திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 5 ...

பொருட்பால்

அரசியல்

41. கல்லாமை

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். 401
     நிரம்பிய நூலறிவு இல்லாமல் கற்றவர் அவையிலே சென்று ஒருவன் பேசுதல், அரங்கம் இழைக்காமலே வட்டாடினால் போன்ற அறியாமையான செயல் ஆகும்.

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. 402
     கல்லாதவன், தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாதவளான பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும்.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். 403
     கற்றவர்களின் முன்பாகச் சென்று சொல்லாடாதிருந்தால், கல்லாதவர்களும், அந்த அளவுக்கு மிகவும் நல்லவர்களாகவே கற்றவரால் கருதப்படுவர்.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். 404
     கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். 405
     கல்லாத ஒருவன், தன்னையும் கற்றவர் போல மதித்துக் கொண்டு சொல்லாடினால், அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போய்விடும்.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். 406
     ‘உயிரோடு இருக்கின்றார்’ என்னும் அளவினரே அல்லாமல், எந்தப் பயனும் இல்லாத களர்நிலத்தைப் போன்றவர்களே கல்லாதவர் ஆவர்.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று. 407
     நுட்பமாகவும் சிறப்பாகவும் நுழைந்து கற்ற அறிவுநலம் இல்லாதவனின் உடல் அழகு, மண்ணால் அழகாகச் செய்த ஒரு பாவையின் உடல் அழகு போன்றதே!

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. 408
     கல்வியறிவு உடைய நல்லவரிடம் உள்ளதான வறுமையை விடக் கல்லாதவரிடம் சேர்ந்த அளவற்ற செல்வமானது பெரிதும் துன்பம் தருவதாகும்.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. 409
     மேலான குடியிலே பிறந்தவராயினும், கல்லாத மடமையாளர், தாழ்ந்த குடியிலே பிறந்தும் கற்றவரைப் போலப் பெருமை இல்லாதவர் ஆவர்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். 410
     அறிவு விளங்கும் நூல்களைக் கல்லாதவர்கள், மக்களை நோக்க விலங்குகள் இழிந்தவை ஆவது போல, கற்றவரைக் கருதத் தாமும் இழிந்தவர் ஆவர்.

42. கேள்வி

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. 411
     கேள்வியால் அடைகின்ற அறிவே செல்வங்களுள் சிறந்த செல்வம் ஆகும்; அந்தக் கேள்விச் செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானதும் ஆகும்.

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். 412
     செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 413
     செவியுணவு ஆகிய கேள்வியை உடையவர், இவ்வுலகத்தில் இருப்பவரானாலும், அவியுணவை ஏற்றுக் கொள்ளும் வானுலகத்துத் தேவர்களோடு ஒப்பாவார்கள்.

கற்றில னாயினுங் கேட்க அ·தொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 414
     தான் முயன்று கற்கவில்லை என்றாலும், கற்றவரிடம் கேட்டாவது அறிவு பெற வேண்டும்; அது ஒருவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல் போலத் துணையாகும்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். 415
     நல்ல ஒழுக்கம் உடையவரது வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் வழுக்காமல் செல்ல உதவும் ஊன்றுகோல் போல ஒருவனுக்கு எப்போதும் உதவியாக விளங்கும்.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 416
     எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்கவேண்டும்; அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும்.

பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். 417
     நுட்பமாகக் கற்றுணர்ந்த அறிவோடு கேள்வியறிவும் உடையவர்கள், பிறழ ஒன்றை உணர்ந்தாலும், தமக்குப் பேதைமை தருகின்ற சொற்களைச் சொல்லமாட்டார்கள்.

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. 418
     கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், பிற ஒலிகளை எல்லாம் கேட்குமாயினும், உண்மையில் செவிடான காதுகளே ஆகும்.

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. 419
     நுண்மையான கேள்வி அறிவைப் பெறாதவர்கள், தாம் வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையே! கேள்வியறிவு பெற்றவர்கள் பணிவாகவே பேசுவார்கள்.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்? 420
     கேள்வியாகிய அறிவுச் சுமையை உணராது, வாயால் அறியும் நாக்கின் சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான்.

43. அறிவு உடைமை

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். 421
     இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; பகைவருக்கும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையும் அந்த அறிவு ஆகும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. 422
     மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல் தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் மட்டுமே செல்லவிடுவது அறிவு ஆகும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 423
     எந்தப் பொருளைப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு ஆகும்.

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. 424
     கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும்.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. 425
     உயர்ந்தவர்களைத் தன்னுடையவர்களாகச் செய்து கொள்வதே அறிவு; அத் தொடர்பிலே முதலில் மகிழ்தலும் பின்னர் குவிதலும் இல்லாததும் அறிவு ஆகும்.

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. 426
     உயர்ந்தோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவ்வாறே, அந்த உயர்ந்தவர்களோடு தானும் அங்ஙனமே வாழ்வதுதான் அறிவுடைமை ஆகும்.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அ·தறி கல்லா தவர். 427
     பின்னே வரப்போவதை முன்னாலேயே அறிபவர்களே அறிவுடையவர்; அவ்வாறு அறிந்து நடப்பதற்குக் கல்லாதவர்களே அறிவில்லாதவர் ஆவர்.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். 428
     அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். 429
     பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காக்கும் அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வருவதான ஒரு துன்பமும் இல்லை.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். 430
     அறிவுடையோர் எல்லா நன்மையுமே உடையவர் ஆவர்; அறிவில்லாதவர் எதனை உடையவரானாலும் எந்த நன்மையும் இல்லாதவரே ஆவர்.

44. குற்றம் கடிதல்

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. 431
     செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும்.

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. 432
     ஈயாத உலோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத உவகையும் தலைவனாக இருப்பவனுக்குக் கேடுதரும் குற்றங்கள் ஆகும்.

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். 433
     பழிச்சொல்லுக்கு வெட்கப்படுகின்றவர்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதி வருந்துவார்கள்.

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை. 434
     தனக்கு முடிவைத் தருகின்ற கொடிய பகை குற்றமே; ஆகவே குற்றம் செய்யாதிருப்பதே பொருளாகத் தன்னை எப்போதும் காத்துக் கொள்க.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். 435
     குற்றம் வருவதற்கு முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது, நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு? 436
     தன் குற்றத்தையும் வராமல் நீக்கிக் கொண்டு, பிறர் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானானால், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்?

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும். 437
     செல்வம் பெற்ற போது அதனாலே செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று. 438
     செல்வத்தின் மேல் பற்றுக் கொண்ட உள்ளம் எனப்படும் கஞ்சத்தனம், எந்தக் குற்றங்களோடும் எண்ணப்படும் ஒன்றாக இல்லாமற், பெருங் குற்றமாகும்.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. 439
     எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடாது; நன்மை பயவாத செயல்களையும் ஒருபோதும் செய்ய விரும்புதலும் செய்தலும் கூடாது.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். 440
     தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும்.

45. பெரியாரைத் துணைக்கோடல்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். 441
     அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். 442
     நாட்டிற்கு வந்தடைந்த துன்பத்தை நீக்கி, மேலும் நாட்டில் துன்பம் வராதபடி முற்படக் காக்கும் தகுதியுடைய பெரியோரையே துணையாகக் கொள்ளல் வேண்டும்.

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். 443
     பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும்பேறு ஆகும்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. 444
     தன்னினும் பெரியோராக உள்ளவர்கள் தன் சுற்றத்தினராக ஆகுமாறு நடந்து வருதல், ஒருவனது வலிமையுள் எல்லாம் தலையான வலிமை ஆகும்.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். 445
     தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும்.

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். 446
     தகுதியுடைய பெரியோர்களின் துணையுள்ளவனாகத் தான் நடந்து கொள்ள வல்லவனைப் பகைவர் பகைத்துச் செய்யக்கூடிய துன்பம் ஏதுமில்லை.

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர். 447
     இடித்துக் கூறித் திருத்தும் துணைவரான பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். 448
     இடித்துச் சொல்லித் திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாத போதும், தானாகவே கெடுவான்.

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. 449
     முதல் இல்லாத வாணிகருக்கு அதனால் வரும் ஊதியமும் இல்லையாகும்; அவ்வாறே தன்னைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு உலகில் நிலைபேறும் இல்லை.

பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். 450
     பலரோடும் பகைத்துக் கொள்வதை விட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிட்டு விடுதல், அதனினும் பதின்மடங்கு தீமை தருவதாகும்.

46. சிற்றினம் சேராமை

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். 451
     பெரியோர் சிற்றினத்தைக் காணின் அஞ்சி ஒதுங்குவார்கள்; சிறியாரோ அதுவே தம் சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வார்கள்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. 452
     நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும்; அவ்வாறே, மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப்படியே அறிவும் ஆகும்.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல். 453
     மாந்தர்க்கு உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும்; இவன் இன்னவன் எனப்படும் சொல்லானது அவனவன் சேர்ந்த இனத்தாலே உண்டாகும்.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. 454
     ஒருவனது மனத்தில் உள்ளதுபோலக் காட்டினாலும், ஒருவனுக்கு அவன் சேர்ந்த இனத்தை யொட்டியதாகவே அறிவு உண்டாகும்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும். 455
     மனம் தூய்மை யாதலும், செய்யும் தொழில் தூய்மை யாதலும் ஆகிய இரண்டும், தான் சேர்ந்த இனத்தின் தூய்மையை ஒட்டியே வரும்.

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை. 456
     மனத்திலே தூய்மை உடையவர்களுக்கு எஞ்சி நிற்பதான புகழ் முதலியவை நன்றாக ஆகும்; சேர்ந்த இனம் தூய்மையானவர்க்கு நன்மையாகாத செயல் யாதுமில்லை.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். 457
     மனத்தின் நல்ல நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும்; இனத்தின் நல்ல துணையோ எல்லாவகையான புகழையும் ஒருவனுக்குத் தருவதாகும்.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து. 458
     சான்றோர் மனநலத்தினை நல்லபடியே உடையவரானாலும், அவருக்குத் தாம் சேர்ந்திருக்கும் இனத்தது நலமே எல்லாப் புகழையும் தரும்.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் ற·தும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. 459
     மனத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும்; மற்று அந்த மறுமையும், சேர்ந்த இனத்தின் செம்மையால் நல்ல பாதுகாப்புடன் இருக்கும்.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். 460
     நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாவது உலகத்தில் யாதுமில்லை; தீய இனத்தை விட அல்லல் படுத்துவதும் உலகத்தில் யாதுமில்லை.

47. தெரிந்து செயல்வகை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். 461
     ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அதனால் முதலில் அழியக்கூடியதும், பின்னர் ஆகிவரக்கூடியதும், கிடைக்கும் மிச்சமும் கருதிய பின்னரே செய்ய வேண்டும்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். 462
     தொழில் தெரிந்த நண்பர்களுடன் கலந்து எதையும் ஆராய்ந்து செய்பவருக்கு, முடிவதற்கு அரிய பொருள் என்று சொல்லக் கூடியது யாதொன்றுமே இல்லை.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். 463
     வரப்போவதாகக் கருதும் ஆக்கத்தை எண்ணி, செய்துள்ள முதலீட்டையும் இழக்கின்ற முயற்சியினை அறிவுடையவர்கள் ஒரு போதும் மேற்கொள்ள மாட்டார்கள்.

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். 464
     தமக்கு இகழ்ச்சி தருவதான ஒரு குறைபாட்டுக்கு அஞ்சுகிறவர்கள், ஊதியம் வரும் என்று தெளிவில்லாத செயலை ஒரு போதும் தொடங்க மாட்டார்கள்.

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு. 465
     ஒரு செயலைப் பற்றி எல்லாவகையிலும் முற்றவும் ஆராயாமல் செய்யத் தொடங்குதல், பகைவரை நல்ல பயிருள்ள பாத்தியுள் நிலைபெறுத்துவது போன்ற செயலாகும்.

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். 466
     செய்யத் தகுந்தது அல்லாது ஒரு செயலைச் செய்தாலும் பொருள் கெடும்; செய்யத் தகுந்த செயலைச் செய்யாமையாலும் பொருள் கெடும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. 467
     நன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலைச் செய்யத் துணிய வேண்டும்; ‘துணிந்த பின்னர் எண்ணுவோம்’ என்று எதையும் நினைப்பது குற்றமாகும்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். 468
     செய்வதற்கு உரிய வழிகளிலே முயன்று செய்யப்படாத தொழிலானது, பலர் துணை நின்று பின்னர்க் காத்தாலும் கெட்டுப் போய்விடும்.

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. 469
     அவரவரது இயல்புகளைத் தெரிந்து கொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் கூடக் குற்றம் உண்டாகிவிடும்.

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு. 470
     உயர்ந்தோர் இகழ்ச்சியாக நினையாத செயல்களையே ஆராய்ந்து செய்யவேண்டும்; உயர்ந்தோர் தம் தகுதியோடு பொருந்தாதவற்றை ஏற்கவே மாட்டார்கள்.

48. வலியறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். 471
     செயலில் வலிமையும், தன் வலிமையும், மாற்றானது வலிமையும், துணைசெய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலைச் செய்ய வேண்டும்.

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். 472
     தன்னாலே முடியக்கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச்செயலிலேயே நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். 473
     தம்மிடமுள்ள வலிமையை அறியாதவராய், மனவெழுச்சியினாலே தூண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே முரிந்து போனவர்கள் உலகிற் பலராவர்.

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். 474
     மற்றவரோடு பொருந்தி நடக்காதவனாகித் தன் வலிமை அளவை அறியாதவனும் ஆகி, தன்னை வல்லவன் என்று வியந்து நடப்பவன் விரைவிற் கெடுவான்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். 475
     மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முரிந்து கெடும்.

நுனிக்கொம்பர் ஏறினார் அ·திறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும். 476
     மரத்தின் நுனிக்கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால் அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும்.

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. 477
     தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக; அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியாகும்.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. 478
     வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். 479
     தன்னுடைய செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளது போலத் தோன்றினாலும் இல்லாததாய்க் கெடும்.

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். 480
     தன்னுடைய செல்வத்தின் அளவை ஆராயாது அளவு கடந்து உதவி வந்தால், அவன் செல்வத்தின் அளவும் விரைவில் கெட்டுப் போகும்.

49. காலமறிதல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481
     தன்னை விட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கு தகுந்த காலம் வேண்டும்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு. 482
     காலத்தோடு பொருந்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மை விட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்.

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். 483
     ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ?

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். 484
     தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்.

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். 485
     உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து. 486
     ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர் மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக்கடா பகையைத் தாக்குவதற்குப் பின் வாங்கும் தன்மையது.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487
     அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்ய அந்தக்கணமே தன் சினத்தை வெளியே காட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. 488
     தமக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்து போக, அவர்கட்கு முடிவுகாலம் வரும்போது அவர்கள் தலை கீழே விழும்.

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். 489
     கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. 490
     காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில், கொக்கைப் போல இருந்து; காலம் வாய்த்த போதில் கொக்கு மீனைக் குத்தினாற் போலத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

50. இடன் அறிதல்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது. 491
     பகைவரை முற்றுவதற்குத் தகுதியான இடத்தைக் கண்டபின் அல்லாமல், எந்தச் செயலையும் செய்ய வேண்டாம்; அவர் வலிமையை இகழாமலும் இருக்க வேண்டாம்.

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். 492
     மாறுகொள்ள வல்லவரான வலிமையாளருக்கும், அரணைச் சேர்ந்திருத்தலினால் உண்டாகும் வெற்றியானது பலவகைப் பயன்களையும் தரும்.

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். 493
     தகுந்த இடத்தை அறிந்து கொண்டு, பகைவர்களோடு போராடுதலைச் சிறப்பாகச் செய்தால், அவர்க்கு எதிர்நிற்க ஆற்றாதவரும், போரிட்டு அவரை அழிப்பர்.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். 494
     தகுதியான இடத்தை ஆராய்ந்து பற்றிக் கொண்டவர்கள், போரையும் நெருங்கிச் செய்தாரானால், அவரை வெல்ல எண்ணியவர், தம் எண்ணம் இழப்பார்கள்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. 495
     ஆழமான நீரினுள் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; நீரை விட்டு வெளியே வந்தால், முதலையை மற்றைய விலங்குகள் கொன்றுவிடும்.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. 496
     நிலத்திலே ஓடுவதற்குரிய வலிய சக்கரங்களைக் கொண்ட தேர்கள் கடலில் ஓடா; கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓடமாட்டா.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின். 497
     செய்ய வேண்டியவைகளை எல்லாம் நன்றாக ஆராய்ந்து தகுதியான இடத்திலும் செய்வாரானால், அவருக்கு மனவுறுதியைத் தவிரத் துணை எதுவும் வேண்டாம்.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். 498
     சிறு படையினை உடையவனும், தன் வலிமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் சேர்ந்திருந்தால், பெரும்படை உடையவனும் தன் முயற்சியில் தோல்வி காண்பான்.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. 499
     கடக்க முடியாத அரணும், பிற சிறப்புக்களும் இல்லாதவரானாலும், அவர்கள் வாழும் நாட்டினுள் சென்று தாக்கி அவரை வெற்றி பெறுதல் அரிதாகும்.

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. 500
     போர்க்களத்தில் வேலேந்திய வீரரையும் கோத்து எடுத்த கொம்புடைய அஞ்சாத களிற்றையும், அதன் கால் ஆழ்கின்ற சேற்று நிலத்தில், சிறுநரிகள் கொன்றுவிடும்.