12 ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்திரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில், நின்று போயிருந்த 'ஹரிஜன்' பத்திரிக்கையை மகாத்மா மீண்டும் தொடங்கினார். அடுத்து டெல்லியில் ஸ்டாபோர்டு கிரிப்ஸைச் சந்தித்துப் பேசினார். வார்தாவில் கூடிய அ.இ.கா.க கூட்டத்தில் மகாத்மாவின் வாய்மொழியாக 'ஜவஹர்லால் நேருவே என் வாரிசு' என்ற வாக்கியம் வெளியாயிற்று. ஹரிஜன் இதழ்களில் 'வெள்ளையனே வெளியேறு' என்ற கருத்தைப் பல்வேறு கோணங்களிலும் வற்புறுத்தி எழுதத் தொடங்கினார் மகாத்மா. அலகாபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கூடியது. பாகிஸ்தான் பிரிவினை பற்றி ராஜாஜி கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடையவே, அவர் அ.இ.கா.கமிட்டியிலிருந்து ராஜிநாமா செய்து விலகினார். காங்கிரசின் எல்லாத் தொடர்புகளையும் விட்டார். அதற்கு முன்பே காங்கிரஸிலேயே ஓரளவு தீவிரமான மனப்பான்மை உள்ளவர்கள் சுபாஷைத் தலைவராகக் கருதத் தொடங்கியிருந்தனர். 'பார்வார்டு பிளாக்' உதயமாகியது. தமிழ்நாட்டில் முத்துராமலிங்கத் தேவர் அதில் சார்பு பெற்றிருந்தார். 1939-ல் சுபாஷ் மதுரை வந்திருந்த போதே இந்த அணி பிரிந்து விட்டது. 1942-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ந் தேதி அபுல்கலாம் ஆசாத் தலைமையின் கீழ் அ.இ.கா.க. பம்பாயில் கூடி 'வெள்ளையனே வெளியேறு' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் விளைவுக்குப் பயந்த அரசாங்கம் கொடுமையான அடக்கு முறையை மேற்கொண்டது. மகாத்மா உள்பட எல்லாத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு எங்கெங்கோ கொண்டு போகப் பட்டார்கள். காரியக் கமிட்டி அங்கத்தினர்கள் அனைவரும் கைதாகிப் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். தலைவர்கள் யார் யார் எந்த எந்த இடங்களில் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற செய்தியும் பொதுமக்களுக்குத் தெரியாமல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 'செய் அல்லது செத்துமடி' என்ற இரகசிய அறிவிப்பு எல்லாக் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் கிடைத்திருந்தது. அஹிம்சையிலிருந்து ஆவேசத்திற்குத் திரும்பும் திருப்புமுனை இக்காலத்தில் காங்கிரசுக்கு நேர்ந்தது. யுகப் புரட்சிபோல் ஓர் போர் பிறந்தது. நாடெங்கும் சுதந்திர ஆவேசக் கனல் மூண்டது. அன்பையும், அகிம்சையையும் நம்பிய மகாத்மாவின் சாந்தக் குரலே, 'செய் அல்லது செத்துமடி', 'வெற்றி! அல்லது இறுதிவரை போராட்டம்' என்று கனலாக மாறி ஒலித்தபோது, அந்தக் குரலின் சத்தியவேட்கையை நாடுமுழுவதும் புரிந்து கொண்டு கிளர்ந்து எழுந்தது. சர்க்காரும் பதிலுக்குக் கொதித்து எழவே போராட்டம் மகாத்மா எதிர்பார்த்ததற்கு மாறாக வன்முறைகளுக்குத் திரும்பி விட்டது. தேசபக்தர்கள் அங்கங்கே தடியடிக்கும், சித்திரவதைக்கும், மானபங்கத்துக்கும் ஆளாயினர். ஒரு பாவமுமறியாத பொதுமக்கள் சுட்டுத் தள்ளப்பட்டனர். நாடெங்கும் ஒரு பஞ்சாப் படுகொலைக்குப் பதில் பல பஞ்சாப் படுகொலைகளை அரசாங்கம் நடத்தத் தொடங்கியது. பெண் தேசபக்தர்கள் சொல்லக் கூசும் மானபங்கங்களுக்கு ஆளாயினர். இரண்டொரு மாகாணங்களில் ஒரு போர் நடத்துவது போலவே விமான மூலம் வெடி குண்டுகளை வீசி அடக்க முயன்றது அந்நிய அரசாங்கம். பொதுமக்களுக்கும், தேசபக்தர்களுக்கும் வேறு வழியில்லாததால் பழிக்குப் பழி வாங்கும் அதீத வெறி மூண்டது. பாலங்கள் தகர்க்கப்பட்டன. ரயில் தண்டவாளங்களை அழிக்க முற்பட்டனர். எங்கும் அமைதியின்மை உருவாயிற்று. தேசபக்தர்கள் அமைதியாக நடத்த முயன்ற கூட்டங்களையும் அடி உதையின் மூலம் அடக்க முற்பட்ட சர்க்காரின் வெறியினால், அதுவரை அமைதியையும் சாத்வீகத்தையும் நம்பிக் கொண்டிருந்தவர்களும் ஆவேசமான காரியங்களில் இறங்கும்படி ஆயிற்று. இப்படி 1942 போராட்டம் ஒரு சுதந்திர மகாயுத்தமாகவே ஆகிவிட்டது. பம்பாயில் தலைவர்களும், தேசபக்தர்களும் கைதான செய்தி மதுரையில் பெரும் குமுறலையும் பரபரப்பையும் உண்டாக்கியது. உடல் நலம் குன்றிப் படுத்த படுக்கையாயிருந்த ரத்தினவேல் பத்தரைப் போய்ப் பார்த்துவிட்டுக் கமிட்டி ஆபீஸுக்குச் சென்ற ராஜாராமன், அங்கே சிதம்பர பாரதியோடு பேசிக் கொண்டிருந்தபோது, போலீஸார் வந்து இருவரையுமே கைது செய்தார்கள். மறுநாள் மதுரை நகரமே அமளி துமளிப்பட்டது. தேசபக்தியின் ஆவேசம் எங்கும் பொங்கி எழுந்தது. கடை அடைப்பு, வேலை நிறுத்தம் என்று எதிர்ப்புக்கள் எழுந்தன. திலகர் சதுக்கத்தில் மாபெரும் கூட்டம் திரண்டது. கூட்டத்தைச் சுற்றி ஒரே போலீஸ் மயம். அவசர அவசரமாக 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேங்காட்டுப் பொட்டலில் கூடிய கூட்டமோ கலையவே இல்லை. வந்தே மாதரம் செட்டியாரும், சீநிவாசவரதனும் கூட்டத்தை அமைதிப் படுத்தி வன்முறைகளைத் தவிர்க்க முயன்றார்கள். போலீஸார் தடியடியில் இறங்கிக் கூட்டத்தைக் கலைக்க முற்படவே கூட்டம் கல்லெறியில் இறங்கியது. போதும் போதாத குறைக்கு ஸ்பெஷல் ரிஸர்வ் போலீஸ் வேறு லாரி லாரியாக வந்தது. பத்து பன்னிரண்டு தேச பக்தர்களுக்குப் பயங்கரமான ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. ஐந்தாறு பேர் கூட்டத்திலேயே உயிர் நீத்தனர். குலசேகரன் பட்டணத்தில் ஓர் அதிகாரி கொலையே செய்யப்பட்டார். மதுரையிலோ மேங்காட்டுப் பொட்டல் தடியடி உள்ளூர்த் தேச பக்தர்களிடையே ஆத்திரமூட்டியது.
அதனால் மறுநாள் நகரில் பெரும் கொந்தளிப்பு மூண்டது. போலீஸ் லாரிகள் நுழைய முடியாதபடி பெரும் பெரும் கற்களாலும், குப்பைத் தொட்டிகளாலும் தெரு முனைகளை அடைத்துவிட்டுச் சின்னக்கடைவீதித் தபாலாபீஸுக்கும், தெற்குச் சித்திரை வீதித் தபாலாபீஸுக்கும் நெருப்பு வைக்கப்பட்டது. வைத்தியநாதய்யர் முதலியவர்களும் கூட ஆவேசமடைந்தனர். 144 உத்தரவு யாருக்குமே நினைவில்லை. நகரமே போர்க்களமாகிவிட்டது. கட்டுப்பாட்டை உண்டாக்க முடியாமற் போகவே, நகர் மிலிடரி கண்ட்ரோலில் ஒப்படைக்கப்பட்டது. வைத்தியநாதய்யர் உட்படப் பலர் கைதாகினர். எல்லா தேசபக்தர்களும் பாதுகாப்பில் வைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டனர். அடக்குமுறை முழுமூச்சாக நடைபெற்றது. மதுரை பழைய மதுரையாகச் சில மாதங்கள் ஆயின. 'சிப்பாய்க் கலகத்துக்குப் பின்பு நடந்த மாபெரும் சுதந்திர யுத்தமே இதுதான்' என்று கூறுமளவுக்கு இப்போராட்டம் முக்கியமாய் இருந்தது.
மதுரையில் அதே வருடம் அக்டோபர் இரண்டாந்தேதி காந்தி ஜயந்தி அன்று கத்ர்க்கொடியுடன் ஊர்வலம் சென்ற தொண்டர்களையும் இரு பெண்மணிகளையும் போலீஸார் பிடித்து லாரிகளில் ஏற்றிக் கொண்டு போய்த் தொலைவில் நடுக்காட்டில் இறக்கிவிட்டு, எல்லாருடைய ஆடைகளையும் அபகரித்துவிடவே மீண்டும் கொந்தளிப்பு மூண்டது. அந்த ஈனச்செயலைச் செய்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மீது அக்கினித் திராவகம் கொட்டப்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியமானவர்களும், தொண்டர்களும் கைதாகி விட்டதால் வெளியே இயக்கத்துக்கு ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. அன்றைய நிலையில் அது தவிர்க்க முடியாததாயிருந்தது. காங்கிரஸ் சோஷலிஸ்டுகளாகிய ஜெயப்பிரகாஷ் நாராயணன், அச்சுதப்பட்டவர்த்தன், அருணா அஸப் அலி, ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா போன்றவர்கள் மறைவாக இருந்து இந்த இருண்ட கால கட்டத்தில் இயக்கம் அழிந்து விடாமல் சுதந்திர வேள்வித் தீயைக் கனிய வைத்துக் கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர அப்போது சிறை செல்லாமல் வெளியே இருந்தவர்கள் ராஜாஜியும், புலாபாய் தேசாயுமே. இதே சமயத்தில் மற்றொரு நம்பிக்கை ஒளியும் பளிச்சிட்டது. கல்கத்தாவில் பாதுகாப்புக் கைதியாயிருந்த சுபாஷ்சந்திரபோஸ், 'குவிட் இண்டியா' இயக்கத்துக்கு முன்பே எப்போதோ எப்படியோ தப்பி ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் போய், ராஷ்பிகாரி போஸின் உதவியோடு இந்திய சுதந்திர அரசாங்கத்தை ஸ்தாபித்திருந்தார். இந்திய தேசிய ராணுவமும், ஜான்சிராணிப் படையும் அவர் தலைமையில் உருவாயின. அந்தமான், நிகோபார் தீவுகள் ஐ.என்.ஏ. வசப்பட்டன. திரிபுரா காங்கிரஸில் கருத்து முறிவு ஏற்பட்டிராவிட்டால் சுபாஷ் இப்படிப் போய் ஒரு சாதனை புரிந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிராது தான். கருத்து வேற்றுமையும் கூட நல்லதாயிற்று. ***** கைது செய்யப்பட்ட ராஜாராமன் முதலில் வேலூர்ச் சிறையிலே வைக்கப்பட்டிருந்தான். பின்பு அங்கிருந்து நாகபுரி மூலமாக அமராவதி சிறைக்குக் கொண்டு போகப்பட்டான். அமராவதியில் மாட்டுக் கொட்டகை போன்ற ஓர் இடத்தில் அடைக்கப்பட்ட தேசபக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். எல்லாச் சோதனைகளின் போதும் 'வந்தேமாதர' கோஷமும், 'மகாத்மா காந்திக்கு ஜே!' - என்ற தாரக மந்திரமுமே அவர்களுக்குத் துணையாயிருந்தன. அமராவதிச் சிறைவாசம் கொடுமையின் எல்லைகளைக் கொண்டதாயிருந்தது. கைதிகள் கடிதம் எழுதவோ, பெறவோ முடியாமல் அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. சுகாதார நிலையோ படுமோசமாயிருந்தது. ஜெயில் அதிகாரிகளுக்கும் வார்டன்களுக்கும் மராத்தி மட்டுமே பேசத் தெரிந்திருந்தது. சத்யாக்கிரகிகளில் பலருக்குத் தமிழும், ஆங்கிலமுமே தெரிந்திருந்தன. அதனால் பல குழப்பங்களும் நேர்ந்தன. சிறை மேலதிகாரியாயிருந்த ஸ்காட் என்ற ஆங்கிலேயன் மிகமிகக் கொடுமையாக நடந்து கொண்டான். ராஜாராமனைப் பொறுத்த வரையில் மதுரையைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு தீவுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டது போல ஆகிவிட்டது நிலைமை. யாரைப் பற்றியும் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது போயிற்று. மழைக்காலத்தில் கடுமையான அடைமழை, வெய்யில் காலத்தில் கடுமையான வெப்பம் என்று அமராவதியின் சூழ்நிலை இருந்தது. ராஜாராமனின் உடல் நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நரக வேதனை அனுபவிப்பது போல நாட்களை ஒவ்வொன்றாக எண்ண வேண்டியிருந்தது. மதுரம் எப்படித் தவிப்பாள் என்பதை ஒவ்வொரு விநாடியும் அவன் உணர்ந்தான். ஆறுதல் கூற முடியாமல் பத்தர் தளர்ந்து ஒடுங்கிப் படுத்துவிட்டார். பிருகதீஸ்வரனும், முத்திருளப்பனும், குருசாமியும் ஆசிரமவாசிகளாகி, மாந்தோப்பிலேயே தங்கி விட்டார்கள். மதுரத்தைப் பொறுத்தவரை மதுரை நகரமே சூனியமாகிவிட்டது போலிருக்குமென்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் நிலைமையைப் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தே உணர்ந்தான் அவன். சிறையில் உடனிருந்த மற்றவர்களில் பலர் குடும்பஸ்தர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை குடும்பக் கவலைகளோடு மனம் வெந்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்த போது தன் கவலையை அவனால் மறந்து விட முடிந்தது. முன்பு ஒரு முறை இதே போல் சிறை வாசத்தின் போது மதுரத்தையே நினைத்துப் பாடிய அந்த வரிகள் ஞாபகம் வந்தன.
எல்லையிலாததோர் காட்டிடைநள் இருளென்றும் ஒளியென்றும் சொல்ல ஒணாததோர் மயக்கத்தே - தான் இப்போது இருக்கும் நிலையே பாடலில் பாடியிருப்பது போல் தான் என்று தோன்றிய போது மனத்துக்குள் சிரித்துக் கொண்டான் அவன். சோகமும் தனிமையும் மனத்தை ரம்பமாய் அறுக்கும் சில பொறுக்க முடியாத வேளைகளில் எங்கிருந்தோ மங்கலாக வீணையை மீட்டும் ஒலியும் 'தெலியலேது ராமா' என்ற குரலும் காதருகே வந்து ஒலிப்பது போல் பிரமை ஏற்பட்டது அவனுக்கு. அந்தக் குரலில் பவ்யமும், பசியும், இனிமையும், அன்பும், அனுராகமும் அவன் இதயத்தையே குளிர்விப்பனவாயிருந்தன. அமராவதி சிறையில் அவனோடு இருந்த மதுரைத் தேச பக்தர்களில் சிலர் அவனுக்குப் பின் கைதானவர்கள். அவர்கள் மதுரையிலும், நெல்லையிலும், கோயம்புத்தூரிலும் நடந்த மாபெரும் போராட்ட நிகழ்ச்சிகளையும் போலீஸாரின் அடக்குமுறையையும் விவரித்துக் கதை கதையாகச் சொன்னார்கள். தந்திக் கம்பிகள் அறுத்தல், ரயில் தண்டவாளத்தைத் தகர்த்தல், பாலங்களுக்கு வெடி வைத்தல், தபாலாபீஸுக்குத் தீ என்று சுதந்திர ஆவேசத்தில் பல பெரிய பெரிய ஆத்திரமான காரியங்கள் நடந்திருப்பது தெரிந்தது. 'டூ ஆர் டை' என்ற மகாத்மாவின் வாசகம் ஒரு குமுறலையே கிளப்பியிருந்ததை அவன் உணர்ந்தான். சாத்வீகத்தை நம்பியே பழகிய தலைமையும் 'வெற்றி அல்லது மரணம்' என்ற நிலைக்கு வந்துவிடும்படி நேர்ந்துவிட்ட சூழ்நிலையை அவன் சிறையில் பல நாட்கள் தொடர்ந்து சிந்தித்த வண்ணமிருந்தான். கண்ணீர் விட்டு வளர்த்த சுதந்திரப் பயிரைச் செந்நீர்விட்டுப் பெற வேண்டிய நிலையும் வந்துவிட்டது குறித்து நிதானமாக யோசித்தான் ராஜாராமன். மதுரை மேங்காட்டுப் பொட்டல் தடியடியில் உயிர் நீத்தவர்களையும் அக்கினித் திராவக வழக்கில் கைதானவர்களையும் பற்றி அறிந்த போது வேதனையாயிருந்தது. சொந்தக் கவலைகளும், நாட்டின் சுதந்திர இயக்கத்தைப் பற்றிய கவலைகளுமாக அமராவதி சிறையில் தவித்தான் அவன். ராஜாராமனும், அவனைப் போலவே அமராவதியிலிருந்த பிற தேசபக்தர்களும் விடுதலையாகு முன், இந்த இரண்டரை ஆண்டுச் சிறைவாசக் காலத்திற்குள், நாட்டில் பல நிகழ்ச்சிகள் அவர்களை அறியாமலே நடந்து விட்டன. எதிர்காலத்துக்கு மிகவும் பயன்படவல்ல சத்தியமூர்த்தி போன்றவர்களின் மரணம் தமிழ்நாட்டைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்திய சிப்பாய்களை வைத்து ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் தோற்கச் செய்து டெல்லி செங்கோட்டையைப் பிடிக்கத் திட்டமிட்ட இந்திய தேசிய இராணுவமும் அதன் தலைவர் சுபாஷும் தீரச் செயல்கள் பலவற்றை எட்டாத தொலைவிலிருந்து சாதித்தனர். காந்தியடிகளிடம் தமக்கு அபிப்பிராய பேதம் ஏற்பட்ட போதிலும், அவரையே தம் தேசப்பிதாவாகக் கருதுவதாக நேதாஜி சுபாஷ் அரிய செய்தியை ஒலி பரப்பிய காலத்தில், இந்தியாவில் அதைக் கேட்டவர்களுக்கெல்லாம் மெய்சிலிர்த்தது. இளைஞர்களின் நெஞ்சங்களில் 'ஜெய் ஹிந்த்' என்ற கோஷம் எதிரொலித்துக் கொண்டிருந்த காலம் அது. பின்னால் இந்திய தேசிய ராணுவம் சரணடைய நேரிட்டதும், புலாபாய் தேசாயின் வாதத்திறமையால் சரண் அடைந்து கைதான, இ.தே.ரா. வீரர்கள் பலர் விடுதலை பெற்றதும், நேதாஜி இருக்கிறா இல்லையா என்பதே புரியாத மர்மமும் பாரத நாட்டைக் கலங்க வைக்கும் நிகழ்ச்சிகளாக அமைந்தன. மகாத்மா காந்தி புனாவில் ஆகாகான் மாளிகையிலும் மற்றுமுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் அகமத் நகர் கோட்டையிலும் சிறை வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சிறைவாசத்தைத் தொடங்கும்போதே தமது உயிருக்குயிரான மகாதேவ தேசாயை இழந்து வருந்திய மகாத்மாவுக்கு அடுத்த பேரிடியாக கஸ்தூரி பாய் காந்தியின் மரணமும் நேர்ந்தது. அக்காலத்தில் சிறைப்படாமல் காங்கிரஸில் கருத்து வேறுபட்டு வெளியே இருந்து - முடிந்ததைச் செய்தவர்கள் புலாபாய் தேசாயும் ராஜாஜியுமே. கஸ்தூரிபாய் காந்தியின் மரணத்துக்கு முன்பே நாட்டில் நடைபெறும் கொடுமைகளைக் கேட்டு மனம் நொந்து, 21 நாள் உபவாசமும், உண்ணாவிரதமும் இருந்து தளர்ந்திருந்த காந்தியடிகளின் உடல்நிலை துயரங்களின் கனம் தாங்காது மேலும் மேலும் தளர்ந்தது. உடனிருந்தவர்கள் வருந்தினர். முன்பு வேலூரிலும், கடலூரிலும், திருச்சியிலும் நண்பர்கள் பார்க்க வந்தது போல் இங்கு அமராவதிக்கு ராஜாராமனை யாரும் பார்க்க வரவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது. எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி எப்படியோ மகாதேவ தேசாயின் மரணமும், அன்னை கஸ்தூரிபாய் காந்தியின் மரணமும் தெரிந்த வேளைகளில் ராஜாராமன் கண் கலங்கினான். எல்லா தேசபக்தர்களையுமே அதிரச் செய்தன, அந்தத் துயரச் செய்திகள். ஊரைப் பற்றியும், நண்பர்களைப் பற்றியும், வாசகசாலையைப் பற்றியும், ரத்தினவேல் பத்தரின் உடல் நிலையைப் பற்றியும் பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் பழைய சம்பவங்களை நினைத்து நினைத்து மனம் நெகிழ்ந்து உருகினான் ராஜாராமன். காலம் மிகவும் மெதுவாக நகர்வது போல் சிறைவாசம் மிக வேதனையாயிருந்தது. சிறையில் ராஜாராமனுக்கு ஒவ்வொரு சாயங்காலமும் கடுமையான தலைவலி வேறு வந்து ராத்தூக்கமே இல்லாமற் செய்து கொண்டிருந்தது. சரியான வைத்திய உதவிகள் கிடைப்பதற்குச் சிறை அதிகாரி உதவவில்லை. 'ஒற்றைத் தலைவலி' என்று அதைச் சொன்னார்கள் நண்பர்கள். அது வருகிற நேரம் நரக வேதனையாயிருந்தது. வார்டனிடம் கெஞ்சிக் கதறி, சட்டியில் கொஞ்சம் வெந்நீர் வரவழைத்துச் சக தேச பக்தர் ஒருவர் வெந்நீரில் துணியை நனைத்து நெற்றியில் ஒத்தடம் கொடுத்து வந்தார். நரக வேதனையாக அந்த வலிவரும் போதெல்லாம் இப்படி ஒரு சாதாரண வைத்திய உதவிதான் அவனுக்குக் கிடைத்தது. முன்பு மதுரம் நெற்றியில் சாம்பிராணிப் பற்று அறைத்துப் போட்ட சம்பவம் இந்தத் தலைவலி வரும்போதெல்லாம் அவனுக்கு நினைவு வந்து மனத்தை உருக்கியது. தெரிந்த மனிதர்களும், வேண்டியவர்களும் அருகே இல்லாமல் தனிமை என்ற வேதனையில் உருகி இளைத்துக் கொண்டிருந்தான் அவன். அறிந்தவர்களும், தெரிந்தவர்களும், வேண்டியவர்களுமாகிய தேசபக்தர்கள் பலர் உடனிருந்தாலும், பிருகதீஸ்வரனைப் போல் அன்பும் பாசமும், சகோதரத்துவப் பான்மையும் நிறைந்த ஒருவர் அருகில் இல்லாததால் அவன் தவித்துப் போயிருந்தான். ***** 1944-ம் வருடம் மே மாதம் முதல் வாரத்தில் மகாத்மா காந்தி விடுதலை செய்யப்பட்டார். செப்டம்பர் மாதம் முகம்மது அலி ஜின்னாவுடன் பாகிஸ்தான் சம்பந்தமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். யுத்தம் ஒரு விதமாக முடிந்தது. இங்கிலாந்தில் சர்ச்சில் ஆட்சி போய் அட்லி சர்க்கார் வந்தது. உலக அரசியல் நெருக்கடியை மனதில் கொண்டும், நேதாஜி போன்ற தீவிரவாதிகளின் செயல் அதிர்ச்சியை அளித்த்திருந்ததாலும், யுத்தத்தில் இந்திய மக்கள் செய்த அபார உதவியை நினைத்தும் அட்லி சர்க்கார் தன் மனப்பான்மையையே மாற்றிக் கொண்டிருந்தது. ஒரு பார்லிமென்ட் தூது கோஷ்டியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவும், சமரசம் செய்து கொள்ளவும் நினைத்தது. நாட்டில் மாதர் நலனுக்குப் பயன்படுத்தும் பொருட்டு 'கஸ்தூரிபாய் காந்தி நிதி' ஒன்று திரட்டப்பட்டது. ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்தது அந்த நிதிக்கு. புதிதாக வேவல்துரை வைஸ்ராயாக வந்தார். 1942 போராட்டத்தில் கைதான தலைவர்கள் நாற்பத்தைந்தாம் ஆண்டின் முற்பகுதியில் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டார்கள். ராஜாராமனும் விடுதலையானான். நாற்பத்தைந்தாம் ஆண்டில் தமிழ்நாட்டுக் காங்கிரஸில் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. நாற்பத்திரண்டிலேயே காங்கிரஸிலிருந்து ராஜிநாமா செய்திருந்த ராஜாஜி திடீரென்று திருச்செங்கோட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வந்ததும், அந்தத் தேர்தல் செல்லாதென்று மறுக்கப்பட்டதோடு - 1945 அக்டோபர் 30-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் ஒரு மகாநாடு கூட்டுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. காங்கிரஸ் என்ற மகாவிரதத்தில் எப்போதோ ஆரம்பமாகியிருந்த சிறிய பிளவு தமிழ்நாட்டில் இப்போது ஒரு சலனத்தையே உண்டாக்கிவிட்டது. திருப்பரங்குன்றம் மகாநாடு தமிழ்நாட்டுக் காங்கிரஸில் ஒரு திருப்பத்தையே உண்டாக்குவதாக வந்து வாய்த்ததை யாவரும் உணர்ந்தனர். திருப்பரங்குன்றம் மகாநாட்டில் முத்துராமலிங்கத் தேவர் கொடியேற்றினார். பேட்டை முத்துரங்க முதலியார் தொடங்கி வைத்தார். கல்லிடைக்குறிச்சி யங்ஞேஸ்வரசர்மா மகா நாட்டுக்குத் தலைமை தாங்கினார். திருச்செங்கோடு தேர்தல் செல்லாதென்று கண்டித்துப் பலர் பேசினார்கள். அத் தேர்தலைக் கண்டித்துத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மறுநாள் காரியக் கமிட்டிக் கூட்டமும் நடைபெற்றது. இந்தியா முழுவதும் எந்த ஒற்றுமைக்காகச் சுதந்திரப் போராட்டம் என்ற நோன்பில் இறங்கியதோ அந்த நோன்பில் - அந்த நோன்பின் பயன் விளையுமுன்பே தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் பிரிய வழி ஏற்பட்டு விட்டது. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டதற்காகப் பல மூத்தவர்கள் ராஜாஜி மேல் கோபப்பட்டார்கள். சிலர் ராஜாஜி மேல் தப்பில்லை என்று விலகியும் போனார்கள். விலகிப் போனவர்கள் ராஜாஜிக்கு ஆதரவாகச் சீர்காழியில் ஒரு கூட்டம் போட்டார்கள். கோஷ்டி மனப்பான்மை வளரலாயிற்று. ***** ராஜாராமன் விடுதலையாகி மதுரைக்குத் திரும்பி வந்த போது அவன் எதிர்பாராத பல மாறுதல்கள் அங்கே நேர்ந்திருந்தன. சில மாறுதல்கள் அவன் அநுமானித்தவை தான் என்றாலும், பல மாறுதல்கள் அவன் அநுமானிக்காதவை என்பதோடு மட்டும் அல்லாமல், அவனுக்கு அதிர்ச்சியளிப்பவையாகவும் இருந்தன. தாடியும் மீசையுமாக இளைத்த உடம்பும், குழி விழுந்த கண்களுமாக அவன் மேலக் கோபுர வாசலில் வந்து நின்ற போது, தெரிந்தவர்களுக்கும் கூட அவனை முதலில் அடையாளம் புரியவில்லை. நீண்ட காலத்துக்குப் பின் மதுரை மண்ணை மிதிக்கும் சந்தோஷம் உள்ளே இருந்தாலும் அவன் மனத்தில் இனம் புரியாத கலக்கங்கள் ஊடாடின. நெஞ்சு எதற்காகவோ ஊமைத் துயரத்தால் உள்ளேயே புலம்பியது. மேலச் சித்திரை வீதியில் வடக்கு நோக்கித் திரும்பித் தெரு முனையில் போய்ச் சிறிது தொலைவு நடந்ததுமே அவனுக்குத் 'திக்' கென்றது. வாசகசாலை இருந்த மாடியே இல்லை; ஒரு புதிய பெரிய மாடிக் கட்டிடம், அந்த இடத்தில் ஒரு பல சரக்கு மளிகைக் கடை வந்திருந்தது. மாடியில் ஏதோ ஒரு ஃபவுண்டரி இரும்பு சாமான்கள், பம்பு செட் விற்கும் கம்பெனியின் போர்டு தெரிந்தது. சந்தில் நுழைந்து, மதுரத்தின் வீட்டுக்குப் போய்ப் பார்க்கலாமா, மளிகைக் கடையிலேயே விசாரிக்கலாமா என்று அவன் கால்கள் தயங்கி நின்றது. கில்ட் கடையும், வாசக சாலையும் அங்கே இல்லாததை அவன் ஏமாற்றத்தோடும் அதிர்ச்சியோடும் எதிர் கொண்டான். ஓரிரு கணங்கள் ஒன்றுமே புரியாமல் அவன் மனம் குழம்பியது. தலை சுற்றியது. யாரை விசாரிப்பதென்றும் விளங்கவில்லை. மனத்தைச் சமாளித்துக் கொண்டு மளிகைக் கடையில் விசாரித்த போது, ரத்தினவேல் பத்தர் காலமாகி விட்ட செய்தியும் கில்ட் கடை தெற்காவணி மூல வீதிக்கு மாறிப் போயிருப்பதும் தெரிந்தது. வாசகசாலையைப் பற்றி அவர்களுக்கு ஒரு விவரமும் தெரியவில்லை. சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த ராஜாராமனுக்கு மறுபடியும் சிறைக்கே போய்விட்டது போலிருந்தது. பத்தருக்காக அவன் கண்களில் நீர் நெகிழ்ந்தது. மதுரத்தைப் பற்றி மளிகைக் கடையில் விசாரிப்பது உசிதமில்லை என்று எண்ணியபடி பக்கத்து ஒண்ணாம் நம்பர்ச் சந்தில் நுழைந்தவன், அவளுடைய அந்த வீட்டையும் திகைப்போடு பார்த்தான். காரணம், அந்த வீடும் இடித்துப் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வேலை செய்து கொண்டிருந்த ஆட்களுக்கு மதுரத்தைப் பற்றித் தெரியுமோ, தெரியாதோ என்று தயங்கி நின்றான் அவன். அவளே வேறு இடத்திலிருந்து கொண்டு வீட்டை இடித்துக் கட்டுகிறாளா, அல்லது வேறு யாராவது விலைக்கு வாங்கிக் கட்டுகிறார்களா என்பதையும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. எல்லாம் குழப்பமாகவும், தன்னைத் தொடர்ந்து ஏமாற்றம் அடையச் செய்யவுமே நடப்பது போலவும் தோன்றின. அநாதை போல் திரும்பி வந்து சித்திரை வீதியில் நின்று மீனாட்சி கோவில் கோபுரங்களைப் பார்த்தான் அவன். திடீரென்று அந்தக் கோபுரங்களே இல்லாத மதுரையைக் காண்பது போல் அவன் கண்கள் பிரமையடைந்தன. கண்களுக்கு முன் எதுவுமே தெரியாமல் இருண்டுவிட்டது போலிருந்தது. மறுபடியும் மளிகைக் கடைக்காரரிடம் சென்று பத்தருடைய கில்ட் கடையைத் தெற்கு ஆவணி மூலவீதியில் எந்த இடத்திற்கு மாற்றியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முயன்றான் ராஜாராமன். மளிகைக் கடையில் இருந்தவர்களுக்கு அந்த விவரம் ஒன்றும் தெரியவில்லை. உடனே செம்பியன் கிணற்றுச் சந்துக்குப் போய் பத்தர் குடியிருந்த வீட்டில் தேடினான். பத்தர் குடும்பமும் இப்போது அங்கே இல்லை என்று தெரிந்தது. பத்தர் காலமானதுமே அந்தக் குடும்பத்தினர் தெற்கு மாசி வீதிப் பக்கம் மறவர் சாவடிக்கு அருகே எங்கோ குடிபோய் விட்டதாகத் தெரிவித்தார்கள். கடையை இடம் மாற்றியது போல் வீட்டையும் மாற்றியிருந்தார்கள். ஒன்றும் புரியாமல் ராஜாராமனுக்குத் தலை சுற்றியது. நேரே ஆசிரமத்துக்கே போய்விட்டால் என்னவென்று தோன்றியது. இடங்களையும் காணாமல், தெரிந்த மனிதர்கள் என்ன ஆனார்கள் என்றும் புரியாமல் மதுரையின் வீதிகளில் அநாதை போல் சுற்றி அலைவதை விட ஆசிரமத்துக்கே போய்விடலாம் என்று தோன்றினாலும், எதற்கும் தெற்காவணி மூல வீதியில் ஒரு தடவை சுற்றிப் பார்த்து விடவும் ஆவலாயிருந்தது. சொந்த ஊரிலேயே ஒன்றும் புரியாமல் கண்களைக் கட்டி விட்டது போல் அநாதையாக அலைவது மனத்துக்கு வேதனையளித்தாலும், தெற்கு ஆவணி மூல வீதிக்கு மட்டும் ஒரு நடை போய்ப் பார்த்து விடுவதென்று புறப்பட்டான் அவன். ஆசிரமத்துக்குப் போய்விட்டால் மறுபடியும் இருபது மைலுக்கு மேல் திரும்பவும் உடனே எடுத்துக் கூட்டி மதுரைக்கு வர முடியாது. அதனால் கையோடு கில்ட் கடையைத் தேடிப் பார்த்து விடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன். தெற்காவணி மூல வீதியில் எல்லா கில்ட் கடைகளும் ஒரு சந்தில் இருந்தன. எல்லாத் தங்கம், வெள்ளி, நகைக் கடைகளும் தெற்காவணி மூல வீதியிலேயே இருந்ததால் கில்ட் தொழிலில் ஓரளவு நிறைய சம்பாதிக்க அந்த இடமே ஏற்றதாயிருக்கும் என்று பத்தருடைய காலத்துக்குப் பின் அவருடைய மகன் நினைத்து இடம் மாறியிருக்க வேண்டும் என்று தோன்றியது. தெற்காவணி மூல வீதியில் நினைத்ததை விடச் சுலபமாகவே பத்தரின் மகன் கடை வைத்திருந்த இடத்தைக் கண்டு பிடித்துவிட முடிந்தது. ரத்தினவேல் பத்தர் காலத்தில் இருந்ததைவிடக் கடை இப்போது பெரிதாகியிருந்தது. நிறைய ஆட்களும் வேலை பார்த்தனர். பத்தரின் மகன் ராமையாவுக்கு, இளைத்துத் தாடியும் மீசையுமாக வந்து நின்ற ராஜாராமனை முதலில் அடையாளமே புரியவில்லை. "அப்பா காலம் ஆயிடுச்சு ராமையா! இனிமே அப்படி ஒரு நல்ல மனுஷனை நான் எந்தக் காலத்திலே பாக்கப் போறேனோ?" என்று ராஜாராமன் ஆரம்பித்த பின்பும் இவனை அவனுக்கு இனம் புரியவில்லை. "என்னைத் தெரியலியா ராமையா! நாப்பத்திரண்டு ஆகஸ்டுலே அரஸ்டாகி ஜெயிலுக்குப் போனவன் இப்பத் தான் வரேன். வாசகசாலை என்ன ஆச்சு? அப்பா இன்னும் கொஞ்சம் காலம் படுத்த படுக்கையாகவே உயிரோட இருப்பார்னு பார்த்தேனே! அவருக்கு என்ன ஆச்சு?" என்று அவன் இன்னும் தெளிவாக அடையாளம் புரியும்படி சொன்ன பின் ராமையாவுக்குப் புரிந்தது. ஆளை இனம் புரிந்ததும், "அடடே! நம்ம ராஜாராமன் சாரா! அடையாளமே புரியலையே சார்! எப்படி இருந்தவர் எப்படி ஆயிட்டீங்க?" என்று முகம் மலர்ந்தான் ராமையா. "ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னே நீங்க அப்பாவை வந்து பார்த்திட்டுப் போனீங்களே; அப்பவே வைத்தியர் ஒரு வாரம் கூடத் தாங்கறது கஷ்டம்னாரு. ஆனா நீங்க வந்திட்டுப் போன மூணாவது நாளே அப்பா போயிட்டாரு. நீங்க ஜெயிலுக்குப் போயிட்டீங்கங்கிற விஷயமே எனக்குப் பின்னாடித்தான் தெரியும் சார்! ஆசிரமத்துக்குத் தாக்கல் சொல்லி அனுப்பிச்சேன். பிருகதீஸ்வரன் சார், முத்திருளப்பன் ஐயா, குருசாமி எல்லாரும் உடனே வந்தாங்க. அவங்க தான் நீங்க ஜெயிலுக்குப் போயிட்ட சங்கதியையே சொன்னாங்க. மதுரம் கூட வந்திரிந்திச்சு. பாவம்! அந்தப் பொண்ணு அப்பா போனதைத் தாங்கிக்க முடியாமே கதறிக் கதறி அழுதிச்சு." "அதுசரி ராமையா, நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலியே? வாசகசாலை என்ன ஆச்சு? மதுரத்தோட வீட்டை யார் இடிச்சுப் புதிதாகக் கட்றாங்க...? மதுரம் எங்கே இருக்கு இப்ப?" "நீங்க போனப்புறம் என்னென்னமோ நடந்து போச்சு சார்! உள்ளர வாங்க சொல்றேன்." ராஜாராமனின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. அவன் ராமையாவோட கடைக்குள் சென்றான். பட்டறை, வேலை செய்யும் ஆட்கள் எல்லாரையும் கடந்து பின்புறம் ஒழுகறைப் பெட்டி, பூஜைப் படங்கள் எல்லாம் வைத்திருந்த அறைக்கு ராஜாராமனை அழைத்துக் கொண்டு போனான் ராமையா. அந்த அறையில் தரை மேல் பாய் விரித்திருந்தது. ஒழுகறைப் பெட்டி, கணக்குப் பிள்ளை மேஜை, தராசு, தங்கம் உறைத்துப் பார்க்கும் கல் எல்லாம் வைத்திருந்த இடங்கள் போகப் பாயில் இரண்டு பேர் தாராளமாக உட்கார்ந்து பேச இடம் இருந்தது அங்கே. "ரொம்பக் களைப்பாகத் தெரியறீங்க சார்? பையனை காப்பி பலகாரம் வாங்கியாறச் சொல்றேன். முதல்லே சாப்பிட்டுடுங்க. அப்புறம் பேசுவோம்," - என்ற ராமையாவிடம் ராஜாராமன் எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. இட்லி, வடை, சுக்குமல்லிக் காப்பி எல்லாம் வந்தது. ராஜாராமனால் அப்போதிருந்த மனநிலையில் அவற்றை ருசித்துச் சாப்பிட முடியவில்லையானாலும், ராமையாவின் பிரியத்தைக் கெடுக்க மனமில்லாமல் ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி விட்டுக் கை கழுவினான். என்னென்ன நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அவன் மனம் தவித்துக் கொண்டிருந்ததால், இட்லி காப்பியில் சுவை காண முடியவில்லை. சிறிது நேரம் தான் சொல்ல வேண்டியவற்றை எப்படித் தொடங்கி எப்படிச் சொல்லுவதென்று தெரியாமல் ராமையா தயங்கினான். பின்பு ராஜாராமன் கேள்வி மேல் கேள்வி போட்டுத் துளைக்கவே தன்னால் சொல்ல முடிந்தபடி எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினான் ராமையா. "நீங்களும் ஜெயிலுக்குப் போயிட்டீங்க. அப்பா திடமாக நடமாடிக்கிட்டிருந்தாலும் இப்படியெல்லாம் ஆகியிருக்காது. கொஞ்ச நாள்லே அவரும் கண்ணை மூடிட்டதனாலே என்னென்னவோ நடந்து போச்சு. இப்ப நெனைக்கறதுக்கே சங்கடமாயிருக்கு. அப்பா இருந்திருந்தா இப்பிடி எல்லாம் நடந்திருக்காது. அவரும் போயிட்டார், நீங்களும் இங்கே இல்லே. பிருகதீஸ்வரன் சார், முத்திருளப்பன் ஐயா, குருசாமி டெயிலர் எல்லாரும் ஆசிரமத்தோட ஆசிரமமாத் தங்கிட்டாங்க. நீங்க ஜெயிலுக்குப் போயிட்டதனாலே மதுரம் மனசு நொந்து போய்க் கச்சேரிக்குப் போறதை ஒவ்வொண்ணா விட்டுடுச்சு. கச்சேரிக்குப் போகவும், பாடவும் அதும் மனசிலே உற்சாகமே இல்லே. பணம் வேணுமேங்கிறதுக்காகப் போன இரண்டொரு கச்சேரியும் நிரக்கலே. மனசு நிறைய வேதனை இருந்தா அந்த வேதனையோட எப்படி நல்லாப் பாட முடியும்? கச்சேரிக்குப் போகறது படிப்படியா நின்னுது. அது போதாதுன்னு அந்தக் கிழவி மங்கம்மாவும் அவ மாமனும் அப்பா போன ஆறுமாசத்துக்குள்ளே அடுத்தடுத்துச் சொல்லி வச்சாப்பல ஒவ்வொருத்தராப் போய்ச் சேர்ந்தாங்க. தனிமை அதைக் கொஞ்சம் கொஞ்சமா உருக்கிடிச்சு. எங்க வீட்டோட வந்து இருக்கச் சொல்லி நான் கெஞ்சினேன். அது கேட்கலே. ஆசிரமத்திலேயே வந்து தங்கச் சொல்லிப் பிருகதீஸ்வரன் சார் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாரு. அதையும் அது கேட்கலே. தனியா அத்தினி பெரிய வீட்டுலே ஒண்ணா நம்பர்ச் சந்திலே கிடந்து தானாகவே அங்கே அது வாடின வேதனையை எங்களாலே தாங்க முடியலே." "கச்சேரி வருமானம் இல்லாததுனாலே, வீட்டு மேலே வாங்கியிருந்த கடனுக்கு வட்டியும் கொடுக்கப்படலே, வாசகசாலைக்கும் ரெண்டு மூணு மாசமா வாடகை நின்னு போச்சு. வீட்டுக்காரன் ஏற்கெனவே ரொம்பக் கோபமாயிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் ஜஸ்டிஸ் பார்ட்டி அநுதாபம் உண்டு. வாடகையும் நின்று போகவே, வாசக சாலையைக் காலி பண்ணிட்டு வேறு வேலை பாருங்கன்னு வந்து கத்தினான். மதுரம் ஒண்ணும் புரியாமே அழுதது. நான் போய் ஆசிரமத்துல சொன்னேன். ஆசிரமமே ரொம்பப் பணக் கஷ்டத்திலே இருந்த சமயம் அது. பிருகதீஸ்வரன் சாரும் முத்திருளப்பன் ஐயாவும் எப்படியோ பழைய வாடகை பாக்கியைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்து வாசகசாலையைக் காலி பண்ணிப் பொஸ்தகங்களையும், பண்டம் பாடிகளளயும் ஆசிரமத்துக்கு எடுத்துக்கிட்டுப் போனாங்க. போறபோது மதுரத்தையும் ஆசிரமத்துக்கு வந்துடச் சொல்லி எவ்வளவோ கெஞ்சினாங்க, அது கேக்கலே. வாசக சாலை விஷயமாப் பேசினதிலே எனக்கும் வீட்டுக்காரனுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினாலே கில்ட் கடையையும் அங்கேயிருந்து காலி பண்ணிட்டு நான் இங்கே வந்திட்டேன். இங்கே வந்தப்புறம் ஒரு நாள் மதுரத்துக்கு உடம்பு சௌகரியமில்லேன்னு ஒண்ணாம் நம்பர்ச் சந்திலேருந்து ஆள் வந்திச்சு. போய்ப் பார்த்தேன். அது படுத்த படுக்கையா, இளைச்சுப் போய் உடம்புக்குச் சுகமில்லாமே இருந்திச்சு. உடனே நான் ஆசிரமத்துக்குத் தாக்கல் சொல்லி அனுப்பிச்சேன். ஆசிரமத்திலேருந்து எல்லாரும் வந்தாங்க. அங்கேயே வந்துடச் சொல்லி மதுரத்தை மறுபடியும் எவ்வளவோ கெஞ்சினாங்க. அப்பவும் அது கேட்கலே. வைத்தியரை வரவழைச்சு இங்கேயே பார்த்தாங்க. 'டி.பி. அட்டாக்'னு தெரிஞ்சது. பிருகதீஸ்வரன் புதுக்கோட்டைக்குத் தந்தி அடிச்சு அவர் மனைவியை வரவழைத்தார். அந்தம்மா வந்து மதுரத்தைக் கூடவேயிருந்து பெத்த தாய் மாதிரிக் கவனிச்சிக்கிட்டாங்க. இதுக்குள்ளே கடன்காரன் மதுரத்தின் வீட்டுக்கு ஜப்தி 'வாரண்ட்' கொண்டு வந்திட்டான். வீட்டை மீட்டுக் கடனைக் கொடுத்திடணும்னு பிருகதீஸ்வரன் சார் ஆனமட்டும் என்னென்னமோ பண்ணிப் பாத்தாரு, முடியலே. வீடு ஜப்தியாகிக் கடன்காரனிட்டப் போயிடிச்சு. மதுரம் சங்கீத விநாயகர் சந்திலே ஒரு வாடகை வீட்டுக்குக் குடிபெயர வேண்டியதாச்சு. அந்தச் சமயத்திலே நாகமங்கலம் ஜமீந்தாரிணிக்குத் தகவல் எப்பிடியோ எட்டி, அவங்க வந்து பார்த்தாங்க. மதுரத்தை ரொம்பக் கோவிச்சுக்கிட்டு, உடனே நாகமங்கலத்துக்கு வரணும்னாங்க. அதுக்கு மதுரம் சம்மதிக்கலே. ஒரே பிடிவாதமாக இங்கியே இருந்திடிச்சு. நாகமங்கலத்துக்குப் போனா உங்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோன்னுதான் அது பயப்பட்டுதுன்னு பிருகதீஸ்வரன் வீட்டு அம்மா எங்கிட்ட இதைப் பத்திப் பின்னாடி சொன்னாங்க. நாலஞ்சு மாசம் மதுரத்துக்குத் தெரியாமே ஜமீந்தாரிணியே வீட்டு வாடகை, வைத்தியச் செலவு, எல்லாத்துக்கும் பணம் கொடுத்தாங்க. பஞ்சவர்ணக் கிளியா இருந்த மதுரம் இந்த நாலஞ்சு மாசத்திலே எலும்பும் தோலுமா ஆயிடிச்சு. கபம் கட்டி ஒரே கோழையாத் துப்பித் துப்பிக் கண்ணுங்க குழிவிழுந்து பார்க்கறதுக்கு சகிக்காம ஆயிடுச்சு. பிருகதீஸ்வரன் சார் புதுக்கோட்டைக்குப் போயி யாரோ தெரிஞ்ச டாக்டரை இதுக்காகவே கூட்டியாந்தாரு. அவரு வந்து பார்த்திட்டு, "க்ஷயரோகம் ரொம்பக் கடுமையாப் பிடிச்சிருக்கு! ரொம்ப ஜாக்கிரதையா கவனிக்கணும். மனசு உற்சாகமா இருக்கும்படி செய்யணும். பால், தக்காளி, முட்டை எல்லாம் நெறையக் கொடுக்கணும். மனசு ரொம்பக் கெட்டிருக்கு, ஆதரவான சூழ்நிலையும் நல்ல காற்றும் வேணும்"னு ஏதோ மருந்தும் எழுதிக் கொடுத்திட்டுப் போனாரு. அதைப் பத்தி உங்களுக்குக் கூட அமராவதி ஜெயிலுக்கு ரெண்டு மூணு கடிதாசி எழுதினாங்க. பதில் இல்லே. அந்தக் கடிதாசி உங்களுக்குக் கிடைச்சிதா இல்லியான்னும் தெரியலே. இவ்வளவும் ஆனப்புறம் ஜமீந்தாரிணி அம்மா ரொம்ப வேதனைப்பட்டு, "இந்தா மதுரம்! ஆயிரமிருந்தாலும் நீ எங்க வீட்டுப் பொண்ணு! உன்னை நான் சாகவிடமாட்டேன், நீ சம்மதிச்சாலும், சம்மதிக்காவிட்டாலும் நாகமங்கலத்துக்கு வந்தாகணும். உன் உடம்பு தேற வேறே வழியே இல்லே..." என்று வற்புறுத்தி நாகமங்கலத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. அப்படி அவங்க கூப்பிட்டுக்கிட்டுப் போனப்புறம் தான் பிருகதீஸ்வரன் வீட்டு அம்மா புதுக்கோட்டைக்குத் திரும்பிப் போனாங்க. அதுவரை அந்தம்மா தான் கூட இருந்து மதுரத்தை ராப்பகலாகக் கவனிச்சிக்கிட்டாங்க. நாகமங்கலத்துக்குப் போனப்புறம் மதுரத்துக்கு உடம்பு தேறியிருக்குன்னு போன வாரம் பிருகதீஸ்வரன் சார் போய்ப் பார்த்துவிட்டு வந்து சொன்னாரு! நீங்க உடனே நாகமங்கலத்துக்குப் போகணும். போறப்பவே ஆசிரமத்திலே இறங்கி முடிஞ்சா பிருகதீஸ்வரன் சாரையும் கூடவே கூட்டிக்கிட்டுப் போங்க. உங்களைப் பார்த்தாலே மதுரத்துக்குப் பழைய உற்சாகம் வந்துடும். அது உருகின உருக்கத்துக்கு எல்லாமே நீங்க தான் காரணம் சார்! என்னமோ இப்படி எல்லாம் நடந்திருக்க வேண்டாம். நடந்திருச்சு. கடவுளும் நல்லவங்களைத்தான் இப்பிடி எல்லாம் சோதிக்கிறாரு. மகாலட்சுமி மாதிரி இருந்த பொண்ணு எலும்புந் தோலுமா ஆயிடிச்சு, நீங்க தான் பார்த்துப் பொழைக்க வைக்கணும்" - என்றான் ராமையா. இப்பிடிச் சொல்லும் போது அவனுக்குக் கண் கலங்கி விட்டது. |