பத்துப் பாட்டுக்களில் ஏழாவது

பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

பாடிய

நெடுநல்வாடை

கோவலர் வாடையால் துன்புறுதல்

வையகம் பனிப்ப, வலன் ஏர்பு வளைஇ,
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென,
ஆர்கலி முனைஇய கொடுங் கோல் கோவலர்
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி,
புலம் பெயர் புலம்பொடு கலங்கி, கோடல் 5

நீடு இதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ,
மெய்க் கொள் பெரும் பனி நலிய, பலருடன்
கைக் கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க

கூதிர்க் கால நிலை

மா மேயல் மறப்ப, மந்தி கூர,
பறவை படிவன வீழ, கறவை 10

கன்று கோள் ஒழியக் கடிய வீசி,
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்

ஊரினது செழிப்பு

புன் கொடி முசுண்டைப் பொறிப் புற வான் பூ,
பொன் போல் பீரமொடு, புதல்புதல் மலர;
பைங் காற் கொக்கின் மென் பறைத் தொழுதி, 15

இருங் கனி பரந்த ஈர வெண் மணல்,
செவ் வரி நாரையொடு, எவ் வாயும் கவர
கயல் அறல் எதிர, கடும் புனல் சாஅய்ப்
பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை கற்ப; 20

அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க;
முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்
கொழு மடல் அவிழ்ந்த குழூஉக் கொள் பெருங் குலை,
நுண் நீர் தெவிள வீங்கி, புடை திரண்டு, 25

தெண் நீர்ப் பசுங் காய், சேறு கொள முற்ற;
நளி கொள் சிமைய, விரவு மலர், வியன் காக்
குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க

முழுவலி மாக்கள் தெருக்களில் சுற்றித் திரிதல்

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்,
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், 30

படலைக் கண்ணி, பரு ஏர் எறுழ்த் திணி தோள்,
முடலை யாக்கை, முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
துவலைத் தண் துளி பேணார், பகல் இறந்து,
இரு கோட்டு அறுவையர், வேண்டு வயின் திரிதர 35

மாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குதல்

வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்,
மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,
பூங் குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக் கண்,
மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின், பைங் கால் பித்திகத்து, 40

அவ் இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,
இரும்பு செய் விளக்கின் ஈர்ந் திரிக் கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர

கூதிர்க்காலம் நிலைபெற்றமையால் நேர்ந்த விளைவுகள்

மனை உறை புறவின் செங் கால் சேவல் 45

இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது,
இரவும் பகலும் மயங்கி, கையற்று,
மதலைப் பள்ளி மாறுவன இருப்ப;
கடியுடை வியல் நகர்ச் சிறு குறுந் தொழுவர்,
கொள் உறழ் நறுங் கல், பல கூட்டு மறுக; 50

வடவர் தந்த வான் கேழ் வட்டம்
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப;
கூந்தல், மகளிர் கோதை புனையார்,
பல் இருங் கூந்தல் சில் மலர் பெய்ம்மார்,
தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து, 55

இருங் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப,
கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த
செங் கேழ் வட்டம் சுருக்கி; கொடுந் தறி,
சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க;
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின், 60

வேனில் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர் வாய்க் கட்டளை, திரியாது, திண் நிலைப்
போர் வாய் கதவம் தாழொடு துறப்ப;
கல்லென் துவலை தூவலின், யாவரும்
தொகு வாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார், 65

பகுவாய்த் தடவில் செந் நெருப்பு ஆர;
ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார்,
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை,
கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ,
கருங் கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப; 70

காதலர்ப் பிரிந்தோர் புலம்ப; பெயல் கனைந்து,
கூதிர் நின்றன்றால்

அரண்மனை அமைப்பு - மனை வகுத்த முறை

போதே, மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்,
இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு,
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, 75

நூல் அறி புலவர் நுண்ணீதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து-

கோபுர வாயில்

ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்,
பரு இரும்பு பிணித்து, செவ்வர்க்கு உரீஇ, 80

துணை மாண் கதவம் பொருத்தி, இணை மாண்டு,
நாளொடு பெயரிய கோள் அமை விழுமரத்து,
போது அவிழ் குவளைப் புதுப் பிடி கால் அமைத்து
தாழொடு குயின்ற, போர் அமை புணர்ப்பின்,
கை வல் கம்மியன் முடுக்கலின், புரை தீர்ந்து, 85

ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை,
வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக,
குன்று குயின்றன்ன, ஓங்கு நிலை வாயில்,

முற்றமும் முன்வாயிலும்

திரு நிலை பெற்ற தீது தீர் சிறப்பின்,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து, 90

நெடு மயிர் எகினத் தூ நிற ஏற்றை
குறுங்கால் அன்னமோடு உகளும் முன் கடை,

அரண்மனையில் எழும் ஓசைகள்

பணி நிலை முனைஇய பல் உளைப் புரவி
புல் உணாத் தெவிட்டும் புலம்பு விடு குரலொடு,
நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து, 95

கிம்புரிப் பகு வாய் அம்பணம் நிறைய,
கவிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து, அயல
ஒலி நெடும் பீலி ஒல்க, மெல் இயல்
கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை,
நளி மலைச் சிலம்பின் சிலம்பும் கோயில் 100

அந்தப்புரத்தின் அமைப்பு

யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து,
பரூஉத் திரி கொளீஇய குரூஉத் தலை நிமிர் எரி,
அறு அறு காலைதோறு, அமைவரப் பண்ணி,
பல் வேறு பள்ளிதொறும் பாய் இருள் நீங்க; 105

பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது,
ஆடவர் குறுகா அருங் கடி வரைப்பின்,
வரை கண்டன்ன தோன்றல, வரை சேர்பு
வில் கிடந்தன்ன கொடிய, பல் வயின்,
வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ, 110

மணி கண்டன்ன மாத் திரள் திண் காழ்,
செம்பு இயன்றன்ன செய்வு உறு நெடுஞ் சுவர்,
உருவப் பல் பூ ஒரு கொடி வளைஇ,
கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல்

அரசி படுத்திருக்கும் வட்டக் கட்டில்

தச நான்கு எய்திய பணை மருள் நோன் தாள், 115

இகல் மீக்கூறும், ஏந்து எழில் வரி நுதல்,
பொருது ஒழி, நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து,
சீரும் செம்மையும் ஒப்ப, வல்லோன்
கூர் உளிக் குயின்ற, ஈர் இலை இடை இடுபு,
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப் 120

புடை திரண்டிருந்த குடத்த, இடை திரண்டு,
உள்ளி நோன் முதல் பொருத்தி, அடி அமைத்து,
பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில்

கட்டிலின்மேல் அமைந்த படுக்கை

மடை மாண் நுண் இழை பொலிய, தொடை மாண்டு,
முத்துடைச் சாலேகம் நாற்றி, குத்துறுத்து, 125

புலிப் பொறிக் கொண்ட பூங் கேழ்த் தட்டத்துத்
தகடு கண் புதையக் கொளீஇ, துகள் தீர்ந்து,
ஊட்டுறு பல் மயிர் விரைஇ, வய மான்
வேட்டம் பொறித்து, வியன் கண் கானத்து
முல்லைப் பல் போது உறழ, பூ நிரைத்து, 130

மெல்லிதின் விரிந்த சேக்கை

படுக்கையின்மேல் அரசி மலரணையில் வீற்றிருத்தல்

மேம்பட,
துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி
இணை அணை மேம்படப் பாய், அணை இட்டு,
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடு அமை தூ மடி விரித்த சேக்கை, 135

ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடு வீழ் தாழ, துணை துறந்து,
நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி,
நெடு நீர் வார் குழை களைந்தென, குறுங் கண்
வாயுறை அழுத்திய, வறிது வீழ் காதின், 140

பொலந் தொடி தின்ற மயிர் வார் முன்கை,
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து,
வாளைப் பகு வாய் கடுப்ப வணக்குறுத்து,
செவ் விரல் கொளீஇய செங் கேழ் விளக்கத்து,
பூந் துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல், 145

அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு,
புனையா ஓவியம் கடுப்ப, புனைவு இல்

சேடியரும் செவிலியரும் தலைவியைத் தேற்றுதல்

தளிர் ஏர் மேனி, தாய சுணங்கின்,
அம் பணைத் தடைஇய மென் தோள், முகிழ் முலை,
வம்வு விசித்து யாத்த, வாங்கு சாய் நுசுப்பின், 150

மெல் இயல் மகளிர்-நல் அடி வருட;
நரை விராவுற்ற நறு மென் கூந்தல்
செம் முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇ,
குறியவும் நெடியவும் உரை பல் பயிற்றி,
இன்னே வருகுவர் இன் துணையோர் என, 155

உகத்தவை மொழியவும்

தலைவியின் வருத்த மிகுதி

ஒல்லாள், மிகக் கலுழ்ந்து
நுண் சேறு வழித்த நோன் நிலைத் திரள் கால்,
ஊறா வறு முலை கொளீஇய, கால் திருத்தி,
புதுவது இயன்ற மெழுகு செய் படமிசை,
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக, 160

விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய,
உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா,
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பனி,
செவ் விரல் கடைக் கண் சேர்த்தி, சில தெறியா, 165

புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு
இன்னா அரும் படர் தீர, விறல் தந்து,
இன்னே முடிகதில் அம்ம

பாசறையில் அரசன் நிலை

மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை
நீள் திரள் தடக் கை நிலமிசைப் புரள, 170

களிறு களம் படுத்த பெருஞ் செய் ஆடவர்,
ஒளிறு வாள் விழுப் புண் காணிய, புறம் போந்து,
வடந்தைத் தண் வளி எறிதொறும் நுடங்கி,
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய, நன் பல்
பாண்டில் விளக்கில், பரூஉச் சுடர் அழல, 175

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்ட, பின்னர்,
மணி புறத்து இட்ட மாத் தாள் பிடியொடு
பருமம் களையாப் பாய் பரிக் கலி மா
இருஞ் சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்ப, 180

புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ,
வாள் தோள் கோத்த வன்கண் காளை
சுவல் மிசை அமைத்த கையன், முகன் அமர்ந்து,
நூல் கால்யாத்த மாலை வெண் குடை
தவ்வென்று அசைஇ, தா துளி மறைப்ப, 185

நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்,
சிலரொடு திரிதரும் வேந்தன்,
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.

தனிப் பாடல்

வாடை நலிய, வடிக் கண்ணாள் தோள் நசைஇ,
ஓடை மழ களிற்றான் உள்ளான்கொல்- கோடல்
முகையோடு அலமர, முற்று எரி போல் பொங்கி,
பகையோடு பாசறை உளான்?