22. காவிரி வறண்டது!

     அப்போதிருந்த பரபரப்பில் காவிரிக்கரை உழவர்களைப் பார்க்க முடியாது போலிருந்தது. தேடி வந்திருக்கும் அந்த உழவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு மறுபடி சில நாள் கழித்து வந்து தன்னைச் சந்திக்கச் சொல்லலாமே என்று தான் முதலில் ராணி மங்கம்மாளுக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த அபிப்ராயத்தை அவள் மாற்றிக் கொண்டாள்.

     தேடி வந்திருப்பவர்கள் ஏழைகள் உழவர்கள் என்பதனால் அவர்களை அலைக்கழிக்காமலும், இழுத்தடிக்காமலும் உடனே பார்ப்பதுதான் முறை என்று எண்ணி அவர்களை அப்போதே தன்னைச் சந்திக்க அனுமதிக்குமாறு காவலர்களிடம் கூறி அனுப்பினாள்.

     சிறிது நேரத்தில் உழவர்கள் கூட்டமாக அவளைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் முகங்களில் எல்லாம் பயமும் கவலையும் அணைகட்டித் தேக்கினாற் போலிருந்தன. அவர்களுக்கு ஏதோ தீராத பிரச்சினை இருக்கவேண்டும் என்று ராணி மங்கம்மாளால் பார்த்த அளவிலேயே அனுமானிக்க முடிந்தது.

     அவள் அவர்களை அன்போடு கேட்டாள்;

     "உழவர் பெருமக்களே! உங்கள் கவலை என்ன? என்னால் முடியுமானால் உங்கள் கவலையைக் களைவேன். தயங்காமல் சொல்லுங்கள்."

     "மகாராணீ! திடீரென்று காவிரியில் நீர் வற்றி வறண்டு விட்டது. மேல்மழை பெய்ததும் சரியாகும் என்று நினைத்துக் காத்திருந்தோம். அப்படியும் சரியாகவில்லை. சோழ நாட்டின் பெரும்பகுதி நிலங்களும் எங்களை ஒத்த விவசாயிகளும் காவிரியை நம்பித்தான் இருக்கிறோம் என்பது தாங்கள் அறியாததில்லை. மைசூர் மன்னன் சிக்கதேவராயனுக்கும், தங்களுக்கும் உள்ள பகையினால் தங்களுக்கும் தங்களது நாட்டு மக்களுக்கும் தொல்லைக் கொடுக்கக் கருதி மைசூரார் காவிரியை அணை எடுத்துக் தேக்கிவிட்டார்கள் என்று கேள்விப் படுகிறோம். காவிரி வறண்டிருப்பதால் உழவர்களாகிய எங்கள் வாழ்வும் வறண்டுவிட்டது."

     சிக்கதேவராயன் காவிரியை அணை கட்டித் தடுத்து நிறுத்திவிட்டான் என்று கேள்விப்பட்டு ராணி மங்கம்மாள் ஆச்சரியப்படவில்லை. அவன் அப்படித்தான் செய்திருக்கக் கூடும் என்பதில் அவளுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. திரிசிரபுரத்தை முற்றுகையிட்ட சிக்கதேவராயரின் படைகளையும், தளபதி குமரய்யாவையும் தாங்கள் மைசூருக்குத் துரத்திய பின்பே இப்படிப் பழிவாங்கும் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டிருக்கவேண்டுமென்று தோன்றியது.

     இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண்பதற்காக உழவர்களுக்கு ஆறுதலும் மறுமொழியும் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு இராயசத்தையும், பிரதானிகளையும் படைத்தலைவர் நரசப்பய்யாவையும் உடனே அது பற்றிக் கலந்து ஆலோசித்தாள் அவள்.

     "இந்தக் காவிரி நீர்ப் பிரச்சினையால் நாம் மட்டும் பாதிக்கப்படவில்லை. அண்டை நாடாகிய தஞ்சை நாட்டுக்கு நம்மைவிட அதிகப் பாதிப்பு ஏற்படும்" என்றார் இராயசம்.

     அவர் இப்படிக் கூறி முடிக்கவும் வாயிற்காவலன் உள்ளே வந்து தஞ்சையின் மன்னர் ஷாஜியின் பிரதிநிதியாக அமைச்சர் பாலோஜி சந்திக்க வந்திருப்பதாகத் தெரிவிக்கவும் சரியாயிருந்தது. ஏற்கனவே தஞ்சை அரசன் ஷாஜியின் கோபத்துக்கு ஆளாகியிருந்த பாலோஜி தன் ஆள்கள் மூலம் தஞ்சை நாட்டின் பெரு வணிகர்களையும், செல்வர்களையும் தன் உறவினர்களையும் வற்புறுத்திப் பெரும் பொருள் திரட்டியதோடு அரசாங்கக் கருவூலத்திலிருந்து ஒரு பெருந்தொகையையும் எடுத்துக்கொண்டு திரிசிரபுரத்துக்கு வந்திருந்தான். திரட்டிய பொருளைத் திறைப்பணமாக அளித்து, ராணிமங்கம்மாளோடு சமாதானம் செய்துகொண்டு, அந்த சமாதானத்தைச் செய்து வந்தவன் என்ற பெருமையில் தன் அரசனான ஷாஜியின் கோபத்தைத் தணிக்க முயலவேண்டும் என்பது பாலோஜியின் திட்டமாக அப்போது இருந்தது.

     திடீரென்று திரிசிரபுரம், தஞ்சை இருபகுதி ஆட்சிக்கும் நிர்ப்பந்தத்தை உண்டாக்கும் பொருட்டு மைசூர் மன்னன் ஏற்படுத்திவிட்ட காவிரிநீர்த் தடுப்பு பிரச்சனை பாலோஜிக்கு இப்படி ஓர் இராஜதந்திர லாபத்தை உண்டாக்கித் தந்தது.

     மைசூர் மன்னன் சிக்கதேவராயன் என்கிற பொது எதிரியைத் தொலைக்கும் முகாந்திரத்தை முன்வைத்து ராணி மங்கம்மாளையும், தஞ்சை மன்னன் ஷாஜியையும் சமாதானப்படுத்த முடியும் என்ற புது ஞானோதயம் பாலோஜிக்கு உண்டாயிற்று. அதை வெறும் சமாதானமாக மட்டும் நிறுத்திவிடாமல் சிநேகிதமாக மாற்றித் திரிசிரபுரம், தஞ்சை இரண்டையும் நட்பு நாடுகளாக்கிவிடத் திட்டமிட்டான் அவன். காற்று அவனுக்குச் சாதகமாக அவனது பக்கம் வீசியது.

     அவன் திரிசிரபுரத்துக்கு வந்த போது கையில் பெரிய அளவு திறைப்பொருளோடும் காவிரி நீரைப் பற்றிய பிரச்சனையோடும் வந்து சேர்ந்திருந்தான்.

     ஒரு வலுவான பொது எதிரி ஏற்பட்ட பின் உதிரியாகத் தங்களுக்குள் விரோதிகளாக இருந்த பலர் அந்தப் பொது எதிரியைக் கருதித் தங்கள் சிறிய விரோதங்களைத் தவிர்த்து விட்டு நண்பர்களாகி விடுவதும், ஒரு வலுவான பொது நண்பனை அடையும் முயற்சியில் தங்களுக்குள் நண்பர்களாக இருந்த பலர் அந்தப் பொது நண்பனின் சிநேகிதத்தைப் பெறும் போட்டியில் தங்கள் நட்பை இழந்து விரோதிகளாகிவிட நேர்வதும் இராஜ தந்திரத்தில் தவிர்க்க முடியாதவை என்பதைப் பாலோஜி அறிந்திருந்தான். மைசூர்ச் சிக்கதேவராயன் காவிரியை மட்டும் தடுத்திராவிட்டால் பாலோஜி இந்த இராஜதந்திர லாபத்தை அடைந்தே இருக்க முடியாது. சந்தர்ப்பத்தைத் தனக்கு ஏற்படுத்தித் தந்த தெய்வத்துக்கு இதயபூர்வமாக நன்றி தெரிவித்துக் கொண்டே திரிசிரபுரத்துக்கு வந்து காத்திருந்தான் அவன். இந்த ராஜதந்திர லாபத்தை வைத்து ஷாஜியிடம் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணினான் அவன்.

     ராணி மங்கம்மாளும் அவளுடைய இராயசமும், பிரதானிகளும், தளபதியும், தஞ்சை மன்னனின் அமைச்சனான பாலோஜியைச் சந்திக்க இணங்கினார்கள். பாலோஜி அவர்களைச் சந்தித்து மிகவும் பவ்யமாக நடந்து கொண்டான். சிரமப்பட்டுத் திரட்டியிருந்த பெரும்பொருளை ராணி மங்கம்மாளிடம் காணிக்கையாகச் செலுத்தினான்.

     "மகாராணீ! நடந்துவிட்ட சில தவறுகளுக்காகவும், முறைகேடுகளுக்காகவும் தஞ்சை நாட்டின் சார்பில் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமக்குள் ஒற்றுமையும், பரஸ்பர உதவியும் வேண்டும். நாம் ஒற்றுமையாயில்லாதிருந்த காரணத்தினால்தான் காவிரியை அணையிட்டுத் தடுத்துக்கொள்ளும் துணிவு மைசூர் அரசர் சிக்கதேவராயனுக்கு வந்தது. நம் இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றமையே நமது பொது எதிரியைத் தயங்கச் செய்யும். முடிந்தால் காவிரி நீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே நாம் ஒன்று சேர்த்து மைசூர் மேல் படையெடுக்க முடியும் மகாராணீ!"

     "நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் அமைச்சரே! ஆனால் முதலில் ஒற்றுமையின்மைக்கு வித்திட்டது யார் என்று சிந்தித்துப் பாருங்கள். திரிசிரபுரத்தைச் சேர்ந்த காவிரிக்கரைக் கிராமங்களைக் கொள்ளியிடும்போது உங்கள் அரசருக்கு இந்த ஒற்றுமை யோசனை ஏன் தோன்றவில்லை? சிலருக்கு மனத் தெளிவினால் புத்தி வருகிறது. இன்னும் சிலருக்குப் பட்டால்தான் புத்தி வருகிறது."

     "உண்மைதான் மகாராணீ! தவறு யார் மேலிருந்தாலும் இனி அந்தத் தவறுகள் நேர வேண்டாமென்று நினைக்கிறேன். இதோ இங்கு நம்மிடையே இருக்கும் வீரத்தளபதி நரசப்பய்யாவின் தலைமையில் உடனே மைசூர் மன்னனுக்குப் பாடம் கற்பிக்க நமது படைகள் இணைந்து புறப்படட்டும். நமது ஒற்றுமை அவனுக்குப் புரியட்டும்."

     "நம்மிலிருந்து வெகு தொலைவிலிருக்கும் அந்நியனுக்குப் புரிவதற்கு முன் முதலில் நமது ஒற்றுமை நமக்கே சரியாகப் புரியவேண்டும். நட்புக்கு அது அவசியம். நமக்கே புரியாத ஒற்றுமைகளை நாம் பிறருக்குப் புரிய வைக்கமுடியாது."

     இராயசம் இப்படிக் கூறியது தன்னையும் தன் நாட்டையும் குத்திக் காட்டுவது போலிருந்தாலும், காரியம் கெட்டுப் போகக்கூடாதென்ற கருத்தில் அதை எதிர்த்துப் பேசாமல் பொறுத்துக் கொண்டான் பாலோஜி.

     அதே தொனியில் மறுமொழியும் கூறினான்; "ஒற்றுமையை முதலில் நாமே புரிந்து அங்கீகரித்துக் கொண்டதற்கு அடையாளமாக இன்று முதல் நம்மிரு நாடுகளும் ஒருவர் எல்லையில் இன்னொருவர் அத்துமீறுவதில்லை, ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்பதை இருவருமே ஏற்போம்."

     "இந்த வார்த்தைகளை நம்பிக் காவிரி நீர்ப் பிரச்சினையில் நாம் நமது பொது எதிரியைச் சந்திக்கிறோம். தஞ்சைப் படைகளை உடனே திரட்டித் திரிசிரபுரத்துக்கு அனுப்பி வையுங்கள்" என்றாள் ராணி மங்கம்மாள். திரிசிரபுரத்துக்கு அந்தப் படைகள் வந்ததும் அங்குள்ள படைகளையும் சேர்த்துக் கொண்டு தளபதி நரசப்பய்யாவை மைசூருக்குப் புறப்படச் செய்யலாம் என்பது ராணியின் எண்ணமாயிருந்தது.

     பாலோஜிக்கு இதைக்கேட்டு உச்சிகுளிர்ந்து போயிற்று. நேரே தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்று தன்னால்தான் ராணி மங்கம்மாளுடன் இந்தச் சமாதான ஏற்பாடு சாத்தியமாயிற்று என்பதை மன்னன் ஷாஜியிடம் விளக்கிக் கூறி அவனது நல்லபிமானத்தை மீண்டும் பெறலாம் என்று எண்ணினான் அவன்.

     நரசப்பய்யா தஞ்சையை வளைத்துக் கொள்ளையடித்த பின், தன் எதிரிகளின் தூண்டுதலால் மன்னன் ஷாஜி தன்னைத் தண்டிக்க விரும்பிச் சீற்றம் அடைந்ததை மாற்ற இதுவே தக்க தருணம் என்பதை உணர்ந்திருந்தான் பாலோஜி. ஷாஜியின் நிலை அவனுக்கு நன்கு புரிந்திருந்தது.

     தஞ்சை சென்று மன்னன் ஷாஜியைச் சந்தித்து, மங்கம்மாளுடன் சமாதானம் ஏற்பட்டதைத் தெரிவித்துக் காவிரி நீர் தடுக்கப்பட்டதை எதிர்த்து மைசூர் மன்னன் சிக்க தேவராயனைக் கண்டித்து திரிசிரபுரம் படைகளும், தஞ்சைப் படைகளும் சேர்ந்து போரிட ஏற்பாடாகியிருப்பதையும் விளக்கிச் சொன்னான் பாலோஜி. சிக்க தேவராயன் காவிரி நீரைத் தடுத்ததால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தவன் தஞ்சை மன்னன் ஷாஜிதான். ஆகவே ஷாஜி இந்த ஏற்பாட்டைக் கேட்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

     இந்த சமாதான ஏற்பாட்டைக் கேட்டதும் பாலோஜியின் மேல் வேறு காரணங்களுக்காக ஏற்கெனவே அவனுக்கு ஏற்பட்டிருந்த சீற்றமெல்லாம் பஞ்சாய் பறந்துவிட்டது. பாலோஜியின் ராஜதந்திரத்தை மெச்சிப் புகழ்ந்தான் அவன்.

     "நான் மட்டும் தனியே மைசூரின் மேல் படையெடுத்து அவனை வழிக்குக் கொண்டு வருவதென்பது நடவாத காரியம். அவ்வளவு வலிமையும் படை பலமும் என்னிடம் இல்லை. இந்த இக்கட்டான சமயத்தில் தஞ்சை நாட்டைக் காப்பாற்ற ராணி மங்கம்மாளோடு சமாதான உடன்பாடு செய்த உன் சாதுரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அப்பா! முன்பு உன்னைப் பற்றி நான் தவறாக நினைத்திருந்ததற்காக இப்போது நீ என்னை மன்னித்து விடவேண்டும்" என்று மனமுருகிப் பாலோஜியை வேண்டினான் ஷாஜி.

     உடன் தஞ்சைப் படைகள் திரிசிரபுரத்துக்கு விரைந்தன. அங்கு ஏற்கனவே மைசூருக்குப் புறப்பட ஆயத்தமாக இருந்த ஒரு பெரும் படையுடன் தளபதி நரசப்பய்யா காத்திருந்தார்.

     சோழ நாட்டின் உழவர் வாழ்வுக்கு உயிரோட்டமாயிருந்த காவிரி நீர்ப்பெருக்கு வறண்டதால் விளைந்த சீற்றம் அந்தப் படைவீரர்களின் வெப்பம் கலந்த மூச்சுக்காற்றில் மேலும் சூடேற்றியிருந்தது. எப்படியும் மைசூரின் மேல் படையெடுத்துக் காவிரி நீரைத் தடுக்கும் அணையை உடைத்தே ஆகவேண்டும் என்ற வேகத்தோடு படைகள் இருந்தன. தஞ்சை நாட்டுக்கும், மதுரைப் பெரு நாட்டுக்கும் ஒற்றுமை ஊற்றுச் சுரப்பதற்குக் காவிரி வறண்டு போக வேண்டியிருந்தது.

     காவிரி வறண்டிருக்காவிட்டால் அந்த ஒற்றுமையே ஏற்பட்டிராது. அந்த அசாத்தியமான் ஒற்றுமையைக் காவிரியின் வறட்சிதான் அவர்களிடையே ஏற்படுத்தியிருந்ததென்று சொல்ல வேண்டும்.

     தஞ்சைப் படைகளும், திரிசிரபுரம் படைகளும் மைசூரை நோக்கிப் பாயத் துணிந்து நின்றன. படைகளின் தளபதி நரசப்பய்யா மைசூரை வெல்லும் மன உறுதியோடு நிமிர்ந்து நின்றார்.

     ஆனால் முற்றிலும் யாரும் எதிர்பாராத அதிசயமாக அந்தச் சமயத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி அப்படையெடுப்புக்கே அப்போது அவசியம் இல்லாமல் போகும்படிச் செய்துவிட்டது.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247