6
"நெஞ்சுக் குழியிலிருந்து தண்ணீர்த் தாகம் எடுப்பது போல், மனித ஆன்மாவுக்குள் ஒரு தாகம் உண்டு. அது தான் சத்தியதாகம்-" கதையில் துன்பப்படுகிறவர்களைப் படைத்துப் படைத்து அனுபவம் அடைந்தவனால் கூட அசல் வாழ்க்கையில் துன்பப் படுகிறவர்களை நேரே கண்டுவிட்டால் ஓரிரு கணங்கள் திகைத்துப் போவதைத் தவிர, வேறொன்றும் செய்ய முடிவதில்லை. அப்படி ஒரு திகைப்புடன் தான் அந்தப் பெண்ணை எதிர் கொண்டான் சுகுணன். காரியாலயத்து அறையில் முன்பின் அறிமுகமில்லாத ஒரு பெண் தன்னுடைய நாவல்களைப் படித்து அவற்றில் ஈடுபட்ட ஈடுபாட்டையே அறிமுகமாகக் கருதித் தேடி வந்து கண் கலங்க அமர்ந்திருப்பதை அவன் உணர்வது போலவே பார்க்கிற எல்லாரும் உணர்வார்களென்று சொல்ல முடியாது. பல்வேறு இரசிகர்களும், இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் அடிக்கடி அவனைத் தேடிக் காரியாலயத்திற்கு வருவது வழக்கம் தானென்றாலும், சுற்றியிருப்பவர்களுக்கு அது எந்த விதத்தில் பிடிக்கவில்லை என்பதையும், எந்தக் காரணத்தால் அதைக் கண்டு அவர்கள் உள்ளூற அசூயைப்படுகிறார்கள் என்பதையும் அவ்வப்போது அவன் அநுமானம் செய்து தெரிந்து கொள்ளத் தவறிவிடவில்லை. நடுநடுவே அழுகையும் உணர்ச்சிப் பெருக்கும் குறுக்கிடுவதைத் தவிர்க்க முடியாமல் அவனிடம் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தாள் அவள். அந்த முகத்தில் எப்போதோ எதனாலோ வந்து தங்கிவிட்ட சோகத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் குறுகுறுப்பான அழகு நிறைந்த முகம் அவளுடையதென்பதைக் கண்டான் சுகுணன். அந்தப் பெண் சொல்லத் தயங்கிய அல்லது கூசியவற்றைப் பற்றி அதிகமாகத் துளைத்துத் துளைத்துக் கேள்விகள் கேட்காமல் குறிப்பாக உணர வேண்டியவற்றைக் குறிப்பாக உணர்ந்து, கேட்டே அறிய வேண்டியவற்றைக் கேட்டு அறிந்து, எந்த விநாடியிலும் அவளைத் தர்மசங்கடமான நிலையில் வைக்காமல் உரையாடினான் சுகுணன். ரோஜாப் பூக்களின் இதழ்கள் ஒன்றோடொன்று எவ்வளவு வலுவாக அல்லது வலுவில்லாமல் பொருந்தியிருக்கின்றனவோ அப்படித்தான் பெண்ணின் சொற்களும், மற்றொருவருடைய பதில் வார்த்தை, அதைத் தீண்டும் போதோ எதிர்கொள்ளும் போதோ மென்மை தவறினால் அது உதிர்ந்து விடுகிறது அல்லது குலைந்து விடுகிறது என்பது சுகுணனின் கருத்து. வாத்தியங்களில் சுருதி சேர்ப்பது போல் பெண்களிடம் நளினமாகப் பேசவேண்டும் என்று அநுபவத்தில் உணர்ந்திருந்தான் அவன். பழைய தலைமுறையில் தஞ்சை மாவட்டத்தினைச் சேர்ந்ததும் இந்தத் தலைமுறையில் பாலக்காட்டினதாக ஆகிவிட்டதுமான ஒரு குடும்பத்தில் ஓட்டல் சமையற்காரரான ஓர் ஏழைத் தந்தையின் பதினொரு பெண்களில் ஒருத்தியாக அவள் பிறந்ததாகச் சுகுணன் அறிந்து கொண்டான். தன் குடும்பத்தின் பயங்கரமான ஏழ்மைச் சூழ்நிலையையும் பிறவற்றையும் சொல்லி முடித்துவிட்டுச் சில கணங்கள் தயங்கியவளாக அடுத்துத் தான் சொல்ல இருப்பதை எப்படித் தொடங்குவதென்று தன் பேச்சுக்கு முகம் செய்யத் தெரியாமல் இருந்தாள் அவள். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின் பெண்களுக்கே உரிய எதிர்பாராத சாமர்த்தியத்தோடு அவள் தன் பேச்சைத் தொடங்கினாள். "'கிழிந்த புடவையும் எண்ணெய் காணாத தலையும் தளர்ந்த நடையும் இடுப்பில் குழந்தையுமாக இந்தத் தேசத்தின் பெரிய நகரங்களின் வீதிகளில் அங்கங்கே பிச்சைக்குத் திரியும் அபலைப் பெண்களைக் காணும் போதெல்லாம் 'வந்தே மாதரம்' - என்று சொல்ல என் வாய் தயங்குகிறது உண்மையான பாரதமாதா இந்த அபலைப் பெண்களிடம் அல்லவா இருக்கிறாள்! இவர்களுக்கெல்லாம் சரியான சமுதாய மதிப்புக் கிடைக்கிற வரை என் பாரதத் தாய் நான் செய்யும் வணக்கத்தை உண்மையாக ஏற்பாளா என்று எனக்குப் பயமாயிருக்கிறது. சகோதரிகளைப் பிச்சைக்கு அலைய விட்டுவிட்டு நான் தாயை வணங்குவதில் அர்த்தமோ மரியாதையோ எப்படி இருக்க முடியும்?'- என்று நீங்கள் 'பாலைவனத்துப் பூக்களி'ல் எழுதியிருக்கிறீர்கள். அப்படி எழுதியிருக்கிறவரிடம் நான் மனம் விட்டுப் பேசுவதற்குத் தயங்கக்கூடாது. ஆனாலும் கூட நான் கேட்க வேண்டியதைக் கேட்க எனக்குத் தயக்கமாயிருக்கிறது. என் சகோதரிகளில் மூத்தவர்கள் நாலு பேருக்குக் கல்யாணமாகி விட்டது. அடுத்த மூன்று பேர் ஊரிலேயே பள்ளிக்கூட டீச்சராகவும் அலுவலகங்களில் டைப்பிஸ்டுகளாகவும் உத்தியோகம் பார்த்துக் குடும்பத் தேரை இழுத்துச் செல்வதில் தந்தைக்கு துணையாயிருக்கிறார்கள். இன்னும் மூன்று பேர்கள் குழந்தைகள். பள்ளிக்கூடங்களில் படிக்கிறார்கள். நான் தான் கல்லூரியை எட்டிப் பார்த்திருக்கிறேன். சகோதரிகளின் சம்பாத்தியத்திலிருந்து மாதா மாதம் ஏதோ எனக்குக் கொஞ்சம் பணம் வரும். ஆனால் ஹாஸ்டல் கட்டணத்திற்கும் கல்லூரிக் கட்டணத்திற்கும் அது பற்றாது. இங்கு மைலாப்பூரில் எங்களூர் டாக்டரம்மாள் ஒருத்தி இருக்கிறாள். நான் கல்லூரி விடுதியின் சுவர்களுக்குள்ளே சிறைப்பட்டு விடாமல் வெளியே தனிப்பட்டவர்களால் பெண்களுக்கென்று நடத்தப்படும் ஒரு சேவாதள ஹாஸ்டலில் தங்கியிருப்பதால் காலை, மாலை - விடுமுறை நாட்களில் வெளியே போக வர வாய்ப்பு உண்டு. காலையும் மாலையும் விடுமுறை நாட்களிலும் அந்த டாக்டரம்மாள் வீட்டில் நோயாளிகளின் மாதாந்தர ஃபீஸ் பில் போடுவது ஆஸ்பத்திரித் தேவைகளை அவ்வப்போது வாங்கிவைப்பது, ஸ்டோர் ரூம் பொறுப்பு ஆகியவற்றைக் கவனித்து வந்தேன். மாதம் நூறு ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஓரளவு சௌகரியமாகவே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தேன். ஆண்கள் நாணயமாகவும் சமுதாயப் பொறுப்புடனும் நடந்து கொள்ளத் தயாராயிருந்தால் தான் பெண்கள் எந்த இடத்திலும் எந்த நிலையிலும் உத்தியோகம் பார்க்கலாம். ஆனால் பல இடங்களில் அப்படி இருப்பதில்லை. முக்கால்வாசி நேரம் வெளியில் 'விசிட்'களுக்கும், பிரசவம் பார்க்கும் டாக்டரம்மாள் என்பதால் சில சமயங்களில் அகாலமான இரவு நேரங்களில் கூட வெளியே சுற்றப் போக வேண்டியிருக்கும் அந்த அம்மாளுக்கு. அவளுடைய கணவர்..." என்று சொல்லியவள் சிறிது தயங்கிவிட்டு, "அவர் பெயரை நான் இங்கே சொல்ல வேண்டாமென்று நினைக்கிறேன். ஊரறிந்த பிரமுகர் அவர். பக்திமான்களுக்கு நடுவே நிரந்தரமான ஆஸ்திகராகவும் அங்கீகரிக்கப்பட்டு விட்டவர். தனிமையில் என்னிடம் நேர்மைக் குறைவாக நடந்து கொள்ள முயன்றார் என்ற நான் மட்டுமறிந்த உண்மையை உலகத்துக்குச் சொல்ல முயல்வதால் ஒரு பயனுமில்லை. உலகம் அதை அவ்வளவு விரைவாக நம்பிவிடப் போவதும் இல்லை. வசதியற்றவர்கள் உரத்த குரலில் எழுந்து நின்று உண்மையைக் கூறினாலும் அது நம்பப்படுவதில்லை. வசதியுள்ளவர்கள் மெல்லிய குரலில் இருந்த இடத்திலிருந்தே பொய்யைக் கூறினாலும் அது இந்த சமூகத்தில் உடனே நம்பப் படுகிறது. வசதிகளையும் வாழ்க்கையையும் சரியான உயரத்துக்கு - அத்தனை பேரும் கவனிக்கிற நிலை எதுவோ அந்த நிலைக்கு - வளர்த்து மேடை போட்டுக் கொண்டால் தான் அப்புறம் உண்மையையும், பொய்யையும் அது உண்மையாகவோ பொய்யாகவோ ஒப்புக் கொள்ளப்படுகிறார் போலப் பேச முடியும் போலிருக்கிறது. இந்த நிலையில் என்னைப் போன்ற அபலைப் பெண் வேறென்ன செய்ய முடியும்? தேவைக்காகச் சம்பாதிப்பதை விட நான் என்னை அழிந்து போய் விடாமல் காப்பாற்றிக் கொள்வதுதான் முக்கியம். என் நிலைமை இரண்டுங்கெட்டானாகி விட்டது. 'அம்மா! உங்கள் கணவர் இப்படிப்பட்டவராக இருக்கும் போது நான் இங்கே வேலைக்கு வருவது முடியாத காரியம்' என்று அந்த டாக்டரம்மாளிடம் நான் சொல்லக் கூட முடியவில்லை. அப்படிச் சொன்னால் அது அவர்கள் குடும்ப வாழ்வில் கலகத்தை உண்டாக்கலாம். எனவே நான் சொல்லாமல் கொள்ளாமல் வேலையிலிருந்து நின்று விட்டேன். இன்று காலையில் அந்த டாக்டரம்மாள் ஹாஸ்டலுக்கு ஃபோன் செய்து என்னைக் கூப்பிட்டு, 'ஏன் வரவில்லை?' - என்று கேட்டாள்.
'ஃபைனல் வருடமாயிருப்பதால் படிப்பு அதிகமாக இருக்கிறது. உங்களிடம் சொல்வதற்குப் பயமாயிருந்தது. அதனால் சொல்லாமலே நின்று விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா!' - என்று ஒரு விதமாகப் பதில் சொல்லி மழுப்பி விட்டேன். மேலே என்ன செய்வதென்று தான் தெரியவில்லை. அந்த நூறு ரூபாய் இல்லாவிட்டால் இங்கே சென்னையில் காலம் தள்ளிப் படிப்பது என்பது முடியாத காரியம். படிப்பை நிறுத்தி விட்டு ஊருக்குத் திரும்பிவிடலாமென்று நினைக்கிறேன். இரண்டு மூன்று வருடப் படிப்பைச் சிரமப்பட்டுத் தள்ளிய பின் கடைசிச் சமயத்தில் இப்படி ஒரு சோதனை வருகிறதே என்று எண்ணும் போது படிப்பை நிறுத்தி விட்டுத் திரும்பவும் தயக்கமாயிருக்கிறது. துன்பம் நிறைந்த இந்தச் சூழ்நிலையில் தான் உங்களுடைய 'பாலைவனத்துப் பூக்கள்' நாவலை நான் படிக்க நேர்ந்தது. அதைப் படித்து முடித்ததுமே இந்த நிலையில் நான் அறிவுரை கேட்க வேண்டிய மனிதர் நீங்கள் தானென்று என் மனத்துக்குத் தோன்றியது. நான் இப்படித் தைரியமாகத் தேடி வந்தது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆனால் உங்கள் எழுத்து என்னை உங்களிடம் பரிபூரணமான நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. என்னைப் போல் துன்பப்படுகிற அபலைப் பெண்களைப் பற்றித் தானே நீங்கள் பாலைவனத்துப் பூக்களில் எழுதியிருக்கிறீர்கள்?" -
இந்த விநாடி வரை அவளிடம் குறுக்குக் கேள்விகள் கேட்கவோ, வினாக்களைத் தொடுக்கவோ செய்யாத சுகுணன் இப்போதுதான், "தயை செய்து உங்கள் பெயரை நான் அறிந்து கொள்ளலாமா?" என்று மெல்ல வினாவினான். "என் பெயர் கமலம். தந்தையும் சகோதரிகளும் 'கமலி' என்று செல்லமாக அழைப்பார்கள்" - "உங்களைப் போன்ற புதிய தலைமுறைப் பெண்களெல்லாம் ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும் மிஸ். கமலம்! பெண்ணின் வாழ்வு வீட்டுப் படிகளின் உள்ளேயே திருப்தியாக நடக்க முடிந்த தலைமுறையில் இன்று நாம் வாழவில்லை. புதிய தலைமுறைப் பெண் வீட்டுக்கு இப்பால் வெளியேறியும் வாழ வேண்டியிருக்கிறது. பழகும் இடங்களும் வாழும் எல்லைகளும் பெருகப் பெருகப் பெண் முன்னேறுகிறாள் என்பதை விடத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் பொறுப்பை மிகப் பல சமயங்களில் தானே நிர்வகிக்க வேண்டியவளாகிறாள் என்பதுதான் பொருத்தமாயிருக்கும். உங்களைப் பொறுத்தவரையில் இதுவரை எல்லாப் பொறுப்பையும் நீங்கள் சரியாகத்தான் நிறைவேற்றியிருக்கிறீர்கள். சொந்த ஊரைவிட்டு இவ்வளவு தொலைவிலுள்ள மற்றொரு நகரத்தில் தனியாகப் படிக்க வருகிறவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுகிற பொறுப்புள்ளவர்களாயிருப்பதே இந்தக் காலத்தில் அபூர்வமாயிருக்கிறது. நம்பிக்கையும் நாணயமுமில்லாத கோழைத்தனமான சில இளைஞர்களைக் காதலித்து ஏமாறுகிறவர்கள் சிலர். உங்களிடம் முறை தவற முயன்ற டாக்டரம்மாளின் கணவரைப் போன்ற ஆஷாடபூதிகளிடம் சிக்கிச் சீரழிகிறவர்கள் சிலர். இராவணனைப் போல் பெண்களைத் தூக்கிச் சென்று சிறை வைக்கிற காலமில்லை இது. அதே சமயத்தில் தூக்கிப் போகாமலும் சிறை வைக்காமலுமே பெண்களுக்குக் கெடுதல் செய்யக் கூடிய நாகரிக இராவணர்கள் - இராமர்களைப் போன்ற பாதுகாப்பான பாவனையில் திரிகிற சமூகம் இது. இராவணவர்களும் கூட இராமனைப் போல் தோன்றி, நடித்துப் பிறரை நம்பச் செய்கிற கோலம் கொண்டு திரிவதால் தான் இன்று மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்களாகப் பிரித்து இனங்கண்டுபிடிப்பது அருமையாயிருக்கிறது. வாழ்க்கை எந்த மூலையிலோ அழுகியிருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் எந்த இடத்திலிருந்து அழுகத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் சரியாகத் தெரியவில்லை. அரசியலிலா, சமுகப் பிரச்னைகளிலா, மதத்திலா, ஒழுக்கத்திலா, எங்கு அழுகத் தொடங்கியிருக்கிற தென்பது மட்டும் தெளிவாக விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த அழுகல் எந்த இடத்தில் தொடங்கி இருக்கிறதோ அந்த இடத்தோடு அப்படியே நின்றுவிடாது. அழுகல் முழுவதும் பரவினால் தான் கெடுதல் என்பதில்லை. அழுக ஆரம்பித்து விட்டது என்பதே கெடுதல் தான். இந்த அழுகலைப் பார்த்து மனம் கொதித்துச் சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் நியாயத்தையும் உண்மையையும் அணுக வேண்டுமென்று என்னைப் போன்றவர்கள் அறிவுத் தொழிலாளிக்கே உரிய நக்கீர தைரியத்தோடு எழுந்து நின்று குமுறினால் அதற்கு எதிராக நெற்றிக் கண்ணைத் திறக்க யாராவது ஒரு வலிமை மிக்க மனிதர் அல்லது மனிதக் கூட்டம் வந்து சேருகிறது. சமூகத்தில் ஒவ்வோர் உண்மைக்கும் எதிராக அந்த உண்மையால் பாதிக்கப்படுகிற ஒரு வலிமையான மனிதனின் அல்லது மனிதர்களின் நெற்றிக் கண் திறந்து அந்த உண்மையை உரைத்தவனைச் சுடவோ, வெதுப்பவோ தயாராயிருக்கிறது. அந்த நெற்றிக்கண் தான் இன்றைய சமூகத்தில் நியாயத்தைச் சிந்திப்பவன் அல்லது சொல்பவனின் பெரிய எதிரி. அந்த டாக்டரம்மாளின் கணவர் யார் என்று நீங்கள் பெயர் சொல்வதற்குக் கூடப் பயப்படுகிறீர்களே; அதற்கு என்ன காரணம்? நம்மை அறிந்தோ அறியாமலோ, உணர்ந்தோ உணராமலோ, இந்தக் கடுமையான கண்பார்வைக்கு நாம் பயப்படுகிறோம்." "பயப்படாவிட்டால் அதன் காரணமாக நம் வாழ்க்கை நிச்சயமாகப் பாதிக்கப்படுகிறதே சார்!" "ஒப்புக் கொள்கிறேன் மிஸ் கமலம்! அவர்களுடைய பார்வை நம்மைச் சூடுவதும் நம்முடைய பார்வை அவர்களைச் சுட முடியாததும் தான் அதற்குக் காரணம்" என்றான் சுகுணன். அவன் கூறியவற்றை ஆழ்ந்து சிந்தித்து வியப்பவள் போல் அவள் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தாள். சிறிது நேரத்திற்குப் பின், "உங்களுடைய பயனுள்ள காலத்தை அதிக நேரம் வீணாக்கி விட்டேன் சார்! தயவு செய்து இன்று இந்த நிலையில் எனக்கு ஏதாவது அறிவுரை கூற முடியுமா நீங்கள்...?" என்று ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தித் தயங்கித் தயங்கித் தொடுத்துக் கேட்டாள் அவள். "உண்மையாகவே துன்பப்படுகிறவர்களுக்கு வெறும் அறிவுரையை மட்டும் வழங்கிப் பயனில்லை என்று கருதுகிறவர்ன் நான். உங்களுக்கு ஆட்சேபணையில்லையானால் என் உதவியை நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம். நீங்கள் படிப்பைத் தொடருவதற்கு என்னால் முடிந்தவரை நான் உதவ முடியும். பின்பு உங்களால் எப்போது முடியுமோ அப்போது நீங்கள் எனக்குத் திருப்பிக் கொடுத்தால் போதும்..." "இந்த உதவியைக் கேட்கவோ ஏற்றுக் கொள்ளவோ கூட எனக்குப் பயமாயிருக்கிறது சார்! பாவம் உங்களுக்கு உங்கள் குடும்பத்தில் எத்தனை சிரமங்களோ?" "குடும்பமா? எனக்கா? இன்று இந்தத் தேசத்தில் இப்படி உங்களைப் போல் கஷ்டப்படுகிற சகோதரிகள் எல்லாரும் என் குடும்பம் தான். இன்று வரை வேறு குடும்ப பாரம் எனக்கில்லை" என்று சொல்லி அவளை நோக்கிப் புன்முறுவல் பூத்தான் சுகுணன். "என்னால் உங்களுக்கு அநாவசியமான சிரமம்..." "சிரமம் என்ன இருக்கிறது இதில்? ஏதோ இன்று நான் உதவக்கூடிய நிலையிலிருக்கிறேன். நாளை எப்படியோ? உதவக் கூடிய நிலையிலிருக்கிற போது தான் இன்னொருவருக்கு உதவி செய்கிற மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் நான் அடைய முடியும்." "உங்களைப் போல் வாழ்க்கையை இத்தனை கருணை மயமான கண்களோடு பார்க்கிறவர்கள் அபூர்வம் சார்..." "தயவு செய்து உங்களுக்கு உதவுவதை எனது ஒரு கடமையாக எண்ணித் திருப்திப்பட விடுங்கள். நீங்கள் என்னிடமே அதை வியக்கவோ புகழவோ செய்வது எனக்குப் பிடிக்காத காரியம். சகோதரிகள் தமையனிடம் பெறுகிற உதவியை எங்காவது புகழ்வதுண்டா மிஸ் கமலம்?" கமலம் கண்களில் நீர் நெகிழ அவனை நோக்கிக் கைகூப்பினாள். அங்கு வந்த நாளிலிருந்து இல்லாத அபூர்வ வழக்கமாய் அன்று முதன் முதலாக ஆபீஸ் கணக்கில் ஒரு வவுச்சர் எழுதிக் கொடுத்து இருநூறு ரூபாய் தன் கணக்கில் அட்வான்ஸ் வாங்கி அவளுக்குக் கொடுத்தான் சுகுணன். அந்த ரூபாய் நோட்டுக்களை அவனிடமிருந்து வாங்கிக் கொள்ளும்போது கமலத்தின் தளிர் விரல்கள் பயபக்தியினால் நடுங்கின. "ஒருவரை ஒருவர் பழகி அறிந்த பின்னால் கூட நம்ப மறுக்கும் இந்தப் பட்டினத்தில் இப்படி நம்புகிறீர்களே; இது எத்தனை பெருந்தன்மை?" - என்று நன்றி பெருகும் குரலில் நாத்தழுதழுக்க ஏதோ சொல்லத் தொடங்கிய அவளை இடைமறித்து, "இப்படித் திரும்பத் திரும்ப வியப்பது தான் என்னை அகௌரவப்படுத்துவதற்குச் சரியான வழி மிஸ் கமலம்!" - என்று சொன்னான் சுகுணன். அவள் விடைபெற்றுக் கொண்டு போவதற்கு முன், "எப்போதாவது என் உதவி தேவைப்பட்டால் இங்கே காரியாலயத்துக்காவது என் அறைக்காவது ஃபோன் செய்யுங்கள்" என்று கூறிக் காரியாலய எண்ணையும் அறை விலாசத்தோடு டெலிபோன் எண்ணையும் குறித்துக் கொடுத்தான் சுகுணன். அவள் தலை மறைந்ததும் அடுத்த அறையிலிருந்து சர்மா ஓடி வந்து, "குட்டி யாரு?" என்று தம் வயதிற்குத் தாம் அப்படியும் விசாரிக்கலாம் என்பது போன்ற உரிமையுடன் அந்த சமயத்தில் வழக்கமான விஷமம் தொனிக்கக் கேட்டார். அவரிடமுள்ள கெட்ட பழக்கங்களில் இதுவும் ஒன்று. சுகுணனுடைய அறைக்குப் புதியவர்களாக யார் தேடி வந்து விட்டுப் போனாலும் அக்கறையாக அதைக் கவனித்து வைத்திருந்து வந்தவர்கள் தலை மறைந்ததுமே அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும் போன்ற பரபரப்புடன் அங்கு வந்து விசாரிப்பார் அவர். பல சமயங்களில் அவருடைய இந்தச் செயலை உள்ளூற வெறுத்திருக்கிறான் சுகுணன். இன்று அவர் வந்து விசாரித்த விதமும் விசாரணை செய்த வார்த்தைகளும் அவனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ஆத்திரத்தோடு பதில் கூற நினைத்து முடிவில் அவரைத் தன்னிடம் மன்னிப்புக் கேட்க வைக்கும் படியான பதிலாக அதைக் கூறினான் சுகுணன். "ஒன்று விட்ட பெரியப்பாவின் பெண். எனக்குத் தங்கை முறை வேணும்" - என்று அவன் உறவு சொன்னவுடன், "மன்னிக்கணும்! எப்படியோ விசாரித்து விட்டேன்" - என்று வார்த்தைகளிலும், முகத்திலும், அசடு வழிய நின்றார் சர்மா. அவருடைய விசாரணையிலிருந்த அநாகரிகமான வார்த்தைகளைக் கேட்டுக் குமுறிய காரணத்தினால் அவரைக் கூசச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடனே தான் வேண்டுமென்று இப்படி ஓர் உறவைக் கற்பித்தான் சுகுணன். இந்தப் பெண் கமலத்தை போல் எத்தனையோ அபலைகள் பாரத தேசம் எங்கும் நகரத் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டு இருப்பது போல் ஒரு பிரமை அன்று அவன் மனத்தில் தோன்றியது. அதன் காரணமாக மனமும் வலித்தது. சமூகத்தில் தனக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதை விட அதிகமான கௌரவத்துக்குப் பேராசைப்படும் அந்த ஐ.சி.எஸ். அதிகாரியையும், சமூகத்தில் தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கௌரவத்துக்கே போராடும் இந்தப் பெண்ணைப் போன்ற அபலையையும் சேர்த்து நினைத்தால் இந்த முரண்பாட்டையே அடிப்படையாக வைத்து இன்னும் நிறையச் சிந்திக்க வேண்டும் போல மனம் கனத்தது சுகுணனுக்கு. "கமலத்தைப் போன்றவர்களின் குருத்துப் பருவத்து வாழ்வை இந்த வறுமையும் வசதிக் குறைவும் எப்படி எப்படி வாட்டி விடும்?" - என்பதை மற்றவர்கள் உணர முடிவதை விடச் சுகுணனால் அதிகம் உணர முடிந்ததற்குக் காரணம் இளமையில் கல்லூரிப் படிப்பின் போது காலை மாலை வேளைகளில் ஒரு மார்வாரி கடையில் கணக்கெழுதிச் சம்பாதித்துத்தான் துயருற்ற அநுபவங்கள் அவனுக்கு இன்னும் மறக்கவில்லை. தகப்பன் சம்பாதித்துக் கட்டிய பங்களாவிலும் காரிலும் கோயில் காளையாய்ச் சுற்றும் பல உல்லாச இளைஞர்களுக்கு நடுவே முகம் மலரவோ, சிரிக்கவோ கூடத் தகுதியும் உற்சாகமுமில்லாதது போல் பயந்து கூசிக்கூசி வாழ்ந்த தனது அந்த மாணவ வாழ்க்கையை அவன் ஒரு நாளும் மறந்து விட முடியாது தான். தானும் கெட்டுக் கொண்டு தன்னைச் சுற்றி ஒரு பத்துப் பன்னிரெண்டு விடலைகளுக்குக் காபி சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து அவர்களையும் கெடுத்து வாழும் மாணவர்கள் சிலரை அப்போதும் அவன் கண்டிருந்தான். இப்போதும் கண்டு கொண்டிருந்தான். மாணவப் பருவத்திலேயே ஒரு கொழுத்த மிராசுதார் மனப்பான்மையோ அல்லது ஜமீன்தார் டாம்பீகமோ இப்படிப்பட்டவர்களுக்கு வந்து விடும். தன்னைச் சுற்றி எப்போதும் ஒரு பத்து மாணவர்கள் இருக்க வேண்டுமென்பதற்காக இவர்கள் தண்டச் செலவு வேண்டுமானாலும் செய்வார்கள். இவர்களால் ஒரு விநாடி கூடத் தனியாயிருக்க முடியாது. தனியாக எதையும் எதிர்கொள்ளவும் இவர்களுக்குத் துணிவிராது. காபி குடிக்கவோ, சினிமா பார்க்கவோ, கடற்கரைக்குப் போகவோ, எதற்கும் அந்தப் பத்துப் பேர் கூட வர வேண்டும். கொள்ளைக் கூட்டம் புறப்படுவது போல் சேர்ந்து கூச்சலிட்டு அரட்டையடித்து வெடிச் சிரிப்புச் சிரித்துப் பாதையோடு போகிற நாலு பெண்களைக் கேலி செய்து கொண்டும் போக வேண்டும். கல்லூரி வகுப்பில் ஐந்து 'பீரியட்' என்றால் ஐந்து பீரியடுக்கும் அறைக்குப் போய் ஐந்து தரம் தலைவாரி ஐந்து தரம் சட்டை மாற்றிக் கொண்டு வகுப்புக்கு வர வேண்டும். இப்படி ஊர் மேய்கிற இளைஞர்களைப் பார்த்துப் பயந்து கூசி, 'நாளைய நல்வாக்கை உண்மையில் இவர்களுக்குத்தான் சொந்தமோ? நாம் இப்படியே ஏழ்மையில் நசுங்கி அழிய வேண்டியதுதானா?' என்று அவநம்பிக்கைப் பட்டுக் கொண்டே விலகி இருந்து சிரிக்கப் பயந்து உல்லாசமாகச் சுற்ற நாணி ஒதுங்கிப் படித்த தன் பழைய நாட்களை நினைத்தான் சுகுணன். அன்றைய அந்த வாழ்வில் ஒரு தாகம் தன்னுள் இருந்ததை இன்று அவனால் நினைவு கூற முடிந்தது. அன்று தொடங்கிய அந்தத் தாகம் தான் இன்று இந்த நக்கீர தைரியமாக மாறியிருக்கிறதோ என்று கூட அவன் தனக்குத் தானே சிந்தித்ததுண்டு. நக்கீர தைரியத்தினால் வாழ்க்கையில் சோதனைகளும் எதிர்ப்புகளும் தான் அதிகமாகுமென்று அவனால் உணர முடிந்தும் என்ன காரணத்தினாலோ அந்தத் தைரியத்தை மட்டும் அவனால் விட்டுவிட முடியவில்லை. நெஞ்சுக் குழியிலிருந்து தண்ணீர்த் தாகம் எடுப்பது போல் மனித ஆன்மாவுக்குள் ஒரு தாகம் உண்டு. அதுதான் சத்தியதாகம். சத்தியதாகமுள்ளவன் வாழ்வின் சுகங்களை அடைய முடியாது போகலாம். ஆனால் அவனுடைய அந்தத் தாகமே அவனுக்கு ஒரு பெரிய சுகம் என்பதை அவன் மட்டுமே உணர்வான். அப்படி ஒரு தாகத்தில் சுகத்தை அநுபவித்தவன் அதை விடவே முடியாது. சுகுணனாலும் அந்தச் சுகத்தை விட முடியவில்லை. அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த இதே வேளையில் தற்செயலாகச் சுபாவமான அந்தச் சத்திய தாகத்தையும், நக்கீர தைரியத்தையும் காண்பிக்க வேண்டிய சந்தர்ப்பமொன்று அந்தக் காரியாலயத்தில் நேரிட்டது. என்ன காரணத்தினாலோ அன்று காலையில் நாகசாமியையும் அந்த ஐ.சி.எஸ். அதிகாரியையும் சந்தித்த விநாடியிலிருந்தே இந்தத் தாகம் குமுறியது. அந்தப் பெண் கமலம் வந்து கூறிய துன்பங்கள் அதை வளர்த்து விட்டிருந்தன. இப்போது பூம்பொழில் அட்வர்டிஸ்ட்மெண்ட் மானேஜர் ரங்கபாஷ்யம் வந்து மறுபடியும் அந்தத் தாகத்தைப் பெருக்கினார். சுகுணனுக்கும் ரங்கபாஷ்யத்துக்கும் அடிக்கடி இப்படித் தகராறுகள் வர வாய்ப்பு உண்டு. ஆனால் பத்திரிகையின் இலக்கியத் தரத்தையும் அதன் உள்ளடக்கத்தினால் அதற்குக் கிடைக்கிற பெருமையைக் கட்டிக் காக்க வேண்டிய ஆசிரியரின் பொறுப்பையும் சுகுணன் ஒரு போதும் நெகிழ்த்தவோ, விட்டுக் கொடுக்கவோ, இணங்கியதே இல்லை. சராசரி இந்தியப் பத்திரிகையின் முதலாளிகள் எல்லாரும் செய்வதைப் போலவே பத்திரிகையின் புத்தி சம்பந்தமான காரியங்களுக்கு உண்மையில் பொறுப்பாயிருப்பவன் யாரோ அவனுக்கு வெறும் சம்பளத்தை மட்டும் வீசி எறிந்துவிட்டு, 'ஆசிரியரும் அச்சிடுபவரும் வெளியிடுபவரும்' என்று பத்திரிகை முதலாளியே எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துத் தன்னுடைய பேரைப் போட்டுக் கொள்கிற வழக்கம் தான் நாகசாமியிடமும் இருந்தது. இதைப் பற்றி உழைக்கும் பத்திரிகையாளர்களின் கூட்டங்களில் இரண்டொரு முறை பேசும்போது, 'ஆசிரியரும் அச்சிடுபவரும், வெளியிடுபவரும்' - என்பதோடு சேர்த்து 'விற்பவரும்' என்று கூடப் போட்டுக் கொள்ளலாமே என்று குத்தலாகப் பேசியிருந்தான் சுகுணன். நாகசாமிக்குப் பத்திரிகைத் தொழிலின் கௌரவத்தைப் பற்றியோ, தரத்தைப் பற்றியோ ஒன்றுமே தெரியாது. சுகுணன் துளசியிடமே பலமுறை கேலியாகவும் கடுமையாகவும், 'உன் அப்பா பத்திரிகைகளா நடத்துகிறார்? நிறையவும் விதவிதமான கலரிலும் பேப்பர் அடித்துத் தள்ளுகிற ஒரு பெரிய பேப்பர் மில் நடத்துவதாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்?' என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறான். நிர்வாக ஊழல்களைத் தொடர்ந்து அநுமதிப்பதும், பத்திரிகையின் தரத்துக்கு உயிர் நாடியாயிருந்து அதைக் காப்பாற்ற வேண்டிய எழுத்தாளர்களைக் குறைவாக நடத்துவதும், இச்சகம் பேசுவதையும் அசிங்கமாக முகஸ்துதி செய்வதையுமே தொழிலாகக் கொண்ட விளம்பர மானேஜர்களையும், சர்க்குலேஷன் மானேஜர்களையும் பத்திரிகையின் உயிர் நாடிகளாக நினைப்பதும் நாகசாமியின் வழக்கங்களாக இருப்பதை உள்ளூற அவன் வெறுத்தான். நாகசாமி மற்றவர்களிடம் பேசும்போது வாய்தவறிச் சொன்னால் கூட 'வீ ஆர் ரன்னிங் எ பிஸினஸ்' - என்று சொல்லுவாரே ஒழிய 'வீ ஆர் ரன்னிங் எ மேகஸீன்' - என்று பூம்பொழிலைப் பற்றியோ தமக்குச் சொந்தமான இன்னொரு பத்திரிகையைப் பற்றியோ சொல்லவே மாட்டார். அட்வர்டிஸ்ட்மெண்ட் மானேஜர் ரங்கபாஷ்யமோ பாவங்களின் அவதாரம். அவருடைய முகத்தில் நடுநெற்றியில் சிவப்புக் கீற்றாக நெளியும் அடையாளம் உள்ளே நிறைந்திருக்கும் அபாயங்களுக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கும் முன்னெச்சரிக்கையாக முகத்தில் ஒரு சிவப்புக் கோடு போட்டுக் காட்டினாற் போலச் சுகுணனுக்குத் தோன்றுமே ஒழியப் பவித்திரமான வைணவர்களின் சமயச் சின்னமாக அவரைப் பொறுத்தவரையில் மட்டும் அது தோன்றவே தோன்றாது. அவருடைய முன்னோர்கள் அக்னிஹோத்திரம், அக்னிசந்தானம், ஔபாசனம், எல்லாம் செய்து அசல் வேதியர்களாக வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்று சுகுணன் கேள்விப்பட்டிருந்தான். இவரோ தாம் புகுந்துவிட்ட துறைக்குத் தவிர்க்க முடியாத தேவை என்று தாமாகவே கற்பித்துக் கொண்டுவிட்ட குடி, கூத்து, மாமிசம் என்று சகல துறைகளிலும் ஈன நிலைக்குப் போய் விட்டிருப்பதைச் சுகுணன் கவனித்திருக்கிறான். சாதாரணமான தேவைகளுக்காகக் கீழிறங்கி விடுகிற மனிதர்களை அவனால் மனத்தாலும் கூட மன்னிக்க முடியாமலிருந்தது. இத்தனை சூழ்நிலைகளுக்கிடையேயும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த வெளியீடுகளின் 'குரூப்' பில் 'பூம்பொழிலை' முடிந்தவரை தன் பொறுப்பில் தரமாக நடத்திக் கொண்டிருந்தான் அவன். இவ்வளவு சீரழிவுக்குப் பிறகும் எப்போதாவது யாரிடமாவது 'நான் சனிக்கிழமை ராத்திரிப் பலகாரம் சார்! 'ட்வென்டி இயர்ஸா' இதை மட்டும் தவறவிடறதில்லே...' - என்று ரங்கபாஷ்யம் பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டால் அவனுக்குச் சிரிப்புத்தான் வரும். காரியாலய முறைக்காக ஓரளவு கட்டுப்பாட்டுடன் ஒத்துப் போவதைத் தவிர நாகசாமி, ரங்கபாஷ்யம் போன்றவர்களை அவனால் மனமார மதிக்க முடியாமலிருந்தது. அவர்களிடமிருந்த ஊழல்களைப் பார்க்கும் போது தன்னுடைய நக்கீர தைரியத்தோடு நிமிர்ந்து நின்றிருக்கிறான் அவன். இன்று ரங்கபாஷ்யம் அவனை அவனுடைய அறைக்குத் தேடி வந்தது அலுவலக வேலையாகத்தான் என்றாலும் வேண்டா வெறுப்பாக அவரை வரவேற்றான் அவன். "மிஸ்டர் சுகுணன்! இந்தச் சமயத்தில் நீங்கள் தான் பெரிய மனசு பண்ண வேணும். பூம்பொழிலில் வரபோகிற இதழில் உங்கள் 'டம்மி'ப் (மாதிரி ஃபார அமைப்பு) படி பத்துப் பக்கம் 'ரீடிங் மேட்டரும்' ஆறு பக்கம் விளம்பரமும் மூன்றாவது பாரத்தில் போட்டிருக்கிறது. அதை எப்படியாவது ஆறு பக்க ரீடிங் மேட்டராகவும் - பத்து பக்க விளம்பரமாகவும் மாற்றிக் கொடுத்தால் நல்லது..." "நல்லதென்றால் யாருக்கு நல்லது? உங்களுக்கா, எனக்கா? வாசகர்களுக்கா?" என்று சிரித்துக் கொண்டே கொஞ்சம் அமுத்தலாகவே அவரைக் கேட்டான் சுகுணன். ரங்கபாஷ்யமும் கொஞ்சம் எரிச்சல் மூட்டுகிறார் போலவே பதில் கூறினார்! "உங்களுக்குமில்லை! எனக்குமில்லை! பத்திரிகைக்குத்தான்." "அப்படி நீங்கள் நினைக்கலாம். நான் நினைக்க முடியாது. மூன்றாவது பாரத்தில் பத்துப் பக்க அளவு வருகிறாற் போலச் சிறந்த எழுத்தாளர் ஒருவரின் அருமையான கதை ஒன்று வெளிவர இருக்கிறது. அந்தக் கதையை நாலு பக்கம் குறைத்து ஆறு பக்கமாக 'எடிட்' செய்தால் கதை சீரழிந்து உருக்குலைந்து போகும். கதையை இந்த இதழில் போடாமல் அடுத்த இதழுக்கு மாற்றி விடலாமென்று பார்த்தால் அதற்கும் வழி இல்லாதபடி அந்தக் கதை இந்த இதழில் வெளிவருமென்று சென்ற இதழிலேயே அறிவிப்புச் செய்தாயிற்று. ஒவ்வோர் இதழிலும் பத்திரிகையின் மொத்தப் பக்கங்களான நூறு பக்கங்களில் மூன்றில் ஒரு பங்காக முப்பத்து மூன்று அல்லது அதிகபட்சமாக முப்பத்தைந்து பக்கங்கள் விளம்பரத்துக்கு ஒதுக்க வேண்டுமென்று காரியாலய நடைமுறை இருக்கிறது. இந்த இதழில் முப்பத்தைந்து பக்கம் விளம்பரத்துக்காக விட்டிருக்கிறோம். அப்படி இருந்தும் நீங்கள் இம்மாதிரி வாதிடுவது நன்றாயில்லை. கதைகளைக் கண்டபடி உருக்குலைத்துப் போடுவது நாணயமான காரியமில்லை. நான் ஓர் எழுத்தாளன், அதனால் மற்ற எழுத்தாளர்களின் மனச் சாட்சியை என்னால் புறக்கணிக்க முடியாது." "ஆனால் ஒன்றை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் மிஸ்டர் சுகுணன்! எழுத்தாளர்களுக்கு நாம் பணம் கொடுக்கிறோம். விளம்பரதாரர்களோ நமக்குப் பணம் கொடுக்கிறார்கள்" - என்று கோபக் குமுறலோடு ரங்கபாஷ்யம் இரைந்த குரலில் ஆங்கிலத்தில் சொல்லி விட்டு எழுந்திருந்த போது, "மிஸ்டர் ரங்கபாஷ்யம்! ப்ளீஸ் கீப் யுவர் லிமிட்ஸ். ஐ டோண்ட் வாண்டு டிஸ்கஸ் வித்யூ" - என்று தெளிவான குரலில் மனத்தின் ஒரே வலிமையாகிய நக்கீர தைரியத்தோடு இருந்த இடத்தில் இருந்தபடியே அவருக்குப் பதில் கூறினான் சுகுணன். "ஐ வில் டேக் திஸ் மேட்டர் டு தி நோட்டீஸ் ஆஃப் தி மானேஜ்மெண்ட்..." - என்று கோபமாக அவனிடம் இரைந்து கத்திவிட்டு வெளியேறினார் ரங்கபாஷ்யம். "அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை" என்று அவரைச் சாடி அனுப்பினான் சுகுணன். சொல்லி வைத்தாற்போல் ரங்கபாஷ்யத்தின் தலை மறைந்த மறுகணமே சர்மா சுகுணனின் அறையில் தலை நீட்டினார். "அவனிடம் ஏன் வீண் வம்பு வைத்துக் கொள்கிறீர்கள் சுகுணன்? பெரிய ரௌடியாச்சே?" என்று சுகுணனுக்கு அநுதாபப்படுகிறவர் போல் ரங்கபாஷ்யத்தை ஏக வசனத்தில் பேசினார் சர்மா. "ரௌடியாயிருந்தால் ரயில்வே பிளாட்பாரத்தில் திரிய வேண்டும். புத்தியுள்ளவர்களின் அறிவு இயக்கமாகிய பத்திரிகைக் காரியாலயத்திற்குள் வரக்கூடாது" என்று சர்மாவிடமும் சீறினான் அவன். தனக்கு வேண்டியவர் போல் இப்படி இங்கே வந்து அனுதாபப்படுகிறார் இவர். தான் சொல்லிய இதே கடுமையான வாக்கியங்களைச் சாயங்காலம் ரங்கபாஷ்யத்திடமும் போய்ச் சொல்கிற கெட்ட குணம் சர்மாவுக்கு உண்டு என்பது சுகுணனுக்குத் தெரியும். அவர் போய்ச் சொன்னாலும் சொல்லட்டுமென்று தான் பேசியிருந்தான் அவன். அசத்தியமயமாக வாழ்கிற யாரை எதிரே சந்தித்தாலும் இந்த இருளினருகே அவன் மனத்தின் சத்தியதாகமாகிய ஒளி பெருகித் தோன்றும். சர்மாவின் புறம் பேசும் இழி குணம் தெரிந்திருந்தும் அவர் காது கேட்கும்படியாகவே, 'ரௌடியாயிருந்தால் ரயில்வே பிளாட்பாரத்தில் திரிய வேண்டும்' என்று ரங்கபாஷ்யத்தைக் குறித்து அவன் பேசியதற்குக் காரணம் உள்ளே அநியாயத்தைக் கண்டு குமுறி அளவற்றுப் பெருகிய நக்கீர தைரியம் தான். தன்மானமும் நேர்மையுமுள்ள ஒவ்வொருவனுடைய இரத்தத்திலும் இப்படி ஒரு நக்கீர தைரியம் பெருகி ஓடுவதைத் தவிர்க்க முடியாது என்பதைச் சுகுணன் உணர்ந்திருந்தான். ஈரம் பட்டு நமத்துப் போகிற தீக்குச்சி போல் மனிதர்களுடைய சத்தியம் என்ற நெருப்பில் வாழ்க்கைப் பயம் ஈரமாகப் பெருகி நனைந்து போகாமல் நிமிர்ந்து நிற்கிறவன் யாரோ அவனெல்லாம் இந்த நக்கீர தைரியத்தைத்தான் நாகரிக வீரமாகப் போற்றிப் பாதுகாக்க முடியும். பத்திரிகையாளனின் அல்லது அறிவு இயக்கத்தைச் சேர்ந்தவனின் ஒரே பெருமிதம் இந்த நக்கீர தைரியம் தான் என்பதைப் பலர் மறந்து விடுகிறார்கள். சென்னைப் பட்டினத்துத் தெருக்களில் காகித ஆலைகளாக நடக்கும் பல பெரிய பத்திரிகை நிறுவனங்களில் உதவி ஆசிரியர்களாகவும், பிழை திருத்துபவர்களாகவும், இருக்கிற பலர் முதுகும் வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கைகளும் வளைந்து கூனிப் போய், "ஏதோ காலந்தள்ளணுமே சார்" - என்று ரொம்பவும் அசதியாக வாழ்வதைப் பார்த்துக் குமுறியிருக்கிறான் சுகுணன். ஒரு முறை அகில இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கோஷ் வந்திருந்த போது சுகுணனும் வேறு சில தன்மானமிக்க பத்திரிகையாளர்களும் தனியே கடற்கரையிலமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த வேளையில், 'இன்று பண முதலைகளால் நடத்தப்படும் பெரிய பெரிய பத்திரிகைகளில் உண்மையாக வசதிகளையும் சொகுசுகளையும் அனுபவிப்பவர்கள் யார் தெரியுமா?' என்று கேட்கப் பட்ட போது "அக்கார்டிங் டு மை ஸ்டாடிஸ்டிக்ஸ் மோஸ்ட்லி தே ஆர் லோஃபர்ஸ் அண்ட் ஹையர் லெவல் பிம்ப்ஸ்..." என்று கோஷ் கொதிப்போடு பதில் கூறியிருந்ததை இப்போது நினைத்தான் சுகுணன். இந்தத் துறையைப் பற்றிய கசப்பான உண்மைகள் சுகுணனுக்குத் தெரிந்திருந்ததன் காரணமாகவே இதில் அவன் உள்ளம் பயமற்றுத் திடமாக இறுகித் துணிவோடு எந்தப் பொய்யையும் எதிர்த்து நிற்கத் தயாராயிருந்தது. போர் வீரனின் தைரியம் வேறு, அறிவாளிக்குத் தேவையான தைரியம் வேறு. அறிவாளியின் தைரியம் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட மடங்காத தைரியமாயிருக்க வேண்டும். சமூகத்தின் எந்த மூலையிலிருந்து யாருடைய நெற்றிக்கண் கொடூரமாகத் திறந்து வெதுப்பினாலும் 'குற்றம் குற்றமே' என்று நிமிர்ந்து நின்று சொல்லுகிற தைரியமே அறிவாளியின் தைரியம். இந்தத் தைரியம் அறிவாளியிடமிருந்து குறையக் குறைய உலகத்தின் அறிவியக்கமே போலியாகிவிடும். போர் வீரனின் தைரியத்தை விடப் புத்தி வீரனின் தைரியம் பல விதங்களில் உலகுக்கு அவசியமானது. புத்தி வீரனின் தைரியம் படிப்படியாகக் குறையக் குறையப் போர் வீரனின் தைரியமும் குறைந்து விடும் என்பது நீண்ட சிந்தனைக்குப் பின் சுகுணனின் முடிவாயிருந்தது. ஆனால் புத்தி வீரர்களாயிருக்க வேண்டிய பத்திரிகையாளர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நினைத்த சூட்டோடு இங்கு எப்படி இருக்கிறார்கள் என்பதையும் நினைத்தாலோ நெஞ்சில் இரத்தம் வடிகிறது. சினிமா நட்சத்திரங்கள் காய்கறி நறுக்குவதையும், சைக்கிள் விடுவதையும் படம் பிடித்துப் போடுவதற்காக அவர்களுக்குப் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிற சிலரும், மந்திரிகள் பெயரில் கட்டுரை எழுதி வெளியிட்டு அவர்களுக்கு தங்கள் புத்தியை அடகு வைக்கவோ, இரவல் கொடுக்கவோ செய்வதன் மூலம் சோரம் போகிறவர்கள் சிலருமாகச் சமூகத்தின் ஒளியற்ற பகுதிகளில் எங்கெங்கோ எப்படி எப்படியோ திரிய வேண்டியவர்கள் எல்லாம் சந்தர்ப்ப வசத்தினால் புனிதமான - வீரமான பத்திரிகைத் தொழிலில் புகுந்து அந்தத் தொழிலுக்கு வேண்டிய - எந்த நெற்றிக்கண் திறந்தாலும் அசத்தியத்துக்கு அஞ்சாத நக்கீர தைரியம் சிறிதுமின்றி இருக்கிறார்கள். "நக்கீர தைரியத்தினால் போலிப் பெரிய மனிதர்களின் கோபத்துக்கும் சமூகத்தின் சாபத்துக்கும் ஆளாக நேரிடலாம். ஆனாலும் அந்தத் தைரியம் தான் பத்திரிகையாளரின் சேம நிதி. அதைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவன் பத்திரிகையாளனாய் இருப்பதற்கே தகுதியில்லை" - என்று சில கூட்டங்களில் உணர்ச்சி வசமாகக் குமுறிப் பேசிப் பேசி அதன் காரணமாகச் சிலருடைய விரோதத்தையும் சுகுணன் சம்பாதித்துக் கொண்டதுண்டு. ஃபோர்மென் அன்று மாலை மூன்று மணிக்கு மேல் அடுத்து வருகிற வாரத்துப் பூம்பொழிலின் மூன்றாவது ஃபாரத்தை மேக்கப் செய்து கொண்டு வந்து கொடுத்த போது அதில் தான் விரும்பிய படியே பத்துப் பக்கம் கதையும் ஆறு பக்க விளம்பரமும் மட்டுமே வந்திருப்பதைச் சுகுணன் கண்டான். ரங்கபாஷ்யம் தன்னை மீறி எதுவும் செய்யவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. இருந்தாலும் தன்னுடைய நியாயமான வெற்றியையும் அவருடைய சரியான தோல்வியையும் அவர் கைப்படவே உறுதி செய்து கொண்டுவிட வேண்டுமென்று சுகுணனுக்குத் தோன்றியது. அந்த ஃபாரத்தின் மேல் அதை அப்படியே ஒப்புக் கொள்வது போல் ரங்கபாஷ்யத்திடம் ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டு வருமாறு சொல்லிச் சிரித்துக் கொண்டே அதை எடுத்து நாயுடுவிடம் கொடுத்தான் சுகுணன். நாயுடு ஃபாரத்தை எடுத்துக் கொண்டு ரங்கபாஷ்யத்தின் அறைக்குச் சென்றார். இந்தச் செயல் ரங்கபாஷ்யத்தின் ஆத்திரத்தைக் கிளறும் என்று தெரிந்திருந்தும் - அப்படிக் கிளறினாலும் பரவாயில்லை - தன் வெற்றியை எதிரியின் கைப்படவே ஒப்புக் கொள்ளச் செய்துவிட வேண்டுமென்ற தீரனின் சுபாவத்தோடு நாயுடுவை அனுப்பியிருந்தான் சுகுணன். ஆனால் ரங்கபாஷ்யத்தைப் பற்றி அவன் அநுமானம் செய்தது முற்றிலும் தவறாகப் போய்விட்டது. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு நாயுடு ஃபாரத்தோடு திரும்பி வந்த போது ஆவலோடு அதை வாங்கிப் பார்த்தால், 'ஓ.கே.' என்று ஆங்கிலத்தில் எழுதி அதற்குக் கீழே 'இன்ஷியல்' போட்டு ஸைன் செய்து ஒப்புக் கொண்டிருந்தார் ரங்கபாஷ்யம். அவருடைய இந்தப் பணிவிலேயே ஒரு பெரிய விரோதத்திற்கு ஆரம்பம் இருப்பது போல தெரிந்தது. ஆட்டுக்கிடாய் சண்டையில் வன்மமுள்ள எதிரி ஆடு பின் வாங்கினால் இன்னும் வேகமாக முன் வந்து முட்டப் போவதாகத்தான் அர்த்தம். இதை நினைத்தபடியே அவருடைய அந்தக் கையெழுத்தைப் பார்த்துச் சுகுணன் புன்முறுவல் பூத்தான். "ஒண்ணும் சொல்லலீங்க... மேலேயும் கீழேயும் ஏற இறங்கப் பார்த்துப்பிட்டு உடனே கையெழுத்துப் போட்டுட்டாரு" - என்று நாயுடு கூறிய போது, "டர்ட்டி ஃபெலோஸ்" என்று சுகுணனின் உதடுகள் முணு முணுத்துக் கொண்டன. ரங்கபாஷ்யம் பெரிய 'டிப்ளமேட்' என்பது அவனுக்குத் தெரியும். யாரையும் முடிவாக விரோதித்துக் கொள்ளாதது போல நடித்து விட்டு தேவையான விரோதங்களை யானை போல ஞாபகம் வைத்துக் கொண்டு பின்னால் எப்போதாவது சரியாகப் பழி வாங்கிக் கருவறுப்பார் அவர் என்பதும் அவனுக்குத் தெரியும். |