்படியோ என்னிடமிருந்து உண்மையைக் கறந்து விட்டீர்களே. நான் கங்க தேசத்து இளவரசன். என் பெயர் பிரதிவீபதி. என்னை இக் காவிரிப்பூம்பட்டினத்தில் இன்னாரென்று சிலருக்குத்தான் தெரியும். அனேகருக்கு என்னை இன்னாரென்று தெரியாது. சில காரணங்களால் என்னுடைய பெயரை நான் மறைக்கத்தான் வேண்டியிருக்கிறது" என்றான்.

     "இருக்கலாம். சில சமயங்களில் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதோ பாருங்கள். இந்த முத்து வியாபாரி எதிரில் நான் தான் கோடீச்சுவரத்துச் சோதிடர் சந்தகர் என்று காட்டிக் கொண்டேனா? இப்படித்தான் என்னுடைய நண்பன் பூதுகனும் அனேக இடங்களில் தன்னைக் காட்டிக் கொள்ளாமலேயே நடந்து கொள்வான்" என்றார் சந்தகர்.

     பூதுகன் என்ற பெயரைக் கேட்டதும் வீரவிடங்கன் என்ற பெயரில் மறைந்திருந்த பிரதிவீபதி சிறிது ஆச்சர்யம் அடைந்தவனாக, "பூதுகரா! அவர் உங்களுடைய நண்பரா?..." என்றான்.

     "ஆமாம். மிகவும் அந்தரங்கமான நண்பன். அவனை உங்களுக்குத் தெரியுமா?" என்றார் சந்தகர்.

     "நன்றாகத் தெரியும், நான் அவரோடு அதிகமாகப் பழகியதில்லை. பழகிய சிறிது நேரத்தில் எனக்கு மிகவும் அந்தரங்கமான நண்பராகி விட்டார். அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பார்க்க வேண்டுமென்ற துடிப்புத்தான் எனக்கு" என்றான் அவ் வாலிபன்.

     "அவனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் தான் நான் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்தேன். அவன் இங்கு இல்லையென்று நன்றாகத் தெரிந்து விட்டது. ஒரு வேளை காஞ்சீபுரத்தில் இருக்கலாமோ என்ற சந்தேகம். நான் கூடக் காஞ்சீபுரம் போகலாமென்று நினைக்கிறேன். உங்களுக்கும் அவனுக்கும் நட்பு ஏற்பட்டது எப்படி?" என்றார்.

     "எல்லாம் தெய்வாதீனமாகத்தான் ஏற்பட்டது. அதை சொன்னால் தான் புரியும். ஒரு நாள் அவர் கடற்கரையில் ஒரு பௌத்த பிக்ஷுவோடு மல்யுத்தம் செய்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் அவர்களின் சண்டைக்கு நடுவிலே நான் புகுந்து சமாதானம் செய்து அந்த பௌத்த பிக்ஷுவை உயிரோடு விட்டு விட ஏற்பாடு செய்தேன். அவர் மல்யுத்தம் செய்வதில் இவ்வளவு சமர்த்தராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை."

     "அவன் இந்த விஷயத்தில் மாத்திரம் தீரன் என்று சொல்ல முடியாது. உடல் வலுவிலும் புத்தி வலுவிலும் மிகச் சிறந்தவன். உண்மையிலேயே க்ஷத்திரியனாகப் பிறக்க வேண்டிய அவன் அந்தணனாகப் பிறந்து விட்டான்" என்றார் சந்தகர்.

     "அவர் அந்தணரா? நாஸ்திக வாதம் செய்வதில் தேர்ந்தவராக இருக்கிறாரே" என்றான் பிரதிவீபதி.

     "ஆம்; அதுதான் அவனிடம் உள்ள பெரிய குறை. அதிலும் அவனிடம் உள்ள சில நற்குணங்கள் தான் நாம் போற்றக் கூடியவை. தெய்வம் இல்லையென்று அவன் சொன்னாலும் சத்தியத்தையும் உண்மையையும் தெய்வமாகவே போற்றிப் பாதுகாப்பான். நல்ல தியாக புத்தியுடையவன். கெடுதல்களைக் கண்டால் மனம் வெறுப்பவன். இத்தகைய உத்தம குணமுள்ள அவன் பெரிய நாஸ்திகவாதியாயிருந்தாலும் நம்முடைய அன்புக்கும் மதிப்புக்கும் உரியவனாகிறான்" என்று கூரினார் சந்தகர்.

     "ஆம்! நான் அவரோடு பழகியது குறைவாக இருந்தாலும் சத்தியசந்தர் என்றும் நேர்மையான குணம் படைத்தவரென்றும் தீமையைக் கண்டு சகிக்காதவரென்றும் தெரிந்து கொண்டேன். அத்தகைய மனிதரின் நட்பு கிடைத்தது பெரும் பாக்கியம் தான் என்று நான் கருதுகிறேன். நான் மிகக் குழப்பமாக இருக்கும் தருணம் எனக்கொரு அரிய நண்பரின் உதவி இல்லாமல் போய் விட்டதே என்று தான் வருந்துகிறேன். விதிதான் சரியான சந்தர்ப்பத்தில் என்னையும் அவரையும் பிரித்திருக்க வேண்டும்" என்றான் பிரதிவீபதி.

     "நீங்கள் சொல்வதிலிருந்து உங்களுடைய நிலையில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாக எனக்குத் தெரிகிறது. ஏதோ உங்கள் மனத்தை வருத்துகிறது. உங்களைப் போன்ற அரசகுமாரர்களுக்கு என்ன மன விசாரம் இருக்குமென்று தான் எனக்குத் தெரியவில்லை. ஏதோ விதி வந்து தான் உங்களையும் பூதுகனையும் நல்ல சமயத்தில் பிரித்ததாக வருத்தப்படுகிறீர்கள். அப்படி என்ன நடந்தது என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார் சந்தகர்.

     "சில நாட்களுக்கு முன் சம்பாதி வன புத்த சேதியத்தில் ஒரு புத்த பிக்ஷு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார் என்ற விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கலாமென்று நினைக்கிறேன்."

     "தெரியும், அந்தக் கொலைக்கும் உங்களுக்கும் ஏதேனும் சம்பந்தமுண்டா?"

     "எனக்கும் அந்தக் கொலைக்கும் சம்பந்தமில்லை. ஆனால் வேறொருவருக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் உண்டென்று பேசிக் கொள்கிரார்கள். அவர்கள் சந்தேகப்படும் பேர்வழியும் தலை மறைவாக இருக்கிறார். அதைப் பற்றி உங்களிடம் தெரிந்து கொள்ளலாம் என்று தான் ஆவல்" என்றான்.

     சந்தகர் சிரித்துக் கொண்டே, "அந்தக் கொலைக்குக் காரணம் ஒரு பெண்ணாக இருக்கும் என்று சந்தேகிக்கிறார்களா?" என்று கேட்டார்.

     "ஆமாம். ஆனால் அந்தப் பெண் செய்திருப்பாள் என்று நான் நம்பவில்லை. பூதுகரும் நம்பவில்லை."

     "ஓகோ! பூதுகனுக்கும் அந்தப் பெண்ணைப் பற்றித் தெரியுமா?" என்று கேட்டார் சந்தகர்.

     "தெரியும். அந்தப் பெண் பூதுகனின் காதலியாகிய வைகைமாலைக்கு அந்தரங்கமான தோழி. அந்தப் பெண்ணின் நல்ல குணங்கள் அவருக்கு நன்றாகத் தெரியும். அதோடு, அவர் புத்த பிக்ஷுவோடு சண்டை செய்யும்போது நான் அந்தப் பெண்ணோடு தனிமையில் அந்தக் கடற்கரையில் இருந்தேன்..." என்றான்.

     "சரிதான் - நீங்கள் அந்தப் பெண்ணோடு தனிமையில் கடற்கரையில் இருந்தீர்களா? ஒரு புத்த பிக்ஷுணி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பெண் - அழகு - ஹும் - அப்படியென்றால், அந்தப் பெண்ணுக்கும் உங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்."

     "ஆமாம்! அந்தப் பெண்ணை நான் காதலிக்கிறேன்! அவளும் என்னிடம் அன்பு வைத்துள்ளாள். ஆனால்..." என்று தயங்கினான்.

     "ஆனால் அவள் இருந்த நிலையும் அவளுக்குள்ள கட்டுப்பாடுகளும் அதற்கு இடந்தரவில்லை போலிருக்கிறது. பாவம்! ஒரு துறவு நிலையிலுள்ள ஒரு பெண்ணைக் காதலிப்பதென்றால் சிறிது சங்கடம் தான்" என்றார் சந்தகர்.

     "தாங்கள் மிகவும் சாமர்த்தியசாலி. தாங்கள் இவ்வளவு தூரம் தெரிந்து கொண்டிருப்பீர்களென்று நான் நினைக்கவில்லை" என்றான் பிரதிவீபதி.

     "இவ்வளவு தூரம் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்று தாங்கள் மெச்சிக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேல் எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்லித் தான் இனிமேல் தெரிய வேண்டும்" என்றார் சந்தகர்.

     "தாங்கள் தான் பெரிய சோதிடராயிற்றே?" என்று சொல்லி அவர் முகத்தைப் பார்த்தான்.

     "பெரிய சோதிடன் தான். ஆனால் பெரிய சோதிடர்கள் கூட இந்தக் கலியுகத்தில் கிரகங்கள் தங்கள் கணக்கை ஏமாற்றி விடும் என்பதையறிந்து தொழிலை விட்டு விட்டார்கள். திரேதா, துவாபர யுகங்களில் தான் கிரகங்கள் மனிதனின் கணக்குக்குக் கட்டுப்பட்டவைகளாயிருந்தன. சத்தியமும், தருமமும் அழிந்த இந்தக் கலியுகத்தில் அவைகள் மனிதருக்குக் கட்டுப் பட்டவையல்ல. அதற்கொரு கதை உண்டு!" என்றார் சந்தகர்.