உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 15 - சந்தகரும் பழையாறை வீரர்களும் பழையாறை வீரர்கள் பெருஞ்சிங்கனும் வில்லவனும் சுகேசி அளித்த பழங்களை அருந்திய பின், அரிஷ்டநேமி முனிவருக்குச் சமாதான வார்த்தைகள் சொல்லிவிட்டு, தங்கள் குதிரைகளில் ஏறிக் கொண்டு காஞ்சீபுரத்தை நோக்கிப் பய்னமானார்கள். நந்திபுர நகரத்து வீரர்கள் அந்தப் பெண்ணைப் பார்த்து, இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனியென்று தவறாக நினைத்து அவளைக் கடத்திக் கொண்டு செல்ல நினைத்ததுதான், அவர்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அந்தப் பெண் சுகேசி, திருபுவனியல்ல என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். இருப்பினும் அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் ஏதோ அந்தரங்கமான ரகசியம் அடங்கியிருப்பதாகத்தான் அவர்கள் எண்ணினர். இல்லையென்றால் கலங்கமாலரையர் அந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போக நினைப்பாரா? அதோடு அவர்களுக்கு இன்னொரு விஷயமும் வியப்பையளித்தது. சோதிடர் சந்தகரும் அவரோடு மற்றொரு வீரனும் வந்து கலங்கமாலரையரிடமிருந்து அந்தப் பெண்ணை மீட்டதாக அந்த ஜைன முனிவர் அரிஷ்டநேமி சொல்லியதுதான் அது. சோதிடர் சந்தகரோடு வந்தவன் யார்? அவன் கங்க நாட்டைச் சேர்ந்தவன் என்று அரிஷ்டநேமி முனிவர் சொன்னார். கங்க நாட்டைச் சேர்ந்த ஒரு வீரனுக்கும் சோழ நாட்டைச் சேர்ந்த ஒரு சோதிடனுக்கும் எவ்விதம் தொடர்பு ஏற்பட்டது? அந்த வீரன் யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் மிகவும் ஆவலோடு இருந்தார்கள். சில நாழிகை நேரத்தில் அவர்கள் காஞ்சீபுரத்தை அடைந்தார்கள். அவர்கள் சோழ நாட்டைச் சேர்ந்த போர் வீரர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டனர். பெருஞ்சிங்கனுக்கும் வில்லவனுக்கும் காஞ்சிமா நகரம் புதியதல்ல. இருவரும் பல வீதிகளையும் கடந்து மெதுவாகக் குதிரையில் போய்க் கொண்டிருந்தனர். விருந்தினர் விடுதியை நெருங்கியதும் பெருஞ்சிங்கன் தன் குதிரையை நிறுத்தினான்; வில்லவனும் குதிரையை நிறுத்தினான். இருவரும் கீழே இறங்கி விடுதிக்குள் நுழைந்தனர். பெருஞ்சிங்கனுக்கு விருந்தினர் விடுதிக் காவலனை நன்கு தெரியும். அவன் மூலமாகச் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தான். பெருஞ்சிங்கனைக் கண்டதும் விடுதிக் காவலன் அன்போடு வரவேற்றான். பெருஞ்சிங்கனும் வில்லவனும் தங்கள் குதிரைகளைக் கொட்டிலில் கட்டி விட்டு, அவ்விடுதிக்குள் சென்றனர். அவர்களை அன்போடு உபசரித்த விடுதிக் காவலன் சோழ நாட்டில் தலை விரித்தாடும் பஞ்ச நிலையைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினான். பெருஞ்சிங்கன் மெதுவாகப் பேச்சை மாற்றிக் கோடீச்சுவரத்துச் சோதிடர் சந்தகர் அங்கே வந்ததுண்டா என்று விசாரித்தான். சோதிடர் சந்தகரின் பெயரைக் கேட்டதும் விடுதிக் காவலன் முகத்தில் ஒளி பிறந்தது. “சோதிடர் சந்தகர் தானே? அவர் இங்கே தான் தங்கியிருக்கிறார். ஆனால் தினமும் அவர் வருகிற வேளையும் போகிற வேளையும் ஒரு கணக்கில் இல்லை. குளிக்கவும் சாப்பிடவும் எப்பொழுதாவது வருவார். அவருக்கு என்ன? அவர் ஒரு மகான்! அவதார புருஷர்! அதில் சந்தேகமே யில்லை. அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அப்படியே பலிக்கிறது. சோதிட சாஸ்திரத்தில் சந்தகரைப் போன்ற வல்லுநர் யாருமே கிடையாது என்று துணிந்து சொல்லலாம். அன்னை பராசக்திதான் அவர் வாக்கிலிருந்து பேசுகிறாள். இல்லாவிட்டால் பெரிய பெரிய பிரபுக்களும் மகாராஜாக்களும் அவரிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பார்களோ? கங்கநாட்டு இளவரசன் பிருதிவீபதி அவருடைய அந்தரங்க நண்பன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அது மட்டுமா? எங்கள் சக்கரவர்த்தியின் சகோதரர் சிம்மவர்மர் அவருடைய ஆலோசனை இல்லாமல் எதுவும் செய்வதில்லையாம். அரண்மனை இசைக் கணிகை தேனார்மொழியாள் கூடச் சோதிடர் சந்தகரைத் தெய்வமாகவே பாவிக்கிறாளாம். இத்தகைய சோதிட வல்லுநரைப் பெற்றெடுத்த உங்கள் சோழ வள நாடு உண்மையாகவே பெரிய பாக்கியம் செய்திருக்கிறது!” என்று ஒரே உற்சாகமாகப் பேசினான் விடுதிக் காவலன். ***** விடுதிக் காவலனின் வார்த்தைகளிலிருந்து பெருஞ்சிங்கனும் வில்லவனும் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டனர். முக்கியமாக, சோதிடர் சந்தகரோடு நண்பனாயிருப்பவன் கங்கநாட்டு இளவரசன் பிருதிவீபதிதான் என்பதை உணர்ந்து கொண்டனர். சந்தகர் எவ்வித ஆபத்தும் இன்றிச் சுகமாயிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டனர். அவர் ஏதோ ஒரு முக்கியமான காரியத்தைச் சாதிக்கத்தான் காஞ்சீபுரத்தில் தங்கியிருக்கிறார் என்பதையும் ஊகித்து அறிந்து கொண்டனர். “சந்தகர் இன்று எப்பொழுது வருவார்?” என்று விடுதிக் காவலனைப் பார்த்துக் கேட்டான் பெருஞ்சிங்கன். “நான் தான் சொன்னேனே, அவர் வரும் வேளையைச் சொல்லவே முடியாதென்று. நீங்கள் அவசியம் அவரைச் சந்திக்க வேண்டுமோ?” என்று கேட்டான் விடுதிக் காவலன். “ஆம்! முக்கியமாக அவரைச் சந்தித்து ஒரு சோதிடம் கேட்டாக வேண்டும். எங்கள் நாட்டில் ஒரு பெண் எங்கேயோ காணாமற் போய் விட்டாள். அவளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினான் பெருஞ்சிங்கன். “இவ்வளவுதானே? இது என்ன பிரமாதம்! ஒரு பிடி சோழியை எடுத்து வைத்த்க் கொண்டு எண்ணிப் பார்த்து, ’இந்தத் திசையில் இந்த இடத்தில் இப்படி இருக்கிறாள்’ என்று சொல்லி விடுவார், அந்த அதிசய மனிதர்! நீங்கள் அவசியம் சோதிடரை பார்க்க வேண்டுமானால் குளித்து, சாப்பாட்டை முடித்துக் கொண்டு இங்கேயே இருங்கள். அவர் வந்ததும் நீங்கள் பார்க்கலாம்!” விடுதிக் காவலன் சொன்னபடி அங்கேயே தங்கியிருந்து சோதிடரைப் பார்ப்பதென்று முடிவு செய்தனர், பெருஞ்சிங்கனும் வில்லவனும். அவர்களை விடுதிக்குள் அனுப்பிவிட்டு, விடுதிக் காவலன் அங்கேயே காத்துக் கொண்டிருந்தார். மறுகணம் சோதிடர் சந்தகர் விடுதிக்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் விடுதிக் காவலன் பரபரப்போடு எழுந்து வந்து, “உங்களைத் தேடிக் கொண்டு உங்கள் நாட்டிலிருந்து இருவர் வந்திருக்கிறார்கள். அவர்களை ஸ்நானம் செய்து சாப்பிட்டு விட்டு விடுதியிலேயே தங்கியிருக்கச் சொல்லியிருக்கிறேன்!” என்றான். சந்தகர் இதைக் கேட்டதும் திகைப்படைந்துவிட்டார். “என்னைத் தேடிக் கொண்டு இருவர் வந்தார்களா? அவர்கள் யார், எதற்காக வந்திருக்கிறார்கள் என்று விசாரித்தீர்களா?” “அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது. அவர்கள் இங்கு வந்தது காணாமற் போன ஒரு பெண்ணைப் பற்றிச் சோதிடம் கேட்பதற்காக என்பது அவர்கள் கூறித் தெரியும்.” “சரி, நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். காணாமற் போன அந்தப் பெண்ணைப் பற்றி அவர்களிடம் நன்றாய் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். நான் மாலையில் வருவேன். அப்பொழுது என்னிடம் சொல்லுங்கள். நான் இன்று மாலையில் வருவேனென்பதை அவர்களிடம் சொல்ல வேண்டாம். நான் இன்று முழுதும் வரமாட்டேன் என்று சொல்லி அவர்களை இங்கிருந்து வெளியே அனுப்பிவிடுங்கள்!” என்று கூறிவிட்டுச் சந்தகர் வெளியே எங்கேயோ புறப்பட்டுப் போனார். பெருஞ்சிங்கனும் வில்லவனும் ஸ்நானம் செய்து சாப்பிட்டு விட்டுச் சந்தகரைக் காணும் ஆவலுடன் விடுதிக் காவலனிடம் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் விடுதிக் காவலன், “நீங்கள் யாரோ ஒரு பெண் காணாமற் போய்விட்டதாகவும், அவளைப் பற்றிச் சோதிடம் கேட்க விரும்புவதாகவும் சொன்னீர்களே, அந்தப் பெண் யார்? எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்றான். நந்திபுர நகர்க் காவலன் இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனி காணாமற் போனதையும், அவள் இருந்த நிலையைப் பற்றியும், புத்த பிக்ஷுணிக் கோலத்தில் இருந்த அவளைத் தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் மகன் கோளாந்தகனுக்கு மணம் முடிக்க நிச்சயித்திருந்ததையும் விவரமாகக் கூறினான் பெருஞ்சிங்கன். “நீங்கள் குறிப்பிடும் பெண் இந்நகருக்கு வந்ததாக இதுவரையில் தெரியவில்லை. எந்த விஷயம் தெரிந்தாலும் அதைப் பற்றிய விவரம் இந்த விருந்தினர் விடுதிக்கு வராமல் இருக்காது. ஆனால் இன்று காலையில் ஒரு செய்தி என் காதில் விழுந்தது. பல்லவ மன்னர் சபையில் இசைக் கணிகையாக இருந்து, புத்த பிக்ஷுணியாக மாறிய மாலவல்லி என்பவள் காவிரிப் பூம்பட்டினத்து புத்த விஹாரத்தில் நடந்த ஒரு கொலையில் சம்பந்தப்பட்டுத் தலைமறைவாக இருந்தாளென்றும், அவள் இன்று காலை இந்நகருக்கு வந்து, புத்த தேரிப் பள்ளியில் அடைக்கலம் புகுந்து விட்டதாகவும் கேள்விப்பட்டேன்.” இதைக் கேட்டதும் பெருஞ்சிங்கனுக்கும் வில்லவனுக்கும் விடுதிக் காவலன் குறிப்பிடும் மாலவல்லிதான் திருபுவனியா யிருப்பாளோ என்ற ஐயம் உண்டாயிற்று. உடனே புத்தப்பள்ளிக்குச் சென்று பார்க்க ஆவல் கொண்டனர். தாங்கள் வெளியே சென்று வருவதாகச் சொல்லி, விடுதிக் காவலனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றனர். அவர்களுக்குக் குதிரை மீது செல்வதை விட நடந்து செல்வதே நல்லது என்று தோன்றியதால், காஞ்சி நகரத்து விசாலமான வீதிகளைப் பார்த்துக் கொண்டே புத்ததேரித் தெருவுக்குச் சென்றனர். அவர்கள் இருவரும் அந்தத் தெருவிலுள்ள புத்தப் பள்ளியின் வாசலை அடைந்த போது அந்தப் பள்ளிக்குள்ளிருந்து சோதிடர் சந்தகர் வெளியே வந்தார். அவர்கள் இருவரையும் கண்ட சந்தகருக்கு, அவர்கள் சோழ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்து விட்டது. ஒருவேளை தம்மைத் தேடிக் கொண்டு விருந்தினர் விடுதிக்கு வந்தவர்களாக இருக்குமோ என்று ஐயம் கூட எழுந்தது. “வாருங்கள். சோழ நாட்டிலிருந்து தானே வருகிறீர்கள்? நான் தான் சோதிடன் சந்தகன். இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனி எங்கே இருக்கிறாள் என்று சோதிடம் கேட்கத்தானே நீங்கள் என்னைத் தேடி வந்திருக்கிறீர்கள்?” என்று சந்தகர் அவர்களைப் பார்த்துக் கேட்டார். பெருஞ்சிங்கனும் வில்லவனும் ஆச்சரியத்தினால் அயர்ந்து போனார்கள். ‘முன் பின் தெரியாதவர்களைப் பற்றி இத்தனை சரியாகச் சோதிடம் சொல்கிறாரே! இவர் பெரிய சோதிடர்தான்!’ என்ற எண்ணம் அவர்கள் இருவர் உள்ளங்களிலும் பரவி அவர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. சந்தகர் கண்களை மூடிச் சிறிது நேரம் யோசித்து விட்டு, “அவள் இருக்கும் இடத்தைச் சோதிடத்தின் மூலம் தெரிந்து கொண்டு விட முடியாது. அவள் எங்கேயிருக்க வேண்டுமோ அங்கே இருக்கிறாள். துறவுக் கோலம் பூண்ட ஒரு குடும்பப் பெண்ணைக் குடும்ப வாழ்வில் இச்சை கொள்ளச் செய்வது எத்தகைய மூடத்தனம் என்று சொல்லுவது? அதிலும் அவளை ஒரு முரடனுக்கு மணம் செய்து வைக்க நினைப்பது மிகவும் பைத்தியக்காரத்தனம். அதுமட்டுமா? யாரோ ஒரு பெண்ணை, தங்கள் மகள் என்று சொல்லிக் கொண்டு அலைவது இன்னும் பெரிய விநோதம். மாலவல்லி திருபுவனி ஆகி விட முடியுமா? உருவ ஒற்றுமையை வைத்துக் கொண்டு எத்தனை பெரிய சூழ்ச்சி செய்ய முயன்றிருக்கின்றனர்!” என்று மளமள வென்று பேசிக் கொண்டே போனார். பெருஞ்சிங்கனும் வில்லவனும் மந்திரத்தில் கட்டுண்ட நாகம் போல் சந்தகரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவருடைய பேச்சிலிருந்து, காணாமற் போன பெண் காஞ்சீபுரத்தில் அந்த புத்தப் பள்ளியில் இருக்கிறாள் என்று உணர்ந்து கொண்டனர். அந்தப் பெண் நந்திபுர நகரத்தை விட்டு யாருக்கும் தெரியாமல் காஞ்சீபுரத்துக்கு வந்ததற்குக் காரணம் சோதிடர் சந்தகராகத் தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அவருடைய பாதுகாப்பில் திருபுவனி இருப்பினும், அவர்கள் தங்கள் அரசருடைய உத்தரவைப் புறக்கணிக்க முடியுமா? பெருஞ்சிங்கன் மிகவும் மரியாதை நிறைந்த குரலில், வணக்கத்துடன், “... எங்கள் மன்னர், காணாமற்போன திருபுவனியை எப்படியும் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார். நந்திபுரத்து வீரர்களும் அவளைத் தேடுவதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்...!” என்றான். “யார் வேண்டுமானாலும் தேடிக் கொண்டு திரியட்டும். ஆனால் உங்கள் மன்னர் அந்தப் பெண்ணைத் தேடும் பணியில் ஈடுபட வேண்டாம். அவர் இப்பொழுது கவலை செலுத்த வேண்டிய விஷயம் வேறு இருக்கிறது. தஞ்சை மன்னர் முத்தரையர் கொடும்பாளூர்க் கோட்டையின் மீது படையெடுக்க நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று உங்கள் அரசரிடம் மிகவும் அந்தரங்கமாகச் சொல்லுங்கள். இடங்காக்கப் பிறந்தாரின் மகள் என்று தவறாக நினைக்கப்படும் மாலவல்லி என்னும் பெண்ணைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவளை அன்னை பராசக்தி எப்படியும் காப்பாற்றுவால். அவள் இன்னும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஒருவர் வினையை இன்னொருவர் அனுபவிக்க முடியாது. வினையை வெல்லவும் முடியாது.
“ஊழிற் பெருவலி யாவுள; மற்றொன்று சூழினும் தான் முந்துறும்.” என்று தமிழ்மறை கூறுகிறதல்லவா?” என்றார் சந்தகர் உறுதியான குரலில். “... இன்னொரு விஷயம்... சமீபத்தில் பூதுகர் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தார் என்றும், பிறகு சிறையில் குரூரமாகக் கொலை செய்யப்பட்டாரென்றும் வதந்தி எங்கும் பரவியிருந்தது. இன்று நாங்கள் கேள்விப்பட்ட செய்தி வியப்பைத் தருவதாக இருக்கிறது. பூதுகர் சிறையிலிருந்து தப்பி விட்டார் என்று கேள்விப்பட்டோம். இவற்றுள் எது உண்மை?” என்று கேட்டான் வில்லவன். “பூதுகர் சிறைப்பட்டால் அல்லவா அதிலிருந்து தப்ப முடியும்? அவர் சிறைப்பட்டதும் பொய். அதிலிருந்து தப்பியதும் பொய். இந்த வதந்திகள் யாவும் எதிரிகள் மக்களின் மனப்பான்மையை மாற்றுவதற்காகத் திரித்து விட்ட செய்திகள். தயவு செய்து இதற்கு மேல் பூதுகரைப் பற்றி எதுவும் என்னைக் கேட்க வேண்டாம். அவரைப் பற்றி நான் ஏதாவது சொன்னால் அது பகைவர்களுக்கு ஆதரவு தருவதாக முடியலாம். எனக்கோ பூதுகருக்கோ ஆபத்து என்ற தகவல்களையெல்லாம் நம்பவேண்டாம். எங்கள் கவலை முழுவதும் நாங்கள் பிறந்த மண்ணின் மீதே இருக்கிறது. எந்த நிலையிலும் நாங்கள் எங்கள் லட்சியத்தை மறந்துவிட மாட்டோம். பூதுகர் கொலை செய்யப்பட்டதாகவும், நான் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் எழுந்த வதந்தியால் நாட்டு மக்கள் எழுச்சி கொண்டதும் ஒரு நன்மைக்குத் தான். மக்கள் எழுச்சி பெற்ற இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுவதுதான் நீங்கள் இப்பொழுது கவனம் செலுத்த வேண்டிய முதல் காரியம்” என்றார் சந்தகர். பெருஞ்சிங்கன் மறுபடியும் சந்தகரை வணங்கி, “தங்கள் உத்தரவுப்படியே எங்கள் அரசரிடம் சொல்லுகிறோம். தங்களிடம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லவேண்டும்!” என்றான். “என்ன அது? எந்தச் செய்தியானாலும் இங்கே தைரியமாகச் சொல்லலாம்...!” பெருஞ்சிங்கன் சோழ நாட்டிலிருந்து தாங்கள் வந்த போது இடையே நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கூறி, அரிஷ்ட நேமி முனிவர் விடுத்த வேண்டுகோளையும் சொன்னான். சந்தகர் சிறிது யோசித்து விட்டு, “நீங்கள் இருவரும் போகும் போது அந்த முனிவரைக் கண்டு, ‘நீங்கள் எவ்விதக் கவலையும் பட வேண்டாம். சோதிடர் சந்தகரும், கங்கநாட்டு வாலிபன் வீரவிடங்கனும் இன்னும் சில தினங்களில் அங்கு வருவார்கள்’ என்று சொல்லுங்கள். இனி இங்கே உங்களுக்கு ஒரு வேலையும் இல்லை. நீங்கள் உடனே உங்கள் ஊருக்குப் போங்கள். நான் சொல்லியதெல்லாம் நினைவிருக்கிறதா?” என்று கேட்டார். “நினைவில் இருக்கிறது. ஆனால் தாங்களும் எங்கள் மன்னருக்கு ஒரு ஓலை கொடுத்தால் நல்லது!” என்றான் பெருஞ்சிங்கன். “என்னோடு விருந்தினர் விடுதிக்கு வாருங்கள். ஒரு ஓலை எழுதித் தருகிறேன்!” என்று கூறிச் சந்தகர் புத்தப்பள்ளியிலிருந்து விருந்தினர் விடுதிக்குச் சென்றார். பெருஞ்சிங்கனும் வில்லவனும் அவரைத் தொடர்ந்து சென்றனர். சந்தகரோடு, காலையில் வந்த மனிதர்கள் இருவரும் வருவதைக் கண்டு விடுதிக் காவலன் ஆச்சரியமடைந்தான். சந்தகர் அவனிடம் சைகை காட்டி ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரும்படி சொன்னார். உடனே அவன் அவைகளைக் கொண்டு வந்தான். சந்தகர் அந்த ஓலையில் வேகமாக எழுதிப் பெருஞ்சிங்கனிடம் கொடுத்து, “இந்த ஓலையை மிகவும் ஜாக்கிரதையாக எடுத்துச் சென்று உங்கள் மன்னரிடம் சேர்ப்பிக்க வேண்டும்!” என்று கூறி அதை அவன் கையில் கொடுத்தார். பெருஞ்சிங்கன் மிகவும் பணிவோடு, ஓலையைக் கையில் வாங்கிக் கொண்டான். பிறகு வில்லவனும் பெருஞ்சிங்கனும் அவரை வணங்கிவிட்டு, குதிரைகளில் ஏறிப் பழையாறையை நோக்கி விரைந்து சென்றனர். |