மாலவல்லியின் தியாகம்

(இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்)

இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம்

அத்தியாயம் 1 - வீரர் குலத்துதித்த ஜோதி

     கொடும்பாளூர் அரசன் பூதி விக்கிரம கேசரி கொடும்பை நகரைச் சுற்றி அமைத்திருந்த கோட்டை எல்லோருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியதாகத்தான் இருந்தது. விளையாட்டுப் போல் நகரைச் சுற்றிலும் அதிசயிக்கத் தக்க கோட்டையையும் பிரும்மாண்டமான அகழிகளையும் சிருஷ்டித்து விட்டான் அந்த மகா வீரன். உண்மையாகவே விக்கிரம கேசரி சிருஷ்டித்திருந்த அக் கோட்டை பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்குமே சிறிது அச்சத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தது. விக்கிரமகேசரி இப்படி ஒரு கோட்டையை எழுப்பக் காரணம் என்ன? ஏதோ முன்னேற்பாடாகத்தான் அந்த வீரன் தன் நகரைச் சுற்றிலும் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறான் என்று எல்லோருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. விக்கிரம கேசரி பல்லவ மன்னனுக்கு அடங்கிய சிற்றரசன் தான். இருப்பினும் அவன் தன் நகரைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக ஒரு கோட்டை கட்டிக் கொள்வதைத் தடுக்க முடியுமா?

     கொடும்பாளூர் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு அடங்கியதுதான். நெடு நாட்களாகக் கொடும்பாளூர் அரச பரம்பரையினருக்கும் பல்லவ மன்னர்களுக்கும் நெருங்கிய நட்பு இருந்து வந்தது. சாம்ராஜ்யத்தைப் பெருக்க வேண்டும் என்றிருந்த பல்லவர்களுக்குப் பெருவீரர்களான இருக்கு வேளார்களின் நட்பு மிக்க இன்றியமையாததாகவே எப்பொழுதும் இருந்தது. இந்த நட்பைத் துறந்து விடாமல் இருக்கவும் அவர்கள் விரும்பினர். பல்லவ மன்னர்கள் மற்றச் சிற்றரசர்களை நடத்துவது போலல்லாமல் கொடும்பை மன்னர்களுக்குச் சில சலுகைகளும் கொடுத்து வந்தார்கள். கொடும்பாளூர் மன்னர் பல்லவ மன்னருக்கு அடங்கியவராகவும், நெருங்கிய நட்பினராகவும் இருந்ததில் அவர்களுக்கு ஜன்ம வைரிகளாகத் திகழ்ந்த பாண்டியர்களுக்கு மிகவும் இடையூறாகவும், பொறாமையாகவும் தான் இருந்தது.

     பல்லவ மன்னருக்குக் கீழ்ப்படிந்து பழையாறை, நாகை, திருப்புறம்பயம் முதலிய சிறு பகுதிகளை ஆண்டு வந்த சோழ வம்சத்தினருக்கு இன்னும் அதிகச் சலுகைகள் அளிக்க வேண்டுமென்பது தான் கொடும்பாளூர் அரச வம்சத்தினரின் விருப்பம். ஆனால் பல்லவர் கோன் அவர்களுக்கு அதிகச் சலுகைகள் அளிக்க விரும்பவில்லை. தஞ்சையை ஆண்ட மாறன் முத்தரையர் தம் ஆட்சிக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் பல்லவ மன்னன் சோழ வம்சத்தினர்களுக்கு அதிகச் சலுகைகள் கொடுக்காத வண்ணம் சூழ்ச்சிகள் செய்து தடுத்துக் கொண்டிருந்தார். முத்தரையரின் உபதேசங்களுக்குச் செவி கொடுத்த பல்லவ மன்னனும் பிரசித்தி பெற்ற வீரர் பரம்பரையான சோழ வம்சத்தினருக்குச் சலுகை காட்டினால் தன்னுடைய சாம்ராஜ்யத்துக்கு ஏதேனும் கெடுதல் நேரிடுமோ என்று அஞ்சி அவர்களை ஒடுக்கி வைக்கவே முயற்சி செய்தான். இதனால் கொடும்பாளூரார்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள நெடுநாளைய நட்பு மாறிச் சிறிது அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. அவர்கள் நட்புறவில் வெளிக்குத் தோன்றாத கசப்பு உணர்ச்சியும் பெருகி வந்தது. அதோடு விக்கிரமகேசரி, கொடும்பாளூரில் எழுப்பியிருந்த பெருங் கோட்டை பல்லவ மன்னனுக்குச் சிறிது சந்தேகத்தையும் புகைச்சலையும் ஏற்படுத்தி இருந்தன. தங்களுக்கு அனுகூலமாகத் தெய்வாதீனமாக இத்தகைய நிலை ஏற்பட்டதைப் பாண்டிய மன்னன் பயன்படுத்திக் கொள்ளத்தானே விரும்புவான்?

     மகா வீரனான பூதி விக்கிரம கேசரி திடீரென்று இறந்து விட்டான். அவன் இறந்தது பல்லவ மன்னனுக்குச் சிறிது மன ஆறுதலை ஏற்படுத்தியது. விக்கிரம கேசரிக்குப் பின் அவன் மகன் ஆதித்த இருக்கு வேளான் ஆட்சி பீடம் ஏறினான். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? 'என் தகப்பன் பத்தடிதான் தாண்டுவான். நான் பதினாறு அடி தாண்டுவேன்' என்று சொன்னான் அந்த இளஞ் சிங்கம். ஆதித்தனுக்கு உற்ற துணையாக நின்ற அவன் தம்பி பராந்தகன் அண்ணனை விட அரை அடி அதிகமாகத் தாண்டுவான் போல் இருந்தது. அமைதி ஏற்படுத்திக் கொண்டிருந்த பல்லவ மன்னனின் மனம் மறுபடியும் குழம்பத் தொடங்கியது. ஆதித்தன் ஆட்சி செய்யத் தொடங்கியதும் அவன் பல்லவ மன்னனுக்கு அடங்கியவன் என்று பெயரளவிலேயே இருந்தானே தவிர அவன் தன் இச்சையாகவே தான் நடந்து வந்தான். இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ள நினைத்த பாண்டிய மன்னன், கொடும்பாளூரார்களுக்கும், சோழ வம்சத்தினருக்கும் ஆதரவாகவே பேசி வந்தான். சம்சயமும் பீதியும் அடைந்திருந்த பல்லவர் கோன் கொடும்பாளூராரின் நட்பை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையை இழந்து அவர்களை அடியோடு ஒழித்துக் கட்டி விட வேண்டும் என்று நினைத்தான்.

     மிகுந்த பராக்கிரமசாலியான ஆதித்தனும் அவன் தம்பி பராந்தகனும் நினைத்ததை முடிப்பதிலேயே கருத்து உடையவர்கள். தங்கள் அரசையும், உயிரையும், திரணமாக மதித்து லட்சிய சித்திக்காகப் பாடுபடும் திட நம்பிக்கை உள்ளவர்கள். அவர்களுடைய தாய் பழையாறை நகரை ஆண்ட சோழ மன்னன் குமராங்குஜனின் சகோதரி. வீரத் தாயின் ரத்தத்தில் உதித்தவர்களின் நெஞ்சம் எப்படிப்பட்டதாக இருக்கும்? தீரம் மிக்க சோழ பரம்பரையில் உதித்த அவர்கள் தாய் சாகும் தறுவாயில் தன் புதல்வர்களை அருகில் அழைத்து, "நீங்கள் தான் மறுபடியும் சோழவள நாட்டைச் சோழர்களுடையதாக்கி வைக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள். அவர்கள் தங்கள் தாய்க்கு அளித்த வாக்குறுதியை எப்படி மறக்க முடியும்? தங்கள் அரசை இழப்பதாயினும் மறுபடியும் கரிகாலனின் பரம்பரை இந்நாட்டை ஒரு குடையின் கீழ் ஆட்சி செலுத்த வேண்டும் என்பதையே விரும்பினர்.

     சுற்றிலும் சூழ்ந்த பெரும் கோட்டைக்குள் அடங்கிய அழகிய கொடும்பை மாநகரின் அரச மாளிகையை ஒட்டினாற் போல் உள்ள ஒரு அழகான சோலை. காலை வேளை. அச் சோலையிலே உள்ள சிறு மைதானத்தில் இரு வாலிபர்கள் வாட்போர் செய்து கொண்டிருந்தனர். ஆம்! அவ்விரு வாலிபர்களும் விளையாட்டாகவே வாட்போர் செய்து பழகிக் கொண்டிருந்தாலும் உண்மையாக உத்வேகத்துடனும் ஆத்திரத்துடனும் போர் செய்வது போல் தான் இருந்தது. அவர்களுடைய போராட்டத்தைக் கண்டு வியந்து கொண்டிருந்தனர் இரு இளமங்கையர். அவ்விரு மங்கையரும் ஒவ்வொரு கட்சியில் நின்று அவ்வீர வாலிபர்கள் ஒருவரை ஒருவர் சாமர்த்தியமாகவும், தந்திரமாகவும் தாக்கும் நேரத்திலெல்லாம் கைதட்டுவதும் சந்தோஷ ஆரவாரம் செய்வதுமாக அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். அவ்விரு வாலிபர்களில் ஒருவனுக்குச் சுமார் இருபத்து ஐந்து வயது இருக்கலாம். மற்றவனுக்கு இருபது வயது தான் இருக்கும். அவர்கள் உடை உருவம் இவைகளிலிருந்து அவ்விருவரும் அரச குமாரர்களாய்த்தான் இருக்க வேண்டுமென்று தெளிவாக விளங்கியது. அவ்வாலிபர்களை உற்சாகப்படுத்திய யௌவன மங்கையர்களும் அரசகுமாரிகள் என்பது அவர்கள் அணிந்திருந்த ஆடை அலங்காரங்களிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது.

     அப்பெண்களில் ஒருத்தி பதினெட்டு வயது மதிக்கத் தக்கவளாயும் ஒருத்தி பதினாறு வயது மதிக்கத்தக்கவளாயும் இருந்தாள். அவ்விரு வீர வாலிபர்களுக்கும் இப்படிப்பட்ட அழகும் வயதும் நிறைந்த பெண்கள் தான் காதலிகளாக இருக்கப் பொருத்தமானவர்கள் என்று கற்பனை செய்து பார்க்க வேண்டிய இடமே இல்லாதபடி அவ்வளவு இணையாக விளங்கினர். இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் வயதில் மூத்தவளாக இருந்த பெண் வயதில் சிறியவனாக இருந்த வாலிபனையும், வயதில் சிறியவளாக இருந்த பெண் மற்றவனை விட வயதில் மூத்தவனாய் இருந்த வாலிபனையும் ஆதரித்து நின்றதுதான். இவ்வளவு தூரம் அவர்களைப் பற்றிச் சொல்லிய பிறகு அவர்கள் யாரென்று குறிப்பிடாமல் இருக்க முடியுமா?

     அவ்விருவரில் வயதில் மூத்தவனாக இருந்தவன் கொடும்பாளூர் மன்னன் ஆதித்தனின் தம்பி பராந்தகன். வயதில் சிறியவனாகத் தோன்றிய மற்றவன் பழையாறை நகர் மன்னன் குமராங்குஜ சோழனின் மகன் விஜயன். அந்த மங்கையர்களில் மூத்தவளாக இருப்பவள் தான் பழையாறை நகரையாளும் உரிமையுள்ளவனான விஜயனின் சகோதரி அருந்திகைப் பிராட்டி. வயதில் சிறியவளாகத் தோன்றிய மற்றவள் கொடும்பாளூர் மன்னன் ஆதித்தனுக்கும், பராந்தகனுக்கும் சகோதரியாக விளங்கும் அனுபமா. அருந்திகை தன் சகோதரன் விஜயனின் சார்பாக நின்று அவனை உற்சாக மூட்டியதிலும் அனுபமா தன் சகோதரன் பராந்தகன் சார்பாக நின்று அவனை உற்சாகப்படுத்தியதிலும் வியப்பு என்ன இருக்கிறது?

     விளையாட்டாகச் செய்யும் வாட் போராயினும் மிகவும் உத்வேகமாகத்தான் இருந்தது. சண்டையின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க அவ்விரு பெண்களின் உற்சாகமும் அதிகமாகியது. வாளோடு வாள் மோதும் சத்தத்தோடு பெண்களின் கலகலவென்ற சிரிப்பொலியும் இடையிடையே கலந்து இன்பத்தை எழுப்பியது. விஜயன் வயதில் சிறியவனாயிருந்தாலும் மிக லாவகமாகவும், தந்திரமாகவும் வாளைச் சுழற்றிப் பெரியவனாகிய பராந்தகனுக்கு எதிராகச் சளைக்காமல் போர் புரிவது சிறிது பயங்கரமானதாகவும் அதிசயிக்கத் தக்கதாகவும் தான் இருந்தது. அந்த வயதிலேயே அவன் தனியொருவனாக நின்று கடல் போல் எழும்பி வரும் பெரும் படையையும் கதிகலங்கச் செய்யும் திறமை பெற்றவனாகி விட்டான் என்பதைத்தான் அவன் விளையாட்டாகச் செய்யும் போராட்டமே எடுத்துக் காட்டியது. அவர்கள் பாய்ந்து பாய்ந்து வாளைச் சுழற்றித் தீவிரமாகச் சண்டை செய்யும் போது பராந்தகனின் வாள் முனை விஜயனின் இடது தோளில் பட்டு இரத்தம் கசிந்தது. இதைக் கண்ட பராந்தகன் வாளைச் சுழற்றுவதை நிறுத்தினான்.

     பராந்தகன் சட்டென்று போராட்டத்தை நிறுத்திக் கொண்டதும் விஜயன், "ஏன் அதற்குள் நிறுத்திக் கொண்டாய்? களைப்பாக இருக்கிறதா?" என்றான்.

     அருந்திகைப் பிராட்டி படபடவென்று கைகொட்டி நகைத்தாள். அனுபமாவின் முகம் கறுத்து நாணம் குடிகொண்டது.

     "எனக்குக் களைப்பு இல்லை. உன் இடது தோளைக் கவனி. காயம்பட்டு ரத்தம் வருகிறது" என்றான் பராந்தகன்.

     விஜயன் அலட்சியமாகத் தன் இடது தோளில் கசிந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, "என் இடது தோளில் காயம்பட்டதற்காக நீ ஏன் போராடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.

     இந்தச் சமயத்தில் அருந்திகை முன்னிலும் பலமாகக் கைதட்டிச் சிரித்தாள். இதைக் கண்டு பராந்தகனுக்குக் கூட அவ்வளவு வெட்கமும் ரோசமும் ஏற்படவில்லை. அனுபமாவுக்குத்தான் வெட்கமும் ரோசமும் பிரமாதமாகப் புகைந்து கொண்டு வந்தன.

     "இது விளையாட்டாகப் புரியும் போர் தானே? இதில் காயம் ஏற்பட்டால்...?"

     "விளையாட்டாகச் செய்யும் போர்தானே என்றுதான் நானும் என் தோளில் காயம்பட்டதைப் பொறுத்துக் கொண்டு சண்டை செய்தேன். இல்லாவிட்டால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டிருக்காதா?" என்றான் விஜயன்.

     "உங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்களோ?" என்று கேட்டாள் அனுபமா.

     விஜயன் சிரித்துக் கொண்டே, "எனக்கு இடது தோளில் காயம்பட்டிருப்பது போல் உன்னுடைய சகோதரனுக்கு இடது தோளில் காயம் பட்டிருக்காது. இடது தோளே அறுந்து போய்க் கீழே விழுந்திருக்கும்" என்றான்.

     விஜயனின் வார்த்தையை அங்கீகரிப்பவள் போல் அருந்திகை, "அப்படிச் சொல்லு" என்றாள் உற்சாகத்தோடு.

     ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பேசும் இவர்களுடைய சம்பாஷணைகளை விளையாட்டாகவே கருதிப் பெருமையோடும் பூரிப்போடும் கேட்டுக் கொண்டிருந்த பராந்தகன் விஜயனின் முதுகில் தட்டினான். "விஜயா! நீ சரியான வீரனுக்குரிய முறையில் தான் நடந்து கொள்கிறாய் - விளையாட்டாகச் சண்டையிட்டோமாயினும் இதில் நீ வெற்றி பெற்று நான் தோல்வியடைந்திருந்தேனாயினும் இப்பொழுது ஏற்பட்ட சந்தோஷத்தை விடப் பன்மடங்கு சந்தோஷமடைந்திருப்பேன். எங்களை எல்லாம் விட நீ சிறந்த வீரனாகத் திகழ வேண்டுமென்பதுதான் எங்களுடைய ஆவல். இந்தக் கொடும்பாளூர் கோட்டை பொடிப் பொடியாகித் தரைமட்டமானாலும் பாதகமில்லை. மறுபடியும் இந்நாட்டில் சோழ வம்சத்தினரின் பெருமை உயர்ந்தால் எங்கள் மனம் ஆறுதல் அடையும். எங்கள் தாய் தந்தையர்களின் ஆத்மாவும் சாந்தியடையும். இதை நீ நினைவில் வைத்துக் கொள். எதிரியின் வாள் பட்டு மேனியில் எத்தனை புண்கள் ஏற்பட்டாலும் அவைகளை யெல்லாம் சுத்த வீரனின் பெருமையை எடுத்துக் காட்டும் வீரச் சின்னங்களாகவே கருத வேண்டும். ஆனால் முதுகில் மாத்திரம் காயத்தை ஏற்று இந்த இரு பரம்பரையினருக்கும் இழுக்கைத் தேடித் தந்துவிடாதே" என்றான்.

     இதைக்கேட்ட அருந்திகைப் பிராட்டி சிரித்துக் கொண்டே, "எங்கள் விஜயனுக்கு வீரத்தைப் பற்றியும் குலப் பெருமைகளைப் பற்றியும் உபதேசிக்கிறீர்களா? எல்லாக் குழந்தைகளும் பிறக்கும் போது 'குவா' என்றுதான் அழும்; ஆனால் எங்கள் விஜயன் பிறந்த போது அழுத அழுகை 'வாள் எங்கே - வாள் எங்கே' என்று கேட்பது போலிருந்தது. அதோடு மட்டுமா? குழந்தைப் பருவத்திலிருந்தே அவனுக்கு விளையாட்டுக் கருவியாக இருந்தவைகளெல்லாம் வாளும் ஈட்டியும் தான்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே யாரோ இருவர் வருவது கண்டு அவர்கள் பார்வை திரும்பியது.

     அப்பொழுது ஆதித்தன் வேறொரு மனிதரோடு வந்து கொண்டிருந்தான். ஆதித்தனோடு வந்த மற்றொரு மனிதர் அவர்களுக்கு அதுவரையில் அறிமுகமில்லாத மனிதராகவே காணப்பட்டார். அவருக்கு அறுபது வயதுக்கு மேலிருக்கலாம். மிகக் கம்பீரமான உருவம். பிரகாசமான கண்கள், நரைத்த மீசை, அவர் அணிந்து கொண்டிருந்த ஆடை அணிகளிலிருந்து அந்த மனிதர் ஓர் பேரரசின் மந்திரிப் பிரதானிகளில் ஒருவராகத்தான் இருக்க வேண்டுமென்று தோன்றியது. ஆதித்தனோடு வேறொரு மனிதர் வருவதைக் கண்ட அருந்திகையும் அனுபமாவும் பெண்களுக்குரிய நாணத்தோடு சிறிது மறைவிடம் பார்த்துச் செல்ல நினைத்தனர். ஆதித்தன் அவர்களைக் கையமர்த்தி நிறுத்தி, "அருந்திகை எங்கே போகிறாய்? கொஞ்சம் நில். உங்களையெல்லாம் இவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று தானே இங்கு அழைத்து வந்தேன்?" என்று கூறினான்.

     ஆதித்தனின் வார்த்தையைக் கேட்டதும் அருந்திகைப் பிராட்டி சிறிது நாணத்தோடு நின்றாள். அனுபமா அவளுடைய தோளைத் தொட்ட வண்ணம் பின்னால் நின்றாள்.

     "இவர் பாண்டிய மன்னரின் அமைச்சர் அருண்மொழியார். நமது அரண்மனை விருந்தினராக வந்திருக்கிறார்" என்று கூறிப் பராந்தகனைக் காட்டி, "இவன் என் தம்பி - பராந்தகன். இதோ இவன் பழையாறைச் சோழ மன்னரும் என்னுடைய மாமனுமாகிய குமராங்குஜ சோழரின் புதல்வன் - விஜயாலயன். வயதில் மூத்தவளாக இருக்கும் இந்தப் பெண் அருந்திகை - விஜயனின் சகோதரி. சிறியவள் என் தங்கை - அனுபமா..." என்றான்.

     அருண்மொழியார் தம் நரைத்த மீசையைத் தடவிக் கொண்டே, "மிக்க மகிழ்ச்சி. சோழ வம்சம் மிகப் பிரசித்தமானது. அவர்கள் வாழ்வுற்றாலும் தாழ்வுற்றாலும் அழியாத பெருமையுடையவர்கள் - பாண்டிய மன்னர் கூட இன்று அக்குலத்தினர் அடைந்துள்ள நிலைகுறித்து அடிக்கடி கூறி வருத்தப்படுவார். இந்தக் குழந்தை விஜயனைப் பார்த்தால் அவனுடைய மூதாதையர்கள் செய்த விந்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. இவனைப் பார்க்கும்போதே இவனும் தன் முன்னோர்கள் போல் சிறந்த வீரனாகத்தான் விளங்குவான் என்று தோன்றுகிறது. இன்னும் உறையிலிருந்து எடுத்த வாளை உறையிலிடாமல் துடியாய் நிற்கிறானே..." என்றார்.

     "சிலருடைய வாளுக்குத்தான் உறையில் கிடந்து உறங்குவதில் மோகம். எங்கள் விஜயனின் வாள் அப்படிப்பட்டதல்ல. தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்றிக் கொண்ட பின் தான் அது உறைக்குள் போகும் போலிருக்கிறது" என்றான் பராந்தகன்.

     "அப்படியா...? சில அரச குமாரர்கள் போல் உறையுள் இருந்தால் தான் அழகு என்று நினைக்காமல்... வீரர்கள் மரபில் தோன்றிய குழந்தையல்லவா?" என்றார் அருண்மொழியார்.

     ஆதித்தன் சிரித்துக் கொண்டே, "தஞ்சை மன்னர் முத்தரையரின் குமாரன் இளந்திரையன் சில நாட்கள் இங்கு வந்திருந்தான். உறையிலிடப் பட்டிருந்த கத்தியை அவன் வெளியே எடுத்தே நான் பார்க்கவில்லை. ஒரு நாள் விளையாட்டாக 'வாள் போர் செய்வோம் வா' என்று அழைத்தேன். பாவம்! அவன் விளையாட்டாகக் கூடப் போர் செய்ய மனமில்லாதவனாய் என் வார்த்தையைத் தட்டிக் கழிக்கப் பார்த்தான். நான் பிடிவாதமாகச் சொல்லவே போர் செய்ய மனமில்லாதவனாய் உறையிலிருந்த வாளை எடுக்க முயற்சித்தான். துரதிருஷ்ட வசமாக உறையிலிருந்த வாள் எடுக்க வரவில்லை" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.

     "உறையிலிருந்த வாள் எடுக்க வரவில்லையா? காரணம்?" என்றார் அருண்மொழியார் ஆச்சரியத்தோடு.

     "காரணம் என்ன? வாளில் அவ்வளவு துரு ஏறிப் போய் அது உறையோடு பிடித்துக் கொண்டிருந்தது."

     இதைக் கேட்டதும் அருந்திகையும் அனுபமாவும் கூடச் சிறிது வெட்கத்தையும் விட்டுச் சிரித்தனர். அருண்மொழியாரும் 'கலகல' வென்று சிரித்து விட்டு, "வெட்கக் கேடு. அப்புறம்...?" என்றார்.

     "இப்படிப்பட்ட உன்னத வீரனுக்கு என் தங்கை அனுபமாவைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று அளவற்ற ஆசை" என்று கூறி இலேசாக நகைத்தான் ஆதித்தன்.

     "தஞ்சை மன்னரின் மகனல்லவா? ஆசை எல்லாம் துணிச்சலாகத்தான் இருக்கும்" என்றான் பராந்தகன்.

     "நீங்கள் அவனுக்கு உங்கள் சகோதரியைக் கொடுப்பதாக உத்தேசம் உண்டா?" என்றார் அருண்மொழியார்.

     "அடிக்கடி வாளை உறையிலிருந்து எடுக்கப் பழகிக் கொண்டு வா. அப்புறம் யோசிப்போம் என்று சொல்லி இருக்கிறேன்" என்றான் ஆதித்தன்.

     "இப்பொழுது அவன் அடிக்கடி உறையிலிருந்து வாளை உருவி உருவிப் பார்த்துக் கொண்டு வருகிறான் என்று கேள்வி" என்றான் பராந்தகன்.

     "வீரன் தான். கல்யாணத்தைப் பற்றி யோசிக்க வேண்டியதுதான்" என்றார் அருண்மொழியார்.

     "யோசிக்க வேண்டியதுதான். ஆனால் விஜயனைப் பற்றியும் யோசிக்க வேண்டி இருக்கிறதே" என்றான் ஆதித்தன்.

     "விஜயனும் அனுபமாவும் நம்முடைய யோசனை எதையுமே லட்சியம் செய்வதில்லை" என்றான் பராந்தகன்.

     "நம்முடைய யோசனையைக் கேட்காமல் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டால் தஞ்சை இளவரசன் இளந்திரையனின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டியதுதான்!"

     "அவர்கள் எப்பொழுதுமே எனக்கு விரோதிகள்தானே?" என்றான் விஜயன்.

     அருண்மொழியார் சிரித்துக் கொண்டே, "சோழர் குலத்து இளைஞன் ஒருவனுக்குத் தன் குமாரத்தியைக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமென்று பாண்டிய மன்னருக்கு ஆசை. அப்படி இல்லாவிட்டால் நம் குமாரன் வரகுணருக்காவது சோழர் குல மங்கை ஒருத்தியை விவாகம் செய்து வைத்து விட வேண்டுமென்று விருப்பம். எங்கள் மன்னரின் அபிப்பிராயத்துக்குத் தகுந்த மருமகனும் மருமகளுமாக இருக்கத் தக்கவர்கள் விஜயனும், அருந்திகைப் பிராட்டியும் தான் என்று நினைத்தேன். ஆனால் என் எண்ணம் ஈடேறாது போலிருக்கிறது" என்று கூறினார்.

     "ஆமாம்! சோழ வம்சத்தில் உதித்த பெண்களிடமும் ஆண்களிடமும் கொடும்பாளூரார்களுக்கு முதல் பாத்தியதை இருக்கும் வரையில் வேறு ஒருவரும் அதைப் பற்றி நினைக்க முடியாதுதான்" என்றான் ஆதித்தன்.

     இந்தச் சமயத்தில் அரண்மனைச் சேவகன் வந்து வணங்கி நின்று, அரண்மனையில் தஞ்சை அரசர் முத்தரையரின் அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் வந்து காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.