ஏழாவது அத்தியாயம் கைகலப்பையோ அடிதடி சண்டையையோ, எதிர்பார்த்துத்தான் பாண்டியனை மீட்கச் சென்ற போது லாரியில் சிலம்பக் கழிகள் சிலவற்றையும் தூக்கிப் போட்டிருந்தார் அண்ணாச்சி. அவர் தாமாக வலிய வம்புச் சண்டைக்குப் போக விரும்பாத சுபாவத்தை உடையவர் என்றாலும் பாண்டியனை மீட்க நேருகையில் தம்மை யார் எதிர்த்தாலும் விடத் தயாராயில்லை. நீலமலை ஏலக்காய்த் தோட்டத்துக்குள் தான் பாண்டியனை அவர்கள் கொண்டு போய் வைத்திருக்க வேண்டும் என்பதை அவர் மிக எளிதாகவே அநுமானித்துக் கொள்ள முடிந்திருந்தது. மல்லிகைப் பந்தல் நகரையும், சுற்றுப்புறத்து மலை ஊர்களையும் மனிதர்களையும் பற்றி அண்ணாச்சி தம்முடைய பல ஆண்டுக்கால அநுபவத்தில் நன்றாகக் கணித்து வைத்திருந்தார். மனிதர்களையும் அவர்களுடைய சமூக அரசியல் சார்புகளையும் அண்ணாச்சிக்குத் தெளிவாக அடையாளம் தெரியும். அரசியல் திருப்பங்களால் இப்போது திடீரென்று பல வீடுகள், பல எஸ்டேட்டுகள், பல கார்கள், பஸ் ரூட்டுகள் என்று சேர்த்துப் புதிய திடீர் முதலாளிகள் ஆகியிருந்த சிலரைச் சமீபத்து ஆண்டுகளில் அவர் கண்டிருந்தார். மக்கள் சந்தேகமும், பிரமிப்பும் அடையத்தக்க விதத்தில் திடீரென்று பணக்காரரான ஒருவருடைய எஸ்டேட் தான் அது. அரசாங்க அதிகாரிகள், போலீஸ் ஆகிய எல்லோருமே தமக்குப் பயப்படும்படி ஆக்கி வைத்திருந்தார் இந்தத் திடீர்க் குபேரர். ஆளும் கட்சியைச் சேர்ந்த எல்லாக் காரியங்களுக்கும் இவருடைய பணம், பலம், அடியாட்கள் அனைவரும் பயன்படுத்தப் படுவது வழக்கம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தைந்து அறுபத்தாறாம் ஆண்டுகளில் இதே மனிதர் மல்லிகைப் பந்தல் நகரசபைக்குச் சொந்தமான மீன் மார்க்கெட்டில் ஒரு கசாப்புக் கடை மட்டும் தான் வைத்திருந்தார். அப்போது இவர் பெயர் இராவணசாமி. பெற்றோர் சூட்டிய இராமசாமி என்ற பெயரை ஒரு பெரிய தலைவரின் ஆசியோடு இராவணசாமி என்று மாற்றி வைத்துக் கொண்டார் இவர். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தேழில் இந்த மனிதர் எம்.எல்.ஏ. ஆனார். அதன் விளைவாக இவர் கௌரவமும், உடம்பும் இரண்டு சுற்றுப் பருத்தன. பெயரும் சிறிது மாற்றம் அடைந்தது. 'மல்லிகைப் பந்தல்' என்ற அழகிய பெயரைத் தாமாகவே மல்லை என்று சுருக்கினார் இவர். மல்லை இராவணசாமி எம்.எல்.ஏ. (எக்ஸ் எம்.சி.) என்று இவர் வீட்டு முகப்பில் இரு வர்ணப் பலகை ஒன்று அலங்கரித்தது. இவருக்குத் தெரிந்த விஷய ஞானமுள்ள நண்பர் ஒருவர், "ராவூ! எம்.எல்.ஏ. ஆனப்புறம் முன்னாள் முனிஸிபல் கவுன்ஸிலருன்னு பிராக்கெட்டிலே போடறது அவ்வளவு நல்லா இல்லே. அதெ வுட்டுடு" என்று எடுத்துச் சொல்லிய பின்பே இவர் (எக்ஸ் எம்.சி.) என்ற அந்த எழுத்துக்களை அழித்தார். "புதுவை, உறந்தை என்பது போல் பழைய காலத்திலிருந்தே மருவி வழங்கும் பெயர்களைத் தவிர புதிதாக மல்லிகைப் பந்தலை 'மல்லை' என்று சுருக்குவது அறியாமை என்பதாக உள்ளூர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் இதுபற்றி ஒரு கூட்டத்தில் குறை சொல்லியபோது மறுநாளே பல்கலைக் கழகத் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் பொழில் வளவனார், இராவணசாமியை ஆதரித்தும் 'மல்லை' என்பது சரியே என்றும் ஓர் அறிக்கை விட்டார். அதற்கு அடுத்த வாரமே டாக்டர் பொழில் வளவனாரின் ஐம்பதாவது பிறந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்தார் இராவணசாமி. 'மல்லை இராவணசாமி நடத்தும்' என்கிற பூதாகரமான எழுத்துக்களும், 'பொழில் வளவனாரின் ஐம்பதாவது பிறந்த நாள் விழா' என்ற கடுகு போன்ற எழுத்துக்களுமாக ஒரு பெரிய சுவரொட்டி அடித்து மல்லிகைப் பந்தல் நகரெங்கும் ஒட்டப்பட்டது. பொழில் வளவனாருக்குப் பொன்னாடையும் போர்த்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினராகும் வரை தம்முடைய பிறந்த தினம் எந்த மாதத்தில் எந்த நாளில் வருகிறதென்று கூட ஞாபகம் இல்லாமலிருந்தார் இராவணசாமி. சட்டமன்ற உறுப்பினரானவுடன் வந்த அவருடைய முதல் பிறந்த நாளைக் கட்சிக்காரர்களும், தம்பிமார்களும் நினைவூட்டினார்கள். பிறந்த நாளன்று வட்ட வடிவமான மர மேஜையில் - அந்த மேஜை அகலத்துக்குப் பெரிய கேக் ஒன்றை வைத்து அவரை வெட்டச் சொன்னார்கள் தம்பிமார்கள். கேக் வெட்டும் போது பழைய கசாப்புக் கடை ஞாபகத்தில் ஓங்கி ஒரு வெட்டு வெட்டவே பல பேர் முன்னிலையில் இராவணசாமி மேஜையையே துண்டு துண்டாக்கி விடார். அதைக் கண்டு பலர் பயந்துவிட்டார்கள். சிலருக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது. "அண்ணன் கோபத்திலே வெட்டிப்பிட்டாரு! பரவாயில்லே. இன்னொரு 'கேக்' கொண்டாந்து வை" என்று சொல்லி வேறொரு கேக் வரவழைத்து அதை முழுமையாக அண்ணனை நம்பி வெட்டச் சொல்லாமல் கத்தியை மட்டும் அண்ணன் கையால் தொட்டுக் கொள்ளச் சொல்லித் தாமே மெதுவாகக் கேக்கை அறுத்தார் ஊழியர்களில் ஒருவர். கேக் பிழைத்தது. மேஜையும் சேதம் ஆகாமல் தப்பியது. இராவணசாமியைப் பற்றி இந்தச் சுவாரசியமான விஷயங்களையெல்லாம் அண்ணாச்சி சொல்லிக் கேட்க வேண்டும். மிகவும் இரசமாகவும் உள்ளடங்கிய அர்த்தத்துடனும், நகைச்சுவையுடனும் இராவணசாமியின் லீலா விநோதங்களை விவரிப்பார் அண்ணாச்சி. 'தென்மணி லாரி சர்வீஸ்' என்ற கம்பெனியும், 'ப்ளூஹில் கார்டமம் எஸ்டேட்' என்ற ஏலக்காய்த் தோட்டமும் இந்த மல்லை இராவணசாமியின் புதிதாகச் சேர்ந்திருந்த உடைமைகள் தாம். பாண்டியன், பல்கலைக் கழக விடுதியிலிருந்து கடத்தப்பட்ட பின்னிரவில் பல்கலைக் கழக மேற்கு வாயிலருகே இந்தத் தென்மணி லாரியை அதிகாலை மூன்றே முக்கால் மணிக்குப் பார்த்ததாக ஒருவன் கூறியதையும், மலைக்குப் போகிற வழியிலிருக்கும் செக்போஸ்ட் ஆள் இதே லாரியை நான்கு மணிக்கு அன்பரசன் முதலிய சில பல்கலைக் கழக மாணவர்களோடு பார்த்ததாகக் கூறியதையும் இணைத்து நினைத்து ஊகித்த பின்புதான் அங்கே தேடிப் போயிருந்தார் அண்ணாச்சி. கோட்டச் செயலாளருக்கும், கட்சிச் சார்பு பெற்ற அன்பரசன் முதலிய மாணவர்களுக்கும் மல்லை இராவணசாமி இந்த உதவிகளைச் செய்ய முடியும் என்பதும் அண்ணாச்சிக்குத் தெரியும். அதனால் தான் அந்த மழைக்கோப்பான முன்னிரவில் குறிப்பாக அந்த ஏலக்காய்த் தோட்டத்தைத் தேடிச் சென்றிருந்தார் அவர். உள்ளூற ஒரு நம்பிக்கை இருந்தது அவருக்கு. தாங்கள் சென்ற லாரியைப் பிரதான சாலையில் நிறுத்திவிட்டு முதலில் அவர் மட்டும் மழையோடு மழையாகத் தோட்டத்துக்குள் சென்றபோது அங்கே எந்த விவரமும் தெரியவில்லை. எஸ்டேட் அலுவலகக் கட்டிடங்கள் ஆளரவமின்றி இருந்தன. ஏலக்காய் உலர்த்திக் குவிக்கும் தகர ஷெட்டுகள் இருந்த பகுதிக்குப் போகும் முன் தற்காப்பைக் கருதிக் கீழே லாரியிலிருந்த மற்றவர்களையும் மேலே வரச்சொல்லி 'டார்ச்' மூலம் சமிக்ஞை காண்பித்திருந்தார் அவர். மற்றவர்களும் கூட்டமாக வந்து சேர்ந்த பின் அவர்கள் எல்லாருமாக அங்கே ஒவ்வொரு பகுதியாகச் சுற்றினார்கள். மலை உச்சியில் பின்புறம் பள்ளத்தாக்கில் பேரோசையுடன் ஒரு காட்டாறு ஓடும் இடத்தருகே மேட்டில் அமைந்திருந்த தகரக் கொட்டகை வாசலில் மட்டும் கம்பளிக் கோட் அணிந்து பீடி புகைத்தபடி ஒரு தடித்த ஆள் உட்கார்ந்திருந்தான். அண்ணாச்சி அவன் முகத்தில் டார்ச் ஒளியைப் பாய்ச்சிப் பார்த்துவிட்டு அவன் சந்தேகப்பட்டுக் கூப்பாடு போட்டோ, விஸில் ஊதியோ எஸ்டேட்டின் வேறு பகுதியிலிருந்து ஆட்களைக் கூப்பிட்டு விடாமல் இருக்கட்டும் என்று, "யாரது? மருதமுத்துத் தம்பிதானே?" என்று தமக்குத் தெரிந்த அவன் பெயரையும் சொல்லிக் கூப்பிட்டு வைத்தார். டார்ச் லைட்டுகளோடு கம்பும் கழியுமாக மழை இருளில் பலரைப் பார்த்து மிரளத் தொடங்கியிருந்த அவன் அண்ணாச்சியின் குரலைக் கேட்டதும் அடையாளம் புரிந்து தெம்படைந்தான். "அடடே! அண்ணாச்சீங்களா? ஏது இந்நேரத்துக்கு இந்தப் பக்கம்?" என்று விசாரித்தபடி எழுந்து வந்தான் அந்த எஸ்டேட் வாட்ச்மேன். அண்ணாச்சி மேலும் தொடர்ந்து அவனைக் கனிவாக விசாரித்தார். "எல்லாம் உன்னைப் பார்த்துட்டுப் போகலாம்னு தான் தம்பீ! வீட்டிலே சம்சாரம் நல்ல இருக்கா? வீடு எங்கே?... எஸ்டேட் 'லைன்'லே தானே?" "ஆமாம். அங்ஙனேதான் ஒரு புறாக்கூடு விட்டிருக்காங்க... வாங்க வீட்டுக்குப் போயி ஒரு டீ குடிக்கலாம்." "வேண்டாம் தம்பீ! உங்க புது முதலாளி அரசியல்லே நமக்கு ஆகாதவரு. 'லைன்'லே மத்தவங்க காணறாப்பலே நான் உன் வீட்டுக்கு வந்தா ஒரு வேளை அது உனக்குக் கெடுதலா முடியும்..." "ஒரு கெடுதலுமில்லே... நீங்க சும்மா வாங்க அண்ணாச்சி! 'லைன்'லே இப்போ ஈ காக்கா இருக்காது. எல்லாம் குளுருக்கு அடக்கமாகக் கம்பளீலே பூந்துக்கிட்டு உள்ளே முடங்கியிருக்கும்." அவன் வற்புறுத்தவே உடன் வந்திருந்த மணவாளன் முதலிய மாணவர்களை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு அவனோடு அண்ணாச்சி எஸ்டேட் லைனுக்குப் போனார். போகும்போதே அவனிடம் காதும் காதும் வைத்தாற்போல் தாம் வந்த காரியத்தைச் சொல்லி மெல்ல விசாரிக்கத் தொடங்கிவிட்டார் அவர். "உங்க கூட இருந்த ஸ்டூடன்ஸைப் பார்த்ததுமே நீங்க இதுக்காவத்தான் வந்திருக்கணும்னு புரிஞ்சுக்கிட்டேன். நீங்க தேடி வந்த ஆள் இங்கே தான் இருக்குது... ஆபத்து எதுவுமில்லே. இன்னிக்குக் காலையிலே மட்டும் கொஞ்சம் சித்திரவதை பண்றாப்பலே சிரமப்படுத்தி அந்தப் பையன் கிட்ட ஒரு லெட்டர் எழுதி வாங்கினாங்க. அப்புறம் ஒண்ணுமில்லே. இப்ப நீங்க என்னைப் பார்த்தீங்களே, அந்தத் தகரக் கொட்டகையிலேதான் அடைச்சுப் போட்டிருக்காங்க..." என்று விசுவாசம் காரணமாக எதையும் ஒளிக்காமல் உள்ளபடி அண்ணாச்சியிடம் சொல்லிவிட்டான் மருதமுத்து. பேசிக் கொண்டே எஸ்டேட் லைனில் அவன் வீட்டருகே வந்திருந்தார்கள் அவர்கள். மருதமுத்து சொன்னது போலவே லைனில் பேச்சரவம், ஊரரவம் அடங்கி விட்டிருந்தன. அரிக்கேன் லாந்தர் ஒளியில் கட்டான உடலமைப்புள்ள இளம் பெண் ஒருத்தி அமர்ந்து பச்சை பசும் கதிரில் இருந்து ஏலக்காய் உதிர்த்துக் கொண்டிருந்தாள். "அண்ணாச்சி வந்திருக்காங்க பாரு" என்று கணவன் குரல் கொடுத்ததும் மரியாதையாக எழுந்து, "வாங்கண்ணே!" என்று கைகூப்பினாள் அவள். அண்ணாச்சியும் அவளைக் கனிவாக நலம் விசாரித்தார். பத்து நிமிஷங்களில் சுடச்சுட தேநீர் வந்தது. தேநீரில் ஏலக்காய் வாசனையும் இருக்கவே, "இது என்ன புது மாதிரி டீ?" என்று விசாரித்தார் அண்ணாச்சி. "இது ஒரு புதுப் பக்குவம்!... அதுதான் கண்டுபிடிச்சது... ரொம்ப நல்லா இருக்குமே!" என்றான் மருதமுத்து. "நல்லா இருக்கக் கொண்டுதானே விசாரிக்கிறேன். இல்லாட்டி விசாரிப்பேனா?" என்று அவன் மனைவியைப் பார்த்துப் புகழ் தொனிக்கக் கூறிவிட்டு, "தம்பீ! எனக்கு நேரமாகுது! நீ சீக்கிரமாக என்னை அனுப்பி வைக்கணும். உன்னை நம்பித்தான் தேடி வந்திருக்கேன்" என்று அண்ணாச்சி மருதமுத்துவிடம் காரியத்தைத் துரிதப்படுத்தினார். இருவருமாகப் புறப்பட்டார்கள். வாசல்வரை வந்த மருதமுத்து திரும்பவும் உள்ளே சென்று தன் மனைவியிடம் ஏதோ சொல்லிவிட்டு வந்தான். எஸ்டேட் லைனிலிருந்து திரும்பும் போது "பாண்டியனைத் தன்னோடு அனுப்பிவிட வேண்டும்" என்று அவனிடம் வெளிப்படையாகவே கூறி உதவியை நாடினார் அண்ணாச்சி. "உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன் அண்ணாச்சி! ஆனா நீங்க ஒண்ணு செய்யணும். கதவைத் திறந்து பையனை உங்ககிட்டே ஒப்படைச்சப்புறம் என்னோட கையைக் காலெக் கட்டி என்னைத் தூக்கி அதே தகரக் கொட்டகைக்குள்ளாறப் போட்டுக் கதவை வெளிப்பக்கமா அடைச்சுட்டுப் போயிடுங்க... காலையிலே அவங்க ஆளுக தேடி வந்தா, 'இருட்டிலே யாரோ முகந் தெரியாத ஆளுங்க வந்து என்னை அடிச்சுக் கட்டுப் போட்டப்புறம் பையனைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க'ன்னு நானே ஒரு டிராமா ஆடிக் கொள்ளச் சுலபமாயிருக்கும்" என்றான் மருதமுத்து. ஆனால் என்ன ஆச்சரியம்? இவர்கள் தகரக் கொட்டகை அருகே போவதற்குள்ளேயே மாணவர்கள் 'பாட்லாக்கை' உடைத்துக் கதவைத் திறந்து பாண்டியனை விடுவித்து அவனோடு அண்ணாச்சியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அண்ணாச்சி விரைந்து முன் சென்று பாண்டியனைக் கட்டித் தழுவிக் கொண்டார். "பார்த்தியா தம்பீ! நம்ப புலிக் குட்டிங்க நீ வந்து கதவைத் திறக்கற வரை விடலே. அவங்களே திறந்து விடுவிச்சுட்டாங்க... இப்ப உன்னைக் கட்டிப் போட வேண்டியதுதான் பாக்கி... உள்ளே வா... அதைச் செய்யலாம்..." என்று அண்ணாச்சி மருதமுத்துவைக் கூப்பிட்டார். "இராவணசாமி மேலேயும் உங்க எதிரிங்க மேலேயும் இருக்கிற கோபத்திலே என்னைக் கட்டிப் போடறப்போ ரொம்பப் பலமாக் கட்டிப் போட்டுடாதீங்க அண்ணாச்சி..." "பயப்படாமே வா, தம்பீ! குளிருக்கு அடக்கமாப் பார்த்துக் கட்டிப் போட்டு வைக்கிறேன்." விஷயம் புரியாமல் விழித்த பாண்டியனுக்கும் மற்ற மாணவர்களுக்கும் அண்ணாச்சி செய்ய வேண்டியதை விளக்கினார். மருதமுத்துவை அவனே கொடுத்த கயிறுகளால் கட்டிப் போட்டுவிட்டு, "பெரிய அடிபிடி சண்டையெல்லாம் போட்டுத்தான் நம்ம பையனை விடுவிக்க முடியும்னு கிளுவைக் கம்பெல்லாம் கொண்டாந்தோம். நீ இருந்ததுனாலே காரியம் சுளுவா முடிஞ்சுட்டுது..." என்றார் அண்ணாச்சி. "கிளுவைக் கம்பு கொண்டாந்ததுக்கு வீணாகாமே இருக்கணும்னு நினைச்சா நீங்க என்னையே ரெண்டு போடு போடறதைத் தவிர வேறு வழியில்லே, அண்ணாச்சி..." "சே சே! உன்னையா...? கூடாது. நீ செய்திருக்கிற உபகாரம் பெரிசு தம்பி...!" என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு மற்ற மாணவர்களோடும் பாண்டியனோடும் புறப்பட்டார் அவர். திரும்பும் போது மழை இல்லை. இறக்கத்தில் லாரி ஓரளவு வேகமாகச் செல்ல முடிந்தது. இரவு பத்தரை மணிக்கு லாரி லேக்வியூ ஹோட்டல் முகப்பை அடைந்ததும் எல்லோரும் இறங்கிக் கொண்டு லாரியைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். மணவாளனும் அண்ணாச்சியும் பாண்டியனை அறைக்கு அழைத்துச் சென்றார்கள். மற்ற மாணவர்கள் அது அகாலமானாலும் பரவாயில்லை என்று பேராசிரியர் பூதலிங்கத்தைப் பார்த்து விவரங்களைக் கூறுவதற்குச் சென்றார்கள். லேக்வியூ ஹோட்டலில் ஒன்பதரை மணிக்கே எல்லாம் தீர்ந்து இருந்தது. அண்ணாச்சி எங்கோ வெளியே சென்று சுடச்சுட இட்டிலி வாங்கி வந்தார். சாப்பிட்டு முடிந்ததும் நடந்ததையெல்லாம் விவரமாக அவர்களுக்குச் சொன்னான் பாண்டியன். "நிர்ப்பந்தம் பொறுக்க முடியாமல் தான் என் அபேட்சை மனுவைத் திரும்பப் பெறுவது போல் நான் கடிதத்தை எழுதினேன். அபேட்சை மனுவில் கையெழுத்துப் போட்டிருந்தது போல் போடாமல் விலகல் மனுவில் ஓர் எழுத்து வித்தியாசமாகக் கையெழுத்துப் போட்டால் கூட விலகல் மனு செல்லாது என்பது எனக்குத் தெரியும். அந்த நம்பிக்கையில் தான் துணிந்து விலகல் மனுவை அனுப்பி வைத்தேன். இல்லையானால் இராவணசாமியின் ஆட்கள் என் எலும்பை நொறுக்கியிருப்பார்கள்..." "இதோடு எதுவும் முடிந்துவிடவில்லை பாண்டியன்! எலும்பை நொறுக்குவது இனியும் நேரலாம். அவர்கள் உன்னை ஏமாற்றுவதாக நினைத்துக் கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். அவர்களோடு போய் அவர்களிடமே சிக்கியிருந்தும் தந்திரமாக அவர்களையே ஏமாற்றிவிட்டு வந்திருக்கிறாய். நாளைக் காலையில் முடிவான வேட்பாளர் பட்டியலிலே உன் பெயரையும் பார்த்துத் திருடனுக்குத் தேள் கொட்டியது போல் விழிக்கப் போகிறார்கள் அவர்கள். அப்புறம் தான் உன் மேல் அவர்கள் கோபம் இரண்டு மடங்காகும்" என்றார் மணவாளன். அண்ணாச்சியும் அவனை எச்சரித்து ஒரு யோசனை சொன்னார். "தம்பீ தேர்தல் நல்லபடி முடிஞ்சு ஜெயிக்கிறவரை நீங்க மணவாளன் அண்ணனோடு இங்கே இந்த ஹோட்டல் 'ரூமி'லேயே தங்கறதுதான் பாதுகாப்பு." "பாதுகாப்பாக இருக்கலாம்! ஆனால் என் எதிரிகள் நான் பயத்தினால் யூனிவர்ஸிடி எல்லையிலிருந்து ஹாஸ்டலை விட்டே ஓடிப்போய் வெளியே ஒளிந்து கொண்டே ஜெயிக்கப் பார்க்கிறேன் என்று இதையே குதர்க்கமாக வியாக்கியானம் செய்வார்கள். நான் நாளைக்கு விடிந்ததும் ஹாஸ்டலுக்குப் போய்விடுவதுதான் நல்லது. ஹாஸ்டலில் இருப்பதுதான் பாதுகாப்பு கூட" என்றான் பாண்டியன். மணவாளனும் இதையே ஆதரித்தார். "இதில் அவன் சொல்வதுதான் சரி அண்ணாச்சி. அவன் ஹாஸ்டலிலேயே இருக்கட்டும்! பக்கத்து அறைகளிலும் மற்ற மாணவர்களிடமும் சொல்லி எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க ஏற்பாடு செய்து கொள்ளலாம்." மறுநாள் காலை வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் நோட்டீஸ் போர்டில் ஒட்டப் பட்டபின் பாண்டியன் விடுதி அறைக்குப் போவது என்று முடிவாயிற்று. "நிர்ப்பந்தமாக விலகல் கடிதம் எழுதி வாங்கி உறையில் முகவரி முதற்கொண்டு என் கையாலேயே எழுதுவித்து அதைக் கொண்டு போய்க் காலை எட்டு மணிக்குள் மல்லிகைப்பந்தல் தபால் நிலையத்திலேயே சேர்த்தார்கள் என்று சொன்னேன் இல்லையா? அதற்கு முன்னால் வேறொரு முயற்சியும் செய்தார்கள். எனக்கு இரண்டாயிரம் ரூபாய் பணம் தருவதாகவும், வெற்றி பெற்ற பின் நான் அவர்கள் கட்சியில் சேர்ந்துவிட்டதாக ஓர் அறிக்கை எழுதித் தந்தால் போதும் என்றும் கெஞ்சினார்கள். எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அதை என்னிடம் கேட்கும் போது இராவணசாமி, கோட்டச் செயலாளர் எல்லாருமே இருந்தார்கள். சுற்றிலும் சைக்கிள் செயின், பழைய இரும்புக் குழாய், கடப்பாரை என்று கிடைத்ததைக் கையில் வைத்துக் கொண்டு அவர்கள் ஆட்களும் நின்று கொண்டிருந்தார்கள். "நீங்கள் பிறந்த நாள் விழாக் கொண்டாடிப் பொன்னாடை போர்த்திப் பொழில் வளவனாரை விலைக்கு வாங்கி விடலாம். அதற்கும் மேல், வி.சி.யைக் கூட வாங்கிவிடலாம். ஆனால் என் போன்ற தேசபக்த இளைஞர்களை விலைக்கு வாங்கவோ, விலை பேசவோ முடியாது. தேவைக்குத்தான் ஆசை, விலை எல்லாம் உண்டு. தேவையின்மைக்கு ஆசை, விலை எதுவுமே கிடையாது. கொன்றாலும் இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்றேன்" என்று அங்கு நடந்தவற்றையெல்லாம் சொன்னான் பாண்டியன். "நீ ஏன் அப்படிச் செய்தாய் பாண்டியன்? பணத்தை வாங்கிக் கொள்வது போல் அப்போதைக்கு நடித்துத் தப்பி வந்ததும் ஊரறிய அவர்கள் கூட்டை உடைத்திருக்கலாமே?" என்று கேட்டார் மணவாளன். "இது மாதிரி விஷயங்களில் எல்லாம் என்னால் நடிக்கக்கூட முடியாது. நல்லவேளையாக அந்த ஆட்களே, 'பணம் வாங்கிக் கொண்டு வென்றதும் எங்கள் பக்கம் வர உனக்குச் சம்மதம் இல்லை என்றால் இப்போதே உன் அபேட்சை மனுவைத் திரும்பப் பெற்று விலகிக் கொள்வதாக எழுதிக் கொடுத்துவிடு' என்று இன்னொரு வழியையும் சொல்லி மிரட்டினார்கள். அந்த வழியில் நானும் என் அபேட்சை மனுவும் சேர்ந்தே தப்புவதற்கு இடமிருந்ததனால் அதற்கு ஒப்புக் கொள்வதுபோல் ஒப்புக் கொண்டு அவர்களை ஏமாற்ற முடிந்தது." அன்று அந்தப் பரபரப்பான இரவில் லேக்வியூ ஹோட்டலின் அறையில் அமர்ந்து அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது முற்றிலும் எதிர்பாராத விதமாக மோகன்தாஸ், பொன்னையா முதலிய மாணவர்கள் பின் தொடரப் பேராசிரியர் பூதலிங்கமே அங்கு வந்து சேர்ந்தார். "பிரதம தேர்தல் அதிகாரி என்ற முறையில் இப்போது நான் இங்கே வரவில்லை பாண்டியன்! உன் மேல் அன்பும் அநுதாபமும் கொண்ட ஆசிரியன் என்ற முறையில்தான் வந்திருக்கிறேன். பயப்படாதே! இவ்வாறான செயல்களின் மூலம் உன் புகழையும், பெருமையையும் அவர்கள் அதிகமாக்குகிறார்கள். எதிரிகள் உன்னை ஒடுக்க ஒடுக்க நீ மாணவர்களிடையே தலைவனாக்கப்படுகிறாய்." "இந்த வேளையில் நீங்கள் எதற்கு இவ்வளவு சிரமம் எடுத்துக் கொண்டு இங்கே வந்தீர்கள்? சொல்லி அனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேன்?" என்று எழுந்து நின்று அவரை வரவேற்றான் பாண்டியன். அருகே வந்து பாண்டியனின் முதுகில் அன்போடு தட்டிக் கொடுத்தார் பேராசிரியர். மணவாளனையும், அண்ணாச்சியையும் கூட அன்போடு விசாரித்தார் அவர். "நாட்டில் அரசியல் நிலைகளும், போக்குகளும் பல்கலைக் கழகத் தேர்தலிலும் மாணவர்களிடமும் பிரதிபலிக்கின்றன. அது தவறில்லை. ஆனால் எங்கும், எப்போதும் தாங்களே முன் நின்று அதிகாரம் செய்ய வேண்டும் என்று இராவணசாமியும் அவர் வகை ஆட்களும் ஏன் இப்படி அதிகார வெறி பிடித்து அலைகிறார்கள் என்பது தான் எனக்குப் புரியவில்லை. ஜனநாயகத்தில் மக்களுக்குத் தொண்டு செய்பவர்களுக்குத் தான் இடம் உண்டு. மக்களை அதிகாரம் செய்பவர்களுக்கு இடமில்லை. இவர்களுடைய அதிகார வெறியோ எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. இவர்களிடம் சிலர் தாட்சண்யம் காரணமாகப் பயப்படுகிறார்கள். வேறு சிலர் பயம் காரணமாக தாட்சண்யப்படுகிறார்கள். இன்று மாலை பேராசிரியர் பொழில் வளவனாரும், மல்லை இராவணசாமியும், கோட்டச் செயலாளரும் என் வீட்டுக்குத் தேடி வந்தார்கள். அவர்கள் என் வீட்டுக்குத் தேடி வந்ததே எனக்குப் பிடிக்கவில்லை. தமிழ்த் துறை தலைவர் பொழில் வளவனார் வேறு அவர்களோடு சேர்ந்து வந்திருந்தார். அவர் வந்த விதமும் பேசிய விதமும் வெறுப்பூட்டுவதாயிருந்தது. சிரமப்பட்டுப் பொறுத்துக் கொண்டேன். 'நம்ம பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தல் தொடர்பாக இவங்க உங்ககிட்டே ஏதோ பேசணுமாம். உங்களை அறிமுகப்படுத்தச் சொல்லி என்னைக் கூப்பிட்டாங்க. அதுதான் இப்படிப் பார்த்து அறிமுகப்படுத்தி விட்டுப் போகலாம் என்று வந்தேன்' என்று ஆரம்பித்தார் பொழில் வளவனார். எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. மாணவர் பேரவைத் தேர்தல் பற்றி மாணவர்கள் அல்லாத இராவணசாமியும், கோட்டச் செயலாளரும் என்னிடம் வந்து பேச என்ன இருக்கும் என்பது எனக்குப் புரியவில்லை. இந்த மாதிரி விஷயங்களில் நான் எப்போதும் 'ஸ்ட்ரெயிட் ஃபார்வர்டு' என்பது தெரிந்தும் பொழில் வளவனார் என்னிடம் யார் யாரையோ கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தியது எனக்கு எரிச்சலூட்டியது. பத்து வருஷங்களுக்கு முன் பொழில் வளவனார் பி.எச்.டி.க்கு தீஸீஸ் ஸப்மிட் செய்த போது 'சங்க இலக்கியத்தில் காக்கை' என்ற தலைப்புக்குப் பதில், 'சங்க இலக்கியத்தில் காக்கைப் பிடித்தல்' என்ற தலைப்புத்தான் அவருடைய ஆராய்ச்சிக்குரியதாக இருந்திருக்குமோ என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது. "மாணவர்களின் பேரவைத் தேர்தல் பற்றி உங்களிடம் பேச எதுவும் இல்லை. நீங்கள் போகலாம்" என்று உட்காரவும் சொல்லாமல் அவர்களைத் துரத்த முயன்றேன் நான். 'இல்லீங்க... வந்து அந்தத் தம்பி பாண்டியன் தன்னோட வேட்பு மனுவை வாபஸ் வாங்கிட்டதாகக் கேள்விப்பட்டோம். இனிமே நீங்க வெற்றிச்செல்வன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கிறதுக்கு என்ன தடை?' என்று கேட்டு அவர்களே விஷயத்துக்கு வந்தார்கள். 'யாரிடம் எப்போது எப்படி அதைக் கேள்விப்பட்டீர்கள்?' என்று மெல்ல அவர்களை வளைத்து மடக்கினேன் நான். 'இல்லே தகவல் தெரியவந்தது... அதான் வெற்றிச்செல்வன் முழுமனத்தோடு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நாளைக்கு அறிவிப்பீர்களான்னு தெரிஞ்சுக்கிட்டுப் போக வந்தோம்' என்றார்கள் அவர்கள். 'நம்ம சி.எம்., கல்வி மந்திரி, வி.சி. எல்லாருமே வெற்றிச்செல்வன் தான் வரணும்னு விரும்பறாங்க' என்று பொழில் வளவனார் நடுவில் குறுக்கிட்டார். 'அப்படியா? அவங்கள்ளாம் உங்ககிட்டே வந்து சொன்னாங்களா அதை?' என்று நான் கேட்டதும் தான் அவர் வாயடைத்தது. 'எல்லாம் நடக்க வேண்டிய முறைப்படி, சட்டப்படி நடக்கும்! நீங்க போய் வாங்க'ன்னு சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன். அங்கே உன்னை மிரட்டி ஒரு கடிதத்தை வாங்கித் தபாலில் அனுப்பிவிட்டுப் பின்னாலேயே என்னைத் தேடி வந்து இங்கே நான் என்ன செய்யப் போகிறேன் என்று நோட்டம் பார்க்கிற அளவுக்கு இதே வேலையாக ஒரு கும்பலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்." ஓர் அரை மணி நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்து விட்டு புறப்பட்டுச் சென்றார் பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கம். அன்றிரவு விடுதி அறைக்குப் போகாமல் மணவாளனோடு ஹோட்டலிலேயே தங்கினான் பாண்டியன். தூக்கம் வரும் வரையில் பொருளாதாரப் பேராசிரியரின் நேர்மையைப் பற்றியும், அஞ்சாமையைப் பற்றியும், அண்ணாச்சியைப் பற்றியும் வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். "அண்ணாச்சியும் தான் நமக்காக உதவுகிறார். பாடுபடுகிறார். ஆனால் ஒரு நாளாவது அவர் தம் எல்லையைக் கடந்து வந்ததே கிடையாது. வெளியே இருந்து உதவிகள் செய்வதைத் தவிர பல்கலைக் கழகத்துக்கு உள்ளே வந்து மாணவர்களை மிரட்டினார், ஆசிரியர்களை மிரட்டினார் என்ற பேச்சே கிடையாது. ஆனால், இராவணசாமி வகை ஆட்கள் எதைச் செய்யவும் கூசுவதில்லை பார்த்தாயா பாண்டியன்?" என்றார் மணவாளன். "இப்படி ஒப்பிடறது கூடத் தப்பு! அண்ணாச்சி பதினெட்டாவது வயதிலிருந்து இந்த நாட்டின் பெரிய பெரிய தேச பக்தர்களோடெல்லாம் ஜெயிலுக்குப் போனவர். ஓர் உயரிய இலட்சியத்துக்காகக் குடும்ப வாழ்வுக்கே முழுக்குப் போட்டுவிட்டுத் தேசசேவையில் இறங்கியவர். தேசப் போராட்டத்துக்காக வீடு வாசல்களை இழந்தவர். இன்றைக்கு வீடு வாசல்கள் சொத்துச் சுகங்களை அடைவதற்காகவே பொது வாழ்வுக்கு வருகிறவர்களையும் அண்ணாச்சியையும் ஒப்பிடுவதே எனக்குப் பிடிக்கவில்லை" என்றான் பாண்டியன். பேராசிரியர் பூதலிங்கம் புறப்பட்டுப் போகும் போதே அண்ணாச்சியும் கடைக்குப் போயிருந்தார். இவர்கள் இங்கே அவரை வியந்து பேசிக் கொள்ள முடிந்தது. மறுநாள் விடிந்ததுமே அண்ணாச்சி செய்தித் தாள்களுடனும், கண்ணுக்கினியாளுடனும் ஹோட்டலுக்கு வந்தார். "இந்தா, தங்கச்சி! நல்லாப் பார்த்துக்க... நீயே ஹோட்டல் பையன் கிட்டச் சொல்லிக் காப்பி வரவழைச்சு உன் கையாலேயே கொடு. 'நாளைக் காலையிலே தம்பி நம்மோட காப்பி குடிக்க இங்கே இருக்கும்'னு நேற்றுச் சொன்னேன். சொன்னபடி தேடிக் கொண்டாந்தாச்சு..." என்றார் அண்ணாச்சி. பாண்டியனைப் பார்த்த மகிழ்ச்சி இருந்தாலும் அவள் உள்ளே வேறு ஏதோ ஒரு கவலை சுரந்திருப்பது அவளுடைய முகத்தில் தெரிந்தது. அந்த வசீகரமான முகத்தில் வழக்கமான ஒளி இல்லை. "நீங்கள் எல்லாம் இருந்துமா இப்படி நடந்தது?" என்று மணவாளனைக் கேட்டாள் அவள். "நான் எவ்வளவோ எச்சரித்திருந்தும் பாண்டியன் ஏமாந்துவிட்டான். என்ன செய்வது? இனிமேல் ஜாக்கிரதையாக இருப்பான் என்று நினைக்கிறேன்" என்றார் மணவாளன். பேசிக் கொண்டே இருந்தவள் திடீரென்று நாலாக மடிக்கப்பட்ட ஒரு துண்டுத்தாளை எடுத்துப் பாண்டியனிடம் நீட்டி, "நான் நீங்கள் வெற்றி பெறப் பாடுபடுகிறேனாம். அதனால் என்னையும் உங்களையும் பற்றி எதிரிகள் இப்படியெல்லாம் தாறுமாறாக நோட்டீஸ் அடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறும் போதே அவள் குரல் கரகரத்துத் தொண்டை கம்மியது. கண்கள் கலங்கிவிட்டது. சிறிதும் பதறாமல் பாண்டியன் அந்த நோட்டீஸை வாங்கிப் படித்தான். குறிப்பறிந்து அண்ணாச்சியிடம் ஏதோ தனியே பேச வெளியேறுவது போல் மணவாளன் அறையிலிருந்து வராந்தாவின் பக்கமாக வெளியேறிச் சென்றார். அந்த நோட்டீஸைப் பாண்டியன் பார்த்தால் தன் மேல் அவனுக்கு இருக்கும் பிரியமே போய்விடுமோ என்று தான் பயந்தாள் கண்ணுக்கினியாள். ஆனால், பாண்டியனோ அதைப் படித்துவிட்டுச் சிரித்தான். பின்பு சொன்னான்: "இப்படி ஆயிரம் நோட்டீஸ் அடித்துக் கொடுத்தாலும் என் மனத்தில் உன் மேலுள்ள அன்பு போகாது! தெரிந்தோ தெரியாமலோ இதை எழுதியவன் உன்னையும் என்னையும் மிக நெருக்கமாகச் சம்பந்தப்படுத்தித்தான் இப்படி எல்லாம் எழுதியிருக்கிறான். நம்முடைய காதலின் அந்தரங்கத்தை நம்மைவிட அதிகமாகத் தெரிந்து ஒப்புக் கொண்டு அச்சடித்து அங்கீகரித்த ஒரு காரணத்துக்காக அவனுக்கு நன்றி கூறுவதை விட்டு விட்டு நீ ஏன் இதற்காக கண் கலங்குகிறாய்?" என்று பாண்டியன் கேட்ட பின்பு தான் அவள் முகத்தின் இருள் மாறிச் சுபாவமான தன்மையுடன் சிரிப்பு மலர்ந்தது. சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|