முப்பத்து ஒன்பதாவது அத்தியாயம்

     மாணவர்களைத் துணைவேந்தர் முழுமையாக நம்பி விட்டாற் போல் நடந்து கொண்டார் என்றாலும், அமைச்சர் கரியமாணிக்கமும், சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலுவும் மாணவர்களை நம்பவில்லை. எஸ்டேட் அதிபரும் பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட்டில் முக்கிய உறுப்பினருமான ஆனந்தவேலு மாணவர்களின் எதிர்ப்பை அடக்கி ஒடுக்குவதற்கு என்றே நிறைய பணம் செலவழிக்கவும் தயாராயிருந்தார். மல்லை இராவணசாமி வெளியூர்களிலிருந்தும் தம் கட்சியின் அடியாட்களை மல்லிகைப் பந்தலில் குவித்து வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். மணவாளன் செய்திருந்த ஏற்பாடுகளின்படி வெளியூர்களிலிருந்தும் மாணவர்கள் பெருந்தொகையாக மல்லிகைப் பந்தலில் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மதுரையிலிருந்தும் லாரி லாரியாகப் போலீஸ்காரர்கள் மல்லிகைப் பந்தலில் கொண்டு வந்து குவிக்கப்பட்டார்கள். 'உடன்பிறப்பே, உயிரே, தேனே! மல்லிகைப் பந்தலுக்கு அமைச்சரை வரவேற்கக் கொடியுடன் வா! முடிந்தால் அது தடியாகவும் இருக்கட்டும்! எதிரிகளின் தலைகளுக்கு இடியாகவும் இருக்கட்டும்!' என்பது போல் இராவணசாமி கையொப்பமிட்டு அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள தமது கட்சி ஆட்களை வரச்சொல்லி சுற்றறிக்கையே அனுப்பியிருந்தார். அந்தச் சுற்றறிக்கையில் ஒன்று எப்படியோ தேசிய மாணவர்கள் வசம் சிக்கியிருந்தது. பல்கலைக் கழக மாணவர்களில் மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்பு உள்ளவர்கள் வர வரக் குறைந்து நூற்றுக்கணக்கில் கூட இல்லாமற் போயிருந்தார்கள். பேரவைத் தேர்தலில் தோற்று விட்ட எரிச்சலில் அன்பரசன், வெற்றிச் செல்வன் போன்ற ஒரு சில மாணவர்களும், மிகச் சில மாணவிகளும் அங்கே பாண்டியன், மோகன்தாஸ், கண்ணுக்கினியாள் ஆகியவர்களைக் கொண்ட தேசிய மாணவர்களின் பெரும்பான்மை அணிக்கு எதிரிகளாக இருந்தார்கள். எண்ணிக்கையில் அவர்கள் குறைந்து போயிருந்தாலும் போலீஸ் பாதுகாப்பு அவர்களுக்கு எப்போதும் கிடைக்க அவர்கள் என்ன கலவரம் செய்தாலும் போலீஸார் அவர்களை நெருங்காதபடியும், அவர்கள் சுட்டிக் காட்டுகிறவர்களை உடனே எதுவும் செய்யும்படியும் ஆளும் கட்சி அவர்களுக்கு வசதி செய்து கொடுத்திருந்தது. பட்டமளிப்பு விழா நெருங்க நெருங்கத் தேசிய மாணவர்களுக்கு எதிரான இவர்கள் ஒடுங்கினாற் போலவும், ஒதுங்கினாற் போலவும் இருந்தாலும், போலீஸுக்கும், பல்கலைக் கழக நிர்வாகத்துக்கும், ஆளும் கட்சிக்கும் உளவாளிகளைப் போல் இரகசியமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். சட்டத்தை மீறிக் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலில் வேறு இராவணசாமியும், கோட்டம் குருசாமியும் ஈடுபட்டிருந்தார்கள். "எங்க கட்சிக்கு மது விலக்கிலே நம்பிக்கை கிடையாது! எங்க சர்க்கார் சீக்கிரமா அதை எடுத்துப்பிட்டுக் கள்ளுக்கடை, சாராயக் கடைகளைத் திறந்தாலும் திறந்திடுவாங்க. அதுக்குள்ளே இதிலே நாங்க பணம் பண்ணியாகணும். ஆனா அதுக்குப் பிறகும் அந்தக் கடைக்காரனை விட அஞ்சு பைசா மலிவுன்னு நாங்க சொல்லிட்டா எங்க சரக்குத்தான் நிறைய விற்கும்... எங்களை யாரும் அசைக்க முடியாது" என்று இராவணசாமியே அடிக்கடி மார் தட்டிப் பேசிக் கொள்வது உண்டு. தம் சார்புள்ள மாணவர்களில் பலரைக் குடிக்கவும் பழக்கியிருந்தார் அவர்.

     "நான் உள்ளே தண்ணியை ஊத்திக் கையிலே தடியைக் கொடுத்துப் பத்துப் பேரை அனுப்பிச்சா உன் ஆளுங்க ஆயிரம் பேர் கூட எதிரே நிற்க முடியாது தெரியுமா?" என்று முன்பு ஒரு சமயம் மணவாளனை எதிர்த்துச் சவால் விட்டிருந்தார் இராவணசாமி. இப்போது பாண்டியன் இருப்பது போல் அப்போது மணவாளன் மாணவர்களின் அணியைப் பொறுப்பேற்று நடத்துகிறவராக இருந்தார். அதே போன்ற காரியங்களை இப்போதும் இராவணசாமி செய்யக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையைப் பாண்டியனிடமும் மற்ற மாணவர்களிடமும் செய்திருந்தார் மணவாளன். எதற்கும் மாணவர்கள் விழிப்பாகவே இருந்தனர்.

     பட்டமளிப்பு விழாவுக்கு முந்திய நாள் மாலை தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியன் கட்டிட மாடியில் மாணவர்கள் கூடிப் பேசினார்கள். கூட்டம் இரகசியமாகவே நடந்தது. இராவணசாமி கட்சியினரைத் தவிர மற்ற எல்லாப் பிரிவு மாணவர்களும் அங்கே வந்திருந்தார்கள். ஆளும் கட்சியின் குமாஸ்தாவைப் போல் செயல்படும் துணைவேந்தர் மேலும், பல்கலைக் கழக நிர்வாகத்தின் மீதும் மாணவர்கள் கடுங்கோபத்தோடு இருந்தார்கள். போதாக் குறைக்குப் பேராசிரியர் ஸ்ரீராமன் தாக்கப்பட்டது தொடர்பாகவும் வேறு சில போராட்டங்கள் தொடர்பாகவும் நடந்த நீதி விசாரணையில் பேராசிரியருக்கும் மாணவர்களுக்கும் பாதகமாகவும், அரசாங்கத்துக்குச் சாதகமாகவும் கூறப்பட்ட தீர்ப்பு வேறு அன்றைய காலைத் தினசரிகளில் வெளியாகி மாணவர்களின் கொதிப்பை இன்னும் அதிகமாக்கியிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு திருமாநல்லூர் என்கிற கிராமத்தில் பத்துப் பன்னிரண்டு விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும், வேறு இடங்களில் சில மாணவர்கள் போலீஸ் அடக்கு முறைக்குப் பலியானதற்கும் காரணமான அமைச்சர் கரியமாணிக்கத்தை அவருக்கு டாக்டர் பட்டமளிக்கும் போது கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்கள் மாணவர்கள். அதில் யாருக்கும் இரண்டாவது அபிப்பிராயமே இல்லை.

     "இதில் நாம் பலாத்காரத்தைக் கடைப்பிடித்து அவர்களும் பலாத்காரத்தைக் கடைப்பிடித்தால் அப்புறம் அவர்களிலிருந்து நம்மைத் தனியே உயர்த்திக் கொள்ளவோ, பெருமைப்பட்டுக் கொள்ளவோ எதுவுமில்லை. நமது எதிர்ப்பு அமைதியாக இருக்கவேண்டும். பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா மண்டப முகப்பிலோ, நிர்வாகக் கட்டிடமாகிய பூபதி ஹால் முகப்பிலோ வழியில் குறுக்கே படுத்துக் கூட நாம் மறியல் செய்யலாம். யுனிவர்ஸிடி காம்பஸுக்குள் அவர்கள் போலீஸைக் கொண்டு வரமாட்டார்கள் என்றும் நினைக்கிறேன்" என்று மணவாளன் கூறிய போது பல மாணவர்கள், "அதெல்லாம் பழைய காலம்! இப்போதெல்லாம் வி.சி.க்குப் பதில் போலீஸார் தான் யுனிவர்ஸிடியையே நடத்துகிறார்கள். மேரிதங்கம் தற்கொலையின் போது ஒரு வார காலம் வரை காம்பஸுக்குள் போலீஸ்தானே குடியிருந்தது?" என்று பதிலுக்கு வினவினார்கள்.

     "அண்ணன் நினைப்பது போல் இவர்களுக்குச் சத்தியாக்கிரஹம் எல்லாம் புரியாது! சத்தியாக்கிரஹத்தைக் கௌரவிக்கத் தெரியாத முரடர்களுக்கு முன்னால் சத்தியாக்கிரஹம் நடத்திக் கூடப் பயனில்லை" என்றான் பாண்டியன். பாண்டியனே அப்படிக் கூறியது மணவாளனுக்கு வியப்பு அளித்தது.

     "நான் இன்னும் சத்தியாக்கிரஹிதான்! துன்பங்களைத் தாங்கிக் கொண்டு எதிர்பபவனின் மன வலிமை, எதிரிகளைத் தாக்கிவிட்டு எதிர்ப்பவனுக்கு இருக்க முடியாது. என்னால் ஒரு சிலம்பக் கழியைச் சுற்றி நூறு பேரை தாக்கி விட முடியும் தம்பீ! ஆனால் அதை நான் தவறான முறையில் செய்ய மாட்டேன்" என்றார் அண்ணாச்சி.

     "அண்ணாச்சியை நாங்க மதிக்கிறோம். ஆனால் தாங்கிக் கொள்ள முடிந்த எல்லையை மீறி நமக்குத் துன்பங்கள் வந்து விட்டன. இனிமேல் தாங்க முடியாது. பொறுமைக்கும் எல்லை உண்டு. இங்கே 'காஸ்ட்ரோக்'கள் தோன்ற வேண்டும். புரட்சியைத் தவிர வேறு வழியே இல்லை. காலம் மாறிவிட்டது. மோசமானவர்களை எதிர்த்துக் கௌரவமான முறையில் போராட முடியாது. தீவிரம் தேவை" என்றார் லெனின் தங்கத்துரை என்ற இடதுசாரி மாணவர்.

     "கதிரேசன் தொடங்கியதுதான் சரியான தொடக்கம். நீங்களெல்லாம் அப்போது அதை ஆதரிக்கத் தவறிவிட்டு இப்போது கதறுகிறீர்கள்" என்றார் மேலும் தீவிரமான ஒரு மாணவர். லெனின் தங்கத்துரை பிரிவில் ஒரு குழுவும், இரகசியமாக கதிரேசனை ஆதரிக்கும் மற்றொரு குழுவும் இருப்பதைப் பாண்டியன், மணவாளன் எல்லாருமே அறிந்திருந்தார்கள். இந்த எல்லாப் பிரிவினருமே அண்ணாச்சியை மதித்தனர். அவர் ஒரு தூய காந்தீயவாதி என்பதைப் புரிந்து கொண்டிருந்தார்கள். லெனின் தங்கதுரை பாண்டியனை எத்தனையோ முறை 'ரீயாக்ஷனரி' என்றும் 'பூர்ஷ்வா' என்றும் திட்டியிருக்கிறார். ஆனால் அதே தங்கதுரை அண்ணாச்சியிடம் அடங்கிவிடுவார். பேதா பேதம் பாராமல் எல்லா நல்ல மாணவர்களுக்கும் அண்ணாச்சி செய்திருக்கும் உதவிகள் தொண்டுகள் அனைத்தும் அவரை எல்லாப் பிரிவு மாணவர்களும் மதிக்கச் செய்திருந்தன. தொழுகிற அளவு உயர்த்தியிருந்தன.

     "மாணவிகளில் சரி பாதிக்கு மேல் பயந்து கொண்டு பட்டமளிப்பு விழாப் போராட்டங்களுக்கு வரத் தயங்குகிறார்கள். 'சஸ்பெண்ட்' ஆகிவிடுவோமோ என்று கூடப் பயப்படுகிறார்கள் என்றாலும் என்னால் முடிந்தவரை நிறையப் பேர்களை சேர்த்திருக்கிறேன். அண்ணாச்சி சொல்வதுபோல் அமைதியான எதிர்ப்பு என்றால் தான் மாணவிகள் வருவார்கள். வன்முறை என்றால் ஒதுங்கி விடுவார்கள்" என்றாள் கண்ணுக்கினியாள். எதிர்ப்பது எப்படி என்பதில் சாத்வீகம், தீவிரம், அதிதீவிரம், என்றெல்லாம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தகுதியற்றதும், முறையற்றதுமாகிய அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி எல்லோருக்கும் இருந்தது. நீண்ட நேரத் தர்க்க விவாதங்களுக்குப் பிறகு அவர்கள் ஒரு பொது முடிவுக்கு வந்து சேர்ந்தார்கள். நாட்டுக்கும் குறிப்பாக மாணவ சமூகத்துக்கும் பல கெடுதல்களைச் செய்துவிட்டவரும் எதற்கோ லஞ்சமாக யாரோ திட்டமிட்டுக் கொடுக்கும் டாக்டர் பட்டத்தைப் பெற வருகிறவருமான அமைச்சர் கரியமாணிக்கத்துக்கும் தங்களுடைய கடும் எதிர்ப்பைப் புலப்படுத்துவது என்ற ஓர் அடிப்படையில் எல்லாப் பிரிவு மாணவர்களும் இணங்கி வந்தார்கள். இரவு எட்டு மணிக்கு அவர்கள் கூட்டம் கலைந்தது. மாணவர்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களும் வெளியூர் மாணவர்களும் நகர எல்லையிலேயே அமைச்சருக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர். கூட்டம் முடிந்த பின், அண்ணாச்சி, மணவாளன், பாண்டியன், கண்ணுக்கினியாள், மோகன்தாஸ், பொன்னையா ஆகிய ஆறு பேரும் யூனியன் கட்டிட மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அண்ணாச்சி, "தம்பீ? இப்பிடியே எல்லாருமாகக் கோயிலுக்குப் போயிட்டு வரலாம். ஒரு நல்ல காரியத்தைச் செய்யப் பேசி முடிச்சிருக்கோம். சாமிக்கு வேண்டிக்கிட்டுப் போகலாம்" என்றார். மற்ற எல்லாரும் உடனே மோகன்தாஸ் முகத்தைப் பார்த்தார்கள். அவன் அவசரமாகப் பல்கலைக் கழகத்துக்குப் போய்ச் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருந்தது. என்றாலும் அண்ணாச்சி சொல்லைத் தட்ட முடியாமல் அவனும் இணங்கினான். அந்தத் தெருக் கோடியில் ஒரு சிறு குன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் புதிதாகக் கட்டப்பட்டிருந்த முருகன் கோயிலுக்குப் போவதற்காகப் பேசிக் கொண்டே நடந்தார்கள் அவர்கள். அப்போது பாண்டியன் அண்ணாச்சியிடம் சொன்னான்: "பொழில் வளவனாரும், பண்புச் செழியனாரும் வகுப்புகளிலேயே விபூதி குங்குமம் வச்சிக்கிட்டு வர்ற பையன்களைக் கேலி பண்றாங்க. கோயிலுக்குப் போறதைக் கிண்டல் செய்யிறாங்க..."

     "பழைய சின்னங்களைக் கேலி பண்றவங்க எல்லாம் தாங்களே புதிய புதிய சின்னங்களை இப்போ அணியிறாங்களே, தம்பீ! கட்சிக் கொடியிலே கரை போட்ட மேல் துண்டு, கட்சித் தலைவரோட படம் பதித்த மோதிரம், பேட்ஜ்னு அணியிறதெல்லாம் எதிலே சேரும்?" என்று அண்ணாச்சி கோபமாகப் பதிலுக்கு வினவியதும் மணவாளன், "அண்ணாச்சி! இங்கே இன்னிக்கு நம்ம நாட்டிலே உள்ள குறையே அது தான்! காந்தியும், திலகரும் சுதந்திரப் போராட்டத்திலே இறங்கின காலத்திலே இருந்த தேசபக்தி 'ஸ்பிரிச்சுவல் நேஷனலிஸம்'. இப்ப இருக்கிற தேச பக்தியோ வெறும் 'மெட்டீரியலிஸ்டிக் நேஷனலிஸம்' தான். இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி எல்லாருமே கோயிலுக்குள்ளே போக முடியாம இருக்கேன்னு குமுறி எல்லாரும் போய்க் கும்பிட உரிமை கோரி ஆலயப் பிரவேசம் வேண்டினோம். இப்போது என்னடான்னா யாருமே கோயிலுக்குப் போகாதீங்கன்னு சிலர் போராடறாங்க. நாட்டின் கலாசாரங்களை அழிய விட்டு விட்டு வெறும் மண்ணை நேசிப்பது மட்டுமே தேசபக்தின்னு தவறாப் புரிஞ்சிக் கிட்டிருக்காங்க... தேசம் என்பது வெறும் மண்ணல்ல, மண்ணும் அதன் கலாசாரங்களும் சேர்ந்தது தான் தேசம்... மண் மட்டுமே தேசம் என்றால் பாலை வனம் கூடத் தேசமாகி விட முடியும்" என்றார் மணவாளன்.

     "நல்லாச் சொல்றீங்க தம்பீ! எங்க நாளிலே தேச பக்தியும் தெய்வ பக்தியும் உள்ளங்கையும் புறங்கையும் மாதிரி பிரிக்க முடியாம இருந்திச்சு. ஒரு கையிலே தெய்வ பக்தியும், மறு கையிலே 'வெள்ளையனே வெளியேறு' என்ற கோரிக்கையுமாக நின்னாங்க... இப்ப இருக்கிற அரசியல்லேயும், பொது வாழ்விலேயும் அந்தரங்க சுத்தி இல்லாமற் போனதுக்குக் காரணமே இந்தத் தலை முறை அரசியல்வாதிகளிடம் இந்தியாவின் அடிப்படையான ஆன்மீகக் குணங்கள் ஒரு சிறிதும் இல்லாததுதான்னு எனக்குத் தோணுது" என்று கண்களில் ஒளி மின்ன மீசை துடிதுடிக்கப் பதில் சொன்னார் அண்ணாச்சி.

     "ஏசுநாதரின் சகிப்புத் தன்மையும், கண்ணனின் கீதைத் தத்துவமும் அல்லாவின் அருளுரைகளும் அடங்கிய ஆன்மீகத் தன்மையோடு கூடி வருங்காலச் சுதந்திர இந்தியா இருக்கணும்னு நெனைச்சார் காந்தி. எல்லா ஜனங்களுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க வேணும்னு கனவு கண்டார் நேரு. இன்னும் அவை இங்கே கனவுகளாகத்தான் இருக்கு" என்றாள் கண்ணுக்கினியாள்.

     "பூதலிங்கம் சார் கூட ஒவ்வொரு பொருளாதார லெக்சரப்பவும் நேருஜியைப் பத்தி நீங்க இப்ப சொல்லற இந்தக் கருத்தைத் தவறாமல் சொல்லுவாரு" என்றான் பொன்னையா. அவர்கள் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்த போது அர்ச்சகர் முருகனுக்குக் கற்பூரம் காட்டிக் கொண்டிருந்தார்.

     எல்லாருக்கும் திருநீரு கொடுத்த பின் உள்ளே அதிகமாக இருந்த மாலைகளில் நாலைந்தை எடுத்து வந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாலை போட்டு வாழ்த்தினார் அந்த அர்ச்சகர். அவர்கள் மாலைகளைக் கழற்றும் போது தற்செயலாக அருகருகே நின்று கொண்டிருந்த பாண்டியனையும், கண்ணுக்கினியாளையும் மட்டும், "தம்பீ! நீங்க ரெண்டு பேரும் மட்டும் கொஞ்சம் அப்பிடியே நில்லுங்கள்... மாலையைக் கழட்டாதீங்க. உங்களைக் கண்குளிரப் பார்க்கணும் போல் இருக்கு. உங்க கல்யாணம் பாலவநத்தத்திலே நடக்குமோ, மதுரையிலே நடக்குமோ தெரியாது. அப்ப இந்த ஏழைத் தொண்டன் அங்கெல்லாம் வர முடியாட்டியும் இப்பவே கண் நெறையப் பார்த்துக் கிடுதேன்" என்று அண்ணாச்சி பிரியமாகச் சிரித்தபடி அவர்களை வேண்டிக் கொண்டார்.

     "காமிரா இருந்தால் இப்படியே ஒரு 'போட்டோ'க்கூட எடுத்து விடலாம்" என்றார் மணவாளன்.

     "போங்க அண்ணாச்சி! எங்க ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்த்துப்பிட்டால் உங்களுக்கு எப்பப் பார்த்தாலும் இதே கேலிதான்" என்று முகம் சிவக்க வெட்கப் பட்டுக் கொண்டே இங்கிதமான குரலில் அவரைக் கடிந்து கொண்டாள் கண்ணுக்கினியாள்.

     "நான் கேலி செய்யாம வேற யாரும்மா செய்வாங்க? என் கடையிலேதான் இந்த 'யாவாரமே' ஆரம்பமாச்சு?"

     "அண்ணாச்சி சொல்றதை நான் மறுக்கலே..." என்று சொல்லிக் கொண்டே அவளை ஓரக் கண்ணாலே பார்த்தபடி மாலையைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டான் பாண்டியன். அவளும் தன் மாலையைக் கழற்றிக் கொண்டாள்.

     "ஒண்ணும் கவலைப்படாதீங்க!... முருகன் காப்பாத்துவான்!... முருகனும் வள்ளியும் மாதிரி இருக்கப் போறீங்க..." என்று கண்களில் குறும்பு மின்ன அவர்களை வாழ்த்தினார் அண்ணாச்சி.

     "உனக்குக் கிடைத்த யோகம் மணவாளனுக்குக் கூடக் கிடைக்கலே, தம்பீ! அவரு இங்கே படிச்சப்ப இப்படி ஒரு பொருத்தமான ஜோடி அகப்படலே... பாவம்! இங்கே அவரு காதலிச்சதெல்லாம் மாணவர் இயக்கத்தை மட்டும் தான் தம்பீ! என்னைப் போல அவரும் ஒரு அப்பாவி!"

     "உங்க ரெண்டு பேரையும் போல அப்பாவிகள் இந்த நாட்டுக்கு இன்றைய நிலையில் இன்னும் எவ்வளவோ பேர் தேவை! எங்களைப் போன்றவர்கள் வீதிக்கு வீதி கல்லூரிக்குக் கல்லூரி வகுப்புக்கு வகுப்பு யாராவது இருப்பார்கள். ஆனால் ரெண்டு பேரையும் போல் ஊருக்கு ஒருத்தராவது வேணும் அண்ணாச்சி!..."

     "தம்பீ! ஏதேது... ஒரேயடியாய்ப் புகழ்ந்து தள்ளிடாதே... நான் ஒரு அசடன். புகழ்கிறவர்களுக்கு முன்னாடி நிற்கவே கால் கூசும் எனக்கு... வேறே ஏதாவது பேசு..."

     அன்றிரவு ஒன்பதரை மணிக்குள்ளேயே எல்லா மாணவ மாணவிகளும் விடுதிக்குத் திரும்பி வந்து விட வேண்டும் என்று பல்கலைக் கழகப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். மறுநாள் காலை பட்டமளிப்பு விழா ஆகையினால் மாணவர்கள் வெளியே தங்கி ஏதாவது கூடிப் பேசித் திட்டமிடக் கூடாதே என்ற எண்ணத்தில் தான் துணைவேந்தர் இந்த ஏற்பாட்டைக் கண்டிப்பாகச் செய்திருந்தார். ஒன்பதே முக்கால் மணிக்கு ஒவ்வொரு விடுதி வார்டனும் அறை அறையாகப் போய் அட்டெண்டன்ஸ் பார்த்து அறையில் இல்லாத மாணவர்களின் பட்டியலைத் தமக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கடுமையாகக் கட்டளை இட்டிருந்தார். மாணவர்கள் தம்மிடம் கூறியிருந்தபடி அமைதியாக இருக்கமாட்டார்களோ என்று திடீரென்று அவருக்கே ஒரு சந்தேகம் முதல் நாளிரவு வந்திருந்தது. ஆர்.டி.ஓ. மூலம் கிடைத்த சி.ஐ.டி. ரிப்போர்ட் வேறு சரியாக இல்லை. மேலேயிருந்து அமைச்சரோட பி.ஏ. வேறு, "கவனித்துச் செயல் புரியுங்கள்" என்று ஃபோன் மூலம் எச்சரித்த வண்ணமாய் இருந்தார். சிண்டிகேட் உறுப்பினர் ஆனந்தவேலு தந்திரமாகத் துணைவேந்தருக்கு ஒரு யோசனை சொல்லியிருந்தார். புதிதாக அப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருந்த போஸ்ட் கிராஜுவேட் ஹாஸ்டல் 'நியூ பிளாக்'கின் மூன்று மாடிக் கட்டிடத்தில் மொத்தம் நூற்றைம்பது அறைகள் இருந்தன. அந்த நூற்றைம்பது அறைகளுமே 'பட்டமளிப்பு விழாவுக்கு வரும் விருந்தினர்கள் தங்க ஒதுக்கப்படுகிறது' என்று ஒரு குறிப்பை யுனிவர்ஸிடி ரிஜிஸ்தரில் எழுதிக் கொண்டு அவைகளில் மல்லை இராவணசாமியும் தானும் தயார் செய்திருந்த கட்சி அடியாட்களைச் சவுக்குக் கட்டை, சோடா புட்டிகள், கற்கள் சகிதம் குடியேற்றி வைக்குமாறு ஆனந்த வேலு கூறிய யோசனையைத் துணைவேந்தர் ஏற்றுக் கொண்டு விட்டார். இரவு பதினொரு மணிக்கு மேல் இந்த அடியாட்களைக் குடியேற்றும் காரியம் பரம ரகசியமாக நடந்தது. குடித்துவிட்டு வெளியேறிய கட்சி ஆட்கள் 'புது பிளாக்' கட்டடத்தில் குடியேறுவதை முதலில் பார்த்த லெனின் தங்கத்துரை உடனே பாண்டியனின் அறைக்குத் தேடி வந்து இதைச் சொன்ன போது பாண்டியன் அதிர்ச்சி அடைந்தான். பூபதி ஹாலைச் சுற்றியும், வேறு இடங்களிலும் போலீஸ் வேறு நிரப்பப்பட்டிருப்பதாகத் தகவல் தெரிந்தது. தகவலைத் தெரிவித்துவிட்டு, "நாம் என்ன செய்யலாம்?" என்று லெனின் தங்கதுரை கேட்டார். "கொஞ்சம் பொறுங்கள் பிரதர்! நாம் யாரும் இப்போது வெளியே போய்த் திரும்ப முடியாது. ஹாஸ்டல் 'வாட்டர் பாய்' ஒருவன் இங்கே கீழே, 'செர்வண்ட்ஸ் ரூமி'ல் தூங்கிக் கொண்டிருப்பான். அவனை எழுப்பி மெல்லத் தகவலைச் சொல்லி அண்ணாச்சி கடைக்கு அனுப்புவோம். மணவாளன் அண்ணன் அங்கேதான் அண்ணாச்சி கடையிலே இருப்பாரு. இதைப் பற்றி அவரு அபிப்பிராயத்தைத் தெரிஞ்சுக்கிட்டு மேலே யோசிப்போம்..." என்று சொல்லி விட்டுப் பாண்டியன் கீழே போய் அந்தப் பையனை எழுப்பி ஒரு சிறு தாளில் லெனின் தங்கத்துரை கூறிய விவரத்தை எழுதிக் கொடுத்து அவனை அண்ணாச்சிக் கடைக்கு அனுப்பி வைத்தான். பையன் திரும்பி வருவதை எதிர்பார்த்து அறையில் காத்திருந்த போது உடனிருந்த மற்ற மாணவர்களுக்கும், லெனின் தங்கத்துரைக்கும் பாண்டியனுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. "மயிலே மயிலேன்னா இவங்க இறகு போட மாட்டாங்க பாண்டியன்! நாம அமைதியா எதிர்த்தாலும் அவங்க போலீஸையும் குண்டர்களையும் விட்டு நம்மையெல்லாம் உதைச்சு அவமானப்படுத்தப் போறாங்க... நாமும் இப்பவே அவங்களைப் பதிலுக்கு அவமானப் படுத்தத் தயாராக வேண்டியதுதான்... இதோ பாரு? கீழே ஹாஸ்டல் மெஸ் கிச்சனுக்குப் பக்கத்திலே அடுப்பெரிக்க ஸ்டாக் பண்ணியிருக்கிற சவுக்குக் கட்டை மலை மலையாகக் குவிஞ்சிருக்கு. நாமும் அறைக்கு அறை இப்பவே நாலு கட்டைகளை எடுத்துத் தயாராக ஒளித்து வைச்சுக்க வேண்டியது தான். இல்லாட்டி நாளைக்கி நம்மைச் சட்டினியாக்கி விடுவாங்க" என்றார் தங்கத்துரை. பாண்டியன் தயங்கினான்.

     "மாணவர்களுக்காக நாம் நடத்தற போராட்டத்திலே பத்து மாணவர்கள் அடிபட்டு இரத்தம் சிந்தற மாதிரி நாமே தூண்டி விடப்பிடாது! கூடியவரை அமைதியாகப் போறதுதான் நல்லது. இன்டிஸிப்ளினா இருக்கிற ஒரு சர்க்காரை எதிர்க்க நமக்கு வேண்டிய தார்மீக பலம் நாமாவது டிஸிப்பிளினா இருந்து போராட்டம் நடத்தறோம்கிறதுதான். அது மிக மிக முக்கியம்" என்று பாண்டியன் கூறியதைக் கேட்டு தங்கத்துரை முகத்தைச் சுளித்தார்.

     "நீ அமைதியா இருந்தாலும் அவங்க உதைக்கத்தானே போறாங்கன்னு இவர் சொல்றதிலே இருக்கிற பாயிண்டைக் கவனி பாண்டியன்?" என்று அறை நண்பன் பொன்னையாவே தங்கத்துரைக்குப் பரிந்து பேசினான். வேறொரு மாணவனும் அதே கருத்தைச் சொன்னான். தங்களோடு சேர்ந்திருந்தாலும் லெனின் தங்கத்துரை பிரிவினரும், கதிரேசனால் உருவாக்கி விடப்பட்ட ஒரு பிரிவினரும், பல தீவிர எதிர்ப்புக்களுக்குத் தனியே திட்டமிடுவதாகப் பாண்டியன் ரகசியமாகக் கேள்விப்பட்டிருந்தான். என்ன செய்வதென்று பாண்டியன் யோசித்துக் கொண்டிருந்த போது அண்ணாச்சி கடைக்குக் கடிதம் எடுத்துச் சென்ற பையன் திரும்பி வந்தான். பாண்டியன் அனுப்பிய கடிதத்திலே பின் பக்கம் மணவாளன் இரண்டே வாக்கியங்களைச் சுருக்கமான பதிலாக எழுதியிருந்தார்.

     "உணர்ச்சி வசப்பட்டு அவசரமாக எதுவும் செய்ய வேண்டாம். பொறுமையாக இரு. விடியட்டும்." இந்தப் பதிலைத் தங்கத்துரையிடம் பாண்டியன் காண்பித்ததும், அவர் "பொறுமையைக் கொண்டு போய் உடைப்பிலே போடுங்கள்! பொறுமையாக இருந்தால் விடியவே விடியாது" என்று கோபமாகக் கூறிவிட்டுத் தம் நண்பர்களுடன் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247