மூன்றாம் பருவம் - வெற்றிக்கொடி 3. வன்னி மன்றம் இந்திரவிழாவின் காரணமாக அறிஞர்கள் ஒன்று கூடியிருந்த நாளங்காடிச் சதுக்கத்தில் தன்னை எதிர்ப்பவரைத் தலைகுனியச் செய்யும் இணையில்லாத ஞானத்தோடு இளங்குமரன் சமயவாதம் புரிந்து கொண்டிருந்த இதே சமயத்தில் பூம்புகாரின் வேறொரு பகுதியில் அவனை அழித்து ஒழிப்பதற்குச் சமயத்தைத் தேடி வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இரண்டு மனிதர்கள். புறநகரில் சக்கரவாளக் கோட்டத்து மதிலருகே நகைவேழம்பரும், பெருநிதிச் செல்வரும் தாங்களிருவரும் ஏறி வந்திருந்த தேரை நிறுத்திவிட்டுப் பேசியவாறே நடந்து கொண்டிருந்தார்கள். பூதம் நின்ற வாயிலில் மேல் நோக்கி வானளாவ நிற்கும் பூதச் சிலையின் தலையிலே சூட்டினாற்போல் நிலவின் ஒளி பரவிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் அவர்கள் இருவரையும் தவிர வேறு மனித சஞ்சாரமே இல்லை. நகரமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் மாபெரும் திருவிழா தொடங்கியிருக்கும் போது சுடுகாட்டுக் கோட்டத்துக்குப் போகிற பாதையில் வேறு யார்தான் வருவார்கள்? பெருநிதிச் செல்வர் ஆத்திரம் அடைந்தாற் போன்ற கண்டிப்பான குரலில் நகைவேழம்பரிடம் பேசிக் கொண்டு வந்தார். “உலகத்தையெல்லாம் ஏமாற்றுகிற சாமர்த்தியத்தை வைத்துக் கொண்டு நீரே சில சமயங்களில் பிறரிடம் ஏமாந்து விடுகிறீர் நகைவேழம்பரே! இந்தப் பிள்ளையாண்டான் துறவியாகி எங்கோ கண்காணாத நாடுகளுக்குச் சென்றுவிட்டதாகக் கூறினிரே. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் இப்படிக் கொடி சுமந்த தோற்றத்தோடு யானைமேல் அமர்ந்து இவன் இங்கே வருவானென்று நீர் எதிர்பார்க்கவில்லையோ? சாதுரியமாக வாழ விரும்புகிறவன் தங்களுடைய வழிகளில் வேண்டாதவர்களுடைய குறுக்கீட்டை எந்தக் கணத்திலும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். “உமக்கும் எனக்கும், நிர்ப்பயமான வாழ்க்கை சாகின்ற வரையில் இருக்க முடியாது. பயமுறுத்தி வாழ வழி செய்து கொண்டவர்கள் பயந்து பயந்து வாழ்வது தான் நியதி. பிறரை அலற அலற, அழ அழப் பயமுறுத்திய நாட்களை நீரும் மறந்திருக்க மாட்டீர்; நானும் மறக்கவில்லை. உம்முடைய திறமையை யெல்லாம் செலவழித்து இரண்டு முறை இந்தப் பிள்ளையாண்டானைக் கொலை செய்ய முயன்றீர். முடியவில்லை. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இதே இந்திர விழாவின் முதல்நாள் இரவில் சம்பாபதி வனத்தில் இவனையும் இவன் வளர்ப்புத் தந்தையையும் சேர்த்து அழித்துவிடுவதற்காக முரட்டு நாகர்கள் இருவரை ஏவினோம். முடியவில்லை. பின்பு இவனும் இவனை வளர்த்த அருட்செல்வரும் தங்கியிருந்த தவச்சாலைக்குத் தீ வைக்க ஏற்பாடு செய்தோம். அந்த ஏற்பாட்டிலும் அருட்செல்வ முனிதான் எரிந்து சாம்பலானார். இந்தப் பிள்ளை அப்போது தவச் சாலையில் இல்லாததால் தப்பிவிட்டான். இவன் சாகாமல் வளர்ந்து நமக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்பது தான் தெய்வ சித்தம் போலி ருக்கிறது!” என்று பெருநிதிச் செல்வர் கூறியதைக் கேட்டு நகைவேழம்பர் சிரித்தார்.
“தெய்வ சித்தம் என்று ஒன்று இருப்பதாக நம்புகிற அளவு நீங்கள் தளர்ந்து விட்டீர்களே. நம் சித்தபடி இவ்வளவும் நடந்திருப்பதைக் கண்ட பின்பும் உங்களுக்கு எப்படி இந்தப் பிரமை ஏற்பட்டது? எல்லா ரகசியமும் தெரிந்த அந்தக் கிழட்டு முனிவனே மண்ணோடு மண்ணாகிப் போனபின் இந்தப் பிள்ளையாண்டானைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே? முன்பாவது நாலுபேரை அடித்துத் தள்ளுகிற வலிமை இவன் உடம்பில் இருந்தது. இப்போது வெறும் ஏட்டுச் சுரைக் காயாகி விட்டான். தெய்வமில்லை, சித்தமுமில்லை. எல்லாம் நாம் ஆசைப்படுகிற விதமே நடக்கிறது. நடத்துகிறோம், இனியும் நடக்கும்.”
“அப்படித் தடையில்லாமல் நடப்பதனால் தான் எனக்குப் பயமாயிருக்கிறது, நகைவேழம்பரே! யாருக்கும் தெரியாத நேரம் என்று நிச்சயமாகத் தெரிந்து கொண்டு திருடினாலும் திருடனுக்குத் தன் செயலில் அதிகமான பயம்தான்! நீடித்து நிலைக்க வேண்டிய காரியத்துக்கு ஒரு தடையும் இல்லாமல் போவதே பெரிய தடை என்பார்கள். நிற்கவும் நிலைக்கவும் ஆசைப்படுகிற காரியத்துக்குத் தடையின்மையே அவலட்சணம். யாரும் சந்தேகப்படாமல் இருப்பதைப் பார்த்தே எனக்குச் சந்தேகமாயிருக்கிறது. யாரும் எதிர்த்து வராமல் இருப்பதே எனக்குப் பெரிய எதிர்ப்பாகப்படுகிறது. யாரும் பயமுறுத்தாமல் இருப்பதே எனக்குப் பெரிய பயத்தைத் தருகிறது. போதாத குறைக்கு இந்தப் பிள்ளையாண்டானுக்கு நீலநாக மறவருடைய ஆதரவு வேறு இருக்கிறது. வீட்டுக்குள் அடைத்து விட்டதனால் என் மகள் சுரமஞ்சரியின் ஆதரவு இனி இவனுக்குக் கிடைக்க வழியில்லை.” “ஒருவேளை வானவல்லியின் ஆதரவு கிடைத்தாலும் கிடைக்கலாம்” என்று ஒரு வார்த்தைக்காகச் சொல்கிறவர் போலச் சொல்லிச் சிரித்தார் நகைவேழம்பர். பெருநிதிச்செல்வர் கடுமையாக அதனை மறுத்தார். “அது ஒருகாலும் சாத்தியமில்லை, நகை வேழம்பரே!” “சாத்தியமில்லை என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எவனுடைய கண்களில் தன்னுடைய ஆசைகள் பிறவாமல் பிறருடைய ஆசைகளைப் பிறப்பிக்கும் ஆற்றல் நிறைந்திருக்கிறதோ அவனுடைய கண்களின் முன் பெண்கள் நிறையிழத்தலைத் தவிர்க்க இயலாது! இந்தப் பிள்ளையின் கண்கள் அத்தகையவை...” என்றார் நகைவேழம்பர். இருவருக்கும் வேண்டாத வழியிலிருந்து அந்தப் பேச்சைத் திருப்பினார் பெருநிதிச் செல்வர். “இப்படிப் பார்த்தாலும் இன்னும் இந்தப் பிள்ளையை அழிக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. அதை வற்புறுத்தத்தான் இவ்வளவு சொன்னேன் நகைவேழம்பரே!” “அழிப்பது பெரிய காரியமில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த முயற்சியின் அருகில் போகும் போது எப்படியோ நான் தோற்றுவிடுகிறேன். கடைசியாக இவனை அழிக்கும் எண்ணத்துடன் இவனது ஓவியத்தைப் பலரிடம் கொடுத்தனுப்பிய போதும் இப்படியேதான் ஆயிற்று. ஆலமுற்றத்து முரடனிடம் நான் அடி வாங்கிக் கொண்டு வந்ததுதான் மீதம்.” “அதெல்லாம் பழைய கதை. இப்போது என்ன செய்யப் போகிறீர் என்று சொல்லும்.” இதற்குச் சிறிது நேரம் மறுமொழி கூறாமல் இருந்தார் நகைவேழம்பர். அவர் ஏதோ சிந்திப்பது போலிருந்தது. “உமக்குக்கூட இப்படிச் செயல்களுக்கு எல்லாம் யோசனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதா?” “யோசனை ஒன்றுமில்லை. இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று திட்டமிட்டேன். தேர் இங்கேயே நிற்கட்டும். வாருங்கள் நடந்தே உட்பக்கம் போய் வரலாம். இந்தக் காரியத்தைப் ‘பைரவி’ மூலமாகச் செய்தால் நினைத்தபடி முடியும். இப்போது போனால் சுடுகாட்டுக் கோட்டத்தில் வன்னி மன்றத்தின் அருகே அவளைச் சந்திக்கலாம்” என்றார் நகை வேழம்பர். பைரவி என்ற பெயரைக் கேட்டதும் பெருநிதிச் செல்வரின் முகம் பயத்தினால் இருண்டது. “பைரவியா, அந்தப் பைசாசத்தையா இப்போது பார்க்க வேண்டுமென்கிறீர்கள்?” என்று தயங்கினார் பெருநிதிச் செல்வர். “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதுபோல் இருந்தால் ஒன்றும் முடியாது. இந்த அகாலத்தில் சுடுகாட்டுக் கோட்டத்தைக் கடந்து போகக் கூசுகிறீர்கள். நீங்கள் கூசினால் கூசிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.” “நான் ஒன்றும் கூசவில்லை. இதோ வருகிறேன். புறப்படுங்கள்” என்று உறுதியானதொரு தீர்மானத்துக்கு வந்தவரைப்போல முன்னால் நடந்தார் பெருநிதிச் செல்வர். நகைவேழம்பரும் தொடர்ந்தார். சக்கரவாளக் கோட்டத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி நீண்ட தொலைவு நடந்துபோன பின் அடர்ந்த வன்னிமரங்கள் நிறைந்த ஓரிடத்தை அடைந்ததும் இருவரும் நின்றார்கள். அங்கே சுற்றிலும் கபாலங்கள் கிடந்தன. அருவருக்கத்தக்க முடை நாற்றம் வீசியது. சுற்றிலும் எரிந்து கொண்டிருந்த கொள்ளித் தீயில் எலும்புகளும் கபாலங்களும் அச்சுறுத்தும் விதத்தில் தெரிந்தன. வன்னிமரங்களின் கீழே அங்கங்கே கபாலிகர்கள் தனியாகவும் கூட்டமாகவும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வெறிக் கூப் பாடுகள் ஒலிப்பதும் அடங்குவதுமாக இருந்தன. மயானத்தின் கோரச் சூழ்நிலை நிலவிய அந்தப் பகுதியின் ஒருமூலையில் தரையோடுதரையாகத் தாழ்ந்து முள் நிறைந்த கொடிகளால் குடிசையைப் போலப் படர விட்டிருந்த வன்னி மரப்பந்தல் ஒன்றின் வாயிலருகே சென்று ‘பைரவி’ - என்று விநயமாகக் குரல் கொடுத்தார் நகைவேழம்பர். முதலில் உள்ளேயிருந்து மறுமொழி இல்லை. பின்பு முன்னிலும் உரத்த குரலில் அதே பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார் அவர். பாய்ந்து வெளியே வரும் அவசரத்தில் வன்னி முட்கள் கீறிய குருதி சாம்பர் பூசிய உடலில் செந்நிறம் காட்டிடக் கையிலிருந்த கபாலம் பயத்தைக் காட்டிட முரட் டுப் பேய்ப் பெண் ஒருத்தி வந்து நின்றாள். அந்தக் கபாலிகப் பெண்ணுக்கு முன் பெருநிதிச் செல்வர் மெய் நடுங்கி நிற்க நகைவேழம்பர் சிரித்தபடியே சுபாவமாகப் பேசுவதற்குத் தொடங்கினார். “நீண்ட நாட்களுக்குப் பின் உன்னைச் சந்திக்க வந்திருக்கிறோம் பைரவி! வந்திருக்கிற காரியமும் அவசியமானதுதான்.” “அது இரண்டு பேரும் சேர்ந்து வந்திருப்பதைப் பார்த்தாலே தெரிகிறதே” என்று சொல்லிக் கோரமாகச் சிரித்தாள் பைரவி. |