முப்பத்து ஐந்தாவது அத்தியாயம்

     மறுநாள் காலையில் கண்ணுக்கினியாள் மதுரைக்குப் புறப்பட்டாள். முன்பு அவர்கள் பேசி வைத்துக் கொண்ட மாதிரி அவள், பாண்டியன், மணவாளன் எல்லாரும் சேர்ந்தே ஊருக்குப் புறப்பட முடியாமற் போய்விட்டது. பாண்டியனுக்கும், மணவாளனுக்கும் அங்கே செய்து முடிக்க வேண்டிய வேலைகள் இன்னும் மீதம் இருந்தன. அதனால் அவர்களே அவளை முதலில் புறப்பட்டுப் போகச் சொல்லிவிட்டார்கள். மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் அதிகாலை முதல் பஸ்ஸில் குளிரோடு குளிராக அவளை வழியனுப்பும் போது, "வளைகள், செயின், மோதிரம் எல்லாம் எங்கே என்று உங்க நாயினாவும், அம்மாவும் உன்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லப் போகிறாய்?" என்று வினவினான் பாண்டியன். இதைக் கேட்டு ஒரு பதிலும் சொல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்தாள் அவள். அப்புறம் பஸ் புறப்படுவதற்குச் சில விநாடிகளுக்கு முன், "அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நிம்மதியாக மற்ற வேலைகளைக் கவனியுங்கள்" என்று முகத்தில் மலர்ச்சியுடனும், புன்னகையுடனும் அவன் முன்பு கேட்ட அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னாள் அவள். அவளை வழியனுப்பிவிட்டு மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்திலிருந்து அப்படியே மணவாளன் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் போனான் பாண்டியன். மணவாளன் அறையில் இருந்தார். அவன் போன போது தான் யாருடனோ ஃபோனில் பேசி முடித்து விட்டுத் தலை நிமிர்ந்த மணவாளன் பாண்டியனைப் பார்த்ததும், "ரொம்பச் சரியான நேரத்தில் தான் நீயும் இங்கே வந்திருக்கிறாய்! இன்னும் சிறிது நேரத்தில் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினரும், எஸ்டேட் அதிபரும் ஆகிய ஆனந்தவேலு இங்கே என்னைப் பார்க்க வரப் போவதாக ஃபோன் செய்திருக்கிறார்" என்று கூறியபடி வரவேற்கவே, பாண்டியனுக்கு அந்தச் செய்தி வியப்பை அளித்தது. "ஆனந்தவேலு எதற்காக இங்கே வருகிறார்? அவருக்கு இப்போது இங்கே உங்களிடம் என்ன வேலை?" என்று கேட்டான் பாண்டியன்.

     "நீயும் இருந்து வேடிக்கை பார்! அப்போதுதான் உனக்கு எல்லாம் புரியும்! இங்கே மனிதர்கள் எப்படி எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள உனக்கு இது ஒரு வாய்ப்பு" என்று சொல்லிச் சிரித்தார் மணவாளன். பாண்டியன் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அது நிர்மலமாக எப்போதும் போல் தெளிவாக மலர்ந்திருந்தது. அவரே அவனிடம் பேசலானார்:

     "இந்த ஆட்சி வந்த பின் பல்கலைக் கழக 'சிண்டிகேட்'டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார் ஆனந்தவேலு. இந்தப் பல்கலைக் கழக செனட், சிண்டிகேட் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், வோட்டும் தங்களுக்கு உண்டு என்பதை அறியாத காரணத்தால் இந்தப் பல்கலைக் கழகத்தில் படித்து வெளியேறிய பட்டதாரிகள் பலர் தங்கள் பெயரை செனட் வோட்டராகப் பதிவு செய்து கொள்ளவில்லை. தமக்கு வேண்டியவர்களைத் தாமே பணம் கட்டி வோட்டராகப் பதிவு செய்து தம்முடைய கைப்பாவைகளே செனட் உறுப்பினர்களாக வருவதற்கான எல்லாத் தந்திரங்களையும் செய்கிறவர் இந்த ஆனந்தவேலு. இவருடைய சூழ்ச்சியாலும், தந்திரங்களாலும் சுமாரான தகுதியுள்ள பலர் அகடமிக் கவுன்ஸில் உறுப்பினராக நேர்ந்திருக்கிறது. அகடமிக் கவுன்சிலும், செனட்டும் மோசமான தரத்துக்கு இருந்தால் சிண்டிகேட்டின் தரமும் மோசமாகவே இருக்கும். 'சிண்டிகேட்' தரம் குறைந்தாலோ பல்கலைக் கழகத்தின் தரமும் தானாகவே குறையும்" என்று மணவாளன் கூறிய போது ஆனந்தவேலுவைப் பற்றி இவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருப்பவர் இந்த அதிகாலையில் அவரைச் சந்திப்பதற்கு ஏன் சம்மதித்தார் என்று புரியாமல் மருண்டான் பாண்டியன்.

     "அது மட்டுமில்லை! அண்ணனுக்கு இன்னொரு விவரமும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தங்களுக்கு வேண்டாத பட்டதாரிகள் அல்லது தங்களுக்கு வோட்டு போட மாட்டார்கள் என்று இவர்கள் நினைக்கும் பட்டதாரிகள் 'செனட்' வோட்டராகப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பம் அனுப்பினால் அந்த விண்ணப்பங்களை எந்தத் தேதிக்குள் வரவு வைத்தால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்குமோ, அந்தத் தேதி வரை அவற்றை வரவு வைக்காமல் காலந்தாழ்த்தி வரவு வைத்து அந்த ஆண்டிலேயே அவர்கள் வோட்டளிக்க முடியாமல் யுனிவர்ஸிடி நிர்வாகத்தையும் வி.ஸி.யையும் கைக்குள் போட்டுக் கொண்டு இவர்கள் செய்து விடுவார்கள். வருகிற வோட்டுக்களிலும் வோட்டர் 1 என்ற எண்ணுள்ள வேட்பாளருக்கு வோட் செய்திருந்தால் அதற்குப் பக்கத்தில் அதே மையில் ஒரு 2ஐயும் சேர்த்து '12' என்ற எண்ணுள்ள வேட்பாளருக்கு அந்த வோட்டை மாற்றி விடுகிற காரியத்தைக் கூடச் செய்து விடுகிறார்கள்."

     "மெத்தப் படித்தவர்கள் நடத்தும் பல்கலைக் கழகத் தேர்தல்களின் லட்சணமே இதுதான் என்றால் அப்புறம் இந்த நாட்டின் பொதுத் தேர்தல்கள் மோசமாக நடப்பதைப் பற்றிக் கேட்பானேன்?"

     "தலைமுறை தலைமுறையாகப் பல்கலைக் கழக 'செனட்', 'சிண்டிகேட்' உறுப்பினர் ஆவதற்கென்றே விரல் விட்டு எண்ணக் கூடிய சில குடும்பங்கள் இங்கே இருக்கின்றன. புதிய சக்திகள் - நல்ல சக்திகள் பல்கலைக் கழகங்களில் நுழைந்து விடாமல் கவனித்துக் கொள்கிறார்கள் இவர்கள்! ஆனந்தவேலுவை மதித்து வரச் சொல்லி அண்ணன் இங்கே கூப்பிட்டிருப்பதே எனக்குப் பிடிக்கவில்லை..."

     "நீ கூறும் குறைபாடுகள் ஜனநாயகத்தைப் போற்றவும், நேசிக்கவும், தெரியாதவர்களிடம் ஜனநாயகம் சிக்கிக் கொண்டால் அது என்னென்ன புண்களையும், காயங்களையும் பட வேண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது பாண்டியன்! அதே தவற்றை நானும் நீயும் செய்யக் கூடாது. ஆனந்தவேலு என்னை எதற்காகப் பார்க்க வரப்போகிறார் என்று தெரியாமலே நான் அவரைக் காண மறுப்பது சரியில்லை. அவரைப் பார்க்க வரச் சொல்வதனாலேயே நான் கெட்டு விட முடியுமானால் என் கொள்கைகளின் உறுதியையே நீ சந்தேகிக்கிறாய் என்று ஆகிறது" என்று மணவாளன் பதில் கூறிய பின்பே பாண்டியன் அமைதி அடைந்தான். அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே ஹோட்டல் மாடி வராந்தாவிலிருந்து ஆனந்தவேலுவின் 'சவர்லே - இம்பாலா' கீழே பிரதான வாயிற் காம்பவுண்டுக்குள் நுழைந்து வருவது தெரிந்தது அவர்களுக்கு.

     வழக்கத்தை விட மிகவும் அன்பாக நடந்து கொள்ளும் ஒரு பணிவான பெரிய மனிதரைப் போல் முகம் மலரக் கை கூப்பிக் கொண்டே வந்தார் ஆனந்தவேலு. பாண்டியனை அவர் கண்டு கொள்ளாதது போல் இருக்கவே மணவாளன் அவனை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பாண்டியன் அங்கிருந்து வெளியேறினாலொழியத் தாம் பேச வந்த விஷயத்தைப் பேச முடியாது என்பது போல் ஆனந்தவேலு குளிரின் கடுமை, வியாட்நாம் யுத்தம் என்று ஏதேதோ விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தார்.

     அங்கிருந்து தானாகவே எழுந்து இரண்டு முறை வெளியே வராந்தாவின் பக்கமாகப் போய் நிற்க முயன்ற பாண்டியனை, "இரு! பாண்டியன்... அப்புறம் போகலாம். இப்போதென்ன அவசரம்?" என்று மணவாளனே தடுத்து விட்டார். பாண்டியனும் அவர் குறிப்பை ஏற்று அங்கேயே இருந்து விட்டான். "பாவம்! அவரை ஏன் தடுக்கிறீர்கள்? இந்தக் காலத்தில் படிக்கிற பிள்ளைகளை ஓர் இடத்தில் கால் தரித்து உட்கார வைப்பது முடிகிற காரியம் இல்லை" என்று அங்கிருந்து பாண்டியனைப் போகச் செய்ய முயல்கிற தொனியில் குறுக்கிட்டுப் பேசினார் ஆனந்தவேலு. பாண்டியன், மணவாளன் இருவருமே விழிப்பாயிருந்து அவர் வார்த்தைகளைக் கவனித்தார்கள். சுற்றி வளைத்து வந்த காரியத்தை ஆரம்பித்தார் ஆனந்தவேலு. பசுத்தோல் விலகிப் புலி தெரியத் தொடங்கியது.

     அங்கே மாணவர் மகாநாட்டுப் பந்தலுக்கு நெருப்பூட்டப் பட்டதனால் விளைந்த நஷ்டங்களுக்காக ஆனந்தவேலு வருத்தப்பட்டார். தம்முடைய நன்கொடையாக ஒரு பெருந்தொகையைக் குறிப்பிட்டு அதைத் தருவதாக வாக்களித்தார்.

     உடனே மணவாளன் குறுக்கிட்டு, "உங்களுக்கு எதற்கு வீண் சிரமம். எங்களுக்குப் பணக் கஷ்டம் ஏற்பட்டது உண்மை. ஆனால் அதிலிருந்து நாங்கள் மீண்டுவிட்டோம். இப்போது எங்களுக்கு எதுவும் தேவையில்லை. உங்கள் அன்புக்கு நன்றி" என்று நாசூக்காக அவர் உதவியை மறுத்துவிட்டார். மாணவர்களுக்கு எப்போது எதற்காகப் பணமுடை வந்தாலும் தாம் உதவுவதற்குத் தயாராக இருப்பதாக மீண்டும் ஆனந்தவேலு கூறியபோது, "உங்களிடம் வந்து உங்களை சிரமப்படுத்துகிற அளவு பெரிய பணக் கஷ்டம் எங்களுக்கு எதுவும் வராது சார்!" என்றார் மணவாளன்.

     "யுனிவர்ஸிடி திறந்ததும் கான்வகேஷன் வருகிறது. அதில் அமைச்சர் கரிய மாணிக்கம் பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார்... மாணவர்கள் கட்டுப்பாடாக நடந்து கொண்டு நம்முடைய யுனிவர்ஸிடியின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும். மிஸ்டர் மணவாளன்! நீங்கள் தான் இதைச் செய்ய முடியும்..."

     "அமைச்சர் கரியமாணிக்கத்துக்கு டாக்டர் பட்டம் தரவேண்டும் என்று கூட 'சிண்டிகேட்'டில் முடிவு செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது..."

     "ஆமாம்! அதனால் தான் உங்களைச் சந்தித்து இதை வேண்டிக் கொள்ளலாம் என்று வந்தேன். வி.ஸி. பயப்படுகிறார். நீங்கள் மனம் வைத்தால் வி.ஸி. பயப்படுகிறாற் போல் எதுவும் நடக்காமல் தடுக்க முடியும், மிஸ்டர் மணவாளன்!"

     "மன்னிக்க வேண்டும் சார்! இதில் எதையும் நான் தடுக்க முடியாது. மாணவர்களுடைய முடிவுகள் 'ஸ்டூடண்ட் கவுன்ஸிலால்' செய்யப்படும். அதன்படி அவர்கள் பிரச்னையின் நியாய அநியாய அடிப்படையில் செயலாற்றுவார்கள். நன்கொடைகளின் மூலம் அவர்களை விலைக்கு வாங்கி விட முடியாது."

     "நோ... நோ... நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். மிஸ்டர் மணவாளன்! அதனால் தான் இப்படிக் கோபமாகப் பதில் சொல்லுகிறீர்கள்... நான் சொல்ல வந்தது என்னவென்றால்..."

     "என்னவா இருந்தாலும் பரவாயில்லை! நீங்கள் நினைப்பது நடக்காது! தயவு செய்து உடனே இந்த முயற்சியைக் கைவிடுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை" என்று அழுத்தமாக மறுமொழி கூறினார் அவர். பாண்டியன் எதுவும் பேசவே இல்லை. வந்த காரியம் நடக்காது என்று தெரிந்த பின்னும் உடனே எழுந்து போய் விடாமல் சிறிது நேரம் எதையெதையோ பேசிக் கொண்டிருந்தார் ஆனந்தவேலு. அவர் உடனே பேச்சை முறித்துக் கொண்டு புறப்படவில்லை. மேலும் பேசினார்:

     "டாக்டர் பட்டம் பெற அமைச்சர் வரும்போது மாணவர்கள் எதிர்த்தால் அவர்களைப் பதிலுக்குத் தாக்குவது என்று கடுங்கோபத்தோடு இருக்கிறார் மல்லை இராவணசாமி. மாணவர்களுக்கு எதுவும் துன்பம் வரக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் தான் இங்கு வந்தேன் நான்."

     "உங்கள் நல்லெண்ணத்துக்கு நன்றி! நீங்கள் சாம, தான, பேத, தண்ட முறைகளால் எங்களை மிரட்டுகிறீர்கள். இந்த நூற்றாண்டில் மிரட்டல்கள் கூட மிகவும் நாசூக்காக நடக்கின்றன. இனிய வார்த்தைகளைப் பயங்கரமான அர்த்தத்தில் குறும் மிரட்டல்களை விடப் பயங்கரமான வார்த்தைகளைப் பயங்கரமாகவே கூறிக் கொண்டு கழியும் கையுமாக எதிரே வருகிற மிரட்டலே பரவாயில்லை. ஏனெனில் அதில் ஒளிவு மறைவில்லை" என்று அவரைச் சாடினார் மணவாளன்.

     "எனி ஹௌ... ப்ளீஸ் திங்க் இட் எகெய்ன்... அண்ட் டெல் மீ... ஃபார்சுனேட்லி யூ ஹாவ் எனஃப் டைம் டு திங்க்..." என்று கூறிக் கொண்டே போவதற்கு எழுந்து நின்ற ஆனந்தவேலுவை நோக்கிப் பெரிய கும்பிடாகப் போட்டு அனுப்பி வைத்தார்கள். மணவாளனும், பாண்டியனும், அவர் எதற்காகத் தேடி வந்து விட்டுப் போனார் என்பது இவ் இருவருக்கும் தெளிவாகப் புரிந்து விட்டது. மணவாளன் கேலியாகச் சிரித்தபடியே பாண்டியனிடம் கூறினார்:

     "ஸோ-பட்டமளிப்பு விழாவைப் பொங்கல் விடுமுறை முடிந்து பல்கலைக் கழகம் திறந்ததுமே நடத்தப் போகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது..."

     "ஆமாம்! இனிமேல் தள்ளிப் போடமாட்டார்கள். நமது மகாநாட்டில் பேச வந்தால் அரசாங்கத்தில் கெட்ட பேர் வாங்க நேரிடுமோ என்று பயப்பட வி.சி. நேற்று மாலை மல்லை இராவணசாமியைப் பதிப்பாளராகவும் கோட்டம் குருசாமியை ஆசிரியராகவும் கொண்ட 'தீவட்டி' என்ற வார இதழை வெளியிட்டுப் புகழ்ந்து பேசியிருக்கிறார். 'தீவட்டி'யால் தான் தமிழகம் ஒளிபெற முடியும் என்று கூடத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்."

     "அதுமட்டுமில்லை பாண்டியன்! இலக்கிய விழாக்களுக்கு அழைத்தால் கூட 'எனக்கு ஓய்வில்லை, என் அமைதியில் குறுக்கிடாதீர். மன்னிக்கவும்' என்று இரண்டே வாக்கியங்களைப் பதிலாக எழுதி வர மறுக்கும் நம் வீ.சி. ஆளும் கட்சியினர் நடத்தும் மூன்றாந்தரக் கூட்டங்களில் கூடப் போய் நாலாந்தரமாகப் பேசுகிறார்."

     பகல் வரை அங்கேயே மணவாளனோடு இருந்தான் பாண்டியன். இரண்டே கால் மணிக்கு அண்ணாச்சி வந்தார். காலையில் எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலு தன்னையும் தேடி வந்ததாக அண்ணாச்சி கூறினார். "மந்திரி வரப்ப மாணவர்கள் கலாட்டாப் பண்ணாமல் இருக்கும்படி செய்தீருன்னா உமக்கு என்ன வேணுமின்னாலும் செய்து தரேன்னு ஆசை காட்டினாரு."

     "ஆண்டவன் புண்ணியத்திலே நான் நல்லாவே இருக்கேன். எனக்கு நீங்கள் எதுவுமே செய்து தர வேணாம்னு சொல்லி அனுப்பிச்சேன். 'மாணவர்களுக்கு நிறையப் பணம் தர்றேன் கான்வொகேஷன் நடக்கிறப்ப முக்கியமான மாணவர்களையெல்லாம் பிளேன் டிக்கட் வாங்கிக் கொடுத்துக் காஷ்மீருக்கு உல்லாசப் பயணம் போகச் சொல்லி அனுப்பிடலாம். நீங்களே கூட்டிக்கிட்டுப் போறதுன்னலும் போங்க'ன்னு கெஞ்சினாரு... முகத்திலே காரித் துப்பாத குறையாப் பதில் சொல்லித் தட்டி அனுப்பினேன். மனுசன் இதே வேலையா அலையறாரு" என்றார் அண்ணாச்சி. அதே தினம் மாலையில் மகாநாட்டுப் பாக்கிகளைக் கணக்குத் தீர்க்க ஆட்களை வரச்சொல்லியிருந்தார்கள் அவர்கள். மாலை ஏழு மணி வரையில் அந்த வேலை சரியாக இருந்தது. பாண்டியனையும், மணவாளனையும், அண்ணாச்சியையும் அன்று மாலையில் தம் வீட்டில் இரவு உணவுக்கு வருமாறு ஃபோன் மூலம் அழைத்திருந்தார் பேராசிரியர் பூதலிங்கம். அவர்கள் எவ்வளவோ மறுத்தும் அவர் கேட்கவில்லை. கண்டிப்பாக வரவேண்டும் என்றார் அவர்.

     இரவு எட்டு மணி அளவில் அவர்கள் பூதலிங்கத்தின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது அவர் இவர்களை எதிர்பார்த்து காத்திருந்தார். அரை மணி நேரம் பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த பின் சாப்பிட உட்கார்ந்தார்கள். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே பூதலிங்கம் மணவாளனை ஒரு கேள்வி கேட்டார்:

     "உங்களையெலலம் இன்று எஸ்டேட் அதிபர் ஆனந்தவேலு வந்து சந்தித்திருப்பாரே?"

     "ஆமாம்! அது எப்படி உங்களுக்குத் தெரியும்?"

     "அமைச்சர் வி.ஸி.க்குப் ஃபோன் பண்ணி வி.ஸி. தூது அனுப்பித்தானே ஆனந்தவேலு உங்களிடம் வந்தார்! எனக்கு நேற்றே தெரியும். நேற்றிரவு அகாலத்தில் ஆனந்தவேலு என்னைத் தேடி வந்து, 'உங்களை எல்லாம் நான் பார்த்துப் பேசிச் சரிக்கட்ட முடியுமா?' என்று கேட்டார். 'அது என் வேலையல்ல. என்னால் முடியவும் முடியாது' என்று நான் கடுமையாக மறுத்த பின்பே, அவர் புறப்பட்டுப் போனார்" என்றார் பூதலிங்கம். மணவாளனும், அண்ணாச்சியும் ஆனந்தவேலு தங்களைச் சந்திக்க வந்த அனுபவங்களைத் தனித்தனியே விவரித்தார்கள். பூதலிங்கம் அதைக் கேட்டு நகைத்தபடியே, "நன்றாக அரசாங்கத்துக்குத் தரகு வேலை பார்க்கிறார் அவர்! இவ்வளவு திறமையான வேறு தரகர் அவர்களுக்குக் கிடைக்க முடியாது" என்றார். சாப்பிட்டு முடித்த பின்பும் நீண்ட நேரம் அமர்ந்து, அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அண்ணாச்சி, ஆனந்தவேலு தன்னிடம் வந்து 'முக்கியமான மாணவர்கள் தலைவர்களை விமானத்தில் காஷ்மீருக்கு உல்லாசப் பயணம் அழைத்துக் கொண்டு போக முடியுமா?' என்று கேட்டதைச் சொல்லியபோது பூதலிங்கத்தின் சிரிப்பு அடங்க நெடு நேரமாயிற்று.

     "காஷ்மீரானால் முடியாது! நூறு மாணவர்களை ஸ்விட்ஜர்லாந்துக்கு அழைத்துப் போவதானால் தான் முடியும் என்று சொல்லிப் பார்ப்பது தானே?" என்று கேலியாக வினவினார் பூதலிங்கம். மறுநாள் மாலைக்குள் அவர்கள் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதனால் பிற்பகல் பஸ்ஸில் மணவாளனும் பாண்டியனும் மதுரைக்குப் புறப்பட்டார்கள். வழியனுப்ப நிறைய மாணவர்கள் பஸ் நிலையத்துக்கு வந்திருந்தார்கள். எல்லா மாணவர்களும் பட்டமளிப்பு விழாப் போராட்டத்தைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார்கள். பொங்கல் விடுமுறை முடிந்து பல்கலைக் கழகம் திறந்ததும் தானே மீண்டும் வருவதாகக் கூறி விடைபெற்றார் மணவாளன். பாண்டியனும் நண்பர்களிடம் அதையே கூறினான்.

     அன்றிரவு மதுரையில் மணவாளனோடு தங்கிவிட்டு மறுநாள் பகலில் பாலவநத்தம் போக முடிவு செய்திருந்தான் பாண்டியன். மறுநாள் காலை அவன் சித்திரக்காரத் தெருவுக்குப் போய்க் கண்ணுக்கினியாளைச் சந்தித்தான். அவன் போன போது கந்தசாமி நாயுடு, அவர் மனைவி, மகள் கண்ணுக்கினியாள் எல்லோருமாகச் செவ்விள நீர்க் கொத்து, பூக்குடலை, தேங்காய் பழம் சகிதம் வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வாசலில் ஒரு டாக்ஸி தயாராக நின்று கொண்டிருந்தது.

     "நீயும் வாயேன் தம்பீ! வண்டியூர்த் தெப்பக்குளம் வரையில் போயிட்டு வரலாம். ஒரு பிரார்த்தனை இருக்கு. பகல் சாப்பாட்டுக்கு இங்கே திரும்பிடலாம்..." என்றார் நாயுடு. 'மறுத்துவிடாமல் வாருங்கள்' என்று கண் பார்வையாலேயே அவனைக் கெஞ்சினாள் கண்ணுக்கினியாள். அவன் பகல் உணவுக்குள் மணவாளன் வீட்டுக்குத் திரும்பி வருவதாகச் சொல்லியிருந்தான். ஆனாலும் நாயுடுவின் வேண்டுகோளையும், கண்ணுக்கினியாளின் ஆசையையும் தட்ட முடியாமல் அவன் அவர்களோடு செல்லும்படி ஆகிவிட்டது. போகும் போது அவன் கண்ணுக்கினியாளிடம் தனியாக எதுவும் பேச முடியவில்லை. நாயுடுதான் அண்ணாச்சியின் சௌக்கியம் பற்றியும் மகாநாட்டுப் பந்தலில் தீப்பிடித்தது பற்றியும் இரண்டொரு கேள்விகளைக் கேட்டார். மாரியம்மன் தெப்பக்குளம் போய்ச் சேர்ந்ததும் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நாயுடுவிடம் சொல்லிக் கொண்டு படகில் தெப்பக்குளத்தின் மைய மண்டபத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள் அவர்கள். அவள் கைகளை இன்னும் அதே சாதாரண வளைகள் மட்டும் அலங்கரிப்பதைப் பார்த்த அவன், "நாயினாவோ, அம்மாவோ ஒண்ணும் கேட்கலியா?" என்றான். படகில் பலரும் இருந்ததால் அவர்கள் தங்களையே கூர்ந்து கவனித்து விடாத வகையில் பொதுவாகப் பேசிக் கொண்டர்கள் அவர்கள். அவள் பதில் சொன்னாள்: "கேட்டாங்க. திருடு போயிடிச்சுன்னு பொய் சொன்னேன். பொய் என்ன? நெஜமும் அதுதானே? வளை, மோதிரம், செயின் எல்லாத்தையும் திருடி, மனசையும் திருடி...?"

     அவன் அவளை முறைத்துப் பார்த்தான்.

     "வளை, மோதிரம், செயின் எல்லாத்தையும் வேணாத் திருப்பித் தந்திடலாம். ஆனால் நீ கடைசியாகச் சொன்னதை மட்டும் திருப்பித் தர முடியாது."

     "பட்டமளிப்பு விழா என்ன ஆச்சு? எப்ப நடக்கும்? மாணவர்கள் என்ன செய்யிறதா முடிவு பண்ணினீங்க?..." என்று மெல்லப் பேச்சை மாற்றினாள் அவள். அந்த விவரங்களையெல்லாம் அவளிடம் சொன்னான் அவன்.

     மைய மண்டபத்தின் நடுவில் இருந்த கோபுரத்தின் உச்சிக்கு ஏறினார்கள் அவர்கள். ஓரிடத்தில் படியில் விழுந்து விடுவது போல் தள்ளாடிய அவளைத் தன் கைகளால் தழுவினாற் போல் தாங்கிக் கொண்டான் அவன். "விடுங்க... இதென்ன... விளையாட்டு...?" என்று செல்லமாகச் சிணுங்கிய அவளை, "அது என்ன விளையாட்டு என்று பரீட்சைக் கேள்வி மாதிரிக் கேட்டால் எப்படிப் பதில் சொல்ல முடியும்? இதுதான் விளையாட்டு! விளையாட வேண்டிய விளையாட்டு" என்று பதில் சொல்லியபடியே அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் அவன். கீழேயிருந்த படிகளில் மேலும் சிலர் ஏறி வரும் ஓசை கேட்கவே அவள் அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு, "வருபவர்கள் வாழ்க!" என்றாள் "அவர்கள் வீழ்க!" என்றான் அவன். தங்கள் தனிமையைக் கெடுத்த அவர்கள் மேல் கோபம் வந்தது அவனுக்கு. மைய மண்டபக் கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்த போது மேற்கே கோபுரங்களும், மதுரை நகரமும், திருப்பரங்குன்றமும் மிக மிக அழகாகத் தெரிந்தன.

     "உயரத்திலிருந்து பார்த்தால் எதுவுமே அழகாகத் தெரிகிறது."

     "ஆனால் சிலரால் உயரத்தில் வந்தும் அழகைப் பார்க்கவே முடியவில்லை. உயரத்தில் வந்ததும் அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்கிறார்கள் சிலர்" என்று அருகே ஏறி வந்து கொண்டிருந்த நாலைந்து பேரை அவளிடம் சுட்டிக்காட்டி குறும்பு நகை புரிந்தான் அவன்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247