திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 6 ...

பொருட்பால்

அரசியல்

51. தெரிந்து தெளிதல்

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். 501
     அறம், பொருள், இன்பம், தன் உயிருக்கு அச்சம் என்னும் நான்கினது வகையாலும் ஆராய்ந்தே, ஒருவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. 502
     நல்ல குடியிலே பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச் சொல் வரக்கூடாதென்று அஞ்சும் மனமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்.

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. 503
     அருமையான நூல்களைக் கற்று, குற்றங்கள் எதுவும் இல்லாதவரிடத்திலும், ஆராய்ந்தால் அறியாமை இல்லாமல் இருப்பது என்பது அருமையாகும்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். 504
     ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். 505
     ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும்.

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. 506
     உலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச் சொல்லுக்கு வெட்கப்பட மாட்டார்கள்.

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். 507
     அறிய வேண்டியவைகளை அறியாத ஒருவரைத் துணையாக, அன்புடைமை காரணமாகத் தேர்ந்து கொண்டால் எல்லாவகையான அறியாமையையும் அது தரும்.

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். 508
     தெளிவாக ஆராயாமல் ஒருவனைத் துணையாக நம்பியவனுக்கு அவனுக்கு மட்டுமின்றி அவன் வழிமுறையில் வருபவர்களுக்கும், தீராத துன்பம் உண்டாகும்.

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். 509
     ஆராயாமல் யாரையுமே நம்புதல் வேண்டாம்; ஆராய்ந்து நம்பியதன் பின்னால், அவர் சொல்லும் பொருள்களை நல்லவையாகவே நம்புதல் வேண்டும்.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். 510
     ஒருவனைப் பற்றி ஆராயாமல் நம்புவதும், அப்படி ஆராய்ந்து நம்பியவனிடத்திலே சந்தேகம் கொள்ளுவதும் தீராத துன்பத்தையே தரும்.

52. தெரிந்து வினையாடல்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். 511
     ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மையுடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. 512
     செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப்படுத்திக் கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. 513
     அன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந்நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே செயலுக்கு உரியவனாகத் தெளிய வேண்டும்.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். 514
     எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்த போதும், செய்யும் செயலின் வகையினாலே பொருத்தமற்று வேறுபடும் மாந்தர்கள் உலகில் பலர் ஆவர்.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. 515
     செய்யும் செயலைப் பற்றி நன்றாக அறிந்து, இடையில் வரும் துன்பங்களைத் தாங்கிச் செய்பவனை அல்லாமல், இவன் சிறந்தவன் என்று யாருக்கும் வேலை தரக்கூடாது.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். 516
     செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத்தகுந்த காலத்தோடு பொருந்தவே செயலைச் செய்ய வேண்டும்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். 517
     இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும்.

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். 518
     இந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து கண்ட பின்னால், அவனையே அந்த வேலைக்கு உரியவனாகச் செய்ய வேண்டும்.

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு. 519
     எப்போதும் தன் தொழிலிலே முயற்சி உடையவனது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனை விட்டுச் செல்வம் தானும் நீங்கிவிடும்.

நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு. 520
     தொழிலைச் செய்பவன் தன் கடமையைக் கோணாமல் செய்வானானால் உலகமும் கோணாது; ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனையே செயலில் வைப்பானாக.

53. சுற்றந் தழால்

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. 521
     ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல் என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்.

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும். 522
     அன்பில் நீங்காத சுற்றத்தார் அமைந்தனரானால், அது குறைவில்லாமல் வளருகின்ற பல செல்வ நலங்களையும் ஒருவனுக்குக் கொடுப்பதாகும்.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. 523
     சுற்றத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடைய வாழ்வானது, கரையில்லாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும்.

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். 524
     சுற்றத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனாலே அடைந்த பயனாக இருக்க வேண்டும்.

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். 525
     சுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தாலும், அவரோடு இனிதாகப் பேசுதலும் செய்வானாயின், அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான்.

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். 526
     மிகுதியாகக் கொடுக்கும் இயல்புள்ளவனாயும், சினத்தை விரும்பாதவனாயும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றம் உடையவர் உலகில் யாரும் இல்லை.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. 527
     காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும் அத்தகைய இயல்பினருக்கே சுற்றப் பெருக்கமும் உண்டாகும்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். 528
     எல்லாரையும் ஒரே தன்மையாகப் பொதுப்பட நோக்காது. அவரவர் தகுதிக்கேற்ப நோக்கிச் செய்வன செய்தால், அச்சிறப்பைக் கருதிச் சுற்றத்தார் சூழ்வர்.

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். 529
     சுற்றத்தாராக இருந்து தன்னைப் பிரிந்தவர்கள், பிரிவதற்கு ஏற்பட்ட காரணத்தை நீக்கிவிட்டால், மீண்டும் அவர்களே வந்து சேர்ந்திருப்பார்கள்.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத் திருந்து எண்ணிக் கொளல். 530
     காரணம் இல்லாமல் தன்னிடமிருந்து பிரிந்து, பின் ஒரு காரணத்தால் தன்பால் வந்த உறவினனை, அரசன் அதனைச் செய்து அவனைத் தழுவிக் கொள்ளவேண்டும்.

54. பொச்சாவாமை

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. 531
     சிறப்பான உவகையாலே மகிழ்ச்சியடைந்து, அதனால் கொள்ளும் மறதியானது, அளவுகடந்து கொள்ளும் சினத்தைக் காட்டிலும் தீமை தருவதாகும்.

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு. 532
     நாளுக்குநாள் பெருகும் வறுமைத் துயரமானது ஒருவனது அறிவைக் கெடுத்தலைப் போல, மறதியானது, ஒருவனது புகழையும் தவறாமல் கெடுத்து விடும்.

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. 533
     மறதி உடையவர்களுக்கு புகழ் உடைமை என்பது இல்லை. அது உலகத்திலுள்ள எத்தகைய நூலோர்க்கும் ஒத்ததாக விளங்கும் ஒரு முடிவு ஆகும்.

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு. 534
     அச்சம் உடையவர்களுக்கு அரண்காவல் இருந்தும் பயனில்லை, அவ்வாறே மறதி உடையவர்களுக்கு நல்ல செல்வநலம் இருந்தாலும் அதனால் பயன் இல்லை.

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும். 535
     துன்பம் வருவதற்கு முன்னதாகவே தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன், பின்னர்த் துன்பம் வந்த போது, தன்பிழையை நினைத்து வருந்துவான்.

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல். 536
     மறதியில்லாத இயல்பு எவரிடத்தும் எக்காலத்தும் குறையாமல் இருந்தால், அதற்கு ஒப்பாக நன்மை தருவது வேறு எதுவும் இல்லை.

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். 537
     மறவாமை என்னும் கருவியினாலே எதனையும் பேணிச் செய்தால், செய்வதற்கு அரியன என்று நினைத்துக் கைவிடும் செயல்களும் இல்லையாகும்.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். 538
     சான்றோர்கள் சிறந்தவையாகப் போற்றும் கடமைகளைப் போற்றிச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்தவருக்கு எழுமையும் நன்மை இல்லை.

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 539
     தாம், தம்முடைய மகிழ்ச்சியினாலே செருக்கடையும் போது, முன்னர் அப்படிப்பட்ட மகிழ்ச்சியினாலே மறதியடைந்து கெட்டழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். 540
     தான் அடையக் கருதியதை இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால், ஒருவன், தான் நினைத்ததை அடைதல் என்பது எளிதாயிருக்கும்.

55. செங்கோன்மை

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வ·தே முறை. 541
     நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி. 542
     மழையின் செம்மையை எதிர்பார்த்து உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும்; மன்னவனின் செங்கோன்மையை எதிர்பார்த்துக் குடிகள் வாழ்வார்கள்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். 543
     அந்தணரது நூல்களுக்கும், உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாக நின்றது, மன்னவனது அறம் தவறாத செங்கோன்மையே ஆகும்.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. 544
     குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் மாநிலத்து வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து வாழ்வும் நிலைபெறுவதாகும்.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. 545
     அரசனுக்குரிய இயல்போடு செங்கோல் செலுத்தும் மன்னவனின் நாட்டிலே, பருவமழையும், விளைபொருள்களும் ஒருங்கே மலிந்திருக்கும்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். 546
     மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்தானால் அதுவே வெற்றி அளிப்பதாகும்.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். 547
     உலகத்தாரை எல்லாம் மன்னவன் காப்பாற்றி வருவான்; முறை தவறாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தால், அது அவனைக் காப்பாற்றி நிற்கும்.

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். 548
     முறையிட வருபவரது காட்சிக்கு எளியவனாய், அவர்கள் குறைகளைக் கேட்டு ஆராய்ந்து முறைசெய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையிலே சென்று தானே கெடுவான்.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். 549
     குடிகளைப் பகைவரிடமிருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை செய்து பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால் வேந்தனுக்குக் குற்றம் இல்லை; அதுவே அவன் தொழில்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். 550
     கொடிய செய்வாரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும்.

56. கொடுங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. 551
     குடிகளை வருந்தச் செய்யும் செயல்களையே மேற்கொண்டு தீமை செய்து ஆட்சி நடத்துகிற வேந்தன், கொலையையே தொழிலாகக் கொண்டவரிலும் கொடியவனாவான்.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. 552
     அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், ‘எல்லாவற்றையும் தந்துவிடு’ என்று கேட்பதைப் போன்றதாகும்.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். 553
     நாட்டிலே நாள்தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறைசெய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்துவிடுவான்.

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. 554
     மேல் நடப்பதைப் பற்றி கருதாமல், முறை தவறி அரசாளுகின்ற மன்னவன், தன் பொருள் வளத்தையும், நாட்டு மக்களது அன்பையும், ஒருங்கே இழந்து விடுவான்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. 555
     கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும்.

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அ·தின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி. 556
     செங்கோன்மையால் தான் மன்னர்க்குப் புகழ் நிலைக்கிறது; அந்தச் செங்கோன்மை இல்லை என்றால், பிறவற்றால் வரும் புகழ் எல்லாம் நிலை பெறாது.

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு. 557
     மழையில்லாத நிலைமை உலகத்துக்கு எத்தகைய துன்பம் தருமோ, அவ்வாறே அரசனின் அருளில்லாத தன்மை, அவன் நாட்டில் வாழ்பவருக்குத் துன்பம் தரும்.

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். 558
     முறைப்படி ஆட்சி செய்யாத மன்னவனின் கொடுங்கோலின்கீழ் வாழ்ந்திருந்தால், ஏழ்மையைக் காட்டிலும், செல்வம் உடைமையே துன்பம் தரும்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். 559
     ஆட்சிமுறை கோணி மன்னவன் ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறிப் போக, மேகமும் வேண்டுங்காலத்து மழை பொழியாது ஒதுங்கிப் போகும்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். 560
     காவலன் முறையோடு நாட்டைக் காத்து வராவிட்டால், அந்நாட்டிலே பசுக்களும் பால்வளம் குன்றும்; அறு தொழிலோரும் மறைநூல்களை மறப்பார்கள்.

57. வெருவந்த செய்யாமை

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 561
     ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாலே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி, குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும்.

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். 562
     நெடுங்காலம் ஆக்கம் நீங்காமல் இருத்தலை விரும்புகிறவர்கள், குற்றஞ் செய்தவரைத் தண்டிக்கும் போது; கடுமையைக் காட்டினாலும் அளவோடு தண்டிப்பாராக.

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். 563
     குடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப் போய் அழிவை அடைவான்.

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். 564
     ‘எம் அரசன் கடுமையானவன்’ என்று மக்கள் சொல்லும் பழிச்சொல்லுக்கு ஆளாகிய வேந்தன், தன் ஆயுளும் விரைவில் கெட்டுப் போக, அழிவை அடைவான்.

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து. 565
     எளிதாகக் காணமுடியாத தன்மையும், கடுமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம், பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும்.

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும். 566
     கடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து அப்போதே கெடும்.

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். 567
     கடுமையான சொல்லும், முறை கடந்த தண்டனையும், அவ்வரசனுடைய பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும்.

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு. 568
     அமைச்சர் முதலானவரோடு கலந்து ஆராய்ந்து செய்யாமல், தன் சினத்தின் வழியிலேயே சென்று பிறரைச் சீறுவானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். 569
     போர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத வேந்தன், அது வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாமல் அஞ்சியவனாக, அழிந்து போவான்.

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை. 570
     கொடுங்கோல் ஆட்சியானது மூடர்களையே தனக்குத் துணையாக்கிக் கொள்ளும்; அந்த ஆட்சியை அல்லாமல் பூமிக்குப் பாரம் என்பது வேறு யாதும் இல்லை.

58. கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. 571
     ‘கண்ணோட்டம்’ என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய அழகு இருப்பதனாலேதான். இவ்வுலகமும் அழிவு அடையாமல் நிலைப்பெற்றிருக்கிறது.

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அ·திலார்
உண்மை நிலக்குப் பொறை. 572
     உலக நடைமுறை என்பது கண்ணோட்டத்தினால் நடந்து வருவதே; ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது உலகத்திற்கு வீண் சுமைதான்.

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். 573
     பொருளோடு பாடல் பொருந்தவில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை; அது போலவே, கண்ணோட்டத்தோடு அமையாத கண்களாலும் பயன் இல்லை.

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 574
     தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்?

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அ·தின்றேல்
புண்ணென்று உணரப் படும். 575
     கண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே! அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது ‘புண்’ என்றே சான்றோரால் கருதப்படும்.

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். 576
     கண்ணோடு பொருந்தியவராக இருந்தும், கண்ணோட்டம் ஆகிய செயலைச் செய்யாதவர்கள், மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். 577
     கண்ணோட்டம் இல்லாதவர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்களே; கண்ணுடையவர்கள், கண்ணோட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருத்தமில்லை.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. 578
     தொழிலே கெடுதல் ஏற்படாமல், எவரிடமும் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ள வல்லவர்களுக்கு, இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. 579
     தம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்ததாகும்.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். 580
     விரும்பத்தகுந்த ‘கண்ணோட்டம்’ என்னும் நாகரிகத்தை விரும்பும் சான்றோர்கள், பழகியவர் நஞ்சைப் பெய்வதைக் கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள்.

59. ஒற்றாடல்

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். 581
     ஒற்றர்களும், புகழ் அமைந்த அறநூலும் என்னும் இந்த இரண்டு பகுதியையுமே, ஒரு மன்னன் தனக்குரிய இரு கண்களாகக் கொள்ளல் வேண்டும்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். 582
     எல்லாருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும், எல்லாக் காலத்திலும், மிகவும் விரைவாக ஒற்றர்மூலம் அறிந்து கொள்ளுதல், வேந்தனுக்கு உரிய தொழிலாகும்.

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல். 583
     பகைநாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றர்மூலமாகத் தெரிந்து கொண்டு, அவற்றின் பொருளையும் ஆராய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றி கொள்வதற்கு வழியே இல்லை.

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. 584
     அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய சுற்றத்தினர், அரசனை விரும்பாத பகைவர், என்று சொல்லப்படும் அனைவரையும் ஆராய்வதே, ஒற்றரின் கடமை.

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. 585
     சந்தேகப்படாத மாற்றுருவுடன், எவருடைய பார்வைக்கும் அஞ்சாமல், அறிந்ததைத் தன் அரசனைத் தவிரப் பிறருக்கு வெளிப்படுத்தாமலிருக்க வல்லவே ஒற்றன்.

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று. 586
     புகமுடியாத இடங்களுக்கும், துறவியர் வேடத்தோடு சென்று, அனைத்தையும் ஆராய்ந்து, எவர் யாது செய்தாலும் அதனால் சோர்வடையாதவனே ஒற்றன்.

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று. 587
     மறைவான பேச்சுக்களையும் கேட்டு அறியக்கூடிய திறமை உள்ளவனாகி, தான் அறிந்தவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன்.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். 588
     ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும், மற்றுமோர் ஒற்றனை ஏவி அறிந்து வருமாறு செய்து, உண்மையை ஒப்பிட்டு அறிதல் வேண்டும்.

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும். 589
     ஓர் ஒற்றன் மற்றோர் ஒற்றனை அறியாதபடி பார்த்துக் கொள்வதோடு, இப்படி மூன்று ஒற்றர் சொல்வதையும் ஒருங்கே ஆராய்ந்தே, உண்மை தெளியவேண்டும்.

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. 590
     பிறர் அறியும்படியாக ஒற்றனுக்குச் சிறப்புக்களைச் செய்யக் கூடாது; செய்தால், மறைக்க வேண்டிய இரகசியத்தை அரசனே வெளிப்படுத்தினவன் ஆவான்.

60. ஊக்கம் உடைமை

உடையர் எனப்படுவது ஊக்கம் அ· தில்லார்
உடையது உடையரோ மற்று. 591
     ஊக்கம் உடைமையே ‘உடையவர்’ என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். 592
     ஊக்கம் உடைமையே ஒருவனது நிலையான செல்வம் ஆகும்; மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கியும் போய்விடும்.

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 593
     உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தாம் செல்வம் இழந்தபோதும், இழந்தோமே என்று நினைத்து, வருந்த மாட்டார்கள்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. 594
     தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம், தானே அவரிருக்கும் இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. 595
     நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும்; அதுபோலவே, மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 596
     உயர்ந்த நிலைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும்; அந்த நிலை கைகூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவே கூடாது.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. 597
     தன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன் பெருமையை நிலைநிறுத்தும்; அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள்.

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு. 598
     ‘யாம் வள்ளன்மை உடையோம்’ என்னும் இறுமாந்த நிலையை, ஊக்கம் இல்லாதவர்கள், இவ்வுலகத்தில் ஒரு போதும் அடையவே மாட்டார்கள்.

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். 599
     பெருத்த உடலும் கூர்மையான கொம்புகளும் இருந்தாலும், யானையானது, மனவூக்கமுள்ள புலி தன் மீது பாய்ந்தால், தான் அச்சம் கொள்ளும்.

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅ· தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. 600
     ஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமே! அந்த ஊக்கம் ஆகிய செல்வம் இல்லாதவர், உருவத்தால் மக்கள் போலத் தோன்றினாலும், மரங்களைப் போன்றவரே!