மூன்றாம் பாகம்

7. இருளில் எழுந்த ஓலம்

     "பிட்சுவையும் கூட்டிக் கொண்டு வாருங்கள். மூன்று பேருமாக ஓடிப் போய்ப் பார்க்கலாம். அந்த அறியாப் பெண் எங்கே தவிக்கிறாளோ?" என்று இராசசிம்மன் சக்கசேனாபதியைத் துரிதப்படுத்தினான். அத்தனை ஓசைகளுக்குமிடையே அந்தப் பெண் குரலின் ஓலம் இன்னும் அவர்கள் செவிகளில் விழுந்து கொண்டு தான் இருந்தது.

     "ஓர் உயிரைக் காப்பாற்ற உதவும் திருப்பணியில் இந்த ஏழையின் உடல் எந்த விதத்திலானாலும் தன்னை இழக்கத் தயாராயிருக்கிறது" என்று கூறிக் கொண்டு தாமாகவே எழுந்து வந்தார் புத்த பிட்சு. அந்த மழையையும் காற்றையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மூன்று பேரும் சிறிது தூரம் ஓடிப் போய் தேடிப் பார்த்தார்கள். அதற்கு மேல் ஓடுவதற்குப் பாதையே இல்லை. ஏரி உடைப்பெடுத்துக் குறுக்கே பாய்ந்து கொண்டிருந்தது. "இனி நம்மால் ஆவது ஒன்றுமில்லை. அவளுக்கு வகுத்த வினைப்பயனின்படி ஆகும்" என்று சொல்லிக் கொண்டே திரும்பி நடந்தார் பிட்சு. அவர்களும் திரும்பி நடந்தார்கள். பிட்சு மறுபடியும் நிம்மதியாகத் தூங்கினார். பாம்புப் பயத்தை மறந்து சக்கசேனாபதி கூடத் தூங்கத் தொடங்கி விட்டார். தண்ணீரைத் தாங்குகிற பளிங்குக் கிண்ணம் மாதிரி உணர்ச்சிகளை உணர்ந்தும் அவற்றுக்கு இரையாகாமல் வாழ இந்த இரண்டு வயதான மனிதர்களும் எங்கே தான் கற்றார்களோ என்று விழித்திருந்த இராசசிம்மன் எண்ணி வியந்தான். அந்தப் பெண்ணின் ஓலம் நின்று விட்டாலும் கேட்டுக் கொண்டே இருப்பதாக விழித்திருந்த அவன் செவிகளுக்குப் பிரமை உண்டாயிற்று. காற்றிலும், மழையிலும், இருளிலும் அந்தக் காட்டுக் கட்டடத்தில் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தன் மேல் தானாகவே ஒரு வெறுப்பு உண்டாயிற்று அவனுக்கு.

     'மழை பெய்த ஈர மண்ணில், அனுபவமில்லாத சிறு பிள்ளை விளையாட்டுத்தனமாகக் கீறி வைத்த அரைகுறைச் சித்திரங்கள் மாதிரி இருக்கிறது இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை. வாழ்வின் உணர்ச்சிகளில் ஒன்றிலாவது முழுமையின் ஆழத்தைப் பார்க்கவில்லையே! பொறுப்பில், வீரத்தில், வெற்றியில் - எதிலும் முழுமை தெரியவில்லையே. அன்பு அல்ல காதல்; காதலும் அல்ல பாசம். இவற்றில் கூட முழுமையாக வாழவில்லை நான். எத்தனை நாட்களை இப்படிக் கழிக்க முடியும்? கல்பகோடிக் காலம் வாழ வேண்டாம். ஒரு திங்கட் காலம் வாழ்ந்தாலும் ஏதாவதொரு உணர்ச்சியில் முழுமையாகத் தோய்ந்து வாழ வேண்டும். ஊழியூழியாக வாழ்வதை விட இந்தச் சிறிது காலத்து முழுமை உயர்ந்தது, பெரியது, இணையற்றது.'

     முழுமையைப் பற்றி நினைத்த போது அவனுக்கு மதிவதனியின் நினைவு வந்தது. இடுப்பில் இடைக் கச்சத்துடன் சேர்த்துப் பிணைத்துக் கொண்டிருந்த சிறிய பட்டுப் பையைத் திறந்தான். இருளிலும் தன் நிறத்தையும், ஒளியையும் தனியே காட்டும் அந்தப் பொன்னிற வலம்புரிச் சங்கை எடுத்தான். பித்தன் செய்வது போல் கண்களில் ஒற்றிக் கொண்டான். கைவிரல்களால் வருடியவாறு மடியில் வைத்துக் கொண்டான். கப்பலில் தான் பாடிய கவிதை நினைவு வந்தது அவனுக்கு. உணர்ச்சித் துடிப்பைச் சொற்களின் நளினமாக்கிய விந்தையை நினைத்த போது மட்டும் மனத்தில் முழுமை தோன்றுவது போலிருந்தது அவனுக்கு. அரசாட்சியையும் வெற்றி தோல்விகளையும் எண்ணிப் பார்த்த போது அவன் உணர்ச்சிகளில் முழுமை தோன்றவில்லை.

     'அருமை அன்னையும் மகாமண்டலேசுவரரும் தன்னிடமிருந்து எதிர்பார்த்த கடமைகளை நினைத்த போது அவற்றில் முழுமை தோன்றவில்லை. ஏனென்றால் அந்தக் கடமைகளை அவன் இன்னும் நிறைவேற்றவேயில்லை. இடையாற்று மங்கலத்தின் அழகிய சூழ்நிலையில் குழல்வாய்மொழி என்ற பெண்ணோடு பழகிய பழக்கத்தை நினைக்கும் போது முழுமை ஏற்படவில்லை. மதிவதனி என்ற பெண்ணைச் சந்திக்க நேராமலிருந்திருந்தால் ஒரு வேளை இடையாற்று மங்கலத்து அழகியாவது, கனகமாலை என்ற பேரெழில் நங்கையாவது அவனைக் கவர்ந்திருக்கலாமோ என்னவோ? வெள்ளத்தில் பழைய தண்ணீர் அடித்துக் கொண்டு போகப் படுகிற மாதிரி அவன் மனத்தின் அரைகுறை நினைவுகளையெல்லாம் 'மதிவதனி' என்ற முழுமை இழுத்துக் கொண்டு விட்டதா? அல்லது அந்த முழுமையில் அவன் மூழ்கி விட்டானா? பார்க்கப் போனால் முழுமையான வாழ்வு என்பதுதான் என்ன? என்னைப் போல் அரச குடும்பத்தில் பிறந்தவனுக்குப் போர்களும், அவற்றில் வெற்றி வாகை சூடுவதும் தான் முழுமையான வாழ்வு என்று அரசியல் அறம் சொல்லலாம். அப்படிச் சொல்லுவது இதற்கு இலக்கணமாக இருக்கலாம். ஆனால் அது மட்டும் எனக்கு முழுமையான வாழ்வாகத் தோன்றவில்லையே? முழுமையாவது மண்ணாங்கட்டியாவது? அரசனாகப் பிறந்தாலென்ன ஆண்டியாகத் தோன்றினாலென்ன? பிறப்பது மண்ணில்தானே வாழ்வதும் மனிதனாகத்தானே! மனிதனுடைய வாழ்க்கை, அது ஒரு ஓட்டைப் பானை. ஒரு பக்கம் முழுமை கண்டால் இன்னொரு பக்கமாக ஒழுகி விடுகிறதே! ஒன்றை நிறைவாக அனுபவித்தால் இன்னொன்றை இழக்க வேண்டியதுதான். நிறைவு, முழுமையெல்லாம் அமர வாழ்க்கையில் தான் உண்டு போலிருக்கிறது. தேனீக்களை விரட்டாமல் தேனடையிலுள்ள தேனைக் குடிக்க முடியுமா? வாழ்விலுள்ள துன்பங்களைப் போக்காமல், குறைகளை நீக்காமல் முழுமையும் நிறைவும் காண்பது எங்கே?

     'அறத்தையும், அன்பையும், கருணையையும் கொண்டே வாழ்ந்து விட என் தாய்க்கு ஆசை. அறிவையும், சூழ்ச்சியையும் கொண்டே வாழ்ந்து விட மகாமண்டலேசுவரருக்கு ஆசை. படைகளையும், போர்க்களங்களையும், உடல் வன்மையையும் கொண்டே வாழ்ந்துவிட வல்லாளதேவனுக்கு ஆசை. இந்த ஆசைகள் தான் முழுமையான வாழ்வா? குழல்வாய்மொழி என்ற பெண்ணுக்குக் கூட என்னையும் எனது அரச போக ஆடம்பரங்களையும் தனதாக்கிக் கொள்ளும் ஆசையிருக்கிறது. என்னுடைய பதவியும், பெருமையும், தகுதியும் தெரியாமலே என் மேல் அன்பு செலுத்தவும் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்கு என் மேல் இருக்கும் அன்போ எனக்கு அவள் மேலிருக்கும் அன்போதான் முழுமையானதா?

     'எது முழுமை? எது நிறைவு? அழியாதது எது? பரிபூரணமான வாழ்வு எது? என்னைப் போன்று பெரிய அரச மரபின் வழித் தோன்றலாக வந்த ஓர் இளைஞனுக்கு அது எப்படிக் கிடைக்கும்?' என்று இப்படி உருக்கமான பல நினைவுகளை மனத்தில் அசை போட்டுக் கொண்டிருந்தான் இராசசிம்மன்.

     பொழுது விடிவதற்குச் சிறிது நேரத்துக்கு முன் சக்கசேனாபதியும் புத்தபிட்சுவும் தூக்கம் விழித்து எழுந்திருந்த போது வாசற்படியில் சாய்ந்து உட்கார்ந்தவாறே இராசசிம்மன் கண்ணயர்ந்திருப்பதைக் கண்டனர். அவன் மடியில் சிறிய குழந்தை ஒன்று படுத்துத் தூங்குவது போல் அந்தச் சங்கு கிடப்பதைப் பார்த்துச் சக்கசேனாபதி சிரித்துக் கொண்டார்.

     முதல் நாள் காற்றும், மழையும் ஓய்ந்து போயிருந்தன. எனினும், அந்த மழையும் புயலும் உண்டாக்கிய சீரழிவுகளும் அலங்கோலங்களும் கண்பார்வை சென்ற இடமெல்லாம் தெரிந்தன. வானம் அழுக்கு நீக்கி வெளுத்து விரித்த நீலத்துணி போல் வெளிவாங்கியிருந்தது. அவர்களுடைய குதிரைகள் நனைந்து நிறங்கலைந்த மேனியோடு கட்டடத்துக்கு அருகில் ஒண்டிக் கொண்டு நின்றன. குமாரபாண்டியனைத் தொட்டு எழுப்புவதற்காக அருகில் சென்றார் சக்கசேனாபதி. ஆழ்ந்த தூக்கமில்லாமல் கண்களை மூடிச் சோர்ந்து உட்கார்ந்திருந்ததால் அவருடைய காலடி ஓசையைக் கேட்டே விழித்துக் கொண்டான் அவன். சங்கை எடுத்துப் பட்டுப் பைக்குள் போட்டுக் கொண்டு எழுந்து நின்றான். சக்கசேனாபதியைப் பார்த்து, "அடடா! பொழுது விடியப் போகிறது போலிருக்கிறது. நாம் புறப்படலாமா? நண்பகலுக்குள் எப்படியும் தமனன் தோட்டத்தில் இருக்க வேண்டும் நாம்" என்றான்.

இந்த நூலின் பகுதியை தொடர்ந்து படிக்க, உறுப்பினராக இணைந்திடுங்கள்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247