உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
மாலவல்லியின் தியாகம் (இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கொண்டு வந்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். - கோ.சந்திரசேகரன்) இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 22 - பூம்புகாரில் பூதுகன் பூதுகனைத் திடீரென்று தன் இல்லத்தில் கண்ட வைகைமாலை திகைத்துப் போய் விட்டாள். பூதுகனைப் பற்றி அவள் கேள்விப்பட்ட செய்திகளெல்லாம் அவளுடைய நினைவுக்கு வந்து அவளைக் குழப்பின. அது இரவு வேளையாதலால் தெரு விளக்குகளின் மங்கலான வெளிச்சத்தில் பூதுகனை யாரும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் இருந்தது. பூதுகன் சைகையினாலேயே வாசல் கதவைச் சாத்தித் தாளிடும்படி சொல்லிவிட்டு உள்ளே புகுந்தான். வைகைமாலையும் வாசற் கதவைத் தாளிட்டு விட்டு அவனைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றாள். பூதுகனைக் கண்ட சுதமதியும் அயர்ந்து போய்விட்டாள். “சுதமதி, வைகைமாலை! என்ன ஒரேயடியாக இருவரும் திகைத்துப் போய் விட்டீர்கள்? பல்லவ ராஜ்யத்தில் சிறைப்பட்டிருந்தவன் எப்படி இங்கு வந்து முளைத்தான் என்றா? அல்லது மாண்டவன் மீண்ட விநோதத்தை நினைத்தா?” என்று கேட்டு விட்டுப் பூதுகன் அந்த இல்லத்துக் கூடத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து சிரித்தான். “நீங்கள் ஓர் அதிசய மனிதர்...!” என்றாள் சுதமதி. பூதுகன் சிரித்துக் கொண்டே, “நீங்கள் இருவரும் என்னைக் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லையல்லவா?” என்றான். “அது உண்மைதான். இன்று மட்டும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அல்லும் பகலும் அனவரதமும் உங்களைப் பற்றி நினைத்தோம், பேசினோம். நீங்கள் காஞ்சீபுரத்தில் சிறைப்பட்டு விட்டதாகவும், பிறகு சிறையில் கோரமாகத் தாக்கப்பட்டு...” என்று வைகைமாலை சற்றுத் தயங்கினாள். “ஏன், வைகைமாலை! மேலே சொல்லேன். வெந்நீர் என்று சொன்னால் வாய் வெந்து போய் விடுமா? சிறையில் கோரமாகத் தாக்கப்பட்டு நான் இறந்து விட்டதாகவும் கேள்விப்பட்டிருப்பீர்கள். நான் சொல்வது சரிதானே? இருக்கட்டும். அந்தப் பொய் வதந்திகளை யெல்லாம் நிஜம் என்று நம்பி நீ விபரீதமாக எதுவும் செய்து கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்று தான் நான் மிகவும் வேதனைப் பட்டேன்!” என்றான் பூதுகன். “பாவம், எப்பொழுது சாப்பிட்டதோ என்னவோ! மன்னித்துக் கொள்ளுங்கள். ஒரு நொடிப் பொழுதில் சமையலுக்கு ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன்...!” என்று கூறிவிட்டு, சுதமதி எழுந்து சமையற்கட்டுக்குப் போனாள். வைகைமாலை ஆச்சரியத்தினால் அகல விரிந்த நயனங்களுடன், “...அப்படியானால் நீங்கள் காஞ்சீபுரத்தில் சிறையில் இருந்ததெல்லாம் பொய்யா?” என்று கேட்டாள். “ஆமாம்! காஞ்சிச் சிறையில் நான் இருந்ததும் பொய், அங்கே இறந்ததும் பொய்...! பகைவர்கள் தங்களுக்குச் சாதகமாகத் திரித்து விட்ட வதந்தி! நான் எங்கே தங்கியிருந்த இடம் ஒரு பெண் மயிலின் இல்லம். அவள் தன் இல்லத்தை மாத்திரம் அல்லாமல் தன் உள்ளத்தையும் எனக்கு அளிக்கச் சித்தமாக இருந்தாள்...!” பூதுகன் இவ்வாறு கூறிவிட்டு வைகை மாலையின் மதி வதனத்தைக் கூர்ந்து நோக்கினான். இதுவரையில் களங்கமற்று விளங்கிய அம் மதிவதனத்தில் சிறிது களங்கம் ஏற்பட்டது. சோபை சிறிது குன்றியது. சிறிது கம்மிய குரலில், “...ஏன், அந்தப் பெண் மயிலின் இல்லத்தையும் உள்ளத்தையும் விட்டு விட்டு இங்கே வருவானேன்? ஒரு பேதைப் பெண்ணின் மனத்தைப் புண்படுத்தவா?” என்று கேட்டாள் வைகைமாலை. அவளுடைய கண்களில் நீர் மல்கியது. அப்பொழுது விம்மித் தணிந்த அவளது இதயம் பூதுகனின் உணர்வை மயக்கியிருக்க வேண்டும். அவன் வைகைமாலையின் எழில் மிக்க வடிவத்தைத் தன் விழிகளினாலேயே விழுங்கி விடுவது போல் பார்த்தான். பிறகு அவளுடைய தளிர்க்கரங்களைப் பற்றித் தன்னருகே இழுத்துக் கொண்டான். “வைகைமாலை! உன் உள்ளத்தில் இரண்டு பேருக்கு இடம் ஏது? அப்பப்பா! இந்தப் பெண்களுக்குத்தான் எத்தனை சந்தேகம்! பாவம், அவளும் மிகவும் நல்லவள். அவள் இல்லா விட்டால் நான் தப்பி வந்திருக்கவே முடியாது” என்று கூறினான் பூதுகன். “நீங்கள் சிறையில் இருந்தீர்களா?” என்று கேட்டாள் வைகைமாலை. “நான் சிறையில் இருக்கவில்லை. காஞ்சீபுரத்து இசைக் கணிகை தேனார்மொழியாளின் இல்லத்தில் சௌக்கியமாக இருந்தேன்...” என்று கூறிப் பூதுகன், தான் காஞ்சீபுரத்துக்கு மாலவல்லியைத் தேடிக் கொண்டு சென்றது, அங்கே புத்த பிக்ஷுணி காலநங்கையின் ஆசிரமத்துக்குச் சென்று மால்வல்லியைப் பற்றி விசாரித்தது, காஞ்சீபுரத்து வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த போது மூர்க்கத்தனமாகக் கலங்கமாலரையரால் தாக்கப்பட்டது, பிறகு சிம்மவர்மனால் காப்பாற்றப்பட்டுத் தேனார்மொழியாள் இல்லத்தில் மறைந்திருந்தது, கடைசியில் குடந்தைச் சோதிடர் சந்தகரின் உதவியால் வெளியேறியது ஆகியவைகளை விவரமாகச் சொன்னான். “சூழ்ச்சியிலும் பிறரை மயக்குவதிலும் அந்தக் கடல் வண்ணப் பெருமான் தான் உங்களுக்கு இணையாக முடியும். உங்கள் நினைப்பிலேயே திளைத்து, உங்கள் அன்பையும் பெற்றுவிட்ட எனக்கே உங்களைப் பார்க்கும் போதெல்லாம் சந்திரனைக் கண்ட சமுத்திரத்தைப் போல் உள்ளம் இனம் தெரியாத இன்பத்தால் பொங்குகிறதே, புதிதாக உங்களைப் பார்க்கும் பெண்களின் கதியைப் பற்றி...” என்று வைகைமாலை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பூதுகன் இடைமறித்தான். “...நீ துளிக் கூடக் கவலைப்பட வேண்டாம். அவன் தான் உன் அன்புக்குச் சதா ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறானே!” என்று கூறிச் சிரித்தான். “இந்தக் குறும்புப் பேச்சுக்குக் குறைவில்லை. நீங்கள் சிறையில் கோரமாகத் தாக்கப்பட்டு உயிர் துறந்து விட்டதாக ஒரு பெரிய வதந்தி ஊரெல்லாம் பரவியதும் என் மனம் என்னவெல்லாம் நினைத்தது, தெரியுமா? சதா கண்ணீரும் கம்பலையுமாகத் துடித்தேன்...” “வைகைமாலை! அந்தச் செய்தியை நீயுமா நம்பி விட்டாய்? அது நம் பகைவர்கள் சாமர்த்தியமாகத் திரித்து விட்ட செய்தி! சோழ அரசுக்கு ஆதரவாயிருப்பவர்களை அழிக்க அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கும் சதி முயற்சியில் ஒரு சிறு பகுதி. எதற்கும் கலங்காத என்னையே அந்தச் செய்தி ஒரு கலக்குக் கலக்கி விட்டது. முக்கியமாக உன்னைப் பற்றிய நினைவில் தான் நான் கலங்கிப் போய்விட்டேன்...” “அது சரி! சந்தகர் இப்பொழுது காஞ்சீபுரத்துச் சிறைக்கோட்டத்திலா இருக்கிறார்?” “இல்லை, இல்லை! அதுவும் பகைவர்கள் திரித்து விட்ட கதைதான். அவர் காஞ்சீபுரத்து அரசாங்க விருந்தினர் விடுதியில் சௌக்கியமா யிருக்கிறார். சிம்மவர்மன் தன் சாம்ராஜ்ய வெறி தணிய அவரைத் தான் நம்பியிருக்கிறான்!” என்று கூறிய பூதுகன், மிகவும் தாழ்ந்த குரலில், “வைகைமாலை! சிம்மவர்மனின் ஆட்களும், பல்லவ சேனாபதியும் என்னைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியும் அல்லவா? நான் எவ்வளவு பாதுகாப்பான - பெரிய மாளிகையில் இருந்தாலும் ஜாக்கிரதையாயிருப்பது நல்லது! இன்னும் நான் பல முக்கியமான காரியங்கள் செய்ய வேண்டியிருக்கின்றன. அவைகளை யெல்லாம் வெற்றிகரமாக முடித்த பிறகு என்னுடைய உயிரைப் பற்றிய அக்கறை எனக்கு இல்லை...” என்றான். “...உண்மைதான். ஆனால் உங்கள் உயிரைப் பற்றிய அக்கறை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். எனக்கு அதில் சிரத்தை காட்டப் பூரண உரிமை உண்டு. உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள் அதை மறுக்கக் கூடாது. அதோ அந்தச் சாளரத்தின் வழியே தெரியும் பாதி மதியைப் பாருங்கள். அதன் மீது ஆணையாகக் கேட்கிறேன், நீங்கள் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தக் காரியத்திலும் இறங்குவதில்லை என்று சொல்லுங்கள்...!” என்றாள் வைகைமாலை. பூதுகன் அலட்சியமாகச் சிரித்துக் கொண்டே, “வைகைமாலை! என்னால் இயலாத ஒன்றைக் கேட்கிறாயே! என்னை மன்னித்து விடு...!” என்றான். “என்ன, மன்னிப்பதா? உங்கள் அன்புக்கு உகந்த என் வேண்டுகோளைப் புறக்கணிக்கிறீர்களே?” என்று கூறிய வைகைமாலையின் குரல் தழுதழுத்தது. கண்களில் மளமளவென்று நீர் பெருகி மறைத்தது. “ஆகா! இந்தப் பெண்களுக்குத்தான் எத்தகைய மென்மையான இயல்பு! வைகைமாலை! உன் வேல் விழிகளின் வீச்சு ஒரு ஆபத்து இல்லையா? அதிலிருந்து நான் எப்படித் தப்ப முடியும்? அதனால் தான் உன் வேண்டுகோளைப் பூர்த்தி செய்யத் தயங்குகிறேன்!” என்று பூதுகன் கூறியதும் வைகைமாலையின் முகம் மலர்ந்தது. “நீங்கள் மிகவும் பொல்லாதவர்...” என்று கூறி வைகைமாலை நாணத்தினால் தலையைக் குனிந்து கொண்டாள். அப்பொழுது சுதமதி ஆகார வகைகளுடன் அங்கே வந்தாள். “சுதமதி! என் பசியைத் தணிப்பதற்கு இத்தனை உணவு வகைகள் வேண்டும் என்று நீ கண்டு பிடித்ததுமல்லாமல், ஆக்கியும் கொண்டு வந்துவிட்டாயே! வைகைமாலை பேச்சோடு சரி” என்று குறும்பாகக் கூறிவிட்டு ஊஞ்சல் பலகையிலிருந்து பூதுகன் உணவருந்த எழுந்தான். “சுதமதி அக்காள் இருக்கும் போது அதை நான் கவனிக்க வேண்டிய அவசியம் நேருவதில்லை. அதுவும் உங்களுக்குப் பிரியமான உணவு வகைகளைத் தானே சித்தம் செய்து உங்களுக்குப் பரிமாறுவதில் அவளுக்குத் தனி ஆசை!” என்றாள் வைகைமாலை, குறும்புத்தனமாகப் பார்த்துக் கொண்டே. “இல்லை, இல்லை! நீங்கள் இருவரும் பேசுவதைத் தடுக்க வேண்டாம் என்று தான் சமையலறைக்குப் போய் விட்டேன்!” என்றாள் சுதமதி. ***** மூவரும் சாப்பிட்டு முடிந்ததும், மேல் மாடத்துக்குச் சென்றனர். சந்திரன் இப்பொழுது நடுவானத்துக்கு வந்திருந்தான். குளிர்ந்த காற்று சுகமாக வீசியது. பால் போன்ற வெண்ணிலவில் காவிரிப்பூம்பட்டினமே மோகன வெள்ளத்தில் முழுகியிருந்தது. “சுதமதி! நீங்கள் இருவரும் கொடும்பாளூருக்குப் போய் வந்த செய்தியை யெல்லாம் எனக்குச் சொல்ல வேண்டாமா?” என்று கேட்டான் பூதுகன். “வைகைமாலை ஒன்றும் சொல்லவில்லையா? அவள் சொல்லியிருப்பாளென்று நினைத்து நான் சும்மா இருந்து விட்டேன்!” என்றாள் சுதமதி. “இல்லை, அக்கா! அவர் காஞ்சீபுரத்தில் கொடியவர்களின் கையில் சிக்கி, பிறகு தப்பி வந்திருக்கிறார். அந்தச் சுவாரஸ்யமான விவரங்களைக் கேட்பதிலேயே வெகு நேரம் கழிந்து விட்டது. இப்பொழுது சொல்லேன்!” என்றாள் வைகைமாலை. “கொடும்பாளூரில் தான் சுதமதி மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டாளே! கொடும்பாளூருக்கு அரசாங்க விருந்தாளியாக வந்த தஞ்சை அமைச்சர் புலிப்பள்ளி கொண்டார் பேசியதெல்லாம் அவளுக்கு எப்படித் தெரியும்?” என்றான் பூதுகன். “ஹா! இது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?” என்று கேட்டுச் சுதமதி வியப்பில் ஆழ்ந்தாள். “இது கூட நான் தெரிந்து கொள்ளாவிட்டால், நான் சோழ ராஜ்யம் நிறுவினாற் போலத்தான்!” என்று கூறி மெல்ல நகைத்தான் பூதுகன். “நான் கொடும்பாளூரில் மயக்கமடைந்தது தெரிந்தது என்றால் மற்றதெல்லாம் தெரியாதா? எங்களைத் தான் கேட்க வேண்டுமோ?” என்றாள் சுதமதி. “அப்படிக் கேள், அக்கா...!” என்றாள் வைகைமாலை குறும்பாகச் சிரித்துக் கொண்டே. “சுதமதி! ஒற்றர்களின் உதவியைக் கொண்டு எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுவிட முடியாது!” என்றான் பூதுகன், பிறகு, “வைகைமாலை! புலிப்பள்ளி கொண்டார் சொன்னதெல்லாவற்றையும் நீ கேட்டிருப்பாயே. போகட்டும். நான் கொடும்பாளூரில் நடந்தவற்றையெல்லாம் இப்பொழுது சொல்லுகிறேன். நீயும் சுதமதியும் சரிதானா என்று அபிப்பிராயம் சொல்லுங்கள் - என்ன? முதலில் புலிப்பள்ளி கொண்டார் இழிவாகப் பேசினார். பிறகு, நந்திபுர நகர்க் காவலர் இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனியைத் தம் மகன் கோளாந்தகனுக்கு மணம் முடிக்கப் போகும் விஷயத்தைப் பற்றிப் பேசினார். திருபுவனிக்குத் திருமணத்தில் இச்சையில்லை. அவள் சீவர ஆடையணிந்து பௌத்த மதத்தில் சேரவே விருப்பம் கொண்டுள்ளாள். இந்த விவரங்களைப் பராந்தகன் சொல்லக் கேட்ட புலிப்பள்ளி கொண்டார் திகைத்துப் போனார். அந்தப் பெண் உண்மையில் இடங்காக்கப் பிறந்தாரின் மகள் திருபுவனியில்லை...” என்று கூறிப் பூதுகன் சிறிது பேச்சை நிறுத்தினான். “கொடும்பாளூரில் நடந்தவைகளெல்லாம் உங்களுக்கு அப்படியே தெரிந்திருக்கிறதே...!” என்று கூறி வைகைமாலை திகைத்தாள். “நன்றாக எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டு தான் நம்மை வேவு பார்க்கிறார்!” என்றாள் சுதமதி. “சுதமதி! யாரை யார் வேவு பார்ப்பது? நான் அவ்வப்போது ஒற்றர்கள் மூலம் கேட்டறிந்த செய்திகளெல்லாம் முற்றிலும் சரியானவைதானா என்று ஒரு முறை கவனித்துப் பார்த்தேன்!” என்றான் பூதுகன். அப்பொழுது ஊர் அடங்கி விட்டது. அந்த இரவின் அமைதியில் சந்திரன் வானவீதியில் தனியாட்சி செலுத்திக் கொண்டிருந்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திரிந்து கொண்டிருந்த வெண்முகிற் கூட்டங்களுக்கிடையே வைரத்துகள் போல் விண்மீன்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. சிறிது நேரம் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பூதுகன், “வைகைமாலை! நேரமாகி விட்டது, கீழே போகலாமா?” என்று கேட்டுக் கொண்டே எழுந்தான். சுதமதியும் வைகைமாலையும் அவனைப் பின் தொடர்ந்து சென்றனர். ***** பூதுகன் காவிரிப்பூம் பட்டினத்துக்கு வந்து சில நாட்களாகி விட்டன. தன் அருமைக் காதலி வைகைமாலையின் இனிய உரையாடலிலே அவனுக்கு நாட்கள் கணப் பொழுதாகக் கழிந்து விட்டன. அவளது இன்பப் பேச்சிலே தன்னை மறந்தான். ஆனாலும் அவன் உள்ளத்துக்குள் ஒன்றே ஒன்று மட்டும் தலை தூக்கிக் கொண்டு தான் இருந்தது. அது தன் தாய்த் திருநாட்டின் விடுதலையைப் பற்றித்தான்! அன்று காலையில் எழுந்ததும் பூதுகன் மிகவும் சுறுசுறுப்பாக ஏதோ ஓலையில் எழுதிக் கொண்டிருந்தான். வைகைமாலையும் சுதமதியும் ஒரு அதிசயச் செய்தியோடு பூதுகனைக் காண ஓடி வந்தனர்! ஆனால் அவன் ஓலையில் மும்முரமாக ஏதோ எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டதும் அவர்கள் சிறிது தயங்கி நின்றனர். அவன் எழுதி முடித்ததும் வைகைமாலை, சுதமதி இருவரும் மிகவும் பரபரப்புடன் அவனிடம் வந்தனர். “இதைக் கேட்டீர்களா? அக்காள் தேவி ஆலயத்துக்குச் சென்றிருந்தாள். அங்கே ஜனங்கள் கும்பலாகக் கூடிப் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களாம். கலங்கமாலரையரும் சிம்மவர்மனும் கொடும்பாளூரில் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டு விட்டனராம். விருந்தினராக வந்தவர்களைக் கொடும்பாளூரில் ஆதித்தனும் பராந்தகனும் மிகவும் அன்போடு வரவேற்றுக் கோட்டையைச் சுற்றி அழைத்துச் சென்று மர்மங்களை யெல்லாம் காட்டினார்களாம். கோட்டைக்குள் ஓரிடத்தில் காணப்பட்ட ஒரு குமிழியைக் கலங்கமாலரையரும் சிம்மவர்மனும் விஷயம் தெரியாமல் திருகி விடவே, பாதாளச் சிறையில் அகப்பட்டுக் கொண்டு விட்டார்களாம். ஊர் முழுவதும் இதே பேச்சாயிருக்கிறது!” என்றாள் வைகைமாலை. “ஹஹ்ஹஹ்ஹா! நம் திட்டங்கள் பிரமாதமாக நிறைவேறி விட்டன. சதிகாரக் கலங்கமாலரையனும் ஆதிக்க வெறி கொண்ட சிம்மவர்மனும் தாங்களே தங்களுக்கு ஏற்ற தண்டனையை விதித்துக் கொண்டு விட்டனர்! பல விதத்திலும் நமக்குத் தொல்லை கொடுத்து வந்த கலங்கமாலரையன் ஒழிந்தது நம் வருங்கால வெற்றிக்கு ஒரு நல்ல சமிக்ஞை. சுதமதி! எனக்கு உடனே ஒரு நம்பிக்கையுள்ள குதிரை வீரன் வேண்டும். அவன் இங்கிருந்து வாயு வேகத்தில் பறந்து காஞ்சீபுரம் செல்ல வேண்டும். அங்கே பல்லவ மன்னன் நந்திவர்மனைக் கண்டு அவனிடம் நான் கொடுக்கும் இந்த ஓலையைச் சேர்த்து விடவேண்டும்!” என்று ஆவலுடன் கூறினான் பூதுகன். “ஆகா! இப்போதே ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறிவிட்டுப் போனாள். உடனே பூதுகன் ஒரு ஓலை நறுக்கை எடுத்து அதில் விறுவிறுவென்று ஏதோ எழுதி அதை மடக்கி வைத்தான். சுதமதி ஒரு திடகாத்திரமுள்ள மனிதனை அழைத்து வந்தாள். பூதுகன் அவனிடம் ஓலையைக் கொடுத்து விட்டுச் சிறிது நேரம் மெதுவான குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்து விட்டு அனுப்பினான். பூதுகன் முகத்தில் இப்பொழுது ஒரு அசாதாரண அமைதி காணப்பட்டது. |