9 ஆடிட்டர் அனந்தும், குமரேசனும் ஜோதிஷ கலாரத்னம் கடுக்கையூர்க் கண்ணபிரானைச் சந்திக்கக் கிளம் பினபோது குமரேசன் பாதி வழியிலேயே கத்திரித்துக் கொள்ள முயன்றான். “ஆடிட்டர் சார். இந்த ஆள் குப்தா மோஸ்ட் மாடர்ன் அவுட்லுக் உள்ளவன். ஒரு ஸிக் இன்டஸ்ட்ரிக்குச் சிகிச்சை அளிக்கிற சகல கெட்டிக்காரத்தனமும் அணுகுமுறையும் இந்தக் குப்தாகிட்ட இருக்கு. அதிலே சந்தேகமே இல்லே, ஆனால் இங்கே நோய்வாய்ப் பட்டிருப்பது தொழில் அல்ல. தொழிலை நடத்தும் நபரே நோய்வாய்ப் பட்டிருக்கிறார். தொழிலுக்கு வைத்தியம் பண்ணத்தான் இந்தக் குப்தாவாலே முடியும். எங்கப்பாவுக்கு வைத்தியம் பண்ணறது ரொம்பச் சிரமமான காரியம். அது இவனையே நோய் வாய்ப்படச் செய்துவிடுமோ என்று பயமாயிருக்கு எனக்கு. பாவம், ஏராளமான தன்னம்பிக்கைகளுடன் இவனும் இவன் இளம் மனைவியும் இந்த ரெண்டும்கெட்டான் ஊரிலே வந்து சிரமப்படுகிறார்களே என்று பரிதாபமாயிருக்கு. இந்த வம்பிலே என்னை வேறு மாட்டி விடுகிறீர்களே? நான் எதற்கு? நீங்களே ஜோசியரைப் பார்த்துப் பேசக் கூடாதா?” “அட நீ ஒண்ணு. என் கூட வாப்பா. தைரியத்தை விட்டுடாதே, எப்படியும் உங்கப்பாகிட்ட இருந்து தொழில்களை மீட்டுக் காப்பாத்தியாகணும்ப்பா, அதுவும் இந்த ஓட்டல் ஐடியா நான் கொடுத்தது. அதுனாலே இதை நான் ஒழுங்கு பண்ணியாகணும்.” “அப்படியானா அப்பாவை ஃபாரின் டிரிப் அனுப்பறது மட்டும் போதாது. அண்ணன் தண்டபாணியை வரவழைக் கணும், தனியா என்னாலே மட்டும் முடியாது. சொத்துக்கும் கடனுக்கும் வாரிசு நாங்க மூணு பேரும். செய்யற எந்த மாறுதலையும் மூணு பேரும் அறியச் செய்யணும், பார்கவியைக் கூடச் சேர்த்துத் தான் சொல்றேன்.” “எல்லாம் எனக்குத் தெரியும்ப்பா, வா, முதல்லே ஜோஸ்யர் கிட்டே அவர் மூலமா அப்பாவைத் தள்ளி விட வழி பார்க்கலாம், மற்றதை எல்லாம் அப்புறம் பேசிப்போம்.” அவர் இத்தனை பேசிய பின்பு தான் குமரேசன் பொறுமையாக அவருடன் செல்ல இணங்கிச் சென்றான். அவர்கள் போன போது ஜோசியர் பூஜையில் இருந்தார். காத்திருக்க வேண்டியதாயிற்று. பூஜை முடிந்து அவர் வந்ததும் ஆடிட்டர்தான் ஆரம்பித்தார். குப்தாவைப் பற்றிச் சொன்னார். உடனே ஜோஸியரே முந்திக் கொண்டு, “அடேடே அவர்தானா? நேற்று சிவவடிவேலுவே பிரச்னம் மாதிரிக் கேட்க வந்திருந்தார். ‘குப்தான்னு யாரோ பிஸினஸ் வைத்தியராம். ஆடிட்டர் கூப்பிட்டு வந்து தங்கியிருக்காரு. வந்தன்னிக்குக் காலம்பரப் பலகாரச் செலவே நூற்று எழுபது ரூபா ஆயிடுச்சு! அவன் என்னமாச்சும் பண்ணி உருப்படியா ஓட்டல் லாபத்துக்கு வருமான்னு சோழியை உருட்டிப் பார்த்துச் சொல்லும் ஒய்’ன்னு என்னைக் கேட்டாரு. சோழி போட்டுப் பார்த்தேன். பிரமாதமா வந்திச்சு. ‘செலவைப்பத்தி யோசிக்காதேயும். இந்தப் பிஸினஸ் வைத்தியர் சொல்ற யோசனைப்படி நடந்தா பார்கவியில் பொன் கொழிக்கும்'ன்னு சொல்லியனுப்பி வச்சேன்,” என்றார் ஜோசியர். ஒளிவு மறைவின்றி நடந்ததைச் சொல்லிவிட்டார் அவர்.
“இப்போ அந்தக் குப்தாவே உம்மகிட்டி அவன் சொந்த விஷயமா ஏதோ கேட்கணும்கிறான்,” என்றார் ஆடிட்டர்.
“பேஷா... நானே வரட்டுமா? அவனை இங்கே அழைச்சுக்கிட்டு வர்றீங்களா?” என்று முக மலர்ந்தார் ஜோஸியர்; பழம் நழுவிப் பாலில் விழுந்தது. “கார் கொண்டாந்திருக்கோம். அங்கேயே போகலாம் வாங்க” என்றான் குமரேசன். பஞ்சாங்கப் புத்தகங்களையும் சில சுவடிகளையும் சோழிகள் அடங்கிய பட்டுப் பையையும் எடுத்துக் கொண்டு ஜோஸியர் அவர்களோடு உடனே புறப் படத் தயாரானார், குப்தா ஜோஸியரை எழுந்து நின்று பிரமாதமாகக் கும்பிட்டு வரவேற்றான். தொழில் ரீதியாகப் பயன்படுவதற்காக ஜோஸியர் கொஞ்சம் இந்தி கற்று வைத்திருந்தார். குப்தா ஜோஸியரிடம் இந்தியில் பேசினான். ஜோசியரும் அவனிடம் இந்தியில் பேசினார். ஒரு மணிநேரம் தனக்கு ஏதோ ஜோஸியம் பார்ப்பது போல் பாவனை பண்ணி அவரை ஆழம் பார்த்தான் குப்தா. அப்புறம் நூற்று ஒரு ரூபாய் தட்சணை கொடுத்தான். ஜோசியர் முகம் மலர்ந்தது. வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார், அதுதான் சமயம் என்று ஆடிட்டிர் குமரேசன், குப்தா மூவருமாக ஜோசியரை மெல்ல வழிக்குக் கொண்டு வரப் பார்த்தார்கள், ஆடிட்டர்தான் ஆரம்பித்தார். “ஜோசியரே! உம்மாலே ஒரு நல்ல காரியம் ஆகணும்...” “என்ன? உடனே சொல்லுங்க ஆடிட்டர் சார்! இப்பவே செய்துடலாம்” என்று அபார உற்சாகத்தோடு பதில் வந்தது ஜோசியரிடமிருந்து... “ஒண்னுமில்லே! நம்ம சிவவடிவேலு இருக்காரே, அவர் வசதியிலே நாலுலே ஒரு பங்கு வசதி கூட இல்லாத வடக்குத் தெரு மொஹிதீன் பாய், தெற்குத் தெரு பாக்குத்துாள் வியாபாரி பரமசிவம் இவங்கள்லாம் பேப்பர்லே ‘பான் வாயேஜ்’னு விளம்பரம் போட்டு அமெரிக்கா, ஐரோப்பான்னு போயிட்டு வந்துட்டாங்க. இவரு இவ்வளவு பெரிய பணக்காரரா இருந்து என்ன பிரயோசனம்? ஆடிட்டர்ங்கிற முறையில ‘ஒரு ஃபாரின் ட்ரிப் போயிட்டு வாங்க... உங்க மதிப்பு ஊர்லே அதிகமாகும்’னு தினம் சொல்லிப் பார்க்கிறேன். அசைய மாட்டேங்கறாரு. சாகறதுக்குள்ளவாவது அவரை ஒரு ஃபாரின் ட்ரிப் அனுப்பணும்னு பிரியப்படறோம்.” “பேஷா இதிலே கஷ்டமென்ன? கரும்பு தின்னக் கூலியா? போங்கன்னு சொன்னால் போக வேண்டியதுதானே?” “போக மாட்டேங்கறாரே! குரு ஸ்தானத்திலே இருக்கிற நீங்க சொல்றபடி சொன்னாக் கேட்டாலும் கேட்பார்ன்னு நினைக்கிறேன்.” “அவரோட ஆடிட்டரா இருக்கிற நீங்க சொல்லியே கேட்காதவர் நான் சொல்லியா கேட்கப் போறாரு?” என்று மெல்லப் பின்வாங்கினார் ஜோசியர். “அப்படிச் சொல்லாதீங்க ஜோசியரே! நீங்க சொல்ற விதமாச் சொன்னாக் கேட்பார்னு தோணுது.” “எப்படிச் சொல்லணும்கிறீங்க?” “அது உங்களாலே முடியும். ஒரு நல்ல காரியத்தை எப்படி வற்புறுத்திச் சொல்றதுன்னு ஜோசியத்திலே ஆயிரம் இடம் இருக்கு.” “சொல்லலாம். ஆனால் பொய்யாயிடப் படாதேன்னு பார்க்கிறேன்.” “நல்ல காரியத்துக்காகச் சிவவடிவேலுவோட புகழுக்காக அவரோட ஜோசியராகிய நீங்க ஒரு பொய் சொன்னால் கூடத் தப்பில்லேங்கிறது எங்க அபிப்ராயம் ஜோசியரே” என்று கூறியபடி ஒரு தட்டில் தயாராக வைத்திருந்த வெற்றிலே பாக்குப் பழத்துக்கு நடுவே இன்னும் ஒரு நூறு ரூபாய்த் தாளேச் செருகி எடுத்து நீட்டினார் ஆடிட்டர். “எந்த மாதிரி அவர் ஒப்புக் கொள்ற விதமாச் சொல்ல முடியும்னுதான் யோசிக்கிறேன்,” என்றபடியே தட்டை வாங்கிக் கொண்டார் ஜோசியர், “அதெல்லாம் உங்க இஷ்டத்துக்கு விட்டுடறோம். வர்ற முதல் தேதி அவரும் ஆச்சியும் ஃபாரின் போறாங்க. உங்களைத் தான் நம்பியிருக்கோம்.” “உங்க நம்பிக்கை வீண் போகாமல் நான் பார்த்து முடிச்சுக் கொடுக்கிறேன்.” ‘எப்படிச் செய்யப் போகிறீர், என்ன சொல்லப் போகிறீர்?’ என்று கடுக்கையூராரை அவர்கள் துருவித் துருவிக் கேட்கவில்லை. அவர் இஷ்டப்படி விட்டுவிட்டார்கள். “சிவவடிவேலு சார் சில முக்கிய விஷயங்களிலே என்னோட யோசனையைக் கேட்டுக் கிரக சஞ்சாரம் தசாபுத்தி களோட போக்கைத் தெரிஞ்சுக்காமே எதையும் பண்ணமாட் டார். இதுக்கு முன்னலேயேகூட ரெண்டொரு தரம் எங்க ஆடிட்டர் ஃபாரின் டிரிப் ஃபாரின் டிரிப்னு என்னை உயிரை, எடுக்கிறாரே? ஜாதகம் என்ன சொல்லுது? கிரகங்கள் எப்படி இருக்குன்னெல்லாம் என்னைக் கன்ஸல்ட் பண்ணியிருக்கார். நான் அப்பல்லாம் கூட அவரை ஒரேயடியா டிஸ்கரேஜ் பண்ணிடல. ‘சமயம் வரும், நானே உங்களுக்குச் சொல் றேன்’னுதான் தள்ளிப் போட்டிருக்கேன். ஒண்ணே ஒண்ணு தான் யோசனை பண்ணுவார். பணம் செலவாகுமேன்னு நினைப்பார். இந்த எழுபது வயசிலே ஃபாரின் போய் என்ன ஆகணும்னு சலிச்சிப்பார். அதுக்கு வழி எங்கிட்டே இருக்கு. நான் பார்த்துக்கிறேன்,” என்றார் ஜோசியர். குமரேசன் ரொம்ப ஜாக்கிரதையாயிருந்தான், அப்பா வுடைய வெளிநாட்டுப் பயணம் பற்றித் தான் எதுவும் பேசி விடாமல் தவிர்த்தான். ஏனென்றால் எங்காவது தப்பித் தவறிப் பேச்சுவாக்கில் வாய் தவறிக்கூட ஜோசியர், உங்க செகண்ட் சன் குமரேசன் கூட நீங்க வெளிநாடு போகணும்னு ஆசைப் பட்டுச் சொல்றான்னு பிரஸ்தாபித்துவிட நேர்ந்தால் அப்பா சந்தேகப்படுவார். போகவே மாட்டார், அதற்குப் பயந்து ஜோசியரைத் தூண்டுவதை எல்லாம் ஆடிட்டரே செய்து கொள்ளட்டும் என்று விட்டிருந்தான் குமரேசன். “காரியத்தை முடித்து நல்ல வார்த்தை சொல்லுங்கள்! உங்களை விசேஷமாகக் கவனிக்கிறேன், என்னோட ‘கிளையண்ட்’ களிலேயே பரம்பரைப் பெரிய மனுஷன் - அதிகப் பணக்காரர் சிவவடிவேலுன்னு பேரு. அவர் இன்னும் ஒரு ஃபாரின் ட்ரிப் கூடப் போகலேன்னு நான் வெட்கப்பட வேண்டியிருக்கு, முந்தாநாள் பணம் பண்ணின புதுப் பணக்காரன் லாட்ரி டிக்கெட் வாங்கி லட்சாதிபதியானவன்லாம் மறு நாளே சிங்கப்பூர், ஜப்பான்னு பறக்கிறான். இத்தனை பெரிய மனுஷன் சாகறதுக்கு முன்னே பிளேன் ஏறி நாலு நாடு பார்த்தார்னு இல்லாமே போயிடிப் படாது.” “கவலைப்படாதேயும்! நீர் நினைக்குறது நடக்கும்” என்று ஆடிட்டருக்கு உறுதியளித்தார். ஜோசியர் கடுக்கை யூரார். மறுநாள் மாலையே அந்த அதிசயம் நடந்தது. பார்கவியின் நோய்களை டயக்னைஸ் பண்ணி முடிந்ததும் தாங்களே அவரைக் கூப்பிடுவதாகவும் அதற்குமுன் அவர் அனாவசியமாகத் தன்னையோ ஆடிட்டரையோ பார்க்க வரவேண்டாம் என்று குப்தா சிவவடிவேலுக்குச் சொல்லி வைத்திருந்தான். அதனால் அந்தப் பக்கம் வராமலே வீட்டில் இருந்த சிவவடிவேலு மறுநாள் சாயங்காலம் ஆடிட்டரைத் தேடிக் கொண்டு பார்கவிக்கு வந்தார். கவலையாகக் காணப்பட்டார். “ஆடிட்டர் சார், ஒரு முக்கியமான விஷயம். உங்ககிட்ட கன்ஸ்ல்ட் பண்ணலாம்னு வந்தேன்.” “என்ன சொல்லுங்க?” “நீங்க ஃபாரின் டிரிப் ஃபாரின் டிரிப்னு வற்புறுத்திட்டிருந்தீங்களே. அதுக்கு இப்போ நேரம் வந்திருக்கு. இப்போ இருக்கிற கஷ்டநஷ்டம் பணமுடை எல்லாத்தையும் பார்க்கறப்போ தயக்கமாகவும் இருக்கு.” “கஷ்ட நஷ்டம் என்னிக்கும் இருக்கத்தான் இருக்கும். அலை ஓய்ந்து கடல்லே நீராடுறதுங்கிறது நடக்கிற காரியம் இல்லே. அலை பாட்டுக்கு இருக்கும். நாம குளிச்சுத்தான் ஆகணும்.” “இது பண விஷயம். இப்ப இருக்கிற நஷ்டத்திலே... கட்டுப்படியாகணுமே?” “அதெல்லால் எங்கிட்ட விட்டுடுங்க, ஒரு டிராவல் ஏஜெண்ட் குரூப் குரூப்பா அவனே ஏற்பாடு பணிக் கூடவே அழைச்சிட்டுப் போறான். நம்ம தமிழாளுதான், பாஷைப் பிரச்சினை இல்லை. ஓட்டல் அகாமடேஷனும் அவனே பண்ணிடுவான். ‘மாதவி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்’னு பேர். பிராமாதமாகவே பண்றார்” என்றார் ஆடிட்டர். |