பதினெட்டாம் அத்தியாயம் கண்ணுக்கினியாள் வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போன பின் அவள் கொடுத்து விட்டுச் சென்ற அந்தக் கடிதத்தை மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தான் பாண்டியன். மாணவர் பேரவைத் தேர்தலுக்காக அலைந்து கொண்டிருந்த போது, 'இந்தப் பேரவைத் தேர்தல் முடிகிற வரை நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்' என்று தன்னிடம் தனிப்பட்ட அக்கறையோடும் கவலையோடும் அவள் வேண்டிக் கொண்ட தினத்தன்று அந்த வேண்டுதலாலும், அவளாலும் அவன் மனத்தில் என்ன கர்வம் ஏற்பட்டதோ அதே கர்வம் இன்றும் ஏற்பட்டது. 'புன்னகையும் நாணமும் இங்கிதப் பேச்சுக்களுமாக எங்கெல்லாம் ஓர் அந்நியமான இளம் பெண் உன்னோடு நடந்து வருகிறாளோ அங்கெல்லாம் உனது உடனடியான சொர்க்கங்கள் படைக்கப்படுகின்றன' - என்ற அந்தப் பழைய வாக்கியத்தையும் இப்போது நினைவு கூர்ந்தான் அவன். முன்னைப் போல் இப்போது அவள் அவனுக்கு அந்நியமில்லை. ஆனால் எவ்வளவு நெருக்கமாயிருந்தாலும் கூடத் தன்னை நினைத்துத் தவிக்க விடுகிற வேளையில் ஒவ்வொரு பெண்ணும் ஓர் ஆணுக்கு மிகவும் அந்நியமாகி விடுகிறாள் என்றே தோன்றியது. போராட்டங்களிலும், மாணவர் இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திய முதற்பெருமை அவளுடையது என்பது அவன் அந்தரங்கம் அறிந்த செய்தி. அந்தப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் பெண்கள் அனைவரிலும் பேரழகியும், வசீகரமானவளும் ஆகிய அவள் மட்டும் அன்று தான் தேர்தல் மனுவில் கையெழுத்திடத் தயங்கிய வேளையில் வளைகளைக் கழற்றி வீசித் தன்னுடைய ரோஷத்தைக் கிளறச் செய்திருக்கவில்லையானால் இதில் தான் துணிந்திருக்க முடியாது என்பதை அவன் உள் மனம் நன்கு உணர்ந்திருந்தது. அவள் மேல் நன்றியும் காதலும் ஒன்றோடொன்று போட்டி போடுகிற அளவு அவன் மனநிலை நெகிழ்ந்திருந்தது அப்போது. சிறைவாசம், பல்கலைக் கழக நிர்வாகமும், அதிகாரிகளும் சதி செய்து சுமத்தியுள்ள பயங்கரக் குற்றச்சாட்டுக்கள் எல்லாமே தூசுக்குச் சமமாகத் தோன்றும் துணிவை அவள் கடைக் கண் பார்வை அவனுக்கு அளித்திருந்தது. 'காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம்' என்று மகாகவி பாரதியார் பாடியிருந்தது சற்று மிகையான வர்ணனையோ என்று தான் முன்பெல்லாம் அவன் நினைத்திருந்தான். இப்போது அந்த நினைப்பு மெல்ல மெல்ல அவன் மனத்துக்குள் மாறிக் கொண்டு வந்தது. ஒரு விஷயம் மிகையா, உண்மையா என்று கண்டுணரும் அனுபவம் வாழ்வில் எதிர்ப்படாத வரையில் அதை மிகை என்றோ, உண்மை என்றோ தவறாக முடிவு செய்து விடுகிறோமே தவிர, நம்முடைய முடிவு அதன் நியாயமாகி விடுவதில்லை. கண்ணுக்கினியாளைச் சந்திக்கிற வரை அடைய முடியாமல் இருந்த ஒரு நளினமான அனுபவத்தை அடைந்த பின் பாரதியாரின் அந்தக் கருத்திலிருந்த உண்மையை அவன் உணர முடிந்தது. இங்கே சிறையில் அவனுக்கும் மற்ற மாணவர்களுக்கும் 'பி' வகுப்புக் கொடுத்திருந்தார்கள் என்றாலும் நடைமுறையில் 'சி' வகுப்பை விடக் கடுமையாக எல்லாம் நடந்தன. அவர்களுக்குப் படிக்கக் கொடுக்கப்பட்ட செய்தித் தாள்களில் மாணவர் இயக்கம், மாணவர் போராட்டம், மல்லிகைப் பந்தல் நிகழ்ச்சிகளுக்கு எதிரொலியாக நாடெங்கும் நடந்த ஊர்வலங்கள், கண்டனங்கள் பற்றிய பகுதியை 'சென்ஸார்' செய்து தாரினால் பூசி அடித்துப் படிக்க முடியாமல் செய்து மறைத்தே கொடுத்திருந்தார்கள். ஆகவே செய்தித் தாள்களில் மூன்று நிமிஷங்களுக்கு மேல் படிக்க எதுவுமே இல்லை. உணவோ படுமோசமாயிருந்தது. காலையில் அவள் கொடுத்த அந்தக் கடிதத்தைத்தான் அவன் திரும்பவும் படித்தான். அருகே இல்லாத பெண்ணின் ஞாபகம் எப்படி ஒவ்வொரு முறை நினைக்கும் போது அந்நியமாகிறதோ அப்படியே அந்தக் கடிதமும் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அந்நியமாகவும் புதுமையாகவும் இருந்தது பாண்டியனுக்கு. '...முதன் முதலாக உங்களுக்கு எழுதும் இந்தக் கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரியமான வார்த்தையினால் உங்களை அழைப்பது என்றும் புரியவில்லை. எந்த வார்த்தையினால் நான் உங்களை அழைத்தாலும் அந்த வார்த்தையை எந்த ஒரு காதலியாவது எனக்கு முன்னும் தன் காதலனுக்கு எழுதும் முதற் கடிதத்திலோ, அடுத்தடுத்த பல கடிதங்களிலோ உபயோகப்படுத்தித்தான் இருப்பாள். நான் உங்களுக்கு மட்டுமே தேடி உபயோகப்படுத்த ஒரு தனி வார்த்தை கிடைக்கப் போவதில்லை. வார்த்தைகள் எல்லாமே இப்படிப் பலர் சொல்லிப் பயன்படுத்திப் பயன்படுத்தித் தேய்ந்து போனவைதாம். தேயக் கூடாத நம் பிரியத்தைத் தேய்ந்த வார்த்தைகளால் அழைக்க விரும்பவில்லை நான். வார்த்தைகளால் விவரிக்க முடியாத பிரியத்தோடும் தவிப்போடும், வேதனையோடும், இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதத் தொடங்குகிறேன். நேற்றிரவு நவநீத கவியின் 'வருங்காலக் காதலர்களுக்கு' என்ற கவிதைத் தொகுதியைப் படித்துக் கொண்டிருந்தேன். 1967க்குப் பிறகு நவநீத கவி எழுதிய முதல் வசன கவிதைத் தொகுதி அது. அதில் ஒரு கவிதையைப் படிக்கும் போது நான் மனம் நெகிழ்ந்து போய் உங்களையும் என்னையும் பற்றியே நினைத்துக் கொண்டேன். அந்தக் கவிதையில் 'காதலின் எல்லைகளைக் காணும் வருங்காலக் காதலர்களாக' அவர் நினைக்கும் இருவராய் நாம் இருக்கப் போகிறோம் என்று என் மனம் எண்ணிப் பூரித்தது. நீங்களும் அதைப் படிக்க வேண்டும் என்பதற்காகக் கீழே அந்தப் புதிய கவிதையை அப்படியே எழுதியிருக்கிறேன்.
நட்சத்திரங்களும் முழுநிலாவும் எங்களுக்காகவே என்று நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் இங்கே எங்கள் காதலின் வசந்த காலங்கள் கழிந்த பின்னும் அவை எப்போதும் போல வானில் இருந்தன. நீல முகில்களும் மாரிக் காலத்துச் சிதநல் இரவுகளும் எங்களுக்காகவே என்று நாங்கள் நினைத்திருந்தோம் - ஆனால் எங்கள் காதலின் மோகங்கள் தணிந்த பின்னும் அவை எப்போதும் போல இங்கிருந்தன. ரோஜா மலர்களும் சந்தனக் கலவையும் தனியறைகளின் பஞ்சணைகளும், எங்களுக்காகவே என்று நாங்கள் நினைத்திருந்தோம் - ஆனால் அவை எங்கள் தாகங்கள் தணிந்த பின்னும் எப்போதும் போலப் பூத்தன, மணந்தன, பொலிந்தன, இவ்வுலகில்! எதுவுமே எங்களோடு எங்களால் முடிந்துவிடவில்லை நாங்கள் கழிவிரக்கமும் துயரமுமாய் மலைத்து நிற்கிறோம் காதல் தேவதைகளே! பிரியத்தின் காவற் கடவுளர்களே! வரப்போகிற சந்ததியிலேனும் யாராவது ஓராணும் பெண்ணும் இந்த சுகங்களின் எல்லைகளைக் காண அநுமதியுங்கள் தத்துவங்கள் நிலைப்பதற்காக மனிதர்களை ஏமாற்றாதீர்கள் மனிதர்கள் நிலைப்பதற்கான சுகங்களைத் தாருங்கள்! இந்தக் கவிதையை மட்டும் அல்லாமல் நவநீத கவியின் எல்லாக் கவிதைகளையுமே நீங்கள் படிக்க வேண்டும். என் தவிப்புக்களை நான் சொல்வதை விட நவநீத கவியின் கவிதை மூலம் அதை நான் சுலபமாக உங்களுக்குச் சொல்லி விட முடிகிறது. நாமெல்லாரும் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தோம். எங்களை மட்டும் ஆஸ்பத்திரியிலிருந்து விடுவித்து விட்டார்கள். அப்பா நவராத்திரிக்காக என்னை ஊருக்கு அழைத்துப் போக வந்திருக்கிறார்கள். நல்லவேளையாக மலைச் சரிவால் பஸ் போக்குவரத்து நின்று பிரயாணம் தடைப்பட்டு விட்டது. எங்கே உங்களைப் பார்த்துச் சொல்லி விடைபெற முடியாமல் போக நேரிட்டு விடுமோ என்று பயந்தேன். என் விருப்பப்படியே பிரயாணம் தடைப்பட்டுவிட்டது. இன்று விடிந்ததும் தான் வேறு குற்றச்சாட்டுக்களை ஜோடித்து உங்களையும் மற்ற மூன்று மாணவர்களையும் ஆஸ்பத்திரியிலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றியது எனக்குத் தெரியும். அந்த விவரம் தெரிந்த பின்பே இந்தப் பகுதியை மறுபடி எழுதுகிறேன். பதறிப் போனேன். என் வேதனையை உங்களுக்கு நான் எப்படி உணர்த்துவது என்றே தெரியவில்லை. இந்த நிலையில் சாலைப் போக்குவரத்து ஒழுங்காகி மதுரைக்குப் பஸ் போகும் என்கிற நிலை வந்தாலும் உங்களை விட்டுவிட்டுப் போக எனக்கு மனம் இல்லை. என் மனத் தவிப்பு நாயினாவுக்குப் புரியாது. அண்ணாச்சிக்கு ஓரளவு புரியும். அவர்தான் நேற்று இரவோடு இரவாக நகரின் சர்வ கட்சிப் பிரமுகர்களையும் சந்திக்க வைத்து இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்களை எதிர்த்துப் போரிட ஏதோ ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். நானும் மாணவ - மாணவிகளைச் சந்தித்து உண்மையை விளக்கி அவர்களை ஒன்றுபட்டு இணைந்து போராடச் செய்யப் போகிறேன். மாணவர்கள் மேல் உள்ள பொய் வழக்குகள் திரும்பப் பெறப்படுகிறவரை எங்கள் போராட்டம் ஓயாது. எங்கள் போராட்டம் வெற்றி பெற்று நீங்கள் வெற்றி மாலைகளுடன் சிறையிலிருந்து விடுதலை பெற்று வரப்போகிறீர்கள். உங்களை நேரில் பார்க்க முடியுமோ, முடியாதோ. எப்படியும் அண்ணாச்சி மூலம் இந்தக் கடிதத்தை உங்களுக்குக் கிடைக்கச் செய்யலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மறுபடியும் உங்களைச் சந்திக்கிற வரை உங்கள் ஞாபகமாகவே இருப்பேன் என்பதை நீங்களே அறிவீர்கள். தயவு செய்து மீண்டும் ஒரு முறை வருங்காலக் காதலர்களுக்குக் கவிதையின் கடைசி ஆறுவரிகளைப் படியுங்கள்.
என்றும் உங்கள், கண்ணுக்கினியாள் ***** இந்தக் கடிதத்தின் கீழே 'என்றும் உங்கள்' என்பதையும் 'கண்ணுக்கினியாள்' என்பதையும் சேர்த்துப் படித்த போது ஒரு புதிய நயமான அர்த்தம் கிடைப்பது போலிருந்தது பாண்டியனுக்கு. சிறையில் மோசமான உணவு, ஆரோக்கியமற்ற சூழ்நிலை, உடற்சோர்வு இத்தனையையும் தாங்கிக் கொண்டு அன்று அவன் தெம்பாக இருந்தான். காலையில் குளிப்பதற்காக என்று அவர்களை வெளியே அனுமதித்திருந்தார்கள். அப்போது பாண்டியனும், மோகன்தாஸும் மற்ற மாணவர்களும் சந்தித்துக் கொள்ள முடிந்தது. ஓர் அண்டா வெந்நீரில் நாலு பேர் குளிக்க வேண்டியிருந்தது. சிறை அதிகாரிகள் எல்லாரும் ஏதோ பழிவாங்குவது போல் நடந்து கொண்டார்களே ஒழிய முறையாக நடந்து கொள்ளவில்லை. இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் சிறையில் நரக வேதனையை அனுபவிக்க வேண்டியிருந்தது. அதற்குள் நகரிலும், வெளியூர்களிலும் மாணவர் போராட்டம் வலுத்திருந்தது. மல்லிகைப் பந்தல் நகரில் ஒரு நாள் பரிபூரண ஹர்த்தால் அநுஷ்டிக்கப்பட்டது. ஹர்த்தால் தினத்தன்று மல்லை இராவணசாமியின் ஆட்கள் தெருத் தெருவாக வந்து அடைக்கப்பட்ட கடையின் கதவுகளைத் திறக்கச் செய்ய முயன்று தோற்றார்கள். ஹர்த்தாலை எப்படியாவது தோற்கச் செய்து விட வேண்டும் என்று இராவணசாமியும் அவர் ஆட்களும் செய்த சதிகள் பலிக்கவில்லை. விரக்தியில் அடைக்கப்பட்டிருந்த சில கடைகளின் முகப்பு விளக்குகளையும் போர்டுகளையும் உடைத்துவிட்டுத் திருப்தி அடைந்து போய்ச் சேர்ந்தார்கள் இராவணசாமியின் ஆட்கள். அண்ணாச்சி, கண்ணுக்கினியாள், மல்லிகைப் பந்தல் நகரப் பிரமுகர்கள் எல்லாரும் முனைந்து நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. போராட்டக் குழுவினரும் மாணவர் பிரதிநிதிகளும் முதலில் துணைவேந்தரையும், ஆர்.டி.ஓ.வையும் சந்தித்தனர். அதற்குள் எல்லா ஊர்களிலும் பரவிய போராட்டத்தினால் அங்கங்கே அரசு பஸ்கள் சில எரிக்கப்பட்டன. இரயில்கள் நிறுத்தப் பட்டன. மதுரை, கோவை, திருச்சி, நகரங்களில் மாணவர் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகை வீச்சு நடந்து போலீஸ் தடியடியில் சில மாணவர்கள் காயமுற்றனர். சென்னையிலும் போராட்டம் வளர்ந்தது. அரசாங்கம் ஸ்தம்பிக்கும் நிலை வந்தது. மேரிதங்கத்தின் தற்கொலைக்குக் காரணமான விரிவுரையாளர் மதனகோபாலை உடனே பல்கலைக் கழகத்திலிருந்து நடவடிக்கை எடுத்து வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் பாண்டியன் முதலிய மாணவர்கள் மேல் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை நிபந்தனையின்றி உடனே வாபஸ் வாங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், இந்த இரண்டு கோரிக்கைகளை ஏற்றால் ஒழியப் போராட்டம் நிற்காது என்றும் மாணவர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது. மணவாளன் மதுரையிலிருந்து எல்லா ஊர்களோடும் தொடர்பு கொண்டு போராட்டத்தை முழு மூச்சுடன் நடத்த உதவி செய்தார். மல்லிகைப் பந்தலின் துணைவேந்தர் நாலைந்து நாட்களாக வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அஞ்சும்படி ஆகியிருந்தது நிலைமை. அண்ணாச்சியின் உதவியால் நாயினாவை மேலும் சில தினங்கள் மல்லிகைப் பந்தலிலேயே தங்கச் செய்து விட்டாள் கண்ணுக்கினியாள். கல்வி மந்திரி மல்லிகைப் பந்தலுக்கு அவசரம் அவசரமாகப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தார். நகர எல்லையிலேயே அவருக்குக் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்புக் குரல்களை முழங்கினார்கள் மாணவர்கள். துணைவேந்தர் கல்வி மந்திரி ஆகியவர்கள் கலந்து பேசி மாணவர்களின் இரு கோரிக்கைகளையும் ஏற்றனர். மேரிதங்கத்தின் தற்கொலைக்குக் காரணமான விரிவுரையாளர் மேல் நடவடிக்கை எடுத்து அவரை நீக்கினார்கள். சிறைப்பட்டிருந்த பாண்டியன் முதலிய மாணவர்கள் விடுதலை பெற்றனர். அண்ணாச்சியிடம் இருந்த மேரிதங்கத்தின் கடிதம் இரகசியமாக மணவாளனுக்கு அனுப்பப்பட்டு மணவாளன் அதைப் புகைப்படப் பிரதி செய்து சில பத்திரிகைகளில் பிரசுரம் செய்யக் கொடுத்திருந்ததனால் அந்த விவரம் பகிரங்கமாகித்தான் போராட்டமே நாடளாவியதாக வளர்ந்திருந்தது. ஆகவே அமைச்சர் முயன்றும் அதை மூடி மறைக்க முடியாமல் போய்விட்டது. விடுதலையான தினத்தன்று பாண்டியன் முதலிய மாணவர்களை வரவேற்கச் சிறை வாயிலில் ஏராளமான மாணவர்கள் கூடியிருந்தனர். கழுத்துத் தாங்க முடியாத அளவு மாலைகள் குவிந்தன. அவனும் சகமாணவர்களும் விடுதலையான தினத்துக்கு மறுநாள் காலை கண்ணுக்கினியாளும் அவள் தந்தையும் ஊருக்குப் புறப்பட்டார்கள். விடுமுறையே இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. ஆனாலும் தேடி வந்த தந்தையை ஏமாற்றாமல் ஊர் சென்று திரும்புவதற்காகவே அவள் புறப்பட்டிருந்தாள். பாண்டியன் விடுதலையான தினத்தன்று மாலை அண்ணாச்சி கடையில் கண்ணுக்கினியாளையும் அவள் தந்தையையும் தனியே சந்திக்க நேர்ந்தது. கண்ணுக்கினியாளும், அண்ணாச்சியும் அவனைப் பற்றி நாயினாவிடம் பெருமையாகச் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார்கள். நாயினா அவனைக் கேட்டார். "தம்பீ! லீவுக்கு ஊருக்குப் போகலியா?" "போகணும்! லீவே ஏறக்குறைய முடிஞ்சு போச்சு. இருந்தாலும் நாளைக்குப் புறப்படலாம்னு இருக்கேன். நானும் மதுரை வந்துதான் போகணும்." "அப்பிடியானா வீட்டுக்கு வந்துட்டுப்போ தம்பீ! சித்திரக்காரத் தெருவிலே நம்ம வீடு இருக்கு. டிராமாக்கார நாயுடு வீடுன்னா யாரும் சுலபமா அடையாளம் காட்டுவாங்க." "மதுரையிலே இறங்கி எங்க ஊருக்குப் பஸ் மாற நேரமும் கிடைச்சு பஸ் ஸ்டாண்டிலே இருந்து ஊருக்குள்ளே வந்தா கண்டிப்பா வரேன். 'மணவாளன்'னு எங்க மாணவர் தலைவர் ஒருத்தர் மதுரையிலே இருக்காரு. அவரையும் பார்க்க வேண்டிய வேலை இருக்கு" என்றான் பாண்டியன். "நீங்க மணவாளனைப் பார்க்க மட்டும் நேரம் இருக்கும். என்னைப் பார்க்க நேரம் இராது? அப்படித்தானே?" என்று கண்ணுக்கினியாள் செல்லமாகக் கோபித்துக் கொள்ளத் தொடங்கினாள். பாண்டியன் அதைக் கேட்டுப் புன்முறுவல் பூத்தான். அப்புறம் சொன்னான்: "நீயா ஏன் நான் வரமாட்டேன்னு கற்பனை பண்ணிக்கணும்? நான் அப்படிச் சொல்லலியே? வேணும்னா மணவாளனையும் கூட அழைத்துக் கொண்டு உங்க வீட்டுக்கு வருகிறேனே?... போதுமா?" மதுரைக்காக பஸ்ஸுக்குப் புறப்படுவதற்குள் நாயினா தனியே மகளை எங்கும் போகவிட மாட்டார் போலிருந்தது. பாண்டியன் அவளையும், அவள் பாண்டியனையும் தனியே கண்டு பேசத் தவிப்பது அண்ணாச்சிக்குப் புரிந்தது. ஊருக்குப் புறப்பட பஸ்ஸுக்கு இன்னும் நான்கு மணி நேரத்துக்கு மேல் இருந்தது. இந்த நிலையில் கண்ணுக்கினியாளுக்கும், பாண்டியனுக்கும் அண்ணாச்சி ஒரு பெரிய உதவியைச் செய்தார். நாயினாவுக்கு ஆஞ்சநேயர் பக்தி அதிகம் என்பது அண்ணாச்சிக்குத் தெரியும். அந்த நாளில் எந்த ஊரில் நாடகத்துக்குப் போனாலும் அந்த ஊரிலிருந்து ஆறு மைல் தள்ளி அனுமார் கோயில் ஒன்று இருந்தாலும் தேடிப் போய்க் கும்பிட்டு விட்டு வருவார் கந்தசாமி நாயுடு. "நாயினா! பக்கத்தில் யுனிவர்ஸிடி வடக்கு வாசலுக்குச் சமீபமா ஒரு அனுமார் கோயில் இருக்கு. இன்னிக்காவது மலைகிலை சரியாமப் பிரயாணம் சுகமாயிருக்கணும்னு போய் வேண்டிக்கிட்டு வரலாம் வாங்க..." என்று நாயுடுவைக் கூப்பிட்டுக் கொண்டு அனுமார் கோயிலுக்குப் புறப்பட்டார் அண்ணாச்சி. "அப்படியா நேத்தே ஏன் சொல்லல்லே அதை?" என்று அனுமார் கோயில் ஒன்று மல்லிகைப் பந்தலில் இருப்பதை இவ்வளவு தாமதமாகத் தெரிவித்ததற்காக அண்ணாச்சியைக் கண்டித்தபடியே உடன் புறப்பட்டு விட்டார் நாயுடு. அவர்கள் இருவரும் அனுமார் கோயிலுக்குப் புறப்பட்டுப் போன பின் கண்ணுக்கினியாளும், பாண்டியனும் கடையிலிருந்து ஏரிக்கரைப் பூங்காவுக்குப் புறப்பட்டார்கள். மேகம் இருண்டு கொண்டு மூட்டம் போட்டிருந்தது என்றாலும் மழை இல்லை. இப்போதோ இன்னும் சிறிது நேரத்திலோ வந்து விடுவேன் என்பது போல் மழை வானிலே மிரட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் ஏரிக் கரையில் நடந்தார்கள். பாண்டியன் சொன்னான்: "என்ன இருந்தாலும் அண்ணாச்சி மிகவும் பரோபகாரி! நாம் கூட ஒரு நாள் அந்த அனுமாரைப் போய்ப் பார்த்துக் கும்பிட்டுவிட்டு வரவேண்டும்... அவர் தயவில் தான் நமக்கு இன்று இந்தச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது." "அனுமாரை நீங்க கும்பிட்டு என்ன ஆகப் போகிறது? பெண்கள் கும்பிட்டாலாவது நல்ல இடத்தில் கல்யாணம் ஆகும் என்பார்கள்" என்று சொல்லத் தொடங்கிவிட்ட கண்ணுக்கினியாள் பாதியிலே எதையோ நினைத்துக் கலீரென்று சிரித்து விட்டாள். "உன் கேஸ் அனுமாரிடம் எடுபடாது. நீதான் காதல் கடிதம் எழுதுகிற எல்லை வரையில் வந்தாயிற்றே?" என்று கேட்டுக் கொண்டே, "இந்தக் கைதானே அதை எழுதியது?" என்று சொல்லியபடி அவள் வலது கையைப் பற்றி அழுத்தினான் பாண்டியன். அவள் செல்லமாகத் திமிறினாள். "ஏதேது? கேள்வி முறை இல்லை போலிருக்கிறதே? கையை விடுங்கள் முதலில்..." "பிரியமுள்ளவளின் பூங்கையை அவள் பிரியத்துக்குரியவன் பற்றக் கூடாது என்று தான் நவநீதக் கவி 'வருங்காலக் காதலர்களுக்கு' எழுதியிருக்கிறாரோ?" "அந்தக் கவிதை உங்களுக்குப் பிடித்திருந்ததா?" தன்னைப் பற்றிய அவன் கையை விலக்கிவிடாமலே கேட்டாள் அவள். அவன் பதில் சொன்னான்: "அந்தக் கவிதையை விட அதை மீண்டும் பிரதி எடுத்து எழுதியவளை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது..." ஏரிக்கரைப் பூங்காவில் இருந்த ஒரு பட்டு ரோஜாவைப் பறித்து அவள் கையில் வைத்தான் பாண்டியன். "ஜாக்கிரதை! என் கைக்கும் ரோஜாப் பூவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்று நீங்களே ஒரு தடவை சொல்லியிருக்கிறீர்கள்." "உனக்கு ரொம்பப் பொல்லாத ஞாபக சக்திதான்." "நீங்கள் சொன்னதெல்லாம் மட்டும் மறப்பதில்லை." பூங்காவின் மரங்கள் அடர்ந்த பகுதிக்கு அவர்கள் வந்திருந்தார்கள். பாண்டியனின் கரம் இப்போது அவள் தோள் மேல் இருந்தது. "உஷ்! அதோ..." என்று அவன் தழுவலிலிருந்து விலகிய அவள் சுட்டிக் காட்டிய திசையில் மாணவர் கூட்டம் ஒன்று போய்க் கொண்டிருந்தது. பூங்காவில் இவர்களைப் போலவே சில இளம் இணைகள் அங்கங்கே அமர்ந்தும் நின்றும் பேசிக் கொண்டிருந்தார்கள். "உன் கையில் போடுவதற்கு என்னிடம் நீயே கொடுத்திருக்கும் இரண்டு வளைகள் இன்னும் பத்திரமாக இருக்கின்றன என்பது உனக்குத் தெரியுமா?" "காணாமற் போன பொருள்கள் யாரிடமாவது இருந்தால் பல்கலைக் கழக விதிப்படி அவற்றை ரிஜிஸ்திரார் ஆபீஸில் ஒப்படைத்து விட வேண்டும்..." "அப்படியானால் என் வசம் இருக்கும் வளைகளை விடப் பெரிய பொருளான உன் இதயத்தையும் அங்கே ஒப்படைத்து விட வேண்டியதுதான்." "தப்பு! தப்பு! மன்னித்து விடுங்கள். தெரியாமல் சொல்லி விட்டேன்." "நாம் இருவரும் துணிந்து இப்படிச் சுற்றுவதைப் பற்றி உனக்கு பயமாயில்லையா?" "இப்படிக் கேட்பதன் மூலம் தான் நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்கள்." "முதல் முதலாக என்னை அண்ணாச்சி கடையில் சந்தித்த அன்று நீதான் என்னைப் பயமுறுத்தினாய்..." "இப்போது ரெண்டு பேருமாகச் சேர்ந்து வி.சி.யைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறோம்..." "இந்த வி.சி. பயப்படுவதற்குக் கூடத் துணிவு இல்லாதவர்..." "பயப்படுவதற்குக் கூடத் துணிவு வேண்டுமா, என்ன? வேடிக்கையாகத்தான் இருக்கிறது, நீங்கள் சொல்வது?" "ஆமாம்! பயப்படவும் ஒரு துணிவு வேண்டும். 'தீமையை அநீதியை ஒழுக்கக் குறைவைக் கண்டு பயப்படவும் ஒரு நெஞ்சுரம் வேண்டும். அது வி.சி.யிடம் இல்லை. நியாயங்களைப் போற்ற இருக்கும் துணிவை விட அநியாயங்களை விலக்கி அவற்றுக்கு அஞ்சும் துணிவுதான் பெரியது என்று நினைக்கிறேன் நான்..." பல்கலைக் கழகம் திறந்ததும் நவம்பரில் நேரு தினத்தை மாணவர் பேரவையின் சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள் அவர்கள். பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பும் போது சிரித்துக் கொண்டே அவன் அவளைக் கேட்டான்: "நீ என்ன 'ஸெண்ட்' உபயோகிக்கிறாய்? உன் அருகே நடந்து வர முடியாமல் வாசனை ஆளைத் தூக்குகிறதே?" "நான் சோப்பு, பவுடர் தவிர வாசனை ஹேர் ஆயில் கூட உபயோகிப்பதில்லை. வெறும் தேங்காய் எண்ணெய்தான்." "பொய் சொல்லக் கூடாது?" "நிஜமாத்தான் சொல்றேன்..." "அப்படியானால் நீயே கமகமவென்று மணக்கிறாய் என்று அர்த்தமா?" "சீ! ரொம்ப மோசம்! ஒரே நாளில் படு குறும்புக்காரராகி விட்டீர்கள் நீங்கள்..." "எல்லாம் சகவாச தோஷம்..." அன்று மாலை அவள் ஊருக்குப் புறப்பட்டாள். அவளையும் அவள் தந்தையையும் வழியனுப்புவதற்குப் பாண்டியனும் அண்ணாச்சியும் பஸ் நிலையத்துக்குப் போயிருந்தார்கள். பஸ் புறப்படு முன், "மறந்துவிடாமல் அந்த நவநீதக் கவியின் கவிதையை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்" என்று சூசனையாக அவனிடம் தன் இதய தாபத்தைச் சொல்லி விடைபெற்றாள் அவள். அதைப் புரிந்து கொண்டு அவனும் யாருமறியாமல் புன்னகை செய்தான். பஸ் புறப்பட்டதும் அண்ணாச்சியோடு திரும்புகையில் ஒரு கணம் அந்த அழகான மலை நகரமே யாருமில்லாமல் சூனியமாகி விட்டது போல் ஒரு பிரிவு பாண்டியனின் மனத்தைக் கவ்வியது. இப்படி ஒரு தவிப்பை வாழ்வில் இதற்கு முன் அவன் என்றுமே அடைந்ததில்லை. பஸ் நிலையத்திலிருந்து அவனும் அண்ணாச்சியும் பேசிக் கொண்டே திரும்பினர். அவனும் அண்ணாச்சியும் கடைக்குத் திரும்பியதும் பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டம் பற்றித் தெரிய வந்த ஓர் உண்மை அவன் கவலை தவிப்பு எல்லாவற்றையுமே வேறு பக்கம் திசை திருப்பக் கூடியதாயிருந்தது. சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|