திருவள்ளுவர்

இயற்றிய

திருக்குறள்

உரையாசிரியர் : புலியூர்க் கேசிகன்

... தொடர்ச்சி - 9 ...

பொருட்பால்

அங்கவியல்

81. பழைமை

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. 801
     ‘பழமை என்னும் தொடர்பின் தன்மை யாது?’ என்றால், அது, உண்டாகிய உரிமைத் தொடர்பை எதுவும் சிதைத்து விடாமல் காத்துவரும் நல்ல நட்பு ஆகும்.

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன். 802
     நட்புக்கு உறுப்பாவது நெருக்கமாகப் பொருந்தும் உரிமைத் தன்மை ஆகும்; அப்படிப்பட்ட உரிமைத் தன்மைக்கு இலக்கணமாக நடத்தல் சான்றோரது கடமை.

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை. 803
     தாம் கொண்ட நெருக்கமான உறவுத் தன்மையானது, தன் நண்பரிடத்திலும் அமைந்திராவிட்டால், அவரோடு நெடுங்காலம் பழகிய நட்பும் என்ன பயனைச் செய்யும்?

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். 804
     தம்மோடு கொண்ட நெருக்கமான நட்புரிமை காரணமாக, ஒரு செயலைச் செய்துவிட்டாலும், அதனைத் தாமும் விரும்பினவரைப் போல் இருப்பவரே, நல்ல நண்பர்கள்.

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின். 805
     நட்பாகக் கொண்டவர் நாம் மனம் விரும்பாத ஒரு செயலைச் செய்தாரென்றால், அதனை அறியாமை என்று நினைக்கக் கூடாது; நட்புரிமை என்றே நினைக்க வேண்டும்.

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. 806
     அறிவுடையவர், தமது தொல்லைகளின் போது உதவியாக நின்றவரின் தொடர்பை, அவர் தொலைவான இடங்களுக்குப் போனாலும் கூடக் கைவிட மாட்டார்கள்.

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். 807
     அன்பாலே பொருந்திய நட்பை உடையவர்கள், அழிவு வரக்கூடிய ஒரு செயலைச் செய்தாலும், அவர் மீது நாம் கொண்டிருந்த அன்பு அறுந்து போகாது.

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின். 808
     நண்பரின் குற்றங்குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாத நட்புரிமை வல்லவர்களுக்கு, நண்பர் குற்றம் செய்தால், அது அந்நாளின் குறையாகவே தோன்றும்.

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. 809
     கெடுதல் இல்லாத வழியோடு தொடர்ந்து பழகி வந்த நட்பினை எதனாலும் கைவிடாத பண்பினரை, உலகத்தார் எல்லாருமே நண்பராகக் கொள்ள விரும்புவார்கள்.

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். 810
     பழமையான நண்பர்களிடத்திலும், சற்றும் விலகாமல் நடந்து கொள்ளும் பண்பினர், தம் பகைவராலும் விரும்பி நட்பாக்கிக் கொள்ளப் படுவார்கள்.

82. தீ நட்பு

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது. 811
     நம்மை அள்ளிப் பருகுவர்போல அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது, நாளுக்குநாள் பெருகுவதை விடக் குறைந்து போவதே இனியது.

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்? 812
     செல்வம் உண்டானால் நட்புச் செய்தும், அது போனால் விலகியும் போகின்ற, ஒத்த தன்மையில்லாத தீயோரின் நட்பினைப் பெற்றாலும், இழந்தாலும் ஒன்றுதான்.

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர். 813
     தாம் அடைவதையே சீர்தூக்கிப் பார்த்திருக்கும் நட்பும், தாம் பெறுவதைக் கொள்ளும் விலைமகளிரும், நம் பொருளைக் களவாடும் கள்வரும், ஒரே தன்மையினரே!

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. 814
     போர்க்களத்தின் இடையில் நண்பரை விட்டுவிட்டுத் தாம் ஓடிப்போய்விடும், கல்லாத விலங்கு போன்றவரின் நட்பை விடத் தனிமையே மிகவும் சிறந்தது.

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. 815
     நமக்குத் துன்பம் வந்த போது உதவி செய்து காப்பாற்றுவதற்கு வராத சிறுமையாளரது புன்மையான நட்பை அடைதலைவிட, அடையாததே நன்மையாகும்.

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும். 816
     பேதையாளனது மிகவும் செறிவான நட்பைக் காட்டிலும் அறிவுடையவர்களின் தொடர்பு இல்லாமல் இருப்பது, ஒருவனுக்கு கோடி நன்மை தருவதாக விளங்கும்.

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும். 817
     வெற்றுரை பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமே பயன்படும் தீயோரின் நட்பைக் காட்டிலும், பகைவராலே, பத்துக் கோடிக்கும் மேலான நன்மை நமக்குக் கிடைக்கும்.

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல். 818
     நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்யவிடாமல், வீண்பொழுது போக்குபவரது நட்பு உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு, நீக்கிவிட வேண்டும்.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. 819
     தம் செயல்கள் வேறாகவும், தம் பேச்சுக்கள் வேறாகவும் நடப்பவரின் தொடர்பானது, நனவில் மட்டுமே அல்லாமல், கனவிலும் கூடத் துன்பமானதாகும்.

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு. 820
     வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொதுமன்றிலே பழித்துப் பேசுபவரின் தொடர்பு, எந்தச் சிறிய அளவுக்கேனும், நம்மை அடையாதபடி காத்தல் வேண்டும்.

83. கூடா நட்பு

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. 821
     உள்ளத்தால் நெருக்கமில்லாமல் பழகுகிறவரது நட்பானது, நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால், எறிவதற்கு மறைந்துள்ள பட்டடை போன்றது ஆகும்.

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். 822
     நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பானது, விலைமகளிர் மனம் போலப் பெறுகிற பயனுக்குத் தகுந்தபடி மாறிவிடும்.

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது. 823
     பலவான நல்ல அறநூல்களை எல்லாம் கற்றிருந்தாலும், தம் மனத்திலே நல்ல பண்பினர் ஆகுதல் என்பது, பெருந்தன்மைப் பண்பு இல்லாதவருக்கு அரிய செயலாகும்.

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். 824
     முகத்திலே இனிமை தோன்றச் சிரித்துப் பேசினபோதும் அகத்திலே துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவினை, விளையும் தீமைக்கு அஞ்சி, விட்டு விட வேண்டும்.

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. 825
     மனத்தாலே நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை, எந்த ஒருவகையாலும், அவர் சொல்லினால் மட்டுமே நல்ல நண்பராகத் தெளிந்து கொள்ளக் கூடாது.

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். 826
     நம்மிடம் பேசும் போது நமக்கு நண்பரைப் போலவே நல்ல பேச்சுகளைச் சொன்னாலும், நம்மோடு ஒட்டாதவரின் வஞ்சகத்தை விரைவிலேயே அறிந்துவிடலாம்.

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். 827
     வில்லின் விளைவு தீமையைக் குறியாகக் கொண்டதே; இவ்வாறே பகைவரிடத்திலிருந்து வரும் வணக்கமான பேச்சையும் தீமைதரும் என்று தள்ளிவிட வேண்டும்.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. 828
     நம்மைத் தொழும்போது கூடப் பகைவரது கையினுள் கொல்வதற்கான படை மறைக்கப்பட்டிருக்கும்; பகைவர் அழுதுவடிக்கும் கண்ணீரும் அந்தத் தன்மையதே!

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று. 829
     வெளிப்பட மிகுதியாக நட்புச்செய்து, உள்ளத்திலே நம்மை இகழுகிறவர்களை, நாமும் மகிழ்ச்சியடையச் செய்து, நம் உள்ளத்தில் அந்த நட்பை அழித்துவிடல் வேண்டும்.

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல். 830
     பகைவரும் நட்பாகப் பழகுவதற்கு ஏற்ற காலம் வருங்காலத்திலே, அவருடன் முகத்தளவால் நட்புச் செய்து, உள்ளத்தில் போற்றாது நீக்கிவிடுதல் வேண்டும்.

84. பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். 831
     ‘பேதைமை’ என்பதன் தன்மை யாது?’ என்றால், ஒன்றைச் செய்யும் போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு, அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும்.

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல். 832
     பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது, விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும்.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். 833
     பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்புகொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும், பேதையரது தொழிலாகும்.

ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். 834
     நூல்களை முறையாக ஓதி உணர்ந்தும், பிறருக்குச் சொல்லி வந்தும், தான் அடக்கத்தைக் கொள்ளாத பேதையிலும், பெரிய பேதையர் உலகில் எவரும் இலர்.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு. 835
     இந்தப் பிறப்பில் பேதைமைச் செயல்களையே செய்துவரும் பேதை. தொடர்ந்து வரும் ஏழு பிறப்பினையும், தான் புகுந்து அழுந்தும் நரகங்களாகவே காண்பான்.

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின். 836
     ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான்.

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை. 837
     பேதை, தன் முன்வினைப் பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்.

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின். 838
     பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கள்ளைப் பருகியது போல நிலைமாறி வழிதவறி நடப்பான்.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில். 839
     ஒருவகையில், பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும்; அதுதான், அவனைப் பிரிந்த விடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாததால்.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். 840
     சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும்.

85. புல்லறிவாண்மை

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு. 841
     அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை; பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது.

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம். 842
     அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை.

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது. 843
     அறிவில்லாதவர், தமக்குத் தாமே செய்து கொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாதவையாக இருக்கும்.

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. 844
     ‘அறியாமை என்று சொல்லப்படுவது யாது?’ என்றால், அ·து, அறிவில்லாதவனும், ‘தான் அறிவுடையவன்’ என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்!

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும். 845
     தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும்.

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. 846
     தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாதபோது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும்.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. 847
     அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப் பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத்தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான்.

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். 848
     அறிவுடையோர் ‘இன்னின்னபடி செய்க’ என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான்.

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. 849
     தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். 850
     உலகத்தார் ‘உண்டு’ என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே ‘இல்லை’ என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கி வைக்கப்படுவான்.

86. இகல்

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய். 851
     எல்லா உயிர்களுக்கும், பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீய குணத்தை வளர்க்கும் குற்றம், ‘இகல்’ என்று பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள்.

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை. 852
     தம்முடன் கூடாமையை நினைத்து, ஒருவன் வெறுக்கக் கூடியன செய்தானானாலும், அவனோடு மாறுபடுதலைக் குறித்து, அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்தது!

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும். 853
     ‘மாறுபாடு’ என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்தில் இருந்தே நீக்கி விட்டால், அவனுக்கு எந்தக் காலத்திலும் உள்ளவனாகின்ற நிலையான புகழை, அதுவே தரும்.

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். 854
     ‘மாறுபாடு’ என்னும் துன்பங்களுள் பெரிதான துன்பம் இல்லையானால், அவ்வின்மையே ஒருவனுக்கு இன்பங்களுள் எல்லாம் சிறந்த இன்பத்தைத் தரும்.

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர். 855
     தம் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய பொழுது, அதனை ஏற்றுக் கொள்ளாமல் சாய்ந்து ஒழுகவல்லவரை வெல்லக் கருதும் தன்மை உடையவர், எவருமே இலர்.

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. 856
     ‘பிறரோடு அவரினும் மிகுதியாக மாறுபடுதல் எனக்கு இனிது’ என்று, அதனைச் செய்பவனது உயிர்வாழ்க்கை, சிறுபொழுதிற்குள் பிழைத்தலும் கெடுதலும் ஆகிவிடும்.

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். 857
     இகலோடு பொருந்தும் தீய அறிவினைக் கொண்டவர், வெற்றி பொருந்துதலை உடைய நீதி நூற்களின் பொருள்களை ஒருபோதுமே உணர்ந்து அறிய மாட்டார்கள்.

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. 858
     தன் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய போது, அதனை எழாமல் தடுத்துக் கொள்ளுதலே ஆக்கம் தருவதாகும்; அதனை மிகுத்துக் கொண்டால் அவனுக்குக் கேடு வரும்.

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. 859
     தனக்கு நல்ல காலம் வரும் போது, காரணமிருந்தாலும் ஒருவன் இகலைப் பற்றி நினைக்க மாட்டான்; தனக்குக் கேடு காலம் வரும் போது பெரிதாக மாறுபடுதலை நினைப்பான்.

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு. 860
     ‘மாறுபாடு’ என்னும் ஒன்றினால் ஒருவனுக்கு எல்லாத் துன்பங்களும் உண்டாகும்; நட்புச் செயலினாலோ, நல்ல நீதியாகிய பெருமிதநிலை உண்டாகும்.

87. பகைமாட்சி

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. 861
     தம்மை விட வலியவருக்குப் பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிடல் வேண்டும்; தம்மினும் மெலியவருக்குப் பகையாவதை விடாமல் கொள்வதற்கு விரும்ப வேண்டும்.

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு. 862
     தன் சுற்றத்தாரிடம் அன்பில்லாதவன், வலிய துணையில்லாதவன், தானும் வலிமையற்றவன், பகைவரது வலிமையை எவ்வாறு, எதனால் போக்க முடியும்?

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. 863
     அஞ்சுபவன், அறியவேண்டுவதை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவருக்கும் கொடுத்து உதவாதவன், பகைவருக்கு அழிப்பதற்கு எளியவனாவான்.

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. 864
     நீங்காத சினத்தை உடையவன், நிறைவான மனவலிமை இல்லாதவன் ஆகிய ஒருவன் மீது பகைத்து வெற்றியடைதல், எக்காலத்திலும் எவர்க்கும் எளிதாகும்.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது. 865
     நீதி நூல்களைக் கல்லாதவன், அவை விதித்த செயல்களைச் செய்யாதவன், தனக்கு வரும் பழியைப் பாராதவன், பண்பற்றவன், ஆகியவனைப் பகைத்தலும் இனிதாகும்.

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும். 866
     தன்னையும் பிறரையும் அறியாமைக்கு காரணமான சினம் கொண்டவன், மேன்மேலும் பெருகும் காமத்தான் பகைமை, பிறரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும்.

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை. 867
     தொடங்கும்போது உடனிருந்து, பின் கேடுகளைச் செய்பவன் பகைமையை, சில பொருள்களை அழியும்படி கொடுத்தாவது உறுதியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து. 868
     நல்ல குணம் எதுவும் இல்லாதவனாய், குற்றங்களும் பலவாக உள்ளவன், எவ்வகைத் துணையுமே இல்லாதவன் ஆவான்; அப்படி இல்லாததே அவன் பகைவருக்குத் துணையாகும்.

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். 869
     நீதியை அறிதல் இல்லாதவரும் அஞ்சுபவரும் ஆகியவரைப் பெற்றால், அவரைப் பகைத்தவர்க்கு, உயர்ந்த இன்பங்கள் எல்லாம் சென்று நீங்காமல் பொருந்தியிருக்கும்.

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. 870
     நீதி நூலைக் கல்லாதவனோடு பகை கொண்டு அழிப்பதனால் வரும் சிறுபொருளை, எப்போதும் தான் அடைவதற்கு நினையாதவனை, வெற்றிப் புகழும் சேர்ந்திருக்காது.

88. பகைத்திறம் தெரிதல்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று. 871
     ‘பகை’ என்று கூறப்படும் தீமை தருவதனை, ஒருவன், விளையாட்டிடத்தில் என்றாலும் விரும்புதல் நன்மையாகாது; இதுவே நீதி நூல்களில் முடிந்த முடிப்பாகும்.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை. 872
     வில்லை ஏராகவுடைய உழவரான மறவரோடு பகை கொண்டாலும், சொல்லை ஏராகவுடைய உழவரான நுண்ணறிவை உடையவரோடு பகை கொள்ளக் கூடாது.

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். 873
     தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகைகொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான்.

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. 874
     தான் வேண்டும் போது, தன் பகைவருள் சிலரைப் பிரித்து நண்பராக்கிக் கொள்ளும் சூழ்ச்சித்திறனுடைய அரசனது பெருமையினுள்ளே, இவ்வுலகமே அடைங்கிவிடும்.

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 875
     ‘தனக்கு ஒரு துணை இல்லை; பகையோ எனில் இரண்டு’ என்னும் போது, அதனுள் ஒன்றை அப்போதைக்குத் தனக்கு இனிய துணையாகுமாறு செய்து கொள்ளல் வேண்டும்.

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். 876
     பகைவனை முன்பே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும், தனக்கு மற்றொரு செயலினாலே தாழ்வு வந்தவிடத்து, அவரைக் கூடாதும் நீக்காதும், விட்டு வைக்க வேண்டும்.

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து. 877
     தான் நொந்ததைத் தாமாகவே அறியாத நண்பருக்குச் சொல்ல வேண்டாம்; வலியிழந்த நேரத்தை எதிர்பார்க்கும் பகைவரிடம் தன் மெலிவையும் புலப்படுத்த வேண்டாம்.

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு. 878
     தான் செய்யும் செயலின் வகையை அறிந்து, அது முடிவதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிச் சோம்பல் புகாமல் காக்கவே, பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்துவிடும்.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. 879
     களைய வேண்டிய முள்மரத்தை அது இளைதான பொழுதே களைந்து விடுக; முதிர்ந்த பின் அதைக் களைதலைச் செய்தால், அது களைபவர் கையினைத் தான் களைந்துவிடும்.

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். 880
     பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார்.

89. உட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். 881
     நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும்; தழுவவேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் முதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும்.

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. 882
     வாளைப் போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம்; சுற்றத்தார் போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே, அஞ்ச வேண்டும்.

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். 883
     உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அங்ஙனம் காவாதிருப்பின், தனக்குத் தளர்ச்சி வந்த போது, அவர்கள் கெடுதல் செய்வார்கள்.

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும். 884
     உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால், அரசன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும்; இல்லையானால், அ·து சுற்றம் வசமாகாதபடி குற்றங்களைத் தந்துவிடும்.

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். 885
     புறத்தே உறவு முறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அ·து, அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும்.

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது. 886
     தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும்.

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. 887
     செப்பின் புணர்ச்சி போல வெளிப்பார்வைக்குப் பொருந்தினவர் ஆயினும், உட்பகை உண்டாகிய குடியிலுள்ளவர்கள் தம் உள்ளத்தினாலே ஒன்று கூட மாட்டார்கள்.

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. 888
     முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும்.

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு. 889
     ஒருவனது உட்பகை, அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவு போன்று சிறிதானது என்றாலும், அதனாலும், அவன் பெருமை எல்லாம் பின் காலத்தில் கெட்டுவிடும்.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. 890
     மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு கூடத் தங்கியிருந்து வருந்துவதைப் போன்றதாகும்.

90. பெரியாரைப் பிழையாமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை. 891
     மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது; அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம், மிகச் சிறந்தது ஆகும்.

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். 892
     பெரியோர்களை நன்கு மதிக்காமல் நடந்தால், அப்பெரியோரால் அவருக்கு எவ்விடத்தும் நீங்காத துன்பங்களை அது கொடுத்துவிடும்.

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு. 893
     தான் விரும்பிய பொழுதிலேயே பகையரசரைக் கொல்லவல்ல வேந்தரிடத்தே, தான் கெடுதலை வேண்டுபவன், நீதி நூலைக் கடந்து பிழைகளைச் செய்வானாக!

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். 894
     மூவகை ஆற்றலும் உள்ளவருக்கு, அவை இல்லாதவர் துன்பத்தைச் செய்தல், தானே வரக்கூடிய கூற்றுவனை முற்பட வருமாறு, கைகாட்டி அழைப்பதைப் போலாகும்.

யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். 895
     பகைவருக்கு வெய்யதான வலி மிகுந்த, வேந்தனால் தாக்கப்பட்ட அரசர், தப்பிப் பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும், எங்கும் உயிர்பிழைத்திருக்கவே மாட்டார்கள்.

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். 896
     காட்டினுள் சென்றவன், காட்டுத் தீயால் சுடப்பட்டாலும், ஒருவழியாக உயிர்பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும், எங்கும் உயிர் பிழைத்திருக்கவே மாட்டார்கள்.

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின். 897
     சாபமிடுதலும் அருள்செய்தலும் ஆகிய தகுதிகளால் சிறந்த தவத்தோர் சினங்கொண்டால், பலவகையாலும் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் அழிந்து விடும்.

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. 898
     குன்றுபோலத் தவநெறியால் உயர்ந்தவர்கள் கெடவேண்டும் என்று நினைப்பார்களானால், தம் குடியோடு நிலைபெற்றார் போன்ற பெருஞ்செல்வரும், மாய்வார்கள்.

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். 899
     உயர்ந்த விரத வாழ்வைக் கொண்டவர்கள் சீற்றம் அடைந்தால், இந்திரன் போன்ற வாழ்க்கையுடையவனும், அப்போதே அழிந்து போய்விடுவான்.

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின். 900
     மிகவும் பெரிய தவத்தை உடையவர் சினங்கொண்டாரானால், மிகப்பெரிய சார்பு உடையவரானாலும் உய்ய மாட்டார்கள்; அப்போதே அழிவார்கள்.