7 மறுநாள் காலையில் குருசாமி வசூலுக்கான உண்டியல்களோடு வந்தபோது முதல் உண்டியலில் தன் கையாலேயே அந்த இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளைப் போட்டான் ராஜாராமன். குருசாமியும் வேறு இரண்டு மூன்று தொண்டர்களும் உண்டியல்களோடு கோபுர வாசல்களுக்குச் சென்றார்கள். குளித்து உடை மாற்றிக் கொண்டு முத்திருளப்பனை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது - மதுரம் வந்தாள். அவள் கையில் ஒரு கூடை நிறையக் கதர் நூல் சிட்டங்கள் பெரிய கட்டாக இருந்தன. "என்னது, மதுரம்?" "எனக்கு நீங்க உபகாரம் பண்ணனும்." "உபகாரமா? நானா?" "ஆமாம்! இந்தச் சிட்டங்களைப் போட்டு ஒரு கதர்ப் புடவை - வாங்கிண்டு வந்து கொடுங்கோ!" "எனக்கு ஆட்சேபணையில்லே மதுரம்! ஆனா, உங்கம்மா உன்னைக் கதர்ப் புடவை கட்டிக்க விடுவாளா?" "விடாட்டா, உங்களைப் பார்க்க வர்ரப்போ மட்டும் கட்டிண்டு வருவேன்..." "உனக்குக் கதர் பிடிக்குமா?" "உங்களுக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் எனக்கும் பிடிக்கும்..." "அது சரி! ஆனா, நான் சிட்டத்தைக் கொண்டு போட்டுட்டுப் புடவை கேட்டால் - வஸ்திராலத்திலேயே சந்தேகப்படுவாளே மதுரம்? எங்கம்மாவும் போயிட்டா. நான் யாருக்காகப் புடவை வாங்கறேன்னு இல்லாத சந்தேகம்லாம் வருமே! என்ன செய்யலாம்?" "உங்க கையாலே வாங்கிக் கட்டிக்கணும்னு எனக்கு ஆசை! மறுத்துச் சொல்லாதீங்க..." அவன் நூல் சிட்டங்களை வாங்கிக் கொண்டான். "சாப்பிடறதுக்கு ஏதாவது கொண்டு வரட்டுமா?"
"வேண்டாம்; சிநேகிதர் ஒருத்தர் வரப்போறார். ரெண்டு பேருமாக் கதர் விற்கப் போறோம். மத்தியானமும் நான் இங்கே சாப்பிட வரமாட்டேன்."
"காப்பியாவது தரேனே?" "விடமாட்டே போலிருக்கே?" "விடமாட்டேன்கிற முடிவு என்னிக்கு மொதமொதலா இந்தப் பாதங்களைப் பார்த்தேனோ அப்பவே வந்தாச்சு..." அவன் சிரித்தான். "எந்தக் கால்களை மனத்தினால் பற்றிக் கொண்டு விடுகிறோமோ அந்தக் கால்களை விடவே முடிவதில்லை." சொல்லிவிட்டுக் காபி கொண்டு வரப் போனாள் மதுரம். அவள் வந்து நின்றுவிட்டுப் போனதால் அந்த அறையில் பரவிய நருமணங்கள் இன்னும் இருந்தன இந்தப் பெண்ணின் மேனியைக் கடவுள் சந்தனத்தாலும் பச்சைக் கற்பூரத்தாலும் மல்லிகைப் பூக்களாலும் படைத்திருக்கிறானோ - என்று நினைக்கத் தோன்றியது. அவள் வருகிறவரை காலைத் தினசரிகளைப் புரட்டுவதில் கழிந்தது. கீழேயிருந்து முத்திருளப்பனும், மேலே மொட்டை மாடியிலிருந்து உள்ளே இறங்கும் படிகளில் அவளும் ஒரே சமயத்தில் உள்ளே நுழையவே, ராஜாராமனுக்குத் தர்மசங்கடமாகப் போயிற்று. ஆனால் முத்திருளப்பன் சங்கடப்படவில்லை. "சௌக்கியமா அம்மா" - என்று மதுரத்தை விசாரித்தார் அவர். காபியை ராஜாராமனிடம் கொடுத்துவிட்டு, முத்திருளப்பனை வணங்கினாள் மதுரம். "உங்களுக்கும் கொண்டு வரேன் அண்ணா..." "வேண்டாம்! நான் இப்பத்தான் சாப்பிட்டேன் அம்மா" ராஜாராமன் ஆச்சரியப்பட்டான். 'தன் மனத்துக்குத் தான் இல்லாத பயங்களும், தயக்கங்களும் வந்து தொலைக்கின்றன போலும்! மதுரம் வந்து காபி கொடுப்பதைப் பார்த்து முத்திருளப்பன் சந்தேகப்படாமல் சுபாவமாகக் குசலம் விசாரிக்கிறார். மதுரம் பதறாமல், பயப்படாமல் அவரிடம் பேசுகிறாள்!' தன் மனப்போக்கிற்காக வெட்கினான் அவன். பத்தர் முத்திருளப்பனை ஏற்கனவே அவளுக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டுமென்று தோன்றியது. "உங்க சிநேகிதருக்குச் சொல்லுங்கண்ணா! ரொம்ப அலையறார். இளைச்சுக் கறுத்துப் போயாச்சு..." "என்னப்பா ராஜா, சொல்றது காதிலே விழுந்ததா?" "....." "உன்னைத்தானப்பா, காதில் விழுந்ததா?" "விழுந்தது" என்று சொல்லிக் கொண்டே டபரா டம்ளரை மதுரத்திடம் நீட்டினான் ராஜாராமன். "என்ன! ஒரு புடவைக்குச் சிட்டம் போட்டாச்சா அம்மா? பேஷ்! நாளைக்கு இன்னும் கொஞ்சம் பஞ்சு கொணர்ந்து தரட்டுமா?" "கொண்டு வாங்கோ அண்ணா!" அவளுக்குச் சர்க்காவும் பஞ்சும் கொடுத்து நூற்கப் பழக்கியதே முத்திருளப்பனாகத்தான் இருக்க வேண்டுமென இந்த உரையாடலிலிருந்து ராஜாராமனுக்குப் புரிந்தது. "இவரிட்ட சிட்டங்களைக் கொடுத்திருக்கேன்; புடவைதான் நல்லதாக் கிடைக்கணும்." "இவரிட்டக் கொடுத்திட்டா நல்லாத்தான் கிடைக்கும்" என்று குறும்புத்தனமாகச் சிரித்தார் முத்திருளப்பன். மதுரம் இருவரிடம் சொல்லிக் கொண்டு போய்ச் சேர்ந்தாள். "புறப்படலாமா?" என்றார் முத்திருளப்பன். "இந்தப் பெண்..." என்று ராஜாராமன் ஏதோ ஆரம்பித்தபோது, "இது பெண்ணே இல்லை; சரஸ்வதி! இதை எதிரே பார்க்கறப்பெல்லாம் சாட்சாத் சரஸ்வதியையே எதிரே பார்க்கற மாதிரி எனக்கு ஒரு வாஞ்சை உண்டாறது ராஜா." "உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?" "தெரியும்! சர்க்கா நான் தான் கொடுத்தேன். அரசரடித் திருவிழாவிலே வருஷா வருஷம் வீணை வாசிக்கும்; கேட்டிருக்கேன். 'சர்க்கா' கொடுத்தப்பத்தான் - அதுக்கு யாருக்கும் சளைக்காத தேச பக்தியும் இருக்கிறது தெரிஞ்சது! ஜெயில்லேருந்து வந்தப்ப - பத்தரும் எல்லாம் சொன்னார்." வாசக சாலையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிப் பத்தரிடம் சொல்லிவிட்டு, இருவரும் வஸ்திராலயத்துக்குப் புறப்பட்டனர். ராஜாராமனிடமிருந்து நூல் சிட்டங்களை முத்திருளப்பன் வாங்கிக் கொண்டார். "இப்பக் கதர் விற்கிறது பெரிசில்லே ராஜா! சித்திரா பௌர்ணமிக் கூட்டத்திலே நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கு; அதை நாம் நல்லாப் பயன்படுத்திக்கணும்" என்று ஒரு புது யோசனையைக் கூறினார் முத்திருளப்பன். "உண்டியல் கூடக் குலுக்கலாமே?" "கள்ளழகர் உண்டியலுக்குப் போட்டியாவா ராஜா?" "அப்படியில்லை! தேச பக்தியும் தெய்வ பக்தியும் வேற வேறேன்னு நினைக்காதீங்க முத்திருளப்பன். தேசபக்தி புறங்கை என்றால், தெய்வ பக்தி உள்ளங்கை. ஒரே கையிலே தான் உள்ளும், புறமும் இருக்கு. புறங்கைக்குப் போடற மருந்து தான் உள்ளங்கையையும் குணப்படுத்தும்." "சரியான கருத்து! ரொம்ப நல்லாச் சொல்றே!" "என்னோட, ஜெயில்லே பிருகதீஸ்வரன்னு ஒரு புதுக்கோட்டைக்காரர் இருந்தார்னு சொன்னேனே! அவர் அடிக்கடி இதைச் சொல்லுவார். சுதந்திரப் போரை ஒரு பெரிய மகாபாரத யுத்தமாகவும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை கௌரவர்களாகவும், நம்மைப் பாண்டவர்களாகவும், நமக்கு வழிகாட்டும் கீதையாகக் காந்தியையும் சொல்லுவார் அவர். உலகத்திலே ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் நடுவே தர்ம - அதர்ம, நியாய - அநியாயப் பிரச்சனை இருக்கிறவரை கீதை நித்யகிரந்தமாயிருக்கும் என்று அவர் அடிக்கடி சொல்லுவார்." "சிந்தனை புதுசா இருக்கு ராஜா!" "இப்படி ஆயிரமாயிரம் புதுச் சிந்தனைகள் அவரிடம் இருக்கு முத்திருளப்பன்." "நான் வேலூருக்கு வரக் கொடுத்து வைக்கலே. முன்னாலேயே கைதாகி கடலூருக்குப் போயி, முன்னாலேயே வெளியிலேயும் வந்து தொலைச்சுட்டேனே?" பேசிக் கொண்டே வஸ்திராலயத்துக்கு வந்து விட்டார்கள் அவர்கள். முத்திருளப்பன் மதுரத்தின் சிட்டத்தைப் போட்டார். திரும்ப வரும்போது புடவை எடுத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டுக் கதர் மூட்டைகளோடு இருவரும் புறப்பட்டனர். ராஜாராமன் ஒரு பாரதி பாடலை மிகக் கம்பீரமான குரலில் பாடினான். மேங்காட்டுப் பொட்டலில் கூட்டம் கூடுகிறாற்போல், ஓரிடத்தில் நின்று முயன்றார்கள் அவர்கள். பாட்டினால் கூட்டம் கூடியது. பூதாகாரமான சரீரத்தோடு, மலை நகர்ந்து வருவது போல், ஒரு நகைக் கடைச் செட்டியார் வந்தார். "இவருக்குக் கதர் வித்தால் உன் மூட்டை, என் மூட்டை இரண்டுமே காணாது ராஜா!" என்று ராஜாராமனின் காதருகே முணுமுணுத்தார் முத்திருளப்பன். ராஜாராமனுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்தான். செட்டியார் கேட்டார்: "என்னா, துணி விக்கிறீங்களா?" "துணியில்லே, கதர் விக்கிறோம்... கதர்!" "ரொம்ப சல்லிசாக் கிடைக்குமாங்கிறேன்..." "துணியைப் பாருங்க செட்டியாரே?" செட்டியார் துணியை வாங்கிப் பார்த்துவிட்டு, "அடியாத்தே! பொணமாக் கனக்குதே?" என்ற போது முத்திருளப்பனுக்குக் கோபம் வந்துவிட்டது. "எத்தினி பொணம் தூக்கி அனுபவம் உமக்கு? இத்தனை பெரிய உடம்பைத் தூக்குறீரே; இந்தத் துணியைக் கட்டினாலாவது இளைப்பீரே செட்டியாரே; வாங்கும்." மலை கோபத்தோடு முறைத்துப் பார்த்துவிட்டு நடந்தது. வேறு சிலர் கதர் வாங்கினார்கள். அடுத்த இடமாகப் பெருமாள் தெப்பக் குளக்கரைக்குப் போனார்கள் அவர்கள். அங்கேயும் கொஞ்சம் வியாபாரம் ஆயிற்று. மாலையில் தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே போய் விற்றார்கள். ராஜாராமன் பாரதி பாட்டுப் பாடியதனால் கூட்டம் சேர்வது சுலபமாயிருந்தது. முதல் நாளை விட அன்று கணிசமான விற்பனை ஆகியிருந்தது. ஏழு மணிக்கு வஸ்திராலயத்துக்குத் திரும்பிப் போய்ப் பணத்தையும், மீதித் துணிகளையும் கணக்கு ஒப்பித்ததும் முத்திருளப்பன் அங்கிருந்தே வீடு திரும்புவதாகச் சொன்னார். ராஜாராமன், "மதுரத்தின் நூல் போட்டதற்குப் புடவை எடுக்க வேண்டும்," என்றான். "அடடா! மறந்து போச்சே? எனக்கு மறந்தா என்ன? ஞாபகம் இருக்க வேண்டிய ஆளுக்கு இருக்கே" என்று அவர் கேலி செய்த போது ராஜாராமன் வெட்கப்பட்டான். தன்னை எப்படி மதுரம் இப்படி மாற்றினாள் என்று நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. புடவையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் முத்திருளப்பன். அவர் அங்கிருந்தே விடை பெற்றுக் கொண்டு போன பின், அவன் வாசக சாலைக்குத் திரும்பினான். வழக்கமாக வாசகசாலைக்கு வெளியார் யாரும் படிக்க வருவதில்லை. ராஜாராமனும் அவன் நண்பர்களும் பத்தரும் தவிர, மற்றவர்கள் புழக்கம் அங்கே குறைவு. போலீஸ் கெடுபிடிக்குப் பயந்து தான் வாசகசாலை என்ற பெயரில் ஒரு தேச பக்திக் கூட்டத்தின் இளம் அணியினரை ஒன்று சேர்த்திருந்தான் ராஜாராமன். அது அவர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், அன்று அதற்கு விரோதமாய் யாரோ பொது ஆட்கள் உட்கார்ந்து பேப்பரும் புத்தகமும் படித்துக் கொண்டிருக்கவே அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. மேலே ஏறிச் சென்ற வேகத்தோடு கீழே இறங்கி வந்து - "யாரோ படிச்சிக்கிட்டிருக்காங்களே? என்ன சமாசாரம்?" என்று பத்தரைக் கேட்டான், அவன். யாராவது சி.ஐ.டி.க்களாக இருக்குமோ என்று அவனுள் சந்தேகம் முளைத்திருந்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டு, நாட்டில் சுமுகமான நிலை தாற்காலிகமாக இருந்தாலும், தயக்கம் எழத்தான் செய்தது. அவன் தன் சந்தேகத்தையும் பத்தரிடம் கூறினான். "அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க தம்பீ! திருநாள் பார்க்க வந்து பக்கத்து சத்திரத்துல தங்கியிருக்கிற புள்ளையாண்டானுங்கதான். இங்கே கடையிலே கொஞ்சம் வேலை கொடுத்திருக்காங்க. வேலை முடியிற வரை, 'மேலே படிச்சிட்டிருங்க'ன்னு - நான் தான் உட்காரச் சொன்னேன். மதுரம் கூட இல்லே; - நாகமங்கலம் போயிருக்கு." பதிலுக்கு ஏதோ கேட்க வாயெடுத்தவன் அதைக் கேட்காமல் அடக்கிக் கொண்டான். மாலையில் நாகமங்கலம் போக வேண்டுமென்று அவள் தன்னிடம் சொல்லக்கூட இல்லை என்று தோன்றியவுடன், எதற்காகவோ அவள் மேல் கோபப்பட வேண்டும் போல் இருந்தது. அப்படிக் கோபப்படத் தனக்கு என்ன உரிமை இருக்கிறதென்று உடனே மனசில் தோன்றியது. "இருங்க தம்பீ! நிற்கிறீங்களே! கையில் என்ன பொட்டலம்? கதரா?" "மதுரம் நூல் சிட்டம் போட்டுப் புடவை வாங்கிட்டு வரச் சொல்லியது..." "உங்ககிட்ட சொல்லிடும்படி எங்கிட்டச் சொல்லிட்டுப் போச்சு. ஜமீந்தாருக்கு என்னவோ தோணிச்சாம் - திடீர்னு வந்து வீணை வாசிச்சிட்டுப் போகணும்னு ஆளனுப்பிச்சிட்டாரு!... ஆனா ராத்தங்கற வழக்கம் இல்லை. எத்தினி மணியானாலும் வந்துடும்! மங்கம்மா போகலை. வீட்டிலதான் இருக்கா. கிழவி உங்களுக்கு ராப்பலகாரம் கொண்டு வந்து கூப்பிடுவா. இருங்க, எங்கேயும் போயிடாதீங்க..." ராஜாராமன் சிரித்தான். அவன் சிரிக்கிறதைப் பார்த்துவிட்டு "என்ன தம்பி சிரிக்கிறீங்க?" - என்று கேட்டார் பத்தர். "ஒண்ணுமில்லை! இந்த ஜஸ்டிஸ் பார்ட்டிக்காரங்களை நெனைச்சேன்; சிரிப்பு வந்தது. ஆசை, பிரியம் எல்லாம் இந்தத் தேசத்துச் சங்கீதம், இந்தத் தேசத்து வீணை, இந்தத் தேசத்துச் சாப்பாடு, இந்தத் தேசத்துக் கோவில் குளம் எல்லாத்து மேலேயும் இருக்கு. விசுவாசம் மட்டும் இந்தத் தேசத்து மேலே இல்லே. விசுவாசத்தை மட்டும் வெள்ளைக்காரன் மேலே அடகு வச்சுட்டாங்க போலிருக்கு! இந்த நாகமங்கலம் ஜமீந்தாரும் அப்பிடித்தான். இல்லையா பத்தரே...?" "மதுரத்துக்கும் அது பிடிக்காது தம்பீ!" "பிடிக்காமேதான் போயிருக்கா?" "கொள்கை வேறே, கலை வேறே. அங்கே போறதுனாலே தன் கொள்கையை அது விட்டுப்பிடும்னு மட்டும் நினைக்காதீங்க." "நான் ஏன் நினைக்கப் போகிறேன். நினைக்கிறதுக்கு நான் யாரு...?" அவனுடைய உள்ளடங்கின கோபத்தைப் புரிந்து கொண்டு பத்தர் சிரித்தார். காரணம், அந்தக் கோபம் மதுரத்தின் மேல் இவன் கொண்டுவிட்ட பிரியத்தின் மறுபுறமாயிருப்பதை இவர் புரிந்து கொண்டதுதான். உதாசீனம் உள்ளவர்கள் மேல் வெறுப்புத்தான் வரும். கோபம் வராது. மதுரத்தின் மேல் அவனுக்கு வெறுப்பு இல்லை, கோபம்தான் வருகிறது என்பது தெரியும் போதே அவருக்கு மகிழ்ச்சியாயிருந்தது. அவன் திரும்பத் திரும்ப அவளைப் பற்றியே பேசியதிலிருந்தும் அவன் மனதில் அவள் இருப்பதையே புரிந்து கொள்ள முடிந்தது. "மேலே போய் இருங்க, தம்பீ! மங்கம்மாக் கிழவி கூப்பிடும். மதுரத்தைப் போல அதுக்குச் சுவரேறி வரத் தெரியாது. பலகாரம் ஆறிப் போகும்..." அவன் மறுபடி பத்தரைப் பார்த்துச் சிரித்தான். "என்ன சிரிக்கிறீங்க?" "நீர் ரொம்ப சாமார்த்தியமாகப் பேசறதா நினைச்சுப் பேசறதைப் பார்த்துத்தான் சிரிச்சேன் பத்தரே?" இந்தச் சமயத்தில் மேலே படித்துக் கொண்டிருந்தவர்கள் கீழிறங்கி வந்தனர். பத்தர் சிவப்பு லேஸ்தாள்களில் நகைகளை மடித்துக் கொடுத்தார். அவர்கள் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். கைகளைக் கழுவிவிட்டுக் கடையைப் பூட்டிக் கொண்டு அவரும் அவனோடு மேலே மாடிக்கு வந்தார். மங்கம்மாக் கிழவி கொடுத்த தோசைகளை எப்படியோ பத்தர் மறுக்காமல் ராஜாராமனைச் சாப்பிடச் செய்துவிட்டார். அவரும் அங்கேயே தோசை சாப்பிட்டார். "புடவையைக் கார்த்தாலே குடுத்துடலாம் தம்பீ!" "இங்கேயே வச்சிருக்கேன்? நீங்களே கடை திறக்க வர்றப்ப எடுத்துக் கொடுத்திடுங்க." "ஏன் தம்பி?" "நான் கார்த்தாலே மேலூர் போறேன்..." "போனா என்ன? திரும்பி வந்தப்புறம் நீங்களே உங்க கையாலே குடுங்க தம்பீ! அது ரொம்பச் சந்தோஷப்படும்." ராஜாராமன் இப்போதும் ஏதோ பேச வாயெடுத்தவன் பேசாமலே அடக்கிக் கொண்டு விட்டான். பத்தர் தயங்கித் தயங்கிச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார். அவனுக்கு உறக்கம் வரவில்லை. யோசித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தவன், திடீரென்று நினைத்துக் கொண்டு நாற்காலியை மேஜையருகே நெருக்கிப் போட்டுக் கொண்டு பிருகதீஸ்வரனுக்குக் கடிதம் எழுதலானான். அன்று காலை கதர் விற்கப் போனது, மாகாண மகாநாட்டு ஏற்பாடுகள், ஊர்வலப் பொறுப்பு, சத்தியமூர்த்தி மதுரை வரப்போவது, எல்லாவற்றையும் பற்றி அவருக்கு எழுதினான். முடிந்தால் மகாநாட்டின் போது அவரை மதுரை வர வேண்டியிருந்தான் கடிதத்தில். கடிதத்தை உறையிலிட்டுக் கோந்து பாட்டிலைத் தேடி எடுத்து ஒட்டியும் ஆயிற்று. மேலூர் வீட்டு வாடகையை இனிமேல் வாசகசாலை விலாசத்துக்குக் கொண்டு வந்து கொடுக்கவோ, மணி ஆர்டர் செய்யவோ வேண்டும் என்று உரக் கம்பெனிக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டியிருந்தது. அதையும் எழுதி முடித்த போது ஃபண்டாபீஸ் மணி பன்னிரண்டு அடித்தது. விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான் ராஜாராமன். 'நாளைக்குத்தான் மேலூர் போகிறேன்! உரக் கம்பெனிக்குக் கடிதம் எதுக்கு?' 'மேலூராவது, நாளைக்குப் போகிறதாவது? ஒரு கோபத்தில் பத்தரிடம் அப்படிக் கூறியாயிற்று. நாளையும் அடுத்த சில நாட்களும் மாகாணக் காங்கிரஸ் மகாநாட்டு வேலைகள் நிறைய இருக்கு. நாளும் நெருங்கிவிட்டது.' -'பத்தரிடம் அப்படி ஏன் ஒரு பொய் சொன்னோம்?' என்றெண்ணியபோது, அப்படிப் பொய் சொல்லியிருக்கக் கூடாதென்றே தோன்றியது. ரொம்ப நேரமாகத் தூக்கம் முழுமையாக வரவில்லை. அரைகுறைத் தூக்கமும், நினைவுகளுமாக அவன் தவித்துக் கொண்டிருந்தான். புரண்டு புரண்டு படுத்தான். இலேசாகத் தூக்கம் கண்களைத் தழுவியபோது ஃபண்டாபீஸ் மணி ஒன்றடித்து ஓய்ந்தது. புரண்டு படுத்த ராஜாராமன், பாதங்களில் மிருதுவாக ஏதோ படுவது போல் உணர்ந்து வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான். மதுரம் கண்களில் நீர் தளும்ப நின்று கொண்டிருந்தாள். இருளில் மின்னல் அழுது கொண்டு நிற்பது போல. "இந்தப் பாதங்களைக் கைகளால் பிடிக்க உனக்கு என்ன யோக்கியதை?" "முதல் முதலாக இந்தப் பாதங்களைத் தேடிக் கண்டு பிடித்துப் புஷ்பங்களை அர்ச்சித்தவள் நான் தான்..." "இருக்கலாம்! ஆனால் - ஜமீன்தார்களைத் திருப்திப் படுத்துகிறவர்களை நான் பார்க்கவே வெட்கப்படுகிறேன்..." "என்னுடைய கைகளால் நான் இந்தப் பாதங்களைப் பற்ற முடியாமல் போகலாம். ஆனால், மனத்தினால் இடைவிடாமல் நான் இந்தப் பாதங்களைப் பற்றுவதை நீங்கள் தடுக்க முடியாது..." -இருளில் அவளுடைய விசும்பல் ஒலி ஒரு தேவதை மிகவும் சோகமான ராகத்தை முணுமுணுப்பதுபோல் இருந்தது. சிறிது நேரம் ஒன்றும் பேசாமலிருந்த பின் மௌனமாக அந்தப் புடவைப் பொட்டலத்தை எடுத்து அவள் பக்கமாக நகர்த்தினான் அவன். கைகளால் அதை அவன் கொடுக்காமல் தரையில் நகர்த்தியது அவள் மனத்திற்கு வருத்தத்தை அளித்தது. தான் கொடுத்திருந்த மெத்தை, தலையணைகளை உபயோகப்படுத்தாமல், அவன் தரையில் பாயை விரித்துப் படுத்திருப்பதையும் அவள் கவனித்தாள். "என் மேல் கோபப்படுங்கோ! வேண்டாம்னு சொல்லலை! ஆனா, அதுக்காக வெறுந் தரையிலே படுத்துக்காதீங்க..." அவன் பதில் சொல்லாமல் இருக்கவே, அவள் மெத்தையை எடுத்துப் பாயின் மேல் விரித்தாள். தலையணைகளையும் நேரே எடுத்துப் போட்டுவிட்டு ஒதுங்கி நின்றாள். அதையும் அவன் மறுக்கவில்லை. அவன் பேசாமலே இருந்தது அவளை வருத்தத்துக்குள்ளாக்கியது. தயங்கித் தயங்கித் புடவைப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு திரும்பிப் போனாள் அவள். "காலம்பறப் பாக்கிறேன், தூங்குங்கோ" என்று அவள் போகும்போது சொல்லிக் கொண்டு போன வார்த்தைகளுக்கும் அவனிடமிருந்து பதில் இல்லை. அவள் போன பின், 'தான் காரணமின்றி அவளை வேதனைப்படுத்தி விட்டோம்' என்று உணர்ந்தான் ராஜாராமன். ஆனால் காலதாமதமாக ஏற்பட்ட அந்த உணர்ச்சியினால் ஒரு பயனும் கிட்டவில்லை. என்ன காரணத்துக்காக அவள் மேல் கோபப்பட்டு மௌனம் சாதித்தோம் என்று மறுபடி இரண்டாம் முறையாக யோசித்தபோது, காரணம் தெளிவாகப் புலப்படவில்லை; கோபப்பட்டு விட்டோமே என்ற கழிவிரக்கம்தான் புலப்பட்டது. மறுநாள் காலையில் விடிவதற்கு முன்பே எழுந்திருந்து குளித்து உடைமாற்றிக் கொண்டு, கோவிலுக்குப் போய்விட்டு மறுபடியும் வாசக சாலைக்குத் திரும்பாமல், அங்கிருந்தே கமிட்டி அலுவலகத்துக்குச் சென்றான் ராஜாராமன். "ராஜாராமன்! வேலை நிறைய இருக்கிறது. மகா நாட்டுக்கு வேறு அதிக நாள் இல்லே. பல ஏற்பாடுகளைக் கவனிக்கணும். மகாநாடு முடிகிற வரைக்கும் நாலைந்து நாளைக்கு நீ இங்கேயே தங்கிவிட்டால் நல்லது" என்றார் வரவேற்பு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த தலைவர். ராஜாராமனும் அதற்குச் சம்மதித்துவிட்டான். முத்திருளப்பனுக்கும், குருசாமிக்கும் தகவல் சொல்லி அனுப்பி உண்டியல் வசூல், ஊர்வல ஏற்பாடுகள் செய்வது, தொண்டர் படைக்கு இளைஞர்கள் சேர்ப்பது, எல்லாவற்றையும் கமிட்டி அலுவலகத்தின் மூலமே செய்தான். ஓய்வு ஒழிவின்றி வேலை இருந்தது. மதுரம் என்ன நினைப்பாள், எப்படி எப்படி வேதனைப்படுவாள் என்று நடுநடுவே நினைவு வரும் போதெல்லாம் காரியங்களின் பரபரப்பில் மூழ்கி அதை மறக்க முயன்றான் அவன். அவன் கமிட்டி அலுவலகத்துக்கு வந்து தங்கிவிட்ட மறுநாளைக்கு மறுநாள் இரவு எட்டு மணி சுமாருக்கு ரத்தினவேல் பத்தர் அவனைத் தேடி வந்தார். அவர் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடியாதபடி மிகவும் கவலையாயிருப்பதாகத் தெரிந்தது. அவர் வந்தபோது அவனும் இன்னும் ஐந்தாறு தேசியத் தொண்டர்களுமாக அமர்ந்து தோரணத்துக்காக வர்ணத் தாள்களைக் கத்தரித்து ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவன் அவரைக் கண்டவுடனேயே எழுந்து சென்று பேசமுடியவில்லை. 'வாங்க பத்தரே' என்று ஒரு வார்த்தை சொல்ல முடிந்தது. பத்தரும் சும்மா உட்காராமல் அவர்களோடு சேர்ந்து கொண்டு கொஞ்சம் வேலை செய்தார். ஒரு குறிப்பிட்ட காரியமாக ராஜாராமனை மட்டும் தேடி வந்தது போல் காண்பித்துக் கொள்ளக் கூசியது அவர் மனம். சிறிது நேரம் அவர்களோடு வேலை செய்துவிட்டு, "உங்கிட்டத் தான் கொஞ்சம் பேசணும் தம்பீ" என்று சொல்லி ராஜாராமனிடம் சைகை காட்டி அவனை வெளியே கூப்பிட்டார் பத்தர். ராஜாராமன் பசை அப்பியிருந்த கையைக் கழுவித் துடைத்துக் கொண்டு அவரோடு வெளியே வந்தான். "ஏதோ கோவிச்சுக்கிட்டு வந்துட்டீங்க போல் இருக்கு..." "....." "பாவம் அது ரொம்ப சங்கடப்படுது! இப்ப நான் திரும்பிப் போயி ரெண்டு வார்த்தை நீங்க நல்லபடியாச் சொன்னீங்கன்னு காதிலே போட்டாத்தான் அது சாப்பிட உட்காரும்..." அவர் சொல்வதெல்லாம் - அவருடைய வாயிலிருந்து வருவதற்கு முன்பே அவனுக்குப் புரிந்தவைதான். என்றாலும், என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் கேட்டுக் கொண்டு நின்றான் அவன். "புடவையைக் கூட கையாலே கொடுக்காமே தரை மேலே வச்சு, நகர்த்தி விட்டிங்களாம். இந்த இரண்டு நாளா மதுரம் படற வேதனையை என்னாலே பொறுக்க முடியலே." "....." "என்ன தம்பீ? நான் பாட்டுக்குச் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்குப் பேசாம நிக்கறீங்க?" "வேலை இருந்தது; இங்கேயே தங்கிட்டேன். அடுத்தவங்க மனசிலே நினைச்சுக்கறதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியுமா?" இப்படிப் பதில் சொன்ன விதத்திலிருந்தே ராஜாராமன் மனத்தில் கோபம் இருப்பதைப் பத்தர் புரிந்து கொண்டார். "தம்பீ! உங்களுக்குப் பல தடவை நான் உத்தரவாதம் கொடுத்தாச்சு. இது அசல் தங்கம்; மாற்றுக் குறையாத சொக்கத் தங்கம்; கில்ட் இல்லைன்னு படிச்சுப் படிச்சுச் சொல்லியும் நீங்க புரிஞ்சுக்கலே! பக்கத்திலே நிஜமான அன்போட வந்து நிற்கறவங்களோட பக்தியை அலட்சியம் பண்ணிப்பிட்டுத் தேசத்து மேலே மட்டும் பக்தி பண்ணிட முடியாது. மனுசங்க இல்லாமத் தேசம் இல்லே..." "குத்திக் காட்ட வேண்டாம், பத்தரே! என்ன காரியமா வந்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க..." "அதைத்தானே தம்பீ, இப்பச் சொல்லிக்கிட்டிருக்கேன்..." "அதான் அப்பவே பதில் சொன்னேனே, அடுத்தவங்க மனசிலே நினைச்சுக்கறதுக்கெல்லாம் நாம என்ன பண்ண முடியும்?" "அப்ப நீங்க ஒண்ணும் மனசிலே வச்சுக்கலியே?" "....." "வேலை இருக்காம். மகாநாடு முடியிறவரை அங்கேயே தங்க வேண்டியிருக்குமாம். வேற கோபம் எதுவும் இல்லியாம்னு போய்ச் சொல்லிடட்டுமா தம்பீ?" 'சொல்லுங்கள்' என்று சம்மதிக்கவும் செய்யாமல் - சொல்லக்கூடாது என்று மறுக்கவும் செய்யாமல் உள்ளே திரும்பி விட்டான் ராஜாராமன். "அப்ப நான் போயிட்டு வரலாமில்லையா?" என்று பத்தர் இரைந்து கேட்ட கேள்விக்கு மட்டும் "சரி! மகாநாட்டுக்கும் ஊர்வலத்துக்கும் வாங்க!" என்று உள்ளே நடந்து போகத் தொடங்கியிருந்தவன், ஒரு கணம் திரும்பி அவரைப் பார்த்து மறுமொழி கூறினான். பத்தர் புறப்பட்டுச் சென்றார். மகாநாட்டிற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்ததால் முத்திருளப்பன், குருசாமி எல்லாருமே கமிட்டி ஆபீஸீல்தான் கூடினர். பத்தர் வந்து விட்டுப் போன மறுதினம் ஏதோ காரியமாக வாசகசாலைக்குப் போய்விட்டு அப்புறம் கமிட்டி அலுவலகத்துக்கு வந்த முத்திருளப்பன், "ராஜா! மதுரத்து மேலே ஏதாவது கோபமா?" என்று அவனைக் கேட்டபோது கொஞ்சம் தயங்கிவிட்டு "அதெல்லாம் ஒண்ணுமில்லே" என்று பதில் சொன்னான் ராஜாராமன். |