(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்) 35
அபாயங்களிலிருந்து பத்திரமாக விலகி ஒதுங்கிச் செல்லும் ஆண்மையை விட அபாயங்களை எதிர் கொண்டு அவற்றை ஒதுக்கி விலக்கிவிட்டுச் செல்லத் துணியும் ஆண்மை மிகவும் பெரியது. சிறிது நேரத்திலேயே தான் யார் என்பதை அந்த முரட்டுக் கும்பலுக்கு நிரூபித்துக் காட்டினான் பூமி. யாரோ வெடவெட என்று ஒல்லியாக ஒரு பையன் ஸ்கூட்டரில் வருகிறான். அவனை நாலைந்து பேராகச் சேர்ந்து தாக்கிவிடுவது சுலபம் என்று நினைத்த முரடர்கள் மலைத்துப் போய் திணறும்படி காரியங்கள் நடந்தன. பூமி அவர்களுக்குச் சரியான பாடம் புகட்டினான். அங்கே அதில் ஒருவன் பூமிக்குப் பழக்கமானவன் போல் தோன்றினான். அவன் பழைய நாட்களில் தன்னோடு பழகிய ஓர் ஆட்டோ டிரைவர் என்பது சில விநாடிகளில் பூமிக்கு நினைவு வந்தது. பூமியை அடையாளம் தெரிந்ததுமே அவன் ஓடி விட்டான். தன்னிடம் அந்த ஆள் சிறிது காலம் கராத்தே பழகியதும் பூமிக்கு ஞாபகம் இருந்தது. எதிரே கும்பலாக வழி மறித்தவர்களைக் கண்டு சித்ரா முதலில் பயந்தாள். எவ்வளவுதான் பூமி கெட்டிக்காரனாக இருந்தாலும் இந்தக் குண்டர்களை எப்படிச் சமாளிக்கப் போகிறான் என்று தயக்கமாயிருந்தது அவளுக்கு. அவர்களிடம் இருந்து தப்பி மீண்டு போக வேண்டுமே என்று ஊரிலுள்ள தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டாள் அவள். ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவருக்கு நன்மை செய்யப் போய் பூமி தான் அபாயத்தில் சிக்கிக் கொள்ளுகிறானே என்று கவலைப்பட்டாள் அவள். எந்த வேலின் நுனி மிகவும் கூராகத் தீட்டப்பட்டிருக்கிறதோ அதில் தான் மற்றப் பொருள்கள் குத்தப்பட்டுச் சிக்குகின்றன. மழுங்கிய வேலின் முனையில் எதுவுமே வந்து சிக்குவதில்லை. தீரர்களுக்குத்தான் எதிர்ப்புக்களும் அபாயங்களும் காத்திருக்கின்றன. மந்த புத்தியும் கோழைத்தனமும் உள்ளவர்களுக்கு எந்த முனையிலிருந்தும் யாதோர் எதிர்ப்பும் அபாயமும் வாழ்வில் வருவதில்லை. பூமியின் வாழ்விலுள்ள அத்தனை அபாயங்கள் புரட்சிமித்திரன் போன்ற சவர்லே இம்பாலா ஆட்களின் வாழ்வில் வருவதில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவன் கூராயிருக்கிறான் என்பதையும் அவள் விரும்பினாள். ஒரு சிறிதும் பயப்படாமல் அபாயங்களில் சிக்கிக் கொள்ளத் துணியும் நெஞ்சுரம் அவனுக்கு இருக்கிறது என்பதும் அவளுக்குப் பிடித்திருந்தது. அபாயங்களிலிருந்து ஒதுங்கி விலகிச் செல்லும் ஆண்மையை விட அபாயங்களை எதிர்கொண்டு அவற்றை விலக்கிவிட்டு மேலே துணிந்து நடக்கும் ஆண்மையை அதிகம் ரசிக்க முடிந்தது. சித்ரா தனக்குள் சிந்தித்தாள். திருட்டுத் தொழிலில் இன்னொருவருக்குக் கைவாணமாகப் பயன்பட்டு வந்த ஓர் இளைஞனை அதற்காகத் தண்டித்துச் சிறைக்கு அனுப்பிவிடாமல் திருத்தி வேலை கொடுத்த பூமியின் பெருந்தன்மையையும் இன்று அதே பையன் சந்தேகப்படத்தக்க ஒரு சூழ்நிலையில் காணாமல் போய்விட்ட போது நமக்கென்ன வந்தது என்று விட்டு விடாமல் பூமி அவனைத் தேடி அலைவதும் அவளைச் சிந்திக்கச் செய்தன. உலகையே தன் சொந்தக் குடும்பமாக நினைத்து அதன் சிரம ஜீவிகளுக்காகவும், கஷ்ட நஷ்டங்களுக்காகவும் அலையும் அவன் மனவிலாசம் அவளுக்குள் பிரியத்தை வளர்த்தது. தன்னையே விரும்பிச் சுற்றுகிற ஆண்மகனைத்தான் சில பெண்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் சித்ராவோ பிறருடைய சிரமங்களைத் தீர்ப்பதற்காகச் சுற்றிக் கொண்டிருக்கிற அவனை விரும்பினாள். பூமி பயமே இல்லாதவனாயிருந்தான். அவனுக்காக அவள் பயப்பட்டாள். அவன் கவலைப்படத் தெரியாதவனாக இருந்தான். அவனுக்காக அவள் கவலைப்பட்டாள். அவன் சுயநலமே இல்லாதவனாக இருந்தான். அவனுக்காக அவள் சுயநலத்தோடு சிந்தித்தாள். இந்த அக்கறை தன்னையறியாமலே தன்னுள் எப்படி ஏற்பட்டு வளர்ந்ததென்று அவளுக்கே புரியவில்லை. வெளியில் எதுவுமே நடக்காதது போல் ஸ்கூட்டரைக் கொண்டு வந்து லெண்டிங் லைப்ரரி பரமசிவத்தின் தம்பியிடம் கொடுத்து விட்டு மெஸ்ஸுக்குள் சென்றான் பூமி. சித்ராவைக் கூப்பிட்டு அன்று முழுவதும் பொறுப்பாக கேஷ் டேபிளைக் கவனித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வெளியே கிளம்பத் தயாரான பூமியைத் தடுத்து "நீங்கள் தனியாகத்தான் அலைய வேண்டுமா? யாரையாவது துணைக்குக் கூட அழைத்துக் கொள்ளுங்கள். அல்லது போலீஸில் ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்துவிட்டுப் புறப்படுங்களேன்" என்றாள் அவள். "முதலில் நாமே போலீஸில் புகார் செய்து விட்டால் அப்புறம் பையனை உயிரோடு பார்க்க முடியாமல் செய்து விடுவார்கள். மன்னாரு கும்பல் கொலை பாதகத்திற்கு அஞ்சாது." "அதற்காக நீங்கள் தனியாகப் போய்ச் சிக்கிக் கொள்ள வேண்டுமா?" "சிக்கிக் கொள்கிற ஆள் நான் இல்லை." "உங்களிடம் வித்தை கற்கும் பையன்களில் யாராவது நாலு பேரை வரவழைத்து எல்லாருமாகச் சேர்ந்து தேடலாமே?" சித்ராவும் பூமியும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது காணாமல் போன பையனின் தாயே அங்கு வந்து விட்டாள். சற்று முன் பூமியும் சித்ராவும் அவளை வீடு தேடிச் சென்று அவளுக்குத் தைரியம் கூறிவிட்டு வந்திருந்தும் அதில் அமைதியடையாமல் மனம் பதறி என்னவோ ஏதோ என்று மெஸ்ஸுக்குத் தேடி வந்திருந்தாள் அவள். "அவன் பாட்டுக்குப் பழையபடியே இருந்தாலும் உயிருக்கு ஆபத்தில்லாமே இருந்துக்கிட்டிருப்பான். திருத்தி வழிக்குக் கொண்டாரேன் பேர் வழியேன்னு இப்பிடி அவனை வம்பிலே மாட்டி வச்சிட்டீங்களே! நான் இப்ப எங்கே போவேன்? எப்பிடித் தேடுவேன்?" என்று அந்தத் தாய் உணர்ச்சி வசப்பட்டுப் புலம்பிய போது அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பூமி திகைத்தான். முன்பு ஒருமுறை குண்டர்கள் முத்தக்காளின் ஓட்டலைச் சூறையாடிய போது, அவளும் தன்னிடம் இதே மாதிரி அலுத்துக் கொண்டது பூமிக்கு நினைவு வந்தது. தான் உதவி செய்ய முன்சென்று தன்னைச் சிரமப்படுத்திக் கொண்டு தலையிடுகிற இடங்களில் எல்லாம் இப்படி நேர்வது பூமிக்கு உள்ளூற உறுத்தியது. லஞ்சத்தை எதிர்த்து ஒழிப்பதை விட லஞ்சம் கொடுத்து அட்ஜஸ்ட் செய்து கொண்டாவது தொடர்ந்து ஓட்டலை நடத்த வேண்டுமென்று முத்தக்காள் நினைப்பதும், திருடர்களை எதிர்த்து அவர்களிடமிருந்து விலக்கி மகனைத் திருத்துவதை விட அவன் திருடர்களோடாவது இருந்து உயிருக்கு அபாயமின்றி வாழ்ந்தால் போதும் என்று காணாமல் போன பையனின் தாய் நினைப்பதும் இப்போது அவனைச் சிந்திக்க வைத்தன. உலகில் பெரும்பாலான சராசரி மக்கள் எப்படியாவது வாழ வேண்டுமென்று நினைக்கிறார்களே ஒழிய, இப்படித்தான் வாழ வேண்டும் என்று எந்த இலட்சியமும் அவர்களுக்கு இருப்பதில்லை. இப்படி எந்த இலட்சியமும் இல்லாத பெரும்பாலானவர்களுக்கு, இலட்சியங்களும் இலட்சியவாதிகளும், அர்த்தமற்றவைகளாகவும் அர்த்தமற்றவர்களாகவும் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. சித்ரா அந்தத் தாயைச் சமாதானப்படுத்த முயன்றாள். "உங்க பையனை எப்படியும் கண்டுபிடிச்சிடலாம். அது வரை இங்கேயே இருங்க" என்று மெஸ்ஸின் பின் பக்கத்து அறையில் கொண்டு போய் அமர்த்தி தேறுதல் கூறி அவளைக் காப்பி சாப்பிட வைத்தாள் சித்ரா. பின்பு அவளும் பூமியும் சேர்ந்தே அந்தத் தாயிடம் அவள் பையனைப் பற்றிய தேவையான பல விவரங்களை விசாரித்தறிந்தார்கள். அவன் எங்கெங்கே போவான், யார் யாரோடு பழகுவான், அவனுடைய கல்லூரி நண்பர்கள் யார் யார் என்ற விவரங்களிலிருந்து ஏதாவது தெரியலாம் என்பது அவர்கள் எண்ணமாயிருந்தது. ஆனால் அந்தப் பையனின் பழக்கவழக்கங்கள், வெளி வட்டார நண்பர்கள் ஆகியவை பற்றி அவனுடைய தாய்க்கே மிகவும் குறைவான விவரங்கள் தான் தெரிந்திருந்தன. "எப்படியாவது எம்மவனைத் தேடி உயிரோட எங்கிட்டே ஒப்படையுங்க ஐயா" என்று தான் அந்தத் தாய் திரும்பத் திரும்ப ஒரே வாக்கியத்தைச் சொல்லி ஒப்பாரி வைத்துப் புலம்பி அழுதாளே ஒழிய, அவர்களுக்குப் பையனைக் கண்டு பிடிப்பதில் பயன்படுகிற விவரம் எதையும் கூறத் தயாராயில்லை அவள். சித்ராவின் பொறுப்பில் பூமி அவளை ஒப்படைத்து விட்டுப் புறப்பட்டான். காலையில் தன்னை வழிமறித்துத் தாக்கிய குண்டர்களில் தன்னிடம் சிறிது காலம் கராத்தே படித்த ஓர் ஆட்டோ டிரைவர் இருந்ததை ஞாபகப்படுத்திக் கொண்ட பூமி அவனை எப்படியாவது முதலில் சந்திக்க வேண்டும் என்று முயன்றான். லஸ் முனையிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் டிரைவர்களை விசாரித்த போது அந்த ஆள் ராக்கியப்ப முதலி தெருவுக்குப் பக்கத்திலுள்ள ஒரு குடிசைப் பகுதியில் இருப்பதாகத் தெரிய வந்தது. பூமி அங்கே அவனைத் தேடிச் சென்றான். அவன் அந்தக் குடிசை வாசலுக்குப் போன போது உள்ளே அவனுக்குத் தேவையான அதே ஆளின் குரல் கேட்டது. பூமி கூப்பிட்டதும் ஒரு பெண் - அவன் மனைவியாக இருக்க வேண்டும் - வெளியே தலை நீட்டி "யாருங்க, இன்னா வேணும்?" என்று பூமியை விசாரித்தாள். "கராத்தே வாத்தியார் பூமிநாதன்னு சொல்லும்மா" என்று கூறியதைக் கேட்டுக் கொண்டு உள்ளே போய்ச் சில வினாடிகளில் மீண்டும் வெளியே வந்து "அவரு இல்லீங்களே" என்று அந்தப் பெண் துணிந்து பொய் சொன்னாள். சாயங்கால மேகங்கள் : முன்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
|