இருபத்தோராவது அத்தியாயம்

     மாணவ சமுதாயத்தின் மேல் தாம் கொண்டிருக்கும் மனப்பூர்வமான அன்புடனும் அக்கறையுடனும் அப்போது அவர்களிடத்தில் பிச்சைமுத்து பேசினார்.

     கதிரேசனும் பாண்டியனும் அப்போது பிச்சைமுத்துவையும் தங்களோடு மணவாளனின் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்கள். தம்முடைய பள்ளித் தலைமையாசிரியரோடு வந்திருப்பதாலும் அவர் கடைக்குள்ளே தமக்காகக் காத்திருப்பதாலும் தாம் அப்போது அவர்களோடு மணவாளனின் வீட்டுக்கு வரமுடியாமலிருப்பதற்கு வருந்தினார் பிச்சைமுத்து. மாணவர்கள் இருவரும் அவரை அதற்கு மேல் வற்புறுத்த விரும்பவில்லை.

     மேலக்கோபுர வாசலில் பிச்சைமுத்துவிடம் விடை பெற்றுக் கொண்டு அவர்கள் இருவரும் மணவாளனின் வீட்டை அடைந்த போது இரவு ஒன்பது மணிக்கு மேலாகி விட்டது. மணவாளன் வீட்டு மொட்டை மாடியில் நூறு மாணவர்களுக்கு மேல் வந்து கூடியிருந்தனர். பாண்டியன் தாமதமாக வந்ததற்கு மணவாளன் அவனைக் கோபித்துக் கொண்டார். கதிரேசன் வழியில் எதிர்பாராத விதமாகப் பிச்சைமுத்துவைச் சந்திக்க நேர்ந்ததை மணவாளனிடம் கூறினான்.

     "அவரையும் இங்கே கூப்பிட்டுக் கொண்டு வந்திருக்கலாமே?" என்று மணவாளன் பிச்சைமுத்து அவர்களோடு வராததற்காக வருத்தப்பட்டார். தலைமை ஆசிரியருடன் வந்திருக்கும் அவருடைய வேலை நிர்ப்பந்தங்களைக் கதிரேசன் மணவாளனிடம் சொன்னான். பட்டமளிப்பு விழாவின் போது மந்திரிக்கு டாக்டர் பட்டம் அளிப்பதை எப்படி எதிர்ப்பது - எந்தெந்த முறைகளில் மறுப்புத் தெரிவிப்பது போன்ற முடிவுகள் அப்போது அங்கு கூடியிருந்த மாணவர்களிடையே எடுக்கப்பட்டன. போராட்ட அறிவிப்புக்காக எழுதப்பட்ட, எடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களை நகல் எழுதிப் படித்து யாவரும் அங்கீகரித்து அச்சிடக் கூட முடிவு செய்தாயிற்று. இரவு பதினோரு மணி சுமாருக்கு கதிரேசனும் மல்லிகைப் பந்தலிலிருந்து வந்திருந்த மற்ற மாணவர்களும் இரவில் மணவாளனோடு அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டார்கள். இரவு நெடுநேரம் அவர்கள் படுத்தபடியே மாணவர்கள் தொடர்புடைய பல பிரச்னைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு ஓய்ந்து அவர்கள் தூங்கத் தொடங்கிய போது இரண்டாவது காட்சி சினிமா விடுகிற நேரம் ஆகிவிட்டது. அதற்கு மேலும் பேசிக் கொண்டே இருந்தால் அந்தப் பேச்சுக்கு ஒரு முடிவே இல்லை என்று தங்களைத் தாங்களே கட்டுப் படுத்திக் கொண்டு தான் தூங்கினார்கள் அவர்கள்.

     மறுநாள் அதிகாலை நாலு மணிக்கு மணவாளனை எழுப்பிச் சொல்லிக் கொண்டு பாண்டியனும் கதிரேசனும் மற்ற மாணவர்களும் பஸ் நிலையத்துக்கு வந்தார்கள். கதிரேசன் முதலியவர்கள் மல்லிகைப் பந்தலுக்கும் பாண்டியன் பாலவநத்தத்துக்கும் பஸ் ஏறினார்கள்.

     மல்லிகைப் பந்தலில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை அண்ணாச்சியையும், மற்ற மாணவர்களையும் கலந்து பேசிச் செய்யும்படி கதிரேசனிடமும் பிறரிடமும் கூறி அனுப்பினான். மல்லிகைப் பந்தலுக்குப் போகிற பஸ்தான் முதலில் புறப்பட்டுப் போயிற்று. தான் ஊருக்கு விருதுநகர் பஸ்ஸில் போகலாமா, அருப்புக்கோட்டை பஸ்ஸில் போகலாமா என்று யோசித்தான் பாண்டியன். முதலில் அருப்புக்கோட்டை பஸ்ஸே இருந்தது. அந்த அருப்புக்கோட்டை பஸ் காலை நாலே முக்காலுக்குத்தான் புறப்பட்டது. மதுரை நகர எல்லையைக் கடந்து பஸ் அவனியாபுரம் போகும் போது, கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது. மேற்குப்பக்கம் அவனியாபுரம் கண்மாய்க்கு அப்பால் இருள் புலர்ந்தும் புலராமலிருந்த வைகறைக்கு ஏற்ப மங்கலாகத் திருப்பரங்குன்றும், பசுமலையும் தென்பட்டன. விமான நிலையத்துக்கு வழி பிரிகிற இடம் வந்ததும் கட்டிடங்களே அதிகமில்லாத அந்த மேட்டு வெளியிலிருந்து பார்க்கும் போது சூரியோதத்துக்கு வரவு கூறிக் குங்குமத்தால் அவசரம் அவசரமாக இட்ட கோலம் போல் கீழ்வானம் மெல்ல மெல்லச் சிவக்கத் தொடங்கியிருந்தது. ஓடுகிற பஸ்ஸில் முகத்தில் சில்லென்று வந்து உராயும் குளிர்ந்த காற்றையும் பொருட்படுத்தாமல் இந்தக் காட்சியை இரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் பாண்டியன். மல்லிகைப் பந்தலில் சூரியோதத்தை இவ்வளவு அதிகாலையில் பார்க்க முடியாது. காலை எட்டு மணிக்கு மேலானாலும் விடிந்து விட்ட உணர்வு கூட ஏற்படாத ஊர் மல்லிகைப் பந்தல். மல்லிகைப் பந்தலின் நினைவும், பல்கலைக் கழக நினைவுகளும், அந்த ஆண்டின் புதிய அநுபவங்களான மாணவர் இயக்க எண்ணங்களும் ஞாபகம் வந்தவுடன் கண்ணுக்கினியாளும் ஞாபகத்தில் வந்து தங்கினாள். அவளைச் சந்திக்க நேர்ந்த முதல் சந்திப்பிலிருந்து முந்திய நாள் மதுரையில் சித்திரக்காரத் தெருவில் அவள் வீட்டில் விருந்து உண்டது வரை ஒவ்வோர் அணுவையும் நினைவில் அசை போட்டு மகிழ்ந்தான் அவன். பஸ் அருப்புக்கோட்டையை நெருங்குமுன் ஓரிடம் வந்ததும் அவன் நினைவு ஒரு பழைய நிகழ்ச்சியைத் திரும்ப எண்ணியது. சாலையில் அப்போது போய்க் கொண்டிருந்த இடத்தில் தான் 1965-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது மேல் வகுப்பு மாணவர்களும் தானும் சேர்ந்து ஒரு பஸ்ஸுக்கு நெருப்பு வைத்தது ஞாபகம் வந்தது. மாணவ சமூகத்தின் அன்றைய மன நிலைக்கும் இன்றைய மன நிலைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மாறுதல்களும், வளர்ச்சியும் அவனுக்கு உடன் நிகழ்ச்சியாக மீண்டும் நினைவு வந்தது. பஸ் சாலையில் அந்த இடத்தைக் கடந்ததும் மறுபடியும் அவன் நினைவில் சித்திரக்காரத் தெருவும், நாடகங்களின் ஜிகினா கிரீடங்கள், உடைகள், ஸீன்கள் அடங்கிய அந்த மாடிக் கூடமும், அந்த மாடியிலிருந்து செவிமடுத்த 'ரா ராம இண்டி தாக' கீதத்தின் குரல் இனிமையும், பொருள் இனிமையும் அதை அவள் அப்போது தேர்ந்தெடுத்துப் பாடியதனால் தனக்குப் புரியவைத்த குறிப்பின் இனிமையும் தோன்றி இணையற்ற இன்ப அலைகளாய்ச் சிலிர்த்துக் கொண்டிருந்தன.

     மாடியில் கண்ணுக்கினியாளின் தந்தையோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அவர் பழைய காலத்து மனிதர்களுக்கே உரிய முறையில் ஒளிவு மறைவு கூச்சம் எதுவும் இல்லாமல் தனது சாதி, குலம், கோத்திரம் எல்லாவற்றையும் சுற்றி வளைத்துத் தொடங்கி விசாரித்து முடித்ததை நினைத்ததும் இப்போது கூட அவனுக்குச் சிரிப்பு வந்தது.

     "எனக்கு தெரிஞ்சு நம்ப ஆளுங்க 'பாண்டியன்'னு பேர் வைக்கிற வளமுறை இல்லியே தம்பீ?" என்று மிகவும் தந்திரமாக விசாரித்தார் நாயுடு. அப்போதுதான் தன் குடும்பம் பற்றிய ஓர் உண்மையைத் துணிவாகவும், திடமாகவும் அவரிடம் தெரிவித்தான் பாண்டியன்.

     "எங்க அப்பா தேவரு. அம்மா நாயுடு. அந்த நாளிலே எங்க ஊரே அதிசயிக்கிறாப்பிலே நடந்த கலப்பு மணம்னு எங்க அப்பாவே அதைப் பற்றி அடிக்கடி பேசுவாரு. இந்தக் கலப்பு மணத்தாலே ரொம்ப நாள் எங்க குடும்பத்து நல்லது கெட்டதுகளுக்குத் தேவமாருங்களும் வரலே, அம்மா சாதி ஆட்களும் வரலேம்பாங்க... அப்பாதான் மறவர் சீமை வழக்கப்படி 'பாண்டித் தேவர்'னு எங்க தாத்தா பேரைச் சுருக்கமாக 'பாண்டியன்'னு எனக்கு வச்சாராம்..." என்று கந்தசாமி நாயுடுவுக்கு தான் கூறிய மறுமொழியையும் நினைத்துக் கொண்டான் அவன். இந்த உண்மை ஒருவேளை கந்தசாமி நாயுடுவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிடுமோ என்ற கூச்சம் அவனுக்கு அப்போது இருந்தது. ஆனால் அடுத்த கணமே, "கலப்பு மணத்துலே தப்பு ஒண்ணும் இல்லே. ஒரு வகையிலே பார்க்கப் போனா நானும் என் சம்சாரமும் கூடக் கலப்பு மணம்னுதான் சொல்லணும். நாங்க 'கவரை' நாயுடு. அவள் கம்மவாரு. தெரிஞ்சிதான் கட்டிக்கிட்டோம்" என்று சுபாவமாக மறுமொழி கூறியிருந்தார் நாயுடு. அதோடு விடாமல் மேலும் அவரே கேட்டார்: "உன்னோட முழுப் பேரு 'சுபாஷ் சந்திர பாண்டியன்'னுல்ல கண்ணு சொல்லிச்சு...?"

     "அதுவா? எங்கப்பா நேதாஜி பக்தர். முத்துராமலிங்கத் தேவர் மேலே ரொம்பப் பிரியம். அந்தப் பிரியத்திலே வெறும் 'பாண்டியன்'னு கூப்பிடாமே பிரியமா சுபாஷ் சந்திர பாண்டியன்னு கூப்பிடுவாரு" என்று விளக்கியிருந்தான் அவன். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் இன்னும் ஆயிரம் சீர்திருத்தத் தலைவர்கள் தோன்றினாலும் தமிழ்நாட்டில் சாதிகளைப் பற்றியும், குலமுறைகள் பற்றியும் அறிகிற ஆவல் போகாது போல் தோன்றியது பாண்டியனுக்கு. அருப்புக்கோட்டையில் இறங்கிப் பாலவநத்தத்துக்கு வேறு பஸ் மாறி ஏறிக் கொண்ட பின்னும் அவன் சிந்தனைகள் தொடர்ந்தன. மனம் முந்திய தினத்து நினைவுகளால் நிரம்பி வழிந்தது.

     முதல் நாள் நடந்த இந்த நிகழ்ச்சிகளை மீண்டும் மீண்டும் நினைத்து அவன் சிந்தித்துக் கொண்டிருந்த போதே பஸ் பாலவநத்தத்தில் போய் இறங்க வேண்டிய நேரம் வந்திருந்தது.

     "யாருப்பா சுப்பையாத் தேவரு மகன் தானே? இதென்னப்பா புது நாகரிகம்? நெத்தியே தெரியாம கிராப் வாரியிருக்கே...?" என்று மேலே சட்டை போடாமல் திறந்த மார்புடன் கூடிய முதியவர் ஒருவர் பஸ்ஸிலிருந்து இறங்கும் போதே அவனை விசாரித்தார். அவர் தோளில் மண்வெட்டி இருந்தது. நின்று அவருக்குப் பதில் சொல்லிவிட்டு அப்புறம் வீட்டுக்கு நடந்தான் அவன். தெருவிலும் பலருக்கு நின்று நின்று பதில் சொல்ல வேண்டியிருந்தது. நடுவழியில் உயர்நிலைப் பள்ளியில் அவனோடு சேர்ந்து படித்த மாணவ நண்பன் ஒருவன் எதிர்ப்பட்டான். இப்போது அவன் விருதுநகர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவன் கையில் பழைய 'திராவிட நாடு' இதழ்கள் அடங்கிய பழுப்பேறின 'பைண்டு' வால்யூம் ஒன்று இருந்தது. அந்தத் தடித்த வால்யூமின் மேலட்டையில் கறுப்பு சிவப்பு நிறம் மேலும் கீழுமாகக் கலந்தாட எழுத்துக்களில் 'திராவிட நாடு தொகுப்பு ஒன்று' என்றும் பெரிதாக எழுதப்பட்டிருந்தது. பாண்டியன் அவனை விசாரித்தான். குரலில் கேலி இருந்தது. "என்ன அழகுமுத்து? பழசெல்லாம் ஒண்ணுவிடாமத் தேடித் தேடிப் படிக்கிறாப்பிலே இருக்கு?"

     "ஆமாம் இல்லாட்டி உன்னைப் போலத் தமிழ் எதிர்ப்பு அணியிலே சேர்ந்திடுவேனா என்ன? வடவர் ஆதிக்க வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறிடச் செங்குருதி பெருக்கும் பைந்தமிழர் படையின் முதல் போர் முரசு இது! மறந்து விடாதே..." என்று அழகுமுத்து பதிலை ஆரம்பிக்கவே பாண்டியன் அடக்கமுடியாமல் சிரித்து விட்டான். அழகுமுத்து இன்னும் கடந்த காலத்திலேயே இருப்பது புரிந்தது. "இந்தா பாரு... பஸ்லேருந்து இறங்கினதும் இறங்காததுமா, ஒரு பிரசங்கம் கேட்க எனக்கு நேரமில்லே அழகுமுத்து! அர்த்தமுள்ளதாக ஏதாவது இருந்தால் சொல்லு" என்று கூறி அழகுமுத்துவிடம் இருந்து தப்பினான் பாண்டியன். அமைச்சர் கரியமாணிக்கத்துக்குக் கௌரவ டாக்டர் பட்டம் தருவது பற்றிய செய்தியைத் தினசரிகளில் படித்ததாகவும், அதைத் தானும் தன்னைச் சேர்ந்த மாணவர்களும் வரவேற்பதாகவும் அழகுமுத்து போகிற போக்கில் பாண்டியனின் காதில் விழும்படி உரத்துக் கூறினான். அவன் தன்னை வம்புக்கு இழுப்பது பாண்டியனுக்குப் புரிந்தது.

     பாண்டியன் போய்ச் சேர்ந்த போது வீட்டில் யாருமில்லை. பின்னால் மாட்டுக் கொட்டகத்தில் வீட்டு வேலையாள் அய்யாவு பருத்தி விதை ஆட்டிக் கொண்டிருந்தான்.

     "வா தம்பி! ஐயா, அம்மா, தங்கச்சி எல்லாரும் வெள்ளெனவே எந்திரிச்சி மொளவாத் தோட்டத்துக்குப் போயிட்டாங்க. இன்னிக்கி மொளவா பறிக்கிறாங்க... பொழுது சாயறதுக்கு முன்னே தான் வருவாங்க. நீ வர்றதா கடிதாசி கிடிதாசி எதுவும் போடலியா?" என்று வரவேற்றான் அய்யாவு.

     பையைக் கூடத்துத் திண்ணையில் வைத்துவிட்டு கிணற்றடிக்குப் போய்த் தண்ணீர் இறைத்து முகம் கழுவிய பின் பல் விளக்குவதற்காக வேப்பங் குச்சி ஒடித்துக் கொண்டு வந்த பாண்டியன், தலையில் முண்டாசும், முழங்காலுக்கு மேலே தூக்கிக் கட்டிய வேட்டியுமாகக் கிழக்கு பக்கத்து வீட்டுக்காரரான சன்னாசித் தேவரை எதிர் கொள்ள நேர்ந்தது. அந்தக் கிணறு கிழக்கு வீட்டுக்கும் பாண்டியனின் வீட்டுக்கும் பொதுக் கிணறு. சன்னாசித் தேவர் கிணற்றடிக்குக் குளிக்க வந்திருந்தார். அவரை அன்போடு நலம் விசாரித்தான் பாண்டியன்.

     "ஏன் தம்பீ! அங்கே யுனிவர்ஸிடியிலே அத்தினி கலாட்டாவுக்கும் நீதான் காரணம்னு பேசிக்கிறாங்களே...? ஒழுங்கா லட்சணமாப் படிப்பைக் கவனிப்பிங்களா, அதை விட்டுப்பிட்டு விடிஞ்சு எந்திரிச்சா போராட்டம் கீராட்டம்னு ஏன் அலையணும்? தேவமாருலே இப்பத்தான் ஏதோ நாலு பேரு வக்கீல், டாக்டரு, அது, இதுன்னு படிச்சு முன்னுக்கு வந்துக்கிட்டிருக்கோம்... அது பொறுக்கலியா உனக்கு?" என்று ஆரம்பித்தார் சன்னாசித் தேவர். சன்னாசித் தேவர் ஃபார்வர்ட் பிளாக் பிரமுகர். அப்பாவுக்கு நண்பர். அவருடைய மனநிலையைப் பாண்டியன் அறிவான். பக்கத்து வீட்டுக்காரரை விரோதித்துக் கொண்டு விவாதிப்பதிலிருந்து விலகி பல் துலக்குகிற காரியம் முடித்த போது சன்னாசித் தேவர் குளிக்கத் தொடங்கியிருந்தார். அவரிடம் கையசைத்துக் குறிப்பினாலேயே சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் வந்தான் பாண்டியன். சமையல் அறையில் கம்பங்களி இருந்தது. மடக்கில் தயிரை ஊற்றிக் கம்பங்களியை ஒரு கை பார்த்ததும் சுகமாகத் தூக்கம் வந்தது. அய்யாவுவிடம் சொல்லிவிட்டுத் திண்ணையில் போய்ப் படுத்த பாண்டியன் மறுபடியும் கண்விழித்த போது பகல் இரண்டு மணிக்கு மேலாகியிருந்தது. முதல் நாள் இரவு மணவாளனின் வீட்டில் பேசியே கழித்து விட்டதால் நல்ல உறக்கமில்லாமல் சோர்ந்திருந்த அவனை பஸ் பயணம் வேறு களைப்படையச் செய்திருந்ததால் அடித்துப் போட்ட மாதிரித் தூங்கினான். அவன் விழித்த போது கோணிப் பைகளோடு மிளகாய்த் தோட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான் அய்யாவு. குளித்து விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு தானும் அங்கே வருவதாக அவனிடம் சொல்லி அனுப்பிவிட்டுக் கிணற்றடிக்குச் சென்றான் பாண்டியன்.

     சில மாதங்களாக ஹாஸ்டல் பாத்ரூமில் ஒரு வாளி வெந்நீரில் குளித்துப் பழகிவிட்டுத் திடீரென்று வாளியால் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் குளிப்பது சிரமமாகவும் அசௌகரியமாகவும் இருப்பது போல் பட்டது. இறவைக் கயிறு கைகளில் அறுப்பது போல் உறுத்தியது. அரையில் சின்னஞ்சிறு துண்டுடன் அவன் குளித்துக் கொண்டிருக்கும் போது சன்னாசித் தேவர் மகள் கருப்பாயி குடத்தோடு தண்ணீருக்கு வந்தாள். ஊரிலிருந்து இரண்டரை மைல் தள்ளி இருக்கிற பருத்திக் காட்டுக்குத் தனியே போய்ப் பருத்தி எடுத்துக் கொண்டு இருட்டியபின் வீடு திரும்புகிற அளவு தைரியமுள்ள அவள் தான் குளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கூச்சத்தோடு பயந்து தயங்கித் திரும்ப முயலுவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

     "ஏ, கருப்பாயி... ஏன் திரும்பறே? வந்து தண்ணி எடுத்துக்கிட்டுப் போ..."

     அவள் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, "குளியுங்க... பொறவு வந்து தண்ணி எடுத்துக்கிடுதேன்" என்று கூறிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக விரைந்த போது அவளை அவனால் புரிந்து கொள்ள முடியாமலிருந்தது. சாதாரணமாக நீ, நான் என்று ஒருமையில் பேசுகிறவள் திடீரென்று மரியாதைப் பன்மையில் 'குளியுங்க' என்றதும், இயல்பை மீறி வெட்கப்பட்டதும் அவனுக்குப் புதுமையாயிருந்தன.

     சின்ன வயதில் ஒரு சமயம் இந்தக் கருப்பாயி வாய்த் துடுக்கோடு 'நீள மூக்குப் பாண்டி' என்று தன் மூக்கு நீளமாயிருப்பதை நையாண்டியாக நாலைந்து வேறு தெருச் சிறுமிகளையும் உடன் வைத்துக் கொண்டு கேலி செய்த போது, அவளைத் தான் ஓட ஓட விரட்டிக் கன்னத்தைத் திருகியிருப்பதை நினைத்துக் கொண்டான் பாண்டியன். இப்போது அவள் மிகவும் அந்நியமாக நடந்து கொண்ட விதம் அவனுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.

     குளித்து விட்டு உள்ளே சென்று கைக்குக் கிடைத்த ஒரு கைலியைக் கட்டிக் கொண்டு, கை வைத்த கலர் பனியன் ஒன்றையும் போட்டுக் கொண்ட பின் வேண்டும் என்றே அவன் மீண்டும் கிணற்றடிக்குப் போனான். கருப்பாயி குடத்தின் கழுத்தில் கயிற்றைச் சுருக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். "என்னது... கருப்பாயி...? நீ அப்பிடிப் பயந்துக்கிட்டு ஓடினதை நினைச்சா சிரிப்பு வருது எனக்கு! ரொம்ப நாளைக்கு முன்னே 'நீளமூக்குப் பாண்டி'ன்னு சொல்லிப்பிட்டு நான் துரத்தறப்ப ஓடன மாதிரியில்லே ஓடினே?" என்று பேச்சுக் கொடுத்தான். அவள் சிரித்தாள். அவனை நேருக்கு நேர் ஏறிட்டுப் பார்க்கப் பயந்தாற் போல் கிணற்றில் இறங்கும் குடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

     "வீட்டிலே எல்லாரும் மொளவா எடுக்கப் போயிட்டாங்க போலிருக்கே? எங்ஙனே மதியத்துக்குச் சாப்பிடப் போறீங்க...? எங்க வீட்டுக்கு வாரீங்களா?" என்று அவன் முகத்தைப் பாராமலே கேட்டாள் அவள்.

     "நீ கேட்டதிலேயே பசி ஆறிப் போச்சு தாயே! அருமையான கம்பங்களியும் தயிரும்... வயித்திலேயே அப்படியே இருக்கு... முக்குக் கடையிலே ஒரு டீ குடிச்சிப் போட்டு நானும் மொளகாத் தோட்டத்துக்குப் போறேன் ஆத்தா" வேண்டுமென்று அவளைச் சண்டைக்கு இழுப்பதற்காக உள்ளூர் வழக்கமான ஆத்தா, தாயே போன்ற மரியாதைச் சொற்களைப் போட்டுப் பேசினான் அவன். அவள் சகஜமாகத் தன்னை நீ, உன்னை என்று ஒருமையில் பேசாமல் திடீர் மரியாதை கொடுத்ததற்குப் பழி வாங்குவது போலவே அவன் பேசியது அமைந்திருந்தது. ஆனால் அந்தக் கிண்டலையெல்லாம் அவள் புரிந்து கொண்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை.

     "காலேசிலே படிக்கிறவுகளுக்கு, மொளவாத் தோட்டத்துலே என்ன வேலை...?" என்று திரும்பிப் பார்த்துக் கேட்டு விட்டு வெளேரென்று அழகான பல்வரிசை தெரியச் சிரித்தாள் கருப்பாயி.

     "ஆமா... நீ இப்பல்லாம் பருத்தி எடுக்கப் போறதில்லையா?"

     "வயசுக்கு வந்தப்புறம் ஐயா போவக்கூடாதின்னிட்டாக..." இதையும் எங்கோ பார்த்தபடிதான் சொன்னாள் அவள். சொல்லிவிட்டுச் சிறிது தயங்கி நின்ற பின், "நான் வாரேன்" என்று போய்ச் சேர்ந்தாள். அவளுடைய மாறுதல்களும், புதிய மரியாதைகளையும், புதிய வெட்கங்களையும் அடைந்திருந்த பருவம் இரசிக்கத் தக்கவையாக இருந்தன. தெரு முக்குக் கடையில் டீ குடித்துவிட்டு மிளகாய்த் தோட்டத்துக்குப் புறப்பட்டான் பாண்டியன். இருபுறமும் இடையிடையே கொத்துமல்லி பயிரிட்டு வளர்ந்திருந்த சின்னப் பருத்திச் செடிகளின் நடுவே ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்லும் அனுபவம் சுகமானதாக இருந்தது. பருத்தி பூத்திருந்த அழகும் கம்மென்ற பச்சைக் கொத்துமல்லி மணந்த மணமும் இதமான உணர்வைத் தந்தன. பருத்திக் காட்டில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டொரு கிராமத்துப் பெண்கள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் தங்கள் வேலைகளில் ஈடுபட்டார்கள். மல்லிகைப் பந்தலின் மலைவளமும், ஈரமும், குளிர்ச்சியும் அளித்த மந்தமான சுகத்தை விட இந்தக் கரிசல் காட்டு வெப்பமும், செவற்காட்டுச் செம்மையும், மண்வாசனைகளும் அவனை இயல்பான அறிமுகமான இடத்தில் இருக்கும் சுபாவமான உணர்வுகளைக் கொள்ளச் செய்தன. உலகின் நாகரிக வேகங்களையும் ஃபாஷன்களையும் பற்றிய கவலையோ, அக்கறையோ இல்லாமல் மண்ணை நம்பி உழுது பயிரிட்டுக் களை எடுத்து அமைதியாகவும், பேராசைப்படாமலும் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தைப் பார்ப்பது மனத்துக்குத் தெம்பளித்தது. மூவாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத் துணைவேந்தரை விட அரைப்படி கேழ்வரகுக்காகவோ, முக்கால்படி சோளத்துக்காகவோ காட்டில் வெயிலில் வேலை செய்யும் இந்த விவசாயக் குடிமக்கள் நாணயமானவர்களாக இருக்க முடியும் என்று தெரிந்தது. ஒழுக்கமும், நேர்மையும், நாணயமும் இல்லாத படித்தவர்களை விடப் படிப்பில்லாமல் ஒழுக்கமும், நேர்மையும், நாணயமும் உள்ள பாமரர்களே சமூகத்தைப் பலப்படுத்துகிறவர்களாக இருப்பார்கள் போலிருந்தது. மல்லை இராவணசாமியைப் போல் உழைக்காமல் பிறரைச் சுரண்டிக் கொழுக்கிறவர்கள் இந்தக் கரிசல் காட்டில் இல்லை. பண்புச் செழியனையும், பொழில் வளவனாரையும் போல் மற்றவர்களுக்கு வெறும் மொழி, இன வெறிகளை ஏற்றி அதில் தாங்கள் குளிர் காய வசதி செய்து கொள்ளும் தளுக்குப் பேர் வழிகளும் இந்தக் கரிசல் காட்டு உழைப்பாளிகளில் இருக்க வழியில்லை. விரிவுரையாளர் மதனகோபாலைப் போல் பிற பெண்களைக் கழுகுக் கண்களோடு வட்டமிடும் சமூகக் கயவர்களை இங்கே காண முடியாது. இது கிராமம். எல்லாரும், எல்லாரையும் அறிந்து கொண்டு எல்லாருக்கும் உதவும் நெருக்கமானதோர் எல்லையில் யாரும் யாரையும் ஏமாற்றி வளர வாய்ப்பில்லை என்பது போல் கண்ணுக்கெட்டிய தூரம் பரவிக் கிடந்த அந்தக் கரிசல் காட்டில் ஆட்கள் நெருங்கி நின்று உழைத்துக் கொண்டிருந்தார்கள்.

     அவன் தங்களுக்குச் சொந்தமான மிளகாய்த் தோட்டத்துக் கிணற்றடிக்குப் போய்ச் சேர்ந்த போது பகல் கழிந்து மாலை நேரம் வந்து வெயில் தணிந்திருந்தது. ஊரிலிருந்து அந்த இடம் சில மைல்கள் தள்ளியிருந்தது. கிணற்றடி மேட்டில் செக்கச் செவேலென்று மிளகாய்ப் பழ அம்பாரம் குவிந்திருந்தது. தங்கை மாரியம்மாள் தொலைவில் அவனைப் பார்த்ததுமே எதிர்கொண்டு ஓடிவந்தாள். முகம் மலர அவனை வரவேற்றாள்.

     "ஏண்டா இப்பிடி இளைச்சுப் போயிச் சோகை தட்டின மாதிரி வெளுத்திருக்கே?..." என்று தாய் அவன் உடம்பைச் சுட்டிக்காட்டி விசாரித்தாள். எவ்வளவு செழிப்பாக இருந்தாலும் ஒவ்வொரு தாய்க்கும் தன் மகனைத் தான் அல்லாத பிறர் பேணிய வேளைகளில் எல்லாமே அவனை இளைக்கச் செய்துவிட்டது போல் தோன்றுவது தவிர்க்க முடியாதது போலிருந்தது. அவனுடைய மதியச் சாப்பாட்டைப் பற்றி உடனே விசாரித்தாள் தாய். வீட்டில் அவளே வைத்து விட்டு வந்திருந்த கம்பங்களியையும் தயிரையும் பிசைந்து சாப்பிட்டதைச் சொன்னான் அவன். சன்னாசித்தேவர் மகள் தன்னைச் சாப்பிடக் கூப்பிட்டதையும் தன்னிடம் அளவு கடந்து வெட்கப்பட்டதையும் கூட அவன் தாயிடம் சிரித்துக் கொண்டே தெரிவித்தான்.

     "வயசு வந்த பொண்ணு வெட்கப்படாம என்ன செய்யும்? நீ மட்டும் என்னவாம்? இன்னும் சின்னப் பையனின்னா நினைச்சுக்கிட்டிருக்கே? உனக்கு என்ன வயசு இப்ப?... கல்யாணங் கட்டிக்கிட்டிருந்தா இதுக்குள்ளாரா...?''

     "அவன் தாய் இப்படி எல்லாம் தாராளமாக அவனிடம் பேசுவது உண்டு. நல்ல வேளையாக அப்போது சற்றே விலகித் தொலைவில் மிளகாய் பறித்துக் கொண்டிருந்த அவன் தந்தை சுப்பையாத்தேவர் ஒரு கோணிப் பையோடு அவனருகே வந்து, "இந்தா நீயும் ஒரு சால் பிரித்துக் கொண்டு மொளகா எடு. நேரமாகுது... பொழுது சாயறதுக்குள்ளே முடியணும்..." என்று கோணிப்பையை அவன் கையில் கொடுத்தார்.

     "ஊரிலே இருந்து இப்பத்தான் வந்திருக்கான். உடனே அவனெ உங்க வெள்ளாமைக் காரியத்துக்கு வேலை ஏவுறீங்களே...?" என்று தேவரைக் கண்டித்தாள் பாண்டியனின் தாய்.

     தேவர் அதைப் பொருட்படுத்தவில்லை. அவர் சுபாவமே அப்படித்தான். வியக்கவும், உபசரிக்கவும், சம்பிரதாயமாக வரவேற்கவும் தெரியாத முரட்டு உழைப்பாளி அவர். உரமேறிய சரியான கரிசற்காட்டு விவசாயியான அவர் காலேஜில் படிக்கிற மகனை, 'வந்தியா? சௌக்கியமா?' என்று கூட விசாரிக்காமல் உடனே சால் பிரித்துக் கொடுத்து மிளகாய் எடுக்கச் சொல்லியது அவர் மனைவிக்குக் கோபமூட்டியது. பாண்டியனோ ஆத்தாளின் கோபத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டே தந்தை சொல்லியபடி சால் பிரித்துக் கொண்டு மிளகாய் எடுக்கத் தொடங்கினான்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247