உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) முதல் பாகம் - காலச் சக்கரம் அத்தியாயம் 25 - இவள் ஒரு அனாதை! சிறு மலைக் குன்றுகளும் மரங்களும் நிறைந்த அந்தப் பகுதிகளிடையே குதிரை மேல் ஏறிச் சென்றாலும், முன்னால் சென்ற மனிதர்களைத் துரத்திச் செல்வது மிகக் கடினமாகத்தான் இருந்தது. முன்னால் சென்ற அவர்கள் தங்களுக்குப் பின்னால் இருவர் குதிரை மீதேறித் தங்களைத் துரத்திக் கொண்டு வருவதையறிந்து மலைக் குன்றுகளிடையே மறைந்து மறைந்து செல்லத் தொடங்கினர். அவர்கள் கைப்பிடியில் சிக்கிய பெண் அலறித் துடித்த வண்ணமே இருந்தாள். பிருதிவீபதியின் குதிரைக்கு வெகு தூரத்துக்குப் பின்னால் சந்தகரின் குதிரை வந்து கொண்டிருந்தது. குதிரையில் வேகமாகச் சென்ற பிருதிவீபதிக்கு முன்னால் ஓடோடி மலைக் குன்றுகளுக்கிடையே பதுங்கிச் செல்லும் மனிதர்களின் உருவமும், அவர்கள் உடையும் அவர்கள் கையில் வைத்திருந்த தீப்பந்த வெளிச்சத்தில் நன்கு தெரிந்தன. அவர்கள் அணிந்திருந்த உடையிலிருந்து அவர்கள் போர் வீரர்களாகவோ அல்லது அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருக்க வேண்டுமென்பதை உணர்ந்து கொண்டான். அவர்கள் இடையில் உறையிலிடப்பட்ட நீண்ட வாள் தொங்கிக் கொண்டிருந்தது. இந்த நிசி வேளையில் ஆயுதங்களோடு இருக்கும் இவர்களோடு எவ்வித ஆயுதமும் இல்லாதிருக்கும் தன்னால் போரிட்டுச் சமாளிப்பது கடினம் என்றே அவனுக்குத் தோன்றியது. இருப்பினும் ஒரு பெண்ணைப் பலாத்காரமாகத் தூக்கிச் செல்லும் அவர்களை எளிதில் விட்டுவிடவும் அவனுக்கு விருப்பமில்லை. மேடும் பள்ளமுமான அந்த இடத்தில் தன் குதிரையை அதிவேகமாகச் செலுத்தினான். பிருதிவீபதி கிட்டத்தட்ட அவர்களை நெருங்கிய சமயத்தில் முன்னால் சென்றவர்கள் தங்கள் கையிலுள்ள தீப்பந்தங்களை அவித்து விட்டு இருளில் மறைய முயற்சித்தனர். ஆனால் அவர்கள் எண்ணம் பலிக்கவில்லை. பிருதிவீபதியின் குதிரை ஒரே பாய்ச்சலில் அவர்கள் இருக்கும் இடத்தையடைந்து விட்டது. அச் சமயத்தில் பிருதிவீபதி அங்கிருந்த ஒருவனின் தீப்பந்தத்தைக் குதிரை மீது இருந்தபடியே 'லபக்'கென்று பிடுங்கிக் கொண்டான். தீப்பந்தங்களைக் கையிலேந்திய மற்றவர்கள் அப்பொழுதுதான் வீசி எறிந்தனர். பிருதிவீபதியின் கையில் இருந்த தீப்பந்தத்தின் ஒளியில் அங்கிருந்த நால்வரின் முகங்களும் நன்கு தெரிந்தன. அவர்களில் மூவர் போர் வீரர்கள் போல் உடை அணிந்திருந்தனர். ஒருவன் புத்த பிக்ஷு கோலத்தில் இருந்தான். அவன் தான் தன் தோளில் பெண்ணின் கையையும் காலையும் கெட்டியாகப் பிடித்த வண்ணம் தோளில் சுமந்து நின்றான். அந்தப் பெண் அவன் இரும்புப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள். பிருதிவீபதிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சந்தகரின் குதிரை துள்ளிக் குதித்து பெண்ணைச் சுமந்து கொண்டிருந்தவன் மேல் மோதியது. திடீரென்று தன் மீது குதிரை வந்து மோதவே அவன் நிலை கலங்கிப் போய் அந்தப் பெண்ணைத் தன் பிடியிலிருந்து கை நழுவ விட்டான். அவனுடைய பிடியிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்கவே சட்டென்று அந்தப் பெண் அவ்விடத்திலிருந்து ஓடத் தொடங்கினாள். சந்தகர் தாம் ஏறிக் கொண்டு வந்த குதிரையை அவருடைய சாமர்த்தியத்தால் அந்த மனிதன் மீது மோதும்படியாகச் செய்யவில்லை. அந்த குதிரைக்கே அப்போதொரு வெறி பிடித்திருந்தது. அது ஓர் நிலையில் நிற்காமல் முன்னும் பின்னுமாக வந்து துள்ளிக் குதித்து, அங்கு நின்றவர்கள் மீதெல்லாம் மோதி அவர்களைக் கீழே தள்ளியது. சந்தகரும் தம் குதிரையை அடக்க எவ்வளவோ பிரயத்தனம் செய்தார். வெறி பிடித்த அந்தக் குதிரையின் மீது உட்கார்ந்திருக்கவே அவருக்கு மிகவும் பயமாக இருந்தது. குதிரையினால் மோதுண்டு கீழே விழுந்த வீரர்கள் மறுபடியும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எழுந்து ஓட யத்தனித்தனர். பம்பரம் போல் சுற்றிச் சுற்றி முன் கால்கள் இரண்டையும் தூக்கித் தூக்கிப் பல மூலைகளிலும் சென்று மோதும் சந்தகரின் குதிரை, விழுந்த இடத்திலிருந்து எழுந்தவர்கள் மீதே மோதி அவர்களைக் கீழே தள்ளியது. அந்தக் குதிரை பிருதிவீபதி வீற்றிருந்த கம்பீரமான குதிரையை மாத்திரம் நெருங்கவில்லை. ஒரு கையில் தீப்பந்தத்தோடு இருந்த பிருதிவீபதி சட்டென்று கீழே குதித்து ஒருவனுடைய இடையில் தொங்கிக் கொண்டிருந்த உறையிலிருந்து கத்தியைச் சடாரென்று உருவி எடுத்துக் கொண்டு குதிரை மீது தாவி உட்கார்ந்தான். அடுத்த நிமிடம் கேட்க வேண்டுமா? வாளோடு குதிரை மீது வீற்றிருந்த அவனோடு போர் செய்வது கடினம் என்றெண்ணி அப் போர் வீரர்கள் மூலைக் கொருவராகத் தலைதெறிக்க ஓடத் தொடங்கினர். யாரை விட்டாலும் புத்த பிக்ஷு கோலத்திலிருந்த மனிதனை எளிதில் விட்டுவிடப் பிருதிவீபதி விரும்பவில்லை. அவன் குதிரையிலிருந்த வண்ணமே தன் கையிலிருந்த தீப்பந்தத்தைச் சந்தகரிடம் கொடுத்து விட்டு ஓடத் தலைப்பட்ட புத்த பிக்ஷுவை நெருங்கி அவன் போர்த்திக் கொண்டிருந்த சீவர ஆடையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அந்தம் சமயம் வெறி கொண்ட சந்தகரின் குதிரையும் தன் உபயமாக அந்தச் சன்னியாசியின் மேல் வந்து மோதியது. பிருதிவீபதி அந்த பிக்ஷு தன் பிடியிலிருந்து ஓடி விடாத வண்ணம் அச் சீவர ஆடையை நன்றாக முறுக்கிப் பிடித்துக் கொண்டு தீப்பந்தத்தை அவன் முகத்துக்கு எதிராக நீட்டும்படி சந்தகரைக் கேட்டுக் கொண்டான். பாவம்! சந்தகரின் குதிரையும் அப்பொழுதுதான் தன் வெறி தீர்ந்தது போல் சிறிது அமைதியாக இருந்தது. அந்தத் தீபத்தின் ஒளியில் அந்த புத்த பிக்ஷு யாரென்று பிருதிவீபதி முக ஜாடையிலிருந்து தெரிந்து கொண்டான். "ஓகோ, தாங்களா! அடிகள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட்டு அனாவசியமாக உடம்பை வாட்டிக் கொள்ளும் காரணம் தான் எனக்குப் புரியவில்லை. காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு அடிகள் திருப்பான்மலைக்கு எப்போது வந்ததோ? அடிகளைத் தரிசித்ததில் மிகவும் சந்தோஷம். அடிகளை இப்படியே விட்டு விடுவது மரியாதையில்லை யென்று நினைக்கிறேன். அடிகளிடம் எத்தனையோ விசாரிக்க வேண்டியிருக்கிறது. இப்படியே வரலாம்" என்று சொல்லிக் கழுத்தில் முறுக்கியிருந்த சீவர ஆடையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு குதிரையைத் தட்டினான். அதுவும் கம்பீரமாக நடந்தது. பிருதிவீபதியின் பிடியிலிருந்து விலக முடியாத புத்த பிக்ஷுவும் தலை குனிந்த வண்ணம் குதிரையின் வேகத்துக்குத் தக்கபடி ஓட வேண்டியிருந்தது. சந்தகரும் அந்த பிக்ஷு தப்பித்து ஓடாத வண்ணம் இடையே அவனை நடக்க வைத்து மற்றொரு பக்கத்தில் தம் குதிரையைச் செலுத்திக் கொண்டு வந்தார். பிருதிவீபதி சந்தகரைப் பார்த்து, "அடிகளாரைப் பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்காது!" என்றான். "அடிகளார் ஒரு பெண்ணை அனாயாசமாகத் தூக்கிச் செல்வதில் சமர்த்தர் என்பது வரையில் தெரியுமே தவிர அவர்களைப் பற்றி வேறொன்றும் தெரியாது எனக்கு!" என்றார் சந்தகர். "இது தெரிந்தவரையில் சரிதான். இதிலிருந்து அடிகளாரின் ஒவ்வொரு நடத்தையும் இப்படிப்பட்டதாகத் தானிருக்கும் என்று தாங்கள் தாராளமாக நம்பலாம்!" என்றான் பிருதிவீபதி. "நம்பாமல் என்ன செய்வது? சீவர ஆடையை உத்தேசித்து மாத்திரம் எதையும் நாம் நம்பாமல் விட்டு விடுவது மூடத்தனமாகும். அடிகளார்க்குப் பெண்களென்றால் அவர்களிடம் தனி அபிமானம் ஏற்பட்டு விடும் போலிருக்கிறது! அந்த அன்பின் காரணமாக அவர்களைத் தோளில் சுமந்து செல்லக் கூட அடிகளார் சித்தமாயிருப்பார் போலிருக்கிறது. நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் அடிகளார் ஏற்கனவே தங்களுக்கு அறிமுகமானவர் போலல்லவா தோன்றுகிறது?" என்றார் சந்தகர் வியப்போடு. "எனக்கு மாத்திரம் அறிமுகமானவரில்லை; உங்களுடைய நண்பர் பூதுகனுக்குக்கூட அறிமுகமானவர் தான். அடிகளார் சமுத்திர ஸ்நானம் செய்யும் விஷயத்தில் உங்கள் நண்பர் பூதுகர் மிகவும் உதவி செய்திருக்கிறார். அவர் செய்த அந்த உதவியை அடிகளார் என்றுமே மறப்பதற்கில்லை" என்றான் பிருதிவீபதி. "ஓகோ! அப்படியா? என் நண்பன் பூதுகனுக்கு வேண்டியவரென்றால் எனக்கும் வேண்டியவராகத் தானிருக்கும்!" "இப்பொழுது தான் உங்களுக்கு வேண்டியவராகி விட்டாரே!... உங்களுடைய குதிரை வந்தவுடனே அடிகளிடம் தானே தன் பார்வையைச் செலுத்தியது. ஆஹா! அது எவ்வளவு ஆவலாக அடிகளார் மீது வந்து மோதியது?" என்றான் பிருதிவீபதி. "அடிகளார் மீது ஏற்பட்ட அன்பு சில நிமிட நேரம் என் குதிரையை வெறியாகத்தான் பிடித்து ஆட்டியது. போகட்டும். உலக இருளைத் துடைக்க வந்த போதி மாதவரின் புண்ணிய சீடராகி, தீப்பந்தம் பிடித்துக் கொண்டு மலைப் பிரதேசங்களிலெல்லாம் வந்து அனாதைப் பெண்களை ஆதரிக்கும் பெரு நோக்கத்தோடு அகற்றிக் கொண்டு போக நினைக்கும் அடிகளார் எந்த ஊரோ? அடிகளாரின் நாம்தேயம் என்னவோ?" என்றார் சந்தகர். அந்த இரண்டு குதிரைகளுக்கு மிடையில் நடந்த புத்த பிக்ஷு கலங்கமாலரையர்தான் என்பதை நாம் விளக்கத் தேவையில்லையல்லவா? இருப்பினும் கலங்கமாலரையரைப் பற்றிச் சந்தகர் தெரிந்து கொள்ள வேண்டாமா? பிருதிவீபதி சொன்னதிலிருந்து சந்தகருக்கு ஓரளவு விளங்கியது. இருப்பினும் அந்த புத்த பிக்ஷுவினுடைய ஊர், பெயர் முதலியவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. அந்நிலையில் கலங்கமாலரையர் தம் நாமதேயத்தைத் தாமே சந்தகரிடம் சொல்லுவாரா? அவர் சந்தகரின் கேள்விக்கு எந்தவிதமான பதிலும் சொல்லாமல் மௌனமாக நடந்து கொண்டு வந்தார். பிருதிவீபதி சிரித்துக் கொண்டே "துறவு நிலையில் உள்ளவர்களுக்கு ஊரேது, பேரேது? இப்படிப்பட்ட உண்மையான துறவிகளை நாம் ஊரும் பெயரும் தெரிந்து கொண்டு தான் அழைக்க வேண்டுமென்று அர்த்தமில்லை!" என்று சொல்லிக் கொண்டே வரும் போது முன்பு எங்கிருந்து கிளம்பினார்களோ, அதே இடத்துக்கு வந்து சேர்ந்தனர். ஒரு மலைக் குகை வாசலில் அந்த புத்த பிக்ஷுவின் பிடியிலிருந்து தப்பிய பெண் தரையில் விழுந்து கிடந்த ஒரு வயதானவரை மெதுவாகத் தூக்கிக் குகைக்குள் அழைத்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தாள். பிருதிவீபதியும் சந்தகரும் குதிரையை நிறுத்தினர். குதிரை மீதிருந்த சந்தகர் கீழே இறங்கிக் கீழே கிடந்த வயதான மனிதரைக் கவனித்தார். பக்கத்திலிருந்த குகையில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளி அந்தப் பெண்ணின் முழு உருவத்தையும் எடுத்துக் காட்டியது. அந்தப் பெண்ணுக்குச் சுமார் இருபது வயது இருக்கலாம். நல்ல அழகி. காவி நிறமுடைய புடவையை அணிந்திருந்தாள். அவளுடைய நீண்ட கேசம் எண்ணெய் தடவி ஒழுங்குப்படுத்தப் படாமல் தோளில் விழுந்து கிடந்தது. அவள் அழகான கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. அவள் துயரம் நிறைந்த தழுதழுத்த குரலில், "தெய்வம் போல வந்து காப்பாற்றிய உங்களுக்கு இறைவன் பேரருள் புரியட்டும்" என்றாள். அப்பொழுதுதான் மெதுவாக எழுந்து உட்கார்ந்த வயோதிகரும் கையைத் தூக்கி அவர்களை ஆசீர்வதித்தார். அடிபட்டுக் கீழே விழுந்த அம்மனிதர் மிகவும் வயதானவர். அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கலாம். மொட்டைத் தலையும் எலும்போடு ஒட்டிய மெலிந்த தேகமும் அவர் நெடு நாட்களாகத் தவக்கோலம் கொண்டிருந்த ஒரு மனிதர் என்பதை மிக எளிதாக எடுத்துக் காட்டியது. அந்த மலைக் குகைகள் நிறைந்த இடத்தில் ஜைன முனிவரும் அந்தப் பெண்ணும் தான் தனிமையில் வசித்திருக்க வேண்டுமென்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். அழகும் யௌவனமும் கொண்ட ஒரு பெண்ணைக் கெட்ட எண்ணத்துடன் வஞ்சனையாகக் கடத்திக் கொண்டு செல்லத்தான் அந்தப் பௌத்த பிக்ஷுவும் முயற்சி செய்திருக்க வேண்டும் என்று எளிதாக விளங்கியது. பிருதிவீபதி அந்த புத்த பிக்ஷுவைத் தன் பிடியிலிருந்து விடாமல் அவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்து அந்த முனிவரின் காலடியில் தள்ளி, "நீ செய்த கொடிய பாவத்துக்குப் பெரியவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டுக் கொள். அதற்குப் பின் தான் உனக்கு அளிக்க வேண்டிய தண்டனையை நான் அளிக்க வேண்டும். உன்னைப் போன்ற துறவு வேடத்தில் புகுந்த துரோகிகளை ஒழித்துக் கட்டினால் தான் மதம், சமூகம், நாடு இவைகள் எல்லாம் காப்பாற்றப்படும்" என்றான். அந்தப் பெண்ணின் முதுகில் சாய்ந்த வண்ணம் உட்கார்ந்திருந்த முனிவர் மெதுவான குரலில், "நான் மன்னிப்பதற்கு எதுவும் இல்லை. இந்த உலகில் யாவரும் தங்கள் பாபத்துக்காக இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள். நம்மை இம்சித்தவர்கள் என்பதற்காக இவரை நாம் இம்சிக்க வேண்டாம். இவரைத் தண்டிப்பது உங்கள் கடமையாகக் கருதினாலும் அவரை மன்னித்து விடுங்கள். உலகில் மோகச் சூழலில் சிக்குவதே குற்றம். அந்தச் சுழலில் சிக்கியவர்கள் செய்யும் காரியம் குற்றமாகத்தான் இருக்கும். அவரை விட்டு விடுங்கள். என்னை யார் இம்சித்திருந்தாலும் அதற்காக அவர்களை இம்சைக்குள்ளாக்க விரும்பவில்லை" என்று கூறினார். அந்த ஜைன முனிவர் சொல்லியபடி கலங்கமாலரையரை மன்னித்து அனுப்பப் பிருதிவீபதிக்கு இஷ்டமில்லை. அவன் வேறு வேடத்தில் இருந்தாலும் பாதகமில்லை. அவன் துறவு வேடத்தில் புகுந்து கொண்டு இத்தகைய காரியங்களைச் செய்தால் அவன் அயோக்கியனிலும் அயோக்கியன் என்று தான் சொல்ல வேண்டும். இவனை இப்படியே விட்டு விடுவது தருமமா? தன்னைப் போன்றவர்களுக்கு இது கடமையுமல்ல என்று நினைத்தான் பிருதிவீபதி. சந்தகரும் அப்படித்தான் நினைத்தார். "நீங்கள் மன்னிக்கலாம். ஆனால் நாங்கள் அவனை மன்னிக்கத் தருமம் இடம் கொடுக்காது. உலகைப் பிடித்து அரிக்கும் இத்தகைய விஷக் கிருமிகளை உடனடியாகக் கழித்து விட வேண்டும். ஒரு விஷக் கிருமியினால் எத்தனையோ விஷக் கிருமிகள் உற்பத்தியாகலாமல்லவா? இதை மனித சமூகமும் நாடும் தாங்காது" என்றார். அரிஷ்டநேமி என்ற அந்த ஜைன முனிவர், "இந்த உலகில் கெட்ட வழியிலேயே சென்ற மனிதன் நல்ல வழியில் திருந்தவும் இடமுண்டு. தான் செய்த கெடுதலான காரியங்களுக்குரிய தண்டனைகளை அவன் உணர்ந்து விட்டால் மறுபடியும் அந்தக் காரியங்களைச் செய்ய அவன் தலைப்பட மாட்டான். நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன், பகைவனிடமும் கொஞ்சம் கருணை காட்டிப் பாருங்கள். தான் செய்த அடாத காரியத்துக்காகத் தன்னைத் தண்டிக்காமல் மன்னித்த பெருந்தன்மையையாவது எண்ணி அவன் சீர்திருந்தட்டும்!" என்று எடுத்துரைத்தார். அதற்கு மேல் அந்த முனிவரின் வார்த்தையைத் தட்டுவதில் அவர்களுக்குப் பிரியமில்லை. ஒரு நாள் தன் வார்த்தையைக் கேட்டு அப்பூதுகன் அதே புத்த பிக்ஷுவை மன்னித்து அனுப்பியதை எண்ணினான். ஆனால் இன்று அதே பிக்ஷு மறுபடியும் அடாத குற்றங்களைச் செய்திருக்கிறான். தன் வார்த்தையைக் கேட்டுப் பூதுகன் எப்படி மன்னித்து அனுப்பினானோ, அதே போல் ஜைன முனிவரின் வார்த்தையைக் கேட்டு இந்த பிக்ஷுவை மன்னித்து அனுப்பி விடத் தீர்மானித்தான். சந்தகரும் இந்த பிக்ஷுவுக்கு நற்புத்தி புகட்டி அனுப்பி விடத்தான் வேண்டும் என்று தீர்மானித்தார். ஆயினும் அந்த ஜைன முனிவருக்கும் அவரைச் சார்ந்திருக்கும் பெண்ணுக்கும் ஒரு பாதுகாப்பு ஏற்படாத வரையில் இந்த பிக்ஷுவை மன்னித்து அனுப்புவது உசிதமாகாது என்று தான் அவருக்குப் பட்டது. இன்று இவனை மன்னித்து அனுப்பி விட்டால் மறுநாள் அவன் மற்றவர்களுடன் வந்து அம்முனிவருக்கும் இந்தப் பெண்ணுக்கும் துன்பம் விளைவிக்கலாமல்லவா? அதோடு இந்த புத்த பிக்ஷுவோடு வந்தவர்கள் 'தப்பித்தோம் பிழைத்தோம்' என்று ஓடி விட்டனர். அவர்களே மறுபடியும் வந்து சமண முனிவருக்கும் இந்தப் பெண்ணுக்கும் இடையூறை ஏற்படுத்தலாமல்லவா? ஆகையால் புத்த பிக்ஷுவை எளிதாக விட்டுவிடுவது அவ்வளவு நன்மையாகாது என்று அவர் எண்ணினார். அவர் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர் போல், "இவனை மன்னித்து விடலாம். ஆனால் அதற்கு இது சந்தர்ப்பமில்லை. இவனை நாம் காஞ்சீபுரம் வரையில் அழைத்துச் சென்று இவனைப் பற்றிச் சொல்லி இவனைப் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வது தான் நல்லது. அப்படிச் செய்யப் படாத வரையில் மறுபடியும் என்றாவது ஒரு நாள் இன்று செய்த பெருங் கொடுமைகளையே செய்யும் துணிச்சல் உடையவனாகி விடுவான்!" என்றார். இவைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த பிக்ஷு தணிவான குரலில், "என்னை மன்னித்து விடுங்கள். நான் இத்தகைய பிசகைச் செய்யத் துணியவில்லை. ஆனால் பல்லவச் சக்கரவர்த்தியின் ஒன்று விட்ட சகோதரனான சிம்மவர்மன் தான் இத்தகைய காரியங்களைச் செய்யும்படி என்னைத் தூண்டினான். நான் காஞ்சியைச் சேர்ந்தவனல்ல! தஞ்சையைச் சேர்ந்தவன். என்னை நீங்கள் மன்னித்து விட்டீர்களானால் நான் என்னுடைய ஊருக்குச் சென்று விடுவேன். மறுபடியும் இங்கு வந்து யாரையும் இம்சிக்கவே மாட்டேன்!" என்று உறுதி கூறினான். சந்தகர் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே, "ஓகோ! நீங்கள் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர் தானா? அப்படி வாருங்கள் வழிக்கு! தஞ்சை மாநகரைச் சேர்ந்தவரா? இப்பொழுது புரிந்து விட்டது. திடீரென்று இல்லற தருமங்களில் எல்லாம் வெறுப்புற்றுத் துறவற மார்க்கத்தில் புகுந்த மகா தீரராகிய கலங்கமாலரையர் தாங்கள்தானே? தாங்கள் ஏதோ அரசியல் சூழ்ச்சிக்காகத் தான் புத்த பிக்ஷுவாகி யிருப்பதாகச் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அந்த அரசியல் சூழ்ச்சிகளோடு பெண் பித்து கொண்டும் புத்த பிக்ஷுவாகி யிருக்கும் விஷயம் இப்பொழுதுதான் விளங்கியது. உங்களைத்தான் பூதுகன் கடலில் குளிப்பாட்டி அலசி எடுத்தானா? அவன் அவ்வளவு அலசி எடுத்தும் இன்னும் உங்கள் புத்தியில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்கு அப்படியே தானிருக்கிறது! போகட்டும். இப்பொழுது நீங்கள், இந்த இடத்திலேயே நிற்கவில்லை, நேராக உங்களுடைய ஊராகிய தஞ்சை மாநகருக்கே சென்று விடுகிறேன் என்கிறீர்கள், இல்லையா? ரொம்ப நல்லது, நீங்கள் தஞ்சை மாநகருக்குச் செல்வதில் எவ்வித ஆட்சேபணையுமில்லை. ஆனால் இப்படிச் சீவர ஆடை அணிந்த கோலத்தில் உங்களை எந்த இடத்துக்கும் அனுமதிக்க எனக்கு விருப்பமில்லை. இதோ நான் என் வெள்ளையான மேல் அங்கவஸ்திரத்தைத் தருகிறேன். உங்கள் சீவர ஆடையை அகற்றிவிட்டு இதை உடுத்திக் கொண்டு நீங்கள் செல்லலாம். இப்பொழுது உங்களுக்கு நாங்கள் அளிக்கும் தண்டனை இதுதான். மறுபடியும் புத்த துறவிகளுக்கு உரிய சீவர ஆடையில் உங்களை நாங்கள் எங்கே பார்க்க நேர்ந்தாலும் மலையிலிருந்து உருட்டி மகா பரிநிர்வாணத்துக்கு வழி காட்டுவோம்!" என்று சொல்லித் தாம் போர்த்தியிருந்த வெள்ளை வஸ்திரத்தை எடுத்துக் கலங்கமாலரையரிடம் வீசி எறிந்தார். "சரி! இதுவும் ஒரு சரியான தண்டனை தான். இதனால் புத்த சமயமும் பிழைக்கும்!" என்று சொல்லிவிட்டுத் தன் கைகளை நீட்டி, சீவர ஆடைகளைக் களைந்து விட்டு அந்த ஆடையை அணிந்து கொள்ளும்படி கலங்கமாலரையருக்கு உத்தரவிட்டான் பிருதிவீபதி. கலங்கமாலரையனும் வெட்கித் தலைகுனிந்த வண்ணம் மறைவான இடத்துக்குச் சென்று தன் சீவர ஆடைகளைக் களைந்து வெண்ணிற ஆடையை அணிந்து கொண்டு, அச் சீவர ஆடையைக் கொண்டு வந்து வைத்தான். சந்தகர் சீவர ஆடையைக் கையில் எடுத்துக் கொண்டு, "இனி நீங்கள் போகலாம்!" என்றார். கலங்கமாலரையன் தலை குனிந்தவண்ணம் மெதுவாக அங்கிருந்து நடந்து இருளில் மறைந்தான். அரிஷ்டநேமி என்ற அந்த ஜைன முனிவர், "அவனை இவ்வளவோடு மன்னித்து அனுப்பியதில் எனக்கு மிகுந்த திருப்தி. அவன் என்னை இம்சித்ததற்காக அவனை இம்சிக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் பெருந்தன்மையோடு ஒரு நல்ல காரியம் செய்தீர்கள். துறவியின் உடையில் அலையும் சில கயவர்களுக்குப் பாடம் கற்பிக்க இது ஒரு சிறந்த முறை. எந்தச் சமயத்தினராயிருந்தால் என்ன? துறவிகள் என்பவர்கள் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களிடமே இப்படிப்பட்ட அக்கிரமமும் ஊழலும் வளருமானால் அப்புறம் தருமம் எங்கே நிலைப்பது? உத்தமரான பல்லவ சக்கரவர்த்தி நந்திவர்மர் தீவிர சைவராயினும் ஜைன சமயத்தின் மீதோ புத்த சமயத்தின் மீதோ துவேஷம் கொண்டவர் இல்லை. தார்மீக வழியைப் பின்பற்றி நடப்பவர். ஆனால் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரனான சிம்மவர்மன் ஜைன சமயத்துக்குத் தன்னால் எவ்வளவு இழுக்கு ஏற்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்து கொண்டு வருகிறான். இதை நான் ஏன் உங்களுக்குச் சொல்லுகிறேனென்றால் நீங்கள் இருவரும் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பினும் இவ்வுலகில் நேர்மையையும் நியதியையும் காப்பாற்ற விரும்பும் வாலிபர்களாகத் தோன்றுகிறீர்கள் என்ற காரணத்தினால் தான்" என்றார். "நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கிறது. ஜைன சமயத்தவனாகிய சிம்மவர்மன் உங்களைப் போன்ற துறவியின் பாதுகாப்பில் இருக்கும் ஒரு பெண்ணைக் கடத்திச் செல்ல புத்த சமயத்தவன் என்று வேஷம் போடும் ஒரு துறவியின் உதவியை நாடினானால் இந்த இருவர்களாலும் இவ்விரு சமயங்களுக்கும் ஏற்பட்டுள்ள களங்கத்தைப் பற்றி நாம் என்ன சொல்வது? நானும் சமண சமயத்தைச் சேர்ந்தவன் தான். ஆனால் தருமத்தை விற்று எதையும் நிலை நாட்ட விரும்பும் எவனையும் இவ்வுலகில் விட்டு வைக்க நான் விரும்பவில்லை. சிம்மவர்மன் சமண சமயத்தினனானதே தன்னுடைய சகோதரனின் பெருமை பொருந்திய அரசைச் சதி செய்து கவிழ்த்துத் தான் அச் சிங்காதனத்தைக் கைப்பற்றிக் கொள்ளத்தான் என்கிற ரகசியத்தை உங்களுக்கு நான் சொல்லி வைக்கிறேன். இன்று பல்லவ சக்கரவர்த்தி நந்திவர்மருக்கு உற்ற துணையாக இருக்கும் அரசர்களான இராஷ்டிரகூட மன்னர் அமோகவர்ஷரும், கங்கதேசத்து அரசர் ராஜமல்லரும் தீவர சமண சமயத்தினர். இந் நிலையில் பொறாமை கொண்ட சிம்மவர்மன் தானும் ஒரு சமணனாகி, எவ்வகையிலாவது மத துவேஷத்தைக் கிளப்பி அவர்கள் நட்பைக் குலைக்கப் பார்க்கிறான். இதற்காக இப்படிப்பட்ட சிறு சூழ்ச்சிகள் செய்து மன்னனின் பெயருக்கு இழுக்கை உண்டாக்க நினைக்கிறான்" என்றான் பிருதிவீபதி. "இந்தப் பெண்ணைத் தங்களிடமிருந்து கடத்திச் செல்லச் செய்த சூழ்ச்சியிலும் ஏதோ அந்தரங்கம் இருக்கிறது. இந்தப் பெண் யார்...?" என்றார் சந்தகர். தன்னைப் பற்றிச் சந்தகர் விசாரித்ததும் அங்கு நின்று கொண்டிருந்த பெண் மிகவும் வெட்கமடைந்தவளாக அங்கிருந்த சிறு மலைக் குகைக்குள் சென்றாள். அரிஷ்டநேமி என்ற அந்த முனிவர் ஒரு பெருமூச்சு விட்டார். "இந்தப் பெண்ணுக்கு நான் வைத்த பெயர் சுகேசி. இவள் ஒரு அனாதை. இவள் கதையே வேறு..." என்றார். |