முதல் அத்தியாயம்

     பாண்டியன் விடுதி அறைக்குத் திரும்பும் போது காலை மணி எட்டே முக்கால். சுதந்திர தின பரேடும் கொடியேற்றமும் எட்டரை மணிக்கே முடிந்து விட்டன. என்.சி.சி. உடைகளைக் கழற்றி மாட்டிவிட்டு உடுத்திக் கொண்டு வெளியே கிளம்புவதற்கு ஏதாவது கிடைக்குமா என்ற சந்தேகத்தோடு வேஷ்டி சட்டைகளைத் தேடிய போது கைப் பக்கத்தில் சற்றே கிழிந்திருந்த ஒரு கதர் அரைக்கைச் சட்டையும் வேஷ்டியும் தான் பெட்டியில் மீதமிருந்தன. பல்கலைக்கழகத்தின் கிழக்குப் பக்கத்து வாயிலின் அருகே காம்பவுண்டுச் சுவரை ஒட்டிச் சலவைக் கடை வைத்திருக்கும் 'ஹில்டாப் டிரை கிளீனர்ஸில்' கதர்த் துணிகளைக் கிழிப்பதில் மகிழ்ச்சியடைகிற சிலர் நிரந்தரமாக இருப்பதைப் பாண்டியன் அங்கே வந்த நாளிலிருந்து கவனித்திருக்கிறான். இதற்காகச் சென்ற ஆண்டில் அவனும் வேறு சில மாணவ நண்பர்களும் 'ஹில்டாப் டிரை கிளீனர்ஸ்' உரிமையாளர் தங்கப்பனிடம் சண்டை கூடப் போட்டிருந்தார்கள். அந்தச் சண்டை கூட இப்போது நினைவு வந்தது.

     காலை ஒன்பதரை மணிக்குச் சைக்கிள் கடை அண்ணாச்சி அவனையும் வேறு சில மாணவர்களையும் வரச் சொல்லியிருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரி பல்கலைக்கழகமாக மாறிய காலத்திலிருந்து அண்ணாச்சி கடை என்பது ஓர் அடையாளமாக - ஓர் இயக்கமாக, ஒரு சார்புள்ள தேசிய மாணவர்களிடையே பெயர் பெற்றிருந்தது. மாணவர்களுடைய நிறைகுறைகள், இயக்கங்கள், போராட்டங்கள் எதுவாயிருந்தாலும் அண்ணாச்சிக்கும் அதில் பங்கு இருக்கும். அண்ணாச்சி ஒரு விநோதமான மனிதர். அவருடைய கடையில் முருகன் படத்துக்கு அருகிலேயே நேரு படமும், விநாயகர் படத்துக்கு அருகிலேயே காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் படங்களும் இருக்கும். வெள்ளிக்கிழமை வாராந்தர பூஜையின் போது கடவுளுக்குச் சூட தீபாராதனை செய்கையில் இந்தத் தலைவர்களின் படங்களுக்கும் சேர்த்தே தீபாராதனை செய்வார். அவர் வெட்டரிவாள் மீசையும், பயில்வான் உடம்புமாக அவரைப் பார்க்கும் போது ஏற்படுகிற பயம், அந்த மீசையின் நடுவே வெண்பற்கள் தெரியச் சிரித்தபடி, "வாங்க தம்பீ!" என்று அவர் வரவேற்கும் போது மகிழ்ச்சியாக மாறிவிடும். அண்ணாச்சி கடையின் பின்புறம் மூங்கில் கழிகளால் தென்னோலைத் தடுப்புச் செய்த ஒரு சிலம்புக் கூடமும் உண்டு. அதில் காலை மாலை வேளைகளில் சில மாணவர்களுக்கு அண்ணாச்சி சிலம்பமும் மல்யுத்தமும் சொல்லித் தருவது வழக்கம். அண்ணாச்சியின் முழுப் பெயர் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவருடைய முழுப் பெயர் உக்கிர பாண்டியத் தேவர் என்று பாண்டியன் விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தான். ஆனாலும் அவரை அந்த முழுப் பெயர் சொல்லிக் கூப்பிட்டவர் யாரையும் அவன் பார்த்ததில்லை.

     பல்கலைக்கழகத்துக்கு வந்த பின் கடந்த இரண்டாண்டுகளில் அண்ணாச்சி கடைக்கு அவர் கூப்பிட்டனுப்பியும், கூப்பிட்டனுப்பாமலும் அவன் பலமுறை சென்றிருக்கிறான். அங்கே போவதில் மகிழாத மாணவர்களே அந்த வட்டத்தில் கிடையாது. பெயர்தான் சைக்கிள் கடையே தவிர நியூஸ் பேப்பர் வியாபாரம், மலைக் குளிருக்குக் கவசம் போன்ற முரட்டுக் கம்பளிகள் நாள் வாடகைக்குக் கொடுப்பது, வெற்றிலைப் பாக்கு, சிகரெட், சோடா கலர் போன்ற பெட்டிக் கடைப் பொருள்களின் விற்பனை எல்லாமே அங்கு உண்டு.

     அண்ணாச்சி கடைக்குப் போனால் தனக்குப் பிடித்ததும் தன்னைப் பிடித்ததுமாகிய கருத்து ஒற்றுமை உள்ள பல மாணவர்களை அங்கே சந்திக்கலாம் என்று தெரிந்திருந்தும் இன்று மட்டும் அவன் சிறிது தயங்கினான். தயக்கத்துக்குக் காரணம் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலுக்கு முதற்படியான தமிழ் அசோஸியேஷன், எகனாமிக்ஸ் அசோஸியேஷன், பாட்டனி அசோஸியேஷன் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட அசோஸியேஷன்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள். இனி அந்தப் பிரதிநிதிகள் கூடிப் பல்கலைக் கழக மாணவர்கள் பேரவைக்கு ஒரு தலைவனையும், துணைத் தலைவனையும், ஒரு செயலாளனையும், துணைச் செயலாளனையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அண்ணாச்சியும் மாணவ நண்பர்களும் தன்னைச் செயலாளனாக நின்று போட்டியிடச் சொல்லி வற்புறுத்துவார்களோ என்ற பயம் தான் அன்று அவர் கடைக்குப் போவதிலிருந்து பாண்டியனைத் தயங்கச் செய்தது. ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ஒரு 'ரெஸிடென்ஷியல் யுனிவர்ஸிடியில்' மாணவர் தலைவனாகவோ, செயலாளனாகவோ இருப்பதிலுள்ள சிரமங்களை அந்த இரண்டாண்டுகளில் பாண்டியன் மிக நன்றாகப் புரிந்து கொண்டிருந்தான். அண்ணாச்சிக்கும் பல்கலைக் கழகத்துக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் அந்தப் பல்கலைக்கழக எல்லையில தேசிய சக்தி வலுவிழந்து விடாமல் பாதுகாக்கும் முரட்டுப் பாதுகாவலராக அவர் விளங்கி வந்தார். பல மாணவர்களைப் பல சந்தர்ப்பங்களில் அண்ணாச்சி காப்பாற்றியிருக்கிறார்; உதவியிருக்கிறார்.

     தயக்கத்தோடு தயக்கமாக அறையிலிருந்து புறப்படும் போது இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு ஜூலை மாதத்து முன்னிரவில் தான் அந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நாளன்று, முதல் முதலாக அண்ணாச்சி கடையில் தஞ்சம் அடைந்து பாதுகாப்புப் பெற்ற பழைய நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டான் பாண்டியன்.

*****
     விடுமுறைக்குப் பின் பல்கலைக்கழகம் திறந்து சில நாட்களே ஆகியிருந்தன. புது அட்மிஷன்கள் இன்னும் முடியவில்லை. பாண்டியன் அன்றுதான் பி.யூ.சி. என்னும் புதுமுக வகுப்பில் இடம்பெற்று, 'நியூ ஹாஸ்டல்' பதினெட்டாவது எண்ணுள்ள அறையில் தங்கியிருந்தான். ஹாஸ்டல் ரிஜிஸ்டரில் பதிந்து கொண்டு அவனை அறைக்கு அனுப்புவதற்கு முன் அவனுடைய பேதைமை நிறைந்த முகத்தைப் பார்த்து அன்பும் அநுதாபமும் சுரந்ததாலோ என்னவோ எச்சரித்து அனுப்பினார் வார்டன்.

     "தம்பீ! நான் சொல்வதைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதே. உன் நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன். சீனியர் மாணவர்களிடம் சகஜமாகவும் நேச பாவத்துடனும் பழகத் தெரிந்து கொள். 'இந்தப் பல்கலைக்கழகத்திலுள்ள என்ஜினீயரிங், மெடிகல், விவசாயப் பிரிவுகள் உடபட எதிலும் 'ராகிங்' என்ற பெயரில் புதிய மாணவர்களிடம் பழைய மாணவர்களோ, பழகிய மாணவர்களோ எந்தக் குறும்பு செய்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்' என்று ரிஜிஸ்திரார் கையெழுத்துடன், நோட்டீஸ் போர்டில் அறிக்கை தொங்குகிறது. ஆனால், அந்த அறிக்கையை மதித்து, அதன்படியே சீனியர் மாணவர்கள் நடந்து கொள்வார்கள் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. மேலும் 'ஓரியண்டேஷன் டே' கொண்டாடுவதற்கு முன் யாரையும் யாரும் எதற்காகவும் கண்டிக்க முடியாது. இதெல்லாம் நீயாகப் பார்த்து அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இரண்டொரு நாளைக்கு வேதனையாகத்தான் இருக்கும். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும். முதலிலேயே ஆத்திரப்பட்டு நீ என்னிடமோ, ரிஜிஸ்திராரிடமோ 'கம்ப்ளெயிண்ட்' செய்தால் நாங்கள் சம்பந்தப்பட்ட சீனியர் மாணவர்களைக் கூப்பிட்டு விசாரிப்போம். ஆனால் அப்படி எங்களிடம் புகார் செய்வதும் உன்னோடு இருக்கும் சீனியர் மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதும் உன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. அதன் மூலம் நீ அவர்களை உன் நிரந்தர எதிரிகளாக்கிக் கொண்டு விடுகிறாய். பார்த்துச் சமாளித்துக் கொள். சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்திக் கொண்டு பின்னால் சிரமப்படாதே. உன் அறையில் ஏற்கெனவே சி. அன்பரசன் என்கிற பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவன் இருக்கிறான்."

     'ராகிங்' பற்றி ஏற்கனவே ஊரில் சக நண்பர்களிடம் நிறையக் கேள்விப் பட்டிருந்தான் அவன். அப்பாவியான புதிய மாணவர்களும், பயந்த சுபாவமுள்ளவர்களும் கூச்சமுள்ளவர்களுமே அதற்குப் பலியாவதுண்டு என்று தன் ஊரிலிருந்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் படிக்கப் போய் விடுமுறைக்கு வரும் மாணவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருந்தான் பாண்டியன். இப்போது இந்த வார்டன் அநாவசியமாக அதை மிகைப்படுத்தித் தன்னை எச்சரிப்பதாகத் தோன்றியது அவனுக்கு.

     அவனிடம் வார்டன் பதினெட்டாம் நம்பர் அறைக்கான இரண்டாவது சாவியைக் கொடுத்திருந்தார். 'நியூ ஹாஸ்டல்' என்ற அந்த விடுதி மலைச் சரிவில் இருந்தது. அறைக்குள் தன் பெட்டி படுக்கை - பொருள்களள வைத்துவிட்டு அவன் ஊர் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட போது மாலை மூன்று மணி.

     ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போன்ற ஐரோப்பிய நாட்டு மலை நகரங்களை நினைவூட்டுவதாயிருந்தது மல்லிகைப் பந்தல். கண்ணாடி கண்ணாடியாக ஏரிகளும், பூத்துக் குலுங்கும் பூங்காக்களும், சுற்றிலும் மேகம் மூடிய நீலமலைகளும், குப்பை கூளங்கள் அடையாத அழகிய தார் ரோடுகளும், காற்றில் வெப்பமே இல்லாத குளிர்ச்சியும் அவனுக்குப் புதுமையாயிருந்தன. ஏரி, ஏரியைச் சுற்றிய சாலைகள், கடை வீதி, நகரம், இவை தவிர பல்கலைக் கழகக் கட்டிடங்களும், விடுதிகளும், பாட்டனி பிரிவைச் சேர்ந்த பொடானிகல் கார்டனும், பூங்காக்களும், நீச்சல் குளமுமாக யுனிவர்ஸிடி காம்பஸின் அறுநூறு ஏக்கர் நிலப்பரப்பிலும் மற்றொரு தனி நகரமே இருப்பது போல் தோன்றியது. குளிர் நடுக்கவே, இரவில் ஸ்வெட்டரும் கம்பளியும் இல்லாமல் தூங்க முடியாது போலிருந்தது. பிளவர்ஸ் கார்னரில் இருந்த 'உல்லன் ஷாப்' ஒன்றில் போய்க் கம்பளியும் ஸ்வெட்டரும் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினான் பாண்டியன். மலை நகரமாகையினால் சீக்கிரமே இருட்டிவிட்டது. அவன் திரும்பிய போது அறை திறந்திருந்தது. விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இரண்டு மூன்று மாணவர்களின் அரட்டைக் குரல்களும், வெடிச் சிரிப்புகளும், கும்மாளமும் அறையை அதிரச் செய்து கொண்டிருந்தன.

     பாண்டியன் அமைதியாக உள்ளே நுழைந்து தன் கட்டிலில் கம்பளி ஸ்வெட்டர் அடங்கிய பொட்டலத்தை வைத்துவிட்டுத் திரும்பி இன்னும் தனக்கு அறிமுகமாகாத மற்ற மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தினான்.

     மற்ற மூவரும் பாண்டியனுக்குப் பதில் வணக்கம் செலுத்தாததோடு ஒரு கொசுவைப் பார்ப்பது போல் அவனை அலட்சியமாகப் பார்த்தனர். அந்த மூவரில் ஒருவன் தான் சி. அன்பரசனாக இருக்க வேண்டும் என்றும் மற்ற இருவரும் வேறு அறையில் இருந்து வந்திருக்க வேண்டும் என்றும் சுலபமாக அநுமானம் செய்ய முடிந்தது. பாண்டியன் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. சுபாவமாகவே அவர்களிடம் பழக முயன்றான்.

     "நான் பாண்டியன். புதுமுக வகுப்பில் புதிதாகச் சேர்ந்திருக்கிறேன்" - என்று தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்டு குலுக்குவதற்காக அவர்களை நோக்கி வலது கையை நீட்டினான் அவன். முதல் மாணவன் தன் பெயர் கலையழகன் என்று சொல்லிக் கைகுலுக்கிவிட்டு, இரண்டாமவனையும் மூன்றாமவனையும் பார்த்துக் குறும்புத்தனமாகக் கண்ணடித்து ஏதோ குறிப்புக் காட்டினான். இரண்டாமவன் தன் பெயர் மனோகரன் என்று சொல்லி கைகுலுக்கி விட்டு அடுத்தவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சைகை செய்தான். மூன்றாமவன் தன்னை அன்பரசன் என்று அறிமுகம் செய்து கொண்டு குலுக்குவதற்கு நீட்டப்பட்ட பாண்டியனின் கையை அப்படியே பிடித்து இழுத்து அவனை ஒரு பல்டி அடிக்க வைத்தான். நல்ல வேளையாகப் பாண்டியன் உயரமாகவும் பலமுள்ளவனாகவும் இருந்ததால் மோவாய்க் கட்டை தரையில் மோதிப் பல் உடைபடாமல் பிழைத்தது.

     அவ்வளவில் பாண்டியன் விழித்துக் கொண்டான். அவர்கள் தன்னை வம்புக்கு இழுக்கப் போகிறார்கள் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது. வார்டன் செய்த எச்சரிக்கையும் நினைவு வந்தது. முடிந்த வரை பொறுத்துப் போவதென்று தனக்குள் முடிவு செய்து கொண்டான் அவன். ஆனால் அவர்களோ அவன் பொறுமையை அளவு கடந்து சோதித்தார்கள். அவனை வலிந்து துன்புறுத்தினார்கள்.

     அன்பரசன் தன் சட்டைப் பையிலிருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்து உடனிருந்தவர்களுக்குக் கொடுத்து விட்டுத் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு தீப்பெட்டியை பாண்டியனிடம் நீட்டி ஒரே தீக்குச்சியில் மூன்று பேருக்கும் பற்ற வைத்து விடும்படி சொன்னான். பாண்டியன் சிரித்துக் கொண்டே அதைச் செய்து முடித்து விட்டான்.

     அன்பரசன் தன்னுடைய சிகரெட்டைப் பாதி புகைத்ததும் பாண்டியனிடம் நீட்டி, "இந்தா... மீதியை நீ பிடி" என்று அதிகாரக் குரலில் சொன்னான். பாண்டியன் முகத்தில் சிரிப்பு மறைந்தது. புருவங்கள் கூடி நெற்றி மேடு சுருங்கியது.

     "வழக்கமில்லை... நன்றி..."

     "இதுவரை இல்லையானால் என்ன? இப்போது வழக்கப்படுத்திக் கொள்."

     "அவசியமில்லை."

     "உன்னிடம் இருக்கும் வழக்கங்கள் எல்லாம் புனிதமானவையும் அல்ல; இல்லாத வழக்கங்கள் எல்லாம் மோசமானவையும் அல்ல. நீ இந்தச் சாக்குத் துணி வேஷ்டியும் கோணிப்பைச் சட்டையும் போடுகிறாய் என்பதால் எங்களைக் காட்டிலும் சிறந்தவனாகிவிட மாட்டாய்" என்று பாண்டியன் அணிந்திருந்த கதரைக் கிண்டல் செய்தான் அன்பரசன்.

     "நான் அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லையே?" என்று பாண்டியன் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே அன்பரசன் தன் விரலிடுக்கில் இருந்த பாதி சிகரெட்டைப் பலாத்காரமாகப் பாண்டியனின் வாயில் உதடுகளுக்கிடையே திணிக்க முற்பட்டான். பாண்டியன் அதைப் பறித்து ஜன்னல் வழியே வீசி எறிந்ததும் அன்பரசன் அடிபட்ட புலிபோல் சீறிக் கொண்டே அறைச் சுவரில் ஒட்டியிருந்த தனக்குப் பிடித்தமான தலைவர் ஒருவரின் படத்தைச் சுட்டிக் காட்டி, "நீல் டௌன்..." என்று கூப்பாடு போட்டு அந்தப் படத்துக்கு முன் பாண்டியனை மண்டியிடச் சொன்னான். படத்துக்குக் கீழே, மானம், மரியாதை, மதிப்பு என்று மூன்று வார்த்தைகள் பெரிதாக எழுதப் பட்டிருந்தன.

     "மிஸ்டர் அன்பரசன்! மானமுள்ள எவனும் பிறரை அவமானப் படுத்த மாட்டான். மரியாதை தெரிந்த எவனும் பிறரை அவமரியாதைப் படுத்த மாட்டான். மதிப்பை விரும்புகிற எவனும் பிறரை அவமதிக்க மாட்டான்."

     "நான் உன்னிடம் உபதேசம் கேட்கவில்லை, தம்பீ! மண்டியிடு என்றால் மண்டியிட வேண்டும்! அவ்வளவு தான்."

     "முடியாது என்றால் முடியாது."

     அவ்வளவில் ஹாஸ்டல் உணவு விடுதி மணி அடித்தது. சீனியர் மாணவர் யாவரும் பாண்டியனை விட்டு விடாமல் ஏதோ சிறைப்பட்ட கைதியை இழுத்துப் போவது போல் உணவு விடுதிக்கு உடன் கூட்டிக் கொண்டு போனார்கள். சாப்பிடும் போது ஒரே கலாட்டாவாக இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும் அன்பரசன் தன் கால் செருப்புக்களைக் கழற்றி, "இந்தா இதை ரெண்டையும் வலது கையில் எடுத்துக் கொண்டு, 'லேக் ரோடில்' மூன்று தரம் சுற்றி விட்டு வா. நீ சுற்றுகிறாயா இல்லையா என்று பார்க்க நாங்கள் மூன்று பேரும் உன் பின்னாலேயே வருவோம்," என்று பாண்டியனை அதட்டினான். பாண்டியின கையில் செருப்புக்களையும் திணித்து விட்டான். மூன்று முரட்டு உருவங்கள் அவனை நெருக்கிப் பிழிந்து விடுவது போல் தொடர்ந்தன. பல்கலைக்கழகக் காம்பவுண்டுக்கு அப்பால் வெளியே மெயின் ரோட்டுக்கு வந்ததும் அந்தச் செருப்புக்கள் இரண்டையும் அப்படியே அன்பரசன் மூஞ்சியில் வீசி எறிந்து விட்டு அருகிலிருந்த சைக்கிள் கடைக்குள் புகுந்து விட்டான் பாண்டியன். முரட்டு மீசையும் பயில்வான் போன்ற தோற்றமுமாகச் சைக்கிள் கடையில் உட்கார்ந்திருந்த அண்ணாச்சியை அடைக்கலம் நாடி நடந்ததைச் சொன்னான் பாண்டியன். சைக்கிள் கடையில் தென்பட்ட படங்களும் அண்ணாச்சியின் சுதேசிக் கோலமும், 'இந்த மனிதர் நமக்கு உதவுவார்' என்ற நம்பிக்கையைப் பாண்டியனுக்கு அளித்திருந்தன. 'விடுதி அறையில் சுவரிலிருந்த படத்தைக் காட்டி மண்டியிடச் சொன்னார்கள்' என்ற விவரத்தைக் கேட்டதும் அண்ணாச்சியின் கண்கள் சிவந்தன. அவரது மீசை துடித்தது.

     "ஓகோ!... இது மேற்படி ஆட்கள் வேலைதான். ஒவ்வொரு வருசமும் நம்ம பையன்களிலேயே யாராவது ஒருத்தனை இப்படி வம்பு பண்றதே அவங்களுக்கு வழக்கமாப் போச்சு... நீங்கள் பேசாம இப்பிடி உட்காருங்கள் தம்பீ! இனிமே இதை நான் கவனிச்சுக்கிறேன்" என்று அவனுக்குப் பதில் கூறிய அண்ணாச்சி, கடைப்பையன் ஒருவனைக் கூப்பிட்டு ஏதோ சொல்லி, சைக்கிளில் துரத்தினார். அதற்குள் அன்பரசன் இருபது முப்பது மாணவர்களைக் கட்சி சேர்த்துக் கொண்டு அந்தக் கடையின் மேல் படையெடுப்பது போல் வந்துவிட்டான். ஆனால் என்ன ஆச்சரியம்! கடை வாசலில் அண்ணாச்சி நிற்பதைக் கண்டதும் அந்தக் கூட்டம் பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டதைப் பாண்டியன் பார்த்தான்.

     ஆவேசமாக வந்த அன்பரசன், "அந்தப் பையனை வெளியிலே விட்டுடுங்க. வீணா நீங்க இதிலே சம்பந்தப்படாதீங்க..." என்று அண்ணாச்சிக்குக் கோரிக்கை விடுத்தான். அண்ணாச்சி மீசையை முறுக்கிவிட்டுச் சிரித்துக் கொண்டார்.

     "அதுக்கில்லே தம்பீ! ஏதோ படத்தைக் காமிச்சு அதுக்கு முன்னாலே மண்டி போட்டுக் கும்புடணுமின்னிங்களாமே, அதை இந்தத் தம்பி மட்டும் தனியாவா செய்யிறது?... கூட வந்து மண்டி போடறதுக்கு இன்னும் கொஞ்சம் பேரை வரச் சொல்லியிருக்கேன். இருந்து அவங்களையும் கூட்டிக்கிட்டுப் போங்க..." என்று அண்ணாச்சி சொல்லி முடிப்பதற்குள்ளே திமுதிமு திமுவென்று நானூறு ஐநூறு பேரடங்கிய ஒரு பெரிய மாணவர் கூட்டம் அங்கே வந்து அன்பரசன் குழுவினரை வளைத்துக் கொண்டது. பாண்டியனைக் கொடுமைப்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பின்பே அன்பரசன் குழு அங்கிருந்து தப்ப முடிந்தது. அப்போது மணவாளன் என்ற என்ஜினீயரிங் மாணவரை அண்ணாச்சி பாண்டியனுக்கு அறிமுகப்படுத்தி, "இங்கே இவரைப் போல் நம்ம ஆளுங்க நிறைய இருக்காங்க தம்பீ! பயப்படாதீங்க... உங்களை யாரும் எதுவும் பண்ணிட முடியாது. ஆனா அந்தப் பய ரூம்லே இனிமே நீங்க இருக்க வேண்டாம். நம்ம வகை சீனியர் மாணவர் ஒருத்தரையே தன் ரூமுக்கு உங்களை அழைச்சிக்கிட ஏற்பாடு பண்ணறேன்" என்று சொல்லி உடனே வந்திருந்த மாணவர்கள் மூலம் அதற்கும் ஏற்பாடு செய்துவிட்டார் அவர்.

     அன்று இரவே அவன் அறை மாறிவிட்டான். வார்டனிடம் நடந்ததைச் சொல்ல ஒரு பெரும் மாணவர் கூட்டமே சென்றதால் அவர் அந்த வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. மறுநாள் காலையிலேயே புது மாணவர்களிடையே அவனை ஹீரோ ஆக்கியிருந்தது இந்த நிகழ்ச்சி. இதற்காக அண்ணாச்சிக்கு அவன் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருந்தான்.

     இப்போது இவ்வளவு காலத்துக்குப் பின் மீண்டும் நினைத்த போது கூட அந்தப் பழைய சம்பவம் நேற்று நடந்தது போல் நினைவிருந்தது. பி.யூ.சி. முடிந்து பி.ஏ. முதலாண்டும் முடிந்து பல்கலைக்கழகமும், ஊரும் நண்பர்களும் நன்றாகப் பழக்கமான நிலையிலும் அன்று அண்ணாச்சி செய்த அந்த உதவியைப் பசுமையாக நன்றியோடு நினைவு வைத்துக் கொண்டிருந்தான் பாண்டியன்.

     அவன் அண்ணாச்சி கடைக்குப் போய்ச் சேர்ந்த போது கொடியேற்றி முடிந்து எல்லாருக்கும் சுதந்திர தின 'ஸ்வீட்' வழங்கிக் கொண்டிருந்தார் அண்ணாச்சி. சைக்கிள் கடையின் பின்பக்கத்து அறையில் மாணவர்கள், நாலைந்து மாணவிகள் உட்படக் கூட்டமாக அமர்ந்திருந்தனர். பாண்டியனும் உள்ளே போய் அமர்ந்தான். பாண்டியனைப் பார்த்ததுமே ஒருவன் ஆரம்பித்தான்.

     "இந்த ஆண்டின் மாணவர் பேரவைச் செயலாளர் வந்தாச்சு!"

     உடனே ஒரு பெரிய கைத்தட்டல் ஒலி எழுந்தது. அங்கிருந்த எல்லாரையும் அவனுக்குத் தெரியும். பெண்களில் மட்டும் ஒரே ஒரு புதுமுகம் - முகம் நிறைய மறைக்கும் கண்ணாடி அணிந்து அமர்ந்திருந்தாள். யாரென்று தெரியாத அவள் அத்தனை பேர் நடுவிலும் வண்ணங்கள் நிறைந்த தொரு பட்டுப் பூச்சிப் போல் தோன்றினாள். வந்து அமர்ந்ததுமே அவள் யார் என்று அறியும் ஆவல் இருந்தும் ஒரு பெண்ணைப் பற்றி முந்திக் கொண்டு அவசரப்பட்டு விசாரிப்பது மற்ற மாணவர்களிடையே தன்னைக் கேலிக்கு ஆளாக்கிவிடும் என்ற தயக்கத்தில் பேசாமல் இருந்தான் பாண்டியன்.

     அண்ணாச்சி உள்ளே வந்து அவனிடம் ஒரு தாளைக் காட்டி, "எல்லா மாணவர்களும் நீங்க தான் வரணும்னு ஆசைப்படறாங்க தம்பீ! இதிலே முன்மொழிபவர், வழி மொழிபவர் எல்லோரும் கையெழுத்துப் போட்டாச்சு. நீங்க கையெழுத்துப் போட வேண்டியதுதான் பாக்கி" என்று அபேட்சை மனுவை நீட்டினார்.

     "என்னாலே முடியாது அண்ணாச்சி. எனக்கு இது ஸெகண்ட் இயர். ஸெகண்ட் இயர், தேர்ட் இயர் பூரா படிப்பிலே கவனம் செலுத்தலாம்னு இருக்கேன்."

     "படிப்பிலே நல்லா கவனம் செலுத்துங்க... ஆனா அதோட இதுவும் இருக்கட்டும்."

     "நீதான் இருக்கணும் பிரதர்."

     "உன்னை நம்பி இங்கே ஒரு பெரிய இயக்கமே காத்துக்கிட்டிருக்கு அப்பா! நீயே மாட்டேன்னா எப்படி?"

     "இல்லை. தயவு செய்து என்னை விட்டுடுங்க. நான் எந்த வம்பும் வேண்டாம்னு பார்க்கிறேன்."

     "பிளீஸ் அக்ஸெப்ட் இட் அண்ட் ஸைன்."

     அண்ணாச்சி நாமினேஷன் தாளை அவன் முன் வைத்து, "நான் இவ்வளவுதான் சொல்லலாம். இனி உங்க பாடு, உங்க நண்பர்கள் பாடு" என்று சொல்லி விட்டு முன்புறம் கடையைக் கவனிக்கப் போய்விட்டார். தாளில் வழி மொழிபவர்களின் பெயர்களை வரிசையாகப் படித்துக் கொண்டு வந்தவன், 'கண்ணுக்கினியாள்' என்ற பெயரைப் படித்ததும் அது யாராக இருக்கும் என்ற வினா மனத்தில் எழப் பெண்கள் பக்கம் நிமிர்ந்து பார்த்தான். தனக்கு ஏற்கெனவே அறிமுகமான பெண்களின் பெயர்களைத் தவிர மீதமிருந்தவள் அந்தப் புதியவள் தான். அவள் பெயர் தான் கண்ணுக்கினியாளாக இருக்க வேண்டுமென்று பாண்டியன் புரிந்து கொண்டான். அந்தப் பெயருக்கும் அவள் தோற்றத்துக்கும் இருக்கிற பொருத்தத்தை அவன் வியந்து கொண்டிருக்கும் போதே அதற்குப் பொருத்தமில்லாத ஓர் அதிகப் பிரசங்கித்தனமான காரியத்தை அவள் செய்தாள்.

     ஒரு தந்தப் பதுமை துள்ளி எழுந்திருப்பது போல தன் இடத்திலிருந்து எழுந்து தன்னுடைய முன் கைகளை அணி செய்த வளையல்களில் இரண்டைக் கழற்றி, "மிஸ்டர்! ஒண்ணு, இதில் கையெழுத்துப் போட்டுக்குடுங்க... அல்லது இந்த வளையல்களைக் கையிலே போட்டுக் கொண்டு வெளியில் புறப்படுங்கள்" என்று அவன் முன் அவள் வளையல்களை எறிந்த போது ஒரே கைதட்டலும், சிரிப்பொலியும், விசில்களும் எழுந்தன. பாண்டியனுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போலிருந்தது. அவள் செய்த காரியம் அவனை ஓரளவு அவமானப்படுத்தி விட்டாலும் அவளது அந்தத் துணிச்சல் வியப்புக் கொள்ளக் கூடியதாக இருந்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு மறுபேச்சுப் பேசாமல் தலையைக் குனிந்த நிலையிலிருந்து நிமிராமலே அந்தத் தாளில் 'சுபாஷ் சந்திர பாண்டியன் என்னும் எஸ்.சி. பாண்டியன், இரண்டாவது ஆண்டு பி.ஏ. என்பதற்கு நேரே கையெழுத்திட்டு முன் மொழிந்து எழுதியிருந்த மாணவனிடம் அதைக் கொடுத்தான் பாண்டியன். அவன் இணங்கியதைப் பாராட்டும் வகையில் மீண்டும் கர ஒலி எழத் தொடங்கியது. அவளோ இப்போது ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு கைத் தட்டுவதை அவன் கவனித்தான். அண்ணாச்சியும் உள்ளே வந்து அவனைக் கட்டித் தழுவிப் பாராட்டுத் தெரிவித்தார். அந்தக் குழுவின் அப்போதைய மகிழ்ச்சி எல்லையற்றதாயிருந்தது.

     சிறிது நேரத்தில் மாணவர்கள் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்கள். மாணவிகளில் கூட இரண்டு மூன்று பேர் போய்விட்டார்கள். பாண்டியனுக்கு நெருக்கமான சில மாணவிகளும், அந்தக் கண்ணுக்கினியாளும், அவளுடைய சக மாணவி ஒருத்தியுமே அங்கே மீதமிருந்தனர். நண்பன் ஒருவன் பாண்டியனின் காதருகே மெதுவாகச் சொன்னான்.

     "ஒரு காலத்திலே மதுரையில் டிராமா கம்பெனி நடத்திய பிரபல கந்தசாமி நாயுடுவின் மகள். மதுரையிலேயே பி.யு.சி. முடித்துவிட்டு நம்ம பல்கலைக் கழகத்தில் ஃபைன் ஆர்ட்ஸ் ஃபேகுல்டியில் 'டிப்ளமா இன் டிராமா' படிக்க வந்திருக்கிறாள். பெயர் கண்ணுக்கினியாள். நம் அண்ணாச்சி, நாயுடு குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர்."

     "பெயரே நட்சத்திர அந்தஸ்தில்தான் இருக்கிறது" என்று நண்பனின் காதருகே முணுமுணுத்தான் பாண்டியன். அப்போது அவளே அவனருகில் வந்து, அவன் தேர்தலில் நிற்க இணங்கியதைப் பாராட்டும் வகையில், "நன்றி" என்றாள். அவனும் விடவில்லை.

     "நீங்கள் கொடுத்திருக்கும் அன்பளிப்பும் என்னிடம் பத்திரமாக இருக்கும். அதை எப்போது திருப்பித் தரவேண்டுமோ, அப்போது திருப்பித் தருவேன்!"

     "ஓ! வளையல்களைச் சொல்கிறீர்களா?" அவள் அவன் உள்ளத்தைச் சூறையாடுவது போல் சிரித்தாள். உரையாடலை வேறு பக்கத்தில் திருப்ப விரும்பினான் பாண்டியன். "இந்த ஊர் குளிர்ப் பிரதேசம். இவ்வளவு பெரிய 'ஸன் கிளாஸ்' இங்கே தேவைப்படாது."

     "இது ஸன் கிளாஸ் இல்லை. கோ... கோ... கிளாஸ், அழகுக் கண்ணாடி. ஒரு ஃபேஷன்."

     "தங்கச்சி ஒரு டிராமாவே ஆடினதாகக் கேள்விப் பட்டேனே?" என்றார் அண்ணாச்சி.

     "டிராமாவாலே தான் அண்ணன் வழிக்கு வந்தாரு" என்றான் உடனிருந்த மாணவன்.

     பாண்டியன் அவளைக் கேட்டான்.

     "இது என்ன ஸப்ஜெக்ட்னு இதிலே வந்து சேர்ந்தீங்க?"

     "ஏன்? ரொம்ப நல்ல ஸப்ஜெக்ட்னு ஆசைப்பட்டுத் தான் சேர்ந்திருக்கேன். கல்கத்தாவிலே ரவீந்திர பாரதி சர்வகலாசாலையில் இந்த சப்ஜெக்ட் ரொம்ப நாளா இருக்கு. அவ்வளவு தூரம் என்னை அனுப்ப அப்பாவுக்கு மனசு இல்லை. இங்கே சேர்த்திருக்காரு."

     "உங்க நாயினாவுக்கு வாழ்க்கையே இதுதானே அம்மா?" என்று அண்ணாச்சி கந்தசாமி நாயுடுவைப் பற்றிக் குறிப்பிட்டார்.

     "நானும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்" என்றான் பாண்டியன்.

     அண்ணாச்சி ஒரே உற்சாகத்தில் இருந்தார். "தம்பீ! அந்தக் காலத்திலே இவங்க நாயினா கம்பெனியிலே சம்பூர்ண மகாபாரத நாடகத்திலே நானு பீமசேனன் வேஷம் கட்டியிருக்கேன். அப்ப இந்தக் கண்ணு சின்னப் பாப்பாவா இருந்திச்சு."

     'கண்ணுக்கினியாள்' என்ற முழுப் பெயரை உரிமையோடு 'கண்ணு' என்று செல்லமாக அழைத்ததிலிருந்து அண்ணாச்சிக்கு அந்தக் குடும்பத்தின் மேலிருந்த பாசத்தைப் பாண்டியன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவள் அழகோ அவனை நேராகவும் ஓரக் கண்களாலும் திரும்பத் திரும்பப் பார்க்கச் செய்தது.

     சிறிது நேரத்தில் அவளும் சக மாணவியும் விடை பெற்றுக் கொண்டு விடுதிக்குப் புறப்பட்டுப் போய்விட்டார்கள். ஹாஸ்டலிலிருந்து வெளியே சென்று திரும்பும் விதிகள் பெண்கள் பிரிவில் மிகவும் கண்டிப்பானவை. அன்று சுதந்திர தினமாகையால் காலை பதினொரு மணி வரை அனுமதி இருக்கும். பத்தே முக்காலுக்கு கண்ணுக்கினியாளும் அவள் தோழியும் புறப்பட்டதற்கு அதுதான் காரணம் என்று பாண்டியன் புரிந்து கொண்டான். அவள் போனதும் அண்ணாச்சியை அவன் கேட்டான்:

     "அண்ணாச்சி! இதென்ன உங்க நாயுடு 'கண்ணுக்கினியாள்'னு ரொம்பப் பழைய காலத்துப் பேரா வச்சிருக்காரே? ஏதோ சரித்திரக் கதையிலே வர்ற மாதிரியில்ல இருக்கு? இந்தப் பேர் நல்லாத் தெரியலியே...?"

     "ஆமாங்க தம்பீ! அது நாயினாவோட கிராமத்துக் குலதெய்வமான அம்மன் பேரு! நாயினா செல்லமா 'கண்ணு'ன்னுதான் கூப்பிடுவாரு."

     அவனுக்கும் மீதமிருந்த சில மாணவர்களுக்கும், அண்ணாச்சி பையனை அனுப்பி, எதிர் வரிசையிலிருந்த டீக்கடையிலிருந்து தேநீர் வரவழைத்துக் கொடுத்தார். அவர்கள் தேநீர் குடித்துக் கொண்டிருந்த போதே ஓர் ஆள் வந்து, "சார், ஹேண்ட்பில்ஸ் பத்தாயிரமும் அடிச்சாச்சு" என்று ஒரு பெரிய பாக்கெட்டைக் கொண்டு வந்து அண்ணாச்சிக்கு முன்னால் வைத்தான். அண்ணாச்சி பாக்கெட்டைப் பிரித்து அவனுடைய தேர்வுக்கு வாக்குகளை வேண்டும் அந்த முதல் நோட்டீஸை அவனிடமே வழங்கினார். அவன் திகைப்பு அடங்குவதற்குள், "தம்பீ! மன்னிச்சுக்குங்க. நீங்க சம்மதிப்பீங்கன்னு நம்பி நானும் உங்க சிநேகிதன்மாருங்களுமாகச் சேர்ந்து, முந்தா நாளே நோட்டீஸ், போஸ்டர் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணிட்டோம்" என்று சொல்லிச் சிரித்தார் அண்ணாச்சி.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247