15. புதிய ஆசையும் புறக்கணிப்பும் என்னுடைய இரண்டாவது கேள்விக்குச் சுகுணா கூறுவதற்கு இருக்கும் பதிலில் முக்கியமான சம்பவங்கள் இருப்பதாக நான் யூகம் புரிந்தது சிறிதும் வீண் போகவில்லை. தன் மனம் முழு அளவில் நம்பிக்கை கொண்ட ஒருவனோடு இணைந்து புது வாழ்வு பெற முயன்றிருக்கிறாள் அவள். அந்த முயற்சி தோற்றுப் போன போது தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசையே அவளுக்கு உண்டாகியிருக்கிறது. அந்த விவரங்களை அவளுடைய வார்த்தைகளிலேயே கேட்கலாம். “நான் சமூக நலத்திட்டத்திலும் கிராமங்களின் வளர்ச்சித் திட்டத்திலும் சேர்ந்து கிராம சேவகியாகத் தொண்டு செய்ய ஆரம்பிக்கும் முன் தனியார் நிர்வாகத்திலுள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் வேலை பார்த்ததாக உங்களிடம் கூறினேன் அல்லவா? அந்தக் காலத்தில் இது நடந்தது. கிழக் குரங்குகளும் படிக்க வரும் ஏழை பையன்களை டியூஷன் வைத்துக் கொள்ளுவது என்ற பேரில் பணம் பண்ணும் யந்திரங்களாக மாற்றும் கவந்தர்களும் ஆசிரியர்களாக அடைந்து கிடந்த அந்தப் பள்ளிக்கூடத்தில் நான் ஆசிரியையாகச் சேர்ந்த ஆண்டில் இலட்சிய ஆர்வமும் சீர்திருத்த வேகமும் உள்ள இளைஞர் ஒருவரும் சேர்ந்திருந்தார். எவர் பார்த்தாலும், ‘இவரிடம் கொஞ்சம் பேசிவிட்டு போக வேண்டும்’ - என்று பார்த்தவரை ஆசைப்பட வைக்கிற கம்பீரத் தோற்றமும் சுந்தரமுகமும் வாய்ந்தவர் அந்த இளைஞர். முருகன் என்று பெயர் அவருக்கு. முருகனைப் போலவே அழகாக இருந்தார் அவர். திருநெல்வேலிப் பக்கத்துக்காரர் என்று பள்ளிக்கூடத்தில் பேசிக் கொண்டார்கள். அவருக்கும் எனக்கும் பேச்சு ஏற்பட்ட முதல் சம்பவத்தை இன்னும் நான் நன்றாக நினைவு வைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நாள் பள்ளிக்கூடத்து நூல் நிலையத்தில் பலத்த வாக்குவாதத்தோடு நாங்கள் சந்தித்தோம். பிரிந்தபோதோ இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் பலத்த நம்பிக்கை கொண்டு பிரிந்தோம். பள்ளிக்கூடத்து லைப்ரரியில் உள்ள ஒரு புத்தகத்தின் ஒரே பிரதிக்கு ஒரே சமயத்தில் போட்டி போட்டுக் கொண்டு இரண்டு பேர் போய்ச் சேர்ந்தால் சண்டை வராமல் என்ன செய்யும்? கார்க்கியின் ‘அன்னை’ என்ற நாவல் உடனே எனக்கு வேண்டும் என்ற கோரிக்கையுடன் நான் லைப்ரேரியனிடம் மன்றாடிக் கொண்டிருந்த போது அவர் உரிமையோடு மேஜை மேல் கிடந்த லைப்ரரியின் சாவியை எடுத்துக் கொண்டு போய்ப் புத்தக அலமாரியையே திறந்து கார்க்கியின் அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டார். எனக்கு முகத்தில் அறைந்தாற் போல் இருந்தது. மறுநாள் அவர் பள்ளிக்கூடம் வந்த போது அவரிடம் சண்டைக்குப் போனேன் நான். அவர் மிகவும் பண்பாக என்னிடம் நடந்து கொண்டார். “இந்த நாவலைப் படிப்பதிலே என்னோடு போட்டி போடுவதற்கும் ஒருவர் இங்கே இருக்கிறார் என்று அறியும் போது எனக்குப் பெருமையாயிருக்கிறது. கனவு காண வைக்கும் சொப்பனாவஸ்தை இலக்கியங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு உலகத்தில் உழைக்கும் இனத்தின் பெருமையைத் துணிந்து உணர்த்திய முதல் இலக்கியம் இது. உயிர்த்துடிப்புள்ள இந்த இலக்கியத்தை இப்போது நான் ஏழாவது தடவையாகப் படிக்கிறேன். நீங்கள் படிக்க விரும்புவதாக இருந்தால் இப்போதே இதை என்னிடமிருந்து கொண்டு போகலாம். நான் அப்புறம் படித்துக் கொள்கிறேன்...” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அந்தப் புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்து விட்டார். முருகன். அவர் கொடுத்த புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பே அவரைப் படித்துக் கொண்டு விட்டேன் நான். என் மனத்தின் இலட்சிய வீரராக அவர் அந்தக் கணமே உருவாகிக் கோயில் கொண்டார். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின் நான் முருகனுடன் நிறையப் பழகினேன். நிறையப் பேசினேன். இரண்டு பேருக்கும் வகுப்புக்கள் இல்லாமல் ஓய்வாக இருக்கும் வேளைகளிலே பள்ளிக்கூடத்து நூல் நிலையத்தில் போய் அமர்ந்து உலக இலக்கியங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருப்போம். சில நாட்களில் ஓய்வு வேளை முடிந்து அடுத்த பாடத்துக்கான மணி அடித்ததைக் கூடக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்து விடுவோம். எங்கள் நட்பு இலக்கிய நட்பாக வளர்ந்து கொண்டிருந்தது. நாளடைவில் முருகனிடம் இருந்து நான் நிறைந்த நம்பிக்கைகளைப் பெற்றேன். வாழ்க்கையிலேயே ‘இனி நான் பெற முடியாது’ - என்று எனக்குள் நானே இழக்கத் தொடங்கிவிட்ட நம்பிக்கைகளைக் கூடப் பெற முடியும் போல என்னுடன் பழகினார் முருகன். என் நம்பிக்கைகள் அவருடைய நட்பாகிய தென்றல் காற்றுப்பட்டு மொட்டவிழ்ந்து மலர்ந்தன. இந்த உலகத்தில் எனக்கு ஒரே பாதுகாப்பாக இருந்த என் தாய் கூட இப்படி நான் முருகனோடு பேசுவதையும் பழகுவதையும் விரும்பவில்லை.
“உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறதடி பெண்ணே! நீ எந்த விதத்திலும் கெட்டுப் போய்விட மாட்டாயென்று நான் நாற்பதாயிரம் கோயிலில் வேண்டுமானாலும் சத்தியம் செய்வேன். ஆனால் இந்த உலகத்தின் கண்களில் தலைமுறை தலைமுறையாகச் சந்தேகமும் அவநம்பிக்கையும் தழும்பேறியிருக்கின்றன. முருகனைப் போல் இலட்சணமாகவும் இளமையாகவும் இருக்கிற ஓர் வாலிபனோடு சிரித்துப் பேசுவதும் தெருவில் சேர்ந்து நடந்து வருவதுமே இந்த உலகம் சந்தேகப்படுவதற்குப் போதுமான காரியங்கள் தாம்! நான் ஒருத்தி இருக்கிற வரையில் ‘இன்னாருக்கு அம்மாவாம் இவள்’ என்று நாலு பேர் தெருவில் மூக்கில் விரல் வைத்து ஏசாமல் மானமாக வாழ வழி செய்து கொடு பெண்ணே” என்று நயமாகவும் பயமாகவும் என்னை எச்சரித்தாள் என் தாய். எனக்கு முருகனிடமிருந்து நம்பிக்கைகள் பிறந்த அதே சமயத்தில் என் தாய்க்கு என் மேலிருந்த நம்பிக்கைகள் அழியத் தொடங்கியிருப்பதை நான் உணர்ந்தேன். உலகத்துக்குச் சந்தேகமும் அவநம்பிக்கையும் ஏற்படுவதற்கு முன்னால் என் தாயின் மனத்தில் அவை முதலில் கால் கொண்டிருப்பதை நான் புரிந்து கொள்ளத்தான் வேண்டியிருந்தது. முருகன் எனக்குப் பல உறுதிமொழிகளை அளித்திருந்தார்.
‘சிறிது காலம் பொறுத்துக் கொள் சுகுணா! துணிவாக எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருக்கிறது. பிரமுகர்களும் பணக்காரக் குடும்பங்களிலிருந்து ஃபேஷனுக்காகச் சீர்திருத்தம் பேச வருகிறவர்களும் தான் - இம்மாதிரிப் புதிய செயல்களுக்குத் துணியலாம் என்று இந்தச் சமூகம் நம்புகிறது. என்னைப் போல் நூற்று இருபது ரூபாய்ச் சம்பளம் வாங்குகிற பள்ளிக்கூடத்து ஆசிரியனுக்குச் சீர்திருத்த நோக்கமோ, சமூகத்தில் அக்கறையோ இருந்தால் ‘நான் ஓர் அயோக்கியனாக இருப்பேனோ’ - என்று இந்தச் சமூகத்துக்கு என் மேல் சந்தேகமே வந்துவிடுகிறது. ஆசிரியர்கள் எல்லாரும் செக்கு மாடுகள் போலத் தேய்ந்த பாதைகளில் சுற்றிச் சுற்றி வர வேண்டுமென்றுதான் சமூகம் நினைக்கிறது. ஆனால் நான் அப்படிச் செக்குமாடாக இருக்கப் போவதில்லை. ஏதாவது புதிய சிந்தனையை இளம் சமூகத்தில் வளர்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாக இருக்கிறது.’ என்று முருகன் பலமுறை என்னிடம் கூறியிருந்தார். எனக்கு வலிமையளித்திருந்தன அவருடைய இந்தச் சொற்கள். என்ன கூறி என்ன பயன்? எல்லாம் வீணாகப் போய்விட்டது. அந்த வருட முடிவில் அவரைப் பள்ளிக்கூட வேலையிலிருந்தே விலக்கி விட்டார்கள். அவருடைய புதுமையான கருத்துக்களையும் இரண்டு மூன்று பொதுக்கூட்டங்களில் அவர் பேசிய புரட்சிகரமான பேச்சுக்களையும் கேட்டு தலைமையாசிரியர் நிர்வாகத்தினருக்குப் புகார் செய்து விட்டார். நிர்வாகத்தார் முருகனை அரசியல்வாதி என்று சந்தேகப்பட்டு வெளியே அனுப்பி விட்டார்கள். முருகன் என்னிடம் கண்கலங்க விடை பெற்றார். “சுகுணா! புதிய சிந்தனைகளைச் சிந்திப்பதே சட்ட விரோதம் என்று நினைக்கிற நாட்டில் சீர்திருத்தமாவது ஒன்றாவது! சீர்திருத்தம் ஆசைப்படுகிறவனுக்கு இதுதான் கதி! முடிந்தால் கோடை விடுமுறை முடிவதற்கு முன் எங்கள் கிராமத்துக்கு வா. இப்போது எனக்கு விடைகொடு” - என்று எதிரே வந்து நின்ற அவரைப் பார்க்கும் போது எனக்குக் கண்களில் நீர் பனித்துவிட்டது. அதற்குப் பின் ஓர் ஆண்டுக் காலம் திருநெல்வேலியிலேயே ஒரு வேலையும் கிடைக்காமல் சும்மா இருந்ததாக அவர் கடிதங்கள் எனக்குக் கூறின. அதற்குப் பின் அவரிடமிருந்து கடிதங்களும் வரவில்லை. என்னாலும் அவரை மறக்க முடியவில்லை. அவரைத் தேடிக் கொண்டு திருநெல்வேலி பக்கம் பயணம் போவதற்கு என் அம்மா ஒப்பவில்லை. எப்படியோ விளையாட்டுப் போல இரண்டு மூன்று வருடங்களும் கழிந்து விட்டன. முருகன் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. கடைசியில் அவர் இராமேசுவரம் போர்டு உயர்நிலைப் பள்ளியில் இருப்பதாக யாரோ சொன்னார்கள். அந்தச் செய்தியில் எனக்கு நம்பிக்கை இல்லையானாலும் என்னுடைய ஆர்வம் அதில் வலிய நம்பிக்கை உண்டாக்கிக் கொண்டு விட்டது. ஒரு சனிக்கிழமை பிற்பகல் பள்ளிக்கூடத்துப் பையன்களை உல்லாசப் பயணம் அழைத்துக் கொண்டு போவதாய் என் அம்மாவிடம் பொய் சொல்லி விட்டு இராமேசுவரம் புறப்பட்டுப் போனேன் நான். அங்கே முருகன் இருந்தார். ஆனால் நான் எதிர்பார்த்த முருகனாக இல்லை. அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது. குடும்பத்தோடு இராமேசுவரத்தில் வேலையேற்றுக் கொண்டு குடியேறி இருந்தார். அவருடைய முகத்திலும் பழைய ஒளி இல்லை. கவலைகளும் பொறுப்புக்களும் இளமையில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய இலட்சியங்கள் அழிந்த வேதனையுமே தெரிந்தன. என்னை அவர் வரவேற்ற முறையும் கலகலப்பாக இல்லை. ‘இனிமேல் நீ என்னைத் தேடிக் கொண்டு வருவதற்கு என்ன இருக்கிறது,’ என்று கேட்பது போலிருந்தது அவருடைய பேச்சு. ‘சீர்திருத்தம் பேசுவதால் பணக்காரர்களுக்கு இலாபம் உண்டு. ஏழைக்கு நஷ்டம் தான் உண்டு’ என்று ஒரு காலத்தில் அவர் சொல்லியிருந்தது நினைவு வந்தது எனக்கு. முருகன் எனக்கு வாழ்வளிக்க முன்வருவார் என்று நான் நம்பியிருந்தது வீணாயிற்று. மார்க்ஸையும் இங்கர்ஸாலையும் பற்றிப் பேசிய பழைய முருகன் செத்துப் போயிருந்தார். ஆம்! என் வரையில் அவர் செத்துத்தான் போயிருந்தார். இப்போது அவர் வயிற்றுப் பிழைப்பையும் புதிய குடும்பப் பொறுப்பினால் தனக்கு ஏற்பட்டிருந்த கஷ்டங்களையும் பற்றித் தான் பேசினார். இராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி போய் அங்கிருந்து மறுநாள் நான் திரும்பிய போது ஏறக்குறைய என் உணர்வுகளும் செத்துத்தான் போயிருந்தன. இரயில் பாம்பன் பாலத்தின் மேல் தடதடவென்று ஓடியபோது கதவைத் திறந்து கொண்டு கடலில் குதித்து விட வேண்டும் போல ஆசையாயிருந்தது. வாழும் ஆசை தீர்ந்த பின் சாகும் ஆசை ஏற்படத்தானே செய்யும்? - உங்கள் முத்துச்சாவடியை வேறு படித்திருந்ததனால் அந்த எண்ணத்துக்கு உங்கள் கதையும் அப்போது தூண்டுதலாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இல்லையென்றால் பாம்பன் பாலம் வந்ததும் அந்த இடத்தில் சாகலாம் என்று சொல்லி வைத்தாற் போல சாகும் நினைவு வந்திராது எனக்கு. தனுஷ்கோடியிலேயே அந்த எண்ணம் வந்து அங்கே பொங்கிக் குமுறுகிற ஆண் கடலில் நான் வீழ்ந்திருப்பேன். இரயிலில் உடனிருந்தவர்கள் விழித்துக் கொண்டிருந்த காரணத்தால் அன்று பாம்பனில் என்னுடைய தற்கொலை எண்ணம் பலிக்காமல் போய்விட்டது. |