பத்தொன்பதாம் அத்தியாயம்

     பஸ் நிலையத்தில் கண்ணுக்கினியாளையும், அவள் தந்தையையும் மதுரைக்கு வழியனுப்பிவிட்டுத் திரும்பிய பாண்டியனை எதிர்பார்த்து அண்ணாச்சிக் கடையில் கதிரேசன் காத்திருந்தான். அண்ணாச்சியையும், பாண்டியனையும் ஒரு முக்கியமான செய்தியோடு எதிர் கொண்டான் கதிரேசன். மறுநாள் காலையில் பல்கலைக் கழக 'சிண்டிகேட்' சந்திக்கப் போவதாகவும் அந்த சிண்டிகேட் கூட்டத்தில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக் கூட ஒழுங்காக முடிக்காத அமைச்சர் ஒருவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்யப்பட இருக்கிறது என்பதாகவும் கதிரேசன் தெரிவித்த போது அண்ணாச்சியும் பாண்டியனும் முதலில் அதை நம்புவதற்கு முடியாமல் தவித்தார்கள். பாண்டியன் கதிரேசனோடு பந்தயம் கூடக் கட்டினான்.

     "நீ சொல்வது உண்மையாயிராது கதிரேசன்! யாராவது புரளியைக் கிளப்பிவிட்டிருப்பார்கள். நம்முடைய மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகச் சட்டங்களின் படியும், விதிகளின் படியும் பதினெட்டு சிண்டிகேட் உறுப்பினர்களும் ஒரு மனமாக முடிவு செய்தாலொழிய ஒருவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் தர முடியாது. சிண்டிகேட்டில் அவ்வளவு உறுப்பினர்களுமே 'ஆமாம் சாமி'களாக இருக்க மாட்டார்கள்..."

     "இருப்பார்களோ, இருக்க மாட்டார்களோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது! எந்த மந்திரியை லெக்சரர் மதனகோபாலின் அயோக்கியத்தனங்களுக்கு எல்லாம் பாதுகாப்பு அளிக்கிறார் என்பதற்காக நாம் எதிர்த்தோமோ, எந்த மந்திரி காலமெல்லாம் மாணவ சமூகத்தைப் போலீஸ் அடக்கு முறையில் சிக்க வைத்துத் துன்புறுத்தியிருக்கிறாரோ அதே மந்திரிக்கு - ஏதோ சில சுயநல வசதிகளுக்கான ஒரு லஞ்சம் போல் இதைத் தரப் போகிறார்கள். நடக்கிறதா இல்லையா பார்க்கலாம்? எனக்கு மிகவும் நம்பிக்கையான இடத்திலிருந்து இந்தத் தகவல் கிடைத்திருக்கிறது! பிச்சைமுத்து சார் சொல்லியிருப்பது போல் அறிவாளிகளும், சிந்தனையாளர்களும் சுயநலமிகளாக இருக்கிற சமூகத்தில் எந்தக் கேடும் நடக்க முடியும்..."

     "ஒரே நாள் பழக்கத்தில் நிலக்கோட்டை டிரில் மாஸ்டர் உன்னை மயக்கிவிட்டார்! கதிரேசனுக்கே ஒருவரைப் பிடிக்க வேண்டுமானால் அவர் பெரிய ஆளாகத் தான் இருக்க வேண்டும்! இந்தத் 'தகவல்' கூட அவர் மூலம் தான் உனக்குத் தெரிந்ததா, கதிரேசா?"

     "இல்லை பாண்டியன்! இது ரிஜிஸ்திரார் ஆபீஸ் மூலம் நான் கேள்விப்பட்டது. இதற்கு பிச்சைமுத்து சாருக்கும் சம்பந்தமில்லை."

     "நீ சொல்கிறபடியே நடப்பதாக இருந்தாலும் நாளை மாலைக்குள் அது தெரிந்துவிடுமே. நாளைக்கும் இங்கே தங்கியிருந்து விட்டுத்தான் அப்புறம் நான் ஊர் போகலாம் என்றிருக்கிறேன்! எதற்கும் நாளை மாலையில் மறுபடியும் சந்தித்துப் பேசலாம். மறந்துவிடாமல் நாளை மாலை இங்கே வா..." என்று சொல்லிக் கதிரேசனுக்கு விடை கொடுத்து அனுப்பினான் பாண்டியன்.

     அன்றிரவே அவனும் வேறு சில மாணவர்களும் பூதலிங்கத்தைச் சந்தித்த போது கதிரேசன் கூறியது போல் நடப்பதற்குச் சாத்தியம் உண்டு என்றே அவரும் கூறினார். மாணவர்கள் இது பற்றித் தாங்கள் என்ன செய்யலாம் என்று கூடிப் பேசிக் கொள்ளத் தொடங்கினார்கள். பாண்டியன் மறுநாள் இரவுக்குள் மதுரையில் வந்து சந்திப்பதாக ஒரே தந்தியின் பிரதிகளை மணவாளனுக்கும், கண்ணுக்கினியாளுக்கும் அனுப்பினான். அன்றிரவு சக மாணவன் ஒருவனுடைய வீட்டில் அவனும் நண்பர்களும் கலந்து பேசினார்கள். மறுநாள் தெரிய வேண்டிய விவரங்கள் தெரிந்த பின் மேற்கொண்டு செயற்பட முடிவு செய்தார்கள். பாண்டியன் அன்றிரவு அந்த நண்பனின் வீட்டில் தங்கினான்.

     முதல் நாள் இரவிலிருந்தே பல்கலைக் கழக விருந்தினர் மாளிகையில் பல அறைகள் நிரம்பிவிட்டன. வெளியூர்களிலிருந்து வரவேண்டிய சிண்டிகேட் உறுப்பினர்கள் எல்லாரும் வந்துவிட்டார்கள். துணைவேந்தரும், சிண்டிகேட்டில் முக்கிய உறுப்பினரான ஓர் எஸ்டேட் அதிபரும் மற்ற உறுப்பினர்களை வசப்படுத்த தீவிரமாக முயன்று கொண்டிருந்தார்கள். அந்த எஸ்டேட் அதிபருக்குத் தம்முடைய தேயிலைத் தோட்டத்தை ஒட்டி இருந்த ஒரு முந்நூறு ஏக்கர் மலைப்பகுதி சர்க்காரிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு ஜாரி செய்து தரப்பட இருந்ததாகவும், அது அவ்வாறு செய்து தரப்பட வேண்டுமானால் இந்த டாக்டர் பட்டத்தை அளிக்க அவர் முயல வேண்டும் என்று அமைச்சரே பேரம் பேசியதாகவும் தெரிந்தது. எவ்வளவுதான் காதும் காதும் வைத்தாற் போல் காரியங்கள் நடந்தாலும் அவை வெளியே பரவிக் கொண்டுதான் இருந்தன. இரகசியங்கள் வெளியே பரவுவதற்கு வேறு தனிக் காரணங்கள் வேண்டியதில்லை. அவை இரகசியங்களாயிருப்பதே போதுமானது என்பது போல் அவை வெளிப்பட்டுவிட்டன. ஆளுங்கட்சிக்கு மிக மிக வேண்டிய அந்த எஸ்டேட் அதிபர் மக்களிடையே நல்ல பேர் இல்லாமல் வெறுக்கப்பட்டவர். பண பலத்தையும் செல்வாக்கையும் வைத்துத் தமக்கு நன்மை செய்யும் ஒரு மந்திரியை 'டாக்டர்' ஆக்கிவிட முயன்று கொண்டிருந்தார் அவர். பணமாகவும் பொருளாகவும், லஞ்சம் வாங்கி வாங்கி அலுத்து விட்ட மந்திரிக்கு 'டாக்டர்' பட்டமே லஞ்சமாகக் கிடைக்கும் என்றதும், அதில் ஒரு நைப்பாசை ஏற்பட்டு வளர்ந்திருந்தது.

     மறுநாள் காலை நல்ல மழையாக இருந்ததனால் பழகலைக் கழக செனட் ஹாலில் பத்து மணிக்குக் கூட வேண்டிய 'சிண்டிகேட்' கூட்டம் சிறிது தாமதமாகப் பதினொரு மணிக்குக் கூடியது. துணைவேந்தர் உட்படப் பதினெட்டு உறுப்பினர்களும் வந்திருந்தார்கள். பதினெட்டுப் பேரில் பதினாறு பேர் துணைவேந்தருக்கும், எஸ்டேட் அதிபருக்கும் இசைந்து விட்டார்கள். டாக்டர் ஹரிகோபால் என்ற பிரபல வைத்திய மேதை ஒருவரும், மிஸஸ் செரியன் என்ற பெண்மணி ஒருத்தியும் துணைவேந்தரையோ, எஸ்டேட் அதிபரையோ இலட்சியம் செய்ததாகவே தெரியவில்லை. மிகவும் சுதந்திரமாகவும், தன்மானம் உள்ளவர்களாகவும் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள். துணைவேந்தருக்கு அந்த இருவரையும் பார்க்கும் போதே நடுக்கமாக இருந்தது. அவர்கள் தாம் எதிர்பார்க்கிறபடி இசையமாட்டார்கள் என்பது அவருக்குப் புரிந்தது.

     துணைப் பதிவாளர், கூட்டத்துக்கான அஜெண்டா டைப் செய்த பிரதிகளை ஒவ்வொருவர் முன்னும் வைத்தார். விஷயங்கள் எதுவும் வெளியே பரவி விடக்கூடாது என்பதற்காக 'மினிஸ்ட்ஸு'க்குக் குறிப்பு எடுக்கும் ஸ்டெனோ தவிர வேறு அலுவலக ஆட்கள் யாரும் அங்கே அனுமதிக்கப்படவில்லை. கூட்டத் தொடக்கத்தில் துணைவேந்தர் எழுந்து பேசும் போது, பல்கலைக் கழக வளர்ச்சிக்கு அப்போது பதவியிலுள்ள அரசு முந்திய அரசுகளை விட என்னென்ன உதவியிருக்கிறது என்பதையும், பல்கலைக் கழகத்தில் பல புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும் மற்றவற்றுக்கும் வணக்கத்துக்குரிய அந்த அமைச்சர் என்னென்ன உதவிகள் செய்துள்ளார் என்பது பற்றியும் பச்சையாகப் புளுகத் தொடங்கினார். 'அஜெண்டா'வில் முதலில் இருந்த விஷயமோ காலியாயிருந்த இரண்டு ரீடர் பதவிக்குத் தகுந்தவர்களை நியமிப்பது பற்றியது. அதைப் பற்றிக் குறிப்பிடவே மறந்து துணைவேந்தர் மந்திரியின் துதிபாடத் தொடங்கியதால் டாக்டர் ஹரிகோபால் ஆத்திரம் அடைந்தார்.

     "மிஸ்டர் வி.சி.! ஆன் ஏ பாயிண்ட் ஆஃப் ஆர்டர் ஐ விஷ் டு ஸே, யூ ஆர் கோயிங் அவுட் ஆஃப் தி அஜெண்டா ஆன் தி டேபிள் ஹியர்!" டாக்டர் ஹரிகோபால் இரைந்ததும் மற்ற உறுப்பினர்கள் நாலைந்து பேர் அவரை உறுத்துப் பார்த்தார்கள். ஹரிகோபால் அதற்கு அஞ்சவில்லை. மிஸஸ் செரியனும் அவரை ஆதரித்தாள். துணைவேந்தர் வழிக்கு வந்தார். ரீடர் நியமனம் பற்றிய விவரங்களை எடுத்து வாசித்தார். அதிலும் வழக்கம் போல மழுப்பல்கள் இருந்தன.

     செர்வீஸ், தகுதி, திறமை எல்லாம் இருந்த இரண்டு பேர்களைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு அவை எல்லாவற்றிலும் குறைவான ஆனால் அரசாங்க மேலிடம் விரும்புகிற வேறு இருவரை நியமிக்க வேண்டும் என்று துணைவேந்தர் கூறிய போது, ஹரிகோபால் மீண்டும் குறுக்கிட்டார். காரசாரமான விவாதம் எழுந்தது. எஸ்டேட் அதிபரும் சிண்டிகேட் உறுப்பினருமான ஆனந்தவேலு குறுக்கிட்டுத் தந்திரமாக ஹரிகோபாலை ஆதரிப்பது போல் கூறினார். இதில் ஹரிகோபாலை ஆதரித்தால் மந்திரிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் பிரச்னையில் ஹரிகோபால் தம்மை ஆதரிப்பார் என்று எண்ணியே அப்படிச் செய்திருந்தார் அவர். ரீடர் நியமனம் தகுதி உள்ளவர்களுக்குக் கிடைக்க வழி பிறந்தது. அடுத்தபடி தபால் மூலம் பட்டப்படிப்புக்கான 'கரெஸ்பாண்டென்ஸ் கோர்ஸ்' தொடங்குவது பற்றிய பிரச்னை விவாதிக்கப்பட்டது. ஒரு முடிவுக்கு வர இயலாததால் அந்த யோசனை அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுப்பது என்று ஒத்திப்போடப் பட்டது. மூன்றாவதாகப் புதிய கட்டிடங்கள் பற்றியும் வேறு சில முக்கிய நிர்வாக அம்சங்கள் பற்றியும் பேசப்பட்டது.

     நான்காவதாகவும், இறுதியானதாகவும் அஜெண்டாவில் இருந்த 'கான்வகேஷனும் கௌரவப் பட்டங்களும்' என்ற அயிட்டத்தைப் பகல் உணவுக்குப் பின் பிற்பகல் கூட்டத்தில் பேசலாம் என்று அறிவித்தார் துணைவேந்தர். பிற்பகலில் நிறையச் சாதகமாக எடுத்துச் சொல்லி அந்தத் தீர்மானத்தை ஒருமித்து நிறைவேற்றி விடலாம் என்பது அவரது எண்ணமாயிருந்தது. எல்லாரும் பகல் உணவுக்காகக் கலைந்து போகும் போது, "எல்லா வருஷத்தையும் விட இந்த வருஷம் கான்வகேஷன் தள்ளிப் போவதைப் பார்த்தால் ஏதோ விசேஷம் இருக்கும் போலிருக்கிறது" என்று மிஸஸ் செரியன் உடன் வந்த மற்றோர் உறுப்பினரிடம் வாயளப்பாகப் பேசிப் பார்த்தாள். "நீங்கள் எல்லாரும் ஒத்துழைத்தால் எல்லாம் விசேஷமாக முடிய வழி உண்டு" என்று சிரித்துக் கொண்டே மிஸஸ் செரியனுக்கு மறுமொழி கூறினார் அந்த உறுப்பினர். மிஸஸ் செரியன் பிடிகொடுத்துப் பேசாமல் நழுவியதும் அந்த உறுப்பினர் விழித்துக் கொண்டார். மேலே பேசுவதையும் நிறுத்திக் கொண்டார்.

     பகல் உணவுக்குப் பின் சிறிது ஓய்வு நேரம் விட்டு மாலை மூன்று மணிக்கு மீண்டும் சிண்டிகேட் கூடியது. தேநீருடன் கூட்டத்தைத் தொடங்கினார் துணைவேந்தர். டாக்டர் ஹரிகோபால், மிஸஸ் செரியன் இருவரைப் பற்றிய பயம் இருந்தாலும் துணைவேந்தர் மீண்டும் ஒரு நீண்ட புகழுரைச் சொற்பொழிவில் இறங்கினார்.

     "எல்லா வருஷங்களையும் விட இந்த வருஷம் தம்முடைய பட்டமளிப்பு விழா மிகவும் தாமதமாவதில் ஒரு விசேஷம் இருக்கிறது. நம்முடைய பல்கலைக் கழகம் இலக்கிய மேதையாக விளங்கும் அமைச்சர் கரியமாணிக்கம் அவர்களுக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்பதை ஆனந்தவேலு முதலிய பதினைந்து சிண்டிகேட் உறுப்பினர்கள் ஆதரித்து யோசனை தெரிவித்திருக்கிறார்கள். அமைச்சரே வந்து மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்றும் நாம் அவரை வேண்டப் போகிறோம்..." உடனே ஹரிகோபால் குறுக்கிட்டார்.

     "கல்லூரிப் பட்டமே பெறாத ஒருவர் பட்டமளிப்பு விழா 'கவுனை' அணிவதும் மாணவர்களுக்குப் பட்டங்களை அளிக்க அழைக்கப்படுவதும் எப்படி சாத்தியம்?"

     "அதனால் தான் பட்டமளிப்பு விழாவில் முதலிலேயே நாம் அமைச்சருக்கு டி.லிட். பட்டம் வழங்கி, அவரை மாணவர்களுக்குப் பட்டமளிக்கத் தகுந்தவர் ஆக்கிவிடப் போகிறோம்."

     "ஓகோ! 'கவுனு'க்காகவே ஒரு பட்டமா? பட்டமளிப்பு விழாவுக்காகப் பல மாணவர்கள் 'கவுன்' தைக்கிற போது தைத்த 'கவுனு'க்காகவும் ஒரு பட்டத்தைக் கொடுக்கப் போகிறீர்களா?"

     'மிஸ்டர் ஹரிகோபால்!... பீ ஸீரியஸ்..." என்று துணைவேந்தர் ஏதோ உரத்த குரலில் தொடங்கவே டாக்டர் ஹரிகோபாலுக்கும் கோபம் வந்துவிட்டது. அவர் கத்தினார்.

     "தி ஹானரரி டிகிரீஸ் வீ கன்ஃபெர் ஷுட் பி ஸ்டிரிக்ட்லி பேஸ்ட் ஆன் மெரிட். அதர் கன்ஸிடரேஷன்ஸ் ஷுட் நாட் கம் இன்."

     "நீங்கள் அமைச்சரை எதிர்க்கிறீர்கள் போலிருக்கிறது, மிஸ்டர் ஹரிகோபால்!"

     "நோ... ஐயாம் நாட் எகெய்ன்ஸ்ட் எனி ஒன். பட் ஐயாம் கன்ஸர்ன்ட் ஒன்லி வித் தி டிக்னிட்டி ஆஃப் தி யுனிவர்ஸிடி... கமான் டெல் மீ ஒன் குட் ரீஸன்... ஒரு 'டி.லிட்.' தரவேண்டிய அளவு அவர் என்ன சாதித்திருக்கிறார்?'

     "இருபது ஆண்டுகளாக மேடையில் பேசி வருகிறார்."

     "எனக்குத் தெரிந்த பலர் நாற்பது ஆண்டுகளாக மேடைகளில் பேசி வருகிறார்கள்."

     "ஓடிப்போன வனிதை, தேடி வந்த செல்வி, பன்னீர்க் குளத்தில் பருவப் பாவை போன்ற கதைகளை எழுதித் தமிழ் எழுத்துலகுக்குத் தளராத தொண்டு புரிந்திருக்கிறார்..."

     "அவற்றை விட அருமையான தமிழ்ப் படைப்பிலக்கியங்களைப் படைத்துவிட்டு வறுமையில் வாடும் ஒரு டஜன் உயர்ந்த இலக்கிய கர்த்தாக்களாவது தமிழில் இருப்பார்கள்! ஆனால் பாவம், அவர்களில் யாரும் அமைச்சர்களாக முடியவில்லை."

     "இதைத் தடுப்பதன் மூலம் இந்த யுனிவர்ஸிடிக்கு ஏற்பட இருக்கும் பல நன்மைகளையே நீங்கள் தடுக்கிறீர்கள்" என்றார் ஆனந்தவேலு. ஹரிகோபாலின் கோபம் மேலும் அதிகமாயிற்றே ஒழியத் தணியவில்லை. அவர் மேலும் மேலும் ஆத்திரமடைந்து கத்தினார்.

     "ஐ திங்க் வீ டோண்ட் கன்ஃபெர் ஸச் டிகிரீஸ் ஃபார் இன்டலக்சுவல் பேங்கரப்ட்ஸி. அவர் ஹையஸ்ட் ஹானர்ஸ் ஷுட் நாட் கோ சீப்..."

     தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது.

     "ஐ ஃபுல்லி எண்டார்ஸ் தி வியூ ஆஃப் டாக்டர் ஹரிகோபால்" என்று மிஸஸ் செரியனும் உறுதியாகக் கூறினாள். தீர்மானம் ஒருமனமாக இல்லாமல் போனாலும் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்தால் அந்தத் தீர்மானத்தை சான்ஸலருக்கோ இணை வேந்தருக்கோ அனுப்பி அவர் சம்மதத்தோடு பட்டமளிக்கலாம் என்று பல்கலைக் கழக விதிகளில் ஒரு மூலையில் இருந்த விதிவிலக்கைப் படித்தார் துணைவேந்தர். டாக்டர் ஹரிகோபால், மிஸஸ் செரியன் இருவரைத் தவிர மற்றவர்களின் ஆதரவோடு அமைச்சர் கரியமாணிக்கத்துக்குக் கௌரவப் பட்டம் வழங்க முடிவாயிற்று. டாக்டர் ஹரிகோபால் பேசிய சில கடுமையான வாக்கியங்கள் 'மினிட்ஸில்' இடம் பெறலாமா கூடாதா என்று ஒரு சர்ச்சை எழுந்தது. எது விடப்பட்டாலும் தாங்கள் இருவரும் அந்தக் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படுவதை எதிர்த்தது கண்டிப்பாக 'மினிட்ஸில்' இடம் பெற வேண்டும் என்று டாக்டர் ஹரிகோபாலும், மிஸஸ் செரியனும் வற்புறுத்திவிட்டு வெளியேறினார்கள்.

     எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலு உடனே அமைச்சரை டெலிபோனில் கூப்பிட்டு அந்த நற்செய்தியைத் தெரிவிக்க விரைந்தார். இந்த நற்செய்தியைச் சொல்லித் தமக்கு வேண்டிய காரியத்தை அமைச்சரிடம் முடித்துக் கொள்ள முந்தியது அவர் ஆவல். துணைவேந்தரோ, இன்னும் ஒரு மூன்றாண்டோ, ஐந்தாண்டோ, பதவி உறுதிக்கு வழி பிறந்தது என்ற நம்பிக்கையை அடைந்திருந்தார். செய்தி மெல்ல மெல்லப் பல்கலைக் கழக வட்டாரத்தில் பரவத் தொடங்கியது.

     சிண்டிகேட் கூட்டத்தில் 'மினிட்ஸு'க்காகக் குறிப்பெடுக்கிற சுருக்கெழுத்தாளர் கதிரேசனின் உறவினர். அவர் பல்கலைக் கழக நிர்வாக ஊழல்களில் மனம் வெறுத்துப் போனார். மாலை ஐந்து மணி சுமாருக்கு அந்தச் சுருக்கெழுத்தாளரைச் சந்தித்து எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்ட பின் பாண்டியனைக் காண்பதற்காகக் கதிரேசன், அண்ணாச்சி கடைக்கு விரைந்தான். பாண்டியன் அப்போது அண்ணாச்சி கடையில் இல்லை. ஆனால் வேறு சில மாணவர்கள் இருந்தார்கள். பாண்டியன் போயிருக்கும் நண்பன் வீட்டை அண்ணாச்சியிடம் விசாரித்துக் கொண்டு கடையிலிருந்த மற்ற மாணவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு அங்கே தேடிப் போனான் கதிரேசன். நல்ல வேளையாகத் தேடிச் சென்ற இடத்தில் பாண்டியன் இருந்தான்.

     "நேற்று ஏதோ பந்தயம் போட்டாயே, பாண்டியன்? முதலில் அந்தப் பந்தயப் பணத்தை எடு. அப்புறம் மற்ற விவரம் எல்லாம் சொல்கிறேன்" என்று தொடங்கினான் கதிரேசன்.

     "பந்தயம் எங்கே ஓடிப் போகிறது? விஷயத்தை முதலில் சொல்லு" என்றான் பாண்டியன். கதிரேசன் சிண்டிகேட் கூட்ட முடிவை விவரித்தான். பாண்டியனும் மற்ற மாணவர்களும் அந்த விவரங்களைக் கேட்டுக் கொதிப்படைந்தனர். பாண்டியன் உடனே சொன்னான்:

     "ஆண்டுக் கணக்கில் படித்துப் பட்டம் பெற்ற பலர் வேலை கிடைக்காமலும், வாழ வழியின்றியும் தெருவில் திண்டாடுகிறார்கள். படித்தவர்களின் வாழ்வுக்கு வழி சொல்ல முடியாத பல்கலைக் கழகம் சொகுசுக்காகச் சிலருக்குப் பட்டம் வழங்கிக் கொண்டிருக்கிறது. வேடிக்கைத்தான். எப்படியாவது இதை நாம் எதிர்த்தாக வேண்டும்."

     "எப்படியாவது அல்ல! மிகவும் கடுமையாகவே எதிர்க்க வேண்டும். தகுதி உள்ள ஒருவருக்குத் தகுந்த காரணங்களோடு இந்த யுனிவர்ஸிடி கௌரவ டாக்டர் பட்டம் தந்தால் அதை நாம் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் யாருக்கோ, எந்த காரியமோ ஆகவேண்டும் என்பதற்காக இந்த டாக்டர் பட்டம் விலையாக்கப்படுவது தான் எனக்குப் பிடிக்கவில்லை" என்றான் கதிரேசன்.

     "எப்படியும் நான் இன்று மதுரைக்குப் புறப்படவிருக்கிறேன். மணவாளனையும் கலந்து பேசி இதற்கு ஏதாவது மறுப்புத் தெரிவிக்க ஏற்பாடு செய்யலாம்" என்று பாண்டியன் கூறியதும், "நாலைந்து பேராக இப்போதே ஒரு வாடகைக் காரில் மதுரைக்குப் புறப்படலாம். போகும் போது நிலக்கோட்டையில் பிச்சைமுத்து சாரையும் பார்ப்போம்" என்று கதிரேசன் குறுக்கிட்டான். பாண்டியனுக்கும் பிச்சைமுத்துவைப் பார்க்கும் ஆவல் இருக்கவே அதற்கு இணங்கினான். அவர்கள் உடனே அண்ணாச்சி கடைக்குப் போய்ச் சொல்லிக் கொண்டு, கதிரேசன் ஏற்பாடு செய்த டாக்சியில் மதுரைக்குப் புறப்பட்டார்கள். ஐந்து மாணவர்கள் சேர்ந்து சென்றதனால் இரவு நேரப் பயணத்தில் அலுப்புத் தெரியவில்லை. அவர்கள் நிலக்கோட்டையை அடையும் போது இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆகியிருந்தது. கதிரேசன் பிச்சைமுத்துவின் வீட்டுக்கு வழி சொல்லி அழைத்துக் கொண்டு போனான். இந்தப் பயணத்தில் மோகன்தாஸ் தங்களுடன் வரமுடியாமல் விடுதலையான தினத்தன்றே ஊருக்குப் போயிருந்தது பாண்டியனுக்குக் கை ஒடிந்த மாதிரி இருந்தது.

     அவர்கள் சென்ற போது பிச்சைமுத்து வீட்டில்தான் இருந்தார். மாணவர்களை அன்போடு வரவேற்றார். பாண்டியன் முதலிய மற்ற நான்கு மாணவர்களையும் அவருக்கு அறிமுகப்படுத்தினான் கதிரேசன். அந்த நேரத்துக்கு மேல் அவர்களுடைய இரவு உணவுக்கு ஏற்பாடு செய்து, மேலும் அவர்கள் தொடர்ந்து மதுரைக்குப் பயணம் செய்ய விரும்பிய போது, "தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டு இந்த அகாலத்தில் பயணம் செய்ய வேண்டாமே? இப்போது அவசரம் என்ன? காலையில் ஐந்து மணிக்கு எழுந்து புறப்படலாம்" என்று பிச்சைமுத்து யோசனை கூறினார். அவர்களுக்கும் அது சரி என்று தோன்றியது. அமைச்சர் கரியமாணிக்கத்துக்கு வரப்போகிற பட்டமளிப்பு விழாவின் போது கௌரவ டி.லிட். தர சிண்டிகேட் முடிவு செய்திருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட போது பிச்சைமுத்து சிரித்தார். மேலும் அவர் கூறினார்: "எதை எதிர்த்துத்தான் நீங்கள் போராடப் போகிறீர்கள்? போன இரண்டு மூன்று வாரங்களாக மேரி தங்கத்தின் தற்கொலை விவகாரத்துக்காக அதற்குக் காரணமான விரிவுரையாளரை நீக்கச் சொல்லிப் போராடினீர்கள்! உங்கள் மேல் நம்ப முடியாத பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி உள்ளே தள்ளினார்கள். அதை எதிர்த்தும் போராடி வென்றாயிற்று. இப்போது பட்டமளிப்பு விழா வருகிறது. அதிலும் நீங்கள் தான் போர்க்கொடி உயர்த்த வேண்டும். தொழிலாளிகளையும், மாணவ சமூகத்தையும் தவிர மேல் மட்டத்திலும், நடுத்தரத்திலுமான வெள்ளைக் காலர் சட்டைக்குரிய மக்கள் எப்போதும் எதிலும் கலந்து கொள்ளாத, ஸைலண்ட் மெஜாரிட்டியாகவே ஒதுங்கியிருக்கும் வரை நம் நாட்டுக்கு விடிவு இல்லை. அது வரை நீங்கள் தான் எதற்கும் களப்பலியாகித் தீரவேண்டும் போலிருக்கிறது. எதற்கெடுத்தாலும் மக்கள் பலியாவதை நான் வெறுக்கிறேன். தீமைகளுக்குக் காரணமானவர்களையே தேடிப் பகிரங்கமாகப் பலியிடும் துணிவு நமக்கு வராதவரை நாம் உருப்படப் போவதில்லை."

     "நீங்கள் சென்ற முறை சந்தித்த போது எங்களுக்கு மிகமிக உதவியாயிருந்தீர்கள். ஆசிரிய வர்க்கத்தில் கூடச் சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ரொம்பவும் பயந்து சாகிறார்கள். நீங்கள் தான் இந்தத் தலைமுறை ஆசிரியரைப் பிரதிபலிக்கிறீர்கள், சார்! நீங்கள் எனக்குக் கொடுத்த புத்தகங்கள் மிக மிகப் பயனுள்ளவை. அவை என் சிந்தனையைச் சூடேற்றி விட்டன. உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். வெறும் உபசார வார்த்தைகளால் நன்றி சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது என்பதால் தான் தயங்கித் தயங்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது" என்று கதிரேசன் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னான். பிச்சைமுத்து அவர்களுக்குத் திட்டவட்டமான சில யோசனைகளைக் கூறினார். முடிவில் ஓர் எச்சரிக்கையும் செய்தார்.

     "இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை நீங்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மாணவர் போராட்டம் என்பது படிப்பைத் தட்டிக் கழிக்கும் ஒரு சாதனம் என்றோ, வேறு எதற்கும் லாயக்கில்லாத கழிசடை மாணவர்களின் வேலை என்றோ வெளியே உள்ள தந்தக் கோபுரவாசிகள் சிலர் பேசுகிறாற் போல் உங்களில் யாவரும் ஆகிவிடக் கூடாது. தீவிரவாதிகளாயிருப்பதோடு நீங்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் போராட்டங்களை நியாயப்படுத்த முடியாமல் போய்விடும். இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்."

     "இந்தக் கருத்தை நான் வரவேற்கிறேன். போராட்டங்களின் அடிப்படை நியாயங்கள் சரியாகவும் திடமாகவும் இருந்தால் அவற்றின் தொடக்கமே வெற்றித்தான். முடிந்த பின் வரும் வெற்றியை விடத் தொடங்கியதுமே கிடைக்கும் தார்மீக வெற்றி பெரிது சார்!" என்றான் பாண்டியன்.

     காலை ஐந்து மணிக்கு அவர்கள் நிலக்கோட்டையிலிருந்து புறப்படும் போது, பல்கலைக் கழகம் திறந்ததும் தாமே ஒரு விடுமுறை நாளில் மல்லிகைப் பந்தலுக்கு வந்து மாணவர்களைச் சந்திப்பதாகச் சொல்லி விடை கொடுத்தார் பிச்சைமுத்து. பாண்டியன் அண்ணாச்சியின் கடை முகவரியை எழுதி அவரிடம் கொடுத்தான். பிச்சைமுத்துவுக்கே அண்ணாச்சியைப் பற்றி எல்லா விவரங்களும் நன்கு தெரிந்திருந்தது. "தெரியுமே, இந்த அண்ணாச்சியைப் பற்றி நான் ரொம்பக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுள்ள சூழ்நிலையில் பல பெரிய வசதியுள்ள மனிதர்கள் முன் வந்து செய்ய அஞ்சும் பொதுக் காரியங்களை ஒவ்வோர் ஊரிலும் இப்படி யாராவது ஓர் ஏழை அண்ணாச்சிதான் செய்து கட்டிக் காக்க வேண்டியிருக்கிறது" என்றார் அவர்.

     விடியற்காலை, ஆறு ஆறரை மணிக்கே அவர்கள் மதுரையை அடைந்து விட்டார்கள். உடனே வாடகைக் காருக்குக் கணக்குத் தீர்த்துப் பணம் கொடுத்துத் திருப்பி அனுப்பினான் கதிரேசன். அவர்கள் ஐவரும் மணவாளன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது மணவாளன் காலைத் தினசரியைப் படித்துக் கொண்டிருந்தார். மாணவர்களைப் பார்த்ததுமே, "வாருங்கள்! இப்போதுதான் அமைச்சர் கரியமாணிக்கத்துக்குக் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க யுனிவர்ஸிடி சிண்டிகேட் முடிவு செய்திருக்கும் செய்தியைப் படித்துக் கொண்டிருந்தேன். உடனே நீங்களும் வந்து விட்டீர்கள்... பெறுகிறவருக்கு இது கௌரவமாயிருக்கலாம். ஆனால் டாக்டர் பட்டத்துக்கு இது பெரிய அகௌரவம்..." என்று குமுறலோடு வரவேற்றார் மணவாளன். எல்லோருக்கும் காப்பி வரவழைத்தார் அவர். பிரச்னையை எல்லோரும் கலந்து பேசி விவாதித்தார்கள். நீராடி உடைமாற்றிக் கொண்ட பின் பகலுணவுக்கு அவர்கள் வெளியே புறப்பட்ட போது மணவாளன் தடுத்து வீட்டிலேயே சாப்பிடச் செய்தார். பிற்பகலிலும் அவர்கள் தொடர்ந்து விவாதித்தார்கள்.

     மாலை ஐந்து மணிக்கு மணவாளனையும் தன்னோடு கண்ணுக்கினியாளின் வீட்டுக்கு அழைத்தான் பாண்டியன். தன்னைச் சுற்றி நிறைய மாணவர்கள் இருந்ததனால், "நீ மட்டும் போய்விட்டு வந்துவிடு, பாண்டியன்! நான் இவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்" என்றார் மணவாளன். மணவாளனின் வீடு இருந்த மேலச் சந்தைப்பேட்டைத் தெருவிலிருந்து நடந்தே சித்திரக்காரத் தெருவுக்குப் போய்ச் சேர்ந்தான் பாண்டியன். நாயுடுவின் வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது. அவன் அந்த வீட்டில் நுழைந்து முன் வராந்தாவில் செருப்பைக் கழற்றி விட்டுக் கூடத்தில் அடி எடுத்து வைத்த போது பல்கலைக் கழகத் தோற்றத்திலிருந்து மாறிய புது அழகோடு கொலுப் பொம்மை வரிசைகளுக்கு முன் அமர்ந்திருந்தாள் கண்ணுக்கினியாள். கருநாகமாய்ச் சரியும் கூந்தற் பின்னலும் அதன் மேல் சரிந்த மல்லிகைக் கொத்துமாக அவள் முதுகுப்புறமும் இடையின் பொன் வண்ணமும் தெரிந்து அவனை முதற் பார்வையிலேயே மயக்கின. கொலுவின் கீழே இருந்த சிறிய செயற்கைக் குளத்தில் சின்னஞ்சிறு பிளாஸ்டிக் கப்பலை மிதக்க விட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

     "கப்பல் கவிழ்ந்து விடப் போகிறது... கவனம்..." - குரலைக் கேட்டுத் திரும்பியவள் அவனைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்.

     "வாருங்கள்! புயல் உள்ளே வந்தால் கப்பல் கவிழாமல் பின்னென்ன பிழைக்கவா செய்யும்? நேற்றே வருவதாகச் சொல்லியிருந்தீர்களே? நாலைந்து நாட்கள் கழிந்துவிட்டது என்றாலும் இங்கே வந்ததும் கொலுவை அவசரம் அவசரமாக வைத்துவிட்டேன். எப்படி இருக்கிறது கொலு?"

     "உண்மையைச் சொல்லட்டுமா?"

     "ம்ம்... சொல்லுங்களேன்" - இந்த 'ம்ம்' ஒரு சங்கீதமாகவே பாண்டியனின் காதில் ஒலித்தது.

     "இந்தக் கொலுவிலேயே மிகவும் அழகான பொம்மை - பெரிய பொம்மை, உயிருள்ள பொம்மை - கொலுவுக்கு வெளியே தரையில் நின்று கொண்டிருக்கிறது."

     அவள் முகம் சிவந்தது. அவனை அப்போதுதான் முதல் முறை சந்திப்பது போல் மிகவும் புதிதாக ஓரக் கண்களால் பார்க்கத் தொடங்கினாள் அவள்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247