உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
பால காண்டம் பாயிரம் கடவுள் வாழ்த்து உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் - அவர் தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1 சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள் முற் குணத்தவரே முதலோர்; அவர் நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2 ஆதி, அந்தம், அரி என, யாவையும் ஓதினார், அலகு இல்லன, உள்ளன, வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன் பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 3 அவையடக்கம் ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று, ஒரு பூசை, முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன்-மற்று, இக் காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ! 4 நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் - எனை!- வைத வைவின் மராமரம் ஏழ் துளை எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே. 5 வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும், இது இயம்புவது யாது எனின்,- பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல் தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே. 6 துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ் நறை அடுத்த அசுண நல் மாச் செவிப் பறை அடுத்தது போலும்-என் பாஅரோ. 7 முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்:- 'பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும், பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?' 8 அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள் தறைவில் கீறிடின், தச்சரும் காய்வரோ? இறையும் ஞானம் இலாத என் புன் கவி, முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 9 நூல் வழி தேவபாடையின் இக் கதை செய்தவர் மூவர் ஆனவர் தம்முளும், முந்திய நாவினான் உரையின்படி, நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்புஅரோ. 10 இடம் நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின் இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த் தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே. 11 1. ஆற்றுப் படலம் மழை பொழிதல் ஆசலம் புரி ஐம் பொறி வாளியும், தாசு அலம்பு முலையவர் கண் எனும் பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக் கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்: 1 நீறு அணிந்த கடவுள் நிறத்த வான் ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில், சேறு அணிந்த முலைத் திருமங்கை தன் வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே. 2 பம்பி மேகம் பரந்தது, 'பானுவால் நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்; அம்பின் ஆற்றுதும்' என்று, அகன் குன்றின்மேல், இம்பர் வாரி எழுந்தது போன்றதே. 3 புள்ளி மால் வரை பொன் என நோக்கி, வான், வெள்ளி வீழ் இடை வீழ்த்தெனத் தாரைகள், உள்ளி உள்ள எலாம் உவந்து ஈயும் அவ் வள்ளியோரின், வழங்கின - மேகமே. 4 வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுதல் மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனு நெறி போன தண் குடை வேந்தன் புகழ் என, ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத் தானம் என்ன, தழைத்தது-நீத்தமே. 5 தலையும் ஆகமும் தாளும் தழீஇ, அதன் நிலை நிலாது, இறை நின்றது போலவே, மலையின் உள்ள எலாம் கொண்டு மண்டலால், விலையின் மாதரை ஒத்தது-அவ் வெள்ளமே. 6 மணியும், பொன்னும், மயில் தழைப் பீலியும், அணியும் ஆனை வெண்கோடும், அகிலும், தண் இணை இல் ஆரமும், இன்ன கொண்டு ஏகலான், வணிக மாக்களை ஒத்தது-அவ் வாரியே. 7 பூ நிரைத்தும், மென் தாது பொருந்தியும், தேன் அளாவியும், செம் பொன் விராவியும், ஆனை மா மத ஆற்றொடு அளாவியும், வான வில்லை நிகர்த்தது-அவ் வாரியே. 8 மலை எடுத்து, மரங்கள் பறித்து, மாடு இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான், அலை கடல்-தலை அன்று அணை வேண்டிய நிலையுடைக் கவி நீத்தம்-அந் நீத்தமே. 9 ஈக்கள் வண்டொடு மொய்ப்ப, வரம்பு இகந்து ஊக்கமே மிகுந்து, உள் தெளிவு இன்றியே, தேக்கு எறிந்து வருதலின்,-தீம் புனல்- வாக்கு தேன் நுகர் மாக்களை மானுமே. 10 பணை முகக் களி யானை பல் மாக்களோடு அணி வகுத்தென ஈர்த்து, இரைத்து ஆர்த்தலின், மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலால், புணரிமேல் பொரப் போவதும் போன்றதே. 11 சரயு நதியின் சிறப்பும், நால் வகை நிலத்திலும் அது ஓடியச்
சிறப்பும் இரவிதன் குலத்து எண் இல் பல் வேந்தர்தம் பரவு நல் ஒழுக்கின் படி பூண்டது, சரயு என்பது-தாய் முலை அன்னது, இவ் உரவு நீர் நிலத்து ஓங்கும் உயிர்க்கு எலாம். 12 கொடிச்சியர் இடித்த சுண்ணம், குங்குமம், கோட்டம், ஏலம், நடுக்குறு சந்தம், சிந்தூரத்தொடு நரந்தம், நாகம், கடுக்கை, ஆர், வேங்கை, கோங்கு, பச்சிலை, கண்டில் வெண்ணெய், அடுக்கலின் அளிந்த செந் தேன், அகிலொடு நாறும் அன்றே. 13 எயினர் வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி, வயின் வயின், எயிற்றி மாதர், வயிறு அலைத்து ஓட, ஓடி, அயில் முகக் கணையும் வில்லும் வாரிக் கொண்டு, அலைக்கும் நீரால், செயிர் தரும் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே. 14 செறி நறுந் தயிரும், பாலும், வெண்ணெயும், சேந்த நெய்யும், உறியொடு வாரி உண்டு, குருந்தொடு மருதம் உந்தி, மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால், பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே. 15 கதவினை முட்டி, மள்ளர் கை எடுத்து ஆர்ப்ப ஓடி, நுதல் அணி ஓடை பொங்க, நுகர் வரி வண்டு கிண்ட, ததை மணி சிந்த உந்தி, தறி இறத் தடக் கை சாய்த்து, மத மழை யானை என்ன, மருதம் சென்று அடைந்தது அன்றே. 16 முல்லையைக் குறிஞ்சி ஆக்கி, மருதத்தை முல்லை ஆக்கி, புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அரு மருதம் ஆக்கி, எல்லை இல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால், செல்லுறு கதியில் செல்லும் வினை என, சென்றது அன்றே. 17 காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப் பறை கறங்க, கைபோய்ச் சேர்த்த நீர்த் திவலை, பொன்னும் முத்தமும் திரையின் வீசி, நீத்தம் ஆன்று அலையது ஆகி நிமிர்ந்து, பார் கிழிய நீண்டு, கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்தது அன்றே. 18 கல்லிடைப் பிறந்து, போந்து, கடலிடைக் கலந்த நீத்தம், 'எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது' என்னத் தொல்லையில் ஒன்றே ஆகி, துறைதொறும், பரந்த சூழ்ச்சிப் பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும்போல், பரந்தது அன்றே. 19 நீர் பாய்ந்து யாவையும் எழிலுடன் விளங்குதல் தாது, உகு சோலைதோறும், சண்பகக் காடுதோறும், போது அவிழ் பொய்கைதோறும், புதுமணல்-தடங்கள்தோறும், மாதவி வேலிப் பூக வனம் தொறும், வயல்கள் தோறும், ஓதிய உடம்புதோறும் உயிர் என, உலாயது அன்றே. 20 மிகைப் பாடல்கள் காப்பு ஒன்று ஆய், இரண்டு சுடர் ஆய், ஒரு மூன்றும் ஆகி, பொன்றாத வேதம் ஒரு நான்கொடு, ஐம்பூதம் ஆகி, அன்று ஆகி, அண்டத்து அகத்து ஆகி, புறத்தும் ஆகி, நின்றான் ஒருவன்; அவன் நீள் கழல் நெஞ்சில் வைப்பாம். 1 நீலம் ஆம் கடல் நேமி அம் தடக்கை மாலை மால் கெட, வணங்குதும் மகிழ்ந்தே. 2 காயும் வெண்பிறை நிகர் கடு ஒடுங்கு எயிற்று ஆயிரம் பணாமுடி அனந்தன் மீமிசை, மேய நான்மறை தொழ, விழித்து உறங்கிய மாயன் மா மலர் அடி வணங்கி ஏத்துவாம். 3 மாதுளங் கனியை, சோதி வயங்கு இரு நிதியை, வாசத் தாது உகுநறு மென் செய்ய தாமரைத் துணை மென் போதை, மோது பாற்கடலின் முன் நாள், முளைத்த நால் கரத்தில் ஏந்தும் போது தாயாகத் தோன்றும் பொன் அடி போற்றிசெய்வாம். 4 பராவ அரு மறை பயில் பரமன், பங்கயக் கராதலம் நிறைபயில் கருணைக் கண்ணினான், அரா-அணைத் துயில் துறந்து அயோத்தி மேவிய இராகவன், மலர்அடி இறைஞ்சி ஏத்துவாம். 5 கலங்கா மதியும், கதிரோன் புரவிப் பொலன் கா மணித் தேரும், போகா இலங்கா புரத்தானை, வானோர் புரத்து ஏறவிட்ட சரத்தானை, நெஞ்சே! தரி. 6 'நாராயணாய நம!' என்னும் நல் நெஞ்சர் பார் ஆளும் பாதம் பணிந்து, ஏத்துமாறு அறியேன்; கார் ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு ஆராதனை என் அறியாமை ஒன்றுமே. 7 பராவரும் இராமன், மாதோடு இளவல் பின் படரக் கான்போய், விராதனை, கரனை, மானை, கவந்தனை, வென்றிகொண்டு, மராமரம், வாலி மார்பு, துளைத்து, அணை வகுத்து, பின்னர், இராவணன் குலமும் பொன்ற எய்து, உடன் அயோத்தி வந்தான். 8 தருகை நீண்ட தயரதன்தான் தரும் இரு கை வேழத்து இராகவன் தன் கதை திருகை வேலைத் தரைமிசைச் செப்பிட, குருகை நாதன் குரை கழல் காப்பதே. 9 அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி, அஞ்சிலே ஒன்று ஆறு ஆக, ஆர் உயிர் காக்க ஏகி, அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு, அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான். 10 எவ் இடத்தும், இராமன் சரிதை ஆம் அவ் இடத்திலும், அஞ்சலி அத்தனாய், பவ்வ மிக்க புகழ்த் திருப் பாற்கடல் தெய்வ தாசனைச் சிந்தை செய்வாம் அரோ. 11 பொத்தகம், படிகமாலை, குண்டிகை, பொருள் சேர் ஞான வித்தகம் தரித்த செங் கை விமலையை, அமலைதன்னை, மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலைத் தவள மேனி மைத் தகு கருங் கண் செவ் வாய் அணங்கினை, வணங்கல் செய்வாம். 12 தழை செவி, சிறு கண், தாழ் கைத் தந்த சிந்துரமும், தாரை மழை மதத் தறு கண் சித்ர வாரண முகத்து வாழ்வை, இழை இடைக் கலசக் கொங்கை இமகிரி மடந்தை ஈன்ற குழவியைத் தொழுவன், அன்பால்-'குறைவு அற நிறைக' என்றே. 13 எக் கணக்கும் இறந்த பெருமையன், பொக்கணத்தன், புலி அதள் ஆடையன், முக்கண் அத்தன், வரம் பெற்ற மூப்பனை, அக் கணத்தின் அவன் அடி தாழ்ந்தனம். 14 தனியன் நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற, ஆரணக் கவிதை செய்தான், அறிந்த வான்மீகி என்பான்; சீர் அணி சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன், கார் அணி கொடையான், கம்பன், தமிழினால் கவிதை செய்தான். 1 அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த தம்பிரான் என்ன, தானும் தமிழிலே தாலை நாட்டி, கம்ப நாடு உடைய வள்ளல், கவிச் சக்ரவர்த்தி, பார்மேல் நம்பு பாமாலையாலே நரர்க்கும் இன் அமுதம் ஈந்தான். 2 வாழ்வு ஆர்தரு வெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப் பெற, தாழ்வார் உயர, புலவோர் அக இருள் தான் அகல, போழ் வார் கதிரின் உதித்த தெய்வப் புலமைக் கம்ப நாட்டு ஆழ்வார் பதத்தைச் சிந்திப்பவர்க்கு யாதும் அரியது அன்றே. 3 அம்பு அரா அணி சடை அரன் அயன் முதல் உம்பரால், முனிவரால், யோகரால், உயர் இம்பரால், பிணிக்க அரும் இராம வேழம் சேர் கம்பர் ஆம் புலவரைக் கருத்து இருத்துவாம். 4 சம்பு, அ(ந்)நாள், தன் உமை செவி சாற்று பூங் கொம்பு அனாள்தன் கொழுநன் இராமப் பேர் பம்ப நாள் தழைக்கும் கதை பாச் செய்த கம்பநாடன் கழல் தலையில் கொள்வாம். 5 இம்பரும் உம்பர் தாமும் ஏத்திய இராம காதை தம்பமா முத்தி சேர்தல் சத்தியம் சத்தியம்மே; அம்பரம்தன்னில் மேவும் ஆதித்தன் புதல்வன் ஞானக் கம்பன் செங் கமல பாதம் கருத்துற இருத்துவாமே. 6 ஆதவன் புதல்வன் முத்தி அறிவினை அளிக்கும் ஐயன், போதவன் இராம காதை புகன்றருள் புனிதன், மண்மேல் கோது அவம் சற்றும் இல்லான், கொண்டல் மால்தன்னை ஒப்பான், மா தவன் கம்பன் செம் பொன் மலர் அடி தொழுது வாழ்வாம். 7 ஆவின் கொடைச் சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து, தேவன் திருவழுந்தூர் நல் நாட்டு, மூவலூர்ச் சீர் ஆர் குணாதித்தன் சேய் அமையப் பாடினான் - கார் ஆர் காகுத்தன் கதை. 8 எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல், சடையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன் பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில், கண்ணிய அரங்கர் முன்னே, கவி அரங்கேற்றினானே. 9 கழுந்தராய் உன கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ! அபிநவ கவிநாதன் விழுந்த நாயிறுஅது எழுவதன்முன், மறை வேதியருடன் ஆராய்ந்து, எழுந்த நாயிறு விழுவதன்முன் கவி பாடியது எழுநூறே. 10 கரை செறி காண்டம் ஏழு, கதைகள் ஆயிரத்து எண்ணூறு, பரவுறு சமரம் பத்து, படலம் நூற்றிருபத் தெட்டே; உரைசெயும் விருத்தம் பன்னீராயிரத்து ஒருபத்தாறு; வரம்மிகு கம்பன் சொன்ன வண்ணமும் தொண்ணூற்றாறே. 11 தராதலத்தின் உள்ள தமிழ்க் குற்றம் எல்லாம் அராவும் அரம் ஆயிற்று அன்றே - இராவணன்மேல் அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன் கம்ப நாட்டு ஆழ்வான் கவி. 12 இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி, அரசு ஆண்டு இருந்தாலும், உம்பர் நாட்டில் கற்பகக் கா ஓங்கும் நீழல் இருந்தாலும், செம்பொன்மேரு அனைய புயத் திறல் சேர் இராமன் திருக் கதையில், கம்பநாடன் கவிதையில்போல், கற்றோர்க்கு இதயம் களியாதே. 13 நாரதன் கருப்பஞ் சாறாய், நல்ல வான்மீகன் பாகாய், சீர் அணி போதன் வட்டாய், செய்தனன்; காளிதாசன், பார் அமுது அருந்தப் பஞ்சதாரையாய்ச் செய்தான்; கம்பன், வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருத்தினானே. 14 நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே; தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே; சென்மமும் மரணமும் இன்றித் தீருமே - இம்மையே இ'ராம' என்று இரண்டு எழுத்தினால். 15 ஓர் ஆயிரம் மகம் புரி பயனை உய்க்குமே; நராதிபர் செல்வமும் புகழும் நல்குமே, விராய் எணும் பவங்களை வேர் அறுக்குமே- 'இராம' என்று ஒரு மொழி இயம்பும் காலையே. 16 மற்று ஒரு தவமும் வேண்டா; மணி மதில் இலங்கை மூதூர் செற்றவன் விசயப் பாடல் தெளிந்து, அதில் ஒன்று தன்னைக் கற்றவர், கேட்போர், நெஞ்சில் கருதுவோர், இவர்கள் பார்மேல் உற்று அரசு ஆள்வர்; பின்னும் உம்பராய் வீட்டில் சேர்வார். 17 வென்றி சேர் இலங்கையானை வென்ற மால் வீரம் ஓத நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள் தம்மில் ஒன்றினைப் படித்தோர் தாமும், உரைத்திடக் கேட்டோ ர் தாமும், 'நன்று இது' என்றோர் தாமும், நரகம் அது எய்திடாரே. 18 இறு வரம்பில் 'இராம' என்றோர், உம்பர் நிறுவர் என்பது நிச்சயம்; ஆதலால், மறு இல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் பெறுவர் என்பது பேசவும் வேண்டுமோ? 19 அன்ன தானம், அகில நல் தானங்கள், கன்னி தானம், கபிலையின் தானமே, சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவார்- மன் இராம கதை மறவார்க்கு அரோ. 20 வட கலை, தென் கலை, வடுகு, கன்னடம், இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும், திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே. 21 இத் தலத்தின் இராமாவதாரமே பத்திசெய்து, பரிவுடன் கேட்பரேல், புத்திரர்த் தரும்; புண்ணியமும் தரும்; அத் தலத்தில் அவன் பதம் எய்துமே. 22 'ஆதி "அரி ஓம் நம" நராயணர் திருக்கதை அறிந்து, அனுதினம் பரவுவோர், நீதி அனுபோக நெறி நின்று, நெடுநாள் அதின் இறந்து, சகதண்டம் முழுதுக்கு ஆதிபர்களாய்அரசுசெய்து,உளம்நினைத்தது கிடைத்து,அருள்பொறுத்து,முடிவில் சோதி வடிவு ஆய், அழிவு இல் முத்தி பெறுவார்' என உரைத்த, கருதித் தொகைகளே. 23 இராகவன் கதையில், ஒரு கவிதன்னில் ஏக பாதத்தினை உரைப்போர், பராவ அரும் மலரோன் உலகினில், அவனும் பல் முறை வழுத்த, வீற்றிருந்து, புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாள்அதனினும், பொன்றா அரா அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே. 24 இனைய நல் காதை முழுதும் எழுதினோர், ஓதினோர், கற்றோர், அனையதுதன்னைச் சொல்வோர்க்கு அரும்பொருள் கொடுத்துக் கேட்டோர், கனை கடல் புடவி மீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து, வினையம் அது அறுத்து, மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார். 25 நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்; வீடு இயல் வழிஅது ஆக்கும்; வேரி அம் கமலை நோக்கும்;- நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே. 26 வான் வளம் சுரக்க! நீதி மனு நெறி முறை எந் நாளும் தான் வளர்ந்திடுக! நல்லோர்தம் கிளை தழைத்து வாழ்க! தேன் வளர்ந்து அறாத மாலைத் தெசரத ராமன் செய்கை யான் அளந்து அறிந்த பாடல் இடையறாது ஒளிர்க, எங்கும்! 27 பாயிரம் எறிகடல் உலகம் தன்னுள் இன் தமிழ்ப் புலவர்க்கு எல்லாம் முறுவலுக்கு உரியதாக மொழிந்தெனன்; மொழிந்த என் சொல் சிறுமையும், சிலை இராமன் கதைவழிச் செறிதல் தன்னால், அறிவுடை மாந்தர்க்கு எல்லாம், அமிழ்தம் ஒத்து இருக்கும் அன்றே. 9-1 |