உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 2 - காதலும் கைவாளும் தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் வந்திருக்கிறார் என்பதைப் பணியாள் மூலம் அறிந்ததும், ஆதித்தன் சிறிது ஆச்சரியமடைந்தான். அங்கிருந்த மற்றவர்களுக்கும் அது சிறிது ஆச்சரியத்தைத்தான் தந்தது. பாண்டிய மன்னரின் அமைச்சர் மதுரையிலிருந்து வந்திருப்பதும் அதையொட்டி, தஞ்சை முத்தரையரின் அமைச்சர் வந்திருப்பதும் ஏதோ ஒரு முக்கிய காரணம் பற்றித் தான் இருக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குத் தோன்றியது. பொதுவாகப் பாண்டிய மன்னர் கொடும்பாளூர் இருக்கு வேளிர்களின் நட்பை விரும்புகிறார் என்பதும் அதே சமயத்தில் பல்லவ மன்னர் சிறிது மனவேற்றுமையும் குரோதமும் வைத்துள்ளார் என்பதும் யாவரும் அறிந்ததே. தஞ்சை மன்னர் முத்தரையரின் வார்த்தைகளைக் கேட்டுப் பல்லவ மன்னர் கொடும்பாளூரையே அழித்துவிட எண்ணமிடுகிறார் என்பதும் ஆதித்தனுக்குத் தெரியும். இந்நிலையில் தஞ்சை மன்னனின் அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் ஏதோ வஞ்சக எண்ணத்தோடுதான் கொடும்பை நகருக்கு வந்திருக்க வேண்டுமென்று ஆதித்தன் எண்ணினான். முக்கியமாகக் கொடும்பாளூர் கோட்டையைப் பற்றிய ரகசியங்களை யெல்லாம் எப்படியாவது அறிந்து கொண்டு போகலாமென்று வந்திருக்கலாமல்லவா? ஆதித்தன் மற்றவர்களை அச்சோலையிலேயே விட்டு விட்டுத் தனியாக அரண்மனையை நோக்கி நடந்தான். பராந்தகன் கோட்டைக் காவலர்களை எச்சரிக்கை செய்வதற்காகச் சென்றான். தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் கொடும்பாளூர் வந்திருக்கிறார் என்பதைக் கேட்டதுமே அருந்திகை மனத்தில் சில நினைவுகள் எழுந்தன. புலிப்பள்ளி கொண்டார் தாழ்ந்த நிலையிலுள்ள சோழ வம்சத்தினரை அடியோடு ஒழித்து விடச் சூழ்ச்சி செய்திருக்கிறார் என்பதும் அதன் காரணமாக நந்திபுர நகரிலுள்ள இடங்காக்கப் பிறந்தார் தங்களுக்கு அனுகூலமாக இருக்கிறார் என்பதினால் அவருடைய ஒரே மகள் திருபுவனியைத் தம் மகன் கோளாந்தகனுக்கு விவாகம் செய்து வைத்து அவர்களையும் தங்களுக்கு விரோதியாக்க நினைக்கிறார் என்பதையும் அருந்திகை அறிந்திருந்தாள் அல்லவா? அருந்திகை கொடும்பாளூர் வந்ததுமே தன் காதலனாகிய பராந்தகனிடம் நந்திபுர நகரிலுள்ள இடங்காக்கப் பிறந்தாரின் மகள் பல வருடங்களுக்குப் பின் அகப்பட்டதும் புத்தபிக்ஷுணி கோலத்தில் உள்ள அப்பெண்ணின் நிலைமையையும், தஞ்சை அமைச்சர் தம் மகனுக்கு அந்தப் பெண்ணை மணம் முடிக்க நிச்சயித்திருப்பதையும் சொல்லியிருந்தாள். அருந்திகை சொல்லியவை யெல்லாம் பராந்தகனின் நினைவுக்கு வந்தன. கோட்டை பாதுகாப்பாளர்களை எச்சரிக்கை செய்யச் சென்ற அவன் வேறு வழியாகத் திரும்பி அரண்மனையை நோக்கிச் செல்லும் தன் அண்ணனைச் சந்தித்தான். கோட்டைப் பக்கம் சென்ற தன் சகோதரன் எதிர்பாராத வண்ணம் எதிரே வருவதைக் கண்ட ஆதித்தன் ஆச்சரியமுற்ற வண்ணம் அவனைப் பார்த்தான். “என்ன?” “தஞ்சை அமைச்சர் இங்கு வந்திருக்கும் காரணம் அவருடைய மகன் கோளாந்தகனுக்குக் கல்யாணமாம். அந்தச் சுபச் செய்தியைச் சொல்வதற்காகத்தான் இருக்கும்” என்றான் பராந்தகன். இதைக் கேட்டதும் ஆதித்தன் ஆச்சரியம் அடைந்தவனாய், “அப்படியா? கோளாந்தகனுக்கு விவாகமா? யார் ஒரு பெண்ணை அப்படி அவனுக்குப் பலி கொடுக்கச் சித்தமா யிருக்கிறார்கள்?” என்று கேட்டான். “நந்திபுர நகரத்து இடங்காக்கப் பிறந்தார் தம் ஒரே மகள் திருபுவனியை அவனுக்கு விவாகம் செய்து கொடுக்கச் சம்மதித்திருக்கிறாராம்” என்றான் பராந்தகன் மிகவும் அடக்கமான குரலில். “அப்படியா? கலியாணத்தின் மூலம் தங்களுக்கு ஆதரவு தேடப் பார்க்கிறார்கள் போலிருக்கிறது. நெடு நாட்களாகக் காணாமல் போன தம் மகளை அவர் திரும்ப அடைந்து விட்டார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்த அருமை மகளை இப்படிப் பலி கொடுக்க அந்த மனிதர் துணிந்ததுதான் பரிதாபம். இதைத் தடுப்பவர்கள் இல்லையா...?” என்றான் ஆதித்தன். “இதெல்லாம் மாறுவேடத்தில் திரியும் கலங்கமாலரையனின் சூழ்ச்சி. இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனிக்கே கோளாந்தகனை விவாகம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று தெரிகிறது. புத்தபிக்ஷுணிக் கோலத்தில் தானிருக்கிறாளாம். அவளுக்குத் துறவறத்தில்தான் நாட்டம் அதிகமாக இருக்கிறதாம்...” என்றான் பராந்தகன். “துறவுக் கோலத்தில் நாட்டம் கொண்ட ஒரு பெண்ணுக்கு மணம் முடிப்பதென்றால் கடினமல்லவா? அதுவும் அவள் பிக்ஷுணிக் கோலத்திலேயே இருக்கிறாள் என்கிறாய்” என்றான் ஆதித்தன் சிரித்துக் கொண்டே. “பிக்ஷுணிக் கோலத்திலேயே கல்யாணம் செய்தாலும் செய்து விடுவார்கள், பாவிகள்!” என்று கூறினான் பராந்தகன் அவர்களிடம். “கிராதகர்கள் அப்படியும் செய்தாலும் செய்வார்கள். ஒருவேளை கோளாந்தகனும் பிக்ஷுணிக்கேற்ற பிக்ஷுவாக மாறினாலும் மாறி விடுவான். இப்பொழுதுதான் பௌத்த மதத் துறவியாகிவிடுவது வெகு எளிதாக இருக்கிறதே? ஏற்கனவே கலங்கமாலரையர் வேறு வழிகாட்டி இருக்கிறார்” என்றான் ஆதித்தன். “இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது. புத்தபிக்ஷுணிக் கோலத்தில் இருக்கும் இடங்காக்கப் பிறந்தாரின் புதல்வியை வேறு எங்கோ பார்த்த நினைவாக இருப்பதாக அருந்திகை சொல்லுகிறாள். உண்மையாக அவள் இடங்காக்கப் பிறந்தாரின் மகளோ இல்லையோ என்று சந்தேகப்படுகிறாள் அருந்திகை.” “இருக்கட்டும், இதைப்பற்றி நாம் சிறிது கவலை செலுத்த வேண்டியதுதான். எப்படியோ நந்திபுர நகருக்குச் சமீபமாக இருக்கும் பழையாறை நகருக்குள்ள ஆதரவைக் குலைக்கத்தான் இந்த ஏற்பாடுகள் நடக்கிறதென்று தெளிவாகிவிட்டது. இதைப் பற்றி அப்புறம் யோசிப்போம். புலிப்பள்ளி கொண்டார் எனக்காக அரண்மனையில் காத்திருக்கிறார். போய்ப் பார்க்கிறேன். நீ கோட்டைக் காவலர்களைக் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்லு. கோட்டையின் ரகசியங்களை அறிந்து கொள்ளப் புலிப்பள்ளியாரோடு வேறு வேவுக்காரர்களும் வந்திருக்கலாம்” என்று சொல்லிவிட்டு அரண்மனையை நோக்கி நடந்தான் ஆதித்தன். ஆதித்தனும் பராந்தகனும் அச்சோலையை விட்டு அகன்றதும் அருண்மொழியார் விஜயனைப் பார்த்து, “வாருங்கள், நாம் இப்படி இந்தச் சோலையில் உலாவலாம்” என்றார். அருந்திகையும் அனுபமாவும் சிறிது வெட்கத்தோடு ஒருபுறமாக நின்றனர். இதைக் கண்ட அருண்மொழியார் சிரித்துக் கொண்டே, “என்னைக் கண்டு வெட்கப்பட வேண்டாம். நான் கிழவன். நீங்கள் என்னுடைய பேத்திகள் போல” என்றார். எல்லோரும் கலகலவென்று நகைத்தனர். ***** அருந்திகையும் அனுபமாவும் ஒரு விதமாகச் சுதாரித்துக் கொண்டு அருண்மொழியாரின் வார்த்தைக் கிணங்கச் சிறிது நேரம் தோட்டத்தில் சுற்றி உல்லாசமாகக் கழிக்க நினைத்தனர். அவர்கள் சிறிது நேரம் சோலையைச் சுற்றிப் பார்த்துவிட்டு அங்குள்ள உல்லாச மண்டபம் ஒன்றில் சென்று அமர்ந்தனர். “உங்களைப் போன்ற வயதுடையவர்களுக்கு என்னைப் போன்ற கிழவனோடு சோலையைச் சுற்றிப் பார்ப்பது அவ்வளவாக மனத்துக்கு இன்பத்தை உண்டாக்காது” என்றார் அருண்மொழியார். அவருடைய வார்த்தையைக் கேட்டு விஜயன் சிரித்தான். அருந்திகையும் அனுபமாவும் சிறிது நாணத்தோடு தலை குனிந்து கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கோட்டையைப் பார்த்து வருவதற்காகச் சென்ற பராந்தகன் திரும்பி வந்தான். அவனைக் கண்டதும் அருண்மொழியார் “வாருங்கள். இவர்களோடு சிறிது நேரம் சோலையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கொடும்பாளூர் கோட்டையைப் போலச் சோலையும் பிரமிக்க வைக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. சோலை காதலை நினைவுக்குக் கொண்டு வருகிறது. கோட்டை வீரத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது. ஆம்! இந்தக் கொடும்பைமா நகரில் காதலும் வீரமும் கலந்து களிநடம் இடுவதைப் பார்க்கிறேன். நான் வயோதிகன். இருப்பினும் உங்களைப் போன்ற அன்யோன்யமுள்ள இளங் காதலர்களைப் பார்ப்பதை விட ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. ஆண்மையும் வீரமும் கொண்ட விஜயனுக்கு ஏற்ற அழகும் துடிப்பும் கொண்டவள் அனுபமா. அதே போல அழகும் புத்தியும் நிறைந்த அருந்திகைப் பிராட்டிக்கு ஏற்ற கணவர் நீங்கள் தான். இந்த இணைப்புக்கு ஈடான இணைப்பே காண்பது அறிது. என் வார்த்தை கண் திருஷ்டி தோஷமாகி விடுமோ என்று கூடப் பயப்படுகிறேன்...” என்றார். பராந்தகன் சிரித்துக் கொண்டே, “உங்கள் கண் திருஷ்டி தோஷமாகி விடாது. பெரியோராகிய உங்கள் ஆசீர்வாதம் எங்களை வாழ்விக்கும்” என்று கூறினான். “நான் ஒரு முக்கியமான விஷயத்தைக் கேள்விப்பட்டுத்தான் இங்கு வந்தேன். உளவாளிகள் மூலம் நந்திபுர நகரம் இடங்காக்கப் பிறந்தாரின் மகளைத் தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளியாரின் மகன் கோளாந்தகனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கப் போவதாக அறிந்தேன். இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கிறது. இதனால் பழையாறை நகருக்கு ஆபத்து ஏற்படலாம். சாம்ராஜ்ய ஆசை கொண்ட பல்லவ மன்னரும் அவருக்குத் தூண்டுதலாகவும் துணையாகவும் நிற்கும் தஞ்சை முத்தரையரும் செய்யும் சூழ்ச்சிகளுக்கு இடமளித்துக் கொண்டே போனால் இன்று ஒளி மழுங்கிய வைரம்போல் காணப்படும் சோழ வம்சம் நிர்மூலமாக்கப்பட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை. நெடுங் காலமாகச் சோழ வம்சத்தாரிடம் அபிமானம் வைத்துள்ள இடங்காக்கப் பிறந்தாரின் மனத்தைக் கலைத்துப் பகைமையை வளர்த்து விட்டால் பல காரியங்களை எளிதாக முடித்துக் கொள்ளலாம் என்று தான் அவர்கள் திட்டமிட்டிருக்க வேண்டும். முக்கியமாக எதிர்காலத்தில் பெரு வீரனாகத் திகழ்ந்து தன் குலப் பெருமையை உலகில் நிலைநாட்ட நினைக்கும் விஜயன் மீதுதான் அவர்களுக்குக் கண் என்பதை மறந்துவிடக் கூடாது. பாண்டிய மன்னர், ஒரு காலத்தில் தன் சாம்ராஜ்யத்தை விட உயர்ந்த நிலையில் இருந்த சோழ சாம்ராஜ்யத்தின் மீதும் அவ்வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் அளவற்ற அனுதாபம் கொண்டவராக இருக்கிறார். இதற்காக எவ்வித உதவியும் செய்யத் தயாராக இருக்கிறார்” என்று சொல்லிப் பராந்தகனின் முகத்தைப் பார்த்தார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு வந்த பராந்தகன் ஏளனமாகச் சிரித்துக் கொண்டான். “எல்லாவற்றையும் நாங்கள் தெரிந்து கொண்டு தான் இருக்கிறோம். ஒரு உண்மையை உங்களுக்கு விளக்க நினைக்கிறேன். இந்நாள் வரையில் எப்படி இருப்பினும் இந்தக் கொடும்பாளூரார்கள் எந்த சாம்ராஜ்யத்துக்கும் பூரண அடிமையாகித் தங்களுடைய அரசைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்று விரும்பியதில்லை. இந்தக் கொடும்பை நகரைச் சுற்றிலும் பெருங் கோட்டையை எழுப்பி வைத்திருக்கும் எங்கள் பிதா பூதி விக்கிரமகேசரியைப் பற்றித் தாங்கள் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்க முடியாது. இன்றுள்ள நிலையில் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன். இப்படிப்பட்ட அதிசயிக்கத்தக்க கோட்டையை அவர் அழகுக்காகக் கட்டி வைக்கவில்லை. அவர் மனத்தில் எழுந்த கனவுகள் எத்தனை எத்தனையோ? அவர் இந்தக் கோட்டையைக் கட்ட ஆரம்பித்ததிலிருந்து பல்லவ மன்னருக்கும் என் தகப்பனாருக்கும் இருந்த அந்தரங்க நட்பில் சிறிது களங்கம் ஏற்பட்டது. அன்றிலிருந்து பல்லவ மன்னர் எங்களிடம் அந்தரங்க சுத்தியோடு நடந்து கொள்வதில்லை. அதோடு எங்கள் தகப்பனார் ரத்தக் கலப்பின் காரணமாகச் சோழ வம்சத்தினருக்குப் பரிவு காட்டுகிறார் என்பதை எண்ணிப் பல்லவ மன்னர் கிலி அடைகிறார். அவருக்கு ஏற்பட்ட கிலி அவரைச் சூழ்ந்துள்ள வஞ்சகர்களின் உபதேசத்தினால் இன்னும் அதிகமாகிப் பலவித தவறான காரியங்களில் அவரை இழுத்து விட்டிருக்கிறது. அதிலும் தஞ்சை முத்தரையர் எங்களிடம் நட்பு பாராட்டுவது போலிருந்து எங்களையே ஒழித்துவிடச் சமயம் பார்க்கிறார். அதி விசித்திரமாகக் கட்டப்பட்டுள்ள இந்தக் கோட்டையின் சூக்ஷ்மங்களை அறிந்து கொள்ள மிகவும் பிரயாசைப் படுகிறார். இங்கே புலிப்பள்ளி கொண்டார் விஜயம் செய்திருப்பதும் அதற்காகவே தான் இருக்கும். முத்தரையரின் கையாட்களாக இருந்து வரும் கலங்கமாலரையனையும், புலிப்பள்ளி கொண்டாரையும் ஒழித்துக் கட்டிவிடுவது பெரிய காரியமில்லை. ஆனால் அது ஒரு சுத்த வீரனுக்குரிய செய்கையாகாது” என்றான் பராந்தகன் படபடப்போடு. அதைக் கேட்டதும் அருண்மொழியார், “அது உண்மை. ஆனால் நான் ஒரு பேரரசரிடம் அமைச்சராக இருக்கிறேன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். அரச தர்மங்கள் பலவற்றையும் கற்றுத் தெரிந்த பின் தான் ஒருவன் அமைச்சனாக முடியும் என்பதும் தங்களுக்குத் தெரியாததல்ல. சாம்ராஜ்ய ஆசையில் தர்மாதர்மங்களை மீறி எதிராளிகள் பல சூழ்ச்சிகள் செய்வதுமுண்டு. இத்தகைய சூழ்ச்சிகளுக்கு நாம் தர்ம நியாயங்களைப் பார்த்து இடமளித்துக் கொண்டே போனோமானால் இங்கு தர்மத்தைக் காட்டிக் காட்டியே தர்மத்தைக் கொன்றவர்களாகி விடுவோம். அரசர்களுக்கோ, அமைச்சர்களுக்கோ உரிய கொள்கை ஒன்றே ஒன்றுதான். தர்மத்தோடு போரிட வந்தவனிடம் தர்மத்தோடு போரிட்டுத் தர்மத்தைக் காப்பது அல்லது அதர்ம நோக்கத்தோடு காரியம் செய்கிறவர்களைத் தர்மத்தோடே முடியாவிட்டால் அதர்மத்தோடே அழித்துத் தர்மத்தை நிலைநாட்டுவதுதான். உங்களுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறவர்களை இப்படியே விட்டு வைப்பது பிசகு என்பதை உணர்ந்து தான் நான் இப்படிச் சொல்கிறேன்” என்று கூறினார். “நான் அதை உணர்ந்தேன். ஆனால் இன்றுள்ள நிலையில் நாம் அவர்களை அழிக்கச் சிரமமே எடுத்துக் கொள்ள வேண்டாத நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. வறுமையும் பிணியும், மதப் பூசலும், அரசாங்க ஊழலும் நிறைந்து அல்லல்படும் சோழ நாட்டில் மக்களே அதை உணர்ந்திருக்கின்றனர். இன்றும் சோழ வம்சத்தினரிடம் பக்தியும் விசுவாசமும் கொண்ட அனேக வீரர்களும், படித்த பெரியோர்களும் பல காரியங்களைச் செய்து வருகின்றனர். இன்று எதிரிகளின் இத்தனை சூழ்ச்சிகளுக்கிடையேயும் சிறு நகராகிய பழையாறையிலுள்ள சோழ அரசு தலைவனற்ற நிலையிலும் பாதுகாக்கப்படுகிறதென்றால் மக்களின் பேராதரவுதான் என்று தெரிந்து கொள்ளுங்கள். இன்று இளம் வயதினனாக இருக்கும் விஜயனும் அருந்திகையும் எவ்வித ஆபத்தும் தங்களுக்கு ஏற்படாமல் உயிர் வாழ்ந்து வருகிறார்களென்றால் பழையாறையைச் சுற்றிலும் கொடும்பாளூரைப் போல் கற்கோட்டை எழுப்பப் படாவிடினும் மக்கள் கற்கோட்டையாக நின்று காக்கின்றனர் என்று தானே அர்த்தம்?” என்றான் பராந்தகன். “அதையும் நான் உணர்ந்திருக்கிறேன். மக்கள் பலம் தான் மன்னர் பலம் என்பதை உணராதவனல்ல நான். இருப்பினும் சூறாவளி போல் அதர்மம் தலைவிரித்தாடித் தர்மத்தைச் சிதற அடித்திருப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். மக்களின் ஆதரவு இருக்கிறதென்று மன்னன் பேசாமல் இருந்துவிட முடியுமா? எதிரிகள் மன்னனைப் பகையாளியாக நினைக்கும் போது அவர்கள் மக்கள் நிலையைப் பற்றி நினைப்பதே இல்லை. எந்த இடத்தில் தன் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த எண்ணிய மன்னனும் அந்த இடத்தில் வாழும் மக்களைத்தன் எதிரியாகக் கொள்ள விரும்பியதே இல்லை. அவனும் அந்நாட்டு மக்களுக்கு ஆதரவளிப்பவன் போல் தான் நடந்து கொள்வான். அதனால் தான் சொல்கிறேன். மக்களின் கவலை மாத்திரம் போதாது, மன்னரும் கவலை செலுத்த வேண்டுமென்று!” என்றார் அருண்மொழியார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு வந்த பராந்தகனுக்குப் பக்கத்தில் நின்ற அருந்திகை அருண்மொழியாரைப் பார்த்து, “ஏதோ விளையாட்டாகப் பேசிப் பொழுதைக் கழிக்கப் போவதாகச் சொன்ன நீங்கள் ஏதோ அரசாங்க விஷயங்களை யெல்லாம் பேசத் தொடங்கி விட்டீர்களே...?” என்றாள் மெதுவான குரலில். பராந்தகன் சிரித்துக் கொண்டே, “ஒரு அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பவர்கள் மன நிம்மதியையும் ஓய்வையும் விரும்பி எங்கேனும் சென்றாலும் அங்கேயும் இத்தகைய தொல்லைகளெல்லாம் பிடித்து விடுவது சகஜம் தான். அதிலும் இந்த அமைச்சர் பெருமான் மதுரைமா நகரிலிருந்து இவ்விடம் விஜயம் செய்தது நம்மை யெல்லாம் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டு மென்பதற்காகத் தானே?” என்றான். இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தை ஒரு வாய்ப்பாகக் கருதிய அனுபமாவும் விஜயனும் அவ்விடத்திலிருந்து தோட்டத்திலுள்ள மலர்ச் செடிகளைப் பார்ப்பவர்கள் போல் அப்படியும் இப்படியுமாகப் பார்த்துக் கொண்டே சற்றுத் தூரத்துக்கப்பால் நின்று அளாவளாவிக் கொண்டிருந்தனர். அவர்கள் சற்றுத் தூரத்துக்கு அப்பால் சென்று அளவளாவுவதைக் கண்ட அருண்மொழியார் பராந்தகனுக்கு அவர்களைச் சுட்டிக் காட்டி, “பார்த்தீர்களா, நாம் இப்படி வேறு ஏதோ பேசிக் கொண்டிருப்பது அவர்களுக்கு எவ்வளவு அனுகூலமாய் இருக்கிறது என்று. நமக்குச் சிறிது தூரத்திலேயே அவர்கள் நின்றாலும் நம்மை யெல்லாம் விட்டு விலகி நெடுந்தூரத்துக்கப்பால் உள்ள உலகத்தில் சஞ்சரிப்பவர்கள் போல் இல்லையா? போகட்டும். இந்த விஜயனுக்கு அவனுடைய நலனைப் பற்றி நம் பேச்சில் கவலை இல்லாது போனது தான் ஆச்சரியமாயிருக்கிறது” என்றார். “விஜயன் வெறும் பேச்சில் எல்லாம் அதிகக் கவலை செலுத்துவதில்லை. இவ்விஷயங்களிலெல்லாம் அவன் வாயால் பேசுவதில்லை. அவன் கைவாள் தான் பேசும்” என்றாள் அருந்திகை. “போகட்டும். அதுவும் நல்லதுதான். நீ சொல்வதிலிருந்து அவன் வாழ்க்கையில் காதலும் கத்தியும்தான் மிகவும் முக்கியமானதாக இருக்கும் போலிருக்கிறது” என்றார் அருண்மொழியார். “நீங்கள் நினைப்பதும் தவறு. அவனுடைய வாழ்க்கையில் காதலைவிடக் கைவாள் தான் பிராதான்யமானது. அவன் அனுபமாவைக் காதலிப்பதற்கு முன் கை வாளைத்தான் காதலித்தான். அவன் அவளை விட்டுப் பிரிந்திருக்கும் நேரமும் உண்டு. ஆனால் கைவாளைப் பிரிந்து ஒரு கணமும் இருந்ததில்லை” என்றான் பராந்தகன். “சரிதான். அப்படித்தான் இருக்க வேண்டும். வீர நெஞ்சம் படைத்த ஒரு வாலிபனுக்கு வாய்க்கும் காதலியும் அவன் குணத்தை ஒத்தவளாக இருக்க வேண்டும். அனுபமா அவ்விதத்தில் சிறந்தவளாகவே இருப்பாள் என்று நம்புகிறேன்” என்றார். அந்தச் சமயத்தில் அரண்மனையிலிருந்து வந்த சேவகன் ஒருவன் பராந்தகனை வணங்கி அரசர் அவனை அழைப்பதாகச் சொன்னான். கொடும்பாளூர் அரண்மனையில் அந்தரங்க ஆலோசனை செய்யும் மண்டபத்தில் அரசன் ஆதித்தனும் தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளியாரும் அமர்ந்திருந்தனர். பராந்தகன் அங்கு வந்த போது ஆதித்தன் ஆழ்ந்த யோசனையிலிருந்தான். புலிப்பள்ளியார் அவனிடமிருந்து ஏதோ பதிலை எதிர்பார்ப்பவர் போல் அவன் முகத்தையே துடிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். பராந்தகன் அங்கு வந்ததைக் காலடி ஓசையிலிருந்து அறிந்து கொண்ட ஆதித்தன் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு, “தஞ்சை அமைச்சர் நமக்கு முத்தரையரிடமிருந்து ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறார். இது சம்பந்தமாக உன்னையும் கலந்தாலோசிக்க விரும்புகிறேன். நமது தங்கை அனுபமாவை அவருடைய குமரன் இளந்திரையனுக்கு விவாகம் செய்து கொடுக்கும்படி கேட்கிறார். பல்லவ மன்னரும் முத்தரையர் நம் வம்சத்தாரோடு சம்பந்தம் செய்து கொள்வதை மிகவும் விரும்புகிறாராம். நம் அபிப்பிராயத்தை அறியவே தஞ்சை மன்னர் அமைச்சர் அவர்களை அனுப்பியுள்ளார். உன் அபிப்பிராயத்தைச் சொல்வதில் தடை ஏதுமில்லையே...?” என்றான். |