திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 14 ...

131. புலவி

புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. 1301
     நாம் ஊடும் போது அவர் அடைகின்ற அல்லல் நோயையும் சிறிது நேரம் காணலாம்; அதற்காக, அவர் வந்ததும், அவர் பாற் சென்று தழுவாமல் பிணங்கியிருப்பாயாக.

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். 1302
     உணவுப் பண்டங்களில், அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல்; அதை அளவு கடந்து சிறிது நீள விட்டாலும், உப்பின் மிகுதி போல அது கெட்டுவிடும்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். 1303
     தம்மோடு ஊடியவரைத் தெளிவித்துத் தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவாரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச் செய்வது போன்ற கொடுமையாகும்!

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. 1304
     ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப் போன வள்ளிக் கொடியின் வேரை அறுப்பது போன்றது ஆகும்.

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து. 1305
     நல்ல தகைமைகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவருக்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய அவர் காதலியர் இடத்தே உண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும்.

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று. 1306
     பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற் போனால், காமமானது, மிகக்கனிந்த கனியும், பழுக்காத கருக்காயும் போலப் பயனற்றது ஆகும்.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று. 1307
     ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது; அது, ‘கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ’ என்று நினைத்து வருந்தும் அச்சமாகும்.

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அ·தறியும்
காதலர் இல்லா வழி. 1308
     ‘நம்மாலே இவரும் நோயுற்றார்’ என்று உணர்ந்து, அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாத போது, வீணாக வருத்தம் அடைவதனால் என்ன பயன்?

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. 1309
     நீரும் நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும்; அதுபோன்றே, ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தே நிகழுமானால், இனிமையைத் தருவதாகும்.

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா. 1310
     ஊடல் கொண்ட போது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றவரோடு, எம் நெஞ்சம் ‘கூடுவோம்’ என்று நினைப்பது, அதுகொண்டுள்ள ஆசையினாலே ஆகும்.

132. புலவி நுணுக்கம்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு. 1311
     பரத்தனே! பெண் தன்மை உடையவர் எல்லாரும், பொதுப் பொருளாகக் கொண்டு நின்னைக் கண்ணால் உண்பார்கள். ஆதலால், நின் மார்பை யான் தழுவ மாட்டேன்!

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. 1312
     காதலரோடு யாம் ஊடியிருந்தேமாக, அவரும் அவ்வேளையில், யாம் தம்மை, ‘நீடுவாழ்க’ என்று வாழ்த்துரை சொல்லுவோம் என்று நினைத்துத் தும்மினார்!

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. 1313
     மரக்கிளையிலிருந்து கொணர்ந்த பூவைச் சூட்டினாலும், என் காதலி, ‘நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கே எனக்குச் சூட்டினீர்’ என்று காய்வாள்.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. 1314
     ‘யாரினும் நின்னையே விரும்புகின்றேம்’ என்று சொன்னேன் ஆக, அவள், ‘யாரினும்? யாரினும்?’ என்று கேட்டவளாக என்னோடும் ஊடிப் பிணங்கினாள்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். 1315
     ‘இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம்’ என்று சொன்னேனாக, இனி வரும் பிறப்பிலே பிரிவேம் என்று நான் கூறியதாகக் கருதிக் கண்களில் நீரைக் கொண்டனள்.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள். 1316
     ‘நின்னை நினைத்தேன்’ என்றேன்; ‘நினைத்தது உண்டாயின் மறந்திருந்தும் உண்டல்லவோ! என்னை ஏன் மறந்தீர்?’ என்று சொல்லி, அவள் தழுவாமல் பிணங்கினாள்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. 1317
     யாம் தும்மினேனாக ‘நூறாண்டு’ என்று கூறி வாழ்த்தினாள்; அடுத்து, அதை விட்டு, ‘எவர் நினைத்ததனாலே நீர் தும்மினீர்’ என்று கேட்டுக் கேட்டு அழுதால்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. 1318
     அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும், அடக்கினோனாக, ‘உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடி மறைத்தீரோ?’ என்று அவள் அழுதாள்.

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. 1319
     அவள் ஊடிப் பிணங்கிய போது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், ‘நீர் பிறமகளிர்க்கும் இத்தன்மையரே ஆவீர்’ என்று, என்மேற் சினம் கொள்வாள்.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. 1320
     அவள் அழகையே நினைத்து வியந்து பார்த்தாலும், ‘நீர் எவரையோ மனத்திற் கொண்டு எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தீரோ?’ என்று கேட்டுச் சினம் கொள்வான்.

133. ஊடல் உவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு. 1321
     அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்கு வல்லது ஆகும்.

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். 1322
     அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும், பின்னர்ப் பெருமை பெறும்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து. 1323
     நிலத்தோடு நீர் பொருந்தினாற் போல நம்மோடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும், தேவருலகத்து இன்பமும் சிறந்ததாகுமோ!

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை. 1324
     காதலரைத் தழுவி, விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும் தோன்றுகின்றது.

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து. 1325
     தவறு இல்லாதவரான போதும், தம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை உடலால் நீங்கியிருக்கும் போது, உடலிலும் ஓர் இன்பம் உள்ளது.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது. 1326
     உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும்; அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தை விட ஊடிப்பெறும் இன்பமே சிறந்தது!

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும். 1327
     ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர்; அந்த உண்மையானது, ஊடல் தெளிந்தபின், அவர் கூடி மகிழும் தன்மையிலே தெளிவாகக் காணப்படும்.

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு. 1328
     நெற்றி வெயர்வு அரும்பும்படி காதலருடன் கூடும்போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து, அவர் உணர்த்த மீளவும் சேர்ந்து இன்புறும் போது பெறுவோமோ?

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா. 1329
     ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே, யாம், அவளை இரந்து நிற்கும்படியாக, இராக்காலமும் இன்னும் நீள்வதாக!

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். 1330
     ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும்; காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவுதலையும் பெற்றால், அ·து, அதனினும் மிகுந்த இன்பமாகும்.

கற்பியல் முற்றிற்று

காமத்துப்பால் முற்றிற்று

திருக்குறள் முற்றிற்று