7
"இன்னொருவர் மேல் மனப்பூர்வமாக அன்பு செய்வதாலும், இன்னொருவரால் மனப்பூர்வமாக அன்பு செய்யப்படுவதாலும் தான் மனிதர்கள் நிமிர்ந்து நடக்க முடிகிறது." ரங்கபாஷ்யம் கையெழுத்திட்டு அனுப்பிய அந்த ஃபாரத்தைத் திருத்திச் சரி செய்து நாயுடுவிடம் கொடுத்துவிட்டு அன்று மாலை நாலரை மணிக்கு மவுண்ட் ரோட்டில் சங்கக் கட்டிடத்திற்குள் உழைக்கும் பத்திரிகையாளர்கள் யூனியனின் செயற்குழுக் கூட்டம் இருப்பதனை நினைவு கூர்ந்தவனாக அதற்குப் புறப்பட்டான் சுகுணன். செயற்குழுவில் அவனும் இருந்ததனால் போய் ஆகவேண்டும் என்ற கடமை தவிரவும் அன்று ஒரு முக்கியமான தீர்மானம் கொண்டு வரப்பட இருந்தது. அந்தத் தீர்மானத்திற்கு உத்தியோக பயத்தின் காரணமாகச் சிலருடைய எதிர்ப்பும் இருந்தது. ஆனால் சுகுணனும் அவனையொத்த முற்போக்கான எண்ணமுடைய சிலரும் தீர்மானத்தை எப்படியும் நிறைவேற்றி விடுவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். சில பத்திரிகைக் காரியாலயங்களில் நிர்வாகிகள் உழைக்கும் பத்திரிகையாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ மரியாதைக் குறைவாக நடத்துவதாய்ப் புகார்கள் நிறைய வந்திருந்தன. ஒரு பத்திரிகைக் காரியாலயத்தில் உதவியாசிரியர்களுக்கும் பிழை திருத்துவோருக்கும் காரியாலய நேரத்தில் வெளியிலிருந்து யார் எவ்வளவு முக்கியமான காரியமாக ஃபோன் செய்தாலும் தகவல் தெரிவிக்கவோ பேசவோ அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இன்னொரு காரியாலயத்தில் பத்திரிகை முதலாளி - எந்த உதவியாசிரியரைத் தம் அறைக்குக் கூப்பிட்டுப் பேசினாலும் அவரை விட வயதானவர்களுக்குக் கூட உட்கார ஸீட் கொடுக்காமல் நிறுத்தி வைத்துப் பேசுவதாகப் பலர் குறைப்பட்டுக் கொண்டு யூனியனில் தெரிவித்திருந்தார்கள். இவற்றையெல்லாம் தவிர்க்க 'நிர்வாகிகள் மரியாதையாக நடக்க வேண்டும்' - என்பது போன்ற வாசகம் அடங்கிய 'பாட்ஜ்' ஒன்றைச் சில நாட்கள் தொடர்ந்து உழைக்கும் பத்திரிகையாளர்கள் காரியாலயத்துக்கு அணிந்து செல்ல வேண்டும் என்ற தீர்மானம் தான் அன்று செயற் குழுவில் வர இருந்தது. சுகுணனுடைய அன்றைய மனநிலையில் இந்தத் தீர்மானத்தைப் பற்றி அதிகமாக அக்கறைகாட்ட வேண்டுமென்ற துடிப்பும் கண்டிப்பான ஞாபகமும் வந்திருந்தது அவனுக்கு. செயற்குழுவில் சிலர் தீர்மானத்தை எதிர்த்தார்கள். இந்த 'பாட்ஜ்' அணிந்து செல்கிறவர்கள் யாரென்று கவனித்து வைத்திருந்து நிர்வாகிகள் அவர்களைப் பழி வாங்கினால் என்ன செய்வதென்று வினாவினார்கள் சிலர். "அப்படிப் பழி வாங்குவது முடியாத காரியம். அப்படி யாராவது பழி வாங்கினால் யூனியன் அவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கும்" - என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பயப்படுகிறவர்கள் பயப்படத்தான் செய்தார்கள். தீர்மானம் என்னவோ சுகுணனைப் போல் துணிவும் தன்மானமுமுள்ள இளந்தலைமுறைப் பத்திரிகையாளர்களின் பெருவாரியான ஆதரவினால் நிறைவேறிவிட்டது. அது நிறைவேறிய மகிழ்ச்சியோடு ஏழு - ஏழேகால் மணிக்குக் கூட்டம் முடிந்து அவன் அறைக்குத் திரும்பிய போது துளசியும் அவள் கணவனும் அவனைத் தேடி வந்துவிட்டு அறையில் அவனைக் காணாமல் காரில் புறப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் அவன் வருவதைப் பார்த்துவிட்டு மறுபடியும் கீழிறங்கினார்கள். ஏதோ ஒரு நவநாகரிக ஓட்டலின் பெயரைச் சொல்லி அதில் 'ரூஃப் கார்டனில்' ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விசேட டின்னருக்கு மூன்று டிக்கட் வாங்கியிருப்பதாகவும் அதற்குச் சுகுணனும் வரவேண்டுமென்றும் துளசியின் சார்பில் அவள் கணவன் வேண்டினான். தான் வேண்டிக் கொள்வது நியாயமாயிருக்காது என்பதற்காகவே துளசி தன் கணவனை விட்டு அதைத் தெரிவிக்கச் செய்தாள். என்றாலும் எங்கே அவன் மறுத்துவிடுவானோ என்ற தவிப்பும் ஆவலும் அப்போது அவள் முகத்தில்தான் அதிகமாகத் தெரிந்தன. சில மாதங்களுக்கு முன்பு வரை சுகுணனும் அவளும் அதே நவநாகரிக ஓட்டலுக்கு எத்தனையோ ரூஃப் கார்டன் டின்னர் சாப்பிடப்போய் வந்திருக்கிறார்கள். அந்த ஞாபகத்தைத் தவிர்க்க முடியாமல் தான் அவள் தன் கணவனை விட்டுத் தன்னைக் கூப்பிடச் சொல்லித் தூண்டியிருக்க வேண்டுமென்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. "நீங்கள் ஆபீஸிலிருப்பீர்களோ என்று ஆறு மணிக்கு நானும் இவரும் அங்கே போனோம். அங்கேயிருந்து நாலு மணிக்கே புறப்பட்டு விட்டதாக நாயுடு சொன்னார். அப்புறம் இங்கே வந்தோம். இங்கேயும் காணவில்லையே என்று வருத்தத்தோடு புறப்பட்ட போது கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் நீங்களே வந்துவிட்டீர்கள்" - என்று அவன் மறுத்துச் சொல்லவோ தட்டிக் கழிக்கவோ அவகாசம் கொடுத்துவிட விரும்பாதவளைப் போல் விரைந்து கெஞ்சுவது போல் தொனிக்கும் குரலில் பேச்சைத் தொடங்கினாள் துளசி. 'இவராமே இவர்? பெண்களுக்குத்தான் எத்தனை விரைவாக எத்தனை சுலபமாக உரிமையும் உறவும் கொண்டாட வந்து விடுகிறது?' - என்று உள்ளூற நினைத்து நகைத்துக் கொண்டான் சுகுணன். அன்று அவன் டின்னருக்குப் போகிற மனநிலையிலில்லை. "இன்று நான் ரொம்பக் களைத்துப் போயிருக்கிறேன். என்னைத் தயவு செய்து விட்டுவிடுங்கள். இன்னொரு நாள் கட்டாயம் வருகிறேன்" - என்று துளசியின் கணவனிடம் நாசூக்காக மறுத்தபோது, "துளசிக்குத்தான் பெருத்த ஏமாற்றமாயிருக்கும் சார்! அவள் தான் வருத்தப்படுவாள். என்ன இருந்தாலும் உங்கள் இரசிகைக்கு நீங்கள் இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை அளிக்கக்கூடாது" - என்று நிர்விகாரமான மனத்தோடு துளசியையும் கடைக்கண்ணால் பார்த்துச் சிரித்துக் கொண்டே மறுபடி சுகுணனை வற்புறுத்தினான் துளசியின் கணவன். "தயவு செய்து என்னை மன்னியுங்கள்..." என்று சுகுணன் மீண்டும் மறுத்தபோது துளசியின் முகம் ஒளியற்றுச் சோபை மங்கியது. கண்களிலும் உதடுகளிலும் மலர்ச்சி மறைந்து வாட்டம் வந்து படிந்தது. அவள் நெட்டுயிர்த்தாள். வாய் விட்டு அழ முடியாத குறையாக மீண்டும் மீண்டும் நெட்டுயிர்த்தாள்.
எந்த நிலையிலும் துளசியின் முகம் வாடுவது சுகுணனுக்கும் அந்தரங்கமாகப் பிடிக்காதுதான். ஒரு செல்லக் குழந்தையைப் பாசத்தோடு கவனிப்பது போல் பிரியத்தின் எல்லை வரை சென்று அவள் மேல் அன்பு வைத்தவன் அவன். அவளுடைய உடல் கிடைக்கவில்லை என்பதனால் அந்த அன்பு இன்று அழிந்து போய்விடாது. ஒருமுறை ஏதோ கவனக் குறைவினால் துளசி தன் கைகளில் நகங்களைக் கத்தி கத்தியாக வளர விட்டிருந்தாள். அவளுடைய பூப்போன்ற மென்மையும் சந்தனம் போன்ற குளிர்ச்சியும் பொருந்திய விரல்களுக்கு அந்த நகங்களின் வளர்ச்சி பொருந்தாமலிருந்தது. அவள் தன்னுடைய திருவல்லிக்கேணி அறைக்கு வந்திருந்த ஒரு சமயத்தில் சுகுணனே சிரித்தபடி எழுந்துபோய்த் தன்னுடைய 'நெயில் கட்டரை' (நகம் வெட்டும் கருவி) எடுத்து வந்து, "துளசி! இந்தப் பூப் போன்ற கைகள் என்னுடையவை. நான் கொள்ள வேண்டியவை. இவை பொலிவற்றிருப்பதை என்னால் சகிக்க முடியாது" - என்று சொல்லியபடியே அழகாக ஒற்றை மோதிரமணிந்த அவள் வலது கை விரல்களைப் பற்றி நகங்களைக் கத்திரிக்கலானான்...
"இதென்ன? நீங்கள் எனக்கு இப்படி எல்லாம் பணிவிடை செய்து கொண்டு?... தயவு செய்து கையை விடுங்கள். நான் அல்லவா உங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும்" - என்று போலி வெட்கத்தோடு உண்மையில் அந்தப் பிடியில் மகிழ்ந்து கொண்டே அவள் கைப்பிடியிலிருந்து திமிற முயல்வது போல் நடித்தாள் துளசி. "நிலாக் கதிர்களின் மேல் நட்சத்திரம் விழுந்து கிடப்பது போல் இந்த ஒற்றை மோதிரம் தான் உன் கைக்கு எத்தனை அழகாயிருக்கிறது துளசி?" - என்று அப்போது அவளை வியந்திருந்தான் சுகுணன். அதற்கு அடுத்த வாரம் எழுதிய 'மோதிர விரல்' என்னும் கவிதையில்,
'தீயினில் தளிர்த்ததோர் - பொற் செழுங் கொழுந்தெனவே மாயக் கைவிரலாள் அதில் மன்மதன் சொக்கிடும் கோல மோகனச் சிறு மோதிர மொன்றுடையாள்' என்று சில வரிகள் வந்தன. "இப்படி நீங்கள் ஒவ்வொன்றையும் எழுதுவதாயிருந்தால் இனிமேல் உங்கள் முன்னால் தட்டுப் படுவதற்கே பயப்பட வேண்டும் போலிருக்கிறதே" - என்று இந்த வரிகளைப் படித்துவிட்டுப் பாதி வெட்கமும் பாதிக் கோபமுமாகத் துளசி அவனைக் கேட்டாள். "என்ன செய்வது துளசி எனக்கு வேறெந்தப் பெண்களின் கைகளைப் பற்றியும் தெரியாதே?" - என்று சொல்லி நகைத்தான் சுகுணன். அந்தப் பெருமையில் அவளும் மலராக மலர்ந்து குழைந்தாள். அப்படிப்பட்டவள் முகம் வாடும்படி இன்று விருந்துக்கு வரமாட்டேனென்று மறுக்கும் போது அவன் மனமும் அதைச் செய்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தோடும், வேதனையோடும் தான் செய்தது. ஏமாற்றம் என்ற உணர்வின் ஒருபுறம் தவிப்பும், மறுபுறம் ஏக்கமுமாகத் துளசி கணவனோடு காரில் புறப்பட்டாள். போகும்போது, 'போய் வருகிறேன்' - என்று வாய் திறந்து வார்த்தைகளால் சொல்லிக் கொள்வதற்குக் கூடத் தெம்பில்லாமல் கண்ணீர் முட்டிப் பளபளக்கும் விழிகளை அசைத்துத் தலையைச் சாய்த்து 'வருகிறேன்' என்பதுபோல் பாவனை செய்யத்தான் அவளால் முடிந்தது. 'இன்னொருத்தியின் உள்ளத்தில் தான் தவிப்பாகவோ, ஏக்கமாகவோ இருந்து அந்த உள்ளத்தைத் தன்னையறியாமலே வதைத்துக் கொண்டிருக்கிறோமே' - என்று உணரும் போது உள்ளூற எத்தனை வேதனையடைய முடியுமோ அத்தனை வேதனையையும் விட அதிகமான வேதனையோடுதான் அப்போது மாடிப்படியேறி அறைக்குப் போனான் சுகுணன். 'ஆழமாக வேரூன்றி விடுகின்ற செடியைப் போல், நம்பிக்கை வாய்ந்த பெண், ஆண் பிள்ளையின் மேல் வைத்து விடுகிற பிரியம் தான் எத்தனை நிலையாக ஊன்றிவிடுகிறது?' - என்பதை நினைக்கும் போது அந்த அன்பை நிமிர்ந்து பார்த்து வியந்தது அவன் மனம். மனிதர்கள் தங்கள் உடலில் இரத்தம் சூடேறி ஓடுவதால் மட்டும் நிமிர்ந்து நடக்கவில்லை. உண்மையில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் எங்கோ கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிற அசல் அன்பினால்தான் நிமிர்ந்து நடக்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைக்கத் தோன்றியது. 'இன்னொருவர் மேல் மனப்பூர்வமாக அன்பு செய்வதாலும் இன்னொருவரால் மனப்பூர்வமாக அன்பு செய்யப்படுவதாலும் தான் மனிதர்கள் நிமிர்ந்து நடக்க முடிகிறது' - என்று சிந்தித்த போது அந்தச் சிந்தனை அழகாகவும் நம்பிக்கைக்கு உரியதாகவுமிருந்தது அவனுக்கு. நீராடி உடை மாற்றிக் கொண்டு அவன் மெஸ்ஸிற்குச் சாப்பிடப் புறப்பட்டபோது... அறை வாசலில் அவன் மாடிப்படி இறங்குவதற்கு இருந்த வேளையில் பைந்தமிழ் நாவலர் பா.பாண்டுரங்கனார் மூச்சு இரைக்க இரைக்கத் தம் கனத்த உடலைச் சுமக்க முடியாமல் சுமந்து படியேறி மேலே வந்து கொண்டிருந்தார். மாடிப்படியில் எதிரே நேருக்கு நேர் சந்திக்கும்படி ஆகிவிட்டதனால் சுகுணனால் பாண்டுரங்கனாரிடமிருந்து தப்பி ஓட முடியவில்லை. தப்பித்து ஓட வழி இருந்தால் பாண்டுரங்கனாருக்கு முன் தலையைக் காட்டாமல் நிச்சயமாகத் தப்பியிருப்பான அவன். அந்த மனிதரிடம் யார் சிக்கிக் கொண்டாலும் - சிக்கிக் கொண்டவருக்கு எத்தனை முக்கியமாக வேறு அவசரக் காரியம் இருந்தாலும் மூன்று - மூன்றரை மணி நேரம் 'போரடி'க்காமல் விடவே மாட்டார். சுகுணன் அவரறியாமல் அவருக்கே 'போர் மாஸ்டர் ஜெனரல்' (Bore Master General) என்று பெயர் சூட்டியிருந்தான். சென்னையில் ஏதோ ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராயிருந்து ஓய்வு பெற்றவரென்று அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தான் சுகுணன். கல்லூரியிலிருந்து அவர் ஓய்வு பெற்றாரா அல்லது அவரிடமிருந்து அந்தக் கல்லூரி ஓய்வு பெற்றதா என்பது சர்ச்சைக்குரிய பிரச்னையாகும். ஓய்வு பெற்ற பின்னர் தாற்காலிகமாக அவர் செய்து கொண்டிருந்த காரியம் ஆகாசவாணியில் அருள்வாக்கு உரைப்பது. சுகமாகவும், கவலையற்றும் விடிகிற அதிகாலையின் இன்பத்தைக் கெடுப்பது போன்ற கட்டைக் குரலில் அருளும் இல்லாமல் வாக்கும் இல்லாமல் எதையாவது சொல்லி 'ரேடியோ' கேட்பவர்களின் வயிற்றெரிச்சலை நாள் தவறாமல் கொட்டிக் கொண்டிருந்தார் இந்தப் பைந்தமிழ் நாவலர். 'இந்தக் குற்றத்தைச் செய்பவர் இன்னார்' என்பதுபோல் 'அருள்வாக்கு' உரை நிகழ்த்துபவர் என்று முன்னால் பெயர் சொல்வதோடு நிற்காமல் உரை முடிந்ததும் மக்கள் தங்கள் கோபத்தை யார் மேல் காட்டுவதென்ற தவிப்புடனிருக்கும் போது - 'இந்தக் குற்றத்தைச் செய்தவர் இன்னார்தான்' என்று சந்தேகத்துக்கிடம் வைக்காமல் பின்னாலும் பெயரைச் சொல்லி விடுவார்கள். 'அருள்வாக்கு' என்ற உபதேசத் தொழிலை அப்படியே குத்தகைக்கு எடுத்தவர் போல் தினந்தோறும் பாண்டுரங்கனாரே அதைச் செய்து கொண்டிருந்ததைக் கண்டு அவரைப் போலவே ஓய்வு பெற்ற வித்துவான்களும், உபதேசம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்களும், ரேடியோக்காரர்களிடம் 'அருள்வாக்கு ஒருவருக்கே சொந்தமானதா?' என்று சண்டைக்குப் போகவே அவர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். முதல் நாள் அருள்வாக்கின் போது பா. பாண்டுரங்கனார் என்று தமிழில் முதலெழுத்தைச் சொல்லிப் பெயரை அறிவித்தால் மறுநாள் அருள்வாக்கின் போது பி. பாண்டுரங்கனார் என்று வேறு பெயர் போல் தோன்றும்படி ஆங்கிலத்தில் முதலெழுத்தைச் சொல்லி அறிவித்தார்கள். இத்தனைக்கும் மேலாகத் திரு. பாண்டுரங்கனாருக்குப் பூம்பொழிலைப் போலத் தரமான இலக்கியப் பத்திரிகை ஒன்றில் தொடர்ந்து கந்த புராணத்தைப் பற்றியோ பிரபுலிங்க லீலையைப் பற்றியோ ஓர் அறுபது வாரத்துக்கு எழுதித் தள்ளிவிட வேண்டுமென்பது ஆசை. அதற்காகவே சுகுணனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார் அவர். பாண்டுரங்கனாருக்குத் தமிழையும் இலக்கியத்தையும் விட அதிகமாகத் தெரிந்த கலை, இன்னொருவரைப் பச்சையாகப் புகழ்வது. முகஸ்துதியில் மன்னன். இவற்றிற்கு அநுசரணையானதும் எந்தக் கொம்பனையும் உடனே வசப்படுத்தக் கூடியதுமான உபதொழில் கைரேகை பார்ப்பது. வேதாந்திகள் சில இடங்களில் 'மாயை' தான் கவர்ச்சி மிகுந்தது என்கிறார்களே, அது போல் பாண்டுரங்கனாரைப் போன்ற மனிதர்கள் தான் சென்னைப் பட்டினத்து மாயைகள். இந்த மாயைகளின் கவர்ச்சியோ, செல்வாக்கோ, புகழோ பட்டினத்தில் ஒரு நாளும் குறையாதென்பதை உறுதியாக நம்பலாம் என்று தோன்றியது சுகுணனுக்கு. சமீபத்தில் சிறிது காலமாக நாகசாமியின் கை பாண்டுரங்கனாரிடமிருந்தது. அதாவது பாண்டுரங்கனார் அடிக்கடி நாகசாமியைத் தேடிச் சென்று அவருக்குக் கைரேகை பார்க்கத் தொடங்கியிருந்தார். "ஊரில் எத்துனையோ போலிகள் கைரேகை பார்ப்பதாகப் பாமர மக்களை ஏமாற்றித் திரிகின்றன. யாம் அவ்வாறு செய்வதில்லை. 'செருமானிய' நாட்டு (ஜெர்மனி என்பதற்குப் பாண்டுரங்கனாரின் தமிழாக்கம்) அறிஞரொருவர் எழுதியுள்ள சிறந்த இரேகை நூலினைக் கொண்டு யாமறிந்த உண்மைகளைச் சொல்லி வருகின்றோம்" - என்று தனித்தமிழில் - தம்முடைய தொழில் திறமையை எடுத்துச் சொல்லுவது அவர் வழக்கம். பாண்டுரங்கனாரிடம் சில அபாரமான திறமைகளும், சாமர்த்தியங்களும் உண்டு. நாகசாமியைப் போல் தொழிலதிபர்கள், பெரிய மனிதர்கள் யாரையாவது பார்த்தால், "இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நம் முதலமைச்சரைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது தங்களைப் பற்றியும் ஏதோ பேச்சு வந்தது. அவர் அந்தப் பேச்சை மிகவும் விருப்பத்தோடு கேட்டதுமில்லாமல் தங்களைப் பற்றி என்னிடம் அன்போடு விசாரித்தார். நானும் தங்களைப் பற்றி அவரிடம் நிறையச் சொல்லியிருக்கிறேன்" - என்று நடுவாக நாலு வார்த்தைகள் சொல்லி வைப்பார். பெரிய மனிதர்கள், பெரிய மனிதர்களைப் போன்றவர்கள், பிரமுகர்கள், பிரமுகர்களைப் போன்றவர்கள், - புகழுக்கு ஏங்குகிறவர்கள், பணத்துக்கு ஏங்குகிறவர்கள் - எல்லாருடைய பலவீனமும் அவருக்கு நிறையத் தெரிந்திருந்தது. 'முதலமைச்சர் தன்னைப் பற்றிப் பாண்டுரங்கனாரிடம் எதற்காக விசாரிக்க நேர்ந்தது? - பாண்டுரங்கனார் தன்னைப் பற்றி அவரிடம் நிறைய எடுத்துக் கூறுவதற்கு என்ன இருக்கிறது?' என்பதையெல்லாம் யோசிக்கவே யாருக்கும் அவகாசமிராது. 'ஆகா! இந்தப் பாண்டுரங்கனாருக்குத்தான் எத்தனை பெருந்தன்மை? தான் முதலமைச்சரைப் பார்க்கச் சென்ற போது கூட நம்மை நினைவு வைத்திருந்து மறந்துவிடாமல் அவரிடம் நம்மைப் பற்றி நிறையப் பேசியிருக்கிறார்' - என்று பாண்டுரங்கனாரிடம் எல்லையற்ற விசுவாசம் பெருகும்படியாக அவர் நடந்து கொள்வார். இவ்வளவு சாமர்த்தியமிருந்தும் சுகுணனை மட்டும் அவரால் ஏமாற்ற முடியவில்லை. அவன் அவரை உள்ளும் புறமும் அளந்து வைத்திருந்தான். அவரையும் அவரைப் போன்றவர்களையும் பார்த்து எந்த விதமான கவர்ச்சியும் ஏற்படாததோடு - மேலே பட்டுவிட்டால் அரிக்கக்கூடிய ஒரு கம்பளிப் பூச்சியைப் பார்ப்பது போல் பல சமயங்களில் அருவருப்பு மட்டும் ஏற்பட்டிருக்கிறது அவனுக்கு. ஒரு சமயம் பெரிய மாவுமில் முதலாளியொருவருக்கு அறுபதாண்டு நிறைவு வந்தது. சென்னையைப் போன்ற பெரிய நகரங்களில் யார் யாருக்கு எப்போது மணிவிழாக் கொண்டாட வேண்டும்? யார் யாருக்கு எப்போது ஊர்வலம் விட வேண்டும் - என்று கவனித்துக் கணக்கெடுத்துப் புள்ளி விவரம் போட்டு வைத்துக் கொண்டு - ஏற்பாடுகள் செய்து ஒலிபெருக்கித் திருவிழா ஒன்றை அல்லது முகஸ்துதிக் கொடியேற்றும் பாராட்டுப் பிரம்மோற்சவமொன்றை நடத்துவதற்காகவே காத்திருப்பார்கள் சிலர். அந்த மாவு மில் முதலாளிக்கும் அப்படி ஒரு பிரம்மாண்டமான மணி விழா நடந்தது. எல்லாப் பத்திரிகைகளும் அவருடைய படத்தைப் போட்டு 'இந்திரன், சந்திரன், இளைஞரினும் இளைஞராக நம்மிடையே சுறு சுறுப்பாய் உலாவும் இன்னாருக்கு அறுபதாண்டு நிறைந்துவிட்டதென்பதை நம்பவே முடியவில்லை' - என்றெல்லாம் எழுதியிருந்தன. அந்த மாவு மில் முதலாளியின் மணிவிழாவுக்கு ஒருவாரம் இருக்கும்போது ஒருநாள் பகலில் திடீரென்று பரபரப்பாகப் பூம்பொழில் காரியாலயத்துக்கு வந்து சுகுணனைச் சந்தித்து, "நம் பூம்பொழில் அதிபர் நாகசாமி அவர்களுக்கு நெருங்கிய நண்பரும், பி.எஸ்.கே. ஃபிளவர் மில்ஸின் உரிமையாளருமான ஞானசபாபதிக்கு மணிவிழா வருகிறது. அந்தச் சமயத்தில் நமது பூம்பொழில் இதழில் வெளியிட ஏற்றவாறு ஒரு செய்யுள் புனைந்துள்ளேன்" - என்று சொல்லிக் கொண்டே செய்யுள் எழுதப்பெற்ற தாளை எடுத்துச் சுகுணனிடம் சிரத்தையோடு கொடுத்தார் பாண்டுரங்கனார். அந்தச் செய்யுளை வேண்டா வெறுப்பாக கையில் வாங்கினான் சுகுணன்.
பணியாரம் பசையுடனே பன்ரொட்டி பலப்பலவாய்ச் செய்வதற்கும் சுடுவதற்கும் சரியான மாவுவகை தருகின்றாய் சரிதத்தே நின்புகழ்தான் நின்றுலாவும் பெரியோய் புகழ்க்கெல்லாம் முரியோய் பெருமைமிகு பி.எஸ்.கே. ஃபிளவர்மில்ஸின் திருவார்ந்த செயலதிப பொருட்செல்வா நீ சீராரும் மணிவிழாக்கள் பலவுறுகவே! என்று தகுதியும் காரணமும் நோக்காமல் குருட்டு விசுவாசத்தோடு பாடப்பட்டிருந்த அந்தக் 'கவிதையை' அருவருப்போடு மேஜை மேல் வைத்துவிட்டு அதைப் பாடிய பாவத்துக்குச் சொந்தக்காரரான பாண்டுரங்கனாரை நிமிர்ந்து பார்த்தான் சுகுணன். அப்போது அவனது வெறுப்பையும், அருவருப்பையும் சிறிது கூடப் புரிந்து கொள்ளாதவராய், "இந்தப் பாடலில் ஒரு சிலேடையையும் இருபொருள் அலங்காரமாக வைத்திருக்கிறேன். 'மாவு வகை தருகின்றாய்' - அதாவது மூன்றாம் அடியில் - 'சரியான மாவு வகை தருகின்றாய்' - என்கிற இடத்தில் - மாவு + வகை என்றும் ஒரு பொருள். மா - பெரிய, உவகை - மகிழ்ச்சி, பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறாய் (மா உவகை தருகின்றாய்) என்றும் ஒரு பொருள். சிலேடை எத்தனை நயமாக வந்து விழுந்திருக்கிறது பார்த்தீர்களா சுகுணன்?" - என்று விளக்க உரை வேறு கூறத் தொடங்கிவிட்டார் பாண்டுரங்கனார். சுகுணனுடைய மனத்திலோ அந்தச் செய்யுளையும் பாண்டுரங்கனாரையும் அருவருப்பாக நோக்கும்போதே அதன் மறுபுறமாக உள்ளே ஒரு துணிவும் நக்கீர தைரியமும் கூடப் பெருகின. "ஐயா! இந்த மாதிரித் தனி மனிதர்களைத் தேவைக்கதிகமாகப் புகழும் புகழ்ச்சியைச் செய்யுளாக வேறு எழுத வேண்டிய அவசியமென்ன? பத்திரிகையில் இதைப் பிரசுரிப்பதனால் இந்தப் பாடலில் புகழப்படுகிற மாவரைப்பவரும் அவருக்கு வேண்டியவர்களும் திருப்திபடலாம். இலக்கிய ரசனைக்காகப் பத்திரிகை வாங்குகிறவர்களுக்கு இதனால் பத்திரிகையின் மேல் அவநம்பிக்கையும், ஏமாற்றமும் அல்லவா ஏற்படும்?" - என்று சுகுணன் அவரை வினாவிய போது, அவர் அசடு வழியச் சிரித்தபடி, "ஹி ஹி அதற்கில்லை... இவ்வாறு பயன் மரம் நாடிச் செல்லும் பறவைகள் போல் வள்ளல்களை நாடிப் புகழ்தல் புலவர் மரபு" - என்று மரபைச் சாட்சிக்கு அழைத்தார். "ரொம்ப நல்லது! இந்த மாதிரிப் 'பயன் மரம் நாடிச் செல்லும் பறவைகள்' - 'புலவர் மரபு' - போன்ற வாக்கியங்களையெல்லாம் ஏதாவதொரு தமிழ்த் துணைப்பாட நூலில் எழுதுங்களேன். வீணாக இப்படிப் புகழ் பாடுதலில் இறங்காதீர்கள் ஐயா!" - என்று சிரித்துக் கொண்டே அவருக்குப் பதில் சொல்லிவிட்டு அந்தக் 'கவிதை'யையும் திருப்பிக் கொடுத்து அனுப்பியிருந்தான் சுகுணன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சிறிது காலம் பாண்டுரங்கனார் சுகுணனைப் பார்க்க வருவதற்குத் துணிவின்றியோ என்னவோ - வரவேயில்லை. அதற்குப் பிறகு 'ஆகாச வாணியில்' காலை வேளையில் அவருடைய கட்டைக் குரலில் அருள் வாக்கு ஒலிப்பதைத் தெருவில் போகும்போதோ கண்ணப்பா லாட்ஜின் எதிர்வீட்டு மாடியில் அதிகாலை ரேடியோ அலறும் போதோ, கேட்க நேருகையில் கம்பளிப்பூச்சி அரிப்பது போலப் பாண்டுரங்கனாரின் ஞாபகம் இலேசாக வந்து போகும். இப்போது இந்த முன்னிரவின் சுகமான வேளையை எல்லாம் பாண்டுரங்கனாரின் 'போரில்' சிக்கிக் கழிக்க வேண்டியிருக்குமோ என்று சுகுணன் வருந்தினான். அன்போடும், பிரியத்தோடும், 'ரூஃப்கார்டனில்' விருந்துண்ண அழைத்த துளசியின் அழைப்பைப் புறக்கணித்து மறுத்தனுப்பிய பாவம் தான் இப்படி உடனே பலித்துப் பாண்டுரங்கனாரின் வருகையாக நேர்ந்து விட்டதோ என்று கூட எண்ணினான் அவன். "வந்த காரியத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்கள் ஐயா! எங்கே இப்போதெல்லாம் இந்தப் பக்கத்தில் தென்படுவதேயில்லை? அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பிக்கள், டெப்டி செகரெட்டரிகள், எல்லாரும் நிறைய நண்பர்களாகிவிட்டார்கள் போலிருக்கிறது. அதனால் தான் சாதாரணமானவர்களுடைய கண்களில் படவே மாட்டேனென்கிறீர்கள்?" - என்று குத்தலாகக் கேட்டபோது அவனுடைய அந்தக் கேள்வியை அவர் எந்த விதத்திலும் குத்தலாகவோ நையாண்டியாகவோ எடுத்துக் கொண்டு தயங்கவேயில்லை; பெருமையுடனேயே பதில் சொன்னார். "அதையேன் கேட்கிறீர்கள்? 'பை - எலக்ஷனில்' - அதாவது துணைத் தேர்தலில் நின்றால் வெற்றியா, தோல்வியா என்று அறிந்து கொள்வதற்காக - உதக மண்டலத்துக்கே அழைத்துக் கொண்டு போய்விட்டார் ஒரு நண்பர். அங்கே ஒரு தனி பங்களாவிலே மூன்று நாள் கைரேகை எல்லாம் பார்த்து உறுதியாக நிற்கலாமென்று தெரிவித்த பின்புதான் அந்த நண்பருக்குத் தேர்தலில் நிற்பதற்கே துணிவு வந்தது..." "தேர்தலிலே வெற்றி பெறக் கைரேகை பார்ப்பதை விடப் பொது மக்களின் நம்பிக்கையும் விசுவாசமும் யார் பக்கமிருக்கிறதென்று பார்ப்பதல்லவா முக்கியம்?" - என்று சுகுணன் கேட்ட கேள்விக்கு அவர் மறுமொழி கூறவில்லை. வேறு எதையோ பேசத் தொடங்கினார். "அதிருக்கட்டும்! நான் இப்போது வேறு ஒரு காரியமாக உங்களிடம் வந்தேன். திருவல்லிக்கேணி 'பைந்தமிழ் மன்றத்தின்' சார்பில் வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலையில் 'பல்பத்திரிகைக் காவலர்' நாகசாமியைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தும் விழா ஒன்று நடக்க ஏற்பாடாகி வருகிறது. அமைச்சர் தலைமை தாங்குகிறார். காலை மலர் சர்மா அவர்கள் வரவேற்புக் குழுத் தலைவராயிருக்கிறார். நீங்களும் அந்த விழாவில் நாகசாமியைப் பாராட்டிச் சொற்பொழிவு ஆற்ற வேண்டும். மறுக்காமல் அவசியம் ஒப்புக் கொள்வீர்களென்று நினைக்கிறேன்." "சொற்பொழிவாற்றுவது இருக்கட்டும் ஐயா! அதென்னவோ 'பல்பத்திரிகைக் காவலர்' - என்று நாகசாமியின் பெயருக்கு முன்னால் ஏதோ ஓர் அடைமொழி கூறினீர்களே; அதற்கென்ன அர்த்தம்?" "அதுவா? விழா நிகழும் நாளில் நாகசாமி அவர்களுக்குப் பொது மக்கள் சார்பில் நாங்கள் ஒரு சிறப்புப் பட்டமளிக்கப் போகிறோம். அப்பட்டமே 'பல்பத்திரிகைக் காவலர்' - என்பது" "சொல்வதற்கு என்னவோ போலிருக்கிறதே! 'கல் வைத்த மூக்குத்தி' - என்பது போல் நீங்கள் அவசரமாகச் சொல்லிய போது என் காதில் இது விழுந்தது. அதனால் தான் இரண்டாம் தடவையாகக் கேட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள்" - என்று சொல்லிப் பிரிவதற்கு அடையாளமாகக் கையையும் கூப்பி விட்டுச் சுகுணன் அவரிடமிருந்து விடைபெற்று மெஸ்ஸுக்குச் செல்ல முயன்ற போதும் அவர் அவனை அவ்வளவு சுலபமாக விடவில்லை. "சொற்பொழிவுக்கு என்ன சொல்லுகிறீர்கள்? நிகழ்ச்சி நிரலில் உங்கள் பெயரையும் சேர்த்து அச்சிட்டு விடுகிறேனே..." "சொற்பொழிவைப் பற்றி என்ன? நாங்களெல்லாம் நாகசாமியின் நிறுவனத்திலேயே இருப்பவர்கள். நாங்களே நான் முந்தி நீ முந்தி என்று அவரைப் புகழ்வது நன்றாயிராது. புகழ்கிற காரியத்தை அருகிலேயே இருந்து பார்த்து பழகியவர்களிடம் ஒப்படைப்பதை விடப் பார்க்காத புதியவர்களிடம் ஒப்படைப்பது தான் பத்திரமானது..." - என்று சொல்லிக் கொஞ்சம் விஷமத் தனமான புன்முறுவலுடனேயே அந்த வேண்டுகோளை அவரிடம் மறுத்தான் சுகுணன். "இல்லை! இல்லை! அவசியம் நீங்கள் உரையாற்ற வேண்டும்" - என்று மன்றாடினார் பைந்தமிழ் நாவலர். "என்னவோ நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். அப்புறம் உங்கள் விருப்பம்" என்று நாசூக்காக அவரிடமிருந்து அவர் விடை கொடுப்பதற்கு முன்பே வலியக் கத்தரித்துக் கொண்டு மெஸ்ஸை நோக்கி நடந்து விட்டான் சுகுணன். மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு சொற்பொழிவாற்ற இணங்கிடவும் முடியாமல், கண்டிப்பாக முடியாது என்று சொல்லி மறுக்கவும் முடியாமல் அவன் தயங்கும்படியான வேண்டுகோளை அவனிடம் விடுத்திருந்தார் பாண்டுரங்கனார். 'என்னால் பேசமுடியாது, மாட்டேன்' என்று நேரடியாக மறுத்து விட்டால், 'உங்கள் விழாவில் நாலு வார்த்தை பேசச் சொன்னேன். மறுத்துவிட்டார்' - என்று நாகசாமியிடமே போய்த் தீ மூட்டுவார் பாண்டுரங்கனார். பேசுவதற்கோ அவனுக்கு விருப்பமில்லை. நிறுப்பதற்கு ஒரு சாதனையுமில்லாமல் மற்றவர்களின் சாதனைகளைத் தன் பெயரில் பணம் கொடுத்து வரவழைத்துக் கொண்டு அதற்காக வெட்கப்படாமல் நிமிர்ந்து நடக்கிறவர்களைச் சுயநலத்துக்காகச் சிலர் பாராட்டுவதும் பட்டம் கொடுப்பதும் போலியான காரியமென்று அவற்றை வெறுத்தான் அவன். நாகசாமிக்காக நடைபெறும் இந்தப் பாராட்டு விழாவிற்கான சகல செலவுகளையும் பாண்டுரங்கனார் நன்கொடை என்ற பெயரில் நாகசாமியிடமே வசூல் செய்திருப்பார் என்பதும் இரகசியமாக அவனுக்குத் தெரியும். இப்படி நிகழ்ச்சிகளையும், இப்படி மனிதர்களையும் சந்திக்கும் போது அல்லது கேள்விப் படும்போது சமூகம் எந்த மூலையிலோ அழுகியிருக்கிறது என்ற அதே எண்ணம்தான் அவனுள் உறுதிப்பட்டது. இந்தப் போலிகளை எதிர்த்து உரத்த சப்தமிட்டுப் பட்டினம் முழுவதும் கேட்கும்படி - பெரிய அபாயச் சங்கு போன்ற குரலில் உண்மையைப் பெரிதாய் முழங்கிக் கூற வேண்டுமென்று அவனுள் ஒரு தைரியம் குமுறியது. அதே சமயம் அந்தத் தைரியத்துக்கு எதிராக எங்கெங்கிருந்து நெற்றிக்கண்கள் திறக்குமென்று சிந்தித்த போது தயக்கமாகவும் இருந்தது. மறுநாள் காலை அவன் அலுவலகத்துக்குள் நுழைந்து அறையில் போய் அமர்ந்ததுமே ரங்கபாஷ்யம் மானம், வெட்கம் எல்லாவற்றையுமே அறவே துடைத்தெறிந்து விட்டது போன்ற ஒரு வியாபாரப் புன்முறுவலோடு, "லெட் அஸ் ஃபர்கெட் தி பாஸ்ட்... நான் ஏதாவது தப்பாகப் பேசியிருந்தால் மன்னிச்சுடுங்கோ... நீங்களும் பத்திரிகையின் நன்மைக்காகத்தான் பாடுபடறேள். நானும் அதுக்காகத் தான் சிரமப்படறேன். நமக்குள்ளே சண்டை கூடாது" என்று வந்து குழைந்தார். அவருடைய இந்தக் குழைவுக்கு அர்த்தமே இல்லை என்பது சுகுணனுக்கு நன்றாகத் தெரியும். எதிரியின் மனத்தில் பகையை அறவே அமுக்கிவிட்டு எதிரி முன்னெச்சரிக்கையோ, பாதுகாப்போ அற்றிருக்கும் போது அவன் மேல் முழுப்பகையோடும் வைரத்தோடும் பாய்வது போன்ற அந்தரங்கக் குரோதத்தில் ரங்கபாஷ்யம் கெட்டிக்காரர். யாரிடமும் வெளிப்படையாக 'அன்பாபுலராகிக்' கெட்ட பெயரெடுக்கக்கூடாது என்று நினைக்கிற விளம்பர மனம் அவருடையது. "எப்படி இதில் நினைப்பதற்கு ஒன்றுமில்லையோ அப்படியே மறப்பதற்கும் ஒன்றுமில்லை... உங்கள் காரியத்தை நீங்கள் செய்கிறீர்கள், என் கடமையை நான் செய்கிறேன்" என்று சுருக்கமாக அவருக்குப் பதில் சொல்லி அனுப்பினான் சுகுணன். ஒருவனை நேரடியாக எதிர்க்கவோ, பகைத்துக் கொள்ளவோ கூடத் திராணியில்லாத கோழைத்தனமான கெட்டவர்கள் தான் பட்டணத்தில் நிறைய இருக்கிறார்கள் என்று தோன்றியது. நண்பனைப் போலவும், வேண்டியவனைப் போலவும் பழக வசதி செய்து கொண்டு - அந்த வசதியின் மறைவில் உள்ளேயே இரகசியமாகப் பகையை வளர்த்துத் திடீரென்று ஆளை வீழ்த்தும் சில கொடிய நோய்களைப் போல் உருவாகும் நாகரிக எதிரிகளே எங்குமிருப்பதாகத் தோன்றியது சுகுணனுக்கு. ரங்கபாஷ்யத்தின் விரோதத்தை அவன் எப்படி பொருட்படுத்தி மதிக்கவில்லையோ அப்படியே சமரசத்தையும் பொருட்படுத்தி மதிக்கவில்லை. ரங்கபாஷ்யம் எவ்வளவு கெட்டிக்காரர் என்பது அவர் வந்து விட்டுப் போன பத்து நிமிஷங்களுக்குள்ளேயே தெரிந்தது. முதல் நாள் நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிடாமல், ஆனால் முதல் நாள் நிகழ்ச்சியின் விளைவாகவே வந்தது போல் நாகசாமியின் கையெழுத்திட்டு ஒரு சுற்றறிக்கை வந்திருந்தது. அதில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் விளம்பர இலாகாவைச் சேர்ந்தவர்களோடு மரியாதையோடும் கண்ணியத்தோடும் ஒத்துழைத்து காரியாலயத்தின் விளம்பர வருவாய் பெருகுவதற்கு உதவி செய்ய வேண்டுமென்றும், விளம்பர இலாகாவோடு ஒத்துழைக்க மறுத்து முரண்படுகிறவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கக் காரியாலயத்தாருக்கு உரிமை உண்டென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பதினோரு மணிக்கு ரங்கபாஷ்யம் சுகுணனுடைய அறையில் வந்து சமரசம் செய்து கொள்வது போல் பேசிவிட்டுப் போயிருந்தாரென்றால் பதினொன்றடித்த பத்தாவது நிமிஷத்தில் ரங்கபாஷ்யத்திற்குச் சிறிதும் இதில் சம்பந்தமே இல்லாதது போல் நாகசாமியிடமிருந்து இந்த அறிக்கை வந்திருந்தது. இந்த அறிக்கையைத் தயார் செய்து அனுப்பும்படி நாகசாமியிடம் யோசனை கூறித் தூண்டி எல்லாம் செய்துவிட்டுத் தனக்கு இதில் சம்பந்தமே இல்லாதது போலவும் தான் யாரையுமே பகைத்துக் கொள்ள விரும்பாத - பயந்த சுபாவமுள்ள அப்பாவி போலவும் வந்து மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போன ரங்கபாஷ்யத்தின் முகத்தை மறுபடியும் நினைவு கூற முயன்றான் அவன். அப்படி முயன்ற போது அந்த முகத்தில் பசுத்தோல் விலகி ஓர் ஓரமாகப் புலியின் கொடுமை இலேசாகத் தெரிந்தது. 'மனிதர்களின் ஒரே திறமை 'சாகஸம்தான்' என்ற உண்மை பட்டினத்துக்கு எவ்வளவு பொருத்தமான மதிப்பீடு!' என்றெண்ணினான் அவன். தைரியம், புத்தி, நேர்மை, சத்தியம் எல்லாம் மனித குணங்கள் என்ற நிலைமை மாறிப் போய் என்ன குணம் என்று சொல்ல முடியாத - நல்லதா கெட்டதா என்று உறைத்துப் பார்த்து மாற்றுக் கண்டு பிடிக்க முடியாத சாகஸம் தான் நாகரிக மனிதனின் பொதுக் குணமாயிருப்பதாக உணர முடிந்தது. இந்தச் 'சாகஸமே' இப்படிப்பட்ட நகரங்களில் மனிதனின் ஒப்புயர்வற்ற 'திறமையாகப்' புகழப்படுகிறது இந்த சாகஸத்தில் வல்லவர்களாயிருக்கிற அரசியல்வாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பிரமுகர்கள், வியாபாரிகள் எல்லாரும் பட்டணமாகிய கடைவீதியில் நல்ல 'ஷோகேஸில்' வைத்து விற்கப்படுகிறார்கள். மற்றவர்கள் விலையாவதில்லை. மற்றவர்களுடைய அசல் திறமையும் அசல் உழைப்பையும் இந்தச் சாகஸங்களைப் போல் விரைந்து கவர்ச்சி செய்வதில்லை என்று சிந்தித்து மனம் நொந்தான் சுகுணன். திறமை தோற்று வெறும் சாகஸம் மட்டுமே வெல்கிற சமூகம் எவ்வளவிற்கு அழுகியிருக்க முடியுமென்பது எண்ணியபோது அந்த அழுகலை அளவிட முடியாது போல் தோன்றியது அவனுக்கு. ரங்கபாஷ்யமும், நாகசாமியும், பாண்டுரங்கனாரும், சந்திரசூடன் ஐ.சி.எஸ்.ஸும் கள்ளக் கடத்தல் கண்ணப்பாவும் இந்த விதமான சாகஸங்களின் வேறு வேறு உருவாக நின்று சமூகத்தை மயக்கும் கலையில் தேர்ந்துவிட்டவர்களாக அவனுக்குத் தோன்றினார்கள். இவர்களை எதிர்க்கும் பாமரர்களின் சத்தியம் கூட இவர்களது அசத்தியத்தை ஒன்றும் செய்ய முடியாது போலிருக்கிறதே என்று எண்ணியபோது அந்த ஆற்றாமை எண்ணத்தையே ஏற்று ஒப்புக் கொள்ள முடியாமலும் அவன் மனம் கொதித்தது. |