பதினேழாவது அத்தியாயம்

     மல்லிகைப் பந்தலிலிருந்து மதுரைக்குச் செல்லும் மலைப் பகுதிச் சாலையின் மண் சரிந்து மூடியதன் காரணமாகப் பிரயாணம் தடைப்பட்டதில் நயினாவுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருந்ததோ அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது கண்ணுக்கினியாளுக்கு. எப்படியாவது அந்தப் பிரயாணம் நின்று போய்விட வேண்டும் என்று தான் அவள் தவித்தாள். அவளுடைய தவிப்பும், ஏக்கமும் வீணாகவில்லை. பாண்டியனைப் பார்த்துச் சொல்லி விடைபெற்றுக் கொள்ள முடியாமல் அவன் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது, தான் மட்டும் நவராத்திரி மகிழ்ச்சியை நாடித் தந்தையோடு ஊருக்குப் போவதில் அவளுக்கு மனமேயில்லை. பிரயாணம் நின்று போகும்படி இருபத்தேழாவது மைலில் ஆடுகாத்தான் பாறைக்குப் பக்கத்தில் சரிந்த மலையை வாழ்த்தியது அவள் உள்ளம். அவர்கள் பஸ் நிலையத்துக்குச் செல்லும் போது இருந்ததை விட இப்போது மழை மேலும் அதிகமாயிருந்தது. காற்று வேறு சுழித்துச் சுழித்து வீசவே குடை பிடித்துக் கொண்டு நடந்தாலும் நனைந்துவிடும் போலிருந்தது! பிரயாணம் இல்லை என்று ஆனாலும் கூட மழை ஓரளவு குறைந்த பின்பே பஸ் நிலையத்திலிருந்து திரும்ப முடியும் என்று ஆகிவிட்டது. காற்றும் மழையும் அவ்வளவு கடுமையாயிருந்தன.

     பஸ் நிலையத்தில் பிரயாணிகள் தங்குவதற்காகப் போடப்பட்டிருந்த நீண்ட தகரக் கொட்டகையில் கூட ஓரங்களில் மழைச்சாரல் அடித்து நனைந்துக் கொண்டிருந்தது. கலைந்து போக முடியாமல் மழையினால் அங்கே தங்க நேர்ந்து விட்டவர்கள் நெருக்கியடித்துக் கொண்டு நின்றார்கள். அண்ணாச்சி அங்கே தென்பட்ட தமக்குத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் நாயினாவை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசிக் கொண்டிருந்தார். கண்ணுக்கினியாளோ தம் மனத்தின் அந்தரங்கமான மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் தனக்குள்ளேயே அடக்கிக் கொள்ளவும் முடியாமல் உடன் இருந்த வகுப்புத் தோழியோடு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.

     "இந்த ஊரில் பலர் மழைக் காலத்தை வெறுக்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ இந்த ஊரின் கோடைக் காலத்தை விட மழைக்காலம் தான் பிடித்திருக்கிறது. அறையிலேயே அடைத்துக் கொண்டு நமக்கு விருப்பமான ஆசிரியர்களின் நாவல்களை ஒவ்வொன்றாகப் படித்துத் தீர்க்க ஏற்ற காலம் இதுதான்!"

     "அது மட்டுமில்லை, கண்ணுக்கினியாள்! மழைக் காலத்துக்கும் காதலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம் இலக்கியங்கள் எல்லாம் சொல்லுகின்றன!" என்று அவள் மனநிலையைப் புரிந்து கொண்டு கண்ணைச் சிமிட்டியபடி குறும்பாகப் பதில் சொன்னாள் வகுப்புத் தோழி. அவள் தன்னைச் சரியாகக் கண்டு பிடித்துவிட்டாள் என்பது கண்ணுக்கினியாளுக்குப் புரியவும் நாணம் வந்து அவளைக் கவ்விக் கொண்டது.

     "சிவகாமீ! காதலைப் பற்றி நீ ஏதாவது 'தீஸிஸ்' எழுதப் போகிறாயா என்ன? ரொம்பத்தான் அதைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்து வைத்திருக்கிறாய் போலிருக்கிறதே..."

     "அப்படி ஏதாவது எழுதினால் அதில் அநுபவம் உள்ளவளான உன்னைக் கேட்காமலா செய்வேன்?"

     "ஏதேது வாய்க் கொழுப்பு அதிகமாகிறாற் போலிருக்கிறதே? விவரம் தெரியாமல் 'நம்ம சிவா' ரொம்ப சாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே உன் சிநேகிதகள்?"

     "அண்ணாச்சி கடையில் கைவளைகளைக் கழற்றி எறிந்து, 'தேர்தல் மனுவில் கையெழுத்துப் போடத் துணிவு இல்லாவிட்டால் இந்த வளைகளை அணிந்து கொண்டு ஓடுங்கள்' என்று யாரிடம் அன்றைக்குச் சவால் விட்டாயோ அவரையே நினைத்து உருகும் பரம சாதுவாக நீதான் இன்று மாறிவிட்டாய்."

     கண்ணுக்கினியாள் தன் தோழியின் இந்த நளினமான அன்புக் குற்றச்சாட்டுக்கு மறுமொழி ஏதும் சொல்ல முடியாமல் நாணித் தலைகுனிந்தாள். மழை நீரின் கனத்தால் தலை கவிழும் ஒரு மெல்லிய பூவின் நிலையில் அப்போது அவள் இருந்தாள்.

     அவளே சில விநாடி மௌனத்துக்குப் பின் தோழி சிவகாமியிடம், "ஊருக்குப் புறப்பட்டுப் போவதற்குள் எப்படியாவது அவரை ஒருமுறை பார்த்துப் பேசிவிட வேண்டும் சிவகாமி! 'தற்கொலை முயற்சி' என்று உண்ணாவிரதம் இருந்த எல்லாரையும் கைது செய்தது தான் செய்தார்கள். மாணவிகளாகிய நம்மை மட்டும் ஏன் உடனே விடுதலை செய்து தொலைத்தார்கள்? கைதாகி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாவிட்டாலும் ஒரே இடத்தில் இருக்கிறோம் என்ற திருப்தி மட்டுமாவது இருந்தது... இப்போது அந்த நிம்மதியும் இல்லாமல் நான் தவிக்கிறேன்..." என்றாள்.

     "பின்னென்ன? காதல் என்பதே பரஸ்பரம் தவிப்பது தானே? மனமும் உணர்வுகளும் தவிப்பதை விடப் பெரிய காதல் இந்த உலகில் வேறு எங்கே இருக்கப் போகிறது..."

     "நீ சொல்வதைப் பார்த்தால் அவரும் அங்கே ஆஸ்பத்திரிக் கட்டிலில் என்னை நினைத்துத் தவித்துக் கொண்டிருப்பார் என்று ஆகிறது. எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை சிவகாமி? ஆண்கள் எல்லோருமே கல் நெஞ்சுக்காரர்கள்! பல வேளைகளில் தங்களுக்காகத் தவித்து உருகும் பேதைகளை அவர்கள் சுலபமாகவும், வசதியாகவும் மறந்து விடுகிறார்கள்."

     "ஆனாலும் அந்தக் கல் நெஞ்சுக்காரர்களை நாம் மறக்க முடியவில்லை. நம்மை மறந்து விடுபவர்களையும் நாம் மறக்காமல் எண்ணி உருகும் கலப்பில்லாத அன்பைச் சகுந்தலை காலத்திலிருந்தே நாம் போற்றி வருகிறோம்."

     "அப்படிப் போற்றி வருவதனால்தான் தலைமுறை தலைமுறையாகப் பல துஷ்யந்தர்கள் ஆணினத்தில் உருவாகி வருகிறார்கள். பெண்ணினத்தின் பேதமைக்குச் சகுந்தலையும் ஆணினத்தின் சோர்வுக்கு துஷ்யந்தனும் நிலையான உருவங்கள்."

     "பயப்படாதே கண்ணுக்கினியாள்! பாண்டியன் அப்பழுக்கில்லாதவர். அவர் ஒரு நாளும் துஷ்யந்தன் ஆகி விடமாட்டார். நீ பாக்கியசாலி. இந்தப் பல்கலைக் கழகத்தில் காதலிக்கிற எத்தனையோ மாணவிகளுக்கு எத்தனையோ அழகான மாணவர்கள் கிடைப்பார்கள். காதலும் நிகழும். அது பெரிய காரியமில்லை. ஆனால் நீயோ மாணவர்கள் பல்லாயிரம் பல்லாயிரம் பேருக்குத் தலைவராகிற ஒரு தன்மானம் மிக்க மாணவரை உன் தலைவனாக்கிக் கொண்டிருக்கிறாய். நீ ஒரு மாணவரின் அன்புச் சிநேகிதி மட்டும் இல்லை. ஒரு தலைவனின் அன்புத் தோழி என்பது பெருமைக்குரியது."

     வகுப்புத் தோழி சிவகாமி இப்படிக் கூறிக் கொண்டிருந்த போது வெளியே பெய்து கொண்டிருந்த மழை தனியத் தொடங்கியிருந்தது. அதற்குப் பதில் கண்ணுக்கினியாளின் உள்ளத்தில் ஆனந்தமழை பெய்யத் தொடங்கியிருந்தது. அவள் இதயம் உடனே ஓடிச் சென்று பாண்டியனைக் காணத் துடித்தது. ஏற்கெனவே அண்ணாச்சியிடம் எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை திருப்பி வாங்கி இன்னும் விரிவாக எழுதிக் கொடுத்து விட விரும்பினாள் அவள். அவர்கள் பஸ் ஸ்டாண்டிலிருந்து திரும்பும் போது நன்றாக இருட்டி விட்டது. மஞ்சு மூட்டத்தில் தெரு விளக்குகள் மங்களாக மினுக்கத் தொடங்கியிருந்தன. 'பிளவர்ஸ் கார்னரிலு'ம் ஏரியை ஒட்டிய சாலைகளிலும் இருளோடு இருளாகக் குடைகள் நகர்ந்து கொண்டிருந்தன. மஞ்சு மூட்டத்தில் ஆட்கள் தெரியாமல் குடைகளே நடப்பது போல் தோன்றிய காட்சி வேடிக்கையாக இருந்தது. ஏரியிலே 'போட்' கிளப் கட்டிடமும் படகுத் துறைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. பல்கலைக் கழக காம்பஸுக்குள் இருந்த ஏரியை விட நாலைந்து மடங்கு பெரிய இந்த ஏரி நகரத்தின் நடு மையமாகக் கண்ணாடி பதித்தது போல் அமைந்திருந்தது. கடைத் தெருக்கள், தியேட்டர்கள், பெரிய பூங்காக்கள், நகரசபை அலுவலகம், டவுன் ஹால் முதலிய எல்லாம் இந்த ஏரியின் நான்கு புறத்து வீதிகளிலுமே அமைந்திருந்தன. ஏரியைச் சுற்றி நான்கு புறமும் மரங்களடர்ந்த பகுதியில் மேட்டிலும் சரிவுகளிலுமாக அமைந்திருந்த குடியிருப்பு வீடுகளின் விளக்கு ஒளிகள் ஏரி நீர்ப்பரப்பில் பிரதிபலித்த காட்சி மிக மிக அழகாயிருந்தது.

     பஸ் நிலையத்திலிருந்து திரும்பும் போது கண்ணுக்கினியாளின் தந்தை நாயுடுவையும் தங்கள் வீட்டிலேயே வந்து தங்குமாறு அன்புடன் வேண்டினாள் சிவகாமி. நாயுடு அதற்கு இணங்காமல் அண்ணாச்சியோடு தங்கிக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்.

     "நீ உன் சிநேகிதியோடு போய்த் தங்கிக்க தங்கச்சீ! நாயினாவை நான் பார்த்துக்கிறேன். உல்லன் கோட் கம்பளி எல்லாம் குடுத்து இந்தக் குளிரை அவரே மறக்கும் படி செஞ்சிடறேன்" என்று தந்தையைப் பற்றி மகளிடம் உறுதிமொழி கொடுத்து அனுப்பினார் அண்ணாச்சி. புறப்படுமுன் அண்ணாச்சியிடம் அந்தக் கடிதத்தை நினைவாகக் கேட்டுத் திருப்பி வாங்கிக் கொண்டாள் அவள். வேறொரு விரிவான கடிதம் எழுதி மறுநாள் அவரிடம் கொடுப்பதாகவும் அதை அவர் எப்படியும் பாண்டியனிடம் சேர்த்து விட வேண்டும் என்றும் குறிப்பாகப் புலப்படுத்தியிருந்தாள். ஏரிக்கரைப் பூங்கா அருகிலேயே அவர்கள் பிரிந்து விட்டார்கள். அப்போதே மழை மீண்டும் மெல்ல மெல்லத் தொடங்கியிருந்தது.

     கடைக்குத் திரும்பியதும் பையனை அனுப்பிச் சூடாக இட்டிலி வாங்கி வரச் செய்து நாயுடுவும் அண்ணாச்சியும் இரவு உணவை முடித்துக் கொண்டார்கள். கடை முகப்பை ஒட்டிப் பின்புறம் இருந்த அறையில் ஒரு கட்டிலில் மெத்தை கம்பளி விரிப்புக்களோடு நாயுடுவைக் குளிருக்கு அடக்கமாகப் படுக்க வைத்து விட்டுப் பையன்களோடு உட்கார்ந்து கடை வரவு செலவைக் கவனிக்கத் தொடங்கினார் அண்ணாச்சி. கடைப் பையன்களில் ஒருவன் நாயுடுவின் கட்டிலருகே அங்கிருந்த பெஞ்சுகளில் இரண்டை இணைத்துப் போட்டு விரிப்பு கம்பளியெல்லாம் போர்த்தி அண்ணாச்சிக்காக ஒரு படுக்கை ஆயத்தம் செய்து கொண்டிருந்தான். வெளியே மழை வலுத்து இருந்தது. அலுப்பு அதிகமாக இருந்ததாலோ அல்லது தள்ளாமை காரணமாகவோ நாயுடு படுத்த உடனேயே இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி விட்டார். மழை நிற்கும் என்று அதிக நேரம் எதிர்பார்த்தும் நிற்காத காரணத்தால் கடைப் பையன்கள் மழைக் கோட்டுகளை அணிந்து கொண்டு குடையோடு புறப்பட்டுப் போய்விட்டார்கள். பையன்கள் போனதும் உள்ளே இருந்தபடியே கடை முகப்பை அடைக்கும் இரும்பு ஷட்டரை இறக்கி விட்டு விட்டு விளக்கை அணைப்பதற்காகச் சென்ற அண்ணாச்சி வெளிப்புறம் இரும்பு அடைப்பு தட்டப்படுவதைக் கேட்டு ஸ்விட்சை 'ஆஃப்' செய்யாமலேயே மறுபடி ஷட்டரைத் தூக்கினார். வெளியே மழைக் கோட்டும் குடையுமாக அண்ணாச்சிக்கு மிகவும் வேண்டியவரான போலீஸ் கான்ஸ்டேபிள் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அப்போது போலீஸ் உடையில் இல்லை. ஆனால் அவசரமாகவும், பரபரப்பாகவும் காணப்பட்டார். "வாங்க தம்பீ! ஏது இந்த அடை மழையிலே? இந்நேரத்துக்கு இந்தப் பக்கமா வந்தீங்க..." என்று அண்ணாச்சி அவரை வரவேற்றார். அவர் உள்ளே வந்து கொண்டு, "முதல்லே ஷட்டரைப் போடுங்க... அப்புறம் பேசலாம். ரொம்ப முக்கியமான காரியமாகத்தான் வந்தேன்... உங்க காதிலே போட ஒரு விஷயம் இருக்கு... அவங்க பண்ற அக்கிரமம் என் மனசு பொறுக்கலே... நான் வந்து சொன்னேனின்னு மட்டும் வெளியிலே வரப்படாது. ஆனா விஷயம் உடனே உங்களுக்குத் தெரியணும்..."

     "என்ன விஷயம் சொல்லுங்க தம்பீ! பையங்க சமாசாரம் தானே?"

     "ஆமாங்க அண்ணாச்சி! செக்ஷன் திரீ நாட் நயன்லே பிடிச்ச ஆறு பையன்களிலே ரெண்டு பேரைக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே விடுதலை பண்ணிட்டாங்க. ஆனா மாணவர் யூனியன் தலைவன், காரியதரிசி, உப தலைவன், உப காரியதரிசின்னு முக்கியமான போஸ்ட்களிலே இருக்கிற பையங்க நாலு பேர் மேலேயும் 'கிரிமினல் கான்ஸ்பியரஸி'ன்னு சார்ஜ் பிரேம் பண்ணி ஆஸ்பத்திரியிலேருந்து ஜெயிலுக்கு மாத்திட்டாங்க. அந்தப் பையன் பாண்டியனோட ஹாஸ்டல் அறையிலே வெடி மருந்துச் சாதனங்களும், நாட்டு வெடிகுண்டு தயார் செய்யற திட்டமும் இருந்ததைக் கண்டுபிடிச்சாங்களாம். மோகன்தாஸ் ரூமிலே வைஸ்சான்ஸலரையும் ரிஜிஸ்திராரையும் கொலை செய்ய வேண்டுமென்று பல மாணவர்கள் கூடி இரத்தத்திலே கையெழுத்திட்ட கடிதாசு போலீஸ் 'செர்ச்'சிலே கிடைச்சுதாம். மத்த ரெண்டு பேர் அறையிலே யுனிவர்ஸிடி 'டவர் கிளாக்'கை வெடி வைத்துத் தகர்க்கிறது சம்பந்தமாகக் கடிதாசு கிடைச்சிருக்காம்..."

     "இதெல்லாம் என்ன கதை தம்பீ! யாரைக் கவிழ்த்து விட இந்த மோசடி வேலை எல்லாம் பண்றாங்க...?"

     "கதைதான் அண்ணே! யுனிவர்ஸிடி யூனியன் எலெக்ஷன்லேயே இந்தப் பையங்க ஜெயிச்சது அவங்களுக்குப் பிடிக்கலே. ஜெயிச்சவங்களை எதிலியாவது மாட்டி வைக்கணும். இவங்க ரூம்களிலே அவங்களா எதை எதையோ கொண்டு போய்ப் போட்டு வேணும்னே வம்புலே மாட்டி வைக்கிறாங்க. இதுக்கு வி.ஸி. ரிஜிஸ்திரார், ஆர்.டி.ஓ., போலீஸ் எல்லாம் உடந்தை... எனக்கு மனசு கேட்கலை... உங்க காதிலே போட்டுட்டுப் போகலாம்னுதான் மழையோட மழையா ஓடியாந்தேன்..."

     "வேண்டியவங்க செய்கிற தீமைகளைப் பாதுகாக்கவும், வேண்டாதவங்க செய்கிற நன்மைகளை ஒடுக்கவுமே அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகிற வரையில் அதிகாரங்களை எதிர்க்கிற மனப்பான்மை தவிர்க்க முடியாத ஒரு பொதுச் சக்தியாக இங்கே இருந்தே தீரும்... நீ வந்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி தம்பீ!... மேலே ஆக வேண்டியதை நாங்க கவனிக்கிறோம்... உன்னை நான் காமிச்சுக் கொடுக்க மாட்டேன். அந்தப் பதினெட்டாம் படிக் கருப்பன் மேல் சத்தியம். இனிமேல் கிளம்பிப் போகலாம்... யாராவது பார்த்திடாமே புறப்படு" என்று அந்தக் கான்ஸ்டேபிளுக்கு விடை கொடுத்தார் அண்ணாச்சி.

     கான்ஸ்டேபிள் புறப்பட்டுப் போனபின் தூங்கிக் கொண்டிருந்த நாயுடுவை எழுப்பி, "நாயினா! நான் வெளியிலே பூட்டிக்கிட்டு ஒரு முக்கிய வேலையாப் போறேன். நீங்க நிம்மதியாகத் தூங்குங்க. நான் திரும்பி வர்றத்துக்கு நடு ராத்திரி ஆவும். கதவைத் தட்டி உங்க தூக்கத்தைக் கெடுக்காம இருக்கணும்னுதான் வெளியிலே பூட்டிக்கிறேன்னு சொல்றேன். பிளாஸ்கிலே வெந்நீர் இருக்கு. பாத் ரூம் லைட் ஸ்விட்சு உங்க கட்டிலுக்கு மேலே சுவர்லே இருக்கு" என்று அவருக்கு விவரம் கூறிய பின் வெளியேறி ஷட்டரைத் தள்ளிப் பூட்டிக் கொண்டு புறப்பட்டார் அண்ணாச்சி. மழைக்குப் பாதுகாப்பாக ரெயின் கோட், குடை, டார்ச் லைட், ஆளுயரக் கிளுவைக் கம்பு சகிதம் புறப்பட்டிருந்தார் அவர். லேக் ரோடு சந்திப்பில் போய் அங்கிருந்த பெரிய தபால் தந்தி ஆபீஸ் பொது டெலிபோன் பூத்திலிருந்து வீட்டில் ஃபோன் வசதி உள்ள உள்ளூர் மாணவர்கள் சிலருக்கு ஃபோன் செய்து உடனே தேசிய இளைஞர் சங்கக் கட்டிடத்துக்கு அவர்களை வரச் சொன்னார். ஆளும் கட்சியைத் தவிர மற்ற எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்த உள்ளூர்த் தலைவர்களுக்கும் ஃபோன் செய்தார். தொழிற் சங்கப் பிரமுகர்களையும் வரச் சொன்னார். அண்ணாச்சியின் பெருமுயற்சியால் அந்த அடைமழையில் நள்ளிரவில் பல்கலைக் கழக மாணவர்களின் பிரச்னை சம்பந்தமாகத் தேசிய இளைஞர் சங்க மாடியில் ஒரு கூட்டம் நடைபெற்றது. மாணவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்க் குற்றச்சாட்டுக்களையும், பொய் வழக்குகளையும் எதிர்த்துப் போராடவும், நடவடிக்கை எடுக்கவும் சர்வ கட்சியினரும் அடங்கிய 'செயற்குழு' ஒன்று அமைக்கப்பட்டது. அந்தச் செயற்குழு மறுநாள் காலையிலேயே துணை வேந்தரையும், ஆர்.டி.ஓ.வையும் தனித் தனியே சந்தித்துப் பேசுவதென்றும் முடிவாயிற்று.

     எல்லா முடிவுகளையும் செய்துவிட்டு அவர்கள் கலையும் போது இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. தக்க சமயத்தில் எல்லாருக்கும் தகவல் தெரிவித்து ஒன்று சேர்த்து பேச வைத்ததற்காக அண்ணாச்சியை அனைவரும் பாராட்டினார்கள்.

     மறுநாள் காலையில் முதல் நாளிரவு கான்ஸ்டேபிள் மூலம் இரகசியமாகத் தெரிந்த எல்லாக் குற்றச்சாட்டுகளுமே பத்திரிகையில் வந்துவிட்டன. மாணவர்கள் அத்தகைய குற்றங்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை யாருமே நம்பத் தயாராக இல்லை. அந்தக் குற்றச்சாட்டுக்களும், நடவடிக்கைகளும், திட்டமிட்ட பழிவாங்கல் வேலை என்பது எல்லாருக்கும் புரிந்தது.

     காலையில் செய்தியைப் பத்திரிகைகளில் படித்துவிட்டுக் கண்ணுக்கினியாளும், சிவகாமியும் அண்ணாச்சியின் கடைக்கு ஓடி வந்தார்கள். அண்ணாச்சி அவர்களுக்குத் தைரியம் கூறினார். விஷயத்தைக் கேள்விப்பட்டுப் பத்திரிகையிலும் படித்துவிட்டு, "இதென்னப்பா? இரணியன் ராஜ்யத்திலே கூட இப்பிடி எல்லாம் நடந்திருக்காதே? மகா கொடுமையாயில்ல இருக்கு?" என்று வருத்தப்பட்டார் நாயுடு.

     "நாயினா! இதைவிட இரணியன் ராஜ்யம் ஒருவிதத்திலே நல்லாக் கூட இருந்திருக்கும்! ஏன்னா இரணியன் ராஜ்யத்திலே இரணியன் ஒருத்தன் தான் இரணியனா இருந்திருப்பான். மத்தவங்க அத்தினி பேரும் நல்லவங்களா இருந்திருப்பாங்க. இப்ப, அதிகாரிகள், சர்க்கார், போலீஸ், நிர்வாகம், கட்சியாட்கள்னு நூற்றுக்கணக்கான இரணியனுகளை ஒரே சமயத்திலே எதிர்கொள்ள வேண்டியிருக்கு. அது தான் வித்தியாசம்" என்றார் அண்ணாச்சி.

     சிறைக்குப் போய்க் காலையில் பாண்டியனையும் மற்ற மூன்று மாணவர்களையும் சந்திப்பதற்காக அண்ணாச்சியும் கண்ணுக்கினியாளும் சிவகாமியும் சென்றார்கள். நாயினாவும் வருவதாகச் சொன்னார்.

     "மழையா இருக்கு! நீங்க ஏன் சிரமப்படணும்? நீங்க இங்கேயே இருங்க" என்று அவரைத் தடுத்துவிட்டார் அண்ணாச்சி. மழையோடு மழையாக மாணவர்களைச் சந்திக்கச் சிறைச்சாலைக்குச் சென்றார்கள் அவர்கள். மாணவர்களுக்குக் கொடுப்பதற்காகப் பிஸ்கெட் பொட்டலங்கள், ஆப்பிள், ஹார்லிக்ஸ் என்று ஏதேதோ வாங்கிக் கொண்டாள் கண்ணுக்கினியாள். இரவெல்லாம் கண்விழித்துப் பாண்டியனிடம் சேர்ப்பதற்காக அவள் எழுதிய கடிதம் வேறு இருந்தது. அந்தக் கடிதத்தை எழுதிய போது இருந்த உற்சாகம் இப்போது அவளிடம் இல்லை. ஆஸ்பத்திரியில் கொடுக்கலாம் என்று எழுதிய கடிதத்தைச் சிறைச்சாலையில் கொடுக்க நேரிடும் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அப்போது அவள் ஒரு நிலைக்குமேல் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுதே விட்டாள். சிவகாமிக்கும் அண்ணாச்சிக்கும் அவளை அழுகையிலிருந்து தவிர்த்துச் சகஜ நிலைக்குக் கொண்டு வருவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.

     "நேற்றே பூதலிங்கம் சார் ஜாடையாகச் சொல்லியது பலித்து விட்டது அண்ணாச்சி! 'ஜெயித்த மாணவர்கள் மேல் என்னென்னவோ பொய்க் குற்றச்சாட்டுக்களை யெல்லாம் சுமத்துவதற்கு ஏற்பாடு நடக்கிறது. இதெல்லாம் எங்கே போய் நிற்கும் என்றே தெரியவில்லையம்மா' என்று அவர் நேற்றுச் சொன்னது இன்று நடந்து விட்டதே?" என்று புலம்பிக் கண்ணீர் உகுத்தாள் கண்ணுக்கினியாள்.

     சிறைச்சாலையில் அவர்கள் மாணவர்களைச் சந்திக்கக் கால் மணி நேரம் அனுமதி தரப்பட்டிருந்தது. பாண்டியனைப் பார்த்ததும் கண்ணுக்கினியாள் மறுபடியும் கண்கலங்கி அழத் தொடங்கிவிட்டாள்.

     சிறைக்கம்பிகளுக்கு வெளியே கையை நீட்டி அவள் கண்ணீரைத் துடைத்தபடி பாண்டியன் சொன்னான்.

     "அசடே! இதற்காகவே அழுதுவிட்டால் இதைவிடப் பெரிய கொடுமைகளைத் தாங்கும் சக்தியை நீ பெற முடியாது. நியாயமான கோபத்தோடு வருகிறவர்களிடம் அமைதியையும் சாந்தத்தையும் பற்றிப் பேசுவதும், சாந்தமாகவும், அமைதியாகவும் வருகிறவர்களிடம் அதிகார மிடுக்கோடு கோபப்படுவதுமாக ஓர் ஆட்சி இங்கே நடக்கிறது. கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது, பணிந்தால் அதிகாரம் செய்வது, அதிகாரத்தை மதிக்காவிட்டால் பணிவது இதுதான் இன்றைய நடைமுறை. இதில் பயப்படுகிறவர்களும், அழுகிறவர்களும் ஜெயிக்க முடியாது. மன உறுதியோடு போராட வேண்டும். அந்த மன உறுதி எங்களுக்கு இருக்கிறது. உனக்கும் அது இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்."

     இதைக் கேட்டு அவன் மனம் தேறியது. பிஸ்கட் பொட்டலங்களையும், பழங்களையும் கொடுத்துவிட்டு, "இந்த விவரமெல்லாம் தெரியுமுன் நான் உங்களுக்கு நேற்றிரவு எழுதிய கடிதம் இது. ஆஸ்பத்திரியில் இருப்பீர்கள் என்றெண்ணி எழுதினது. முடிந்தால் படியுங்கள். என்னென்னவோ மன வேதனைகளை எழுதியிருக்கிறேன். ஒருவேளை கிறுக்குத் தனமாகக் கூட உங்களுக்குத் தோன்றலாம்" என்று அந்தக் கடிதத்தையும் அவனிடம் எடுத்துக் கொடுத்தாள். அந்தச் சமயத்தில் உடன் வந்திருந்த சிவகாமியும் அண்ணாச்சியும் மற்ற மாணவர்களைப் பார்க்கப் போயிருந்தார்கள். ஏதோ மாபெரும் கிரிமினல் குற்றவாளிகளை அடைப்பது போல் அங்கே மாணவர்களைத் தனித்தனியே அடைத்திருந்தார்கள். அண்ணாச்சியும் சிவகாமியும் பாண்டியன் இருந்த சிறைக்கு வந்த பின் கண்ணுக்கினியாள் போய் மற்ற மூன்று மாணவர்களையும் தனித்தனியே பார்த்து அவர்களுக்காக வாங்கி வந்த பொருள்களைக் கொடுத்து ஆறுதலாகப் பேசிவிட்டு வந்தாள்.

     அவள் எவ்வளவோ மறைக்க முயன்றும் மோகன்தாஸ், "உங்களுக்கு ரொம்ப மனக்கஷ்டமாக இருக்கும். அதிகம் அழுதிருக்கிறீர்கள். முகம் வாடியிருக்கிறது. கண்கள் சிவந்திருக்கின்றன. இத்தகைய கோலத்தில் உங்களை நான் சந்தித்ததே இல்லையே?" என்று கேட்டுவிட்டான். இந்தக் கேள்வி மறுபடியும் அவளை அழச் செய்துவிடும் போல் இருந்தது.

     "குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கப் போகிற நாங்களே குற்றவாளிகளாக்கப்பட்டுப் பொய்க் குற்றங்களால் ஜோடிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் நிஜக் குற்றவாளிகள் முகமூடி விரைவில் கிழிக்கப்படும். அப்போது வெற்றி மாலைகளோடு நாங்கள் வெளிவருவோம்" என்றான் மற்றொரு சிறைப்பட்ட மாணவன்.

     அதற்குள் சிறையில் காவலிருந்த போலீஸ் ஆள் வந்து 'நேரமாகிவிட்டது' என்று விரட்டவே மீண்டும் பாண்டியன் அருகே வந்து கண்களில் நீர் மல்க அவனைப் பார்த்தாள் கண்ணுக்கினியாள். அவள் பார்த்தபோது அவன் அவளுடைய கடிதத்தைப் படித்து முகம் மலர்ந்து கொண்டிருந்தான். எதிரே நிழல் படர்ந்தாற் போல் தெரியவே நிமிர்ந்து பார்த்து, "அழாதே. ஒரு புன்னகையோடு போய் வா... உன் கண்ணீர் எனக்கு நினைவிருப்பதை விடப் புன்னகை நினைவிருப்பது தான் தெம்பூட்டும்" என்றான் அவன். அவன் விருப்பப்படி புன்னகை செய்ய முயன்றாள் அவள். அவன் வலது கையை அந்தக் கடிதத்தோடு உயர்த்தி ஆட்டி அவளுக்கு விடை கொடுத்தான். அண்ணாச்சி முதல் நாளிரவு தாம் ஏற்பாடு செய்த செயற்குழு பற்றிய விவரங்களைப் பாண்டியனிடம் சுருக்கமாகச் சொல்லிவிட்டு விடைபெற்றார்.

     சிறைவாசலுக்கு வந்தவுடன் கண்ணுக்கினியாளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. சிவகாமி அவளை ஆதரவாகத் தாங்கிக் கொண்டாள். "வெளியே மாணவ மாணவிகளை ஒன்று திரட்டிப் போராட வேண்டிய சமயத்தில் நாம் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது கண்ணுக்கினியாள்! இனிமேல் தான் நமக்கு அதிகமான பொறுப்பும் கடமைகளும் காத்திருக்கின்றன" என்று அவள் காதருகே சொன்னாள் சிவகாமி. தோழி கூறியதைக் கேட்டதும் தன் செயலால் தானே கூச்சப்பட்டுக் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் உணர்வுகளைக் கட்டுபடச் செய்தவளாய் அவர்களோடு நிமிர்ந்து நடந்தாள் கண்ணுக்கினியாள். சாலைகளில் உள்ளூர் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக எதிர்ப்பட்டார்கள். இவர்கள் மூவரும் அப்படி எதிர்ப்பட்டவர்களிடம் எல்லாம் நின்று பேசி எல்லா விவரங்களையும் தெரிவித்துக் கொண்டு போனார்கள்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247