பதின்மூன்றாவது அத்தியாயம்

     பொதுக்கூட்டம் நடந்த இடத்தருகே மேட்டில் மரங்களின் மறைவிலிருந்து கல்லெறிந்தவர்களில் பெரும்பாலோர் தப்பி ஓடி விட்டனர். மாணவர்களால் துரத்திப் பிடிக்கப்பட்ட சிலர் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். கூட்டத்தைக் கலைக்க முயன்றவர்களின் சதி பலிக்கவில்லை. 'மணவாளனின் மேல் இனி ஒரு கல் கூட விழக் கூடாது' என்று தடுக்கும் ஆவலில் அவனைக் காக்கும் கவசம் போல் மேடையேறி மறைத்துக் கொண்டு நின்றார் அண்ணாச்சி. கல்லெறிய வந்தவர்கள் விரட்டப்பட்ட பின் மீண்டும் அமைதி நிலவியது.

     அப்போது அண்ணாச்சி மேடையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டார். மணவாளன் மீண்டும் பேசத் தொடங்கினார். அவர் பேசி முடித்தவுடன் மேடையில் வந்து விழுந்த கற்களை ஒன்று திரட்டி ஏலம் விட்ட போது அந்தக் கற்கள் மட்டுமே முந்நூறு ரூபாய்க்கு ஏலம் போயின. கற்களை ஏலம் விட்டுக் கொண்டிருக்கும் போதே அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடக்கும் கடைப் பையன்களைப் பார்ப்பதற்குப் புறப்பட்டுப் போய்விட்டார் அண்ணாச்சி. பேசி முடிந்ததும் மணவாளனை அழைத்துப் போய் எதிர்த்தாற் போல் மருந்துக் கடையை ஒட்டியிருந்த மலையாளி டாக்டர் ஒருவரிடம் காட்டி நெற்றிக் காயத்துக்கு மருந்து போட்டு 'டிரஸ்' செய்து கொண்டு வந்தார்கள் மாணவர்கள். மண்டையில் காயத்தின் மேல் துணிக்கட்டுடன் பத்திரிகை போட்டோவுக்காக நிருபர் ஒருவர் வந்து மணவாளனைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு போனார்.

     சூறையாடப்பட்ட அண்ணாச்சிக் கடையைப் புதுபித்துக் கொடுப்பதற்காக அங்கே கூடியிருந்தவர்களிடம் வசூலான தொகையை உடனே எண்ணிக் கூட்டத்திலேயே அறிவிக்க முடியாமல் இருந்தது. எறியப்பட்ட கற்களை ஏலம் விட்ட முந்நூறு ரூபாய் தவிர மூன்று துண்டுகள் நிறைய ரூபாய் நோட்டுக்களும், சில்லறைகளுமாக வேறு வசூலாகி நிரம்பியிருந்தன. கூட்டம் கலைந்த பின்னும் அதை எண்ணி முடிக்க வெகு நேரம் ஆயிற்று. பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக் கழக விடுதிகளுக்குத் திரும்பிவிட்டாலும் நூறு மாணவர்கள் எண்ணுகிறவர்களுக்குக் காவலாக மேடையைச் சூழ்ந்து கொண்டு இரவையும் குளிரையும் பொருட்படுத்தாமல் நின்றார்கள்.

     இரவு பதினொன்றே கால் மணிக்கு மொத்த வசூல் 'ரூபாய் ஆறாயிரத்து எண்ணூற்று ஐம்பத்திரண்டு' என்று பாண்டியன் மணவாளனிடம் கணக்குச் சொன்னான். அப்போதுதான் அண்ணாச்சியும் அடிபட்ட கடைப் பையன்களைப் பார்த்துவிட்டு வந்தார். பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில் அந்த தொகையை மணவாளன் அண்ணாச்சியிடம் கொடுத்த போது முதலில் அவர் அதை ஏற்க மறுத்தார். அப்புறம் மாணவர்களும், மணவாளனும் வற்புறுத்தி அவர் அதை ஏற்கும்படி செய்தனர். மறுநாள் காலையிலேயே கடையைப் புதுப்பிக்கும் ஏற்பாடுகளில் முனைந்தார் அவர்.

     வெற்றி விழாவுக்கு அடுத்த நாள் காலையிலேயே துணை வேந்தர் அவசரமாக ஓரியண்டேஷன் நாளைத் தொடங்கி வைத்துப் பேசினார். அன்று மாலை தான் மணவாளனும் மல்லிகைப் பந்தலிலிருந்து ஊர் திரும்பினார். காலையில் துணை வேந்தரின் ஓரியண்டேஷன் நாள் சொற்பொழிவு முடிந்ததுமே பாண்டியன் முதலிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் மணவாளனை வழியனுப்பி விடை கொடுக்க கூடி விட்டனர்.

     மணவாளன் ஊர் திரும்பியதற்கு அடுத்த நாள் காலையிலிருந்து தேர்தல் புயல்களும் போட்டிகளும் மறைந்து, மறந்து தத்தம் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள் மாணவர்கள். மணவாளனே போகும் போது 'இனிமேல் படிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்துங்கள்' என்று தான் அறிவுரை கூறிவிட்டுப் போயிருந்தார். நாட்கள் விரைந்தன. செப்டம்பரில் பாரதி விழா வந்து போயிற்று. பல்கலைக் கழக நாடகப் பிரிவு மாணவ மாணவிகள் பாரதியாரின் பாஞ்சாலி சபத நாடகத்தை நடித்தனர். கண்ணுக்கினியாள் பாஞ்சாலியாக நடித்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்றாள். அக்டோபர் இரண்டாம் தேதியன்று காலை காந்தியடிகளின் ஜெயந்தி நாளன்று அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகப் பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் மாணவர்கள் கூடியிருந்தார்கள். பாதிக் கூட்டம் நடப்பதற்குள்ளேயே மருத்துவக் கல்லூரி விடுதியைச் சேர்ந்த மேரிதங்கம் என்ற மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்ட செய்தி பரவிக் கூட்டம் கலைந்தது. ஏற்கெனவே திருமணமான விரிவுரையாளர் ஒருவர் தான் இந்தத் தற்கொலைக்கு மூலகாரணம் என்று தெரிய வந்ததும் எல்லாப் பிரிவு மாணவர்களும் அந்த விரிவுரையாளரின் இராஜிநாமாவைக் கோரி ஒன்று திரண்டனர். தேர்வுகள் தள்ளிப் போடப்பட்டுக் காலாண்டு விடுமுறைக்காக முன்கூட்டியே பல்கலைக் கழகத்தை மூட்ச் செய்து உடனே விடுதிகளைக் காலி செய்யுமாறு மாணவர்களுக்கு உத்தரவு இட்டார் துணை வேந்தர். சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் ஒரு மந்திரிக்கு நெருங்கிய உறவினர் என்பதால் அவர் மேல் நடவடிக்கை எடுக்க அஞ்சிப் பல்கலைக் கழகத்தை மூடினார்களே தவிர அமைதிக்காக மூடவில்லை என்பது எல்லா மாணவர்களுக்கும் புரிந்துதான் இருந்தது. துணை வேந்தரும், டாக்டர்களும், அதிகாரிகளும், போலீஸும் மந்திரிக்காகப் பயந்து எவ்வளவுக்கு எவ்வளவு மூடி மறைக்க முயன்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு எல்லா உண்மைகளும் வெளியாகிப் பரவிவிட்டன. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பிரேதத்தைப் பரிசோதனை செய்த போது அவள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. நிச்சயமாக அதற்கு அந்த விரிவுரையாளரே காரணம் என்று அவளே எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் மாணவர்கள் கையில் சிக்கியிருந்தது. ஆளும் கட்சிக்கு வேண்டியவரான அந்த விரிவுரையாளர் மேல் நடவடிக்கை எடுக்கப் பயந்து எல்லாரும் ஒதுங்கி விட்டதாகத் தெரிந்தது. பல்கலைக் கழகத்தை மூடி விடுதிகளைக் காலி செய்யச் சொல்லிவிட்டால் மறுபடியும் திறந்து கொள்ளும் போது எல்லாரும் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்று துணை வேந்தர் நினைப்பதாகத் தோன்றியது. உண்மையை மறைப்பதற்குத் துணை வேந்தரும் மற்றவர்களும் மேற்கொண்ட தீவிரம் தான் மாணவர்களின் சந்தேகத்தையும் கோபத்தையும் வளர்த்தன.

     அக்டோபர் இரண்டாம் தேதியன்று காலையில் மருத்துவக் கல்லூரி விடுதியை ஒட்டியிருந்த ஏரியில் அந்தப் பெண்ணின் பிரேதம் மிதந்த போது அநேகமாக எல்லா மாணவர்களும் மாணவிகளும் ஆடிட்டோரியத்தில் காந்தி ஜெயந்திக்காகக் கூடியிருந்தார்கள். பயமும், பதற்றமும் அடைந்த பல்கலைக் கழக நிர்வாகமும், போலீஸும், ஆர்.டி.ஓ.வும் உடனே 'போஸ்ட்மார்ட்டம்' முதலிய கண் துடைப்புக்களைச் செய்து பெற்றோர்களுக்குத் தகவலும் அறிவிக்காமல் தாங்களே பிரேதத்தை அடக்கம் செய்தும் முடித்துவிட்டார்கள். பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் 'தண்ணீரில் தவறி விழுந்து நேர்ந்த மரணம்' என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் பிரேதப் பரிசோதனையின் போது உடன் இருந்த இளம் டாக்டர் ஒருவர் மூலம் அவள் கருவுற்றிருந்தாள் என்பதையும் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்பதையும் மாணவர்கள் அறிய முடிந்தது. இந்தச் சம்பவம் மாணவர்களிடையே கொந்தளிப்பு ஊட்டியிருந்தது.

     எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு மாணவியாகையினால் தனி அறையில் இருந்திருக்கிறார்கள். முந்திய தினம் மாலையில் அவளுடைய அறை பூட்டப்பட்டுப் பூட்டிலேயே சாவி தொங்கியதைக் காண நேர்ந்த பக்கத்து அறை மாணவி ஒருத்தி ஏதோ சந்தேகப்பட்டு அறையைத் திறந்து பார்த்த போது மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்ததாம். அதனடியில் இரு கடிதமும் அது பறந்து விடாமல் இருக்கவோ என்னவோ அதன் மேல் பேனாவும் வைக்கப்பட்டிருந்ததாம். அந்தக் கடிதத்தை இவள் படித்திருக்கிறாள். படித்தவள் தன் சிநேகிதியின் மானத்தைப் பறையறைய அந்தக் கடிதம் காரணமாயிருக்க வேண்டாம் என்று கருதியோ என்னவோ அந்தக் கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியேறித் தன்னால் முடிந்த வரை முடிந்த இடங்களில் அவளைத் தேடிப் பார்த்திருக்கிறாள். அவள் கிடைக்கவில்லை. பயத்தினால் யாரிடமும் இதை அந்தப் பக்கத்து அறை மாணவி வெளியிடவில்லை. ஆனால் அக்டோபர் இரண்டாம் தேதி பிற்பகலில் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவன் மோகன்தாஸை இரகசியமாகச் சந்தித்து நடந்ததைச் சொல்லி, சிநேகிதியின் அறையில் தான் எடுத்த கடிதத்தையும் கொடுத்துவிட்டாள் அந்த மாணவி. அந்தக் கடிதம் இறந்தவள் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தாள் என்பதையும், குற்றவாளியான விரிவுரையாளர் அவளிடம் எல்லை மீறி நடந்து கொண்டு அவள் வாழ்க்கையைப் பாழாக்கியதால் தான் அவள் தற்கொலைக்குத் துணியும்படி ஆயிற்று என்பதையும் தெளிவாக நிரூபிப்பதாக இருந்தது.

     தனிமையில் குற்றம் செய்வதற்குக் கூசாத மனிதர்கள் தாங்கள் செய்த குற்றங்கள் பொதுவில் நிரூபணமாகி விடுமோ என்ற நிலை வரும்போது மட்டும் கூசிக் கூசித் தவிப்பது விந்தைதான். மந்திரி வரை செல்வாக்கு உள்ள அந்த விரிவுரையாளரின் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. மருத்துவக் கல்லூரிப் பெண்கள் விடுதியைச் சுற்றியும் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு, யாருக்கும் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது. விடுதிகளிலிருந்தும், பல்கலைக் கழக எல்லையிலிருந்தும் மாணவர்களை வெளியேற்றிவிட்டுப் போலீசைக் கூப்பிட்டுக் குடியேற்றியிருந்தார் துணை வேந்தர். மந்திரிக்குச் சொந்தக்காரரான ஒழுக்கமற்ற ஒரு விரிவுரையாளரைக் காப்பாற்றுவதற்காக மேலும் பல ஒழுங்குகளைத் தவறவிட்டிருந்தார் துணை வேந்தர். போலீஸை வைத்து மிரட்டி நிர்ப்பந்தப்படுத்தி அக்டோபர் இரண்டாந் தேதி மாலை ஆறு மணிக்குள் எல்லா மாணவர்களையும், மாணவிகளையும் பல்கலைக் கழக எல்லையிலிருந்தும், விடுதிகளிலிருந்தும் வெளியேற்றிவிட்டார்கள்.

     மலைக் குளிரில் தங்க இடமும் கிடைக்காமல் உடனே ஊர் திரும்ப அத்தனை ஆயிரம் பேர்களுக்குப் போக்கு வரவு வசதிகளும் இன்றி மாணவர்கள் தெருவில் நின்றார்கள். மல்லிகைப் பந்தல் நகரின் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ஒய்.எம்.ஸி.ஏ. கட்டிடம், ஒய்.எம்.ஐ.ஏ. கட்டிடம், தேசீய இளைஞர் சங்க அலுவலகம், எஸ்டேட் தொழிலாளர் யூனியன் அலுவலகம் ஆகியவற்றில் எல்லாம் மாணவ மாணவிகள் நிரம்பி வழிந்தனர். விடுதி வசதிகளைத் திடீரென்று ரத்துச் செய்து ஆயிரக்கணக்கில் மாணவர்களை வெளியில் துரத்தியதால் நகரின் நிலைமைகள் பாதிக்கப்பட்டன. உணவுக் கடைகள், சாப்பாட்டு ஓட்டல்கள் திணறின. யாத்திரிகர்கள், நிறைய வரக் கூடிய மாதங்களான ஏப்ரல், மே முதலிய கோடைக் கால மாதங்களில் அதிகமான ஓட்டல்களைத் திறந்திருப்பதும், மற்ற மாதங்களில் ஓட்டல்கள், சாப்பாட்டுக் கடைகளின் எண்ணிக்கை குறைந்து விடுவதும் மல்லிகைப் பந்தல் நகரின் நடைமுறை ஆகும். திடீர் என்று ஓர் அக்டோபர் மாத ஆரம்பத்தில் பல்கலைக் கழகத்தை மூடி, விடுதி வசதிகளையும் இல்லாமல் செய்து விட்ட கொடுமையால் குளிக்க வெந்நீர் வசதி இல்லாமல் தங்க இடம் இல்லாமல் உணவில்லாமல் எதிர்பாராத நிலையில் உடனுக்குடன் கைக்காசு கொடுத்துச் சாப்பிடப் பண வசதியும் இல்லாமல், மாணவர்கள் நடுத்தெருவில் நின்று தவித்தார்கள். பெற்றோர்களுக்குத் தந்திகள், கடிதங்கள், டிரங்க்கால்கள் பறந்தன.

     இந்த நிலையில் அண்ணாச்சி மாணவர்களுக்கு உதவியாகத் தம் கடைக்குப் பின்புறம் இருந்த சிலம்பக் கூடத்தை மறைத்துக் கீற்றுக் கொட்டகை போட்டு ஒரு தற்காலிகமான 'மெஸ்'ஸையே நடத்த நேர்ந்தது. கல்யாணங்களுக்குப் பாத்திரம் வாடகைக்கு விடும் ஒரு கடையில் பாத்திரங்கள் எடுத்து இரண்டு சமையற்காரர்களையும் ஏற்பாடு செய்து மாணவர்களைச் சோற்றுக்கு அலையவிடாமல் காப்பாற்றினார் அண்ணாச்சி. கடையின் பின்புறம் மாணவர்களும், மாணவிகளும் ஐம்பது ஐம்பது பேராகச் சாப்பிட்டு விட்டு, வெளியேற இட வசதி செய்யப் பட்டிருந்தது. ஒரு பந்தி முடிந்து அடுத்த பந்தி வந்து அமர்வதற்குள் இலைகளைப் போட்டுப் பரிமாறி உபசரிக்கக் கண்ணுக்கினியாள் தலைமையில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் சுறுசுறுப்பாகப் பணியாற்றினர்.

     அவர்கள் பரிமாறிய அன்பையும் மலர்ச்சியையும் பார்த்து, "நீங்கள் எல்லோருமே ஹோம் ஸயின்ஸ் மாணவிகளோ என்று சந்தேகமாக இருக்கிறது. உங்களுக்கு மிகவும் நன்றி கூற வேண்டும்" என்றான் ஒரு மாணவன். இதைக் கேட்டுக் கண்ணுக்கினியாள் சிரித்துவிட்டுச் சொன்னாள்: "இல்லை! இதில் ஒருவர் கூட ஹோம் ஸயின்ஸ் மாணவி கிடையாது. நான் 'தியேட்டர் ஸயின்ஸ்' படிக்கிறேன். மற்றவர்கள் எல்லோருமே 'ஆர்ட்ஸ்' பிரிவு மாணவிகள். ஒரு வேளை 'ஹோம் ஸயின்ஸ்' மாணவிகள் பரிமாற வந்திருந்தால் அவர்கள் அனைவருமே 'தியேட்டர் ஸயின்ஸ்' பிரிவோ என்று உங்களுக்குச் சந்தேகம் வந்திருக்கலாம்! சந்தேகங்கள் எப்போதுமே இப்படித்தான். அவை முதலிலேயே சரியாயிருப்பதில்லை. அல்லது முடிவிலே சரியாயில்லை என்று நிரூபிக்கப்படுகின்றன."

     அவள் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களிடம் இப்படி உரையாடியபடியே பரிமாறிக் கொண்டிருந்த வேளையில் பாண்டியனும், மோகன்தாஸும் வேறு சில மாணவர்களும் அண்ணாச்சிக் கடை முகப்புக்குக் கூட்டமாக வந்தார்கள். அவர்களில் பாண்டியன் மட்டும் முகப்பிலிருந்தபடியே கீற்றுப் படலை விலக்கி உள்ளே தலையை நீட்டி, "ஒரு நிமிஷம் இப்படி வந்துவிட்டுப் போயேன். உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்று கண்ணுக்கினியாளை அருகிலே கூப்பிட்டான்.

     "இதோ ஹோம் ஸயின்ஸ் முடிகிறது. தியேட்டர் ஸயின்ஸ் ஆரம்பமாகப் போகிறது" என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவன் மற்றொரு மாணவன் காதருகே குறும்பாக இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கண்ணுக்கினியாள் பரிமாறிக் கொண்டிருந்த தூக்கு வாளியை வேறொருத்தியிடம் கொடுத்து விட்டுப் பாண்டியனைப் பின் தொடர்ந்து கடை முகப்புக்கு வந்தாள். வருவதற்கு முன் தன்னையும், பாண்டியனையும் இணைத்து அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் குறும்பாகப் பேசிய சொற்கள் அவள் காதிலும் தான் கேட்டன. ஆனால் அந்தச் சொற்களை அவள் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. 'குறும்பு என்பது இளமையின் செல்லப் பிள்ளை. எந்த நிலையிலும் அவர்களால் குறும்பை விட்டு விட முடியாது. அவர்கள் பிறரையும் குறும்பு செய்வார்கள். பிறர் குறும்புகளையும் ஏற்றுக் கொள்வார்கள்' என்றெண்ணியபடி அச்சொற்களைச் சுபாவமாக எடுத்துக் கொண்டு மேலே சென்றாள் அவள். ஏனெனில் தானே அப்படிக் குறும்புகளைச் செய்த வேளைகள் அப்போது அவளுக்கு நினைவு வந்தன. கண்ணுக்கினியாள் வெளியே வந்ததும் பாண்டியன் அவளிடம் கேட்டான்:

     "உடனே பல்கலைக் கழகத்தைத் திறக்கக் கோரியும், தற்கொலை செய்து கொண்ட மாணவி மேரிதங்கம் விஷயமாகப் பகிரங்க விசாரணை செய்யக் கோரியும் நாளைக் காலையிலிருந்து பல்கலைக் கழக வாயிலில் உண்ணாவிரதம் தொடங்குகிறோம். உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள என் தலைமையில் என்னைத் தவிர இன்னும் ஐந்து மாணவர்கள் பேர் கொடுத்திருக்கிறார்கள். மாணவர்கள் சார்பில் நாங்கள் ஆறு பேர் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். மாணவிகள் சார்பில் நீயும் இன்னும் ஐந்து பேரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்து விட்டேன். உன்னைத் தவிர இன்னும் ஐந்து பேர்களை மட்டும் பத்து நிமிஷங்களுக்குள் நீ முடிவு செய்து என்னிடம் சொல்ல வேண்டும்."

     "அது சரி! என் விஷயமாக என்னைக் கேட்காமல் நீங்களே எப்படி முடிவு எடுக்கலாம்? என்னைப் பட்டினி போட நீங்கள் யார்?"

     "நான் யாரா? ஆளைப் பார். நான் தான் உன்னுடைய சர்வாதிகாரி. பட்டினி போட்டால் உனக்கும் நல்லது தான். பெண்கள் இளைத்து ஒல்லியாகப் பூங்கொடி போல் இருக்க வேண்டும் என்பார்கள்..."

     "நான் பூங்கொடி போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கிறேனாம்?"

     "கண்ணாடியில் போய்ப் பார்த்துக் கொள், தெரியும்."

     "உங்களைப் பார்த்த பின்புதான் கண்ணாடியில் பார்ப்பதையே நான் விட்டு விட்டேனே...?"

     "அப்படியானால் நான் சொல்வதை மறுபேச்சுப் பேசாமல் உடனே ஒப்புக் கொள்."

     "உத்தரவு!"

     தன் அரும்பு முல்லைப் பற்களில் அவன் உள்ளத்தைக் கிறங்க அடிக்கும் சிரிப்போடு ஒரு தாளும் பேனாவும் வாங்கிக் கொண்டு மாண்விகளைச் சந்தித்துப் பேர் கேட்க உள்ளே சென்றாள் அவள். ஐந்து பேர்கள்தான் அவளுக்கு வேண்டியிருந்தது. ஆனால் அவளுடைய முகராசியின் விளைவாகப் பதினொரு மாணவிகள் உண்ணாவிரதத்துக்குப் பேர் கொடுக்க முன் வந்தார்கள். அந்தப் பதினொரு பேரில் அவளே ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து உடனே முடிவு செய்து பாண்டியனிடம் அறிவித்தாள். பாண்டியன் அப்போதே அந்தப் பட்டியலையும் உண்ணாவிரத அறிவிப்பையும் எழுதி நோட்டீஸ் அச்சிடுவதற்கு அண்ணாச்சியிடம் கொடுத்து அனுப்பினான். காரியங்கள் மிகவும் வேகமாக நடந்தன.

     பின்னால் ஒரு நீதி விசாரணை என்று வந்து விட்டால் அப்போது காண்பிப்பதற்குச் சரியான சாட்சியமாக இருக்கும் என்பதால் தன்னிடம் கிடைத்த மேரிதங்கத்தின் கடிதத்தை மிகமிக இரகசியமாகப் பாதுகாத்தான் மோகன்தாஸ். சோதனையிட்டுப் போலீஸார் அந்தக் கடிதத்தை தன்னிடமிருந்து பறித்து விட நேருமோ என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாக அந்தக் கடிதத்தை அண்ணாச்சியிடம் கொடுத்து வைத்திருந்தான் அவன். அந்தக் கடிதம் மோகன்தாஸுக்கும், அதை அவனிடம் கொடுத்த பக்கத்து அறை மாணவிக்கும், பாண்டியனுக்கும், அண்ணாச்சிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருந்தது. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர் நிலைக்கோட்டை என்ற ஊரில் இருந்தார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினராயிருந்து பின்பு கிறிஸ்தவ சமயத்துக்கு மாறியவர்கள். தந்தை தாய் இருவருமே பஞ்சாயத்து யூனியன் நடுத்தரப் பள்ளி ஒன்றிலே செகண்டரி கிரேடு ஆசிரியர்களாக இருந்தனர். அக்டோபர் மூன்றாம் தேதி காலை அவர்கள் இருவருமே மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்ததாகவும், குய்யோ முய்யோ என்று கதறி அழுது விட்டுப் போனதாகவும் தெரிய வந்தது. ஆனால் அந்தப் பெற்றோர்கள் பிறரையோ, பிறர் அந்தப் பெற்றோர்களையோ சந்திக்க முடியாமல் போலீஸ், ஆர்.டி.ஒ., துணை வேந்தர் எல்லாருமே கெடுபிடி பண்ணி எல்லாவற்றையும் மறைத்திருந்தார்கள். மேரிதங்கத்துக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டு என்றும் தூக்கத்தில் நடக்கும் பழக்கத்தால் அவள் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தாள் என்றும் அவள் பெற்றோரே ஒப்புக் கொண்டு விட்டதாகவும், "விசாரணை எதுவும் தேவையில்லை" என்றும் அவர்களே ஒப்புக் கொண்டு விட்டதாகவும், செய்திகள் பரவிக் கொண்டிருந்தன. மல்லிகைப்பந்தல் நகரே அந்தச் சம்பவத்தால் பரபரப்படைந்து வதந்திகள் மயமாக மாறியிருந்தது. எங்கும் இதே பேச்சாக இருந்தார்கள் மக்கள். நகரில் பீதியும் பதற்றமுமாக ஓர் இயல்பற்ற சூழ்நிலை நிலவியது.

     ஏற்கெனவே திட்டமிட்டபடி மாணவர்களில் ஆறு பேரும் மாணவிகளில் ஆறு பேரும் பல்கலைக் கழக வாயிலில் கால வரையறையின்றி உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டார்கள்.

     உண்ணாவிரதம் தொடங்கிய அதே சமயத்தில் மாணவர்களின் குழு ஒன்று மேரிதங்கத்தின் பெற்றோரைச் சந்திக்க இரகசியமாக நிலக்கோட்டைக்கு விரைந்தது. ஆனால் நிலக்கோட்டையில் அந்தப் பெற்றோரின் வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது. அவர்களைப் பற்றிக் கேட்டாலே ஊரில் யாரும் பதில் சொல்லப் பயந்தார்கள். அந்தத் தெரு நிறைய சி.ஐ.டி.கள் நிரப்பப்பட்டிருந்தார்கள்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247