முப்பத்து மூன்றாவது அத்தியாயம்

     இரவு மணி ஒன்பதே கால் ஆகியிருந்தது. மகாநாட்டுப் பந்தலில் நாடகம் தொடங்கியிருந்தது. கண்ணுக்கினியாளைத் தவிரப் பொன்னையா, மோகன்தாஸ், நடன சுந்தரம் முதலிய ஒவ்வொருவருக்கும் அந்த நாடகத்தில் பங்கிருந்ததால் அவர்கள் எல்லோருமே உள்ளே இருந்தார்கள். பந்தல் நிறைந்துவிட்டது. பக்கத்தில் மற்றொரு பந்தலில் கடைசிப் பந்தியாகச் சாப்பிட உட்கார்ந்திருந்த ஊழியர்களையும், மகாநாட்டுக்கு உதவி புரிந்த சாரணர்களையும் கவனித்துப் பரிமாறி உபசரித்துக் கொண்டிருந்தார்கள் அண்ணாச்சி முதலியவர்கள். பந்தலுக்கு வெளியே ஏறக்குறைய ஆள் நடமாட்டமே இல்லை. குளிர் அதிகமாயிருந்ததனால் எல்லாக் கூட்டமும் மாணவர் மகாநாட்டுப் பந்தலுக்குள் இருந்தது. நாடகத்தில் முதல் காட்சி தொடங்கி முடிவதற்குள் மேடைக்குப் பின்புறம் இருந்து, "ஐயோ தீ! தீ!... எந்தப் பாவியோ பந்தலுக்கு நெருப்பு வைத்துவிட்டானே!" என்ற கூக்குரலும் அதையடுத்துக் கனன்று மேற்பாயும் தீ நாக்குகளும் எழுந்தன. பந்தலில் உடனே கூப்பாடும் குழப்பமும் பரவிக் கூட்டம் தறிகெட்டுக் கலைந்து ஓடத் தொடங்கியது. உடனே மகாநாட்டுப் பந்தலிலிருந்து பின்புறமாக விரைந்து மாணவர்கள் மேடையின் பக்கவாட்டில் தீப்பிடித்த இடத்திலிருந்து அவசரமாகத் திரும்பும் ஒரு ஜீப்பைப் பார்த்தனர். தீ வைக்க வந்தவர்கள் அந்த ஜீப்பில்தான் வந்திருக்க வேண்டும் என்று புரிந்தது. சிரமப்பட்டு மோட்டார் சைக்கிளில் துரத்தி அந்த ஜீப் நம்பரைக் கூடக் குறித்துக் கொண்டு வந்துவிட்டான் ஒரு மாணவன். அது மல்லை இராவணசாமியின் ஜீப் என்பதும் புரிந்தது. தீயணைக்கும் அலுவலகத்துக்குத் தகவல் தெரிந்து அவர்கள் வருவதற்கு நேரமாகிவிட்டது. தீ பரவுவதற்குள் கண்ணுக்கினியாள் முதலிய பெண்களையும் நாடகத்துக்காக இசைக் கருவிகளோடு வந்திருந்த பல்கலைக் கழக இசைக் கல்லூரி மாணவிகளையும் பத்திரமாக வெளியே கொண்டு வந்து சேர்த்தார்கள் மானவர்கள். மகாநாட்டுக்கு உபயோகத்துக்காக டிரம்களில் நிரப்பியிருந்த தண்ணீரைக் கொண்டு அண்ணாச்சியும், பிறரும் தீயை அணைக்க முயன்றது பலிக்கவில்லை. பந்தலிலிருந்த மைக், ஒலி பெருக்கிகள், நாற்காலிகள் முதலியவற்றை முடிந்த மட்டும் வெளியேற்றி மின்சார இணைப்பைத் துண்டிப்பதற்கே படாதபாடு பட வேண்டியிருந்தது.

     "பாவிக... நல்லாயிருக்க மாட்டாங்க... இப்பிடிப் போயிடு வாங்க..." என்று கோபம் பொறுக்க முடியாமல் கையைச் சொடுக்கினார் அண்ணாச்சி.

     "எப்படியாவது நடக்க விடாமே மகாநாட்டை நிறுத்திப் பிடணும்னு ஒரு வாரமாகவே கருக்கட்டிக்கிட்டிருந்தாங்க... மகாநாடு பிரமாதமா நடந்திடிச்சு... வயிற்றெரிச்சல்காரங்க இருட்டினதும் இதைப் பண்ணிட்டாங்க..." என்று மனம் நொந்து போய்ச் சொன்னார் மணவாளன்.

     கையில் வீணையோடு பேராசிரியர் பூதலிங்கத்தின் மகள் கோமதியும், மேக்-அப் கலைக்காத கோலத்தில் கண்ணுக்கினியாளும், பாண்டியனும், அண்ணாச்சியும் விலகி நின்று தீப்பற்றி எரியும் பந்தலைக் கண்கலங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தீ அணைக்கும் படை வந்து நீண்ட நீண்ட குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீச்சியடித்துப் போராடியது. சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸ் வேன் வந்தது. அந்த வேனில் வந்த எஸ்.ஐ.யிடம் தீ வைத்தவர்கள் தப்பிய ஜீப் எண்ணைக் கூறிப் பாண்டியன் முதலியவர்கள் புகார் சொல்லியபோது, "நீங்கள் கூறுவது சாத்தியமே இல்லை! போலீஸ் கிளப் லானில் அதே ஜீப்பிலே வந்து மாலையிலிருந்து இராவணசாமி சர்க்கிள் இன்ஸ்பெக்டருடன் அங்கே ஏதோ முக்கிய விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரே ஜீப் எப்படி இரண்டு இடங்களில் இருக்க முடியும்?" என்று மறுத்தார் அவர்.

     "போலீஸ் கிளப் லானில் இந்த ஜீப் நிற்பதோ நிற்காததோ எங்களுக்குத் தெரியாது சார்! ஆனால் இங்கே அந்த ஜீப் வந்ததும் அவசரமாகத் திரும்பியதும் உண்மை" என்றான் பாண்டியன்.

     "அது வீண் பிரமை! அப்படி நடந்திருக்கவே முடியாது" என்றார் எஸ்.ஐ. அதைக் கேட்டு ஏற்கெனவே ஆத்திரமாக இருந்த மாணவர்களுக்கு மேலும் கோபம் வந்துவிட்டது. மணவாளனும் அண்ணாச்சியும் தான் மாணவர்களை அமைதியடையச் செய்தனர்.

     "கருத்து மாறுபாடு கொள்கிறவர்களையும், விமரிசிப்பவர்களையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் அதிகாரத்தில் இருந்தால் அந்த அதிகாரத்தில் ஜனநாயகத்துக்கு இப்படிப்பட்ட அவமரியாதைகள் தான் நடக்கும். சகிப்புத்தன்மையை ஒரு விரதமாகவும் நோன்பாகவும் கடைப்பிடித்த காந்திஜீயின் சிறப்பு சகிப்புத் தன்மையே இல்லாத ஓர் ஆட்சி நடக்கிறது இப்போதுதான் மிக நன்றாகப் புரிகிறது. ஆனால் இவர்களும் கூட காந்தியை வாய்க்கு வாய் போற்றுகிறார்கள்; விழாக் கொண்டாடுகிறார்கள். காந்தீயத்தைக் கொன்று கொண்டே காந்திக்கும் விழா எடுப்பது எத்தனை சாதுரியம்!" என்று அண்ணாச்சியை நோக்கி வினவினார் மணவாளன். அண்ணாச்சி இதற்கு மறுமொழி ஒன்றும் கூறவில்லை.

     "இந்தக் கொடுமை பொறுக்க முடியாமல் தான் கதிரேசன் போன்றவர்கள் வன்முறையில் நம்பிக்கை வைத்து அந்த வழிக்குப் போனார்கள். கெஞ்சிப் பல்லைக் காட்டி வேண்டுகிறவர்களைக் கயவர்கள் சிறிதும் மதிப்பதில்லை. அவர்கள் பல்லை உடைப்பவர்களிடம் தான் பயந்து வழிக்கு வருகிறார்கள்" என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னான் பாண்டியன் அறை நண்பன் பொன்னையா. ஆத்திரத்தில் அவன் வெறிகொண்டு கூப்பாடு போட்டான்.

     இரவு ஒன்பது மணி வரையில் ஜெகஜ்ஜோதியாக இருந்த மகாநாட்டுப் பந்தல் புகையுடனும், தீ நெடியுடனும், பத்தரை மணிக்குத் தரை மட்டமாகியிருந்தது. மாணவர் கூட்டம் கட்டுக்கடங்காத கோபத்தோடு எரிந்த பந்தலுக்கு வெளியே வெறியேறி நின்றது. ஏதோ பெரிய கலவரத்தை எதிர்பார்ப்பது போல் போலீஸ் லாரிகள் நான்கு பக்கமும் வந்து வளைத்துக் கொண்டு நின்றிருந்தன. மகாநாட்டுத் தினத்தன்று அதைத் தவிர்க்க விரும்பியவர் போல் துணைவேந்தர் வெளியூருக்கு நழுவியிருந்தார். ஆர்.டி.ஓ.வும் பக்கத்து ஊரில் முகாம் செய்திருந்தார்.

     நடந்ததை உள்ளது உள்ளபடியே பத்திரிகைகளுக்குத் தந்தி மூலமும், தொலைபேசி மூலமும் தெரிவித்தார்கள் மாணவர்கள். எவ்வளவோ முயன்றும் மகாநாட்டு வசூல் பணத்தில் ஒரு பகுதியும், வாடகைக்கு வாங்கிப் போட்டிருந்த நாற்காலிகள் ஜமுக்காளங்களும் மின்சாரச் சாதனங்கள் சிலவும் தீயில் போய்விட்டன. உடனே பழிக்குப் பழி வாங்க சினத்தோடு இருந்த மாணவர்களை அமைதியடையச் செய்து கலைத்து அவரவர் தங்கியிருந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குப் பாண்டியனும், மணவாளனும், அண்ணாச்சியும் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். முதலில் மாணவிகளை விடுதிக்கு அனுப்பி வைத்தார்கள். பின்பு மாணவர்களை அனுப்பி மற்ற வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுப் பாண்டியன் அண்ணாச்சி முதலியவர்கள் படுக்கச் சொல்லும் போது பின்னிரவில் நான்கு மணி ஆகிவிட்டது. தீப்பிடித்த கொடுமையால் பாதிச் சாப்பாட்டில் எழுந்து வந்த சாரணர்களும், ஊழியர்களும் மேலே சாப்பிடாததால் அரை வயிற்றுப் பட்டினியோடு போய்ப் படுக்க நேர்ந்தது. மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக மகாநாட்டுக்குக்கென்று அகில இந்தியாவிலிருந்தும் வந்திருந்த வெளியூர்ப் பிரதிநிதிகளை வழியனுப்பி வைக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். விருந்தினர்களுக்கு முன் தங்களின் மனத் தாங்கல்களைப் பெரிதுபடுத்த விரும்பாமல் அடக்கமாகவும், அமைதியாகவும் நடந்து கொண்டார்கள் அவர்கள். எரிகிற தீயில் எண்ணெயை வார்ப்பது போல் மறுநாள் காலை வெளியான ஆளும் கட்சிப் பத்திரிகைகளில் எல்லாம், 'மகாநாட்டுப் பந்தலுக்குத் தாங்களே தீ வைத்து விட்டுப் பிறர் தலையில் பழிபோட முயற்சி! நக்ஸலைட்டுகளின் நாச வேலை' என்பது போல் திரித்து வெளியிடப்பட்ட செய்திகள் பிரசுரமாகி மாணவர்களைக் கோப மூட்டின. தேசீயப் பத்திரிகைகளிலும், மற்ற நடுநிலைத் தினசரிகளிலுமே உண்மைச் செய்திகள் வெளிவந்திருந்தன. பொய்ச் செய்தியை ஒட்டி, "கொலை, கொள்ளை, தீவைப்பு போன்ற செயல்களில் மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதை இனியும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்பது போல் அமைச்சர் கரியமாணிக்கம் ஓர் அறிக்கை வேறு விட்டிருந்தார். தமக்கு டாக்டர் பட்டம் அளிக்கப் போகிற விழாவுக்கு முன் எதையாவது சொல்லி மிரட்டி முக்கியமான மாணவர்களின் இயக்க இளைஞர்களைப் பிடித்து உள்ளே தள்ளி விட இந்த அறிக்கையின் மூலம் அமைச்சர் முயல்வது தெரிந்தது. சில பத்திரிகைகளில் 'மல்லை இராவணசாமியின் ஜீப்பில் வந்த ஆட்களே நெருப்பு வைத்து விட்டு ஓடினர்' என்ற மாணவர்கள் அறிக்கையையும் பிரசுரித்து விட்டு, அடுத்த பத்தியிலேயே அதை மறுக்கும் போலீஸ் தரப்பு அறிக்கையையும் முதலமைச்சர் அறிக்கையையும் சேர்த்தே பிரசுரித்திருந்தார்கள். மகாநாடு முடிந்ததுமே பொங்கலுக்கு ஊர் திரும்பலாம் என்று எண்ணியிருந்த பாண்டியன், மணவாளன், கண்ணுக்கினியாள் முதலிய எல்லோருடைய பயணமும் தடைப்பட்டன. மூங்கில் தட்டி, பந்தல் சாதனங்கள் முதலிய எல்லாமே எரிந்து சாம்பலாகி இருந்ததனால் பந்தல் காண்ட்ராக்ட் எடுத்திருந்தவருக்கு நிறைய நஷ்ட ஈடு தரவேண்டியதாகிவிட்டது. வயரிங், டியூப் லைட்டுகள், ஒளி விளக்கு, அலங்காரம் எல்லாம் அழிந்து போன நிலையில் எலெக்ட்ரீஷியனின் சேதமும் அதிகமாகிவிட்டது. மகாநாட்டு வசூல் பணத்திலும் பெரும் பகுதி தீயில் போய்விட்டதனால் வெற்றிகரமான ஒரு மகாநாட்டு முடிவில் மாபெரும் பொருளாதாரப் பிரச்சினை அவர்கள் முன் பூதாகாரமாக உருவெடுத்து நின்றது. மணவாளன் மலைத்தார். பிரதிநிதிகள், பேச வந்த பிரமுகர்கள் தங்கிய ஹோட்டல் பில் எல்லாம் பாக்கி நின்றது. மாணவர்களிடம் தலைக்கு ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ வசூலித்தால் கூட அது போதாது. விடுமுறை தொடங்கியதுமே ஒரு பகுதி மாணவர்களும், மகாநாடு முடிந்தவுடன் எஞ்சியவர்களும் ஊர் திரும்பி விட்டதால் அப்போது நகரில் உள்ளூர் மாணவர்கள் மட்டுமே இருந்தார்கள். இப்படிப்பட்ட நிலைகளில் மணவாளனின் இயல்பு தனியானது. நழுவி ஓடவோ, தப்பித்துக் கொள்ளவோ, பொறுப்பைத் தட்டிக் கழிக்கவோ அவருக்குத் தெரியாது. மதுரையில் வீட்டுக்குத் தந்தி கொடுத்தார் அவர். மணவாளனின் தந்தை மறுநாளே மகன் பெயருக்கு மூவாயிரம் ரூபாய்க்கு ஒரு பேங்க் டிராஃப்ட் அனுப்பி வைத்தார். மகாநாட்டுச் செயற்குழு அன்று மாலையிலேயே அவசரமாகக் கூட்டப்பட்டது. அண்ணாச்சிக் கடையின் பின்புறம் செயற்குழு சந்தித்தது. மணவாளன் நிலைமையை விவரித்தவுடன் தயாராகக் காத்திருந்தவர் போல் மடியிலிருந்து இரண்டாயிரம் ரூபாயை நோட்டுக் கற்றைகளாக எடுத்துக் கொடுத்தார் அண்ணாச்சி. "நீங்களே தொடர்ந்து சிரமப்படறீங்க...? இதெப்படி நீங்க...? எதை விற்றீங்க? என்ன பண்ணினீங்க? உங்க உழைப்புக்கு நாங்க எவ்வளவோ கடமைப் பட்டிருக்கோம். நீங்க பணம் எதுவும் தரணும்கிறது இல்லே அண்ணாச்சி!" என்றார் மணவாளன். அண்ணாச்சி இதைக் கேட்டுச் சிரித்தார்.

     "சும்மா எடுத்து வையுங்க... நிலைமை என்னன்னு உங்களை விட எனக்கு நல்லாத் தெரியும்... உபசாரமெல்லாம் நமக்குள்ளே எதுக்கு? பாக்கி எல்லாம் சீக்கிரமாக கொடுத்து முடிக்கலியின்னா ஒவ்வொருத்தனா மகாநாட்டுக் கமிட்டிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவான்..."

     "எப்பிடி இது?... உங்களாலே இவ்வளவு பெரிய தொகை...?"

     "நீங்க கோபப்படலையின்னா நான் சொல்றேன்..."

     "சொல்லுங்க... கோபம் என்ன இதிலே?"

     "கடை உபயோகத்துக்குப் பேப்பர் போட்டுக் கொள்ள ரெண்டே ரெண்டு சைக்கிள் மட்டும் மீதம் வைச்சுக்கிட்டு மத்ததையெல்லாம் வித்துப்புட்டேன். அந்தப் பணம் தான் இது..."

     "ஏன் அப்பிடிச் செஞ்சீங்க?... நீங்க செஞ்சது கொஞ்சங் கூட நல்லாயில்லே, அண்ணாச்சி."

     "இந்தச் சைக்கிள் எல்லாமே நீங்களும் மத்த மாணவர்களும் வசூல் பண்ணி வாங்கிக் கொடுத்ததுதானே? உங்களுக்கு இல்லாமே எனக்கு எதுக்குங்க? நான் என்ன இதைத் தலையிலியா கட்டிக்கிட்டுப் போகப் போறேன்?"

     "கடை நடக்கணுமே...? அதுக்கு இனிமே என்ன செய்வீங்க...?"

     "பேப்பர் ஏஜன்ஸி, பெட்டிக்கடை வியாபாரம் போதுங்க... சைக்கிள் வாடகை விட்டுக் காசு வாங்கறது ரொம்பத் தொல்லையாயிருக்கு. அதை இதோட நிறுத்திடலாம்னே முடிவு பண்ணிட்டேன்..."

     "மாணவர்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்யறீங்க. உங்களுக்கு நாங்க என்ன நன்றி சொல்றதுன்னே தெரியலே அண்ணாச்சி."

     "போதும்! மேலே நடக்க வேண்டியதைக் கவனியுங்கள்... நன்றி, கைம்மாறுன்னெல்லாம் உபசார வார்த்தைகளைச் சொல்லி என்னைப் போல ஒரு தொண்டனை அவமானப் படுத்தாதீங்க... நான் அதை எல்லாம் எதிர்பார்க்கிறவன் இல்லே."

     நன்றியின் முழுக் கனிவும் தெரிய அங்கே கூடியிருந்த மாணவர்களும், மணவாளனும், அண்ணாச்சியை ஏறிட்டுப் பார்த்தார்கள். வாசலில் 'சார் தந்தி!' என்று தந்திச் சேவகனின் குரல் கேட்டது. அண்ணாச்சி முன் பக்கம் போய்த் தந்தியை வாங்கிக் கொண்டு வந்து பாண்டியனிடம் கொடுத்தார். தேசிய மனப்பான்மையுள்ள நடிகர் திலகம் ஒருவர் சென்னையிலிருந்து மாணவர் மகாநாட்டுச் செலவுகளுக்காகவும் தீப்பற்றி நேர்ந்த இழப்புகளுக்காகவும் வருந்தித் தம்முடைய நன்கொடையாக ஐயாயிரம் ரூபாய்க்குச் செக் அனுப்பியிருப்பதாகத் தந்தி மூலம் குறிப்பிட்டிருந்தார். அந்த நடிகருடைய பெயரில் இயங்கி வந்த மல்லிகைப் பந்தல் இரசிகர் மன்றம் மகாநாட்டு ஏற்பாடுகளில் பெரிதும் ஒத்துழைத்திருந்தது. அந்த இரசிகர் மன்றத்தைச் சேர்ந்த யாரோ ஒருவர் ஃபோன் செய்து தகவல் தெரிவித்திருந்ததால் இந்த நன்கொடையை நடிகர் திலகம் அனுப்பியிருக்க வேண்டும் என்று புரிந்தது. என்ன நன்கொடைகள் வந்தாலும் அப்போது அவர்கள் சேர்த்தாக வேண்டிய தொகை இன்னும் எட்டா உயரத்திலேயே இருந்தது.

     இப்படி மாணவ்ர்களின் செயற்குழுக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே, யாரும் எதிர்பாராத விதமாகப் பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கம் திடீரென்று அண்ணாச்சிக் கடையைத் தேடிக் கொண்டு வந்தார். மாணவர்கள் வியப்புடன் எழுந்து நின்று அவரை மிகவும் மரியாதையாக வரவேற்றார்கள்.

     அங்கே சிறிது நேரம் அமைதியாக உடனமர்ந்து அவர்கள் செயற்குழுவின் நடவடிக்கைகளைக் கவனித்த பூதலிங்கம் இருந்தாற் போலிருந்து, "பாண்டியன்! ஐ நோ யுவர் டிஃபிகல்டிஸ். பிஸீஸ் அக்ஸெப்ட் மை ஹம்பிள் டொனேஷன்" என்று மிகவும் அடக்கமாய்ப் பையில் தயாராக எழுதி வைத்திருந்த ஐந்நூறு ரூபாய்க்கான 'செக்' ஒன்றை எடுத்து நீட்டினார். பாண்டியன் அதை வாங்கத் தயங்கினான். அவன் கையில் அதை வற்புறுத்தித் திணித்தார் பேராசிரியர். மணவாளன் உடனே அவரைக் கேட்டார்: "புரொபஸர் சார், இது எங்கள் கஷ்டம்! இதில் நீங்களும் கலந்து கொண்டு சிரமப்படுவது அவசியம் தானா?"

     "உங்கள் கஷ்டத்தில் எனக்கும் பங்கு உண்டென்று நான் நினைப்பது தவறில்லையே மிஸ்டர் மணவாளன்?"

     "நீங்கள் எல்லாம் மாணவர்கள் மேல் இப்படி உயிரை வைத்திருக்கிறீர்கள் சார்! உங்களைப் பார்க்கும் போதெல்லாம் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. ஆனால் நம்ம வி.சி. மாணவர்களை எல்லாமே தம் எதிரிகளாக நினைக்கிறார்..."

     "விட்டுத் தள்ளுங்கள்! இந்த நல்ல வேளையில் அவரைப் பற்றிப் பேசாதீர்கள். என்னைப் பொறுத்த வரையில் அவரை நான் மதிப்பதே இல்லை. அவரை விட இந்த அண்ணாச்சியை நான் அதிகம் மதிக்கிறேன். டு பீ வெரி பிராங்க் வித்யூ... இங்கே படிக்கும் மாணவர்களின் நலன்களை கவனித்து உதவுதற்காக நியமிக்கப்பட்டு அதற்காக மூவாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் வி.சி.யை விட எந்தச் சம்பளமும் வாங்காமல் இந்த அண்ணாச்சி நெடு நாட்களாகக் கவனித்து உதவுகிறார். இவரைப் போல் சுயநலமில்லாத தொண்டர்களின் முன் நான் வி.சி.யை என் கால் தூசுக்குக் கூட மதிப்பதில்லை. இங்கே வந்து இந்தக் கடையை வைத்த நாளிலிருந்து மாணவர்களுக்கு இவர் பிரதி பலன் எதிர்பாராமல் செய்திருக்கும் உதவிகளை யாரையும் விட நான் மிக நன்றாக அறிவேன். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் உதவிகள் செய்யும் இவர் அன்றிலிருந்து இன்று வரை கிழிந்த நாலு முழம் கதர் வேட்டியும் அரைக் கைக் கதர் சட்டையுமாக ஒரே மாதிரி எளிமையாக இருக்கிறார். வியாபாரத்தில் சம்பாதித்த லாபத்தில் வீடு கட்டிக் கொண்டு வாழ இவருக்குத் தெரியவில்லை. இவருடைய கட்சி பதவியில் இருந்த போது தம் தியாகங்களை எடுத்துச் சொல்லி இரண்டு பஸ் ரூட்டுக்குப் பெரிமிட் வாங்கிக் கொள்ள இவர் ஆசைப்பட்டுப் பறந்ததில்லை. இவரைப் பார்க்கும் போதெல்லாம் என் சொந்த ஊரான சுசீந்தரம் கோயிலில் இருக்கும் அனுமார் சிலை எனக்கு ஞாபகம் வருவதுண்டு. இவரை அருகில் வைத்துக் கொண்டே இப்படிப் புகழ்வதற்கு எனக்குக் கூச்சமாக இருக்கிறது. மிஸ்டர் மணவாளன்! உபதேசம் செய்பவர்களை விடத் தொண்டு செய்பவர்களே உயர்ந்தவர்கள். உபதேசம் செய்கிறவர்கள் வெறும் ஞானங்களைச் சுமக்கிறார்கள். தொண்டு செய்கிறவர்கள் அந்த ஞானங்களைக் கடைப்பிடித்தே விடுகிறார்கள்! உபதேசிப்பவர்களை விடக் கடைப்பிடிப்பவர்கள் மேலானவர்கள் என்பதற்கு இவர் ஓர் உயர்ந்த அடையாளம்..."

     "சார்! சார்! போதும்... இந்த ஏழையை ரொம்பப் புகழாதீங்க... இந்தத் தேசத்தின் முதல் பெரும் தொண்டரும் கடைசிப் பெரும் தொண்டருமான காந்தி மகான் எனக்கு இட்டப் பிச்சை இது. இதில் எதுவுமே என் சொந்தப் பெருமை இல்லீங்க... எல்லாமே அந்த மகான் அளித்த பெருமை" என்று பொருளாதாரப் பேராசிரியரை நோக்கி அடக்கமாகக் கைகூப்பினார் அண்ணாச்சி. புகழுக்குக் கூசுகிற - புகழிலிருந்து விலகி நிற்கிற இந்தப் பண்பை மணவாளனும், பாண்டியனும் அண்ணாச்சியிடம் நெடுநாட்களாகக் கவனித்து வைத்திருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டு மனிதர்களில் பேதைகளைப் போல் தோன்றும் இப்படிப்பட்ட மேதைகளைக் காண்பது மிகமிக அதிசயமாயிருந்தது. மகாநாட்டுப் பந்தல் தீப்பற்றியதால் வந்த புதிய நஷ்டங்களும், பழைய செலவுகளில் கொடுக்கப்பட வேண்டிய பாக்கிகளும் நிறைய இருந்தன. அண்ணாச்சி, மணவாளன், பூதலிங்கம் ஆகியோர் அளித்தவை, சென்னையிலிருந்து நடிகர் திலகம் அளித்தவை ஆகிய அனைத்தும் போதுமானவையாக இல்லை. ஹாஸ்டல் ஃபீஸுக்காகவும், இதர செலவுகளுக்காகவும் ஒரு வாரத்துக்கு முன் தன் தந்தை கிராம விவசாயக் கூட்டுறவு பாங்கில் எடுத்து அனுப்பியிருந்த டிராஃப்டை மாற்றி, மகாநாட்டுச் செலவுகளில் கரைய விட்டிருந்தான் பாண்டியன். கண்ணுக்கினியாள் 'பாக்கெட் மணி'யாகத் தன் தந்தை அனுப்பிய தொகைகளிலிருந்து மீதம் பிடித்து இருநூறு ரூபாய் நன்கொடை கொடுத்திருந்தாள். வேறு சில மாணவ மாணவிகளும் இப்படியே உதவியிருந்தார்கள்.

     கெடுக்க வேண்டும் என்றே சதி செய்து மாணவர் மகாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்த மல்லை இராவணசாமியின் வீட்டுக்கோ, அவரது கட்சி அலுவலகத்துக்கோ கண்டன ஊர்வலம் போய்ப் பெருந்திரளாகக் கூடி மறியல் செய்ய வேண்டும் என்று செயற்குழுவில் சில மாணவர்கள் கூறிய யோசனையை மணவாளன் ஏற்கவில்லை.

     "மகாநாட்டுக்குத் தங்கள் கட்சி மந்திரிகள் யாரையும் கூப்பிடவில்லை என்ற கோபத்தினாலும் தங்கள் எதிர் முகாமைச் சேர்ந்தவரும் பதவியில் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான மக்களால் தொழப்படுகிறவருமாகிய பெருந்தலைவர் ராமராஜ் அவர்களைத் தொடக்க உரை ஆற்றக் கூப்பிட்டு விட்டோமே என்ற பொறாமையினாலும் அவர்கள் இதைச் செய்து விட்டார்கள். அவர்கள் எவ்வளவு கெட்ட எண்ணம் உள்ளவர்கள் என்பது அனைவருக்கும் இப்போது தெரிந்து விட்டது. அது போதும். நாம் வேறு இதை எதிர்த்து வன்முறைகளில் இறங்க வேண்டாம். ஜீப்பில் சௌகரியமாக ஏறி வந்து அடுத்தவர்கள் நடத்தும் மகாநாட்டுப் பந்தலுக்கு நெருப்பு வைக்கிற அளவுக்கும், லாரிகளில் குண்டர்களை ஏற்றி வந்து மற்றவர்களைத் துன்புறுத்தும் அளவுக்கும் வசதிகள் உள்ளவர்களால் நாம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பது மக்களுக்குப் புரிந்திருக்கிறது. அவர்களை எதிர்ப்பதை விட ஆக்கப் பூர்வமான வேறு வேலைகள் நமக்கு இருக்கின்றன. இந்த அகில இந்திய மாணவர் மகாநாடு நம்மைப் பெரும் கடனாளி ஆக்கிவிட்டது. அந்தக் கடன்களைத் தீர்க்கும் வேலையே நமக்கும் இன்னும் சில வாரங்கள் வரையில் இருக்கும்..."

     செயற்குழுக் கூட்டம் முடிந்து எல்லோரும் கலையும் போது, பாண்டியன் கண்ணுக்கினியாளிடம் பேசத் தனிமை வாய்க்காததால் ஒரு துண்டுத் தாளில், 'நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்தரை மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஹாஸ்டல் மைதானத்தில் இருக்கும் பிள்ளையார் கோயிலில் காத்திருப்பேன். சந்திக்கவும். உன்னிடம் ஒரு முக்கியமான காரியம் இருக்கிறது' என்று எழுதி மடித்துக் கொடுத்தான். அதைப் படித்துவிட்டு அங்கிருந்து போவதற்கு முன் 'வருவதாக' சைகை மூலம் தெரிவித்து விட்டுப் போனாள் அவள். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் பொங்கல் பண்டிகைக்காக அவள், பாண்டியன், மணவாளன் எல்லோருமே ஊர் திரும்ப இருந்தார்கள். அதற்குள் மகாநாட்டுப் பாக்கிகளையும் கடன்களையும் கொடுத்துவிட்டுப் போகவேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள் அவர்கள்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247