15 1948 ஜனவரி முப்பதாந்தேதி டில்லியில் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும்போது காந்தி மகான் சுட்டுக் கொல்லப்பட்டார். ரேடியோவில் அஞ்சல் செய்து கொண்டிருந்த திருவையாறு தியாகராஜர் உற்சவ நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு இந்தப் பேரிடி போன்ற செய்தி அறிவிக்கப்பட்டது. அன்று டில்லியில் சூரியன் அஸ்தமிக்கும் போது சூழ்ந்த இருள் அதன்பின் பல நாள் வரை பாரத நாட்டில் நீடித்தது. செய்தியறிந்த போது ராஜாராமன் மூர்ச்சையாகிவிட்டான். அன்று காலையில் தான் ஊரிலிருந்து திரும்பி வந்திருந்த பிருகதீஸ்வரன் ராஜாராமனை மூர்ச்சை தெளிவித்து ஆசுவாசப்படுத்தினார். ஓடையில் போய் மகாத்மாவுக்காக முழுகி எழுந்தார்கள் இருவரும். மறுநாள் காலை பிருகதீஸ்வரன் தேசபிதாவைத் தன் சொந்தப் பிதாவாக அங்கீகரித்துக் கொண்டு, அத்தனை காலம் வைத்திருந்த பாசத்தின் அடையாளமாக மகாத்மாவுக்குத் தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் வாரி இறைத்தார். தண்ணீரால் அவர் அந்தத் தர்ப்பணத்தைச் செய்தார் என்பதைவிடக் கண்ணீரால் செய்தார் என்பதே பொருத்தமாயிருக்கும். ராஜாராமனும் தாய் தந்தைக்கே செய்தறியாத தர்ப்பணத்தை மகாத்மாவுக்காகச் செய்தான். முத்திருளப்பனும் குருசாமியும் தலையை மொட்டையடித்துக் கொண்டார்கள். தொடர்ந்து ஆசிரமத்தில் காலையும், மாலையும் பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடந்தன. 'வைஷ்ணவ ஜனதோ'வும் 'ரகுபதி ராகவ' பாடலும் இடைவிடாமல் பல நாட்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. தேசம் நிலை கலங்கிப் போயிருந்தது. ஆன்ம பலத்தினாலும் தூய யோகியின் எளிமைக் கோலத்தாலும், பாரத சுதந்திர யுத்தத்துக்கு வழிகாட்டிய தந்தையின் மறைவு பல கோடி மக்களின் கண்களில் நீரைப் பெருக்கியது. மகாத்மாவின் வாழ்நாளில் அவர் உயிரோடு இருக்கும் போது பணியின் காரணமாகவும், தன்னடக்கத்தின் காரணமாகவும் செய்யத் தயங்கியிருந்த ஒரு காரியத்தை இப்போது ராஜாராமன் மனப்பூர்வமான பிரியத்தோடு செய்து கொண்டான். முன்பு ஹரிஜன நிதிக்காக மகாத்மா மதுரை வந்திருந்தபோது டி.எஸ்.எஸ். ராஜன் தன்னைக் கூப்பிட்டபடி 'காந்திராமன்' என்றே தன் பெயரை மாற்றிக் கொண்டு கெஸட்டுக்கும் அறிவித்து விட்டான் அவன். டி.எஸ்.எஸ். ராஜன் அன்று வாய் தடுமாறி அப்படி அழைத்தபோது, "இப்படியே பேர் வச்சுக்கயேன்" - என்று அருகிலிருந்த வைத்தியநாதய்யர் செய்த ஆசிர்வாதமே இன்று பலித்ததாகக் கருதினான் அவன். காந்தியோடு இந்தியாவில் ஒரு மாபெரும் சகாப்தம் முடிந்துவிட்டதாகத் தோன்றியது அவனுக்கு. ***** தேர்தலில் நின்று வெற்றி பெற்றுச் சட்டசபையிலோ பார்லிமெண்டிலோ அவன் பணிபுரிய வேண்டும் என்று பின்னாளில் சக தலைவர்களும், தேசபக்தர்களும் அவனை எவ்வளவோ வற்புறுத்தினார்கள். அவன் தீர்மானமாக மறுத்துவிட்டான். ஆசிரமப் பணியே அவன் பணியாகியது. "எல்லாருமே பதவிகளிலும், நாற்காலிகளிலும் போய் அமர்ந்துவிட்டால், மகாத்மாவின் பணிகளைத் தொடரமுடியாது. பதினெட்டு வருஷ காலத்துக்கும் மேலாக இந்த மகாவிரதத்தில் நாங்கள் ஈடுபட்டோம். பயன் கிடைத்துவிட்டது. கட்சிப் பூசல்களிலும், நாற்காலியைப் பிடிக்கும் பரபரப்பிலும் நமது விரதம் பங்கப்பட்டுப் போய்விடக் கூடாதென்று தான் பயப்படுகிறேன் நான். சுதந்திரம் பெறுவதற்கு முன் நம் எல்லோருக்கும் அடைய வேண்டிய இலட்சியம் சுதந்திரம் என்ற ஒன்றாக மட்டுமே இருந்தது. 'சுதந்திரம் என் பிறப்புரிமை' - என்று திலகர் கொடுத்த குரலையே நம் எல்லாருடைய இதயங்களும் எதிரொலித்தன. அடைய வேண்டியதை அடைந்தபின் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்கும் எல்லைக்கு இப்போது நாம் வந்திருக்கிறோம். நோக்கங்களுக்காகப் போராடும் போது இருந்த ஒற்றுமை பிரயோஜனங்களுக்காக நெருங்கும் போது இருக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். நாட்டுக்கு நான் எதைச் செய்ய வேண்டுமோ அதை இந்த ஆசிரமத்தின் மூலம் தாராளமாகச் செய்வேன். பதவிகள் ஒரு வேளை சேவை செய்வதில் எனக்குள்ள விநயத்தையும் தாகத்தையும் போக்கினாலும் போக்கிவிடலாம். தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்" என்றான் அவன். பிருகதீஸ்வரனும் அதே மனநிலையில் தான் இருந்தார்.
***** 1948-ம் வருடக் கடைசியில் நடந்த தலைவர் தேர்தலில் பட்டாபி சீதாராமையாவுக்கும், புருஷோத்தமதாஸ் தாண்டனுக்கும் போட்டி கடுமையாயிருந்தது. தாண்டன் தோற்றார். பட்டாபி ஜெயித்தார். பிருகதீஸ்வரனோ, அவனோ அந்தக் காங்கிரஸுக்குப் போகவில்லை. அடுத்த ஆண்டு சென்னையில் குமாரசாமி ராஜாவின் மந்திரிசபை ஏற்பட்டது. இந்தியா முழுமையான குடியரசு நாடாகிய 1950-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் நாஸிக்கில் கூடிய காங்கிரஸின் போது - பிருகதீஸ்வரன் உடல் நலங் குன்றியதால் புதுக்கோட்டைக்குப் போய் குடும்பத்தோடு தங்கி விட்டார். உள்ளூர்ப் பிரமுகர்களும், சக தலைவர்களும் வற்புறுத்தியதால், ராஜாராமன் தட்ட முடியாமல் நாஸிக் காங்கிரஸுக்குப் போய் வந்தான். நாஸிக் காங்கிரஸில் தாண்டன், கிருபளானி, சங்கரராவ் தேவ் ஆகிய மூவர் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்கள். போட்டியிடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாகக் கட்சியில் உட்பிளவுகளும் அதிகமாகத் தொடங்குவதாகவே உணர்ந்தான் அவன். அந்தக் காங்கிரஸில் தாண்டன் வெற்றி பெற்றார். ஜவஹர்லால் நேருவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் கட்சிக்கும் - மந்திரி சபைக்கும் ஒற்றுமையின்றி முரண்பாடுகள் வருமோ என எல்லோரும் வருந்தினார்கள். நாஸிக் காங்கிரஸ் முடிந்து அவன் திரும்பிய போது மற்றவர்களோடு மதுரை போகாமல் புதுக்கோட்டை போய்ப் பிருகதீஸ்வரனைப் பார்க்கக் கருதித் திருச்சியிலேயே இறங்கினான் அவன். திரும்பும் போது அப்படி வந்து திரும்புவதாக முன்பே அவருக்கு எழுதியிருந்தான். ரயிலிலிருந்து திருச்சியில் இறங்கியதுமே பேரிடி போல் அந்தச் செய்தி அவனுக்குத் தெரிய வந்தது. பிருகதீஸ்வரன் காலமாகிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்ட போது அந்தச் செய்தியை அவனால் நம்ப முடியவில்லை. இது தாங்கிக் கொள்ள முடியாத அதிர்ச்சியாயிருந்தது அவனுக்கு. அரசியலில் தன் ஆத்மார்த்தமான குருவையும் நண்பரையும் சேர்த்து ஒரே சமயத்தில் இழந்துவிட்டது போல் வேதனையை உணர்ந்து தவித்தது அவன் உள்ளம். அவன் புதுக்கோட்டைக்கு விரைந்தான். அந்தக் குடும்பத்தினருக்குப் பிருகதீஸ்வரனின் மறைவு மிகப் பெரிய அதிர்ச்சியாயிருந்தது. மங்கலமான தோற்றத்தையுடைய பிருகதீஸ்வரனின் மனைவியைச் சுமங்கலிக் கோலத்தில் பார்த்துப் பார்த்துப் பழகியிருந்த அவன் கண்கள், இந்தப் புதிய கோலத்தைப் பார்த்து அதை ஏற்க முடியாமல் தயங்கின. பிருகதீஸ்வரனின் மனைவி வகையில் தமையன்மார்கள், தம்பிமார்கள் வசதியானவர்களாக இருந்ததால் அந்தக் குடும்பம் எதிர்காலத்தை மானமாகக் கழிப்பதில் சிரமப்படாது என்று தோன்றியது. உடன் பிறந்தவர்கள் அனைவருமே அந்த அம்மாளுக்கு ஆறுதலாக அப்போது புதுக்கோட்டையில் வந்து தங்கியிருந்தார்கள். ராஜாராமனைப் பார்த்ததுமே மாமி பொறுக்க முடியாமல் அழுது விட்டாள். அவள் மதுரத்துக்காக மதுரையில் வந்து துணையிருந்ததை எல்லாம் நினைத்தான் அவன். "உன் மேலே கொள்ளைப் பிரியம் அவருக்கு. சதா 'ராஜா, ராஜா'ன்னு உன்னைப் பத்தியே சொல்லிண்டிருப்பார். நீ நாஸிக்லேருந்து திரும்பி வர போது இங்கே வரேன்னு மதுரையிலேர்ந்து புறப்படறப்பவே கடிதாசி போட்டிருந்தே. நீ திரும்பி வரபோது உடம்பு சரியாயிடும்; உன்னோடவே மதுரை வரலாம்னு இருந்தார்..." ராஜாராமன் மாமிக்கு ஆறுதல் கூறிவிட்டுத் தன் மனதுக்கு அப்படி ஆறுதல் கூறிக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டான். "எனக்குத்தான் மாமா இல்லாமே ரொம்ப ரொம்பக் கஷ்டம் மாமீ! வலது கை ஒடிஞ்ச மாதிரித்தான் இனிமே..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு. கடிதம் போட்டு ஆசிரமத்திலிருந்த குருசாமியையும் முத்திருளப்பனையும் புதுக்கோட்டைக்கு வரவழைத்தான் அவன். ***** புதுக்கோட்டையில் பிருகதீஸ்வரனுடைய காரியங்கள் முடிகிறவரை இருந்துவிட்டு ஆசிரமத்துக்குத் திரும்பிய பின்பு துக்கமும் தனிமையும் வாட்டவே, ராஜாராமனுக்கு ஆசிரமத்தில் இருப்புக் கொள்ளாமல் உடம்பும் மனமும் தவித்துப் பறந்தன. பிருகதீஸ்வரனைப் போல் உலக அனுபவமும், முதுமையும், சாந்த குணமுமுள்ள ஒருவர் இல்லாமல் அந்த ஆசிரமத்தை நடத்துவது எவ்வளவு சிரமமான காரியம் என்பது போகப் போக அவனுக்குத் தெரிந்தது. அவனுக்குச் சிரமமே கொடுக்காமல் எல்லா நிர்வாகப் பொறுப்பையும், கஷ்டங்களையும் இதுவரை அவர் தாங்கிக் கொண்டிருந்தார். இப்போது எல்லாப் பொறுப்பையும் அவனே தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. நெருங்கியவர்களும் வேண்டியவர்களும் ஆத்மார்த்தமானவர்களும் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டிருந்தார்கள். உலகில் தான் மட்டுமே தனியே நிற்பது போன்ற வேதனையைச் சில வேளைகளில் உணர்ந்து தனிமையில் கண்ணீர் விட்டான் அவன். ரத்தினவேல் பத்தர் போய் விட்டார். சிரித்துக் கொண்டே பெண்ணைக் காப்பாற்றச் சொல்லி வேண்டிய மதுரத்தின் தாய் போய்விட்டார். மதுரமும் போய்விட்டாள்! அவனைப் போன்ற பல்லாயிரம் இளைஞர்களை இந்தத் தேசபக்தி என்ற மகாவிரதத்துக்கு அழைத்த மகாத்மாவும் போய்விட்டார். வேலூர் சிறையில் அறிமுகமான நாளிலிருந்து குருவாகவும், நண்பராகவும் உடனிருந்து உதவிய பிருகதீஸ்வரன் போய்விட்டார். மனித ஜாதியே அழிந்தபின் மீதமுள்ள மயான பூமியில் தனியே இருப்பது போலிருந்தது அவனுக்கு. துயரத்தை மறக்கவும், தன் மேல் அன்பு செலுத்தியவர்களின் பிரியத்தை எல்லாம் பகிர்ந்து, தான் பிறர் மேல் அன்பு செலுத்தவும் சுயநலமற்ற சேவைகளைச் செய்யும் ஒரு புதிய காலத்துத் தவமுனிவனாக மாறினான் அவன். ***** பாரதநாடு பரிபூரணக் குடியரசாக உருப்பெற்றதன் பின் நாட்டில் ஒவ்வொன்றாக வருடங்கள் நகர்ந்தன. நாட்டின் தேர்தல்களும் புதிய புதிய மந்திரி சபைகளும் மாறி மாறி வந்தன. சுதந்திரத்துக்காகப் போராடிய இந்தியாவில் ஒரே ஓர் இயக்கம் தான் இருந்தது. ஓரே ஒரு நோக்கம் தான் இருந்தது. நாட்டுக்கு வந்த சுதந்திரம் அரசியலில் சிந்திக்கும் உரிமையையும் கருத்து வேறுபடும் உரிமையையும் அளித்தது. அகில இந்திய ரீதியிலும், ராஜ்யங்களிலும் பல்வேறு கட்சிகள் தோன்றின. பல்வேறு தலைவர்கள் வந்தார்கள். பல்வேறு இலட்சியங்களைக் கூறினார்கள். கொள்கைகளை உபதேசித்தார்கள். ஆன்மபலத்தில் நம்பிக்கையுள்ள - மகாத்மாவைப் போன்ற அரசியல் சத்தியாக்கிரகி ஒருவரை மட்டும் மீண்டும் பார்க்கவே முடியாமலிருந்தது. அணைக்கட்டுகளும் பிரம்மாண்டமான தொழிற்சாலைகளும் உருவாயின. பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் பெருகின. மொழிவாரியாக மாகாணங்கள் பிரிந்தன. ஒவ்வொரு பிரதேச மொழியும் வளர வாய்ப்பளிக்கும் நல்லெண்ணத்தோடு இது செய்யப்பட்டது. பரிபூரணமாக குடியரசு அந்தஸ்துப் பெற்றுவிட்ட இந்தியாவில் வெளிநாட்டு உறவுப் பிரச்னையில் காஷ்மீரும், உள்நாட்டு உறவு நிலைகளில் மொழியும் நிரந்தரமான தடைகளாக நின்றன. 'செப்புமொழி பதினெட்டு இருந்தாலும் சிந்தனை ஒன்றே' - என்று பல ஆண்டுகளுக்கு முன் பாரதி பாடி வைத்த ஒற்றுமை மெல்ல மெல்லப் போய் எத்தனை மொழிகள் உண்டோ அத்தனைக்கும் அதிகமான வேற்றுமைகளும், வெறுப்புகளும் பிடிவாதங்களும் பெருகின. 1959-ல் காந்திராமன் தலைமையில் 'ரூரல் எஜுகேஷன் ஸ்டடி மிஷன்' ஒன்றை இந்திய அரசாங்கம் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பியிருந்தது. இந்தப் பிரயாணத்தின் போது காந்திராமன் மிகவும் உற்சாகமாயிருந்தார். வெளிநாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும், விஞ்ஞான வேகத்தையும் பார்க்கப் பார்க்க இந்தியா இப்படி வளர்வது என்றைக்கு என்னும் நியாயமான கவலை அவர் மனத்தில் பிறந்தது. ஸ்விட்ஸர்லாந்திலும், ஜெனிவாவிலும் இருந்த போது மகாத்மா ரோமன் ரோலந்தைச் சந்தித்துப் பேசிய பழைய நிகழ்ச்சிகளை அங்குள்ள சில முதியவர்கள் தம்மிடம் சொல்லக் கேட்டு, மனம் நெகிழ்ந்தார் அவர். அந்தப் பிரயாணம் முடிந்து திரும்பியதும் டில்லியில் ஒரு மாதம் தங்கி எல்லாத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார் அவர். நாட்டுப்புறங்களில் கல்வி வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் செய்ய வேண்டிய உடனடியான காரியங்கள் பற்றி நூற்றைம்பது பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அவர் கல்வி மந்திரியிடம் சமர்ப்பித்தார். சென்னையிலும் மதுரையிலும் அவருக்குப் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டைப் பற்றிய தன் எதிர்காலக் கவலைகளை அவர் அந்த வரவேற்புக்களில் மனம் திறந்து பேசினார். மகாத்மாவுக்குப் பின்பு ஆன்ம பலத்திலும் சத்தியத்திலும் தொண்டு செய்வதிலும் கவலையுள்ள ஒரே பெரியவராக ஆசாரிய விநோபாபாவே ஒருவர் மட்டுமே மீதமிருப்பதாக அந்தச் சொற்பொழிவின் போது அவர் குறிப்பிட்டார். ஆன்மாவினால் வாழ முயலும் பரம்பரை போய்விட்டதோ என்று காந்திராமனைப் போன்றவர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் விநோபாபாவேயின் சர்வோதயத் தத்துவங்களும் பூமிதான இயக்கமும் அவர் மனத்தைப் பெரிதும் மகிழச் செய்தன. தேசிய மகா விரதங்களைச் செய்யும் முனிவர்களின் கடைசிக் கொழுந்தாக விநோபாபாவே அவருக்குக் காட்சியளித்தார். காந்திராமன் மீண்டும் 1961 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காந்தீயச் சொற்பொழிவுகள் செய்யவும், நல்லெண்ணங்களைப் பரப்பவும், இலங்கையிலும், தென்கிழக்கு ஆசியாவிலும், பர்மாவிலும், ஆஸ்திரேலியாவிலுமாக மூன்று மாத காலம் சுற்றுப் பயணம் செய்ய நேர்ந்தது. அந்தச் சுற்றுப் பிரயாணம் முடிந்ததும் சில மாதங்களில் அவருடைய அறுபதாண்டு நிறைவு விழா வந்து சேர்ந்தது. நாடு இருந்த நிலையில் விழாக்கள் கொண்டாடும் மன நிலையிலோ, மாலைகள் அணிந்து கொள்ளும் உற்சாகத்திலோ அவர் இல்லை. எவ்வளவோ மறுத்தும் கேளாமல் நண்பர்களும், அவரால் படித்து முன்னுக்கு வந்தவர்களும், தேசபக்தர்களும் சென்னையில் அந்த விழாவைப் பிரமாதமாக நடத்தி விட்டார்கள். அடுத்த மாதமே ஆசிரமத்துக்குத் திரும்பியதும், தம்மோடு ஆரம்ப முதல் இருந்து ஆசிரமத்துக்குப் பணிபுரியும் முத்திருளப்பனையும், குருசாமியையும் பாராட்டி அவர் ஒரு விழா நடத்தினார். அந்த விழாவில் தங்களைப் பாராட்டி அவர் மனம் விட்டுப் பேசிய பேச்சினால் முத்திருளப்பனும் குருசாமியும் மனம் நெகிழ்ந்து உருகினார்கள். ஆசிரமத்தின் ஒரு பிரேயர் ஹாலுக்குப் பிருகதீஸ்வரனின் பெயரை வைத்துப் 'பிருகதீஸ்வரன் ஹால்' என்று கூப்பிடச் செய்திருந்தார் அவர். மதுரத்தின் நினைவையோ தன் இதயத்துக்கு மட்டுமே சொந்தமான அந்தரங்கமாக வைத்துக் கொண்டுவிட்டார். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் நீண்ட நாட்களாக எழுதி வந்த... 'மை கன்டரி - பாஸ்ட் அண்ட் ப்ரெஸென்ட்' - என்ற புத்தகத்தின் இரண்டு பாகங்களும் வெளியிடப்பட்டன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலருடைய பாராட்டுக்களைப் பெற்றது அந்த நூல். 'மிகவும் பயன்படத் தக்க நூலைப் பயன்பட வேண்டிய சமயத்தில் நாட்டுக்கு அளித்திருக்கிறீர்கள்' - என்று ஜவஹர்லால் நேரு அதைப் படித்துவிட்டு எழுதியிருந்தார். காந்திராமன் அந்தப் பாராட்டில் உள்ளம் குளிர்ந்தார். அந்தப் புத்தகத்தில் இந்தியாவில் இரண்டு சகாப்தங்கள் அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன. சர்தார் படேலின் மறைவு வரை உள்ள காலம் அந்த நூலில் கூறப்பட்டிருந்தது. சத்திய சேவாசிரமத்தின் கடந்த காலத்தைச் சேர்ந்த வருடங்களில் எத்தனையோ பேர் படித்து வெளியேறிச் சமூகத்தில் கலந்து விட்டார்கள். காந்திராமன் அந்த ஆசிரமத்தில் பல எளிய திருமணங்களையும் நடத்தி வைத்தார். அவற்றில் சில மனம் விரும்பிச் செய்து கொண்ட அன்பின் அடிப்படையைக் கொண்ட கலப்பு மணங்கள். பலருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக அமையும் நட்பினரும், பழகியவர்களும், அன்பர்களும், அவரைச் சூழ்ந்திருந்த காலங்களில் சொந்த மனத்தின் துயரங்களை அவர் மறக்க முடிந்தது. வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்ட எத்தனையோ திறமையுள்ள இளைஞர்களுக்கு அவரால் வேலை கிடைத்தன. இளமையில் வழி தவறிய இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும், திருந்தவும் வாழவும் வாய்ப்புக் கிடைத்தது. அவருடைய சாந்தமயமான புன்சிரிப்பிலேயே திருந்தியவர்கள் பலர்; பேசிக் கேட்டுத் திருந்தியவர்கள் பலர்; கூட இருந்து ஆசிரம வாழ்வில் பழகிப் பழகிப் பண்பட்டவர்கள் சிலர். சத்திய சேவாசிரமத்தை எப்படி ஆக்கவேண்டுமென்று ஒரு காலத்தில் அவரும் பிருகதீஸ்வரனும் கனவு கண்டார்களோ அந்தக் கனவு இன்று நனவாகிவிட்டது. அவர் அந்தக் கனவு நனவாகியதை இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். பிருகதீஸ்வரனுக்குத்தான், பாவம் இதை இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. நாட்டின் அடுத்த பேரதிர்ச்சியாக ஜவஹர்லால் நேருவின் மரணம் நேர்ந்தது. அன்று தன் டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் அவர்: 'தேசத்தின் ரோஜாக் கனவு அழிந்துவிட்டது. ரோஜா இதழ்களைத் திறந்து பேசிய வாய் இனிப் பேசாது. ரோஜாப்பூக் கைகள் இனி பணி புரியா. 'எனக்குப் பின் என் மொழியை நேரு பேசுவார்' என்று யாரைப் பற்றிப் பெருமையாக மகாத்மா சொல்லிவிட்டுப் போயிருந்தாரோ அந்த இனிய வாரிசும் பாரத நாட்டில் இன்று மறைந்து விட்டது.' ஜவஹர்லால் நேருவுக்குப் பின் வலிமை வாய்ந்த தலைமை - தேசம் முழுவதும் செவிசாய்க்கும் ஒரு தலைமை இல்லாமற் போய்விட்டது. லால்பகதூர் சாஸ்திரி வந்தார். நாடு முழுவதும் மொழிக் கிளர்ச்சி தீயாய்ப் பரவியது; அவசரப்பட வேண்டாததற்கு அவசரப்பட்டு கலகத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள நேர்ந்தது. தேசீய ஒருமைப்பாடு மொழிப் பிரச்னையால் சின்னா பின்னமாகிவிடும் போலிருந்தது. வடக்கும், தெற்கும் இணைந்த மனப்பான்மையோடிருக்கப் பாடுபடும் நியாயமான செல்வாக்குள்ள தலைமை இல்லை. பஞ்சசீலக் கரம் நீட்டிய இந்தியாவின் காலை வாரிவிட்டு விட்டிருந்தது சீனா. போராட்டங்களின் முறை மாறியது. சுதந்திரத்துக்கு முன்பு சத்தியாகிரகமும், தியாகவுணர்வும் பிறரை மனங்கனிய வைப்பதற்காகத் தன்னைத் துன்புறுத்திக் கொள்ளுதலும் அடங்கிய சாத்வீகப் போர் முறை இருந்தது. படிப்படியாகத் தியாக மனப்பான்மை குறைந்து வேண்டியதைத் துன்புறுத்திப் பெறலாம் என்ற அசுர மனப்பான்மை சில பகுதிகளில் வந்துவிட்டது. ஒரு சத்தியாக்கிரகிக்குத் தன்னைக் கொன்று கொள்ளும் பலம் வேண்டுமென்றார் மகாத்மா. தேவையை அடையப் பிறரைக் கொல்லலாம் என்று நினைக்குமளவுக்கு மாறியிருந்தது நாடு. ஒவ்வொரு ராஜ்யத்துக்கும் தன் சுய நன்மைகளில் மட்டுமே பற்று விழுந்தது. வடக்கே உள்ளவர்களின் அவசர மனப்பான்மையால் எல்லாம் குழப்பமாகி விட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பும் தொடர்ந்து தாஷ்கண்ட் சந்திப்பும் நேர்ந்தது. ஆக்கிரமிப்பு வேளையில் மட்டும் மொழி பேதம், மாநில பேதங்களை மறந்து, அபூர்வமாகவும் அவசரமாகவும் நாட்டில் ஓர் ஒற்றுமை உணர்வு தென்பட்டது. தாஷ்கண்டில் எதிர்பாராத விதமாக சாஸ்திரி மறைந்தார். நேருவின் மறைவை ஈடுசெய்வது போல வந்த தைரியசாலியும் மறையவே இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப் பட்டார்கள் பெரியவர்கள். காந்திராமன் மீண்டும் கலக்கம் அடைந்தார். மெல்ல மெல்ல நாட்டில் ஓர் அமைதியின்மை உருவாயிற்று. அறுபது வருஷங்களுக்கும் மேலாகக் கட்டிக்காத்து வளர்த்த தேசிய மகாவிரதம் இருபது வருஷங்களில் படிப்படியாகப் பலவீனமடைந்தது. பன்னூறு மகான்களின் எண்ணற்ற தியாகங்களை அஸ்திவாரம் போட்டுக் கட்டிய சுதந்திர மாளிகையில் தூசுகள் அடையத் தொடங்கியிருந்தன. அன்பும், கருணையும் சத்தியமுமாகிய சிறந்த மொழிகளின் பொருளை உணர்ந்த நாட்டில், பேசும் மொழிகளால் வேறுபாடுகள் பிறந்துவிட்டன. அரசியல்வாதிகளிடையே தியாக மனப்பான்மை போய்விட்டது. தேர்தலில் ஜயிப்பதும், ஜயித்தபின் உடனே அடுத்த தேர்தலில் ஜயிக்கும் வழி வகைகளை யோசிப்பதுமாக மாறிவிட்டார்கள். அவர்கள் வறுமையை, பசியை, அறியாமையை ஜயிக்க வேண்டுமென்று சுதந்திரம் பெறுமுன் இருந்த தாகம், சுதந்திரம் பெற்ற பின் தேர்தல்களில் ஜயிக்கும் வெறும் ஆசையாக மட்டுமே வந்து மீந்தது. பணமுள்ளவர்களே தேர்தல்களில் நிற்க முடியுமென்றும் ஆயிற்று. சத்திய சேவாசிரமத்தின் ஒரு மூலையிலிருந்து செய்தித்தாள்களில் நாட்டு நடப்புக்களைப் படிக்கும் போதெல்லாம் கண்ணீர் வடித்தார் காந்திராமன். ஒரு நிச்சயமான நல்ல காரியம் அல்லது பொதுக்காரியம் தேர்தலில் ஜயிக்க இடையூறாக இருக்கும் என்றால் அதைச் செய்யத் தயங்குவதும், ஒரு நிச்சயமான கெட்ட காரியம் அல்லது பொது நன்மைக்கு இடையூறான காரியம் தேர்தலில் ஜயிக்க உதவியாக இருக்கும் என்றால் அதை உடனே செய்து விடுவதுமாக மாறியது அரசியல். சுதந்திரப் போராட்டக் காலத்தில் இருந்த ஆத்ம பலமும் சத்திய வேட்கையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் எங்கே போயின என்றே தெரியவில்லை. பல வருடங்களுக்கு முன் பிருகதீஸ்வரன் தன்னிடம் கூறிய ஒரு கருத்தை இப்போது மிகவும் கவலையோடு நினைவு கூர்ந்தார் காந்திராமன். "காந்திமகானைப் போல் ஆத்ம பலத்தை நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய் சுபாஷ் சந்திர போஸைப் போல் மனவலிமையையும் உடல் வலிமையையும் நம்பிச் செயலில் இறங்குகிறவர்களும் இல்லாமற் போய்விட்டால் நாளைய இந்தியாவை என்னால் நினைக்கவே முடியவில்லை." - அன்று என்றோ அவர் கூறிய வார்த்தைகள் இன்றைய நிலைமைக்குத் தீர்க்க தரிசனம் போல் அமைந்திருந்தன. ஆத்ம பலமும், வீரமும் ஒரு புறம் இருக்கட்டும், காந்தியோடும் சுபாஷ் போஸுடனும் அந்தத் தலைமுறை போய்விட்டதென்றே வைத்துக் கொள்வோம். வாக்கு நாணயமும் சத்தியத்தில் பற்றுமுள்ள ஓர் அரசியல் வாதியையாவது இங்கே சந்திக்க முடியாமலிருக்கிறதே! மாணவர்களைக் கட்சி அரசியலில் ஈடுபடுத்தக் கூடாதென்று காந்தி சொன்னார். இன்று ஒவ்வொரு கட்சியும் மீன்களுக்கு வலை வீசுவது போல் கல்விக் கடலிலிருந்து அரசியல் கரைக்கு வலை வீசி மாணவர்களை இழுக்கின்றன. படிப்புக் கெடுகிறது. ஏழைப் பெற்றோர்கள் கவலை அடைகிறார்கள். கட்டுப்பாடு எல்லாத் திசையிலும் குலைகிறது. மூத்தவர்களை மதிப்பதில்லை. காரண காரியத்தோடு நிதானமாக விவாதிக்கவோ சிந்திக்கவோ பொறுமை இல்லை. வெள்ளத்தில் மிதப்பது போல் தவிக்கிறார்கள். எங்கும் எல்லாரும் சந்தர்ப்பவாதிகளும், தேசத் துரோகிகளும், சமூக விரோதிகளும் எங்கே எந்தக் குழப்பம் நடந்தாலும் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் காத்திருக்கிறார்கள். பொதுக் காரியங்களில் சிரத்தை குறைந்துவிட்டது. காந்திராமன் மிகவும் மனம் நொந்து போயிருந்தார். 'மை கன்டரி பாஸ்ட் அண்ட் பிரெஸென்ட்' புத்தகத்தின் மூன்றாவது பாகம் வெளியாயிற்று. 1967 பொதுத் தேர்தல் வரை உள்ள நிலைமைகளும், பிறவும், புத்தகத்தில் அடங்கியிருந்தன. பல்லாயிரம் சதுர மைல்களைச் சீனாவுக்குப் பறி கொடுத்திருக்கும் துயரத்தைப் பற்றி மனம் நெகிழ எழுதியிருந்தார் நூலில். பணத்துக்காகவும் பதவிக்காகவும் கட்சி மாறும் கயமை கண்டிக்கப்பட்டிருந்தது. படித்தவர்கள் விவரம் தெரிந்தவர்கள் கட்சி மாறுவது நாட்டின் ஜனநாயகத்துக்கு இழைக்கும் அவமானமாகும் என்று அந்த நூலில் அவர் மிகவும் வருந்தியிருந்தார். 1967க்குப் பிறகு நாட்டின் பல மாநிலங்களில் கூட்டு அரசாங்கங்களும், மாறி மாறி மந்திரி சபை கவிழ்தலும், தினம் ஒரு கட்சி மாறுதலும், மாணவர்கள் போராட்டமும் தொழில் அமைதியின்மையும் நிலவின. பலவீனமான நாட்டுத் தலைமை எல்லாவற்றையும் தீர்க்க வழியின்றித் தவித்தது. "இறைவா! மகத்தான ஒரு சகாப்தத்தைப் பார்த்து விட்டேன். கவலைகளைத் தரும் ஒரு காலம் எதிரே தெரிகிறது. மகாத்மாவின் கண்கள் எந்த இந்தியாவைப் பார்த்தால் ரத்தக் கண்ணீர் சிந்துமோ அந்த இந்தியாவை நான் இருந்து பார்க்க நேரிட்டு விடாமல் என்னை அழைத்துக் கொண்டுவிடு" என்று சதா காலமும் இறைவனைப் பிரார்த்திப்பது அவர் வழக்கமாயிருந்தது. அடிக்கடி நெஞ்சு வலியாலும் ரத்தக் கொதிப்பாலும் அவஸ்தைப்பட்டார் அவர். நாடும் தலைவர்களும், இளம் தலைமுறையும் அவர் ஒருவர் இருக்கிறார் என்பதைப் பற்றிக் கவலைப்படாத வேகத்தில் எங்கோ போய்க் கொண்டிருந்தாலும், அவர் நாட்டைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும், இளம் தலைமுறையைப் பற்றியுமே கவலைப்பட்டுச் சிந்தித்தார். அறிக்கைகள் விட்டார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். ஆத்மாவினால் வாழ்ந்தவர்களின் நிதானமான தலைமுறை மெல்ல மெல்ல மறைவதையும், மனத்தினால் - உடம்பினால் வளரும் தலைமுறை பரபரப்பாக எதிரே எழுவதையும் கண்டு நெஞ்சு துடித்தார் அவர். எங்கெங்கோ ரயில்கள் கவிழ்க்கப்படுதலும் பஸ்கள் எரிக்கப்படுதலுமாகப் பத்திரிகைகளில் படித்த ஒவ்வொரு செய்தியும் அவரைத் தளர்த்தி ஒடுங்கச் செய்தன. அன்பும், கருணையும், சத்தியமும், சுபீட்சமும் நிறைந்த இந்தியாவை அவர் கண்கள் தேடின. உதாசினமும், வெறுப்பும், குரோதமும், மனிதத் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்காத வெறும் தேர்தல் வேட்டையாடும் கட்சிகளும் நிறைந்த இந்தியாதான் எதிரே தெரியத் தொடங்கியது. தேசத்தை எண்ணிப் பல இரவுகள் உறங்காமல் தவித்தார் அவர். பார்க்க வந்த பிரமுகர்களிடம் எல்லாம் கவலைப்பட்டார். தம் வயதை ஒத்த சர்வோதயத் தலைவர்களுக்குக் கடிதங்கள் எழுதினார். காந்தியமும் சகிப்புத் தன்மையும் இந்திய மண்ணில் மறைவது போல் தோன்றும் போது எங்கோ அது உயிர் பெறுவது புரிந்தது. ஆயுத பலத்தைச் சகிப்புத் தன்மையால் எதிர்கொண்ட செக்கோஸ்லோவேக்கியாவை ரஷ்யா ஆக்கிரமித்த செய்தி வெளியான தினத்தன்று அவர் தம் டைரியில் கீழே வருமாறு எழுதினார். 'ஏ செக் நாடே! ஒரு காலத்தில் இட்லர் உன் சுதந்திர நெஞ்சில் மிதித்தான். இன்றோ 'வியட்நாமில் மனிதத்தன்மை காப்பாற்றப்படவேண்டும்' என்று கூறிக் கொண்டே எழுபதாயிரம் ரஷ்யர்கள் துப்பாக்கிகளோடு கனமான பூட்ஸ் கால்களால் அழுத்தமாக உன் சுதந்திர நெஞ்சை மிதித்துக் கொண்டு நிற்கிறார்கள். 'தற்காப்புக்கு அடுத்தவனைக் கொல்லும் சக்தி தேவை இல்லை. தானே சாவதற்குரிய மன உறுதிதான் தேவை' என்று எங்கள் மகாத்மா கூறிய உறுதி உனக்கு இன்று இருக்கிறது. நீ அறத்தினால் வெல்வாய்! உன்னை எதிர்க்கும் மறமும், கொடுமைகளும் நிச்சயமாய் அழியும்...' இது பற்றிப் பத்திரிகைகளுக்கு அவர் ஓர் அறிக்கையும் விடுத்தார். மொழி விஷயத்தில் அவசர மனப்பான்மை காட்டாமல் தென்னிந்தியர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்குமாறு பிரதம மந்திரிக்கு ஒரு கடிதமும், வன்முறைகளில் இறங்குவதைத் தவிர்க்குமாறு மாணவர்களை வேண்டிப் பத்திரிகைகளுக்கு ஓர் அறிக்கையும் அனுப்பினார். அவரிடமிருந்து வெளி உலகுக்குக் கிடைத்த கடைசி உரைகள் இவைதான். இதற்குப் பின்பு அவர் அறிக்கைகள் விடவில்லை. பிரசங்கங்கள் செய்யவில்லை. அறிவுரைகள் கூறவில்லை. அன்று மதுரத்தின் சிரார்த்த தினம். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தினத்தன்று தவறாமல் நாகமங்கலம் போய்த் திரும்புவது அவர் வழக்கமாயிருந்திருக்கிறது. அன்றும் அதிகாலையிலேயே அவர் நாகமங்கலம் போயிருந்தார். பகல் முழுவதும் அங்கேயே இருந்துவிட்டு மாலையில் ஆசிரமம் திரும்பினார். திரும்பும் போது இருபது வருஷங்களுக்கும் மேலாகத் தாங்கிய சோகம் திடீரென்று கனப்பது போல் ஓர் உணர்வு அவர் உள்ளே உந்தியது. ஆசிரமம் திரும்பியதும் - மேஜையில் மீதமிருந்த பைல்களில் குறிப்பு எழுதிக் கையொப்பமிட்டார். ஆசிரம நிர்வாக வேலைகளாக முத்திருளப்பனிடமும் குருசாமியிடமும் சிறிது நேரம் பேசினார். காரியதரிசி நாராயண் ராவைக் கூப்பிட்டு 'பெண்டிங்' ஆக இருந்த கடிதங்களுக்குப் பதில் கூறி எழுதிக் கொள்ளச் செய்தார். அது முடிந்ததும் ஓர் அரை மணி நேரம் சர்க்காவில் நூல் நூற்றார். ஆசிரமத்துப் பையன் ஒருவன் அவரைப் பார்க்க வந்தான். அவனோடு பத்து நிமிஷம் பேசி அனுப்பினார். நாகமங்கலம் போய்விட்டு வந்த நினைவுகளை டைரியில் எழுதினார். தூங்குமுன் வழக்கமாகப் படிக்கும் கீதைப் பகுதியைப் படித்தபோதும், படுக்கையை நோக்கி நடந்த போதும் நெஞ்சு தாங்க முடியாமல் வலித்தது. மறுபடி திரும்பிப் போய் அறைக் கோடியில் ஒரு மேடையில் வைக்கப்பட்டிருந்த அந்த வீணையை எடுத்து வந்து கண் பார்வையில் படும்படி படுக்கைக்கு அருகே கிடந்த பெஞ்சின்மேல் வைத்துக் கொண்டார். ஜன்னல் வழியே நிலா ஒளியில் மலைகளும், ஓடைக் கரையும், மரங்களும் அழகாகவும் நிசப்தமாகவும் அவரையே பார்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றின. ஓடை நீர் கலகலவென்று பாயும் ஜலதரங்க ஒலியாகத் தொலைவில் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நிலாக்காலத்து முன்னிரவின் சௌந்தரியங்கள் அமைதியான அந்த ஆசிரமத்தைச் சுற்றிலும் சூழ்ந்திருந்தன. நிசப்தத்தின் அர்த்தமில்லாத சங்கீதம் போல் காற்று வீசிக் கொண்டிருந்தது. மேகங்கள் இல்லாத நீல நீர்க்குளம் போல் நிலாவைச் சுற்றிய ஆகாயம் களங்கமற்றுத் தெரிந்ததை ஜன்னல் வழியாகப் பார்த்தார் அவர். எங்கிருந்தோ 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - என்று ஒரு குரல் மிருதுவாக அவர் செவிகளில் வந்து பூவிதழ்களாய்ச் சொற்களை உதிர்ப்பது போல் உணர்ந்த போது, அவருடைய நெஞ்சு மேலும் தாங்க முடியாமல் வலித்தது. நிலாக்காலத்து முன்னிரவின் சோபைகளும் ஆகாயத்தின் நீலநிற சௌபாக்கியங்களும், ஓடை நீரின் உருவமில்லாத பேச்சும், அநுராகத்தின் சுபசோபனங்களை உணர்த்தும் தென்றலும் எல்லாமே சங்கீதமாய் நிறைந்து தவிப்பது போல் மனத்துள் உணர்ந்தார் அவர். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த வீணையில் வளைகள் அணிந்த தந்தநிறக் கைகள் மெல்ல வந்து ஸ்வர ஜதிகளையும், ராக தேவதைகளையும் மிருதுவாகத் தடவிக் கொடுப்பது போல் மீட்டின. அந்த ஒலிகள் அவருடைய ஆத்மாவைத் தொட்டு அழைத்தன. வீணைக்கும் அப்பால் மகாத்மாவின் படமும் - 'சத்தியாக்கிரகம் என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்தி வரக்கூடிய நியதி' என்ற வாக்கியமும் மங்கலாகத் தெரிந்தன. பார்வை மங்கிக் கொண்டே வந்தது. சரீரம் மெதுவாவது போல் இலேசாயிருந்தது. செவிகளில் ஒலித்த ராகங்களிலும், கண்களில் மங்கிய மகாத்மாவின் படத்திலுமாக இதயம் மெல்ல மெல்லக் கரைந்தது.
எல்லையில்லாததோர் காட்டிடை - நள் இருளென்றும் ஒளியென்றும் சொல்ல ஒணாததோர் மயக்கத்தே - இளம் சோகக்குயில் ஒன்றிசைக்கிறது - அதன் சோகம் முழுதும் தெரியுதிலை சுவடு முழுதும் புரியுதிலை தொல்லைப் பழங் காலமுதலாய் - எனைத் தேடித் தவித்த குரல் சொல்லைக் குழைத் தாளுங்குரல் ஒரு சோகம் முதிர்ந்து முதிர்ந்தூறிப் பல்லாயிர மூழிகள் தொடர்ந்து பாடிப் பசித்த குயிலின் குரல்... என்று எப்போதோ - தனிமையும் சோகமும் உந்திப் பிறந்த அந்தக் கவிதை மெல்லிய தொனியில் காதருகே கேட்கிறது. இப்போது உண்மையில் இந்தக் குரலின் தொனியிலேயே ஒரு பசி தெரிகிறது. பல்லாயிரம் ஊழிகள் பாடிய பசி தெரிகிறது. இருளும் ஒளியும் புரியாத மயக்கத்தில் அக்குரல் வருகிற இடத்துக்குத் தேடிப் போக வேண்டும் போல் இருக்கிறது. போகத் தொடங்கிய பாதையோ முடிவில்லாததாயிருந்தது. எட்டாத தொலைவிலிருந்து கேட்கும் அந்தக் குரலின் பிறப்பிடம் வரை தேடிக் கொண்டு போகும்போதே அந்த அவசரத்தில் சரீரம் தவறி ஆன்மா நடந்து போகத் தொடங்குகிறது. ஆன்மாவின் யாத்திரை ஆரம்பமாகும் போதே கேட்கின்ற குரல் மிகமிக அருகில் வந்து விட்டது போலிருந்தது. இருளிலிருந்து ஒளிக்குப் போவது புரிந்தது. துக்கத்திலிருந்து மகிழ்ச்சிக்குப் போவது தெரிந்து சோகமும் சுவடுகளும் புரிந்தன. தன்னைத் தேடும் குரல் எது என்றும் புரிந்தது; தெரிந்தது. கடைசியாகத் தெரிந்த உருவமும், ஒலித்த ராகங்களும், அளித்த புன்னகையும் சாந்தமும் மட்டுமே முகத்தில் அப்படியே பதிந்தன. பத்து பதினைந்து நிமிஷங்களுக்குப் பின் விளக்குகளை அணைப்பதற்காக நாராயணராவ் அங்கே வந்தபோது பெரியவர் இருளென்றும் ஒளியென்றும் புரியாத உலகிற்குப் போயிருந்தார். இருளிலிருந்து ஒளியை அடைந்திருந்தார். அவர் ஒளியை அடைந்த போது ஆசிரமம் இருண்டது; அழுதது; தவித்தது. பல நூறு குரல்கள் கதறின. கண்கள் நெகிழ்ந்தன. ***** முத்திருளப்பன் தம்முடைய மூப்பையும், தளர்ச்சியையும் பொருட்படுத்தாமல் அடிக்கடி உடனிருந்து பல விஷயங்களைக் கூறியதாலும் டைரிகளின் குறிப்புக்கள் ஓரளவு பெரியவரின் நினைவுகளையும், அவ்வப்போது கருதிய கருத்துக்களையும் அறிந்ததாலும், என்னால் முடிந்த வரை இந்தக் கதையை எழுதிவிட்டேன். எழுதி முடிந்ததும் நாராயணராவும், குருசாமியும் இதைப் படித்துப் பார்த்துச் சில திருத்தங்களைச் சொன்னார்கள். அந்தத் திருத்தங்களையும் செய்தாயிற்று. சத்திய சேவாசிரமத்தை அமைக்கும் போதும், பின்னாலும், பெரியவர் காந்திராமனுக்கும் பிருகதீஸ்வரனுக்கும் கெடுதல்கள் பல செய்த சிலரைப் பற்றிக் கதையில் எழுதியிருந்தேன். முத்திருளப்பன் அப்பகுதிகளை நீக்கிவிடுமாறு வேண்டினார். "அவன் கருணையும், அன்புமே பெருக வாழ்ந்தவன். அவனுடைய கதையில் கெட்டவர்களைத் தூற்றுவதைக் கூட அவன் விரும்பமாட்டான். தவிரவும் ஒரு சகாப்தத்தின் தியாகிகள் அனைவரும் அவர்கள் மகாவிரதத்தை அவர்களுக்கு அளித்த மகாத்மாவும் இந்தக் கதையில் வருகிறார்கள். அவர்கள் எல்லாரும் வருகிற கதையில் சாந்தமும் சத்தியமுமே நிரம்பியிருக்கட்டும். பல இடங்களை ஒரு கதையாகவே சித்தரித்து விட்டீர்கள். சில இடங்களில் மட்டும் அதற்கு விதிவிலக்காகக் கெட்டவர்களைப் பற்றிய உண்மைகளைச் சொல்வானேன்? அதை விட்டுவிட்டாலும் இதன் சுவை குறையாது! இந்தக் கதைக்கு வில்லன்களே வேண்டாம்." - நான் அதற்கு ஒப்புக் கொண்டு அப்படியே செய்து விட்டேன். காந்திராமனோடு பழகிய முத்திருளப்பன் காந்திராமனை விட வயது மூத்தவராயிருந்தும், அவரையே தமது குருவாகக் கருதினார். கண்களில் ஒளி மின்ன மின்ன அவரைப் பற்றிப் பேசினார்: "எங்களை இந்த நோன்பில் ஈடுபடுத்தியவனே அவன் தான்! எத்தனையோ சோர்வான வேளைகளில் அவனுடைய புன்னகையே எங்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. நீங்கள் எல்லாம் ரொம்பப் பிற்காலத்தில் இங்கு வந்து பழகினீர்கள். வடக்குச் சித்திரை வீதித் திலகர் தேசிய வாசகசாலை மாடியில் ஒரே பாயில் படுத்த நாளிலிருந்து அவனோடு பழகியிருக்கேன் நான். அவனைப் போல் விசாலமான மனசு படைச்சவனை இனிமே எப்பப் பார்க்கப் போறேன்னே தெரியலே. நினைச்சதைச் சாதிச்சு முடிக்கிற மனோபலம் அவனுக்குண்டு. மதுரம் போனப்போ அந்த திட மனத்தையும் இழந்து தவிச்சான் அவன். பல விதத்தில் அவன் தேசபக்திக்கு அவள் தான் தூண்டுதல். அவளுடைய பிரியம்தான் அவனைப் பல சாதனைகளுக்குத் தூண்டியதுன்னு சொல்லணும். ஜமீன் குடும்பத்தை, நான் சொன்னதைக் கேட்டு, ரொம்ப நல்லவங்களா மாற்றி எழுதியிருக்கீங்க. ஜமீந்தார் காலமானப்ப அந்த ஜமீந்தாரிணி அம்மா சும்மா இருந்தாலும், வாரிசுங்க - மாந்தோப்பு மதுரத்துக்குப் பாத்தியதை ஆக முடியாதுன்னு - மைனர் லிட்டிகேஷன் சூட்போட்டு வதைச்சாங்க. கேட்கிறவங்க பேச்சைக் கேட்டுக் கொஞ்ச நாள் ஆட்டமா ஆடினாங்க. ஆசிரமத்துக்கு எத்தனையோ சோதனை வந்தது. அதெல்லாம் உலகத்துக்குத் தெரியாது. அத்தனை ஏன்? மதுரம்னு ஒருத்தியோட பிரியத்துலே மூழ்கி எழுந்துதான் காந்திராமன் பெரிய பெரிய காரியங்களைச் சாதிக்கும் சக்தி பெற்றான் என்பது கூட உலகத்துக்கு அதிகம் தெரியாது. காந்திராமனும் அவளுக்குக் கடைசி வரை ஆத்மபூர்வமாகத்தான் நன்றி செலுத்தினான். போகட்டும்; நீங்க இதைக் கதையா எழுதினதிலே எனக்கு ரொம்ப சந்தோஷம். எங்கள் தலைமுறையின் தேசபக்தர்கள் எல்லாருமே இந்தக் கதையிலே கதாபாத்திரங்களாக வராங்க. ரெண்டு தலைமுறைகளைச் சந்திக்க வச்சிருக்கீங்க... அதுக்காக உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லணும்" - என்றார் முத்திருளப்பன். "பெரியவருக்கு நான் எவ்வளவோ நன்றிக் கடன் பட்டிருக்கேன். இதென்ன சாதாரணமான பிரதியுபகாரம் கூட இல்லே. நான் எழுதாவிட்டால் இன்னும் கொஞ்ச நாள்லே வேற யாராவது இதை எழுதத்தான் செய்வாங்க - ஆனா இதை எழுதற உரிமையை அவரே எனக்குக் கொடுத்திருந்தார் என்பதற்காகவே நான் பெருமைப்படறேன். கதையிலே கூட நான் மாணவ வாழ்விலிருந்து அவரைச் சந்தித்துப் பழகத் தொடங்கிய காலத்தையும் நான் ஒரு பத்திரிகையாளனாக வர அவர் ஊக்கமளித்து எனக்கு உதவியதையும் வேணும்னே எழுதிக்கலை. நானே இதை எழுதினதுனாலே என்னைப் பத்திச் சொல்லிக்க வேண்டாம்னு விட்டுவிட்டேன்" என்று நான் முத்திருளப்பனுக்குப் பதில் கூறினேன். அவர் தலைப்பைப் பற்றிப் பிரஸ்தாபித்தார்; "இந்த கதைக்கு நீங்க 'மகாவிரதம்'னே பேர் வச்சிருக்கணும்." "வச்சிருக்கலாம்; ஆனால் இதிலே வர்ரவங்க எல்லோரும் சரீர சுகத்தையும், உடம்பின் தேவைகளையும் பெரிதாக மதிக்காமல் ஆத்மபலத்தினாலே தேசத்துக்காக உழைக்கிறாங்க. அதனாலே, இந்தப் பேரே பொருத்தமாயிருக்கும்னு நினைச்சேன் நான்" என்று அவருக்குச் சமாதானம் சொன்னேன். "மதுரத்தை நெனைச்சு இப்படிப் பேர் வச்சீங்களோன்னு தோன்றியது எனக்கு." "அப்படியும் நான் நினைத்ததுண்டு. உங்கள் கருத்துப்படிப் பார்த்தாலும் அவள் காந்திராமனுக்காகச் செய்த விரதத்தையே இதன் கதாபாத்திரங்கள் அனைவரின் விரதங்களுக்கும் மேலான விரதமாக நான் நினைக்கிறேன்." நான் கூறியதைக் கேட்டு முத்திருளப்பன் புன்முறுவல் பூத்தார். ஆசிரமத்தில் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு புறப்படுமுன் மீண்டும் கடைசியாகப் பெரியவரின் அறைக்குப் போய் அந்த வீணையையும் அவருடைய கட்டிலையும், பொருட்களையும், டைரிகளையும் பார்த்தேன். இணையற்ற சகாப்தத்தின் நினைவுச் சின்னங்களாக அவை தோன்றின. 'மறுபடியும் பாரத மாதாவின் முகத்தில் புன்முறுவல் பூக்கச் செய்ய இப்படி மகாவிரதங்களை நம்புகிறவர்கள் தோன்ற வேண்டும். பனி உருகி இமயம் அழிந்து விடக்கூடாது; அழியவும் அழியாது. கங்கை பிறக்கும்; பிறக்க வேண்டும். எந்த மண்ணில் இறங்கும் ஒவ்வொரு மழைத் துளியும் கங்கையாகிறதோ அந்த மகான்களின் தியாகங்கள், இந்தப் பாரத புண்ணிய பூமியில் உரமாயிருந்து எதிர்காலப் பயிர் என்ற சுபீட்சத்தை வளர்க்க வேண்டும்' என்ற பிரார்த்தனையோடு அங்கிருந்து புறப்பட்டேன் நான். இந்தக் கதையைப் படிக்கும் வாசகர் நினைவிலும் அந்தரங்க சுத்தியோடு இதே பிரார்த்தனை ஏற்பட வேண்டுமென்று பரிபூரணமாக நான் ஆசைப்படுகிறேன். ***** நான்கு மாதங்களுக்குப் பின் இந்தக் கதையின் அச்சான முதற்பிரதியோடு மீண்டும் ஆசிரமத்திற்குச் சென்றேன். 'ஆத்மாவின் ராகங்கள்' முதற் பிரதியைப் பெரியவர் காந்திராமனின் அறையில், மதுரத்தின் அந்த வீணை அருகே கொண்டு போய் வைத்தாலே அதை அவரிடம் சமர்ப்பித்ததாக எனக்குள் ஒரு பாவனை தோன்றியது. அவ்வாறு செய்ய விரும்பினேன் நான். அப்படியே செய்தபோது அந்த வீணையில் மோனமாக உறைந்து கிடந்த ராகங்கள் எல்லாம் என் செவிகளில் கிளர்ந்து வந்து ஒலிப்பதாக நான் உணர்ந்தேன். வாசிக்கப் படாது எஞ்சிய ராகங்கள் பலவற்றைக் கேட்கும் புதுமையான அநுபவமாயிருந்தது அது. யாருடைய ஆத்மாவின் ராகங்கள் கதையில் சொல்லப்பட்டிருந்தனவோ அவளிடமும் அவரிடமுமே அந்தப் புத்தகத்தைச் சேர்த்துவிட்ட திருப்தி அப்போது எனக்கு ஏற்பட்டது. ஆத்மாவின் ராகங்கள் உறைந்து கிடக்கும் அந்த வாத்தியத்தோடு புத்தகமும் சேர்ந்து தென்படுவதை என் விழிகள் நீண்ட நேரம் இமையாமல் பார்த்துக் கொண்டேயிருந்தன. கண்களில் நீர் நெகிழ்ந்தது. (முற்றும்) |