14 ஆம்ஸ்டர்டாமிலிருந்து சிவவடிவேலு எழுதின ஒரு ஏர்மெயில் கடிதத்தில் குருபுரம் நிலவரங்களைப் பற்றி எதுவுமே தெரியாமல், ‘நான் வந்து சேருகிறவரை மேற்கொண்டு நஷ்டமில்லாமல் எப்படியாவது பார்கவியை இழுத்துப் பறித்து நடத்தி வாருங்கள். மகாஸ்ரீ குப்தா சொல்லும் புதிய யோசனைகளை நான் வந்தபின் அமுல் பண்ணலாம்,’ என்று ஆடிட்டருக்கு ஒரு குறிப்பு எழுதியிருந்தார் சிவவடிவேலு. அதை எல்லோரும் படித்துச் சிரித்துக் கொண்டார்கள். இந்த மூன்று நான்கு மாதங்களுக்குள் பெரிய யுகப் புரட்சியே நடந்த மாதிரி மாறுதல்கள் நடந்து பார்கவி நியூ பார்கவி ஆகி லாபம் கொழித்துக் கொண்டிருக்கும் விஷயம் தெரியாமல் சிவவடிவேலு ‘அதைச் செத்து விடாமல் காப்பாற்றிக் கொண்டிருங்கள்! நான் வந்து முழுக்கவும் பிழைக்க வைத்துக் கொள்கிறேன்’ என்பது போல எழுதியிருந்தது வேடிக்கையா யிருந்தது. சில படத்தயாரிப்பாளர்கள் திரையில் டைட்டில் காண்பிக்கும் போதே, ‘இந்தப் படத்தின் தயாரிப்புக் காலத்தில் எங்களோடு பெரிதும் ஒத்துழைத்த குருபுரம் நியூ பார்கவி உரிமையாளருக்கும் ஊழியர்களுக்கும் நன்றி கூறக் கடிமைப் பட்டிருக்கிறோம்’ - என்றும் சேர்த்துக் காட்டவே விளம்பரமாகி விட்டது. பேர் பெரிதாகி இருந்தது. பார்கவி பிரபலமாகி இருந்தாள். மதுரையில் அப்படியும் இப்படியுமாகத் தொடர்ந்து போராட்டம் கதவடைப்பு என்று குமாரி பார்கவியின் கல்லூரி வதைப்பட்டாலும் ஒருவழியாக ஃபைனல் பரீட்சை எழுதி விட்டாள் அவள். கல்லூரிக்கு ‘குட்பை’ சொல்லியாயிற்று. சுஷ்மா குப்தாவுடன் பழக ஆரம்பித்ததிலிருந்தே அவளிடம் பல இனிய மாறுதல்கள் நிகழத் தொடங்கியிருந்தன. குமரேசனின் பாஷையில் மாறுதல் என்பது வளர்ச்சியின் ஆரம்பம். அதுவும் அவள் சுஷ்மாவுடன் சிம்லாவுக்குப் போய்ச் சில நாட்கள் இருந்துவிட்டு வந்ததும் சில நளினமான மாற்றங்கள் பார்கவியிடம் தென்பட்டன. தனக்குத் தானே புதுமாதிரி உடுத்தி அழகு பார்த்துக் கொண்டாள். சின்னதும் பெரிதுமாக இந்திப் பட ட்யூன்களை ‘ஹம்மிங்’ செய்ய ஆரம்பித்தாள். நிறைய அடிக்கடி ஆங்கிலத்திலும் கொஞ்சம் இந்தியிலும் உரையாடத் தொடங்கினாள். திடீரென்று அழகாகி இருப்பது போல் அவள் தோற்றத்தில் ஒரு செழுமை தெரிந்தது. நியூ பார்கவியின் திறப்பு விழாவுக்குச் சுஷ்மாவின் தம்பி அஜித்குமாரும், அவனுடைய வயதான நோய்வாய்ப்பட்ட தந்தை குருசரனும் வந்து இரண்டு மூன்று நாட்கள் குருபுரத் தில் தங்கிய போது பார்கவி அஜீத்திடம் இழைவதைக் குமரேசன் கவனித்தான். அந்த இரண்டு மூன்று நாள் நெருக்கம் அதற்கு முந்திய நெருக்கத்தின் தொடர்ச்சி போலக் குமரேசனுக்குத் தோன்றியது. சுஷ்மா குப்தாவோடு அவளுடைய உடல் நலங்குன்றிய தந்தை குருசரணைப் பார்ப்பதற்காகப் பார்கவி முதல் முதலாகச் சிம்லா சென்ற போதே இந்த நெருக்கம் ஏட்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.
குப்தா, தண்டபாணி, ஆடிட்டர் எல்லாருமே இந்தப் புதிய நெருக்கத்தைக் கவனித்தார்கள். இவர்களில் யாரும் இதைக் கண்டிக்கிற - அல்லது பொறுக்க முடியாத மனப்பான்மை உள்ளவர்கள் இல்லை என்பதால் இது எந்தப் பாதிப்பையும் உண்டாக்கவில்லை. சிவவடிவேலுவோ ஆச்சி என்று எல்லாரும் மரியாதையாக அழைக்கும் திருமதி சிவவடி வேலுவோ அப்போது ஊரில் இருந்திருந்தால்தான் இது கொஞ்சம் கசமுசா ஆகி வெடிக்கும் போன்ற நிலைமையைத் தவிர்த்திருக்க முடியாது.
நல்லவேளையாகப் பிரதேசம், மாநிலம், திசை, மொழி எல்லாம் கடந்த இந்தக் காதல் அரும்பத் தொடங்கிய சமயத்தில் சிவவடிவேலு இந்த நாட்டிலேயே இல்லை. ஆச்சியும் அவரோடு போயிருந்தாள். ஓர் இளம் பெண்ணும், ஆணும் கலகலப்பாகச் சிரித்துப் பேசிப் பழகுவது என்பது அப்படி ஒன்றும் மன்னிக்க முடியாத குற்றமில்லை என்று நினைக்கிற தாராள மனசு உள்ள இந்தக்கால மனிதர்களே சுற்றிலும் இருந்ததால் அஜீத் பார்கவி விவகாரம் எந்தத் திருப்பத்திலும் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை. “அஜீத்துக்கு நம்ம பார்கவியின் மேலே, ரியல் இண்ட்ரெஸ்ட் இருக்கு சார்!” என்று திறப்பு விழாவன்று குமரேசன் ஆடிட்டரிடம் சொன்ன போது பார்கவிக்கு அவன் பதினைந்து லட்சம் கடன் கொடுத்திருப்பதை எண்ணித்தான் சொல்லி யிருந்தான். அதை வேறு மாதிரிப் புரிந்து கொண்ட ஆடிட்டர், “இருக்காதா பின்னே? ரொம்பப் பிரியமாப் பழகறாங்க ரெண்டு பேரும்,” என்று சிரித்தபடியே ஆரம்பித்தார். குமரேசனும் சிரித்தான். அதை ரசிக்கவும் செய்தான். “அப்பா இப்போ இங்கே இருந்தாச் சினிமா ஆளுங்களை ஓட்டலுக்குள்ளேயே நுழைய விட்டிருக்க மாட்டார்,” என்றான் குமரேசன். “லாபத்தையே மூணு வருசமா இந்த ஓட்டலுக்கு உள்ளே நுழைய விடாம வச்சிருந்தாரே அப்பா?” என்று தண்டிபாணி கிண்டல் பண்ணினான். “அவரு கவனிப்பிலே பார்கவி இருந்தப்போ ஒவ்வொரு பில்லிலேயும் ரசீதிலேயும் ‘சிவமயம்’ ‘விநாயகர் துணை’ன்னு போட்டுட்டுத்தான் கரும்பாயிரம் மத்ததை எழுதவே ஆரம்பிப்பாரு.” “இப்போ நீ ‘சினிமா மயம் - புரொட்யூஸர் துணை’ன்னு போடறியாக்கும்?” என்று குமரேசனை வம்புக்கு இழுத்தார். “எப்படிப் போடறமோ போடலியோ நஷ்டத்திலே இருந்த தொழிலை நாலே மாசத்திலே சும்மா குட்வில்னு கேட்டாக் கூட விலைக்கு மேலே பத்துப் பன்னிரண்டு லகரம், கேட்கிற மாதிரிப் பண்ணிட்டமா இல்லியா சார்?” “அது சரிப்பா. நீ நாலு மாசத்திலேன்னு சொன்னதும் தான் நினைவு வருது, அப்பா வர்ற நாளு நெருங்குது. அந்த மாதவி டூர்ஸ் மெட்ராஸ் ஆபீஸுக்கு ஃபோன் பண்ணி உங்கப்பா வர்ற தேதியை விசாரிக்கணும்,” என்று ஆடிட்டர் ஞாபகப்படுத்தினார். “இந்த ஃபாரின் டூர் எங்கப்பாவை ஏதாச்சும் மாத்தி யிருக்கும்னு நெனைக்கிறீங்களா? ஒரு அங்குலம்கூட மனசு அகலமடைஞ்சிருக்காது. நான் வேணும்னாச் சேலஞ்ச் பண்றேன். காசிக்குப் போயும் கர்மம் விடலேங்கிற மாதிரி எப்ப அத்தினி தூரம் போயும் ‘கரும்பாயிரத்துக்கு அன்பைச் சொல்லவும்’னு மனுசன் எழுதினாரோ, அப்பவே புரிஞ்சு போச்சு சார்!” “அட உனக்குக் கோபம்லாம் அவர் உன்னை விசாரிச்சு எழுதலேங்கிறதுதானே? இல்லியா?” என்று ஆடிட்டர் கிண்டலில் இறங்கியதும், “என்னையோ குமரேசனையோ எங்கப்பா மனுஷங்களாகவே மதிக்க மாட்டார்ங்கிறதுதான் ஊரறிஞ்ச விஷயமாச்சே?” என்று தண்டபாணி தம்பிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்தான், “சரி! இந்த நல்ல நேரத்துலே எதுக்கு வீண் கசப்பான பேச்சு? சப்ஜெக்ட்டை மாத்து. அப்பாவை அஜெண்டாவில இருந்து தூக்கு. அந்த இடத்திலே குப்தாவைப் போடு. குஷியா அவரைப் பத்திப் பேசலாம். பார்கவி எக்ஸ்பான்ஷன் பற்றி முன்னலே பாதி பேசினதோட நிக்குது. குப்தா எங்க இருக்கார்? எப்ப வருவார்? அவர் வந்ததும் எக்ஸ்பான்ஷன் விஷயமா மறுபடி யோசிக்கணும்,” என்றான் குமரேசன். “குப்தா, இன்னிக்கு அகமதாபாத்திலே இருக்கணும்! அங்கே ஒரு டெக்ஸ்டைல் இண்டிஸ்ட்ரீ ‘லாக் அவுட்’. அது சம்பந்தமா அந்த இண்டஸ்ட்ரியோட உரிமையாளர்களுக்கு யோசனை கூறப் போயிருக்கார். அது முடிஞ்சதும் அங்கேயிருந்து நேரே டில்லி போயிட்டு அப்புறம் இங்கே வர்றேன்னிருக்கார்,” என்றான் தண்டபாணி. ஏற்கெனவே இருந்த அறைகள், இப்போதுள்ள ஏ.சி. சூட்கள் ஆகியவற்றிற்கே ஆள் வருமா என்று முதலில் பயந்தது போகப் பக்கத்திலேயே ‘நியூ பார்கவி - அனெக்ஸ்’னு இன்னொரு மூணு மாடி கட்டினாலும் ஃபுல் ஆகும் போலிருந்தது. ஹாலிடே, ஓய்வு, பில்கிரிமேஜ், சினிமாத் தயாரிப்பு, பார்கவியின் ரெஸ்டாரெண்டில் பெண்களே பரிமாறும் அழகு, எல்லாமாகச் சேர்ந்து குருபுரத்தையே கேந்திரமாக்கி இருந்தன. அந்த நாளில் பழைய கிராமாந்தரத்துக் கல்யாணங் களுக்குக் கிணற்றடியில் கொல்லைப் பக்கம் நீளமாகக் குழி தோண்டிக் கோட்டை அடுப்பு என்று டன் டன்னாக விறகுக் கட்டையைப் போட்டு எரித்துச் சமையல் பண்ணுவார்களே அது போல், கோட்டையடுப்பும் விறகு போட்டு எரிக்கும் முறையும்தான் பழைய பார்கவியில் இருந்தன. அதனால் சமையலறை புகை மயமாகக் கரி படிந்து இருண்டிருக்கும். ரூம்களில்கூடச் சமையல்கட்டுப் புகை அடித்து மூச்சுத் திணறும். இதனால் கட்டிய முதல் வருடக் கடைசிக்குள்ளேயே பாதிக் கட்டிடங்கள் மங்கிக் கறுத்திருந்தது. கெட்டுப் போயிருந்தது. இவர்கள் ‘நியூ பார்கவி’யாக மாற்றிய போது அந்தக் கோட்டை அடுப்புக்களை இடித்துவிட்டு காஸ் அடுப்பு வரிசை களை உருவாக்கியதால் கட்டிடம் பிழைத்தது. குருபுரத்தில் காட்டு விறகும் கரியும் கொஞ்சம் மலிவு என்பதால் சிவவடி வேலுவும் காதில் பூச்சுற்றிக் கொண்ட கரும்பாயிரமும் கோட்டையடுப்பைக் கட்டியிருந்தார்கள். இப்படிச் சிவவடிவேலுவை வெளிநாடு அனுப்பிவிட்டுக் கரும்பாயிரம் வகையறாக்களை வெளியே அனுப்பிவிட்டு இந்த மாறுதல்களை வேகமாகச் செய்ய முடிந்ததுபோல் அவர்களை வைத்துக்கொண்டு வேகமாகச் செய்ய முடியாது என்பதை இப்போது மாறுதல் நடந்தபின் சம்பந்தப்பட்ட அனைவருமே உணர்ந்திருந்தனர். “சிவவடிவேலுவின் பையன்கள் எவனோ ஒரு வட நாட்டு ஆசாமியின் ஒத்துழைப்போடு கேரளாவிலிருந்து பொம்பளைங்களை வரவழைச்சு என்னென்னமோ பண்ணிப் பழைய பார்கவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் கெடுத்து விட்டார்கள். தண்ணியும், பொண்ணுங்களுமா பார்கவியிலே எல்லாம் சினிமாக்காரனுவளாத் தங்க ஆரம்பிச்சிட்டாங்க. முதலாளி மட்டும் இப்ப இங்கே இருந்து இதைப் பார்த்தாங்கன்னா அப்படியே கண்ணுலே ஜலம் விட்டு அளுவாக!” என்று கொஞ்ச நாள் பேசிப் பேசி அலுத்து அப்புறம் ஓய்ந்து போனான் கரும்பாயிரம். அவன் பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. தான் மாதவி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் மூலம் சிவவடிவேலுவுக்கு அனுப்பிய கடிதம் கிடைத்துத் தன் விஷயமாக அவர் ஆடிட்டர் அனந்துக்கு அல்லது வேறு யாருக்காவது கடிதம் எழுதித் தன்னைக் காப்பாற்றுவார் என்று கரும்பாயிரம் காத்திருந்தது வீணாயிற்று. அவனும், தவசிப் பிள்ளையும், பழைய பார்கவியின் ஸ்டோர் கீப்பரும், விலக்கப்பட்ட வேறு சிலரும் சேர்ந்து மலை மேல் ஆஞ்சநேயர் கோயில் வாசலில் ஒரு கேன்டீன் திறந்தனர். கோவிலுக்காக மலை மேல் வந்து போகிற கூட்டத்தைச் சமாளிக்க அது மாதிரி ஒன்று தேவையாகவும் இருந்தது. வியாபாரம் தான் ஸ்டடியாக இல்லை. ஒரு நாள் ஆயிரம் ரூபாய் இன்னொரு நாள் எண்ணூறு ரூபாய் என்று முன்னும் பின்னுமாக வந்தது. எப்போதும் போல் வலது காதில் பூவும் வில்வமும் நெற்றியில் விபூதி சந்தனம் குங்குமமுமாகப் பார்கவியில் உட்கார்ந்திருந்து வியாபாரத்தை ஓட்டினான். தவசிப் பிள்ளை மலையில் கிடைக்கிற விறகுகளில் தாராளமாக அடுப்பெரித்து இட்டிலிப் பானையை ஏற்றி இறக்கினார். மலை மேலே வியாபாரம் டல்லாயிருந்த நாட்களில் இரண்டு பேரும் பழைய பார்கவி நாட்களை அசை போட்டனர். “ஓய் பண்டாரம்! (இப்படித்தான் கரும்பாயிரத்தைத் தவசிப் பிள்ளை வழக்கமாக அழைப்பார்) நீரு அந்தப் பயலுக காதிலே பூ வைக்கப் பார்த்தீரு! அவனுக நம்ம காதிலேயே பூச்சுத்திப் போங்கடான்னு இப்படி வெளியிலே துரத்தி விட்டுட்டானுவ.” “இதா பாரும் தவசிப் பிள்ளை! எங் காதிலே எவனும் பூச்சுத்திவிட முடியாதுன்னேன். நெனைவு தெரிஞ்ச நாளிலேருந்து இன்னொருத்தன் பூச்சுத்த வழியில்லாமே நானே என் காதிலே பூ வச்சுக்கிடுதேன். சிவவடிவேலு முதலாளி மட்டும் வரட்டும். பசங்களை என்ன பாடு படுத்தப் போறார்னு நீரே உம்ம கண்ணுலே பார்க்கத்தான் போறீரு!” “அதெல்லாம் ஒரு பாடும் படுத்த மாட்டாரு! வீணா நீரு கனாக் கண்டுக்கிட்டிருக்கீரு. பசங்க பார்கவியை ஃபைவ் ஸ்டார் ஓட்டல் கணக்கா ஆக்கிப் பழைய கடனை எல்லாம் அடைச்சி லாபத்திலே கொண்டு போயிட்டிருக்காங்க... சிவவடி வேலு இதைப் பாத்தே அசந்து போயிடப் போறாரு...” “இருக்கலாம் தவசிப் பிள்ளே! ஆனாலும் இந்தப் பொம்பிளைங்க விஷயம் அவருக்குப் பிடிக்காது. ஒரே சினிமாக்காரனா வந்து தங்கறானுவ. அதுவும் அவருக்குப் பிடிக்காது.” “அட சும்மா இரும்யா! என்னமோ பொம்பிளை பொம்பிளைன்னு கரிச்சுக் கொட்றீரே. அவளுகளை ரொம்ப மரியாதையாத் தனி வீடு எடுத்துக் குடுத்துத் தங்க வச்சிருக் காங்க. நல்ல சம்பளம், போனஸ் எல்லாம் தர்றாங்க. டூட்டி முடிஞ்சதும் அதது தான் தங்கற வீட்டுக்குப் போயிடுது. ஒரு பொண்ணு அங்க நின்னிச்சு, இங்கே நின்னிச்சு அவனோட தங்கிச்சு, இவனோட தங்கிச்சுன்னு எவனும் நாக்குமேலே பல்லுப் போட்டுப் பேசிற முடியாது. இதிலே கொறை சொல்ல என்னய்யா இருக்கு? சும்மாச் சொல்லக் கூடாது. அந்தக் குமரேசன் பயலும் தண்டபாணியும் அந்தக் கேரளப் பொண்ணு களை அக்கா தங்கச்சி மாதிரித்தான் நடத்தறாங்க.” “நீரே சர்டிபிகேட் எழுதிக் குடுப்பீரு போலிருக்கே?” “என் சர்டிபிகேட் அவங்களுக்கு எதுக்குப் பண்டாரம்? நீ சொல்ற மாதிரிச் சிவவடிவேலு மொதலாளி திரும்பி வந்து இவங்களை என்னமோ பண்ணிடுவாருன்னு நான் நெனைக்கல்லே. வேணும்னா தனக்கு இல்லாத பிஸினஸ் சாமர்த்தியம் தன் பையங்களுக்கும் பொண்ணுக்கும் இருக்கிறதைப் பார்த்து வெட்கப்பட்டுக்குவாரு.” “உனக்குத் தெரியாது தவசி! பெரியவருக்கு இதெல்லாம் பிடிக்காதுப்பா. இந்தப் பார்கவி அந்தக் குப்தாவோட மச்சான் ஒருத்தன் அஜீத்னு வந்திருந்தானே அவனேட சுத்துதாம். இந்தக் குமரேசன் பய கேரளாவிலே இருந்து வந்திருக்கிற குட்டிங்களிலே படு ஷோக்கா இருக்கிற ஒண்ணோட ரொம்ப இழையறானாம்.” “போயிட்டுப் போறாங்க! அதைப் பார்த்து உனக்கு ஏம்பா பத்திக்கிட்டு எரியுது? நீ நினைக்கிற மாதிரி சிவவடி வேலு அதையெல்லாம் கண்டுக்க மாட்டாரு. பணம் இருந்தா மத்ததெல்லாம் அவருக்கு மறந்துடும்.” மலை மேல் தாங்கள் புதிதாக வைத்திருக்கும் கான்டீனில் ஈயாடுகிற சமயத்தில் இப்படி அரட்டையில் நேரத்தைக் கழித்தனர் கரும்பாயிரமும் தவசிப்பிள்ளையும். கரும்பாயிரத்துக்கு இன்னும் கொஞ்சம் நைப்பாசை உள்ளூர இருந்தது. சிவவடிவேலு திரும்பி வந்தவுடன் தன்னைக் கூப்பிட்டனுப்பிப் பார்கவியிலேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்து விடுவார் என்று அவன் நம்பினான். தவசிப் பிள்ளைக்கு அந்த மாதிரி நம்பிக்கை எல்லாம் அறவே கிடையாது. “சும்மா நைப்பாசை வைக்காதேயும் பண்டாரம்! புதுப் பார்கவி உம்ம மாதிரி ஆளத் தாங்காது! அதுலே தஸ்ஸு புஸ்ஸுன்னு இங்கிலீஷ் பேசற ரிசப்ஷனிஸ்ட் வந்தாச்சு. போர்டிங் ரிஸப்ஷன்லே மூணு ஆங்கிலோ இந்தியன் லேடீஸ் ஜம்னு குந்திக்கிட்டிருக்காங்க! சரக்கு மாஸ்டருக்கே ஆயிரம் ரூபாய் சம்பளங்கிறான். நாம கனவு கூடக் காண முடியாது” என்று உறுதியாகச் சொன்னார் தவசிப்பிள்ளை. “உனக்குத் தெரியாது தவசி! நான் பெரியவரோட டூர் அரேஞ்ச் பண்ணியிருக்கிற டிராவல் கம்பெனி மூலமாப் பெரிய முதலாளி அட்ரஸுக்குப் போறாப்பல ஏரோப்ளேன் கடிதாசியே ரகசியமா அனுப்பியிருக்கேனாக்கும்,” என்று மார் தட்டினான் கரும்பாயிரம். அதைக் கேட்டுத் தவசிப் பிள்ளை வறட்சியாகச் சிரித்தார். கரும்பாயிரத்துக்கு இருப்பது போல் தனக்கு மறுபடி பார்கவியில் போய் வேலை பார்க்கும் ஆசை அறவே இல்லை என்பதை அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார். “அப்பிடி ஒருவேளை பெரிய முதலாளி வந்து உங்களை எல்லாம் திரும்ப எடுத்துக்கிட்டாக் கூட நான் அங்கே வர்றதா இல்லே. சரக்கு மாஸ்டரா இருந்த இடத்திலே கறிகாய் நறுக்கறவனாக் கூப்பிடுவாங்க. எனக்குப் பிடிக்காது. இங்கே மலையிலே அநுமார் காலடியிலேயே என் காலம் போயிரட்டும்” என்றார் தவசிப்பிள்ளை. |