16. மீண்டும் வேளாவிக்கோ மாளிகை

     சிறைப்பட்ட கடம்பர்களைச் சிறையிலடைத்தும், சிறை மீட்கப்பட்ட சேர வீரர்களுக்கு உண்டாட்டு நிகழ்த்தியும் கொண்டாடிக் கொண்டிருந்த குமரன் நம்பி மறுநாள் படை வீரர்களுடன் கடலிற் புகுந்து ஆந்தைக்கண்ணனை வளைக்கத் திட்டமிட்டிருந்தான்.

     கடம்பர்களில் பலரைச் சாதுரியமாகப் பொன்வானி முகத்துவாரத்திற்கு அழைத்துச் சிறைப்பிடித்து விட்டாலும், குமரன் நம்பியின் முதன்மையான நோக்கம் என்னவோ இன்னமும் நிறைவேறாமலேயே இருந்தது. ஆந்தைக்கண்ணனிடம் சிறைப்பட்டுவிட்ட இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்க வேண்டுமென்பதே அவனுடைய நோக்கமாயிருந்ததும் அந்த உயிர் நோக்கம் இந்த விநாடி வரை நிறைவேறவே இல்லை. அதற்கான வழிதுறைகளைச் சிந்தித்துச் சிந்தித்து முடிவில் ஆந்தைக்கண்ணன் மேல் படையெடுத்து அவனுடைய மரக்கலங்களை மறித்துச் சோதனை இடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான்.

     ஆனால் அதற்கு முன்னே இரத்தின வணிகர் வீட்டிலும் இரத்தின வணிகர் வீதியிலும் அவன் அந்தரங்கமாக அறிந்து கொள்ள வேண்டிய சில செய்திகள் இருந்தன. அவற்றை அறிவதற்கு அவன் முயன்றான். காலதாமதத்தால் வரும் விளைவுகளையும் அவன் சிந்தித்து வைத்திருந்தான். இந்த வேளையில் மீண்டும் உடனே வஞ்சிமா நகரத்திற்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு அமைச்சர் அழும்பில்வேள் அழைத்து விட்டார்.

     மீண்டும் வேளாவிக்கோ மாளிகையில் நுழைவதற்குரிய தைரியத்தை அவன் தன்னுள் நிரப்பிக் கொள்ள வேண்டியிருந்தது. அமைச்சர் அழும்பில்வேளைச் சந்திக்கச் செல்வதாயிருந்தால் - அதுவரை ஆந்தைக்கண்ணனை வளைப்பதற்காகக் கடலுக்குள் செல்வதைத் தள்ளி வைக்க வேண்டியிருக்கும். அப்படி தள்ளி வைப்பதனால் - தான் ஆந்தைக்கண்ணனை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் நேருமுன் - ஆந்தைக்கண்ணனே பொன்வானி முகத்துவாரத்தின் வழியே கொடுங்கோளூரையும் தன்னையும் தேடி வரக் கூடிய நிலை ஏற்பட்டு விடக் கூடாதே என்ற பயமும் அவனுக்கு இருந்தது.

     அமைச்சரின் கட்டளையை அறவே மறுத்து ஒதுக்கவும் துணிவில்லை. தன்னுடனேயே சுற்றிக் கொண்டிருந்து மகா மண்டலேசுவரருக்கு இணையான அமைச்சருக்கு அடிக்கடி கொடுங்கோளூர் நிலைமைகளைச் சொல்லிவரும் வலியன், பூழியன் ஆகிய இருவர் மேலும் அவனது சினம் திரும்பியது. சினம் கொண்டு அவர்களை அவனால் ஒன்றும் செய்துவிட முடியாது என்றாலும், அமைச்சர் அழைத்தனுப்பக் காரணமான ஏதாவதொரு செய்தி கொடும்பாளூரிலிருந்து வேளாவிக்கோ மாளிகைக்கு வந்திருக்க முடியுமானால் அது வலியனாலும், பூழியனாலும் தான் வந்திருக்க முடியுமென்பதைக் குமரன் நம்பி அநுமானித்துத் தெரிந்து கொள்ள முடிந்தது. எவ்வளவுக் கெவ்வளவு விரைவாக வேளாவிக்கோ மாளிகைக்குச் சென்று திரும்புகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு விரைவாக மற்றக் காரியங்களைக் கவனிக்கலாம் என்று தோன்றவே உடனே அவன் வஞ்சிமா நகரத்துக்குப் பயணம் புறப்பட்டான்.

     அந்தப் புரவிப் பயணத்தைத் தொங்கும் போது முன் மாலை நேரம். முன்னிரவு நேரத்திற்குள் அமைச்சரைக் கண்டு பேசிவிட்டு நள்ளிரவுக்குள் மீண்டும் கொடுங்கோளூருக்குத் திரும்ப எண்ணியிருந்தான் அவன். என்ன காரணத்தினாலோ அவன் கொடுங்கோளூருக்குப் புரவிப் பயணம் புறப்பட்ட வேளையில் - அமைச்சர் பெருமானின் அந்தரங்க ஊழியர்களான வலியனும் பூழியனும் உடன் புறப்படாமல் கொடுங்கோளூரிலேயே தங்கிவிட்டார்கள். இது வேறு குமரன் நம்பியின் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்கியது.

     தன்னை வேளாவிக்கோ மாளிகைக்கு அனுப்பிவிட்டு இவர்கள் இருவரும் மட்டும் கொடுங்கோளூரில் தங்குவதன் மர்மம் என்னவென்பதைத் தன்னால் ஆன மட்டும் சிந்தித்துப் புரிந்து கொள்ள முயன்றான் குமரன் நம்பி. முடியாத காரியமாகப் போயிற்று அது.

     கொடுங்கோளூரையும் - கோ நகரமான வஞ்சிமா நகரைத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் இயல்பை மீறிய அமைதி நிலவியது. இயல்பான வழக்கமான போக்குவரவோ, மக்கள் நடமாட்டமோ அந்தச் சாலையில் இல்லை. அந்த அமைதி புதியதாகவும் பெரியதாகவும் இருந்தது. ஏதோ ஒரு பயம், அல்லது இயல்பற்ற நிலை நாடு முழுமையும் பற்றி ஆட்டிக் கொண்டிருப்பதை அவன் உணர முடிந்தது. ஒரு வகையில் அந்த அமைதி அவனுக்குப் பயன்பட்டது. புரவியை மிக வேகமாகச் செலுத்திக் கோ நகரத்தைக் குறுகிய நேரத்தில் அடைவதற்கு அந்த அமைதி உதவுவதாக இருந்தது.

     வேளாவிக்கோ மாளிகை நெருங்க நெருங்க - அந்த அரச தந்திர மாளிகையை அணுகும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் தயக்கமும், மனப் பதற்றமும் இன்றும் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டன.

     வேளாவிக்கோ மாளிகைக்கு அதற்கு முந்திய முறை செல்ல நேர்ந்த சூழ்நிலையையும் இன்று செல்கிற சூழ்நிலையையும் சேர்த்து நினைத்த போது சென்ற முறையை விட இந்த முறை அது இன்னும் சூழ்ச்சியும் அந்தரங்கங்களும் அதிகமாகிவிட்ட இடம் போல் மனத்திற்குள் ஒரு பிரமை ஏற்பட்டது.

     தோட்டத்தில் புகுந்து புரவியைக் கட்டிவிட்டு அவன் அந்த மாளிகையில் நுழையும் போது மேல்வானத்தில் மாலையைப் போலவே அவன் மனமும் குழம்பிக் கலங்கிப் போய்த்தான் இருந்தது.

     அரண்மனையின் மற்றப் பகுதிகளில் அந்தி விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். கீதசாலைகளில் மகளிர் முணுமுணுக்கும் இனிய பண்ணொலிகள் அரண்மனை அந்தப்புரப் பகுதியிலிருந்து வேளாவிக்கோ மாளிகைச் சுவர் வரை எதிரொலித்தது. அதற்கப்பால் அந்த அரசதந்திர மாளிகைக்குள்ளே நுழைய அஞ்சுவது போல் வந்த வழியே திரும்பி விடுவது போல் தோன்றியது குமரன் நம்பிக்கு.

     அமைச்சரை அணுக இசை முதலிய நளின கலைகளுக்குக் கூட அச்சம் போலிருக்கிறது. வேளாவிக்கோ மாளிகையை நெருங்க மனிதர்கள் பயப்படுவார்கள் என்றால் இசையின் ஒலிகூடப் பயப்படுவது போல் அல்லவா தெரிகிறது - என்று தனக்குத் தானே நினைத்துப் பார்த்த போது குமரன் நம்பியின் இதழ்களிலே புன்னகை தவழ்ந்து மறையத் தவறவில்லை.

     மாளிகையின் கூடத்தில் அமைச்சரை சந்திப்பதற்காக அவன் நுழைய வேண்டிய கூடத்தில் மட்டும் இரண்டு காவலர்கள் வேலேந்தியபடி நின்றார்கள். அமைச்சரிடம் தன் வரவைத் தெரிவிக்குமாறு அவர்களில் ஒருவனிடம் குமரன் நம்பி வேண்டினான். ஆனால் காவலன் கூறிய மறுமொழி அவனைத் திகைக்க வைப்பதாக இருந்தது.

     "அமைச்சர் பெருமான் இப்போது மாளிகையில் இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். தாங்கள் அது வரை காத்திருக்க வேண்டுமென்பது கட்டளை" - இதைக் கேட்டுக் குமரன் நம்பி ஆத்திரமடைந்தாலும் - தன் ஆத்திரத்தை அவனால் வெளிக் காட்டிக் கொள்ள முடியாமலிருந்தது.

     ஒவ்வொரு முறையும் அமைச்சர் அழும்பில்வேள் தன்னைத் தேடி வருகிறவனுக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டாகும்படியாக இப்படி ஏதாவது செய்து கொண்டிருப்பதை அவன் வெறுத்தான். தேடி வருகிற எதிராளியைச் சந்திக்கும் முன்பே அவனுடைய அகங்காரத்தை வெற்றி கொண்டு விடுவதுதான் தேர்ந்த அரசதந்திரக்காரர்களுடைய முறையோ என்று அவனுள் ஒரு சந்தேகம் எழலாயிற்று.

     அவன் அமைச்சர் பெருமானைச் சந்திக்கிற ஒவ்வொரு முறையும் கோபத்தோடு வருகிறான். வந்த வேகத்தில் தன்னுடைய அகங்காரத்தை இழக்கிறான். அப்படி அகங்காரத்தை இழந்த மறுகணமே அவரைச் சந்திக்க நேரிடுகிறது. அவரோ அவன் மனத்தில் தாழ்வு மனப்பன்மை கிளறும்படி செய்து விடுகிறார். தாழ்வு மனப்பான்மையோ அவனுடைய அகங்காரத்தை அவனே மறந்து போகும்படி செய்து விடுகிறது. இன்றும் அதே நிலையில் தான் அவன் இருந்தான். அவர் வருகிறவரை தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கலாம் என்று அவன் புறப்பட்ட போது அவனை அவ்வாறு செய்ய விடாமல் அவரே வந்து விட்டார். அவரைத் திடீரென்று எதிரே பார்த்தவுடன் அவனுக்குக் கையும் காலும் ஓடவில்லை. அந்தக் கம்பீரத் தோற்றத்தை எதிர்கொள்வது கடினமாயிருந்தது. அவருக்கு வணக்கம் செலுத்தி வரவேற்ற சுவட்டோடு - உடன் உள்ளே சென்றான் குமரன் நம்பி.

     "கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத் தலைவன் இந்தச் சில நாட்களில் அரசியல் சாகஸங்களில் தேர்ந்துவிட்டதாகத் தெரிகிறது. கடம்பர்களின் தலைவனையே ஏமாற்றும் அளவிற்கு வளர்ந்த திறமையைப் பாராட்ட வேண்டியதுதான்" என்று அவர் தொடங்கிய போது அவனுக்கு மறுமொழி எதுவும் கூறுவதற்குச் சொற்கள் கிடைக்கவில்லை. அவன் வாளா நின்றான்.

     மௌனமாக இதைப் பார்த்தபடி அமைச்சர் அழும்பில்வேள் உலாவிவரத் தொடங்கினார். உலாவிக் கொண்டே வந்தவர், திடீரென்று ஒரு திருமுக ஓலையை எடுத்து, "இந்த ஓலை இன்று காலையில் எனக்குக் கிடைத்தது. படைமுகத்திலிருந்து வந்திருக்கிறது. இதைக் கவனித்தால் நீ செய்ய வேண்டிய காரியங்களில் உனக்கு எவ்வளவு விரைவு தேவையென்று உடனே புரியும்."

     "ஓலையை நான் கவனிக்கும்படி என்ன இருக்கப் போகிறது அமைச்சர் பெருமானே! கட்டளை இட வேண்டியதை நீங்களே இடலாம்."

     "கட்டளையை நான் இடாவிட்டாலும் கொடுங்கோளூர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியை மீட்க வேண்டுமென்று படைத்தலைவனுக்கு ஆவல் இருக்காதா என்ன?"

     "நாட்டைக் காக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. நாட்டில் அமுதவல்லியைக் காப்பதும் ஒரு சிறு கடமையே தவிர - அமுதவல்லியைக் காப்பதே என் நோக்கமாயிருக்க முடியாது. நான் தங்கள் கட்டளையைச் செய்யக் கடமைப்பட்டவன். எனக்குக் கட்டளையிடுங்கள்..." என்று அவன் குழைந்ததைப் பார்த்து அமைச்சர் அழும்பில்வேள் அவனையே உற்றுப் பார்த்தார். அவர் கண்கள் அவனை ஊடுருவின.






புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
151
152
153
154
155
156
157
158
159
160
161
162
163
164
165
166
167
168
169
170
171
172
173
174
175
176
177
178
179
180
181
182
183
184
185
186
187
188
189
190
191
192
193
194
195
196
197
198
199
200

புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில்
எண்
நூல்
201
202
203
204
205
206
207
208
209
210
211
212
213
214
215
216
217
218
219
220
221
222
223
224
225
226
227
228
229
230
231
232
233
234
235
236
237
238
239
240
240
241
242
243
244
245
246
247