நிறைவுரை படித்தவர்களும், படிக்கிறவர்களும், படிப்பிக்கிறவர்களும் நிறைந்த ஒரு பல்கலைக் கழகத்தைப் படிக்காத தொண்டன் ஒருவன் அர்த்தமுள்ளதாகச் செய்ததைப் பற்றிய கதை இது. இளைஞர்களைச் சத்திய வெள்ளமாகப் பெருகச் செய்த ஊற்றுக்கண் மல்லிகைப் பந்தலில் அண்ணாச்சியாக இருந்தார். அது வேறோர் ஊரில் வேறொரு பெயரில் இருக்கலாம். ஊரும் பெயரும் வேறுபடலாம். ஆனால் விளைவுகள் தான் முக்கியம். கல்லாதவர்களின் அறியாமையை விடக் கற்றவர்களின் அறியாமைகளே அதிகமாக உள்ள நாடு இது. இல்லாதவர்களின் வறுமைகளும் - ஏன்? இருப்பவர்களின் வறுமைகளுமே இந்நாட்டில் சேர்ந்து தெரிகின்றன. இல்லாதவர்களின் வறுமையை உணரத் தெரிந்த இருப்பவர்களும், இருப்பவர்களின் வறுமைகளை மன்னிக்கத் தெரிந்த சமூகமும் வருகிற வரை இங்கே போராட்டம் தான். இல்லாதவர்களிடம் பொருளால் வறுமை என்றால் இருப்பவர்களிடம் அதை உணர்வதிலும் புரிந்து கொள்வதிலுமே வறுமை இருக்கிறது. இளைஞர்களிடையே அமைதியின்மையும், கொந்தளிப்பும், போராடும் குணமும் இருப்பதற்கான காரணங்கள் முதியவர்களால் உண்டாக்கப்பட்டவை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சந்தர்ப்பவாதமும், அதிகார துஷ்பிரயோகமும் கற்றவர்களின் அறியாமைகளும் உள்ள வரையில் இளைஞர்கள் இங்கே வெள்ளமாகப் பொங்கிப் பெருகிக் கொண்டு தான் இருப்பார்கள். அதைத் தவிர்க்க முடியாது. இந்த நாவல் அப்படி இளைஞர்கள் பெருகுவதையும், பொங்குவதையும் தவிர்க்க முடியாத ஒரு காலப் பின்னணியைக் கொண்ட கதையில் யதார்த்தமாகச் சித்தரிக்கிறது. வருங்காலத்தில் பல சூழ்ச்சிகளெல்லாம் மாறிய பிறகு திரும்பப் படித்துப் பார்த்தாலும் கூட ஒரு காலத்தின் நிலைமைகளைத் துல்லியமாகவும், துணிவாகவும், ஒன்று விடாமல் வரைந்து வைத்த ஓர் ஓவியமாக இது தெரிய முடியும். எதையும் அப்படியே பிரதிபலிக்கும் இரசம் மழுங்காத புதுக் கண்ணாடியைப் போல் எந்தச் சமூகத்திலும் அந்தச் சமூகத்தின் இளைஞர்கள் தான் மீதமிருக்கிறார்கள். அதனால் தான் இந்தக் காலப் பின்னணியைக் காட்டுகிற கருவியாக - ஆடியாக இந்நாவலில் அவர்களே வருகிறார்கள். இதில் வருகிற அண்ணாச்சியும், பாண்டியனும், கண்ணுக்கினியாளும், மணவாளனும், பிச்சைமுத்துவும், கதிரேசனும், துணைவேந்தரும், பேராசிரியர் பூதலிங்கமும், பொழில் வளவனாரும், ஸ்ரீராமனும், இராவணசாமியும், அமைச்சர் கரியமாணிக்கமும் வெறும் கதாபாத்திரங்கள் மட்டுமில்லை. 1966-1971க்கு இடையில் ஏதோ சில ஆண்டுகளை - (அவை எந்த ஆண்டுகளாக இருந்தால் தான் என்ன?) அப்படி அப்படியே சித்தரித்துக் காட்டும் பிரதிநிதிகளாகவே அவர்கள் இந்தக் கதையில் வருகிறார்கள், வந்தார்கள். அண்ணாச்சியைப் போல் விளம்பரத்தையும், புகழையும் விரும்பாமல், பொதுக் காரியங்களுக்காக ஓடாய் உழைத்துத் தேய்ந்து மாயும் தொண்டன் ஒருவன் ஒவ்வோர் இடத்திலும் ஏதாவது ஒரு பெயரில் தெய்வத்தின் காரியங்களைச் செய்தபடி பாமர மனிதனாக நடமாடி கொண்டிருப்பான். அவனைத் தேடி அடையாளம் கண்டு மரியாதை செய்கிற போது தான் சமூகமும் மரியாதைக்கு உரியதாகிறது. சமூகத்தின் மரியாதையை நாம் கணிப்பதற்கு அது யார் யாரை மரியாதை செய்கிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அப்படி மரியாதைகளைத் தெரிந்து கொண்டவர்களுக்கு இந்த நாவலின் அர்த்தங்கள் - உள்ளர்த்தங்கள் எல்லாமே மிகவும் நன்றாகவே புரிந்திருக்கும் என்பது என் நம்பிக்கை.
நா. பார்த்தசாரதி சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|