முப்பத்து இரண்டாவது அத்தியாயம்

     அப்போது ஆண்டு கொண்டிருந்த மல்லை இராவணசாமியின் கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை ஒடுக்கவும் மிரட்டவுமே போலீஸைப் பயன்படுத்தி வந்தார்கள் என்பது ஊரறிந்த பகிரங்க உண்மையாகியிருந்தது. எஸ்டேட் அதிபரைத் தீவிரவாதிகள் கொலை செய்ததை ஒட்டி மதுரையில் மணவாளனின் வீடு, கண்ணுக்கினியாளின் தந்தை குடியிருந்த சித்திரக்காரத் தெரு விடு, பாண்டியனின் பாலவநத்தம் கிராமத்து வீடு எல்லாவற்றையுமே சோதனை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்தி அலைக்கழித்தார்கள். கதிரேசன் முதலிய மாணவர்களுக்கும், அவர்களுடைய தலைவர் பிச்சைமுத்துவுக்கும், இந்த வீடுகளுக்கும், எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் ஏதாவது தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனையினால் ஏற்பட்ட தொல்லைகள் பற்றிப் பாண்டியனின் தந்தையிடமிருந்து அவனுக்கும், கண்ணுக்கினியாளின் தந்தையிடமிருந்து அவளுக்கும், மணவாளனிடமிருந்து அண்ணாச்சிக்கும் கடிதங்கள் வந்திருந்தன. கதிரேசன் முதலிய மாணவர்கள் போலீஸாரிடம் பிடிபட்ட பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பின் மல்லிகைப் பந்தலுக்கும் நிலக்கோட்டைக்கும் நடுவே உள்ள மலை சார்ந்த காடுகளின் அடர்ந்த பகுதி ஒன்றில் பிச்சைமுத்துவையும் தேடிப் பிடித்துக் கைது செய்து விட்டார்கள். போலீஸார் சோதனையிட்டுக் கைப்பற்றிய பிச்சைமுத்து கதிரேசன் ஆகியோரின் டைரிகளிலிருந்தும், வேறு ரகசியக் குறிப்புகளிலிருந்தும் அவர்கள் அந்த எஸ்டேட் அதிபரைக் கொலை செய்வதற்குப் பல நாட்களாகத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. நல்ல வேளையாகக் கதிரேசனும் பிச்சைமுத்துவும் தங்கள் கையெழுத்துக்களாலேயே தத்தம் டைரிகளில் மணவாளன், பாண்டியன் முதலியவர்களைப் பற்றி இந்தக் கொலைக்குத் திட்டமிடுவதற்கு முன்பே 'மனசாட்சிக்குத் துரோகம் செய்பவர்கள்' (கான்ஷியன்ஸ் பெட்ரேயர்ஸ்) என்று குறை சொல்லி வருணித்திருந்ததால் இவர்கள் தப்ப முடிந்தது. பாண்டியன், மணவாளன் முதலியவர்களும், கதிரேசன், பிச்சைமுத்து முதலியவர்களும், கருத்து வேறுபட்டவர்கள் என்பதை இந்த டைரிக் குறிப்பு நிரூபித்து விட்டது. இல்லை என்றால் போலீஸார் மணவாளன், பாண்டியன் முதலியவர்களுக்கு மேலும் தொல்லை கொடுத்திருக்கக் கூடும் என்று தெரிந்தது. பாண்டியன் முதலியவர்கள் தப்பிவிட்டாலும் கதிரேசன், பிச்சைமுத்து ஆகியவர்களோடு நள்ளிரவுக் கூட்டங்களில் கலந்து கொண்ட சில பொறியியல் மாணவர்களையும், சில வேளாண்மைப் பட்டப்பிரிவு மாணவர்களையும் போலீஸார் பிடித்து விட்டனர். வார்டன்கள், விடுதிக் காவலர்கள், டீன்கள் எல்லாருக்கும் மாணவர்களை அதிகமாகக் கண்காணிக்கக் கோரும் இரகசியச் சுற்றறிக்கைகள் துணைவேந்தரால் அனுப்பப்பட்டிருந்தன. மாணவர்களின் விழாக்கள், கூட்டங்கள், யூனியன் நடவடிக்கைகள் எல்லாம், அவை பல்கலைக் கழக எல்லைக்குள் நடந்தாலும், வெளியே நடந்தாலும் அளவுக்கு அதிகமாகக் கண்காணிக்கப்பட்டன. அண்ணாச்சிக் கடையைக் கண்காணிப்பதற்காக அதற்கு எதிர்ப்புறம் இருந்த மருந்துக் கடை வராந்தாவில் 'மப்டி'யில் ஒரு கான்ஸ்டபிள் இருக்கத் தொடங்கினார். பல்கலைக் கழகத்துக்குள்ளும், வெளியேயும் மாணவர்கள் சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது என்ற சூழ்நிலையைத் துணைவேந்தரும் போலீஸும், ஆர்.டி.ஓ.வும் உருவாக்கியிருந்தார்கள். எங்கும் ஒரு பரபரப்பு இருந்தது.

     கதிரேசன் கைது செய்யப்பட்டதற்குப் பின் பல நாட்கள் பாண்டியன் கண்ணுக்கினியாளையும், கண்ணுக்கினியாள் பாண்டியனையும் சந்திக்க முடியாமல் போயிற்று. யாழ்ப்பாணத்து மாணவி பாலேஸ்வரியிடம் முறை தவறி நடந்து கொண்ட போலீஸை கண்டிக்கச் சென்ற இரசாயனப் பேராசிரியர் ஸ்ரீராமன் தாக்கப்பட்டது சம்பந்தமான நீதி விசாரணை தொடங்கும் தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த நீதி விசாரணைக்கான சாட்சிகளை மறுபடியும் சந்தித்து உறுதிப்படுத்துவதற்காக ஒரு நாள் காலையில் பாண்டியன் நண்பர்களோடு விடுதிகளுக்குச் சென்றான். சில சாட்சிகளை மிரட்டியும், குழப்பப்படுத்தியும், ஆளும் கட்சியினரும், துணைவேந்தரும், போலீஸாருமே கலைத்துவிட முயன்று கொண்டிருப்பதாகப் பாண்டியனுக்குத் தகவல் எட்டியிருந்தது. அவன் அப்படிப் புறப்பட்ட தினத்தன்று பல்கலைக் கழகப் பெண்கள் விடுதியை ஒட்டியிருந்த விளையாட்டு மைதானத்தின் 'பாட்மிண்டன் கோர்ட்'டில் கண்ணுக்கினியாளைச் சந்தித்தான். அவளோடும் தோழிகளோடும் விளையாட இருந்த எதிர்த்தரப்புக் குழுவைச் சேர்ந்த பெண்கள் இன்னும் வராததால் உடனடியாக உண்டாகிய உற்சாகத்தை விடாமல், சிறிது நேரம் அவளோடு பூப்பந்து விளையாடினான் அவன். விளையாட்டில் அவள் திறமைதான் வெளிப்பட்டது. அவன் நிறையக் கோட்டைவிட்டான். அதற்குள் அவளோடு விளையாட வேண்டிய தோழிகள் வந்துவிடவே விளையாட்டை நிறுத்திக் கொண்டு அவளைத் தனியே அழைத்துச் சென்று நீதி விசாரணைச் சாட்சிகள் பற்றி நினைவூட்டினான் அவன். அந்த விசாரணைத் தொடர்பாகப் பெண்கள் விடுதியிலிருந்து மூன்று சாட்சிகளும் உறுதியாயிருப்பதாக அவள் தெரிவித்தாள். "எதற்கும் அவர்களை இன்னொரு முறை பார்த்துப் பேசி வை! கதிரேசன் செய்த காரியத்தால் வந்த பரபரப்பைப் பயன்படுத்தி இங்கே எல்லா மாணவர்களையும் அரட்டி மிரட்டி ஒடுக்கிக் கொண்டிருக்கிறார்கள்" என்றான் பாண்டியன்.

     "எங்களைப் பொறுத்தவரை அதற்கு அவசியமில்லை! மாணவர்களில் இருக்கும் சாட்சிகள் கைவிட்டாலும் விடலாமே ஒழிய மாணவிகள் நிச்சயமாகக் கைவிட மாட்டார்கள். நான் உங்களிடம் சத்தியம் செய்து கொடுக்கத் தயார்" என்றாள் அவள்.

     "கதிரேசனை 'பெயிலில்' வெளியே கொண்டு வர அவன் தந்தை எவ்வளவோ முயன்று பார்த்தும் முடியவில்லையாம். கேள்விப்பட்டேன்."

     "என்ன ஆகுமாம்?"

     "செஷன்ஸ் முடிந்த பின்னால் தான் தெரியும்! அநேகமாகப் பிச்சைமுத்துவுக்குத் தூக்குத் தண்டனையும், மாணவர்களாக இருப்பதால் கதிரேசன் முதலிய மற்ற மூவருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப் படலாம் என்று பேசிக் கொல்கிறார்கள். இதில் அவர்கள் தப்பவே வழியில்லாதபடி மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்..."

     "ரொம்பப் பாவமாயிருக்கிறது."

     "பாவம் ஏது? புண்ணியம் ஏது? நவநீத கவி சொல்லியிருப்பது போல,

     இருபதாம் நூற்றாண்டின்
     பாவ புண்ணியங்களைப்
     பெரும்பான்மை சிறுபான்மையால்
     மனிதர்களே நிர்ணயிக்கிறார்கள்
     குற்றம் நிரூபிக்கப்பட்ட நிரபராதிகள்
     விசாரணைக்குப் போகிறார்கள்
     நிரூபிக்கப்படாத குற்றவாளிகள்
     தொடமுடியாத உயரத்தின் மேல்
     பதவிகளிலே இருக்கிறார்கள்
     சாட்சியில்லாத உண்மைகளைப்
     பொய்களாகச் சித்தரிக்கிறார்கள்
     சாட்சியுள்ள பொய்களையே
     உண்மைகளாகக் காட்டுகிறார்கள்
     ஆம். இருபதாம் நூற்றாண்டின் பாவ புண்ணியங்களைப்
     பெரும்பான்மை சிறுபாண்மையால்
     மனிதர்களே நிர்ணயித்து விடுகிறார்கள்!

     என்று சொல்லி வேதனைப்பட வேண்டியதுதான். கொலையுண்ட எஸ்டேட் அதிபர் உயிரோடிருந்த போது தாம் சிக்காதபடி தந்திரமாக எத்தனையோ கொலை, கொள்ளை, கற்பழிப்புக்களை செய்திருக்கிறார். ஆனால் அவர் சட்டத்தின் பார்வையில் படவில்லை. இன்று அவரைக் கொன்றிருப்பவர்களோ சட்டத்தின் பார்வையில் வசமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் அவர்களை விடாது."

     "கதிரேசனை நினைத்தால் தான் மனத்துக்கு மிகவும் வேதனையாயிருக்கிறது."

     "கதிரேசன் மட்டுமில்லை, வடிவேல், மலையாண்டி, பிச்சைமுத்து சார், எல்லாருமே கோபக்காரர்களான நல்லவர்கள் தாம். ஆனால் நல்லவர்களின் ஆத்திரம் கூடச் சட்டத்தால் மன்னிக்கப்படுவதில்லையே? இங்கேதான் இலட்சியத்தை அடையும் மார்க்கத்தைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது! கதிரேசன் முதலியவர்கள் அதைப் பற்றி நினைக்கவே இல்லை." இப்படிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் அவளிடம் விடை பெற்றான் பாண்டியன். மற்ற மாணவர்களும் அவனும் வேறு வேறு விடுதிகளுக்குப் போய் ஏற்கெனவே உறுதி கூறியிருந்த சாட்சிகளைச் சந்தித்துச் சொல்லிவிட்டு வந்தனர். சில சாட்சிகள் தளர்ந்திருப்பது அவர்களுக்கே புரிந்தது. வேறு சில சாட்சிகள் அவர்கள் தேடிப் போன போது கிடைக்கவில்லை. அவர்களைப் பற்றிச் சந்தேகமாயிருந்தது.

     போராட்டங்களும், விடுமுறைகளும், அதிகமாகி வேலை நாட்களைக் கணிசமாகக் குறைத்திருந்ததனால் பல்கலைக் கழகத்தின் 'ஸெகண்ட் டேர்ம்' - இரண்டாவது பகுதி டிசம்பரில் முடிந்து கிறிஸ்துமஸ் பொங்கல் விடுமுறை வந்த போது பத்துப் பன்னிரண்டு நாட்களே பல்கலைக் கழகம் மூடப்பட்டது. அந்த விடுமுறையில் தான் அகில இந்தியப் பல்கலைக் கழகத் தேசிய மாணவர் சம்மேளன மகாநாட்டை மல்லிகைப் பந்தலில் நடத்தத் திட்டமிட்டிருந்தார் மணவாளன். முதலில் பட்டமளிப்பு விழா முடிந்ததும் இந்த மகாநாட்டை நடத்தத் திட்டமிட்டிருந்த அவர் பட்டமளிப்பு விழா இரண்டு மூன்று முறை ஒத்திப் போடப்பட்டதனால் இப்போது மகாநாட்டை முதலில் நடத்திவிட முடிவு செய்து கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்பாகவே மல்லிகைப் பந்தலில் வந்து தங்கிவிட்டார். ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு ரெஸிடென்ஷியல் பல்கலைக் கழகத்தை யொட்டி நடந்த அந்த மகாநாடு முந்திய ஆண்டின் இறுதியில் மணவாளனின் கடைசி வருடப் படிப்பின் போதே, அவர் மல்லிகைப் பந்தலில் நடத்தியிருக்க வேண்டியது. படிப்பின் இறுதி ஆண்டில் ஏற்பாடுகளையும், வசூலையும் கவனிக்க முடியாமல் தட்டிப் போயிருந்ததை இப்போது பாண்டியன் முதலிய மாணவர்களின் துணையோடும் ஒத்துழைப்போடும் சிறப்பாக நடத்திவிட விரும்பினார் மணவாளன். கதிரேசன் முதலியவர்களின் செயலால் தேசிய மாணவர்களின் எதிரிகளும், மல்லை இராவணசாமியின் கட்சிக்காரர்களும் மாணவர்களையும் அவர்கள் இயக்கங்களையும் பற்றிக் 'கொலை வெறி இயக்கம்' என்பது போல் வெளியே பொய்ப் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார்கள். இந்தப் பொய்ப் பிரசாரத்தை முறியடித்து மீண்டும் இயக்கத்தை உடனே வலுப்படுத்தவும் இப்போது உடனே அந்த மாநாட்டை அவசரமாக நடத்த நினைத்தார் மணவாளன். பாண்டியன் முதலிய மாணவர்களுக்கும் அவர் நினைப்பது சரி என்றே பட்டது. நாடகப் பட்டப்பிரிவு மாணவ மாணவிகள், நகரத் தியேட்டர் ஒன்றில் நடத்திய இரண்டு நிதி வசூல் நாடகங்களின் மூலம் பதினையாயிரம் ரூபாய் மீந்தது. நன்கொடைகள் மூலமும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வசூலித்து அனுப்பிய தொகைகள் மூலமும் இன்னொரு பதினையாயிரம் தேறியது. வேறு நிதி வசூல்களும் நடந்தன.

     தமிழகத்திலும் அகில இந்தியாவிலும் இருந்து சுமார் நானூறு சிறப்புப் பிரதிநிதிகளும், இருபத்தையாயிரம் மாணவர்களும் மகாநாட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்து ஏற்பாடுகள் நடைபெற்றன. பிரதிநிதிகளாக வரும் நானூறு பேருக்கு மட்டுமாவது தங்க இடம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பல்கலைக் கழக விடுதி அறைகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டுத் துணைவேந்தரைச் சந்திப்பதற்காக மணவாளனும், பாண்டியனும், கண்ணுக்கினியாளும் போயிருந்தார்கள். துணைவேந்தர் அவர்கள் கூறியதை எல்லாம் கேட்ட பின், சிரித்துக் கொண்டே, "அரசியல் மகாநாடுகளுக்குப் பல்கலைக் கழக விடுதிகளைத் தரமுடியாது. மன்னியுங்கள்" என்று மறுத்து விட்டார். அவர் தெரிந்து கொண்டே வேஷம் போடுவதைக் கண்டு மணவாளன் கோபமுற்றார். சொல்லிக் காட்டினார்: "அரசியல் மகாநாடுகளுக்குக் கூட நீங்கள் இந்தப் பல்கலைக் கழக மேஜை நாற்காலிகளையும், ஹாஸ்டல் பாத்திரங்களையுமே முன்வந்து வலுவில் கொடுத்து உதவியிருக்கிறீர்கள் ஸார்! போன வருடம் இங்கே மே மாதம் இறுதியில் மல்லை இராவணசாமியின் கட்சி நடத்திய வட்டார மகாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகள் பல்கலைக் கழக விடுதி அறைகளில் தங்கியதும், பொதுக்குழுக் கூட்டமே செனட் ஹால் பகுதியில் இரகசியமாக நடந்ததும் பொய்யில்லையே?"

     "கல்வி அமைச்சரின் சிபாரிசால் அப்போது அப்படிச் செய்ய நேர்ந்தது."

     "ஓகோ! கல்வி அமைச்சரே சிபாரிசு செய்தால் தான் அப்படித் தவறுகளை நீங்கள் செய்வீர்கள் போலிருக்கிறது" என்று காரசாரமாக எதிர்த்துக் கேட்டுவிட்டே வெளியேறினார் மணவாளன். துணைவேந்தரின் ஆஷாட பூதித்தனம் வெறுப்பூட்டுவதாயிருந்தது.

     அதன் பின் நகரத்திலுள்ள ஹோட்டல்களிலும், தேசியத் தொழிலாளர் யூனியன் கட்டிடங்களிலும், மற்ற இடங்களிலுமாகப் பிரதிநிதிகள் தங்க ஏற்பாடு செய்து நகரெல்லையில் ஒரு பெரிய பந்தலில் மகாநாடு நடத்துவதற்குத் திட்டமிட்டுக் காரியங்களைத் தொடங்கினார் மணவாளன்.

     வரவேற்பு ஏற்பாடுகள் கண்ணுக்கினியாள் முதலிய மாணவிகளிடமும், உணவு ஏற்பாடுகள் அண்ணாச்சியிடமும், மகாநாட்டு விளம்பரப் பொறுப்பு பாண்டியனிடமும் விடப்பட்டிருந்தன. இராப் பகலாக ஓடியாடி அலைந்து பணிபுரிந்தார்கள் அவர்கள். மல்லிகைப் பந்தலைப் போன்றதொரு மலைப்பாங்கான நகரத்தில் கடுங்குளிர் காலமான அந்தக் கிறிஸ்துமஸ் சமயத்தில் ஒரு பெரிய மகாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிப்பது மிகவும் சிரமமான காரியமாயிருந்தது.

     திடீரென்று மகாநாட்டுக்கு முதல் நாள் இரவு முனிசிபல் கமிஷனர் போலீஸாரோடு வந்து, "இந்த இடத்தில் யார் அனுமதியின் பேரில் பந்தல் போட்டீர்கள்? பந்தலை உடனே பிரித்தாக வேண்டும்" என்று கூப்பாடு போட்டார்.

     "நாங்கள் முறைப்படி பதினைந்து நாட்களுக்கு முன்பே பணம் கட்டி இங்கே பந்தல் போட அனுமதி கேட்டு எழுதியிருக்கிறோம். பணத்துக்கு முனிசிபல் ஆபீசு ரசீது இதோ இருக்கிறது" என்று ரசீதை எடுத்துக் காட்டினான் பாண்டியன். அதைக் காண்பித்த பின்னும் நகரசபை அதிகாரி விடவில்லை.

     "பணம் கட்டியிருக்கலாம். ஆனால் முறைப்படி அனுமதி வழங்கப்படவில்லை."

     "அனுமதி இல்லையானால் அதையும் உடனே தெரிவித்துப் பணத்தை திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். பந்தல் போடுகிற வரை விட்டுவிட்டுக் கடைசி விநாடியில் இப்படி வம்பு செய்வது நியாயமில்லை."

     அந்த முனிசிபல் கமிஷனர் மல்லை இராவணசாமி சொல்லியபடி போலீசாருடன் வந்து நின்று கத்தியதைக் கேட்டு மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கூடிவிட்டார்கள். நிலைமை வேறு மாதிரி ஆகிவிடும் என்று பயந்த கமிஷனர் அனுமதியை எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்ச் சேர்ந்தார். அந்த முனிசிபல் கமிஷனரின் நிலைமையைப் பார்த்துப் பாண்டியன் பரிதாபம் கொண்டான். அவர் முதலில் வீராப்பாக வந்ததையும், அப்புறம் பெருங் கூட்டமாக மாணவர்கள் கூடியதைக் கண்டு மிரண்டு அனுமதி வழங்கிவிட்டுப் போனதையும் கண்டு சிரித்துக் கொண்டே, "மூன்றாந்தரமான அரசாங்கத்தில் அதிகாரியாக இருப்பதை விட முதல் தரமான அரசாங்கத்தில் சேவகனாக இருப்பது எவ்வளவோ மேல். பாருங்கள் இந்தக் கமிஷனர் எவ்வளவு தலைக்குனிவோடு திரும்பிப் போக நேரிட்டிருக்கிறது!" என்றான் பாண்டியன். மற்ற மாணவர்கள் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

     இந்தக் கமிஷனர் நடந்து கொண்டதைப் போலவே மல்லிகைப் பந்தல் ஆர்.டி.ஓ.வும் அதற்கு முந்திய தினம் பாண்டியனைக் கூப்பிட்டு அனுப்பி அசடு வழிந்திருந்தார்!

     "மிஸ்டர் பாண்டியன்! ஒரு யோசனை. நீங்கள் விரும்பினால் ஏற்கலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம். உங்கள் மகாநாட்டுப் பிரதிநிதிகள் தங்க யுனிவர்ஸிடி ஹாஸ்டல் அறைகள் கிடைக்கவும், மகாநாடு நடைபெற முனிசிபாலிடி ஒத்துழைக்கவும், சுலபமாக ஒரு வழி இருக்கிறது. உங்கள் மகாநாட்டில் அதைத் தொடங்கி வைக்கக் காந்தீயப் பெருந்தலைவர் ராமராஜ் அவர்களை நீங்கள் அழைக்கிறீர்கள். அதற்குப் பதில் நம்முடைய கல்வி அமைச்சரையே தொடங்கி வைக்க அழைத்தீர்களானால் உங்களுக்கு ஓர் இடையூறும் இராது. வேண்டிய உதவிகள் ஜாம் ஜாம் என்று உங்களைத் தேடி வரும்."

     "உங்கள் யோசனைக்கு ரொம்ப நன்றி! ஆனால் அதை நாங்கள் ஏற்பதற்கு இல்லை என்பதை வருத்தத்தோடு அமைச்சருக்குத் தெரிவித்து விடுங்கள்! இடையூறுகளை சமாளித்து மகாநாட்டை எப்படி வெற்றிகரமாக நடத்துவது என்பது எங்களுக்குத் தெரியும் சார்!" என்று ஆர்.டி.ஓ.விடம் முகத்தில் அறைந்தாற் போல் மறுத்துவிட்டு வந்தான் பாண்டியன். இதை மணவாளனிடம் போய் பாண்டியன் கூறிய போது, "ஓகோ! அதிகாரிகள் மந்திரிகளின் இரகசிய ஏஜெண்டுகளாக வேறு செயல்படுகிறார்கள் போலிருக்கிறது" என்று சொல்லிச் சொல்லிச் சிரித்தார் அவர். துணைவேந்தரையும், ஆர்.டி.ஓ.வையும் தூது விட்டுக் கல்வி மந்திரியே அந்த மகாநாட்டில் தாம் இடம் பெற நப்பாசைப்படுவது மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டும் அவர்கள் துணிந்து கல்வி மந்திரியைப் புறக்கணித்தார்கள். தொண்டின் சிகரமாகவும் எளிமையின் உருவமாகவும் கல்விக் கண் திறந்த வள்ளலாகவும் இருக்கும் காந்தீயப் பெருந்தலைவர் ராமராஜ் அவர்களே தங்கள் மகாநாட்டைத் திறந்து வைக்க வேண்டும் என்பதில் மாணவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள்.

     இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பிருந்தே மல்லிகைப் பந்தல் நகரம் திருவிழாக் கோலம் பூண்டு விட்டது. வீதிகள், தோரணங்களாலும், வரவேற்பு வாசகங்கள் அடங்கிய வளைவுகளாலும் அலங்கரிக்கப் பட்டன. எதற்கெடுத்தாலும் உடனே போஸ்டர் அச்சிட்டு ஒட்டும் இராவணசாமி கட்சியைச் சேர்ந்தவர்கள், 'மாணவர் என்ற போர்வையில் உயிரைப் பறிக்கும் உலுத்தர் கூட்டத்தின் விழா - பதவி பறிபோன ராமராஜ் தொடங்கி வைக்கிறார். பெருமை பறிபோன பிறகும் கலந்து கொள்கிறார்கள் பாரீர்! பாரீர்!' என்று சுவரொட்டி அச்சிட்டு ஒட்டியிருந்தார்கள். கீழே இப்படிக்குத் தமிழின மாணவர் முன்னேற்றக் கழகம் என்றும் அந்தச் சுவரொட்டியில் அச்சிட்டிருந்தது. இப்படி ஒவ்வொரு செயல் மூலமும் தங்களுடைய கீழ்த்தரமான போக்கை நிரூபித்துக் கொண்டிருந்தார்கள் மல்லை இராவணசாமியின் கட்சி ஆட்கள். 'பாண்டியனோ மற்றவர்களோ அத்தகைய கீழ்த்தரமான எதிர்ப்புக்களை மதித்து அதைப் பெரிதாக்கிப் போரிடாமல் தங்கள் காரியத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும்' என்று சொல்லி எச்சரித்திருந்தார் மணவாளன். மாணவர்கள் அந்த அறிவுரைக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றினார்கள். மகாநாடு மிகச் சிறப்பாக நடந்தது. கடல் போல் மாணவர் பரந்த கூட்டத்தில் மணவாளன் வரவேற்புரை கூறியதைத் தொடர்ந்து காந்தீயப் பெருந்தலைவர் ராமராஜ், "நமது பல்கலைக் கழகக் கல்வியில் இன்னும் இந்திய தேசியத் தன்மையின் சாயல்கள் கூட விழவில்லை. நமது பல்கலைக் கழகங்கள் விஞ்ஞானிகளைவிட அதிகமான குமாஸ்தாக்களையும், நிபுணர்களை விட அதிகமான உத்தியோகஸ்தர்களையுமே தயாரித்து அனுப்புகின்றன. இந்த நிலைமை மாற வேண்டும். பல்கலைக் கழகங்களில் சுதந்திரமாகச் செயலாற்றும் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் பணி புரிய வேண்டும். அரசாங்கத்துக்குத் தலையாட்டுகிற அறிவாளிகளால் பல்கலைக் கழகத்தின் தனித்தன்மை கெட்டுவிடும். மாணவர்களை அரவணைத்துக் கொண்டு வளர்க்கும் அன்பு மயமான நிர்வாகம் தான் ஒரு பல்கலைக் கழகக் கல்விக்குத் தேவை. தனிச் சட்டாம்பிள்ளைத் தனத்தினால் மட்டும் இருபதாம் நூற்றாண்டில் எதையும் கற்பிக்க முடியாது. இன்றைய சமூகத்தை நிர்ணயிக்கும் பொறுப்பில் பெரும் பங்கு ஏற்கும் இளைஞர்களுக்கு 18 வயதிலேயே ஓட்டுரிமை தரப்பட வேண்டும். படித்தவர்கள் வேலையின்றித் தவிப்பது போன்ற நிலை நாட்டுக்கு நல்லதல்ல. வேலையை அடிப்படையாகக் கொண்ட கல்வி அவரவர் விருப்பத்துக்கேற்ப அமைய வேண்டும்" என்பது போலப் பல சீரிய கருத்துக்களைக் கூறி மகாநாட்டைத் தொடக்கி வைத்தார். அவர் பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது.

     அதையடுத்துப் பேசிய வட இந்தியப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஒருவர், "மாணவர் - பல்கலைக் கழக உறவு சீராக இருக்க வேண்டுமானால் பல்கலைக் கழக நிர்வாகக் குழுவில் சில மாணவர்களும் அங்கம் வகிப்பது அவசியம். மாணவர்களோடு நல்லுறவை வளர்க்காமல் வியாபாரத் தயாரிப்புப் போல் அவர்களைப் பரீட்சைகளுக்குத் தயாரிப்பது தான் இப்போது கல்வியின் குறை. வெறும் பரீட்சைகளுக்குத் தயாரிப்பதை விட அவர்களை எல்லாம் வாழ்க்கைப் பரீட்சைக்கே தயாரிக்கும் திறமை ஒரு பல்கலைக் கழகத்துக்கு வேண்டும்" என்றார். அவருடைய ஆங்கிலச் சொற்பொழிவின் போது மாணவர்கள் பலமுறை கரகோஷம் செய்து வரவேற்றனர்.

     அழைப்பிதழ் கொடுத்திருந்தும், மல்லிகைப் பந்தல் துணைவேந்தர் அரசாங்கத்துக்குப் பயந்து அந்த மகாநாட்டுப் பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. "வேர் இஸ் யுவர் வொண்டர் ஃபுல் வி.ஸி...?" என்று அந்த மாநாட்டுக்கு வந்திருந்த ஒரு வட இந்தியப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொறுமை இழந்து மணவாளனிடம் கேட்டார். மணவாளன் சிரித்துக் கொண்டே தாயுமானவனாரைப் பற்றி அவருக்கு விளக்கினார். பிற்பகல் மகாநாட்டில் மாணவர் பிரதிநிதிகள் பேசினார்கள். பாண்டியன் அந்த ஓராண்டில் மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகத்தில் நடந்த நீதி விசாரணைகள், மாணவர் போராட்டங்கள் அதன் காரணங்கள் பற்றி விவரித்தான். மேரிதங்கம் தற்கொலை, பேராசிரியர் ஸ்ரீராமன், இலங்கை மாணவி பாலேஸ்வரி பிரச்சினைகள் விவரிக்கப்பட்டன. மாணவர்களின் அழைப்பை ஏற்றுப் பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கம், ஸ்ரீராமன், வேறு சில ஆசிரியர்கள் மட்டுமே அந்த மகாநாட்டுக்கு வந்திருந்தனர். மணவாளன் விரும்பியதற்கு இணங்கப் பிரதிநிதிகள் பேசிய பின் பூதலிங்கம் 'சூழ்நிலைக்கேற்ற கல்வி' என்ற தலைப்பில் ஓர் அரிய ஆங்கிலச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதன் பின் மகாநாட்டில் பல்கலைக் கழக மாணவர் நலன்களை அடிப்படையாகக் கொண்ட பல தீர்மானங்கள் முன்மொழியப் பட்டு வழி மொழிதலுடன் கரவொலியால் நிறைவேற்றப் பட்டன. பதினெட்டு வயது நிறைந்த அனைவருக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்ற தீர்மானம் முதலில் நிறைவேறியது. அடுத்துப் பல தீர்மானங்கள் நிறைவேறின. மகாநாடு மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றுவிட்டது.

     இரவு ஒன்பது மணிக்குக் கண்ணுக்கினியாளும், மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழக நாடகப் பிரிவு மாணவர்களும் பிறரும் நடிக்கும் ஒரு நாடகம் அதே மகாநாட்டுப் பந்தலில் நடக்க இருந்தது. இரவு உணவு முடிந்ததும் நாடகம் தொடங்கிப் பதினொரு மணிக்குள் அதை முடிப்பதாக ஏற்பாடு. பிரதிநிதிகளும் பிற மாணவர்களும் சாப்பிட்டு விட்டுக் கூட்டம் கூட்டமாகப் பந்தலுக்குள் வந்து அமர்ந்து கொண்டிருந்தனர். மணவாளனும், பாண்டியனும் மற்றும் சில முக்கிய மாணவர்களும் ஊர் திரும்ப இருந்த தலைவர் ராமராஜ் அவர்களை வழியனுப்பப் போயிருந்தனர். 'கிரீன் ரூம்' என்ற தட்டி மறைப்பில் கண்ணுக்கினியாளும் மற்ற நடிகர்களும் நாடகத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். வெளியே குளிர் நடுங்கிக் கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மகாநாட்டுக்கே திருஷ்டி கழித்தது போல ஓர் அசம்பாவிதம் அங்கு நடந்தது.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247