திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 12 ...

111. புணர்ச்சி மகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. 1101
     கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும், ஒளிவீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடத்திலேயே அமைந்துள்ளனவே!

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. 1102
     நோய்க்கு மருந்தாக அமைவன வேறான பொருள்கள்; அவ்வாறு இல்லாமல், அணிபுனைந்த இவளால் நமக்கு வந்த நோய்க்கு, இவள், தானே மருந்தும் ஆயினளே!

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. 1103
     தாம் விரும்பும் மகளிரின் மென்மையான தோள்மேல் துயிலும் இன்பத்தைப் போலத் தாமரைக் கண்ணானின் போக உலகத்து இன்பமும் இனிதாக இருக்குமோ?

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்? 1104
     தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுதலும், அருகில் நெருங்கினால் குளிர்தலுமாகிய நெருப்பை, இவள் தான், எவ்விடத்திலிருந்து பெற்றுள்ளாளோ?

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள். 1105
     விரும்பியபொழுது அவையவை தரும் இன்பத்தைப் போல இன்பம் தருவன, மலரணிந்த கூந்தலை உடையவளான இவள் தோள்கள் தருகின்ற இன்பம்!

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். 1106
     அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால், இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்!

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. 1107
     தம் வீட்டிலிருந்து, தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமை போன்றது, அழகிய மாமை நிறம் உடையவளான இவளைத் தழுவிப் பெறுகின்ற இன்பம்!

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 1108
     காற்றும் இடையிலே புகுந்து பிளந்துவிடாத இறுக்கமான தழுவுதல், விரும்பிக் கூடும் இருவருக்கும் இனிமைதரும் நல்ல இன்ப உறவாகும்!

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். 1109
     ஊடலும், அதனை அளவோடு அறிந்து தெளிவித்தலும், பின்னர்க் கூடுதலும், என்னும் இவை எல்லாம், காமம் பொருந்தியவர் தமக்குள் பெற்ற பயன்களாகும்.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. 1110
     ஒன்றை அறியும் போது, முன்னிருந்த அறியாமையைக் கண்டாற் போல, செறிவான சிவந்த அணிகளை உடையவளைச் சேருந்தோறும், காம இன்பமும் உண்டாகின்றது!

112. நலம் புனைந்துரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். 1111
     அனிச்ச மலரே! நீதான் நல்ல சிறப்பை உடையாய்! நீ வாழ்க! எம்மால் விரும்பப்படுகின்றவளோ நின்னைக் காட்டிலும் மிகவும் மென்மையான தன்மையினள்!

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. 1112
     ‘இவள் கண்களும் பலராலும் காணப்படும் இக்குவளைப் பூவைப் போன்றதாகுமோ’ என்று, இக் குவளை மலரைக் கண்டால், நெஞ்சே, நீயும் மயங்குகின்றாயே!

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. 1113
     அவளுக்கு, மேனியோ தளிர் வண்ணம்; பல்லோ முத்து; இயல்பான மணமோ நறுமணம்; மையுண்ட கண்கள் வேல் போன்றவை; தோள்களோ மூங்கில் போன்றவை!

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று. 1114
     குவளை மலர்கள், இவளைக் கண்டால், ‘இம் மாணிழை கண்களுக்கு யாம் ஒப்பாக மாட்டோம்’ என்று தலையைக் கவிழ்த்து நிலத்தை நோக்குமே!

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை. 1115
     தன் இடையின் நுண்மையை நினையாதவளாய், அனிச்ச மலரைக் காம்பு களையாமல் கூந்தலிலே சூடியுள்ளாளே! இவள் இடைக்கு இனி நல்ல பறைகள் ஒலிக்கமாட்டா!

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். 1116
     மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகந்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால், வானத்து மீன்கள் தம் நிலையில் நில்லாது கலங்கிப் போயினவே!

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. 1117
     அவை கலங்குவதுதாம் ஏனோ? தேய்ந்து, பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளது போல, இவள் முகத்திலும் களங்கம் யாதும் உண்டோ?

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி. 1118
     மதியமே! இப் பெண்ணின் நல்லாளின் முகத்தைப் போல நீயும் ஒளிவிடுவதற்கு வல்லமை உடையையானால், நீயும் என்னால் காதலிக்கப்படுவாய்! நீதான் வாழ்க!

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. 1119
     மதியமே! மலர்போன்ற கண்களையுடைய இவளின் முகத்திற்கு நீயும் ஒத்திருப்பாய் ஆயின், பலரும் காணுமாறு இனி வானத்தில் தோன்றாதிருப்பாயாக!

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். 1120
     மிகமிக மென்மையான அனிச்ச மலர்களும், அன்னப் பறவைகளின் மெல்லிய இறகுகளும், இம் மாதின் அடிக்கு நெருஞ்சிப் பழம்போலத் துன்பத்தைச் செய்யுமே!

113. காதற் சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். 1121
     பணிவோடு பேசுகின்ற இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற் போல மிகுந்த சுவையினை உடையதாகும்!

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. 1122
     இம் மடந்தைக்கும் எமக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையேயுள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும்.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம். 1123
     கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக! யாம் விரும்புகின்ற அழகிய நுதலை உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லை.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து. 1124
     இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும் போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; நீங்கும் போதோ அவ்வுயிருக்குச் சாதலையே தருகின்றாள்!

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம். 1125
     ஒள்ளியவாய் அமர்ந்த கண்களை உடையவளின் குணங்களை மறப்பதற்கே அறியேன்; அதனால், யான் அதை எப்போதாயினும் நினைப்பதும் செய்வேனோ!

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர். 1126
எம் காதலுக்கு உரியவர் எம் கண்களிலிருந்து ஒரு போதுமே நீங்கார்; எம் கண்களை இமைத்தாலும் வருந்தார்; அவ்வளவு நுண்ணியவர் அவர்.

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து. 1127
     காதலுக்கு உரியவரான அவர் என் கண்ணிலேயே உள்ளனர்; ஆதலினாலே, அவர் மறைவாரோ என்று நினைத்து, என் கண்களுக்கு நான் மையும் எழுத மாட்டேன்.

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து. 1128
     காதலர் என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கின்றார்; அதனால், அவருக்குச் சூடு உண்டாவதை நினைத்து, யாம் சூடாக எதனையும் உண்பதற்கும் அஞ்சுவோம்!

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர். 1129
     ‘இமைப்பின் அவர் மறைவார்’ என்று, கண்களை மூடாமலே துயிலொழித்துக் கிடப்போம்; அவ்வளவிற்கே, இவ்வூர் அவரை அன்பற்றவர் என்கின்றதே!

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர். 1130
     எம் உள்ளத்துள்ளே அவர் உவப்போடு உள்ளார்; இருந்தும், ‘பிரிந்து போய்விட்டார்; அதனால் அன்பில்லாதவர்’ என்று இவ்வூர் அவர் மேல் பழி கூறுகின்றதே!

114. நாணுத் துறவுரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. 1131
     காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு வலிமையான பாதுகாப்பு, ‘மடலேறுதல்’ அல்லாமல், வேறு யாதும் இல்லை.

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. 1132
     காதலியின் அன்பைப் பெறாத துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு, மடலூரத் துணிந்துவிட்டன.

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். 1133
     நாணத்தையும் நல்ல ஆண்மையையும் முன்னர்ப் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன்.

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை. 1134
     நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளைக் காமநோய் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே! என்ன செய்வேன்!

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். 1135
     தொடர்பான குறுவளையல்களை அணிந்த இவள் தான், மாலைப் பொழுதிலே வருந்தும் துயரத்தையும், மடலேறும் நிலைமையையும் எனக்கு தந்துவிட்டாளே!

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண். 1136
     அப் பேதையின் பொருட்டாக என் கண்கள் ஒரு போதும் மூடுதலைச் செய்யமாட்டா; அதனால், இரவின் நடுச்சாம வேளையிலும் மடலேறுதலையே நான் நினைத்திருப்பேன்!

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில். 1137
     கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணைப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லை.

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும். 1138
     ‘நிறை இல்லாதவர் இவர்’ என்றும், ‘இரங்கத்தவர் இவர்’ என்றும் பாராது, காமநோயானது, மறைப்பைக் கடந்து, மன்றத்தில் தானாக வெளிப்படுகின்றதே!

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு. 1139
     பொறுத்திருந்ததனாலே எல்லாரும் அறிந்தாரில்லை என்று நினைத்தே, என் காமநோயானது, இவ்வாறு தெருவிலே பலரும் அறியுமாறு மயங்கித் திருகின்றது போலும்!

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு. 1140
     யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான், அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர்.

115. அலர் அறிவுறுத்தல்

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால். 1141
     ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது; அ·து என் நல்வினையின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர். 1142
     குவளை மலரைப் போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளை எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினைத் தந்தார்களே!

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. 1143
     ஊர் அனைத்தும் அறிந்த இப் பழிச்சொற்கள் அவனையும் சென்று சேராதோ! சேருமாதலால், அதனைப் பெறாததைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன்.

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. 1144
     ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது! அதுவும் இல்லையானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே!

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது. 1145
     களிக்குந்தோறும் களிக்குந்தோறும் மேன்மேலும் கள்ளுண்டலை விரும்பினாற் போல, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட மேலும் இனிமையாகின்றது.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று. 1146
     அவரைக் கண்டது எல்லாம் ஒரே ஒரு நாள் தான்; திங்களைப் பாம்பு கொண்டது எங்கும் பரவினாற் போல, ஊரலரும் அதற்குள் எங்கும் வெளிப்பட்டுப் பரவிவிட்டதே.

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய். 1147
     இக் காமநோயானது, ஊரவர் சொல்லும் பழிச் சொற்களை எருவாகவும், அது கேட்டு அன்னை சொல்லும் கடுஞ்சொல்லை நீராகவும் கொண்டு வளர்கின்றது.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். 1148
     ‘பழிச்சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம்’ என்று முயலுதல், ‘நெய்யால் நெருப்பை அவிப்போம்’ என்பது போன்ற அறியாமைச் செயலாகும்.

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை. 1149
     ‘அஞ்சாதே! பிரியேன்’ என்று என்னைத் தெளிவித்துக் கூடியவர், இந்நாள் பலரும் நாண நம்மைக் கைவிட்டுப் போனபோது, அவருக்கு நாணவும் நம்மால் இயலுமோ!

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர். 1150
     யாம் விரும்புகின்ற அலரினை இவ்வூரவரும் எடுத்துக் கூறுகின்றனர்; அதனால், எம் காதலரும் தாம் எம் உறவை விரும்பி வந்து எமக்கு அருளினைச் செய்வார்.

களவியல் முற்றிற்று

கற்பியல்

116. பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. 1151
     பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக; பிரிந்து போய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வாழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக.

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. 1152
அவர் அன்பான பார்வையும் முன்னர் இனிதாய் இருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினைத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவர் கூடுதலும் துன்பமாகத் தோன்றுகின்றது.

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான். 1153
     அறிவு உடையவரிடமும், தாம் காதலித்தவரைப் பிரிவது ஒரு சமயத்தில் உள்ளதனால், அவர், ‘பிரியேன்’ என்று சொன்ன சொல்லையும் என்னால் நம்ப முடியவில்லை!

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு. 1154
     அருள் செய்த காலத்தில், ‘அஞ்சாதே’ என்று கூறி, என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப் பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ?

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. 1155
     என்னைக் காப்பதானால், காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக; அவர் பிரிந்து போய்விட்டார் என்றால், மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும்.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை. 1156
     ‘பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால்’, அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னும் நம் ஆசையும், பயன் இல்லாததே!

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை. 1157
     நம்மைத் தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன்கையிலிருந்து கழலும் வளைகள், ஊரறிய எடுத்துக் காட்டித் தூற்ற மாட்டவோ?

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு. 1158
     தோழியவர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது; இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதை விட மிகவும் துன்பமானது.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. 1159
     தன்னைத் தொட்டால் சுடுவதல்லாமல், காமநோயைப் போலத் தன்னை அகன்று தொலைவில் விலகினால் சுடுவதற்குத் தீயும் ஆற்றல் உடையது ஆகுமோ!

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். 1160
     காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி, அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்!

117. படர்மெலிந்து இரங்கல்

மறைப்பேன்மன் யானி·தோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும். 1161
     பிரிவுத் துன்பமான இந்த நோயை, பிறர் அறியாதபடி மறைப்பேன்; ஆனால், அ·து ஊற்று நீரைப் போல மேன்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே.

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும். 1162
     காமநோயை முழுவதும் மூடி மறைக்கவும் முடியவில்லை; நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்ணைக்கு நாணம் தருகின்றதே!

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. 1163
     பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, காமமும் நாணமும் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே?

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல். 1164
     காமமாகிய நோயும் கடலைப் போலப் பெருகியுள்ளது; அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடனில்லாமற் போயினர்!

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர். 1165
     இனிமையான நட்புடைய நம்மிடையே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும் போது என்னதான் செய்வாரோ?

இன்பம் கடல்மற்றுக் காமம் அ·தடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது. 1166
     காம இன்பமானது அநுபவிக்கும் போது கடலளவு பெரிதாயுள்ளது; ஆனால், பிரிவுத் துன்பத்தால் வருத்தும் போது, அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே!

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன். 1167
     காமமாகிய கடும்புனலை நீந்தி நீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன்; இந்த நள்ளிரவிலும், யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்!

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை. 1168
     இந்த இராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந்நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே!

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா. 1169
     பிரிவுத் துயராலே வருந்தும் போது மிக நீண்டது போலக் கழிகின்ற இரவுப் பொழுதானது, நம்மைப் பிரிந்து போன காதலரினும் மிகமிகக் கொடுமையானது.

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண். 1170
     என் உள்ளத்தைப் போலவே, உடலும், அவர் இருக்கும் இடத்திற்கே இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே!

118. கண் விதுப்பு அழிதல்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. 1171
     இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக் காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்? 1172
     மேல்விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள், இன்று, என் துயரைப் பகுத்து உணராமல், தாமும் துன்பப்படுவதுதான் எதனாலோ?

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து. 1173
     அன்று, தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், நம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த இயல்பினையே உடையதாகும்.

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. 1174
     அன்று, யான் உய்யாத அளவு தீராத காமநோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர்வற்றி வறண்டு விட்டனவே!

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். 1175
     கடலிலும் பெரிதான காமநோயை அன்று எனக்குச் செய்த இக் கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன.

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. 1176
     எமக்கு இத்தகைய காமநோயைச் செய்த கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது, காண்பதற்கு மிகவும் இனியதாகும்.

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண். 1177
     விரும்பி உள் நெகிழ்ந்துவிடாதே, அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக!

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண். 1178
     உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர்; அதனால் என்ன பயன்? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே!

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். 1179
     காதலர் வராத போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்த போது, பிரிவஞ்சித் துயிலா; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன!

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து. 1180
     எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின், நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல், இவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும்.

119. பசப்புறு பருவரல்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற. 1181
     என்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை யாருக்குச் சென்று எடுத்துச் சொல்வேன்!

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு. 1182
     ‘அவர் தந்தார்’ என்னும் உரிமையினாலே, இப் பசப்புத் தானும், என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும் நிறைகின்றதே!

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து. 1183
     என் அழகையும் நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார்; அதற்குக் கைம்மாறாகக் காமநோயையும் பசலையையும் எனக்குத் தந்துள்ளார்!

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு. 1184
     அவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான் பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது!

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது. 1185
     அதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து போகின்றார்; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது வந்து பற்றிப் படருகின்றது!

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 1186
     விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக் காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. 1187
     தலைவனைத் தழுவியபடியே கிடந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன்; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக் கொள்வது போல, என் மீது மிகுதியாகப் பரவி விட்டதே.

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல். 1188
     ‘இவள் பசந்தாள்’ என்று என்னைப் பழித்துப் பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் கைவிட்டுப் பிரிந்தார் என்று பேசுபவர் யாரும் இல்லையே!

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின். 1189
     ‘பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையினர் ஆவார்’ என்றால், என்னுடைய மேனியும் உள்ளபடியே பசலை நோயினை அடைவதாக!

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின். 1190
     ‘பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்து போனவர், நமக்கு அருள் செய்யாதது பற்றித் தூற்றார்’ என்றால், யான் பசந்தேன் என்று பேர்பெறுவதும் நல்லதேயாகும்!

120. தனிப்படர் மிகுதி

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி. 1191
     தாம் விரும்பும் காதலர், தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்வின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப் பெற்றவர்கள் ஆவர்.

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. 1192
     தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது, உயிர்வாழ்பவருக்கு, வானம் மழை பெய்து உதவினாற் போன்றது ஆகும்.

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு. 1193
     காதலரால் விரும்பப்படுகிறவருக்கு, இடையில் பிரிவுத் துன்பம் வந்தாலும், ‘மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம்’ என்னும் செருக்குப் பொருந்துவது ஆகும்.

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின். 1194
     தாம் காதலிக்கின்ற காதலரால் தாமும் விரும்பப்படும் தன்மையைப் பெறாதவர் என்றால், அம் மகளிர், முன்செய்த நல்வினைப் பயனை உடையவரே அல்லர்.

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை. 1195
     நாம் காதல் கொண்டவர், நம் மீது தாமும் காதல் கொள்ளாவிட்டால், நமக்கு என்ன நன்மையைத் தான் செய்யப் போகின்றார்!

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. 1196
     ‘காதல் ஒருதலையானது’ என்றால் மிகவும் துன்பமானது; காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்ததானால், அதுவே மிகவும் இனிமையானது.

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். 1197
     இருவரிடத்திலும் ஒத்து நடக்காமல் ஒருவரிடம் மட்டும் காமன் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் காண மாட்டானோ?

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். 1198
     தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களை விட வன்கண்மை உடையவர்கள், யாரும் இல்லை.

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு. 1199
     யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைப் பிறர் சொல்லக் கேட்பதும், காதுகளுக்கு இனிமையாக இருக்கின்றது.

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. 1200
     நெஞ்சமே! நின்னிடம் அன்பற்றவருக்கு நின் நோயைச் சென்று சொல்லுகிறாயே; அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பதற்கு நீயும் முயல்வாயாக.