10
வாழ்வின் துயரங்களுக்கு வெறும் நெஞ்சினால் மட்டும் சாட்சியாக நிற்கிற ஊமைத் துணைகளால் ஒரு பயனுமில்லை. "பத்திரிகையாளன் என்ற தகுதிக்குக் காரணமான துணிவு எதுவோ அது தொழில் பயத்தில் அவிந்து போகும். எனவே சொகுசு நாடும் 'தொழில் பயந்தாங்கொள்ளிகள்' யாராயிருந்தாலும் அவர்கள் தைரியமேயின்றிப் பத்திரிகைத் தொழில் என்ற போர்க்களத்துக்கு வரக்கூடாது" என்றார் மகாதேவன். "அந்தத் தைரியத்துக்கு 'நக்கீர தைரியம்' என்று பெயர் சூட்டலாமென்று எனக்குத் தோன்றுகிறது சார்! ஏனென்றால் சமூக வாழ்வில் நியாயமான தைரியத்தோடு எழுந்து நின்று பொய்யையோ, குற்றத்தையோ சாடுகிற ஒவ்வொருவனையும் வெதும்புவதற்கு எந்த மூலையிலிருந்து எப்படிப்பட்ட கொடிய நெற்றிக் கண்கள் திறக்கும் என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாமலிருக்கிறது." "பழைய நக்கீரன் நெற்றிக் கண்ணில் வெதும்பி விட்டான். ஆனால் புதிய நக்கீரர்களாகிய நம்மைப் போன்ற பத்திரிகையாளர்களோ எத்தனை நெற்றிக் கண் எவ்வளவு உயரத்திலிருந்து திறந்தாலும் சூடுபட்டுக் கொண்டே அநீதியைச் சுட்டெரிக்க வேண்டும்! இங்கே டைம்ஸில் சேர்ந்து என்னோடு எனது கொஞ்ச சௌகரியங்களையும் - அதிக கஷ்டங்களையும் பங்கு கொள்ள நீங்களும் தயாராயிருக்கிறீர்களா?" - என்று கடைசியில் வெளிப்படையாகவே கேட்டார் மகாதேவன். "முதலில் என் சகோதரியைப் பார்க்க கோயம்புத்தூர் போய்வர வேண்டுமென்று இருக்கிறேன். திரும்பி வந்ததும் மறுபடி உங்களை சந்திக்கிறேன் சார்" - என்றான் சுகுணன். அவரும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை. இருவரும் தம்புச் செட்டித் தெருவிலேயே இருந்த ஒரு வடக்கத்திக் கடையில் சப்பாத்தியும் பாலும் சாப்பிட்டு விட்டு வந்து மறுபடியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். நேரம் அதிகமாகி விட்டது. பஸ் போக்குவரவு கூட நின்றிருந்தது. மகாதேவனுக்கு வீடு 'ஐஸ் ஹவுஸ்' பக்கம் இருந்தது. "நீங்கள் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று அவரைக் கேட்டான் சுகுணன். "என்னைப் பற்றிக் கவலையில்லை. வீட்டுக்குப் போனாலும் போவேன். இங்கேயே 'பழைய பார்சல்' கட்டு ஒன்றைத் தலைக்கு எடுத்து வைத்துக் கொண்டு படுத்தாலும் படுத்து விடுவேன். ஒன்று வேண்டுமானால் செய்யலாம். நீங்களும் திருவல்லிக்கேணிக்கே போக வேண்டியிருப்பதனால் இரண்டு பேருமாகப் பேசிக் கொண்டே நடந்து போய்விடலாம்" - என்றார் மகாதேவன். சுகுணனும் அதற்குச் சம்மதித்தான். மகாதேவனிடம் அவனுக்குப் பிடித்தமான குணங்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கையின் சௌகரியங்களுக்குத் தன்னை வளைத்துக் கொள்ளாமல் தன்னுடைய அசௌகரியங்களுக்கு ஏற்றபடி வாழ்க்கையை வளைத்துக் கொண்டவர் அவர். பஸ்ஸில், ரிக்ஷாவில், சமயங்களில் நடையில், அவசியமானபோது டாக்ஸியில், என்று போலி ஸ்டேட்டஸ் எதையும் கற்பித்துக் கொண்டு சீரழியாமல் முடிந்தபடி வாழ்கிறவர் அவர். அவருடைய இந்த எளிமையை அவன் மிகவும் விரும்பினான். தங்களைப் பலர் பார்த்துத் தாங்கள் நடந்து போவதைப் பரிதாபமாக நோக்குவது போலவும் - எனவே தாங்கள் மண்ணை மிதித்து நடக்கவே கூடாது என்பது போலவும் - போலியாக கற்பித்துக் கொண்ட 'ஸ்டேட்டஸ்' பாவனையினால் சென்னைப் பட்டினத்துப் பத்திரிகையாளர் சிலர் வசதியற்ற நிலையிலும் கடன் வாங்கிக் கார்களிலே பறப்பதைப் பார்த்திருந்தவன் அவன். அதே ஊரில் மகாதேவனைப் போல் எளிமை கொண்டாடும் சில பத்திரிகையுலக மகாத்மாக்களும் இருப்பது அவனைக் கவர்ந்ததில் வியப்பில்லை.
அவர்களிருவரும் கோட்டை ஸ்டேஷன் பாலத்தில் ஏறி மவுண்ட் ரோட்டுக்காக ஐலண்ட் கிரவுண்ட் நோக்கித் திரும்பிய போது உச்சி நிலா ஒளியில் எதிரே சர் தாமஸ் மன்றோவின் குதிரை வாயு வேகத்தில் பாய்ந்து வருவது போல் அவசரமாக ஒரு பிரமையை உண்டாக்கியது. ஒரு நிமிஷம் நடப்பதை நிறுத்திவிட்டு நின்று கவனித்த போது மன்றோவின் குதிரையும் நின்று விட்டது. நிலா ஒளியில் விசாலமான சாலையில் நட்ட நடுவே அந்தக் குதிரைச் சிலை மிகமிக வசீகரமாகத் தோற்றமளித்தது. அவன் அந்தச் சிலையைக் கூர்ந்து கவனிப்பதையும் அவன் மனத்தில் ஓடும் சிந்தனையையும் அநுமானித்தவராக மகாதேவன் அவனிடம் கூறலானார்.
பதினைந்து வருடங்களாக இந்தச் சிலைதான் என் வாழ்க்கையின் குருவாக இருந்து வருகிறது சுகுணன்! எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோ விதமான மனநிலைகளில் இந்தச் சிலையை நான் பார்க்க நேர்ந்திருக்கிறது. நள்ளிரவில், நடுப்பகலில், வெயில் விரியாத வைகறையில், முன்னிரவில் - என்று எத்தனையோ சமயங்களில் இக்குதிரை வீரனைப் பார்த்திருக்கிறேன். கைநிறையப் பணத்தோடும், கையில் பணமே இல்லாத பேய் வறுமையோடும், வேறு வழியில்லாத காரணத்தால் தம்புச் செட்டித் தெருவிலிருந்து இரவு பத்தரை மணிக்குமேல் இந்தப் பாதையாகத் திருவல்லிக்கேணிக்கு நடந்து போகும் போது - எத்தனையோ முறை இந்தக் குதிரை வீரனின் சிலையிலிருந்து என் வாழ்க்கைத் தத்துவங்களைத் தேடியிருக்கிறேன் நான். நாம் நடந்தால் இந்தக் குதிரையும் அந்தரத்தில் உயிர் பெற்று வேகமாக நகர்வது போலிருக்கும். நாம் நின்றாலோ இதுவும் சிலையாகிவிடும். கையில் வசதியோடு நாம் வேகமாக வாழ்க்கையின் காரியங்களுக்கு ஓடியாடி அலைந்து கொண்டிருக்கும் போது - இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் உற்சாகமாக ஓடுவதாய்த் தெரியும். கையில் வசதியில்லாமல் நாம் தயங்கி மலைத்து நிற்கிற போது இந்தச் சிலை போலவே பட்டினம் முழுவதும் சிலையாகச் சபிக்கப்பட்டு விட்டது போல் தோன்றும். நாம் ஓடினால் உடன் ஓடுகிற சிலை இது. நாம் நின்றால் உடன் நிற்கிற சிலையும் இதுதான். பட்டினத்தின் வாழ்க்கைத் தத்துவ இரகசியம் - ஞான சூசனை - இந்தச் சிலையில் மறைந்திருப்பதாக எனக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனமான அங்கீகாரம் உண்டு சுகுணன்" - என்றார் மகாதேவன். அவர் கூறியபடியே பார்க்கிறவர் நின்றால் சிலையும் நிற்பதையும் பார்க்கிறவர் நடந்தால் சிலையும் நகர்வது போல் தோன்றுவதையும் சுகுணன் அப்போது கூர்ந்து உணர்ந்தான். "இந்தச் சிலையை அமைத்த சிற்பியைவிடப் பட்டினத்து வாழ்வுக்கு இங்கிதமான ஞானம் சொல்லிக் கொடுப்பவன் வேறு யாரும் இல்லை" என்றார் மகாதேவன். "உண்மைதான்!" என்று வழி நெட்டுயிர்த்தான் சுகுணன். மீண்டும் நடந்தார்கள் அவர்கள். பைகிராப்ட்ஸ் ரோடு மூலையில் அவர்கள் வேறு வேறு திசைகளில் விடைபெற்றுக் கொண்டு பிரிந்தார்கள். அறைக்குப் படியேறிய சுகுணனைப் படியிலேயே ஓடி வந்து எதிர்கொண்ட 'லாட்ஜ்' பையன், "இன்னிக்குப் பார்த்து எங்க போயிட்டீங்க... சார்? உங்களுக்கு 'டிரங்க்கால்' வந்திருந்தது. ரெண்டு தரம் கூப்பிட்டுட்டாங்க. 'பெண்டிங்'லே வச்சிருக்கேன். வந்து பேசுங்க..." - என்றான். பையன் கூறியதைக் கேட்டுச் சுகுணன் எந்த விதமான பரபரப்பும் அடையவில்லை. தனக்கு எந்த ஊரிலிருந்தும், யாரிடமிருந்தும், 'டிரங்க்கால்' வந்திருக்க முடியுமென்பதை அவன் நம்பவில்லை. வேறு யாருக்காவது வந்த 'டிரங்க்காலை'த் தவறுதலாகத் தெரிவிக்கிறார்களோ என்றுதான் முதலில் எண்ணினான். 'கண்ணப்பா லாட்ஜ்' - பையனோ, "உங்களுக்குத் தான் சார்?... சந்தேகமே இல்லை" - என்று நிச்சயமாகச் சொன்னான். உடனே சுகுணன் டெலிபோனை எடுத்து டயல் செய்து 'டிரங்க் - என்குயரீஸை'க் கூப்பிட்டு விசாரித்தான். விசாரித்த பின்போ பையன் கூறியதுதான் உண்மை என்று தெரிந்தது. டில்லியிலிருந்து அவனுக்கு 'டிரங்க்கால்' வந்திருப்பதாகவும், மறுபடி இன்னும் சிறிது நேரத்தில் கூப்பிடுவதாகவும் - வெளியூர் டெலிபோன்கள் பற்றிய விசாரணைப் பிரிவிலிருந்த பெண் தெரிவித்தாள். 'டில்லியிலிருந்து துளசியைத் தவிர வேறு யார் தன்னைக் கூப்பிட முடியும்!' என்று சிந்தித்த போது 'ஒரு வேளை - பத்திரிகையாளர் வேஜ் போர்டு (சம்பள விகிதம்) கூட்ட சம்பந்தமாகவோ, பெடரேஷன் கூட்டத்திற்காகவோ 'கோஷ்' டெல்லி செல்ல நேர்ந்து அங்கிருந்து கூப்பிடுகிறாரோ' என்றும் தோன்றியது அவனுக்கு. டில்லியிலுள்ள இரண்டொரு பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவும் அவனுள் எழுந்ததாயினும், தொலைபேசியில் கூப்பிடுகிற அளவு தனக்கும் அவர்களுக்கும் இடையே எந்த அவசரமும் அவசியமும் இல்லையென்றும் தோன்றியது. சிந்தனையில் இப்படிப் பலவிதமாகக் குழம்பிய பின் 'டில்லியிலிருந்து கூப்பிடும் கட்டுப்படுத்த முடியாத இந்த ஆவல் துளசியினுடையதாகத்தான் இருக்க முடியுமென்று' அவனே தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தான். 'டெலிபோன்' விஷயத்தில் நாகசாமியைப் போலவே அவர் மகளும் இருப்பதை எண்ணி உள்ளூரச் சிரிப்பு வந்தது அவனுக்கு. நாகசாமி ஒரு டெலிபோன் வெறியர். அதாவது குறைந்த பட்சம் நாள் ஒன்றிற்கு முப்பது 'டிரங்க்கால்'களாவது போட்டுப் பேசுவார். ஒரு காரியமாவது 'டிரங்க்காலில்' பேசி முடிக்க வேண்டிய அவசர காரியமாக இராது. தபால் கார்டில் எழுதிப் போட்டாலும் நடந்து விடக்கூடிய காரியத்துக்குக் கூட 'டிரங்க்கால்' தான் அவருக்கு. நாலு கூடை மாவடு, ஊறுகாய்க்காக அனுப்பி வைக்க வேண்டுமென்று - மாயவரத்திலுள்ள ஒரு நண்பருக்குத் திடீரென்று அர்ஜெண்டாக ஃபோன் செய்வார். இரண்டு டஜன் காபூல் மாதுளை வாங்கி இரவு விமானத்தில் கொடுத்தனுப்ப வேண்டுமென்று டெல்லிக்கு யாருக்காவது 'டிரங்க்கால்' செய்வார். அதே சமயத்தில் 'மாருதி குரூப் வெளியீடு'களைச் சேர்ந்த அலுவலகங்களில் வேலை பார்க்கும் சர்க்குலேஷன் நிர்வாகி, சப்ஸ்கிரிப்ஷன் நிர்வாகி, முதலியவர்களுக்குச் 'சிக்கனமாக ஆபீஸ் நடத்த வேண்டும்' - என்று உபதேசம் செய்யும் போதோ, 'கூடியவரை எல்லாம் போஸ்ட் கார்டிலேயே எழுதுங்கள். தபால் செலவு நிறைய ஆகக்கூடாது' - என்று அடித்துச் சொல்லுவார். அவரைப் பற்றி நினைத்து இப்படி அவன் உள்ளூரச் சிரித்துக் கொண்டிருந்த போது டெலிபோன் மணி அடிக்கலாயிற்று. டெலிபோனை எடுத்தான் அவன். டெலிபோன் இலாகா பெண்மணி விவரம் சொல்லிய பின் எதிர்ப்புறமிருந்து துளசியின் குரல்தான் மங்கலாக ஒலித்தது. "கம்பெனி வேலையாக அவர் ஜெய்ப்பூர் போயிருக்கிறார். நான் தான் வீட்டில் தனியாக இருக்கேன். பொழுதே போகவில்லை. சாயங்காலம் அப்பாவுக்கு 'டிரங்க்கால்' போட்டுப் பேசினேன். எப்போது யாரிடம் எதைப் பற்றிப் பேசினாலும் என் ஞாபகம் உங்களைச் சுற்றித்தான் இருக்கு. என்னாலே உங்களையோ, உங்களைப் பற்றிய நினைவுகளையோ மறக்க முடியலே. அப்பாவிடம் பேசற போதும் உங்களைப் பற்றிப் பொதுவாக விசாரித்தேன். நான் விசாரித்த போது அவர் உங்களைப் பற்றி அவ்வளவு சுமுகமாகப் பதில் சொல்லலை. 'நாளுக்கு நாள் எங்களுக்குள்ளே மனஸ்தாபம் அதிகமாகிக் கொண்டு வருகிறது அம்மா! சுகுணன் இனிமேல் அதிக நாள் இங்கே இருப்பாரென்று சொல்ல முடியாது' என்று வேறு சொல்லி என் கலக்கத்தை அதிகமாக்கி விட்டார். அப்பாவிடம் பேசி முடித்துப் ஃபோனை கீழே வைத்த வினாடியிலிருந்து எனக்கு ஒரே கவலையாக இருந்தது. ஒரு வேலையும் ஓடவில்லை. இரவு ஒன்பது மணிக்கு மேல் நீங்கள் எப்படியும் அறைக்கு வந்து விடுவீர்கள் என்று எண்ணிக் கூப்பிட்டேன். முதலில் இல்லை என்றார்கள். பொறுமையோடு டெலிபோனடியில் காத்திருந்தேன். இப்போதுதான் கிடைத்தீர்கள். அதுசரி இரவு இவ்வளவு நேரம் வரை எங்கே போயிருந்தீர்கள்?" "காரியமிருந்தது, வெளியே போயிருந்தேன்." "அப்பாவுக்கும், உங்களுக்கும் ஆபீஸில் அப்படி என்ன மனஸ்தாபம்." "ஒரு முதலாளிக்கும் - தொழிலாளிக்கும் இடையில் எத்தனையோ மனஸ்தாபங்கள் இருக்கும்..." "நீங்கள் தொழிலாளியா... என்ன?" "எல்லாரையும் உன்னுடைய அப்பா அப்படித்தான் நடத்துகிறார். அவர் சம்பளம் கொடுக்கிறார். அதனால் நாங்கள் வேலை செய்கிறோம்! சுதந்திரமாக அங்கே நாங்கள் வேலை செய்து விடக்கூடாது!" சுகுணன் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது டெலிபோன் இலாகா பெண்மணி குறுக்கிட்டு 'முதல் மூன்று நிமிடங்கள்' முடிந்து விட்டதாக அறிவித்தாள். அந்த அறிவிப்புக் குரலை அடுத்து அவசரமாகவும் பரபரப்பாகவும் "தயவு செய்து இன்னும் மூன்று நிமிஷம் 'எக்ஸ்டெண்ட்' (விரிவு) செய்யுங்கள்" - என்று வேண்டிக்கொள்ளும் துளசியின் குரலும் டெலிபோனில் கேட்டது. "அப்பா முன்கோபக்காரர்தான். ஆனால் உங்களை நினைத்தால்தான் எனக்குப் பயமாகவும் கவலையாகவும் இருக்கிறது..." "எனக்காக நான் கவலைப்படுவதையே விரும்பாதவன் நான். நீ கவலைப்படுவது அநாவசியம். ஒருவருக்காக மற்றவர் கவலைப்படுவது தவிர்க்க முடியாத - அதே சமயத்தில் சொல்லாகவும் வெளிப்படாத வெறும் நெஞ்சின் சாட்சி. வாழ்வின் துயரங்களுக்கு வெறும் நெஞ்சினால் மட்டும் சாட்சியாக நிற்கிற ஊமைத் துணைகளால் ஒரு பயனுமில்லே..." "இந்த ஒரு விஷயத்தில் மட்டுமில்லையே? பல விஷயங்களில் நெஞ்சுக்கு நெஞ்சு சாட்சியாக மட்டுமே நின்றிருக்கிறோம் நாம்." "இருக்கலாம்! ஆனால், இன்று அதை எண்ணி என்ன ஆகப்போகிறது துளசி?" "ஆயிரம் மைல்களுக்கும் அப்பாலிருந்து உங்களையே நினைத்து கவலையால் உருகிக் கூப்பிடுகிறேன் நான். பேச்சினால் என்னைச் சித்ரவதை செய்கிறீர்கள் நீங்கள்..." அவளுடைய இந்தச் சொற்கள் அழுகை தோய்ந்த குரலில் ஒலித்ததைக் கேட்ட போது சுகுணனுக்கும் வேதனையாகத்தான் இருந்தது. "நான் இலக்கிய சேவை செய்ய ஆசைப்படுகிறேன். உன் தந்தையோ வெறும் காகித வியாபாரம் செய்ய ஆசைப்படுகிறார். கேட்பார் பேச்சுக்கு வசப்படுகிற கெட்ட குணமும் அவரிடம் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் எனக்கும் அவருக்கும் இனி எப்படி ஒத்து வரும்?" "உங்களுடைய சக்தி வாய்ந்த எழுத்துக்களாலும் சிந்தனை வளம் மிகுந்த நாவல்களாலும் பூம்பொழிலுக்குப் பல்லாயிரக் கணக்கான வாசகர்களைத் தேடிக் கொடுத்த நீங்கள் அதை விட்டு விட்டு வெளியேறலாமா?" "வேறு வழி இல்லை! வெறும் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டுச் சம்பளம் பெறும் கூலியாக இன்னும் சிறிது காலம் நான் அங்கே தாமதித்தாலும் எந்த எழுத்தின் சக்தியை நீ இப்போது ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து புகழ்கிறாயோ அந்த எழுத்தின் சக்தியையே நான் இழக்க நேரிட்டு விடும் போலிருக்கிறது." "எதையும் தீர யோசித்துச் செய்யுங்கள்..." "இதைச் செய்த பிறகு இனி நாளை வேறென்ன செய்யலாம் என்பதைத்தான் இனிமேல் தீர யோசிக்க வேண்டுமே ஒழிய - இதில் தீரவோ யோசிக்கவோ - இனி ஒன்றுமில்லை..." "நீங்கள் இப்படிச் சொல்லக் கூடாது! என்னைக் கவலைப்பட்டு அழிய விடாதீர்கள்..." மறுபடியும் மூன்று நிமிடம் முடியப் போவதற்கான அடையாள ஒலி டெலிபோனில் குறுக்கிட்டது. பரபரப்போடு மேலும் மூன்று நிமிடம் எக்ஸ்டெண்ட் செய்ய வேண்டித் துளசி கெஞ்சினாள். பின்னால் நிறையக் 'கால்'கள் இருப்பதால் மேலும் நீடிப்பது சாத்தியமில்லை என்று கண்டிப்பாகக் கூறி லயனைக் 'கட்' செய்து விட்டாள் டெலிபோன் இலாகா பெண்மணி. மனத்தினுள் ஏதோ ஓர் அரை குறை உணர்வோடும் - ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தவிக்கும் ஓர் அன்பு உள்ளத்துக்காக உள்ளூர வேதனையோடு டெலிபோனை வைத்தான் சுகுணன். இந்தத் தகவலை இவ்வளவு விரைவாகத் துளசி அறிவதற்கு ஒரு வாய்ப்பு நேரும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. தன் மேல் அவளுக்கிருக்கும் அக்கறையினாலும் ஆர்வத்தினாலும் மறுபடியும் டெல்லியிலிருந்து ஓர் அவசர 'டிரங்க்கால்' புக் செய்து பாதியில் நின்ற பேச்சைத் தொடங்குவாளோ என்ற பிரமையில் சிறிது நேரம் ஒரு காரியமும் ஓடாமல் டெலிபோனடியிலேயே உட்கார்ந்திருந்தான் சுகுணன். மறுபடி அவன் எழுந்து அறைக்குள் சென்றபோது மணி பன்னிரண்டரைக்கு மேல் ஆகியிருந்தது. அப்போதிருந்த மனநிலையில் உறக்கமும் அவனை அணுகவில்லை. உடம்பு சோர்ந்தால் வருகிற தூக்கம் மனம் விழித்திருந்தால் வரமாட்டேனென்கிறதே! நாகசாமிக்கு அலுவலக முறைப்படி சுருக்கமாக ஓர் இராஜிநாமாக் கடிதமும் தனிப்பட்ட முறையில் விரிவானதொரு கடிதமும் எழுதினான் அவன். தன்னுடைய தொடர் கதையின் கடைசிப் பகுதியையும் தன்னிடம் அரை குறையாயிருந்த அலுவலகத்து வேலைகளையும் - இரண்டொரு தினங்களில் முடித்து அனுப்பி விடுவதாகவும் அந்தக் கடிதத்தில் அவருக்கு எழுதியிருந்தான் அவன். காரியாலய ஊழியர்களும் ஃபோர்மென் நாயுடு சிலரும் தன்னுடைய வெளியேற்றத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கற்பனை செய்வதில் சிறிது நேரம் கழிந்தது. இப்படி அவன் தானாகவே இராஜினாமா செய்யத் தூண்டுவதற்கான காரியங்களை எல்லாம் செய்திருந்த நாகசாமியும் ரங்கபாஷ்யமும் இதை வரவேற்று மகிழ்வார்கள் என்றே அவனால் நினைக்க முடிந்தது. அதற்குப் பின் அன்றிரவு துளசி மறுபடி டில்லியிலிருந்து கூப்பிடவேயில்லை. ஒன்று டெல்லி லயனில் அதிக 'கால்'களின் பிரஷர் இருந்து அது அவளுக்குக் கிடைக்காமல் போயிருக்க வேண்டும். அல்லது அவளே மறுபடி கூப்பிடுகிற எண்ணத்தைக் கைவிட்டிருக்க வேண்டும். சுகுணனும் நீண்ட நேரம் விழித்திருந்த பின் அதிகாலையில் சோர்ந்து உறங்கிப் போனான். எழுந்திருக்கும் போது விடிந்து அதிக நேரமாகியிருந்தது. குளித்து விட்டுச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நேரே தபாலாபீசுக்குப் போய் நாகசாமிக்கு எழுதியிருந்த கடிதங்கள் இரண்டையும் முதல் வேலையாகப் பதிவுத் தபாலில் அனுப்பினான். இரண்டு மூன்று நாட்களில் அங்கு புறப்பட்டு வருவதாகச் சகோதரிக்கு ஒரு முன் கடிதம் எழுதினான். மறுபடியும் அறைக்கு வந்ததும் தன் கடமையை விரைந்து முடித்தாக வேண்டுமே என்ற உணர்வுடன் ஏற்கெனவே பெரும் பகுதி எழுதியும் குறிப்பு அமைத்தும் வைத்திருந்த பூம்பொழில் தொடர் நாவலின் இறுதிப் பகுதியை உருவாக்குவதில் முனைந்தான். மாலையில் தம்புச் செட்டித் தெருவிலிருந்த நேஷனல் டைம்ஸ் காரியாலயத்துக்குச் செல்ல நினைத்திருந்ததனால் - பகலிலேயே பூம்பொழில் வேலையை முடித்து விட எண்ணியிருந்தான் அவன். பகல் சாப்பாட்டுக்குக் கூட அவன் மெஸ்ஸிற்கோ வேறு எங்குமே போகவில்லை. கண்ணப்பா லாட்ஜ் பையனை 'பிளாஸ்க்' நிறையக் காபி வாங்கி வரச் செய்து அருகில் வைத்துக் கொண்டு எழுத்து வேலையில் மூழ்கினான். வேலை முடியும் போது ஐந்தரை மணி. அதையும் சரிபார்த்துப் பதிவுத் தபாலில் பூம்பொழிலுக்கு அனுப்பிவிட்டு மவுண்ட் ரோடிலிருந்தே அவன் தம்புச் செட்டித் தெருவுக்குப் புறப்படும் போது ஆறரை மணிக்கு மேலாகியிருந்தது. பஸ்ஸில் போகும் போது விரைவாகப் பார்வையில் பட்டு மறைந்த சர். தாமஸ் மன்றோவின் சிலை - முதல் நாள் இரவு நண்பர் மகாதேவன் கூறிய தத்துவத்தை நினைவு கூறச் செய்தது. அன்றிரவும் மகாதேவனும் அவனும் நெடுநேரம் 'நேஷனல் டைம்ஸ்' காரியாலயத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். செய்திகளுக்குத் தலைப்புப் போடுவது, மொழி பெயர்ப்பு, புரூஃப் திருத்தல் - ஆகிய சில உதவிகளை அவருக்குச் செய்தான் சுகுணன். அன்று மகாதேவனும், அவனும் 'டைம்ஸ்' காரியாலயத்திலேயே இரவில் தங்கிவிட்டனர். 'டைம்ஸின்' ஸப்ளிமெண்ட் ஒன்று வெளிவர இருந்ததனால் தொடர்ந்து சில இரவுகள் வேலை இருந்தது. மகாதேவன் காரியாலயத்திலேயே தங்கினார். சுகுணனும் சில நாட்கள் அவருக்கு உதவியாக அங்கு அதிக நேரம் செலவழித்தான். அதில் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் மிகுதியாயிருந்தன. அவன் நாகசாமிக்குக் கடிதங்களை அனுப்பிய மூன்றாம் நாளோ, நான்காம் நாளோ அவனுடைய இராஜிநாமாவை எதிர்பார்த்தே தயாராக எல்லாம் கணக்குப் பார்த்து வைத்திருந்தது போல் 'செக்' இணைத்து - இராஜிநாமா ஒப்புதல் கடிதத்தோடு பதில் அனுப்பியிருந்தார் நாகசாமி. பாண்டுரங்கனார் - பூம்பொழிலின் ஆசிரியராக நியமிக்கப்பட்டுவிட்டதாக அன்று மாலையே வேறொருவர் மூலம் கேள்விப்பட்டான் சுகுணன். நாகசாமிக்குப் 'பல் பத்திரிகைக் காவலர்' பட்டமளிப்பு விழா நடத்தியது போன்ற காரியங்களில் முன்பு பாண்டுரங்கனார் ஈடுபட்டது வீண்போகவில்லை என்று இப்பொழுது சுகுணனுக்குத் தோன்றியது. இந்தச் சில நாட்களில் மகாதேவனோடு பழகி உடனிருந்து பார்த்ததில் அவருடைய அநுபவமும், பத்திரிகைத்துறை ஞானமும், தன்னம்பிக்கையும், சிந்தனைச் சுதந்திரமும் அவனை வெகுவாகக் கவர்ந்தன. ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் அவரிடமிருந்த அறிவுச் செருக்கும் அவனுக்குப் பிடித்திருந்தது. சுகுணனிடம் பேசிய போது அடிக்கடி,
'ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு' - என்ற திருக்குறளைக் கூறி இந்தக் குறளில் கூறப்படுகிறதை ஒத்த பெருமை தான் பத்திரிகையாளனின் பெருமையும் என்று வற்புறுத்துவார் மகாதேவன். பத்திரிகையாளனின் பெருமிதத்தைக் கற்புடன் ஒப்பிடுவார் அவர். இந்த நாட்டில் பத்திரிகை தொழில் வெறும் வியாபாரமாகாமல் தேசபக்தியும் - சேவை மனப்பான்மையும் நிறைந்த இயக்கமாக வேண்டுமானால் மகாதேவனைப் போன்ற பத்திரிகையாளர்களின் கைகளைப் பலப்படுத்த வேண்டுமென்று சுகுணன் நினைத்தான். அவன் பூம்பொழில் வேலையை விட்ட பின் ஒருநாள் அதிகாலையில் ஃபோர்மென் நாயுடு அவனை அறையில் வந்து பார்த்துவிட்டுப் போனார். அவன் பூம்பொழிலிலிருந்து வெளியேற நேர்ந்தது பற்றியும் வருந்தினார். காலை மலர் சர்மாவின் மேற்பார்வையோடு பைந்தமிழ் நாவலர் பா.பாண்டுரங்கனார் பூம்பொழிலின் புதிய ஆசிரியராக வந்து - கந்தபுராணத் தொடர் கட்டுரை எழுத ஆரம்பித்திருப்பது பற்றியும் ஃபோர்மென் நாயுடு தெரிவித்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு காரியாலயத்தின் அச்சக நண்பர்களைப் பற்றிக் கனிவுடன் விசாரித்த பின் நாயுடுவிற்கு விடை கொடுத்தான் சுகுணன். அந்தச் சில நாட்களில் மகாதேவனோடு பழகியதில் அவருடைய பத்திரிகையாகிய இலட்சியப் போராட்டத்தை நடத்துவதற்காக - அவர் படும் துன்பங்களையும் சுகுணன் கண்டிருந்தான். ஹார்பரில் நியூஸ் பிரிண்ட் ரீல்கள் வந்து கிடக்கும். பணம் கட்டிக் 'கிளியர்' செய்ய முடியாததால் உள்ளேயே குமையும் ஊமைத் துன்பத்தோடு - அதை மற்றவர்களிடம் சொல்லி அவர்களையும் வேதனைப் படுத்தாமல் - தமக்குள்ளேயே வைத்து வேதனைப்படும் சுபாவமுள்ளவர் மகாதேவன். பூம்பொழில் காரியாலயத்திலிருந்து வெளியேறிய போது தனக்குக் கிடைத்த தொகையையும், வழக்கமாகத் தன்னுடைய நாவல்களை வெளியிடும் ஒரு பதிப்பாளரிடமிருந்து வாங்கிய தொகையுமாக ஒரு பத்தாயிரம் ரூபாய் வரை அவருக்கு உதவ முன் வந்தான் சுகுணன். மகாதேவன் முதலில் தயங்கினார் - மறுத்தார். தனக்குக் கஷ்டமே இல்லை என்பது போல் சுகுணனிடம் சிரித்துப் பேசி மழுப்பினார். சுகுணன் மிகவும் வற்புறுத்திய பின் "சிநேகிதர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் பெரும்பாலும் சிநேகிதத்தைப் பணயம் வைக்கிற காரியமாக முடிந்து விடுகிறது. அதனால் தான், பயப்படுகிறேன்" என்றார். அதற்கும் சுகுணன் சரியானபடி பதில் கூறினான்: "நீங்களும் அப்படிப்பட்ட சிநேகிதரில்லை; நானும் அப்படிப்பட்ட சிரமம் தரும் சிநேகிதனாக மாறிவிடப் போவதில்லை. ஆகவே தயங்காமல் நான் தருவதை வாங்கிக் கொள்ளுங்கள். இதை வாங்கிக் கொள்ளத் தயங்குகிறவரை என்னை உண்மை நண்பனாக நீங்கள் அங்கீகரிக்கவில்லை என்று தான் கருதுவேன்." "இதற்கு அப்படி அர்த்தமில்லை சுகுணன்! எனக்கு வரும் சிரமங்களுக்கு என் நண்பர்களை ஒவ்வொருவராக நான் பணயம் வைக்கக் கூடாது என்று தான் பார்த்தேன். 'பாங்கர்'களாகவும் வர்த்தகர்களாகவுமுள்ள பெரும் பத்திரிகைகளின் முதலாளிகளோடு கருத்து மாறுபட்டு வெளியேறி நான் சொந்தமாகப் பத்திரிகை நடத்துவதால் - வர்த்தகர்கள் என்னைப் பழிவாங்குவதற்காக விளம்பர ஆதரவுகளை தருவதில்லை. பொதுமக்களோ இந்த நாட்டில் பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். அவர்களைப் புதியதற்கும் நல்லதற்கும் பழக்கப்படுத்த அதிக முயற்சி வேண்டியதாயிருக்கிறது. 'கன்ஸர்வேடிவ்' மனப்பான்மை தழும்பேறிப் போன தேசத்தில் எண்ணங்களை மாற்றவே பெரும் புரட்சி தேவைப்படுகிறது. நான் சிரமப்படுவதற்கு அதுதான் காரணம். இவ்வளவிற்கும் என் பத்திரிகையை எனக்காகவே பலர் பிடிவாதமாக வாங்குகிறார்கள். பணமாகக் கொடுக்க முடியாதவர்கள் தானிய மூட்டைகளாகவும், பண்டங்களாகவும் கூடச் சந்தாக்கட்டி என் பத்திரிகையை வாங்குகிறார்கள். ஆனால் வாங்குகிற இந்தச் சிறுபான்மையினரை விட வாங்காமல் என்னை தவிக்கவிடும் பெரும்பான்மையோரை நினைத்துத் தான் நான் ஏங்குகிறேன் சுகுணன்..." "உங்கள் ஏக்கம் நாளடைவில் தீர்ந்துவிடும் சார்! உங்களைப் பிடிவாதமாக ஆதரிக்கிறார்கள் என்று கூறினீர்களே, அந்தச் சிறுபான்மையினரில் ஒருவனாக - என்னையும் எண்ணி இதை ஏற்றுக் கொள்ளுங்கள். இது இப்போது உங்கள் காரியத்துக்கு பயன்படட்டும். மறுபடி எனக்குத் தேவையான போது இதை உங்களிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்" - என்று சொல்லி அந்தத் தொகையை அவரிடம் கொடுத்தான் சுகுணன். சமூகத்தில் எந்தெந்த வடிவில் குற்றங்களும், தீமைகளும், பிழைகளும் மலிந்திருக்கின்றனவோ - அந்தந்தக் குற்றத்தை அங்கங்கே எதிர்த்து நின்று, இதில் குற்றமிருக்கிறது - என்று சொல்ல எழுந்திருக்கும் யாரோ ஒருவனை எத்தனை நெற்றிக் கண்கள் திறந்து வெதுப்புகின்றன என்று எண்ணிப் பார்க்கவே துன்பமாயிருந்தது சுகுணனுக்கு. இப்படி நெற்றிக் கண்களால் வெதும்பி மனம் நமத்துச் சாம்பலாகிவிடாமல் துணிந்து வெளியேறியவர் என்ற முறையில் 'நேஷனல் டைம்ஸ்' மகாதேவனை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மகாதேவனுடைய முயற்சிக்கு கிடைக்கிற ஆதரவும் வெற்றியும் இந்த நாட்டின் சுதந்திர சிந்தனையாளனுக்குக் கிடைக்கிற முதல் ஆதரவும்... முதல் வெற்றியுமாக அமையுமென்று அவன் நம்பினான். பூம்பொழிலை விட்ட பின்பு 'நேஷனல் டைம்ஸின்' ஸப்ளிமெண்ட் வேலைகளிலும் மகாதேவனோடு உதவியாயிருப்பதிலும் அவனுடைய நேரத்தில் பெரும் பகுதி கழிந்து கொண்டிருந்ததனால் அவன் தன்னுடைய அறையில் தங்குவதே அபூர்வமாயிருந்தது. அப்படியே அவன் அறைக்குப் போனாலும் பதினொரு மணி - பன்னிரண்டு மணி என்று அகாலத்தில் தான் போக முடிந்தது. மறுபடி அதிகாலையில் எழுந்து நீராடி விட்டுத் தம்புச் செட்டித் தெருவுக்குப் போக வேண்டியிருந்ததனால் டெல்லியிலிருந்து மீண்டும் துளசி கூப்பிட்டாளா - இல்லையா - என்ற தகவலைக்கூட அவன் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. அப்படி இடைவிடாமல் அவருக்காக உழைப்பதில் ஒருவிதமான ஆத்ம திருப்தியையும் நிறைவையும் உணர்ந்தான் சுகுணன். இப்படிச் சுறுசுறுப்பாக அவனுடைய நாட்கள் கழிந்து கொண்டிருக்கையில் ஒருநாள் அதிகாலையில் அதிசயமும் ஆனால் எதிர்பார்த்திருந்ததுமான ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை நேரத்தில் சிறிதும் எதிர்பாராத வேளையில், எதிர்பாராத தொலைவிலிருந்து துளசி நேரே அவனைச் சந்திப்பதற்காக அறை வாசலில் வந்து இறங்கினாள். ஒரு டாக்ஸியிலிருந்து டில்லி நாகரிகம் அவள் கையில் பிணைத்திருந்த 'வானிடி பாக்'குடன் கீழிறங்கிய துளசியைப் பார்த்தவுடன் 'அவள் எப்போது டில்லியிலிருந்து வந்தாள்? ஏன் டாக்ஸியில் வந்து இறங்குகிறாள்? ஒரு வேளை நேரே விமானத்திலிருந்தே இங்கு வருகிறாளா?' என்றெல்லாம் சுகுணனின் மனதில் கேள்விகள் எழுந்தன. அவள் டாக்ஸியிலிருந்து கீழிறங்கி வந்த போது அவனோ அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவளுக்கோ அவனைப் பார்த்ததும் பேச்சே வரவில்லை. கண்கலங்கி அழுது விடுவது போன்ற துயர மோனத்துடன் எதிரே வந்தாள் அவள். "சௌக்கியமா? ஏது இப்படி திடீரென்று சென்னைப் பக்கம்?" - என்று அவன் தான் முந்திக் கொண்டு அந்யோந்யம் தெரியாது வேற்றுமைக் குரலில் அவளை விசாரித்தான். "திடீர் திடீரென்று எல்லாக் காரியங்களும் நடக்கிற போது இது அப்படி என்ன பெரிய காரியம்?" என்று கோபத்தோடு ஆரம்பித்தாள் அவள். அவளுடைய அழுகையையோ ஆத்திரத்தையோ தெருவில் வைத்து உரையாடிக் கொள்ள முடியாத நிலையில் மறுபடி மேலே போய் அறைக் கதவைத் திறந்து அவளை உள்ளே வருமாறு அழைத்தான் சுகுணன். "டெலிபோனில் பேசிய மறுநாளே காலையில் விமானத்தில் வந்து இறங்கியிருப்பேன். அவர் ஊரிலில்லாததால் முடியவில்லை. நேற்றுத்தான் வந்தார். உடனே எனக்கு அப்பாவைப் பார்க்கணும் போலிருக்குன்னு பொய் சொல்லி இராத்திரி விமானத்துக்கே அவரிடம் டிக்கட் வாங்கச் சொன்னேன். 'சென்னைக்கு ஃபோன் பண்ணி உங்கப்பாவிடம் சொல்லிக் காலையில் மீனம்பாக்கத்துக்குக் கார் கொண்டுவரச் சொல்லிடட்டுமா?' என்று விமான நிலையத்தில் வழியனுப்ப வந்த போது கேட்டார் அவர். 'வேண்டாம்! நானே மீனம்பாக்கத்திலிருந்து அப்பாவுக்கு ஃபோன் பண்ணிக் கார் வரவழைத்துக் கொள்கிறேன்' - என்று சொல்லித் தப்பித்துக் கொண்டேன். வீட்டிலிருந்து கார் வந்து விட்டால் இங்கே வர முடியாது. நேரே அங்கே போக வேண்டியிருக்கும். அதனால் தான் டாக்ஸியில் வந்தேன்." "இருக்கட்டுமே! நான் எங்கே ஓடிப் போகிறேன்! என்னைப் பார்க்க இத்தனை அவசரமென்ன துளசி? அதற்காக டாக்ஸியில் வருவானேன்? வீட்டிற்குப் போய்விட்டே வந்திருக்கலாமே?" - என்று சுகுணன் கூறியதை அவள் இரசிக்கவில்லை. "ஏன் இப்படிப் பேசமாட்டீர்கள்? நீங்கள் செய்த அநியாயத்தை ஃபோர்மென் நாயுடு எனக்கு எழுதின கடிதத்தில் தெரிவித்திருந்தார். எப்படித் துணிந்தீர்கள் இதைச் செய்வதற்கு?" "எதைச் செய்வதற்கு?" "ஏன் ஒன்றுமே தெரியாதது போல் நடிக்கிறீர்களோ தெரியவில்லை? இராஜிநாமா செய்து விட்டு வெளியேறும்படி இப்போது என்ன நடந்து விட்டது?" "எவ்வளவோ நடந்திருக்கிறது. உனக்கு ஒன்றும் தெரியாது. அதனால் தான் நீ இப்படிக் கேட்கிறாய்! ஒருவனை 'வெளியே போய்விடு' - என்று சொல்லி நேரடியாக அனுப்புவதை விட அதிக அவமானப்படுத்துவது, வெளியே போவதற்கான காரியங்களை மறைமுகமாக ஏற்பாடு செய்வதுதான். கால் நூற்றாண்டு காலமாக இப்படி ஆட்களை வெளியே அனுப்புவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதைக் கற்றுப் பழகியவர்கள் உன் தந்தையும் ரங்கபாஷ்யமும். உன்னுடைய ஆசையும் ஆர்வமும் இதை ஒன்றும் செய்துவிட முடியாது. என் மேலிருக்கிற பிரியத்தையும் - அன்பையும் - அநுதாபத்தையும் இந்தச் சமயத்தில் நீ வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்வது கூட உனக்குக் கெட்ட பெயரை உண்டாக்கும். நீ யார் மேல் அன்பு வைத்திருக்கிறாயோ அவர் மற்றவர்களிடம் மறைமுகமாக அவமானப்படுவதைக் கூட நீ விரும்ப மாட்டாய் என்று நான் உன்னை நம்பலாமல்லவா?" துளசி இதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. வெளியே நின்றிருந்த லாட்ஜ் பையனிடம் காபி வாங்கி வருமாறு குறிப்புக் காட்டினான் சுகுணன். "ஒரு நல்ல பத்திரிகை, எதிர்காலத்தில் இனிமேல் நீங்களில்லாமல் சீரழிந்து போகுமே என்ற கவலையால் அதற்கு உரிமையாளரின் மகள் என்ற முறையிலில்லாமல், அதை இதுவரை விரும்பி வாசித்தவள் என்ற முறையிலாவது நான் வருந்தித்தானே ஆக வேண்டும்?" "எவ்வளவுக்கு எவ்வளவு சீரழிகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நிறைய விற்பனையாகுமென்று அதை நடத்துகிறவர் எதிர்பார்க்கிறாரோ, என்னவோ? மனிதர்களைக் கூலிகளாகவே எதிர்பார்க்கிறவர்களிடம் உத்தியோகம் பார்ப்பது போல் பெரிய ஆயுள் தண்டனை வேறு எதுவும் இருக்க முடியாது துளசீ?" இதற்கும் அவள் மறுமொழி கூறவில்லை. தரையைப் பார்த்தபடி கண் கலங்கி நின்றாள். பையன் காபியோடு வந்தான். சுகுணன் அதை வாங்கி இரண்டு 'கிளாஸ்'களில் பகிர்ந்து ஊற்றி ஒன்றைத் தான் வைத்துக் கொண்டு மற்றொன்றை, "காபி சாப்பிடு துளசி" என்று அவளிடம் நீட்டினான். சிறிது தயங்கிய பின் அவள் அதை வாங்கிக் கொண்டாள். துளசி காபியை குடித்துக் கொண்டிருக்கும் போது அவன் அவளிடம் கூறலானான்: "நாளை மாலை இரயிலில் நான் கோயம்புத்தூர் போகிறேன். திரும்பி வர ஒரு வாரம் ஆகும். தங்கையைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இதுவரைதான் பத்திரிகை வேலை ஓய்வில்லாமல் இருந்து வந்தது. இப்போது நான் சுதந்திர மனிதன்..." "என்னைப் பலவிதமான நினைவுகளிலும் வேதனைகளிலும் சிறைப்படுத்தி விட்டு நீங்கள் உங்களைச் சுதந்திர மனிதரென்று சொல்லிக் கொள்கிறீர்களே; இது எத்தனை பெரிய கொடுமை?" - என்று காபி கிளாஸை மேஜையில் வைத்துவிட்டுக் கேட்டாள் துளசி. "உணர்ச்சிகள் அவரவர் பாவவனையைப் பொறுத்தவை துளசீ! இதிலிருந்து உனக்குக் கிடைக்கிற வாழ்க்கையை நீ சரியாகப் பாவித்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது" - என்று சுகுணன் அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கியபடியே கூறியபோது அவன் தன்னைத் தவிர்த்துத் தவிர்த்து மறுமொழி உரைப்பதை பொறுக்காமல் அவள் வேதனைப்படுவது தெரிந்தது. சுகுணனே மேலும் கூறினான்: "உன்னிடம் ஒரு வேண்டுகோள் துளசீ? தயவு செய்து அதை நீ ஏற்றேயாக வேண்டும். வீட்டுக்குப் போய் அப்பாவிடம் என்னுடைய இராஜிநாமாவைப் பற்றி நேரடியாகவோ, குறிப்பாகவோ நீ எதுவுமே கேட்கக் கூடாது. உனக்கும் அது நல்லதில்லை, எனக்கும் அது நல்லதில்லை. மணமாகிக் கணவனோடு வாழத் தொடங்கிவிட்ட நீ, உன் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு விடக்கூடாது. இன்னும் நீ பேதையாகவே இருப்பதை நான் விரும்பமாட்டேன். உலகத்தைக் கற்றுக் கொள். அப்படிக் கற்பதை அசட்டை செய்தோ, மறந்தோ கற்பனையில் வாழாதே. அதனால் பல அவதூறுகள் கிளைத்துப் பெருகும்." "இப்போது சொன்னீர்களே, இதற்கு என்ன அர்த்தம்?" "உனக்கே புரியும். நன்றாக யோசித்துப் பார்..." "என் தவிப்புப் பெரியது. உங்களுக்காகத்தான் டில்லியிலிருந்து பதறிப்போய் ஓடி வந்தேன்." "நம்புகிறேன். ஆனால் உலகத்திற்கு இனி அதைச் சொல்ல முடியாது. மனிதர்களின் காதல் சத்தியங்கள் தோற்ற பின் உலகத்திற்கு அவை செல்லாக் காசுகளாகி விடும். வீட்டுக்குப் போய் மரியாதையாய், லட்சணமாய் 'அப்பா உங்களைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அதனால் உடனே வந்தேன்" - என்று சொல்! அதை உலகம் ஏற்கும். அசடு போல், 'சுகுணன் சார் இப்போது பூம்பொழிலில் இல்லையாமே?' - என்று கேட்காதே! அப்படி நீ கேட்பதை எந்த உலகமும் நல்லபடி ஏற்றுக் கொள்ளாது..." "உங்களுடைய பேச்சில் முதலிலிருந்தே என்னைத் தவிர்த்து விட முயல்கிறீர்கள்?" - என்று பதில் கூறிய குரல் நெகிழ்ந்து அழுகையே வந்துவிட்டது அவளுக்கு. சுகுணனுக்கும் அந்த வேதனை பொறுக்கவில்லை. மிக அருகில் நெருங்கி, உரிமையின் பழக்கத்தால் முன் போலவே அவளைத் தொடவந்த கைகளை நாணயமாகவும், ஒழுங்காகவும் கட்டுப்படுத்திக் கொண்டு, "துளசீ!" - என்று கனிவான குரலில் அவளை அழைத்தான் சுகுணன். அவள் நன்றாகத் தலை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். "நான் உன் நெஞ்சிலிருக்கிறேனா இல்லையா?" "உங்களைத் தவிர வேறொன்றும் என் நெஞ்சில் இல்லையே!" "அப்படியானால் என் வார்த்தைகளுக்கும் அந்த மரியாதையைச் செய்! என்னை நம்பு. ஏனென்றால் நான் உன்னை நம்புகிறேன். இந்த நம்பிக்கைக்கு உடம்பும் - உடம்பும் சேர்ந்து வாழ்வது மட்டும் இலட்சியமில்லை. மணங்கள் கலப்பது மிகப்பெரிய காரியம். அதைப் பல சமயங்களில் பலர் உலகுக்கு நிரூபிக்க முடிவதில்லை. அப்படி நிரூபிக்க முடியாததை நீ ஒரு குறையாக எண்ணி வாடாதே" - என்ற போது சுகுணனின் குரலும் சோகத்தில் நெகிழ்ந்து கரகரத்தது. |